காதலர் பூங்கா

எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசன் அப்போது சென்னையில் இருந்தார். அதுவும் சாலிகிராமத்தில். சென்னையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அவரும் என்னைப் போலவே ‘திசையறியாதவர்’ என்பதால் எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி நாங்கள் இருவரும் கைகோர்த்துக் கொண்டு (தொலைந்துவிடாமல் இருக்கத்தான்) சாலிகிராமத்தில் எங்களுக்குத் தெரிந்த வீதிகளில் ‘Walking போகிறோம் பேர்வழிகளாக’ நடை பயில்வோம். எங்களுக்குத் தெரியாத ஏதாவது தெருவுக்குள் நுழைந்து விட்டால், இருக்கவே இருக்கிறது ‘மதுரைக்கு வழி வாயில’. சொல்லிவைத்த மாதிரி, நாங்கள் Walking செல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு லாரியிலிருந்து கிளீனர் ஒருவர் கையில் ஒரு துண்டுச் சீட்டுடன் எங்களுக்குப் பக்கத்தில் ‘திடும்’ என்று குதிப்பார்.

‘ஸார், இந்த அட்ரஸ் எங்கென்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்’.

கொஞ்சமும் தயங்காமல் வாங்கிப் பார்ப்போம். ஒரே நேரத்தில் நான் வலது பக்கத்தையும், வ.ஸ்ரீ ஸார் இடது பக்கத்தையும் காண்பித்து வழியும் சொல்லிவிடுவோம். விநோதமாகப் பார்த்தபடி அட்ரஸ் கேட்பவர்கள் பின்வாங்கிடுவர். இப்படி எங்களை குறிவைத்து அட்ரஸ் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, நாங்கள் இருவரும் ‘Walking’ செல்ல சாலிகிராமத்திலேயே உள்ள ஒரு பூங்காவைத் தேர்ந்தெடுத்தோம். தொடர்ந்து நாங்கள் அந்தப் பூங்காவில் ‘Walking’ போனாலும், எங்கள் இருவரின் உடம்பும் இளைக்காமல் போனதற்குக் காரணம், இரண்டு மாதங்களுக்கு நான்கே நான்கு முறை மட்டும் நாங்கள் அந்தப் பூங்காவுக்குச் சென்றது மட்டும் காரணமில்லை. உட்கார இடம் தேடி அந்தப் பூங்காவில் நாங்கள் அலையும் நேரம் மட்டுமே எங்கள் ‘Walking’ அமையும்.

உட்காருவதற்கு வாகாக ஓர் இடத்தைத் தேடி அமர்ந்தவுடன், முதலில் சுற்றும் முற்றும் சிறிது நேரம் பார்ப்போம். வேர்க்க விறுவிறுக்க பலர் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பது, ஏதோ நாங்களே அவற்றை செய்து கொண்டிருப்பது போன்ற ஒரு மனநிறைவைத் தரும். ‘பரவாயில்ல சுகா. இப்பொல்லாம் எல்லாருக்கும் ‘Health consciousness’ வந்துடுத்து. இல்லியா?’ அதற்குப் பிறகு நீண்ட நேரம் மற்றவர்க்குக் கேட்காத வண்ணம், கிசுகிசுத்த குரலில் ‘புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா, கு.ப.ரா, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், வண்ணநிலவன், வண்ணதாசன்’ என ஒரு ரவுண்டு இலக்கியம் பேசி களைப்பாகி வீடு திரும்புவோம். இப்படியாக ‘விளையாட்டுப் பூங்கா’வை, தனியாக அமர்ந்து ரகசியமாகப் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தி ‘காதலர் பூங்கா’வாக்கினோம்.

வ.ஸ்ரீ ஸார் கோவை சென்ற பின், ஜோடியில்லாமல் போவதற்குத் தயங்கி ‘காதலர் பூங்கா’வுக்கு செல்லாமலேயே இருந்தேன். ஆனால் கோவையில் அவர் தனியாகவே அங்குள்ள ஒரு ‘காதலர் பூங்கா’வில் ‘Walking’ செல்வதாகக் கூறியதைக் கேட்ட பின் நானும் எங்கள் ‘காதலர் பூங்கா’வில் நிஜமாகவே ‘Walking’ செல்லத் துவங்கினேன். இப்போது உண்மையாகவே எங்கள் பூங்கா ‘காதலர் பூங்கா’வாக நிறைய மாற்றங்களுடன் உருமாறியிருந்தது. ஆரம்பத்தில் முன்பின் பழக்கமில்லாத செயலான ‘Walking’ செல்வதில் சிரமம் இருந்தது. பிறகு அங்கு வாடிக்கையாக வரும் சில மனிதர்களைப் பார்ப்பதற்காகவே தினமும் செல்லத் துவங்கினேன்.

ஷட்டில்காக் விளையாடும் யுவன்கள், யுவதிகளின் உற்சாகக் குரல்களுக்கிடையே நடப்பது நமக்கும் உற்சாகம் அளிக்கும் ஒன்றுதான். மஞ்சள் தேய்த்து குளித்த முகத்துடன், தலைநிறைய பூ வைத்து, மங்களகரமாக ஒரு பெண்மணி நடக்க வருவார். அவர் வந்த சிலநிமிடங்களில் அவரது கணவர் கையில் செய்தித்தாளுடன் வந்து பூங்காவின் ஓரமாக அமர்வார். ஒருமுறை நடந்தபடியே தன் கையிலிருந்த சாவியைத் தூக்கி இந்த அம்மாள் போட, தட்டுத்தடுமாறி பிடித்தார், கணவர். சட்டென்று கோபம் தலைக்கேற மனைவியின் பின்புறம் பார்த்து முறைத்த மனிதர், அந்த அம்மாள் திரும்பிப் பார்த்தவுடன் ‘கரெக்டா கேட்ச் புடிச்சுட்டென்மா’ என்று கோபம் மறைத்து வலிந்து சிரித்தார். மனிதரின் இரண்டு வெவ்வேறு உணர்ச்சிகளையும் நான் பார்த்து விட்டதால், அன்றிலிருந்து என்னைப் பார்த்தாலே செய்தித்தாளுக்குள் ஒளிந்து கொண்டு ரகசியமாக நான் போய்விட்டேனா என்று பார்ப்பார்.

எங்கள் சுந்தரம் பிள்ளை பெரியப்பாவை நினைவுபடுத்துகிற ஒரு பெரியவர் கொஞ்சம் தாமதமாக மூச்சிரைக்க பூங்காவுக்குள் நுழைவார். கழுத்து வழியாகப் போடும் சட்டையும், சாரமும் உடுத்தியிருக்கும் அவரது மீசையில்லா முகத்தின் பாதியை அவரது மூக்குக் கண்ணாடி மறைத்திருக்கும். தனது பெரிய பாதங்களை அகலமாக வைத்தபடி நடைபயிலும் அவருக்குப் பின்னால் நடப்பது சிரமத்திலும் சிரமம். சற்றும் எதிர்பாராமல் திடீரென்று கைகளைப் பக்கவாட்டில் விரித்து உடற்பயிற்சி செய்தவாறே நடக்க ஆரம்பித்து விடுவார். அவருக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த எனக்கு ஒருமுறை உதட்டிலும், இன்னொரு முறை கண்ணிலும் காயம் ஏற்பட்டது. நாளடைவில் பழக்கத்தின் காரணமாக அவர் கைகளைத் தூக்கும் போது சட்டென்று குனிந்து தப்பித்து நடக்கலானேன். நான்கைந்து ரவுண்டுகளுக்குப் பிறகு பூங்காவில் உள்ள ஒரு மரத்தினருகில் நின்று கொண்டு, ஏதோ ஒரியா தொலைக்காட்சியில் பார்த்த உடற்பயிற்சி முறைகளைச் செய்யத் துவங்கி விடுவார். சரியாக அந்த நேரம்தான் மடித்துக் கட்டிய வேட்டி, சட்டையுடன் குள்ளமான இளைஞர் ஒருவர் பூங்காவுக்குள் வரும் நேரம். ஆரம்பத்தில் என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்த அந்த இளைஞர், ஒருநாள் என்னுடனேயே நடந்தபடி, ‘அண்ணாச்சி, எனக்கும் நம்ம ஊருதான்’ என்றார்.

‘அப்பிடியா? ரொம்ப சந்தோஷம்’.

‘வெகடன்ல மூங்கில் காத்து என்னமா எளுதுதிய! எங்க அம்மல்லாம் ஒங்கள நேர்ல பாக்கணுங்கா.’

அப்போது ஆனந்த விகடனில் நான் ‘மூங்கில் மூச்சு’ தொடர் எழுதிக் கொண்டிருந்தேன்.

‘அது மூங்கில் காத்து இல்லையெ, தம்பி’.

‘பாத்தேளா, மாத்தி சொல்லிட்டென். மூங்கில் முடிச்சு மூங்கில் முடிச்சு’.

நான் நடையை வேகமாகத் தொடர்ந்தேன். இதற்குள் மரத்தடியில் நின்று ஒரியா உடற்பயிற்சி செய்யும் ‘பெரிய சைஸ் மனிதர்’ கால்களை விரித்து நின்று கொண்டு, கைகளை முன்னே நீட்டி, மணிக்கட்டை மடக்கி நீட்டிக் கொண்டு, தலையை மேலும், கீழுமாக அசைத்துக் கொண்டிருந்தார். திருநெல்வேலி இளைஞர், ‘என்ன அண்ணாச்சி கூப்பிட்டேளா?’ என்றபடி அவர் பக்கம் சென்றார். ’இல்லெப்பா. இது எக்ஸர்ஸைசு.’ ‘இல்ல, கூப்பிட்ட மாரி இருந்துது. அதான் கேட்டென்’. மேற்படி சம்பவம் தினமும் தொடர்ந்தது. ‘டேய், நீ போறியா என்னடா?’

முன்னே நடப்பவர்களுக்கு வழிவிடாமல், ஐபாடில் பாட்டு கேட்டுக் கொண்டே பாதையை மறைத்தபடி நடப்பவர்கள், நடக்கும் போதே செல்ஃபோனில் பேசியபடி நடுவில் நின்றுகொள்பவர்கள் என ஓர் ஒழுங்கில்லாமல் சென்று கொண்டிருந்த மனிதர்களுக்காகவே ஓர் அழகிய இளம் யுவதியை வடபழனி முருகப்பெருமான் ‘காதலர் பூங்கா’வுக்கு அனுப்பிவைத்தார். ‘வருஷம் 16′ குஷ்புவை நினைவு படுத்துகிற அந்தப் பெண், ஆண்பிள்ளை சட்டையும், நீள பாவாடையும் அணிந்தபடி தினமும் பூங்காவுக்கு வரத் துவங்கினார். அதற்குப் பிறகு எல்லோருமே அந்தப் பெண்ணுக்குப் பின்னால் நல்ல பிள்ளைகளாக, சீரான மித வேகத்தில் நடக்கத் துவங்கினர். முன்னால் ஒருவர் கூட இல்லை. வழக்கமாக நாங்கள் நடக்கும் போது பின் கட்டிடத்திலுள்ள ஒரு வீட்டுக்கார மாமா, பஞ்ச பாத்திரத்தைக் கையில் வைத்து சாய்த்தபடி ‘சந்தி’ பண்ணுவார். உதடு படு சீரியஸாக முணுமுணுத்தபடி இருக்கும். ஒரு சுற்று முடிவதற்குள் காணாமல் போய்விடுவார். குஷ்புவின் வருகைக்குப் பிறகு பின் வீட்டு மாமா கையிலுள்ள பஞ்சபாத்திரத்துத் தீர்த்தம் வற்றவே இல்லை. அநேகமாக மூன்று சந்திகளையும் ஒருசேரப் பண்ணினார்.

நடைப்பயிற்சி முடிந்தவுடன் செல்வி குஷ்பு சிறிதுநேரம் இளைப்பாறும் விதமாக, பூங்காவில் சிறுகுழந்தைகள் விளையாடுவதற்காக போடப்பட்டிருக்கும் ஊஞ்சலில் Tinto brass படநாயகிகள் போல அபாயகரமாக ஆடுவார். சுதந்திர, குடியரசு தின அணிவகுப்பில் கவர்னர் பக்கம் தலையை மட்டும் திருப்பியபடி நேராக விறைப்பாக நடக்கும் ராணுவ வீரர்கள் போல எல்லோரும் ஊஞ்சலுக்கு வீரவணக்கம் செலுத்தியபடி நடப்பார்கள்.

வழக்கமாக காலையில் நான் ‘காதலர் பூங்காவுக்குள்’ நுழைந்த ஒருசில நிமிடங்களிலேயே ஒரு மனிதர் பைக்கில் வந்து இறங்குவார். பைக்கை நிறுத்தியவுடன் கண்ணாடி பார்த்து, நிதானமாக தலை சீவுவார். டி-ஷர்ட்டும், ஷார்ட்ஸும், கேன்வாஸும் அணிந்திருக்கும் அவரது கையில் ‘தினத்தந்தி, தினகரன், தினமலர் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பேப்பர்கள் வைத்திருப்பார். கையிலுள்ள செய்தித்தாள்களை, நிழல் பார்த்துத் தேர்ந்தெடுத்த ஒரு பெஞ்சின் ஓரமாக வைத்து விட்டு, தன் கைகளை தோள்மீது வைத்து முன்னும் பின்னுமாக சில்லறையாகச் சுழற்றுவார். பிறகு முதலில் ‘தினத்தந்தி’யில் ஆரம்பிப்பார். வரிசையாக எல்லா செய்தித்தாள்களையும் படித்த பின்னர், மீண்டும் ஒருமுறை தோள்மீது கைவைத்து சில்லறைச் சுழற்றல். வரும்போது வந்த அதே நிதானத்துடன் எழுந்து பைக்கருகே சென்று, பேண்ட் பாக்கெட்டிலிருந்து சீப்பு எடுத்து, மீண்டும் தலைசீவி கண்ணாடியில் சரிபார்த்துக் கிளம்பிச் செல்வார்.

கடந்த சில மாதங்களாக நான் ‘காதலர் பூங்கா’வுக்குச் செல்லவில்லை. Walking போகிறேனோ இல்லையோ, விதவிதமான மனிதர்களையும், அவர்களது செய்கைகளையும் பார்த்து ரசிப்பதற்காகவாவது செல்ல வேண்டும் என்று நினைக்காத நாளில்லை. தினமும் இரவில் ‘நாளைலேருந்து மறுபடியும் Walking ஆரம்பிச்சுட வேண்டியதுதான்’ என்று மனதில் சூளுரைப்பதோடு சரி. இதோ அதோ என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். நான் Walking போய்க் கொண்டிருந்த காலத்திலேயே ‘காதலர் பூங்கா’வுக்குத் தனது வருகையை நிறுத்தி, காணாமல் போய்விட்ட ‘செல்வி குஷ்பு’வுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

காந்திமதியின் தாயார்

அம்மாவின் ஊரான ஆழ்வார்குறிச்சிக்குப் போனால் சிவைசலநாதர் கோயிலுக்குச் செல்லாமல் வருவதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையைப் பார்த்தபடி அமைந்திருக்கும் சிவசைலநாதர் கோயில்.

’இங்கெ மட்டும் ஏன்வே செவன்கோயில் மேக்கெ பாக்க இருக்கு?’

‘அகத்தியரு மேக்கெ அந்தா அந்த மல மேலதானவே இருக்காரு. ஒலகமெ அளிஞ்சாலும் அவாள் மலய விட்டு எறங்க மாட்டால்லா. அதான் அம்மையும், அப்பனும் தங்களோட கல்யாணத்த அவரு பாக்கணும்ங்கிறதுக்காக மேக்கெ பாக்க காட்சி குடுக்காங்க’.

பொதிகையில் அமர்ந்திருக்கும் அகத்திய(ர்)ரைப் பார்க்க அமைந்திருக்கும் சிவசைலநாதர் கோயில் ஓர் அழகு என்றால், கோயிலை ஒட்டி ஓடும் கடனாநதியும், அதன் படித்துறையில் உள்ள கல்மண்டபமும் வேறோர் அழகு. கருவறையில் சடைமுடியோடு காட்சி தரும் சிவசைலநாதரை, பிரகாரத்தின் பின்பக்கத்திலிருந்து மிரட்சியுடன் பார்த்து வணங்கிய சிறுவயது ஞாபகங்கள் இன்னும் மனதில் உள்ளன.

சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச்
செங்கனி வாயிதழுந்துடிப்பச்
சேயிழை யீர் சிவலோகம் பாடிக்
கங்கை இரைப்ப அராஇரைக்குங்
கற்றைச் சடைமுடி யான்கழற்கே.

‘நாளைக்கு ஆள்வாருச்சி கோயில் தேரோட்டம். ரொம்ப வருஷமாச்சு, நான் பாத்து. வா போவோம்’. அம்மா அழைக்கும் போது உற்சாகமாகவேக் கிளம்பிப் போனேன். ஆழ்வார்குறிச்சிக்குப் போவதென்றால் எப்போதும் சந்தோஷம்தான். ஆச்சி கையால் உருட்டி போடப்படும் சோற்றுருண்டைகளிலிருந்து, மாட்டுத் தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகள் மற்றும் காலைநேரத்தில் வீட்டின் கொல்லைப்பகுதியில் வந்து நிற்கும் மயில்கள், அம்மாவின் செல்ல நாய் என என்னை ஈர்க்கும் விஷயங்கள் ஏராளம். தேரோட்டத்துக்குக் காலையிலேயே கிளம்பிப் போனோம். நாங்கள் போவதற்குள் தேரோட்டம் துவங்கிவிட்டது. ‘இதுக்குத்தான் சீக்கிரம் எந்தி, எந்தின்னேன். இப்போ பாரு, தேரு நெலைக்கு வந்துரும். வேகமா ஓடியா’. என்னைவிட வேகமாக அம்மா தேர் இருக்கும் பகுதிக்கு ஓடினாள். பக்கத்தில் போனதும் எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அதுவரைக்கும், தமிழகத்தின் மூன்றாம் பெரிய தேரான நெல்லையப்பர் கோயில் தேரை, பிரம்மாண்ட வடங்களுடன் பார்த்துப் பழகிய எனக்கு, சங்கிலியைப் போட்டு கன்றுக்குட்டியை இழுப்பது போல ‘தரதர’வென இழுத்து வந்து நிலையத்தில் சேர்ப்பிக்கப்பட்ட குட்டியூண்டு பொம்மைத் தேரை, தேர் லிஸ்டில் சேர்க்கவே மனம் ஒப்பவில்லை.

வீட்டுக்கு வந்த பிறகும் அம்மாவிடம் ‘ஆழ்வார்குறிச்சி’ கோயிலின் சின்னத் தேரை கேலி செய்து கொண்டே இருந்தேன். ‘நல்லாருக்கே! அதுக்காக ஒங்க ஊரு தேர நெனச்சுக்கிட்டெ எல்லா தேரயும் பாக்கலாமா? அந்தந்த ஊருக்குத் தக்கதான் எல்லாம் இருக்கும்.’ மகளுக்கு சப்போர்ட்டாகவும், ஊரை விட்டுக் கொடுக்காமலும் ஆச்சி களத்தில் குதித்தாள். ‘அதுக்காக இப்பிடியா? ஒங்க ஊரு தேரு ஒன்னையும் விடல்லா குட்டையா இருக்கு’. சிரிப்பை அடக்க முடியாமல், ‘தூரப் போல’ என்றபடி செல்லமாக அடிக்க வந்தாள், ஆச்சி. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே ஆச்சி என்னை விட குட்டையாகிப் போனாள். ‘ம்ம்ம், அப்பொல்லாம் என் ஒக்கல்ல விட்டு எறங்கவே மாட்டான். இப்பொ வளந்துட்டாம்லா. அதான் சீமய வித்து செப்புல அடைக்க மாரி பேசுதான்’. இதைச் சொல்லும் போதும் சிரிப்பை அடக்கியபடிதான் சொல்வாள், ஆச்சி. ‘நீ ஏசுதியா, பாராட்டுதியான்னே தெரியலியே’ என்பேன். ‘தெரியலன்னா பள்ளிக்கூடத்துல பாடம் சொல்லிகுடுக்காம்லா, ஒன் வாத்தியான். அவன்ட்ட போயி கேளு’ என்று பதில் வரும்.

அதிகபட்சமாக ஆழ்வார்குறிச்சியில் ஒருவாரம் தங்குவேன். ஒரு வாரத்தில் தினமும் ஆற்றுக்குளியல். குளித்து சிவந்த விழிகளுடன் வீட்டுக்குள் நுழையும் போது அதுவரைக்கும் தெரியாத பசியை, அடுக்களையிலிருந்து வரும் இட்லி ஆவியின் மணம், அதிகரிக்கச் செய்யும். மிளகாய் வத்தல் கண்ணில் படும்படியான ஒரு துவையலுடன், கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்த தேங்காய்ச் சட்னியுடன், மணக்க மணக்க செக்கு நல்லெண்ணெயை ஊற்றுவாள், ஆச்சி. ஒரு தட்டு இட்லி முடிவதற்குள் தோசைக்கல் காய்ந்து விடும். ஆழ்வார்குறிச்சியில் மட்டுமே அவ்வளவு புஷ்டியான தோசையை பார்த்திருக்கிறேன். ‘ஆளாருச்சி அத்த ரெண்டு வெரல் தண்டிக்குல்லா தோச சுடுவா’. ஆச்சியின் பேச்சு வந்தாலே முருகப் பெரியப்பா சொல்லும் முதல் வரி, இதுதான். மதியத்துக்கு பொட்டல்புதூர் பஜாரிலிருந்து தாத்தா வாங்கி வந்துப் போடும் புத்தம்புது காய்கறிகளுடன் பேரன்களுக்காக விசேஷ சமையல் தயாராகும். எது இருந்தாலும், இல்லாவிட்டாலும் கண்டிப்பாக அவியல் உண்டு. ‘நீ வந்தாத்தான் அப்பளச் சட்டியையே அடுப்புல வைப்பேன். இல்லென்னா இங்கெ யாரு அப்பளம் திங்கா?’ ஒருமுறை ஆச்சி வைத்த அவியலில் ‘புதிதாக ஒன்று’ சேர்ந்திருந்தது. முன்பின் அறிந்திராத அதன் சுவை என்னைக் கவர, ஆச்சியிடம் அதன் பெயரைக் கேட்டேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சின்ன மாமா உடனே, ‘அதுவா? நீ பீட்ரூட் திங்கெல்லா? அதமாதிரி இது ஏட்ரூட்’ என்றான். அதற்குப் பிறகு நான் ஆழ்வார்குறிச்சிக்குப் போகும் போதெல்லாம் எனக்காக ஆச்சி தனியாக ‘ஏட்ரூட்’ வைக்க ஆரம்பித்தாள். நாளடைவில் ‘ஏட்ரூட்’ என்பது பலாக்கொட்டையை அவித்து, துண்டு துண்டாக நறுக்கி சமைக்கப்படும் சமாச்சாரம் என்பது தெரிய வந்தாலும் இன்றுவரை எனக்கு ‘பசுமரத்தாணி’யாக அது ‘ஏட்ரூட்’தான்.

திருநெல்வேலியில் எங்கள் வீட்டில் சாப்பிடும்போது முகம் சுளித்து நான் ஒதுக்கி வைக்கும் பல காய்கறிகளை மறுப்பேதும் சொல்லாமல் ஆழ்வார்குறிச்சியில் சாப்பிடுவேன். ‘பாத்தியாம்மா. நான் அங்கெ கத்திரிக்கா வச்சா, மூஞ்சிய தூக்குவான். இங்கெ எப்பிடி முளுங்குதான், பாரென்.’ ஆச்சரியத்தில் தாங்கமாட்டாமல் புலம்பும் அம்மாவை சத்தம் போடுவாள், ஆச்சி. ‘பிள்ள சாப்பிடுதுன்னு சந்தோசப்படுவியா! கண்ணு போட்டுக்கிட்டு. நீ சாப்பிடுய்யா. அவ கெடக்கா’.

ஆழ்வார்குறிச்சி நான் பிறந்த ஊராக இருந்தாலும், அந்த ஊரையோ, ஆச்சியையோ நினைக்கும் போது பிரதானமாக மனதில் எழுவது அதன் சாப்பாட்டு ருசிதான். ‘ஆளாருச்சி தவுசுப்பிள்ளன்னா ரொம்ப ஃபேமஸ்லா’. அம்மாவை கேலி செய்வதற்காக சுந்தரம் பிள்ளை பெரியப்பா அடிக்கடி சொல்வார். ‘இங்கெ நீங்க வகவகயா செஞ்சு தின்னாலும் வயிறு வேணா நெறையும். மனசு நெறயவா செய்யும். எங்க ஊரு சாப்பாடு அப்பிடி இல்லெல்லா. வெறும் சோத்தத் தின்னாலும் ஆளாருச்சி சோத்துருசியே தனிதான்’. அம்மாவும் விட்டுக் கொடுக்காமல் சொல்வாள். அது உண்மைதான். இரவு நேரங்களில் ‘தண்ணி ஊத்தின சோற்றுக்கு’த் தொட்டுக் கொள்ள, அம்மியில் தேங்காய், கல் உப்பு, கொஞ்சம் பொரிகடலை(சென்னையில் அதை ஒடச்ச கடலை என்கிறார்கள்) வைத்து நைத்து, மையாக அரைத்து, உருட்டி ஒரு பந்து சைஸுக்கு ‘பொரிகடலை தொவையல்’ வைப்பாள், ஆச்சி. என் வாழ்நாளில் அப்படி ஒரு ‘அமிர்த ருசி’யை நான் இதுவரை வேறெங்கிலும் சுவைத்ததில்லை. நாஞ்சில் நாடன் சித்தப்பாவிடம் இதுபற்றி ஒருமுறை சொல்லிக் கொண்டிருந்த போது, சித்தப்பா சொன்னார். ‘ஆச்சி மனசு, கைவளியா தொவையல்ல எறங்கியிருக்கும்லா! அதான் அந்த ருசி’.

அம்மாவின் சமையலை ஊரே மெச்சினாலும் அம்மா என்னவோ ஆச்சியின் சமையலுக்கு முன்னால் தன்னுடையது ஒன்றுமேயில்லை என்பாள். அவளுக்கு தன் தாயார் வைக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன பதார்த்தமும் அவ்வளவு ருசியை அளித்தவை. ‘வெறும் புளித்தண்ணி வச்சாலும் எங்க அம்ம கைமணமே மணம்’. மகள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கும் போது, அவளுக்குப் பிடித்த ’கத்திரிக்காய் கொத்சு’ செய்து, சோற்றுடன் பிசைந்து சின்னக் குழந்தைக்கு ஊட்டிவிடுவது போல் ஆசைஆசையாக ஆச்சி ஊட்டி விட்டதைப் பார்க்க முடியாமல் அந்த இடத்தை விட்டுத் தள்ளி வந்து அழுதேன். இரண்டொரு தினங்களில் அம்மா காலமானாள். ’கடைசி நேரத்துல் என் கையால அவளுக்கு புடிச்சத செஞ்சு குடுக்க முடிஞ்சுதெ! அது ஒண்ணே போதும் எனக்கு’. அழுகையினூடே ஆச்சி அடிக்கடி இதைச் சொல்லி, தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

மகளும் போய், அடுத்த சில மாதங்களில் தன் மகனும் போய், இப்போது தன் கணவரையும் இழந்து தனியே ஆழ்வார்குறிச்சியில் படுத்துக் கிடக்கும் ஆச்சியை இந்த நவராத்திரியின் போது சென்று பார்த்தேன். நீண்ட நாட்கள் கழித்து என்னையும், என் மகனையும் பார்த்து மகிழ்ந்தாள், ஆச்சி. ஆச்சிக்குத் துணையாக ஆச்சியைவிட வயதில் குறைந்த இன்னொரு ஆச்சி இருந்தார். ‘நீ வந்தா சொல்லச் சொல்லி எதுத்த வீட்டு சம்மொத்தாத்தா வீட்டு ஆச்சி சொல்லியிருந்தா. வரச் சொல்லட்டுமா?’ கட்டிலில் இருந்தபடி, அனுமதி கேட்கும் விதமாக ஆச்சி கேட்டாள். ‘ம்ம்ம், வரச் சொல்லு’ என்றேன். சற்று நேரத்தில் கையால் சுவற்றைப் பிடித்து தடவித் தடவி அங்கு வந்த சண்முகதாத்தா வீட்டாச்சி, ’எய்யா, சும்மா இருக்கியா?’ என்று எங்கோ பார்த்தபடி கேட்டார். ‘நல்லா இருக்கேன் ஆச்சி’. என் மகனின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியபடி, ‘சின்னப்பிள்ளைல இருந்தமாரியே புசுபுசுன்னுதான் இன்னும் இருக்கான்’ என்றார். ’மூதிக்கு கண்ணு சுத்தமா அவிஞ்சு போச்சு’. ஆச்சி என் காதில் மெதுவாகச் சொன்னாள்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே மணமாக இருக்கும் ஆழ்வார்குறிச்சி ஆச்சிவீட்டின் அடுக்களை, எந்த வாசமுமில்லாமல் வெறுமனே இருந்தது. அடுக்களைக்கு வெளியே வெயிலில் காய்ந்து களையிழந்து கிடந்த அம்மியையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘என்ன பாத்துக்கிட்டிருக்கெ?’ மகன் கவனம் கலைத்தான். அவனிடம் அடுக்களையைக் காட்டி சொன்னேன். ‘இங்கெதான் நான், சித்தப்பா எல்லாரும் பொறந்தோம்’. நம்பவே முடியாமல், ‘இங்கெ எப்படி பொறப்பாங்க? இது என்ன ஹாஸ்பிட்டலா?’ என்று கேட்ட அவனிடம் விளக்கம் ஏதும் சொல்லாமல், தூசியடைந்து ஓரமாகக் கிடந்த கல் உரலைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். உரலின் குழியில் பழைய குப்பைத்தாள்கள் அடைந்து கிடந்தன.

வீட்டு வேலைகள் செய்வதிலாகட்டும், தொழுவத்திலுள்ள பசு, கன்றுக்குட்டிகளைப் பராமரிப்பதிலாகட்டும். அங்கும் இங்குமாக அலைந்தபடி சுறுசுறுப்பாகவே பார்த்து பழகிய ஆச்சி, இப்படி படுக்கையில் கிடப்பதைப் பார்க்க சகிக்காமலேயே, நான் அடிக்கடி அவளைப் பார்க்கச் செல்வதில்லை. அத்தனை ருசியாக சமைத்து போட்டு, எங்களை வளர்த்த ஆச்சி தன் கடைசிக்காலத்தில் ஹோட்டலில் இருந்து வரும் ‘எடுப்பு’ சாப்பாடு சாப்பிடுவோம் என்பதை கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்தான். ஆனாலும் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவளாக , என்னிடத்தில் ‘நான் நல்லாத்தான் இருக்கென். ஒருகொறையும் இல்ல. யாரையும் தொந்தரவு பண்ணாம இந்தமட்டோட போயிரணும்’ என்றாள். சொன்னபடியே இந்தமாதத்தின் துவக்கத்தில் போயும் விட்டாள்.

ஆச்சி புறப்பட்டுவிட்ட செய்தி கிடைத்தவுடன், ஆழ்வார்குறிச்சிக்குப் போக வேண்டாம் என்று முடிவெடுத்தேன். ஆழ்வார்குறிச்சியுடனான எனது தொப்புள்கொடியுறவு அறுந்து போனதை தற்சமயம் என்னால் ஜீரணிக்க முடியவேயில்லை. அதற்காக ஆழ்வார்குறிச்சிக்குப் போகாமலேயே இருக்கப் போவதில்லை. அம்மா காலமானபிறகு திருநெல்வேலிக்குப் போனால், நெல்லையப்பர் கோயிலுக்குச் செல்லாமல் இருப்பதில்லை. காந்திமதியம்மன் சன்னதியில் சில நிமிடங்கள் நின்று அவள் முகத்தைப் பார்த்துவிட்டு வந்தால், என்னமோ அம்மையைப் பார்த்த நிறைவு ஏற்படும். இனி ஆழ்வார்குறிச்சிக்குப் போனால் சிவசைலநாதர் கோயிலுக்குச் சென்று, பரமகல்யாணி அம்பாளின் முகத்தைப் பார்க்க வேண்டும்.

ஹிஸ் ஹைனஸ் ரவீந்திரன்

ரே திரைப்படத்தை பலமுறை பார்த்த அனுபவம் எனக்குண்டு. அப்படி பார்த்த படங்களில் பல படங்களை இப்போது சொல்ல வெட்கமாக உள்ளது என்றாலும், சில படங்களைப் பற்றிய நினைவுகள் இன்னும் அப்படியே அதே சந்தோஷத்துடன் மனதில் தங்கியுள்ளன. ஆனால் எவ்வளவுதான் சினிமா கோட்டியாக இருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் ஒரே படத்தைப் பார்க்கத் தோன்றியதேயில்லை. நீண்ட நாட்களாக என்னை அறியாமலேயே கடைப்பிடித்து வந்த இந்த பழக்கத்தை உடைத்தது ஒரு படம். அதுவும் ஒரு மலையாளப் படம். மலையாளப் படம் என்றால் மேற்படி படமல்ல. என் உள்ளம் கவர்ந்த நடிகர் மோகன்லால் நடித்து, லோகிததாஸின் எழுத்தில், சிபிமலயிலின் இயக்கத்தில் வெளியான ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ என்ற படம்தான் அது.

hishighnessabdullah-014days

‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்தை திருநெல்வேலியின் ‘சிவசக்தி’ தியேட்டரில் ஒரு மாலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. பார்ப்பதற்கு முன்புவரை அந்தத் திரைப்படத்தின் மேல் எனக்கிருந்த ஒரே ஈர்ப்பு, மோகன்லாலும், வயல்கள் சூழ்ந்த ‘சிவசக்தி’ திரையரங்கின் திறந்து கிடக்கும் கதவுகளைத் தாண்டி வந்து நம்மை வருடும் மாலைநேரக் காற்றும்தான். ஒரு கமர்ஷியல் சினிமாவுக்குரிய விறுவிறுப்பான அம்சங்களுடன் கூடிய கதையை சங்கீதப் பின்னணியில் அமைத்து லோகிததாஸ் எழுதியிருந்த திரைக்கதைக்கு மோகன்லாலுடன் இணைந்து நெடுமுடி வேணு, திக்குரிசி சுகுமாரன் நாயர், சுகுமாரி, கே.பி.ஏ.சி.லலிதா, சங்கராடி, சீனிவாசன், சோமன், கைதப்புரம் தாமோதரன் நம்பூதிரி, சிபிமலையில் போன்றோர் வலு சேர்த்திருந்தார்கள் என்றாலும், ’ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்தின் ஆதார ஸ்ருதி என்னவோ அதன் இசையமைப்பாளர், அமரர் ரவீந்திரன் அவர்கள்தான்.

பாரம்பரியம் மிக்க ஒரு பழைய அரண்மனையில் (பத்மனாபபுரம்) வாழ்ந்து வரும் ராஜவம்சத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரை, அவரது ரத்த உறவுகளே கொல்லத் துடிக்கின்றன. அதற்காக மும்பையில் பிழைப்புக்காக இரவு விடுதிகளில் கவாலி (Qawwali) பாடிக் கொண்டிருக்கும் ஒருவனை வரவழைக்கின்றனர். கூலிக்காகக் கொலை செய்யத் துணிந்து, நம்பூதிரி வேடமணிந்து அரண்மனைக்குள் நுழையும் ‘அப்துல்லா’வான மோகன்லால், இறுதியில் ஒத்துக் கொண்ட வேலையை முடிக்கிறாரா, இல்லையா என்பதுதான் கதை.

சாஸ்திரிய சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவரான ரவீந்திரனுக்கு உற்சாகமளிக்கும் விதமான ஒரு திரைக்கதையை காலம் சென்ற லோகிததாஸ் எழுதியிருக்கிறார். கதையின் மையக் கதாபாத்திரமான உதயவர்ம மகாராஜா, ஒரு சங்கீதப் பிரியர். முக்கியமான சங்கீதக்காரர்களை தன் அரண்மனைக்கு அவ்வப்போது வரவழைத்து பாடச் சொல்லி, மகிழ்ந்து அனுபவித்து, அந்தக் கலைஞர்களுக்கு சன்மானம் கொடுத்து கௌரவித்து அனுப்புவதை வாடிக்கையாகவே வைத்திருப்பவர். ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’வின் முதல் பாடல், அப்படி ஒரு சூழலில்தான் இடம் பெற்றுள்ளது.

மகாராஜாவின் முன்னிலையில் தன் பக்கவாத்தியக்காரர்களுடன் ’பத்மஸ்ரீ’ ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரி என்னும் புகழ் பெற்ற இசைக்கலைஞர் தன்னை மறந்து பாடுகிறார். அந்தப் பாடகரின் இசைமேதமையில் கரைந்து உருகிப் போகிறார், ராஜா. இந்தக் காட்சியில் ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரியாக நடித்திருப்பவர், கேரள திரையுலகின் புகழ் பெற்ற கவிஞரான ‘கைதப்புரம்’ தாமோதரன் நம்பூதிரி. பொதுவாகவே ஒரு சாதாரண மெலடியைக் கூட, பாடுவதற்கு சிரமமான முறையில் கடுமையான ஏற்ற இறக்கங்களுடன் அமைப்பது ரவீந்திரனின் வழக்கம். உதாரணத்துக்கு ‘ரசிகன் ஒரு ரசிகை’ திரைப்படத்தின் ‘பாடி அழைத்தேன்’ மற்றும் ‘ஏழிசை கீதமே’ போன்ற (அதன் மூலமும் மலையாளம்தான்) பாடல்களைச் சொல்லலாம். அப்படியிருக்க, வலுவான சங்கீதப் பின்னணியில் அமையும் ஒரு பாடலுக்குக் கேட்பானேன்? ‘கானடா’ ராகத்தில் அமைந்த ‘நாதரூபிணி’ என்று துவங்கும் இந்தப் பாடலை கம்பீரமான முறையில் ‘கைதப்புரம்’ தாமோதரன் நம்பூதிரிக்காகப் பாடியவர், எம்.ஜி.ஸ்ரீகுமார். என்னுடைய யூகப்படி இந்தப் பாடலைப் பாடுவதற்கு ஸ்ரீகுமார் குறைந்தது இருபது டேக்குகள் வாங்கி, ஒரு நாள் முழுக்கப் பாடியிருக்க வேண்டும். அவ்வளவு சிரமமான துரிதகதிஸ்வரவரிசைகளைக் கொண்ட இந்தப் பாடலைப் பாடியதன் பலனை ஸ்ரீகுமார், அந்த வருடத்துக்கான தேசிய விருதின் மூலம் அடைந்தார். இத்தனைக்கும் இதே படத்தில்,கேரளாவின் மூலைமுடுக்கெல்லாம் இன்றளவும் பெரும் புகழ் பெற்றிருக்கும் ஒரு பாடலை யேசுதாஸ் பாடியிருந்தார். மிகச்சரியாக அந்தப் பாடல்தான் படத்தில் இடம்பெற்றுள்ள அடுத்த பாடல்.

தன்னுடைய நண்பன் என்ற அறிமுகத்துடன் மகாராஜாவின் மருமகன் ரவிவர்மா(சீனிவாசன்) அப்துல்லாவை ’அனந்தன் நம்பூதிரி’ என பெயர் மாற்றி, உருமாற்றி அரண்மனைக்குள் அழைத்து வருகிறான். உதயவர்ம மகாராஜாவுக்கு அந்நியர்களை அரண்மனைக்குள் தங்க வைப்பதில் சம்மதம் இருக்கவில்லை. போனால் போகிறது என்று இரண்டு நாட்களுக்குத் தங்க அனுமதிக்கிறார். இரண்டொரு நாட்களில் அரண்மனையின் ஏதோ ஒரு மூலையிலிருந்து மனதை உருக்கும் விதமாக யாரோ பாடுவது கேட்டு, மகாராஜா அங்கு வருகிறார். தன் மருமகனின் நண்பன் பாடிக் கொண்டிருக்கிறான். கண்மூடி லயித்து பாடிக் கொண்டிருப்பவன், கண்களைத் திறக்கும் போது தன் முன்னால் மகாராஜா நிற்பதைப் பார்த்து பதறிப் போகிறான். ‘அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன்’ என்று வணங்கிக் கிளம்பப் போகிறவனை, மகாராஜா தடுக்கிறார். ‘இனி நீ எப்போ போகணும்னு நான் சொல்றேன்’ என்கிறார். அரண்மனையில் நுழைவதற்கே அனுமதிக்க மறுத்தவரைக் கட்டிப் போட வேண்டுமென்றால், என்ன மாதிரியான ஒரு பாடலை அவன் பாடியிருக்க வேண்டும்! இந்த இடத்துக்கு ரவீந்திரன் தேர்வு செய்த ராகம் ‘ஜோக்’ (Jog). இந்த ராகத்தை ‘பண்டிட்’ பாலேஷ் அவர்கள் எனக்கே எனக்காக மட்டும் ஷெனாயில் வாசித்து மகிழ்வித்த அந்த மாலைப்பொழுதை நினைத்துப் பார்க்கிறேன்.

பாடலின் துவக்கத்தில் ரம்மியமான முறையில் ‘ஜோக்’ ராகத்தை பாடுவதன் மூலம், மகாராஜாவுடன் நம்மையும் இழுத்து தன்வசம் அமர்த்தி விடுகிறார், யேசுதாஸ். ’ப்ரமதவனம்’ என்று தொடங்கும் அந்தப் பாடலை ரவீந்திரன் மெட்டமைத்திருக்கும் முறையையும், யேசுதாஸ் அதைப் பாடியிருக்கும் விதத்தையும் பார்த்து, ‘ஜோக்’ ராகத்தின் மேல் ஆசை கொண்டு, யாரும் அந்தப் பாடலைப் பாட முயன்றால் ‘ஜோக்’(Jog), ’ஜோக்’ (Joke) ஆகிவிடும் அபாயம் உண்டு. கேரளாவின் எல்லா பாட்டுப் போட்டிகளிலும் ’ப்ரமதவனம்’ பாடலைத் தேர்ந்தெடுத்து பாடுவதை, ஒரு சிறப்புத் தகுதியாகவே நினைக்கிறார்கள். ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ படத்தின் ‘நாதரூபினி’ பாடலைப் பாடியதற்காக எம்.ஜி.ஸ்ரீகுமாருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட போது, நியாயமாக ‘ப்ரமதவனம்’ பாடலுக்காக யேசுதாஸுக்குத்தான் விருது வழங்கியிருக்க வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலித்தது.

கேரளத்தின் பாரம்பரியமிக்க கலைகளில் ஒன்றான ‘கதகளி’யின் பின்னணியில் துவங்கும் டூயட் ஒன்றை ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்துக்காக ரவீந்திரன் அமைத்திருக்கிறார். கதகளியின் தாளம், மற்றும் நடன அசைவுகளுடன் துவங்கும் அந்தப் பாடலை யேசுதாஸும், சித்ராவும் பாடியிருக்கிறார்கள். ‘கோபிகா வசந்தம்’ என்று அந்தப் பாடல் துவங்கும் போது அமைக்கப்பட்டிருக்கும் கதகளிக்கான ஜண்டை வாத்திய தாளம், மிக இயல்பாக பாடலின் தன்மையோடு இயைந்து அழகாக மாறுகிறது.

’சண்முகப்ரியா’ ராகத்தில் அமைந்த ‘கோபிகா வசந்தம்’ என்ற அந்தப் பாடலை, காதலனும், காதலியும் பாடும் ஒரு சினிமா டூயட் பாடல் என்று சொல்லவே மனம் கூசுகிறது. அந்த அளவுக்கு சண்முகப்ரியா ராகத்தின் சகல லட்சணங்களுடன் அமைக்கப்பட்ட, ஓர் உயர்ந்த இசைப்பாடல் அது. கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு உயர்ந்த தமிழ் டூயட்டாக ‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தின் ‘இதழில் கதை எழுதும் நேரமிது’ என்ற பாடலைச் சொல்லலாம். ‘லலிதா’ ராகத்தில் அமைக்கப்பட்ட அந்தப் பாடலும் சாதாரண டூயட் பாடல்களுடன் எளிதாகச் சேர்த்து விடமுடியாத ஓர் உயர்ரக இசைப்பாடல்.

சாஸ்திரிய சங்கீதப் பின்னணியில் உருவான இந்தியத் திரைப்படங்களில் ‘சங்கராபரணம்’ படப் பாடல்களுக்கு இணையான ஒரு பாடலை ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்துக்காக ரவீந்திரன் அமைத்திருக்கிறார். மகாராஜாவின் பிரியத்துக்குரிய இசை வித்வான் ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரிக்கும், அப்துல்லா என்கிற அனந்தன் நம்பூதிரிக்கும் இடையேயான போட்டிப் பாடல் அது. கதைப்படி அப்துல்லா, தன்னைப் பற்றித் தவறாகப் பேசி வருவதாக நினைத்துக் கொண்டு, கடும் கோபத்துடன் அரண்மனைக்கு தன் பரிவாரங்களுடன் வருகிறார் அந்த இசைக் கலைஞர். மஹாராஜாவுக்கு முன் அமர்ந்து புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருக்கும் அப்துல்லாவுக்கு, திடீரென்று அங்கு வருகை தந்திருக்கும் அந்த ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரியைப் பார்த்து, எழுந்து நின்று அவரது பாதம் தொட்டு வணங்கப் போகிறான். அதற்கு அனுமதி மறுத்த அவர், ‘என்னைப் பற்றி என்னடா சொன்னாய்? நான் பத்மஸ்ரீ பட்டத்தை காசு கொடுத்து வாங்கினேன். அப்படித்தானே? உன்னுடன் நான் கொஞ்சம் பாட வேண்டும்’ என்று சொல்லிவிட்டு, ஹிந்தோள ராகத்தில் பாடத் தொடங்குகிறார். ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம்,மத்தியமம்,பஞ்சமம்,தைவதம்,நிஷாதம் என ஏழு ஸ்வரங்களுக்கும், ஏழு ராகங்களைத் தேர்ந்தெடுத்து கம்பீரமாகப் பாடுகிறார், அந்த வித்வான். சாஸ்திரிய சங்கீத அடிப்படையில் அவர் பாடும் ஒவ்வொரு ஸ்வரத்துக்கும், ராகத்துக்கும் பதிலளிக்கும் விதமாக ஹிந்துஸ்தானி முறைப்படி அடக்கமாக, அதே சமயம் அழுத்தமாக அப்துல்லா பாடுகிறான். நியாயமாக இப்படி ஒரு சூழலுக்கு இசையமைப்பதற்கு திறமையையும் விட தைரியம் வேண்டும். ரவீந்திரனைப் போன்ற இசைமேதைகளால் மட்டுமே இது போன்ற இசைச்சவால்களைத் துணிச்சலுடன் ஏற்றுக் கொண்டு அற்புதமாக இசையமைக்க முடியும். இதற்கு முன்பு நம் தமிழ்த்திரையுலகில் அப்படி ஓர் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. ‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் ‘ஒரு நாள் போதுமா’ என்ற ராகமாலிகைப் பாடலை, ‘திரை இசைத் திலகம்’ கே.வி.மகாதேவன் நமக்கு வழங்கியிருக்கிறார். அந்தப் பாடலில் டி.எஸ்.பாலையா என்னும் மாமேதையின் அசாத்திய நடிப்பாற்றல், பாடலின் இசையை மேலும் உயரத்துக்குக் கொண்டு சென்றதை ஆண்டுகள் பல போனாலும் நம்மால் மறக்க முடியுமா, என்ன?

‘தேவசபாதலம்’ என்று துவங்கும் இந்தப் பாடலின் காட்சியமைப்பை நான் எத்தனை முறை பார்த்து ரசித்திருக்கிறேன் என்பதை கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. ஒரு இசைப் போட்டியை சுற்றிச் சூழ்ந்து அநேகர் அமர்ந்திருக்க, அதை இயக்குனர் சிபிமலயில் படமாக்கியிருக்கும் விதத்தையும், குறிப்பாக அதன் படத்தொகுப்பையும்(editing) பாராட்ட வார்த்தைகளே இல்லை. குறிப்பிட்ட அந்தப் பாடல் காட்சியில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிக, நடிகையரும் அந்தச் சூழலோடு இயல்பாக ஒன்றியிருப்பார்கள். ஒவ்வொரு ஸ்வரமாக அப்துல்லா பாடப் பாட, தன் கோபம் மறந்து நாமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரி, அப்துல்லாவின் இசையை ரசிக்க ஆரம்பித்து விடுவார்.(கைதப்புரத்துக்காகக் குரல் கொடுத்திருப்பவர் ரவீந்திரன். பாடலில் மூன்றாவது குரலாக இசையமைப்பாளர் ஷரத்தும் பாடியிருக்கிறார்.) இரு இசைக்கலைஞர்கள் அள்ளி வழங்கும் சங்கீத விருந்தில் உண்டு மயங்கிய மகாராஜா தைவதம் வரும் போது தானே களத்தில் குதித்துப் பாடுகிறார். ஒட்டுமொத்தமாக அந்தப் பாடல்காட்சியில் உதயவர்ம மகாராஜாவாக நடித்திருக்கும் நெடுமுடி வேணுவின் உடல்மொழியைப் பற்றிச் சொல்ல என் தாய்மொழியில் வார்த்தைகளே இல்லை.

ஒரே ஒரு ஷாட்டில் மிக மென்மையாக மனதுக்குள் ரசிப்பதை உதட்டில் ஒரு சின்ன ‘ப்ச்’ மூலம் காண்பிக்கும் சுகுமாரி, தப்பும் தவறுமாக தாளம் போட்டபடி அமர்ந்திருக்கும் ஜெகதீஷ், எந்த விதமான உடற்பயிற்சி முறைகளையும், மலச்சிக்கல் முனகல்களையும் முகத்தில் காட்டாமல் இயல்பான சங்கீதக்காரனின் உதட்டசைவுகளை தன் மனதிலிருந்து பாடுவதன் மூலம் அற்புதமாகக் காட்டி நடித்திருக்கும் மோகன்லால், பாடலின் இறுதியில் கண்கலங்கி தன்நிலை மறந்து ததும்பி நிற்கும் கைதப்புரம் , இவர்கள் அனைவரையும் தனது இசைமேதமையால் தாண்டி நிற்கும் ரவீந்திரன் என இந்தப் பாடல் மலையாளத் திரையிசை வரலாற்றின் மிக முக்கிய பதிவு என்றால் அது மிகையில்லை.

பாடல் முடிந்தவுடன் அப்துல்லா எழுந்து நாமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரியின் கால்களில் விழப் போகிறான். ஆரம்பத்தில் அதற்கு அனுமதி மறுத்த ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரி இந்த முறையும் அவனை தன் கால்களில் விழவிடாமல் தடுத்து ‘இனி யார் காலிலுமே நீ விழாதே’ என்று கண்ணீர் மல்க அணைத்துக் கொள்கிறார். கலைச் செருக்குடைய அந்த இசைமேதையை உருக வைத்த ஹிந்தோளம், தோடி, பந்துவராளி, ஆபோகி, மோகனம், சங்கராபரணம், சண்முகப்ரியா, கல்யாணி, சக்ரவாகம், ரேவதி போன்ற ராகங்களை சரியாகக் கலந்து ராகமாலிகையாக அமைந்திருக்கும் ‘தேவசபாதலம்’ என்னும் இந்த ஒரு பாடலைத் தாண்டி, ரவீந்திரனின் இசைமேதமையைச் சொல்ல வேறு ஒரு பாடல் தேவையில்லை . ’இனி யார் காலிலும் விழாதே’ என்று அப்துல்லாவிடம், ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரி சொல்லும் வசனத்தை, லோகிததாஸ் நிச்சயமாக ரவீந்திரனை மனதில் வைத்துக் கொண்டுதான் எழுதியிருக்க வேண்டும்.

செண்பகத்தக்காவின் குரல்

கீழப்புதுத்தெருவிலுள்ள கண்ணப்பர் மடத்தையொட்டிய வளவில்தான் செண்பகத்தக்கா குடியிருந்தாள். ஒரே ஒரு அறை மட்டுமேயுள்ள வீட்டில், தையல் மெஷினை வைத்துக் கொண்டு, வயதான தன் தாயுடன் வசித்து வந்த செண்பத்தக்காவை, அவளது வீட்டுக் காம்பவுண்டைத் தாண்டி வெளியே எங்கேயுமே நான் பார்த்த ஞாபகம் இல்லை. அம்மா தைக்கக் கொடுத்த துணிகளை வாங்கப் போகும் போது மட்டுமே என்னால் செண்பகத்தக்காவைப் பார்க்க முடிந்திருக்கிறது. வெள்ளை நிறத்தில் முத்து முத்தாக ஒரு பாசிமாலை போட்டிருப்பாள் செண்பகத்தக்கா. கைகளில் ரப்பர் வளையல்கள். நெற்றியில் புள்ளியாக சாந்துப்பொட்டும், அதன் மேல் திருநீற்றுக்கீற்றும் இட்டிருப்பாள். எந்த சமயம் பார்க்கப் போனாலும் அப்போதுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாற்போல் பளிச்சென்றே இருக்கும் செண்பகத்தக்காவின் முகம். வறுமையில் செம்மையாக எப்போதும் சிரித்த முகம்தான். ‘வாடே, இரி’. ஸ்டூலை எடுத்துப் போடுவாள். தைத்த துணி தயாராக இருந்தாலும் உடனே கொடுக்க மாட்டாள். ‘என்ன அவசரம்? காப்பி கீப்பி குடிச்சுட்டு போ’. தையல் மெஷினுக்கு மேலே உள்ள ஒரு மர ஸ்டாண்டில் சணல் வைத்துக் கட்டப்பட்ட டிரான்ஸிஸ்டர் பாடிக் கொண்டிருக்கும். டிரான்ஸிஸ்டருடன் சேர்ந்து செண்பகத்தக்காவும் மெல்லிய குரலில் பாடுவாள். இப்படி பல ஒருகுரல் பாடல்களை செண்பகத்தக்காவின் குரலுடன் சேர்த்து இருகுரல் பாடல்களாகக் கேட்டிருக்கிறேன். அப்படி நான் கேட்ட ஒரு பாடலின் படமான ‘புதிய வார்ப்புகள்’ அப்போது திருநெல்வேலி பார்வதி தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தது.

‘என்ன, செம்பகம் இன்னைக்கு என்ன பாட்டு பாடிக்கிட்டிருந்தா?’ வீட்டுக்கு வந்தவுடன் எப்போதும் அம்மா கேட்பாள். ஒவ்வொருமுறை ஒவ்வொரு பாட்டைச் சொல்வேன். ஆனால் செண்பகத்தக்காவால் எனக்கு முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடலாக நான் இன்றுவரை ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் ‘இதயம் போகுதே’ பாடலைத்தான் நினைக்கிறேன். அந்தச் சிறுவயதிலேயே ஏனோ செண்பகத்தக்காவின் வாழ்க்கையுடன் அந்தப் பாடலை சம்பந்தப்படுத்தியே கேட்டுப் பழகியிருக்கிறேன். அந்தப் பாடலைப் பாடிய ஜென்ஸி எப்படியிருப்பார் என்று எனக்கு அப்போது தெரியாது. அது தெரியவரும்வரை செண்பகத்தக்காதான் எனக்கு ஜென்ஸி. தெரிந்த பிறகும் கூடத்தான்.

jency_big

‘இதயம் போகுதே’ பாடல் தன்னை விட்டு வெளியூருக்குச் செல்லும் காதலனைப் பார்த்து ஏக்கத்துடன் பாடும் நாயகியின் பாடல். காதலன் தன்னை எப்படியும் வந்து கைப்பிடிப்பான் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாமல் பாடப்படும் பாடலை ஜென்ஸி பாடியிருக்கும் விதம் அத்தனை தத்ரூபமானது. அதுவும் அந்த மெட்டின் துவக்கத்தில் ‘இதயம் போ . . . . . . . .குதே . . . .’ என்று ஜென்ஸி பாடும் விதத்தில் இதயம் மெல்ல மெல்ல விலகி தூரமாகப் போய்க் கொண்டிருப்பதை நாம் கண்கூடாக உணரலாம். மிக எளிமையான துவக்கத்துடன் அமைந்த இந்தப் பாடலின் சரணங்களில் ஒரு நொடியில் பாடுவதற்குக் கடினமான இடத்தைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. அதையும் தனது வெகுளியான குரலால் ‘தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா’ஜென்ஸி பாடியிருக்கும் விதத்தைக் கேளுங்கள். இதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் சரணங்களின் இடையில் வார்த்தைகளில்லாமல் ‘லாலல லலலால லலலாலலா’ என்றும் ஜென்ஸி பாடியிருக்கிறார். ஒரு பாடலுக்குள்ளேயே அவர் வேறோர் ஜென்ஸியாகத் தெரியும் இடமது.

தான் பாடி வந்த காலகட்டத்தில் ஜென்ஸி, பல இளம்பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பிடித்த பாடகியாக இருந்த காரணத்தை இப்போது யோசித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. எந்த நளினமும், மேதமையும் இல்லாத ஜென்ஸியின் குரலை தங்களின் குரலாக அப்போதைய பெரும்பாலான யுவதிகளும், தங்கள் சகோதரிகளின், காதலிகளின் குரலாக அப்போதைய இளைஞர்களும் நினைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ’ஆயிரம் மலர்களே மலருங்கள்’, ‘இதயம் போகுதே’, ‘அடி பெண்ணே’ இப்படி எந்த ஒரு ஜென்சியின் பாடலைக் கேட்டாலும் அதில் ஜென்சியின் குரல் கேட்பதில்லை. அடுக்களையின் குழம்புக் கொதியினூடே கேட்கும் அக்காவின் குரலாக, குளியலறையிலிருந்து சந்திரிகா சோப்பின் நுரைத்த நறுமணத்துடன் வெளியே கசிந்து ஒழுகும் அத்தை மகளின் குரலாக, மதிய உணவுக்குப் பின் ஒட்டுமொத்த வீடும் உறங்கிக் கொண்டிருக்க, ஒருச்சாய்த்துப் படுத்தபடி, ‘ராணி’ புத்தகத்தைப் புரட்டியவாறே, தனக்கு மட்டும் கேட்கும் விதமாகப் பாடும் மதினியின் குரலாகத்தான் நம்மால் கேட்க முடிகிறது. இல்லையென்றால் அத்தனை தெளிவான தமிழ் உச்சரிப்பில்லாத ஜென்ஸிக்கு இத்தனை வரவேற்பு அந்த சமயத்தில் கிடைத்திருக்காது.

‘அதென்னடே, அந்த மலையாளத்துப்பிள்ள ‘மைலே மைலே’ன்னு பாடுது?’ ராமையா பிள்ளை இந்த மாதிரி குற்றம் கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வம் உடையவர். ‘கடவுள் அமைத்த மேடை’ படத்தின் ‘மயிலே மயிலே’ பாடலை ‘மைலே மைலே’ என்றுதான் ஜென்ஸி பாடியிருக்கிறார். இல்லையென்று சொல்லமுடியாதுதான். ஆனால் ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த அந்தப் பாடலின் சரணத்தில் ’நீ அணைக்க, நான் இருக்க, நாள் முழுக்க தேன் அளக்க’ என்னும் இடத்தை லகுவாகக் கடப்பதன் மூலம், ஜென்ஸி அக்குறையை மறக்கச் செய்கிறார். உடன்பாடியிருப்பவர் அப்போதே ஜாம்பவனாகிவிட்ட பாலசுப்ரமணியம் என்பதால் அவரது அநாயசபாடுமுறையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலுள்ள பாடல்களே ஜென்ஸி பாடியிருக்கிறார் என்றாலும், எண்பதுகளில் எல்லா திசைகளிலும் ஜென்சியின் குரலே ஒலித்தது. (இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம்? இரவானால் எல்லா பண்பலை வானொலிகளிலும் ஜென்ஸியின் ராஜ்ஜியம்தான்) தனிக்குரல் பாடலான ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் ‘இதயம் போகுதே’ பாடல் ஜென்ஸிக்கு புகழ் சேர்த்தது போலவே, ’நிறம் மாறாத பூக்கள்’ திரைப்படத்தின் இருகுரல் பாடல் ஒன்றும் ஜென்ஸிக்கு பெரும் புகழ் சேர்த்தது. ’ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாடலை எஸ்.பி.சைலஜாவுடன் பாடிய ஜென்ஸியுடன் பாடலின் இறுதியில் வாசுதேவனும் இணைந்து கொள்வார். மூவரும் அவரவர் தனித்தன்மையுடன் பாடியிருப்பார்கள் என்றாலும் ஜென்ஸியின் குரல் தனியாகத் தெரிவதற்குக் காரணம், ஜென்ஸியிடம் இயல்பாகவே அமைந்த வெகுளித்தனமான முதிரா இளங்குரல்தான். அதனால்தான் அந்தப்பாடலை ஜென்ஸியின் குரலிலேயே துவக்கியிருந்தார் இளையராஜா. அத்தனை சிறப்பான மெட்டுடைய, நல்ல வரிகளுடைய பாடலை, தமிழே தெரியாத ஜென்ஸி எவ்வளவு உணர்ச்சிபூர்வமாகப் பாடியிருக்கிறார் என்பதற்கு சரணத்தின் முடிவில் வரும் ‘என் பாட்டும், உன் பாட்டும் ஒன்றல்லவோ’ என்ற வரியைக் கேட்டால் நமக்குப் புரியும்.

jency

நாகர்கோவிலுக்கு அருகில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ, ஜென்ஸிக்கும் நாகர்கோவில்காரர்கள் போலவே பெரிய ‘ற’ ரொம்பப் பிடிக்கும். ‘ஆயிறம் மலர்களே, மலறுங்கள்’, ‘இறு பறவைகள் மலை முழுவதும்’ போன்ற பாடல்கள் உதாரணங்கள். மற்றவைகளிலும் ஜென்ஸியின் குரலில் பெரிய ‘ற’வைக் கேட்டு மகிழலாம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இளையராஜாவைப் பற்றிச் சொல்லும்போது கூட ‘றாஜா ஸார்’ என்றே மரியாதையுடன் அழுத்திச் சொன்னார். ஆனால் ஜென்ஸியின் இந்த ‘ற’ குறையையும் மீறி அவரது குரல் நம்மை ரசிக்க வைத்தது. ‘நிறம் மாறாத பூக்கள்’ திரைப்படத்தின் ‘இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே’ பாடலின் துவக்கம் முதல் இறுதிவரை உணர்ச்சிபூர்வமாகப் பாடி அந்தப் பாடலின் ஆன்மாவை நம் மனதுக்குள் செலுத்திய ஜென்ஸியை என்ன சொல்லி பாராட்டுவது?

காதல் ஏக்கத்தில் பாடும் இளம்பெண்ணின் குரலுக்கு அந்தக் காலகட்டத்தில் இளையராஜா பெரும்பாலும் ஜென்ஸியின் குரலையே தேர்ந்தெடுத்தார். மிக எளிமையான மெட்டுதான் என்றில்லை. பாடுவதற்கு சிரமமான பாடல்களையும் துணிந்து ஜென்ஸிக்கேக் கொடுத்தார். அப்படி ஒரு சிரமமான மெட்டு, ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் ‘அடி பெண்ணே’ என்னும் பாடல். துவக்கமே உச்சஸ்தாயியில். பின்னர் சரணத்தின் பல இடங்களில் பல ஊர்களுக்குச் சென்று பின் பத்திரமாக வீடு திரும்ப வேண்டிய கட்டாயம். கொஞ்சம் அசந்தாலும் வண்டி தடம் புரண்டு விடக்கூடிய அபாயமுள்ள மெட்டது. பயமறியா இளங்கன்றாக ஜென்ஸி அந்தப் பாடலை மிகச் சரியாகவே பாடியிருப்பார்.

‘அடி பெண்ணே’ பாடலுக்கு நேரெதிர் திசையிலுள்ள மற்றுமொரு தனிக்குரல் பாடலை ஜென்ஸிக்குக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. இந்தப் பாடலை, தான் பின்னால் அமைக்கப் போகும் ஓர் அற்புதமான மெட்டுக்கான முன்னோட்ட முயற்சியாக இளையராஜா செய்து பார்த்திருப்பாரோ என்ற ஐயம் எனக்குண்டு. ’அன்னக்கிளி’ இயக்குனர்களான தேவராஜ்-மோகனின் இயக்கத்தில் வெளியான ‘பூந்தளிர்’ திரைப்படத்தின் ’ஞான் ஞான் பாடணும்’ என்ற பாடலை கீரவாணி ராகத்தில் அமைத்த இளையராஜா, பிற்பாடு ‘ஜானி’ திரைப்படத்தின் ‘காற்றில் எந்தன் கீதம்’ பாடலை அமைப்பதற்கான யோசனையை, இந்த ‘பூந்தளிர்’ பாடலிலிருந்துதான் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பாடலை தன் தாய்பாஷையில் பாடியிருப்பதால் பெரிய ‘ற’ சிக்கலில்லாமல் அருமையாகப் பாடியிருப்பார் ஜென்ஸி. தான் பாடிய மற்ற தமிழ்ப்பாடல்களைவிட ’ஞான் ஞான் பாடணும்’ பாடலில் கட்டவிழ்க்கப்பட்ட சுதந்திரக் குரலில் அவர் பாடியிருப்பதை நம்மால் கவனிக்க முடியும். அதுவும் இந்தப் பாடலின் தாளத்தைப் பற்றியும், வயலின் மற்றும் புல்லாங்குழல் போன்ற இசைப்பகுதிகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தால் தனியாக இன்னொரு கட்டுரைதான் எழுதவேண்டி வரும்.

ஜென்ஸியின் பாடல்களைச் சொல்லும் போது ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்கேற்ப ஒவ்வொரு விருப்பப் பாடலைச் சொல்வார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக அந்தக்கால இளைஞர்கள் பலரின் ஓட்டுகளைப் பெற்று Unopposedஇல் ஜெயித்த பாடல் ஒன்று உண்டென்றால் அது ‘உல்லாசப் பறவைகள்’ திரைப்படத்தின் ‘தெய்வீக ராகம்’ பாடல்தான். ஜென்ஸியின் பாணியில் சொல்வதாக இருந்தால் ‘தெய்வீக றாகம்’. காதுகளில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு கேட்டாலும் இந்தப் பாடலை ‘ஓ’வென்று எங்கோ வெளியூரிலிருந்து ஜென்ஸி துவக்கிப் பாடுவதைத்தான் நம்மால் கேட்க முடியும். சரணத்தில் ‘செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக் கொண்டு’ என்று ஜென்ஸி பாடும் போதெல்லாம் செந்தாழம்பூவின் வாசனையை நான் நுகர்ந்திருக்கிறேன். ‘பாராட்ட வா, நீராட்ட வா, நீ நீந்த வா என்னோடு, மோகம் தீருமே’ என்று ஜென்ஸி அழைக்கும் போது உடனே போய் தலைகுப்புற அந்த நீரில் குதித்து விடத் தோன்றியிருக்கிறது. நிற்க. முழுக்க முழுக்க இதன் இசையையும், ஜென்ஸியின் பாடுமுறையையும் வைத்தே இதை சொல்கிறேன். இந்தப் பாடலின் காட்சியில் அடக்க ஒடுக்கமாக ஆற்றங்கரையில் புடவையை அவிழ்த்து முகம் கழுவும் தீபாவுக்கும், எனது இந்த அபிலாஷைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.

பெரும்பாலும் உச்சஸ்தாயியில் பாடும் பல பாடல்களை ஜென்ஸி பாடியிருக்கிறார் என்றாலும் ‘அன்பே சங்கீதா’ திரைப்படப்பாடலான ‘கீதா சங்கீதா’ என்னும் பாடல் குறிப்பிடத்தக்கதொரு ஜென்ஸியின் பாடல். Under rated பாடகரான ஜெயச்சந்திரனுடன் இணைந்து ஜென்ஸி பாடியிருக்கும் இந்தப் பாடலை ‘லாலாலலலா’ என்று மழலையாக ஜென்ஸி துவக்குவார். அதைத் தொடர்ந்து ‘கீ . . .தா . . .’ என்று உச்சஸ்தாயியில் ஜெயச்சந்திரன் பாடலைத் துவக்கிப் பாடுவார். பல்லவி முடிந்து சரணம் முடியும் போதுதான் ‘கண்ணா’ என்று ஜென்ஸி வந்து இணைவார். கொஞ்சம் கூட பதற்றமில்லாமல், பிசிறில்லாமல் ஜென்ஸி துவக்கும் விதத்தையும், ஜெயச்சந்திரனுக்கு சற்றும் சளைக்காமல் அடுத்த சரணத்தில் ‘பலஜென்மம் பிறந்தாலும் உன்வாசல் தேடும் உறவல்லவோ’ என்று ஜென்ஸி பாடியிருக்கும் முறையையும் கேட்டுப் பாருங்கள்.

வேடிக்கைப் பாடல்களையும் ஜென்ஸி பாடாமலில்லை. ‘மெட்டி’ திரைப்படத்தின் ‘கல்யாணம் என்னை முடிக்க’ என்னும் பாடலை அனுபவித்துப் பாடியிருப்பார். படுவேகமாக அதன் சரணத்தை முடித்து பல்லவியுடன் போய் இணையும் இடமொன்று இருக்கிறது. ‘ரயில் வரும் வழியினில் தோரணம் ஆடணும், இதுவும் எனது இனியமனது விரும்புவது’ என்று துரிதகதியில் பாடிய ஜென்ஸியேதான், இதே போல படுவேகமாகத் துவங்கக்கூடிய ஒரு பாடலையும் பாடினார். கரஹரப்ரியா ராகத்தில் மெட்டமைக்கப்பட்ட ‘பூ மலர்ந்திட’ என்று துவங்கும் ‘டிக் டிக் டிக்’ படப்பாடல்தான் அது. இதுபோன்ற ராகங்களின் அடிப்படையில் மெட்டமைக்கப்பட்ட பாடல்களில் ஜென்ஸியின் குரலில் வெளிவந்த முக்கியமானதொரு பாடல், ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் ‘தம்தன நம்தன’ என்னும் பாடல். ஷண்முகப்ரியா ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை ஜென்ஸி, மற்றொரு பாடகியான வசந்தாவுடன் இணைந்து பாடியிருந்தார். மோகன ராகத்தில் அமைந்த, பெரும்புகழ் பெற்ற, ‘மீன்கொடித் தேரில்’ என்னும் ‘கரும்புவில்’ படப்பாடலை ஆண்குரலில் யேசுதாஸும், பெண்குரலில் ஜென்ஸியும் பாடியிருந்தார்கள்.

’பகலில் ஓர் இரவு’ திரைப்படத்தின் ‘தோட்டம் கொண்ட ராசாவே’ மற்றும் ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தின் ‘வாடி என் கப்பக்கிழங்கே’ போன்ற நையாண்டிப் பாடல்களை இளையராஜாவுடன் இணைந்து பாடிய ஜென்ஸி, கடைசியாக தமிழில் பாடிய பாடலும் ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படப்பாடல்தான். அதற்கு முன்பே இளையராஜாவுடன் இணைந்து ‘ஈரவிழிக்காவியங்கள்’ திரைப்படத்தின் ‘என் கானம்’ என்னும் பாடலைப் பாடியிருக்கிறார். கிடாரிஸ்டுகளின் விருப்பப்பாடல் அது. ஆனால் இளையராஜா பாடிய டூயட்களில் இன்றளவும் சிறப்பான ஒன்றாக ’அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் அவர் ஜென்ஸியுடன் இணைந்து பாடிய ’காதல் ஓவியம் பாடும் காவியம்’ பாடல்தான் கருதப்படுகிறது. அந்தப்பாடலின் சரணத்தில் ‘தாங்குமோ என் தேகமே, மன்மதனின் மலர்க்கணைகள் தோள்களிலே’ என்ற வரிகளை ஜென்ஸி பாடுகிறார். அதை கேட்கும் போது நமக்கு விரசமாகத் தோன்றாததற்குக் காரணம், அதன் இசை மட்டும் காரணமல்ல. அந்த வயதுக்கேயுரிய ஜென்ஸியின் வெகுளியான,விகற்பமில்லாத குரலும்தான். மலாய் பாஷையில் துவங்கும் ‘ப்ரியா’ படப்பாடலான ‘என்னுயிர் நீதானே’ பாடலை ஜென்ஸியின் குரலில் கேட்கும் போது யாரோ ஒரு சிங்கப்பூர் பெண்தான் பாடியிருப்பதாகவே நமக்கு தோன்றும் அளவுக்கு ஜென்ஸியின் குரல் அந்த மலாய் நடிகைக்குப் பொருத்தமாக இருந்தது.

கிடார் வாசிப்பவர்கள் கொண்டாடும் மற்றொரு பாடலையும் ஜென்ஸி பாடியிருக்கிறார். கிராமியப் பின்னணியில் அமைந்த இந்தப் பாடலை கிடாரின் துணையுடன் அட்டகாசமாக மெட்டமைத்திருப்பார் இளையராஜா. அவ்வளவாக அறியப்படாத அந்தப் பாடல் ‘எங்கேயோ கேட்ட குரல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ‘ஆத்தோரம் காத்தாட’ என்று துவங்கும் அந்தப் பாடலை நீந்திக்கொண்டே பாடியிருக்கிறாரோ என்று நாம் சந்தேகிக்கும் வண்ணம் பாடியிருப்பார் ஜென்ஸி. அவர் பாடி அதிகம் அறியப்படாத இன்னொரு பாடல், ‘வட்டத்துக்குள் சதுரம்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆடச் சொன்னாரே’ என்ற க்ளப் வகைப் பாடல். அந்தப் பாடல் ஜென்ஸிக்காவது ஞாபகம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.

ஆனால் இத்தனை பாடல்களையும் தாண்டி, இன்றும் ஜென்ஸிக்கு ஓர் அடையாளமாக விளங்கும் பாடலென்றால் ‘ஜானி’ படத்தில் இடம்பெற்ற ‘என் வானிலே ஒரே வெண்ணிலா’ என்ற பாடல்தான். இன்றும் கூட ஜென்ஸியைக் குறித்து அதிகம் அறியாதவர்களிடம், ‘என் வானிலே’ பாட்டைப் பாடியவர் என்று சொன்னால், ‘அந்தப் புள்ளையாடே’ என்று முகம் மலர்ந்து சிரிப்பதைப் பார்க்க முடிகிறது. இப்பாடலின் திரைவடிவில் பியானோவை இசைத்துக் கொண்டே ஸ்ரீதேவி பாடுவார். பாடலின் சரணம் முடியும் இடமான, “வார்த்தைகள் தேவையா?” என்பதைத் தொடர்ந்து வரும் ஆலாபனை மிகவும் சிரமமான ஒன்று. இந்தப் பாடல் பலருக்கு விருப்பமான ஒன்றாக இருந்தாலும், பொது மேடைகளில் இதைத் தெரிவு செய்து பாடுவதற்குத் தயங்குவதற்கான காரணம் தலை குப்புறக் கவிழ்த்துவிடும் அந்த ஆலாபனைதான். எந்தப் பிசிறும் இல்லாமல், சிரமமான இடம் போலவே தெரியாதபடி வெகு அநாயசமாக அதைக் கடந்து சென்றிருப்பார் ஜென்ஸி. இத்திரைப்படம் வெளியானபோது பாடல்களுக்காவும், பாடல்களை சிறப்பாகக் காட்சிப்படுத்தியததற்காகவும் இத்திரைப்படத்தைத் தமிழகமே கொண்டாடியது. செண்பகத்தக்காவுக்கும் இப்பாடல் மிகவும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ஒலிபரப்பாகும் பாடலுடனே இணைந்து பாடும் செண்பத்தக்கா, ‘என் வானிலே’ பாடலை மட்டும் அது முடிந்த பிறகும் பாடிக்கொண்டிருப்பார். ‘நீரோடை போலவே என் பெண்மை’ என்ற வரியை மெல்லிய குரலில் பாடும் போது செண்பத்தக்காவின் கண்கள் கலங்கி நிரம்பி நிற்பதைப் பார்த்திருக்கிறேன்.

இப்போது செண்பகத்தக்காவின் வீடு இருந்த இடத்தில் உயரமாக ஒரு புதிய கட்டிடம் நிமிர்ந்து நிற்கிறது. செண்பகத்தக்கா எங்கு, எப்படி இருக்கிறாள் என்ற தகவலில்லை. ஆனால் செண்பகத்தக்காவை ஞாபகப்படுத்துகிற ஜென்ஸி கேரளாவில் இசையாசிரியையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு நாள் போய்ப் பார்க்க வேண்டும்.

கொலு

நவராத்திரி விழா நாளைக்கு தொடங்குகிறது என்றால் இன்று அதிகாலையில் வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு, பருத்த பிருஷ்டங்கள் தெரிய, நெல்லையப்பன் தொழுவத்தின் பரண் மேலிருக்கும் கொலுப்பலகைகளை இறக்குவார். ‘எய்யா, கண்ணுல தூசி விளுந்துரும். தள்ளிப் போங்க.’ தும்மியபடியே விலகி வந்துவிடுவேன். பைப்படியில் பலகைகளைப் போட்டு ப்ளீச்சிங் பவுடரைக் கொட்டி, தேயோதேயென்று தேய்த்து, வெயிலில் காயவைப்பார். மாலையில் பலகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரியாக மாட்டும் வேலை துவங்கும். ‘காப்பி குடியும் நெல்லையப்பன்’. அம்மா கொடுக்கும் காப்பியை வாங்க மறுத்து, ‘மொதல்ல பொம்ம எதயும் கீள போட்டுராம வேலய முடிச்சுக்கிடுதெம்மா. அப்பொறம் நிம்மதியா செம்பு நெறைய குடிக்கென்’.

எங்கள் வீட்டில் இரண்டு பழங்காலத்து பெரிய பீரோ நிறைய கொலுபொம்மைகள் உண்டு. தாத்தா வாங்கி சேகரித்தவை. நாங்கள் பள்ளி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த காலத்தில் வண்ணம் கலைந்து, பொலிவிழந்து போன அத்தனை பழைய பொம்மைகளுக்கும் அப்பாவின் ஏற்பாட்டில் புதிதாக வர்ணம் பூசப்பட்டு, சரி செய்யப்பட்டது . சூர்ப்பனகையாகிப் போன ஒருசில பொம்மைகளை மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை. திருநெல்வேலியின் புகழ் பெற்ற MSV ARTS ஓவியர் முத்துக்குமாரின் கலைத்திறனில் பழைய பெரிய பிள்ளையார், சரஸ்வதி, லக்ஷ்மி, கட்டுமஸ்தான உடற்கட்டுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சிவபெருமான், மாரீச மானைக் காட்டும் சீதாபிராட்டி, உடன் வில்லுடன் நிற்கும் அவர் வீட்டுக்காரர் மற்றும் கொழுந்தனார், ரொம்பவே புஷ்டியான, தவழும் கிருஷ்ணக்குழந்தை, தேவாரம் பாடிய மூவருடன் நிற்கும் மாணிக்கவாசகர், சப்பரத்தில் பார்வதிபரமேஸ்வரனைத் தூக்கி வரும் சிவனடியார்கள், முன்னே செல்லும் நாதஸ்வர, மேளக் கலைஞர்கள், அசரடிக்கும் கலைமேதமையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர், இரண்டு பெரிய யானைகள், பப்பி ஷேமாகக் காட்சியளிக்கும் பாலமுருகன், கீதோபதேச கண்ணனுடன் இருக்கும் அர்ஜுனன், தன் தலையில் தானே தீயை வைத்துக் கொண்ட பத்மாசுரன் மற்றும் மோகினி வடிவில் உள்ள திருமால், எங்கள் அம்மாக்குட்டி ஆச்சியை நினைவுபடுத்தும் அவ்வையிடம் சுட்ட பளம் வேணுமா, சுடாத பளம் வேணுமா என்று மரத்தில் அமர்ந்தபடி கேட்கும் தலைப்பா கட்டிய சிறுவன் ‘முருகன்’, அசல் காய்கறிகள் போல் காட்சியளிக்கும், மண்ணில் வண்ணம் குழைத்துச் செய்யப்பட்ட வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி, பூசணிக்காய், முருங்கைக்காய், தேங்காய், வாழைப்பழங்கள் இவர்களுடன் மஹாத்மா காந்தியும், நேரு மாமாவும், கைகட்டி விறைப்பாக நிற்கும் விவேகானந்தரும் உண்டு.

எங்கள் வீட்டின் பிரம்மாண்ட கொலு போக ஓரிரண்டு பொம்மைகள் வைத்து பூஜை செய்து சுண்டல் விளம்புகிற வீடுகளையும் பார்த்திருக்கிறேன். அங்கும் கொலுவுக்கான சூழலும், வாசமும் நிலவும்தான். வீடுவீடாக கொலுபார்க்க பெண்கள் அழைப்பது ஒரு சடங்காகவே நடக்கும். குஞ்சுவின் தாயார் மரியாதை நிமித்தம் அழைத்த வீடுகளில் தலைகாட்டச் செல்வார். அம்மன் சன்னதி போக, சுவாமி சன்னதி, தெப்பக்குளத்தெரு, கீழரதவீதி, பெருமாள்சன்னதி தெரு என அவர் செல்லும் எல்லா வீடுகளுக்கும் ஒட்டிக் கொண்டு குஞ்சுவும் செல்வான். அப்படி ஒரு வீட்டுக்கு கொலு பார்க்கப் போயிருந்த போது அந்த வீட்டு மாமியிடம் யதார்த்தமாக குஞ்சு கேட்ட கேள்வி, குஞ்சுவை நிரந்தரமாக யார்வீட்டுக்கும் கொலு பார்க்கச் செல்ல விடாமல் தடுத்து விட்டது. ‘ஏன் மாமி! பெரியமனுஷி ஆனதுக்கப்பொறம் உங்காத்து ஷோபாவ இப்பெல்லாம் ஜாஸ்தி வெளியெ பாக்க முடியறதில்லையே!’ என்று பெரியமனுஷத்தனமாக குஞ்சு கேட்டபோது, அவன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். சற்றும் எதிர்பார்த்திராத தருணத்தில் காலை மிதித்தாலும் அநிச்சையாக திருநவேலி பாஷையில் பொத்தாம் பொதுவாக யாருடைய சகோதரியையாவதுத் திட்டும் குஞ்சு, பிராமணப் பெண்களிடம் மட்டும் ஏனோ பிராமணாள் பாஷை பேசுவான். ஒரு நவராத்திரிக்கு தன் வீட்டுக்கு வந்திருந்த தூரத்து உறவுக்கார பெண்மணியிடம், ‘என் கண்ணே பட்டுடும் போல இருக்கறது. இந்த புடவைல ஒங்களப் பாக்கறதுக்கு அச்சு அசல் அப்பிடியே ‘வாள்வே மாயம்’ ஸ்ரீப்ரியா மாதிரியே இருக்கேள். ஆத்துக்குப் போன ஒடனெ மாமாக்கிட்டெ சொல்லி சுத்திப் போடச் சொல்லுங்கோ,’ என்று சொல்லி குடும்பத்துக்குள் பெரிய பிரச்சனையாகி, அவர்களுடனான உறவு அத்துடன் முறிந்து போனது. மேற்படி சம்பவத்துக்குப் பிறகு குஞ்சு தீவிர ‘பிராமண பாஷை எதிர்ப்பாளனாக’ மாறிப் போனான். ‘அதெல்லாம் ஒரு பாஷையால? மனசுல பட்டத யதார்த்தமா சொன்னாலும் அது வேற அர்த்தத்துல டிரன்ஸ்லேட் ஆயிருது.’

கல்லூரிக்காலங்களில் நவராத்திரி சமயத்தில், குறிப்பாக மாலைநேரங்களில், வெளியே சுற்றவே மனம் விரும்பும். ஆனால் அப்படி வெளியே செல்ல முடியாமல் சாயங்காலம் பூஜை முடிந்தவுடன் ஹார்மோனியத்தில் விநாயகத்து பெரியப்பா இருமியபடியே உட்காருவார். ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், இன்னொரு கிண்ணத்தில் ரவையுமாக வேண்டாவெறுப்பாக மிருதங்கத்தை எடுத்துக் கொண்டு உட்கார்வேன். முதலில் கொஞ்ச நேரம் பெரியப்பா (அவர்) மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒரு ராக ஆலாபனையில் மெதுவாக புகுந்து உள்ளே செல்வார். அது முடிவதற்குள் மிருதங்கத்தில் சேர்த்த ரவையின் ஈரம் காய்ந்து நான் இரண்டு, மூன்றுமுறை நனைத்து விடுவேன். கொலு பார்க்க வரும் கூட்டத்தைப் பொறுத்து எங்களின் கச்சேரி நீடிக்கும் அல்லது தடைபட்டு முடியும். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தேங்காய், எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை, சுண்டல், தட்டாம்பயிறு, பூம்பருப்பு என விதவிதமாக பிரசாதங்கள் செய்து நாங்களே வயிறுமுட்ட சாப்பிடுவோம். சூட்டோடு சூடாக பூஜை முடிந்தவுடன் பெரியப்பா ’ஹிமகிரிதனயே’ ஆரம்பித்துவிட, மனதுக்குள் சுண்டலை நினைத்தபடியே சுத்ததன்யாசிக்கு மிருதங்கம் வாசிப்பேன். ஒவ்வொரு பாட்டும் முடியப் போகிற ஆசையில் ‘தளாங்குதக்கதின்ன, தளாங்குதக்கதின்ன’ என்று சாப்பு கொடுத்து முடிக்க முயல்வேன். சாப்பு தந்த உற்சாகத்தில் பெரியப்பா கானடாவுக்குள் பிரவேசிக்க, ‘ஹ்ம்ம், இன்னைக்கும் ஆறுன பிரசாதந்தான்’ என்று மனதுக்குள் அழுது கொண்டு, ‘சொத்து சொத்தென்று’ மிருதங்கத் தொப்பியில் அறைவேன்.

அம்மன்சன்னதியில் அப்போது குடியிருந்த ஒரு பாட்டு டீச்சர் ஒருமுறை கொலு பார்க்க எங்கள் வீட்டுக்கு வந்தார். நடிகர் நீலுவின் சாயலிலுள்ள அவரது கணவரை வைத்து நாங்கள் அந்த பாட்டு டீச்சரை ‘நீலு சம்சாரம்’ என்றே அடையாளம் சொல்வோம். சரியாக நானும், விநாயகத்து பெரியப்பாவும் கச்சேரி செய்து கொண்டிருந்த போது வந்து விட்ட ‘நீலு சம்சாரத்தை’ ஒரு பாட்டு பாடச் சொல்லி எல்லோரும் கேட்டுக் கொள்ள, அவர் அநியாயத்துக்கு பெண்பார்க்கும் படலத்துப் பெண் போல வெட்கப்பட்டு, செட்டியார் பொம்மைக்குப் பின் ஒளிந்து கொண்டார். ‘ஏதாவது ஒரே ஒரு கீர்த்தன பாடுங்களென்’. ‘நீலு சம்சாரத்தின்’ பதற்றத்தை விநாயகத்து பெரியப்பா மேலும் கூட்டினார். நீண்ட நேர மௌனத்துக்குப் பின் ஒருமாதிரியாக பாடுவதற்கு முன் வந்தார். ‘தமிள் பாட்டே பாடுதென்’. அந்த சமயத்தில் விநாயகத்து பெரியப்பாவைத் தவிர வேறு யாருக்கும் மிருதங்கம் வாசித்தறியாத நான், ‘பாட்டு டீச்சரான நீலு சம்சாரத்துக்கு’ பயந்து நைஸாக பெரியப்பாவிடம் மிருதங்கத்தைத் தள்ளிவிட்டு, ஹார்மோனியத்தை எடுத்துக் கொண்டேன். பி.சுசீலா பாடிய ‘மாணிக்க வீணையேந்தும்’ பாடலைப் பாடத் துவங்கினார் ‘நீலு சம்சாரம்’. எனக்கு நன்கு பழக்கமான மோகன ராகத்தில் அமைந்த அந்தப் பாடலை கண்டுபிடிக்கவே முடியாதபடி பல ராகங்களில் பாடி, ‘மாணிக்க வீணையேந்தும்’ பாடலை ராகமாலிகையாக்கினார். ஒருமாதிரியாக பாட்டு முடியும் போது, எனக்கு சுத்தமாக ஹார்மோனியம் வாசிக்க மறந்து போயிருந்தது. பெரியப்பாவுக்கு மிருதங்கம்.

சரியாக நவராத்திரி சமயங்களில் ‘தசரா’ விழாவுக்காக திருநெல்வேலி வீதிகளில் ராமர், அனுமன், சிவன் குறிப்பாக ‘காளி’ வேடங்களில் பக்தர்கள் உலா வருவர். தென்னிந்தியாவில் மைசூருக்கு அடுத்து விமரிசையாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடக்கும் தசரா விழாவுக்காக நேர்ந்து கொண்ட பக்தர்கள் வீதி வீதியாக கடவுள் வேஷங்களில் காணிக்கை பெற்றுக் கொண்டிருப்பார்கள். பாளையங்கோட்டையில் நடக்கும் ‘தசரா’ விழாவும் புகழ் பெற்றதுதான். திருநெல்வேலி டவுணில் உள்ளவர்கள் தசரா சப்பரங்களைப் பார்ப்பதற்காகவே பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீடுகளில் போய்த் தங்குவதுண்டு. பிரிந்திருந்த உறவுகள் ‘தசரா’வை வைத்து கூடுவதும், உறவுகள் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து மகிழ்ச்சியுடன் சாமி கும்பிட்டுவிட்டு, மீண்டும் பழைய பகை தலைதூக்கிப் பிரிவதும், வருடாவருடம் தவறாமல் நடைபெறும் விஷயங்கள். ‘தசரா’ சமயங்களில் மட்டுமே பூத்துக் குலுங்கி, ‘தசரா’ முடியும் போது உதிர்ந்து போகும் காதல் கதைகளும் ஏராளம். சென்ற வருடத்தின் ‘தசரா’ காதலர், காதலிகள் இந்த வருடம் வேறு ஜோடியாகக் காதலிப்பதை, சம்பந்தப்பட்ட இருவருமே கண்டும் காணாதது போல் இருப்பார்கள். இதில் ‘காதல்’ என்பது அங்கும் இங்குமாக சாமி சப்பரங்கள் வரும் போது நின்று ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்ப்பது தவிர வேறேதுமில்லை.

இந்த வருட ‘நவராத்திரி’க்கு திருநெல்வேலிக்குச் சென்றிருந்தேன். வழக்கம் போல அதே பெரிய ‘கொலு’. இப்போது புதிதாக சில பொம்மைகளும் சேர்ந்திருந்தன. விதவிதமான பிரசாதங்கள். பூஜை முடிந்தவுடன் சுடச்சுட உடனே சாப்பிடக் கிடைத்தது. ஹார்மோனியத்துக்கும், மிருதங்கத்துக்கும் வேலையில்லை. ஆனால் எனக்கு வாசிக்க வேண்டும் போல இருந்தது. விநாயகத்து பெரியப்பா இல்லாததால் மட்டுமல்ல. ஏனோ இப்போது ‘கொலு’வின் போது இயல்பாக உருவாகும் குதூகல மனநிலை இல்லை. வருடத்தில் குறிப்பிட்ட இந்த ஒன்பது நாட்களும் வேறு மாதிரியான உற்சாகத்தையே இதுவரை அளித்திருக்கின்றன. வெறுமையான மனதுடன் திருநெல்வேலி வீதிகளில் சுற்றிக் கொண்டிருக்கும் போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசராவுக்காக கடவுள் வேடமணிந்த பக்தர்களை அநேகமாக எல்லா வீதிகளிலும் பார்த்தேன். சந்திப்பிள்ளையார் முக்கில், மேலரதவீதியில், ரத்னா தியேட்டர் அருகில், குறுக்குத்துறை ரோட்டில் எங்கு சென்றாலும் மேளதாளத்துடன் உற்சாகமாக ஆடியபடி காணிக்கை வாங்கிக் கொண்டு கடவுள் வேடமணிந்த பக்தர்கள். முருகன்குறிச்சியில் சுடலைமாடன் வேடமணிந்த ஒரு பக்தர் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தார். பின்னால் சின்ன ‘சுடலைமாடனாக’ சிரித்தபடி அவர் மகன் உட்கார்ந்திருந்தான். அந்தக் காட்சியைப் பார்க்கும் போது அவர்களின் உற்சாகம் பார்ப்பவர்களையும் தொற்றிக் கொண்டது. ‘வசதியானவங்களும் இப்பிடி சாமி வேஷம் போட்டு கொலசேகரபட்டணம் போவாங்கண்ணே’. ஓவியர் பொன்.வள்ளிநாயகம் சொன்னார்.

சுலோச்சனா முதலியார் பாலமருகே வந்த போது, சுட்டெரிக்கும் வெயிலில், பாலத்தின் ஓரமாக ‘காளி’ வேஷமணிந்த பக்தர் ஒருவர், தொங்கிய நாக்குடன், செருப்பில்லா வெற்றுக்காலைப் பொருட்படுத்தாமல் நடந்து சென்று கொண்டிருந்தார். உடன் ஒரு தட்டு நிறைய திருநீறும், குங்குமம், கொஞ்சம் சில்லறைகளைச் சுமந்தபடி ஒரு மஞ்சள் சேலையணிந்த பெண்மணி, கால்சூடு தாங்க முடியாமல் ‘காளி’யுடன் நடந்து கொண்டிருந்தார். ‘காளி’ யின் மனைவியாக இருக்கலாம்.

உயரம் குறைவாக உள்ள வேட்டி

தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு போன்ற பண்டிகைகளுக்கெல்லாம் புது வேட்டி சட்டைதான். இப்போதும் ஊரிலிருந்து அப்பா அனுப்பும் வேட்டி, சட்டைகளில் சட்டையை மட்டும் எடுத்து அணிவேன். பத்துக்கும் மேற்பட்ட பட்டு வேட்டிகள் பீரோவில் புதுவாசனை மாறாமல் உறங்குகின்றன. பட்டு வேட்டி பிடிக்காது என்றில்லை. அந்த வேட்டிகளுக்கும், எனக்குமான ஒரே பிரச்சனை உயரம்தான். எல்லா வேட்டிகளும் சொல்லி வைத்தாற் போல என்னை விட உயரமானவை. ஒரு சில ஆளை முக்கும் உயரம். இன்னும் சில நெற்றியிலிருந்துத் துவங்கும். மிகக் குறைவானவைதான் உயரம் கம்மியானவை. ஆனால் அவையுமே என் கழுத்து வரைக்கும் வளர்ந்து நின்று என்னை மறைக்கக் கூடியவை.

என் முழங்கை உயரமே இருக்கும் நண்பன் சந்திரஹாசன் எப்போதுமே வேட்டிதான் கட்டுகிறான். ‘இவ்வளவு கட்டையா இருந்துட்டு எப்படில வேட்டி கட்டுதெ?’ என்று கேட்டால், ‘அத ஏன் கேக்கெ? சுருட்டி சுருட்டி வயித்துப் பக்கத்துல ஒரு பெரிய பந்து கணக்கால்லா சவம் வீங்கிட்டு இருக்கு. நாளுபூரா பிள்ள உண்டாயிருக்கிறவ மாரிதான் வயித்தத் தள்ளிட்டு நடமாடுதென்’. வேட்டி கட்டும் வயது வந்த பிறகுதான் இந்தச் சிக்கல் பிடிபட ஆரம்பித்தது. அரைடிராயர் போட்டிருந்த சிறுவயதில் நான் பார்த்த உயரம் குறைவான பெரியவர்கள் எல்லோரும் எப்படி வேட்டியிலேயே வாழ்ந்தார்கள் என்று வியப்பாக இருக்கிறது. சந்திரஹாசன் சொன்னதை வைத்து யோசித்துப் பார்க்கும் போது, குள்ளமான மாமாக்கள், பெரியப்பா, சித்தப்பாக்கள், அண்ணன்கள், அத்தான்கள் எல்லோருமே நிறைமாதமாக வயிற்றைத் தள்ளிக் கொண்டுதான் நடமாடியிருக்கிறார்கள்.

அண்ணனுக்கு டியூஷன் எடுக்க வரும் கோபாலகிருஷ்ணன் ஸார்வாள் ஒரு பழைய சைக்கிளில் வருவார். மண்ணெண்ணெய் ஊற்றி எரியும் டைனமோ லைட்டை ஸார்வாளின் சைக்கிளில் மட்டுமே பார்த்திருக்கிறேன். டியூஷன் சொல்லிக் கொடுக்க வரும் ஸார்வாள், டியூஷன் படிக்கும் சின்னப் பிள்ளை போல ரொம்பச் சின்னதாக இருப்பார். அவ்வப்போது மூக்குப் பொடி போட்டு, சட்டைக்காலரிலிருந்து கைக்குட்டையை உருவி, மூக்கைத் துடைத்துக் கொள்வார். அப்போதெல்லாம் ஸார்வாளுக்கு சைக்கிளில் எப்படி கால் எட்டுகிறது என்றே யோசிப்பேன். எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள உச்சிமாளி கோயிலை ஒட்டியுள்ள திண்டில் கால் ஊன்றிதான் சைக்கிளில் ஏறுவார். அழுத்தும் போதும் கால்பெருவிரல்தான் பெடலை அழுத்தும். எப்போதும் மடித்து விடப்பட்ட முழுக்கை வெள்ளைச் சட்டையும், வேட்டியும் அணிந்திருக்கும் கோபாலகிருஷ்ண ஸார்வாளின் வயிற்றில் வேட்டி பந்து போலச் சுருட்டப்பட்டிருந்ததா என்பதை இப்போது நினைவுகூரப் பார்க்கிறேன். தெளிவில்லாத கலங்கலான சித்திரம்தான் மனதுக்குள் தெரிகிறது.

பழைய காங்கிரஸ்காரரான மூக்கபிள்ளையும் குள்ளமான ஆள்தான். மொறுமொறுவென முரட்டு கதர் வேட்டியும், அரைக்கை சட்டையும் அணிந்திருப்பார். எப்போதும் வேட்டியை மடித்தே கட்டியிருக்கும் மூக்கபிள்ளை நாலுமுழ வேட்டிதான் கட்டுவார். ‘எட்டு மொளம் கனம் சாஸ்தில்லா. மூக்கபிள்ள ஒடம்பு தாங்குமா. பச்சபிள்ள மாரில்லா இருக்காரு! களுத பொதி சொமக்க மாரி அதையும் சேத்து சொமக்க அவருக்கு ஆவி கெடயாதுல்லா.’ மூக்கபிள்ளையின் நெருங்கிய நண்பரான ஆல்பர்ட் வல்தாரீஸ் சித்தப்பா சொல்வார். ஆல்பர்ட் சித்தப்பா கொஞ்சம் ஓங்குதாங்கான ஆள் என்பதால் எட்டு முழ வேட்டியே அவர் இடுப்பைச் சுற்றி மறைப்பதற்கு அல்லாடித் திணறும். மூக்க பிள்ளை மாதிரியே கதர் வேட்டி கட்டும் ஆல்பர்ட் சித்தப்பா, அநேக நாட்களில் பாலியெஸ்டர் வேட்டி உடுத்தித்தான் பார்த்திருக்கிறேன்.

புசுபுசுவென்று விரிந்து நிற்கிற ‘கோடி’ வேட்டியை எப்படித்தான் உடுத்திக் கொண்டு நடமாடுகிறார்களோ என்று இப்போதும் தோன்றுவதுண்டு. தவிர்க்கவே முடியாத சில கட்டாயமான சம்பிரதாயங்கள் தவிர நானெல்லாம் ‘கோடி’ வேட்டி உடுத்துவதேயில்லை. ஒருநாள் முழுக்க தண்ணீரில் ஊறவைத்து பசையெல்லாம் போன பிறகு, எடுத்து இஸ்திரி போட்டு ஓரளவு உடம்புக்குப் பழக்கப்பட்ட பின்னரே உடுத்துகிறேன். தச்சநல்லூர் இசக்கியம்மை அத்தைவீட்டுமாமாவை விசேஷ வீடுகளின் போது மட்டுமே நாங்கள் பார்ப்பதால், கோடி வேட்டியுடன் இடுப்புக்குக் கீழே உப்பலாகவேதான் பார்த்திருக்கிறோம். காலையிலிருந்து மாலைவரை விசேஷ வீட்டில் வளைய வரும் மாமாவின் வேட்டியில் ஒரு அழுக்கைப் பார்த்து விட முடியாது. அவ்வளவு பந்தோபஸ்து பண்ணிப் பார்த்துக் கொள்வார். கையிலுள்ள சின்னத் துண்டை வைத்துத் துப்புரவாக நாற்காலியைத் துடைத்து விட்டுத்தான் உட்காருவார். ஏற்கனவே சுத்தமாக உள்ள ‘சுத்தபத்தமாக’உள்ள நாற்காலி, மாமாவின் அழுக்குத் துண்டால் ‘கறை’படிந்த நாற்காலியாகும். அதுபோக மதிய உணவுக்கு மேல் ‘கோழித் தூக்கம்’ போடும் போது, தனது ‘கோடி’ வேட்டியை அவிழ்த்து ஓரமாக மடித்து வைத்து விட்டு மாமா படுத்துக் கொள்வதை ஒருமுறை பார்த்திருக்கிறேன். சினிமாவில் மட்டுமே அதுநாள்வரை நான் பார்த்திருந்த கோடு போட்ட அண்ட்ராயரை நேரில் பார்க்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியவர், தச்சநல்லூர் மாமாதான்.

என்னைப் போன்றவர்கள் வேட்டி கட்டுவதில் உயரம் பிரச்சனை என்றால் கீழப்புதுத் தெரு நடராஜன் அண்ணனுக்கு அகலம் பிரச்சனை. ஒட்டிய வயிறும், கொடி இடையும் கொண்ட நடராஜன் அண்ணன், எப்போதும் வேட்டிதான் கட்டுவார். ஆனாலும் வேட்டி கட்டும் மற்ற ஆண்களிடமிருந்து அவர் தனித்து தெரிந்ததற்கான காரணத்தை, நெல்லையப்பர் கோயிலில் வைத்து நானும், குஞ்சுவும் பார்த்து விட்டோம். நடக்கும் போது அவிழ்ந்துவிட்ட வேட்டியை, ஆட்கள் நடமாட்டமில்லாத ஆறுமுகநயினார் சந்நிதியில் நடராஜன் அண்ணன் கட்டிக் கொட்டிருந்தார். பெண்கள் சேலை கட்டுவது போல கொசுவம் வைத்து லாவகமாக வேட்டி கட்டிக்கொண்டிருந்த நடராஜன் அண்ணனின் நடையில் இயல்பாகவே உள்ள நளினத்திற்கான அர்த்தம் அன்றைக்குத்தான் எங்களுக்குத் தெரிந்தது. வழக்கமாகவே நடராஜன் அண்ணன் நடக்கும் போது, வேட்டி சரசரக்க, இடுப்பின் ஒருபுறம் தண்ணீர்க் குடம் சுமக்கும் பெண்கள், மறுகையை சற்றே சாய்த்து நீட்டி நடப்பது போலவே நடப்பார். மேற்கண்ட காட்சியைப் பார்த்து விட்டு குஞ்சு உரிமையுடன் நடராஜன் அண்ணனிடம், ‘ஏண்ணே, வேட்டி நல்ல திக்கா இருக்கெ? உள்ளெ உள்பாவாட கெட்டியிருக்கேளோ?’ என்று கேட்டுவிட்டான். ‘எங்களப் பாத்தா ஒனக்கு நக்கலாப் போச்சோளெ, ஸார்வாள் மகனெ? ஒன்ன என்ன செய்தேன் பாரு. ஆம்பளைன்னா இங்கனயெ நில்லுலெ. நான் போயி என் பொண்டாட்டிய கூட்டிட்டு வாரென்’ என்று சொல்லிவிட்டு விருட்டெனச் சென்று விட்டார். அதற்குப் பிறகு ரொம்ப நாட்களுக்கு நானும், குஞ்சுவும் கீழப்புதுத்தெரு பக்கம் செல்லாமல் சுவாமி சன்னதி வழியாக ஜங்ஷனுக்கும், தெற்குப்புதுத்தெரு வழியாக குறுக்குத்துறைக்கும் சென்று வந்தோம்.

நினைவு தெரிந்த நாளிலிருந்தே என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்குபவர்கள் கழக உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும்தான். பளபளவென தழையத் தழைய நாலு மற்றும் எட்டு முழ வேட்டி கட்டிக் கொண்டு, கட்டையோ நெட்டையோ, இருபத்து நான்கு மணிநேரமும் நடமாடுகிறார்கள். ஒருநாளைக்கு இரண்டு, மூன்று வேட்டி மாற்றுகிறவர்களையெல்லாம் பார்த்திருக்கிறேன். சோப்புத்தூள் விளம்பரத்தில் நாம் காணும் வெண்மையை விட பளீர் வெள்ளையில் வேட்டி அணிந்திருக்கும் இவர்களின் வீட்டம்மாக்களுக்குத்தான் ஃபுல் மார்க்கு. ‘மேடைல பேசும் போது, ஒவ்வொருத்தருக்கா மால போடும் போது, எந்திரிச்சு உக்காரும் போதுல்லாம் வேட்டி அவுந்துராதா, மாமா?’ அண்ணா திமுக பேச்சாளரான கபாலி மாமாவிடம் கேட்டிருக்கிறேன். ‘இடுப்புல பெல்ட்ட போட்டு இறுக்கிருப்பெம்லா?’ இப்போது ‘ராம்ராஜ்’ வேட்டிக்காரர்கள், வேட்டியுடன் இடுப்பில் கட்டுவதற்கான பெல்ட்டும் விற்கிறார்களாம். இந்தத் தகவலைச் சொன்னவர், நாஞ்சில் நாடன் அவர்கள். மண் மணக்க, பழந்தமிழ்ப்புலமையுடன் தமிழர்தம் வாழ்க்கையை எழுதி வரும் ‘நாஞ்சில்’ சித்தப்பாவை நண்பர் ஜெயமோகன் சொன்னது மாதிரி, ஒரு எல்.ஐ.சி ஆஃபீஸர் போல டிப்டாப் உடையில்தான் அதிகமாகப் பார்த்திருக்கிறேன். ஒன்றிரண்டு குடும்ப விழாக்களில் மட்டுமே வேட்டியில் காட்சியளித்திருக்கிறார்.

பொடி கரை போட்ட, அகல கரை போட்ட, ஜரிகை போட்ட நாலு, எட்டு முழ வேட்டிகளை இப்போதும் உடுத்துகிறேன்தான். சொல்லிவைத்தாற் போல அவை எல்லாமே என்னை விட உயரமானவை. சுருட்டி மடித்து கட்டுவதால் ‘ராம்ராஜ்’ பெல்ட் தேவைப்படுவதில்லை. சர்வோதயா சங்கத்தின் கதர் வேட்டிகள், மற்றும் சாய வேட்டிகள், பாலியஸ்டெர் எட்டு முழ வேட்டிகள், அகலக் கரைவைத்த ஜரிகை வேட்டிகள், நேரியலும், வேட்டியுமாக ஒன்று போல உள்ள பழுப்பு வண்ண வேட்டிகள் என எல்லா வகை வேட்டிகளும் உடுத்திப் பார்த்தாயிற்று. ஆனாலும் யாராவது நல்ல மாதிரியான வேட்டி உடுத்தியிருந்தால், மெதுவாகத் தொட்டுப் பார்த்து, ‘என்ன வேட்டி இது? எங்கெ எடுத்திய?’ என்று கேட்கத் தவறுவதில்லை. நண்பர் அழகம்பெருமாள் விதம் விதமாக வேட்டி உடுத்துவார். பார்க்க ஆசையாக இருக்கும். ‘வே, பேசாம இரியும். ஒமக்கு நல்ல மலையாள வேட்டி எடுத்து தாரேன். ஒருநாள் திருவனந்துரம் போவோம்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். என்றைக்கு வாய்க்கிறதோ, அன்று என் உயரத்துக்கான வேட்டி, எப்படியும் ‘ஒரு நாலஞ்சு எண்ணம்’ எடுத்து விடலாம் என்றுதான் இருக்கிறேன்.

திருநெல்வேலியில் ‘சோனா’ மாமா கடை மொத்த ஜவுளிக்கடை என்பதால் வேட்டிகள் குவிந்து கிடக்கும். ‘மருமகனுக்கில்லாததா? அள்ளிட்டு போங்கய்யா’ என்று மாமா சொன்னாலும், எல்லா வேட்டிகளும் என்னையும், என்னை விடவும் குட்டையாக உள்ள ‘சோனா’ மாமாவையும் முக்குபவை. இத்தனைக்கும் மாமா எட்டு முழத்தில் உடுத்துகிறார். தனியாக நெய்து வாங்குகிறாரோ என்ற சந்தேகம் உண்டு. என்ன இருந்தாலும் முதலாளியில்லையா? என் வயிற்றில் பாலை வார்க்கிற மாதிரி ‘பத்ம விலாஸ்’ கடையில் மட்டும்தான் என் உயரத்துக்கான வேட்டி கிடைக்கிறது. அதுவும் எனக்கு பிடித்த பருத்தி வேட்டி. இன்னொரு விசேஷம், அவை அனைத்தும் நாலு முழ வேட்டிகள். பச்சை, சிவப்புக் கரை போட்ட ‘பத்ம விலாஸ்’ வேட்டிகளை வீட்டிலோ, பக்கத்தில் கடைக்கு கிடைக்குப் போகும் போதோ மட்டும்தான் உடுத்த முடியும். விசேஷ வீடுகளுக்குப் போவதாக இருந்தால் அது தோது படாது. கொஞ்சம் ஒசத்தியான வேட்டிகளுக்குத்தான் போக வேண்டும்.

எப்போது உடை வாங்கச் சென்றாலும் வேட்டி செக்ஷனை நோட்டமிடாமல் திரும்புவதேயில்லை. சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ஒரு துணிக்கடைக்குச் சென்றிருந்த போது, இப்படித்தான் வேட்டி செக்ஷன் பக்கம் சென்றேன். வேட்டி கவுண்டரின் சேல்ஸ் பகுதியில் மட்டுமே ஏழெட்டு பேர் நின்றனர். ஆனால் வாங்குவதற்குத்தான் ஈ காக்கா இல்லை. கவுண்டரின் முதல் ஆளாக நின்று கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் சென்றேன். ‘என்ன வேட்டி வேணும், ஸார்?’ மருந்துக்கும் சிரித்திராத வெண்முள் முகம். பழுப்பு நிற சட்டையும், மடித்துக் கட்டிய வேட்டியுமாக என்னை விடக் குள்ளமாக இருந்தார். ‘நல்ல அகலக்கர போட்ட வேட்டி வேணும்’ என்றேன். ஒரு ஸ்டூலில் ஏறி நின்று மளமளவென நிறைய வேட்டிகளை எடுத்துப் போட்டுக் கொண்டே இருந்தார். மனிதர் ஸ்டூலில் ஏறி நிற்கும் போதும் மடித்து கட்டிய வேட்டியை அவிழ்த்து விடவில்லை. நல்ல வேளை, அங்கு பெண்கள் யாருமில்லை. இருந்தாலும் எனக்கு என்னவோ போலிருந்தது. அவர் ஒவ்வொரு வேட்டியாக எடுத்து போடப் போட நான் ஒவ்வொன்றாக எடுத்து என் உயரத்தோடு வைத்து ஒப்பிட்டுக்கொண்டிருந்தேன். தற்செயலாக அதை கவனித்து விட்டார். ஸ்டூலிலிருந்து குதித்தார். ‘ஒங்களுக்கு ஏத்த வேட்டி மேல இல்ல. இந்தா இங்கெ இருக்கு’. குனிந்து ’எம்ம்மா’ என்று வயிற்றை எக்கி முனகியவாறே கீழ்த்தட்டிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரித்தார். அகலக்கரை போட்ட, மேளம் வாசிப்பவர்கள் அணியும் விலை உயர்ந்த அங்கவஸ்திரம் மாதிரியான அலங்கார வேட்டிகள். அளந்து பார்த்தேன். உயரம் சரியாக இருந்தது. என் உயரத்துக்காகத்தான் இவ்வளவு நேரம் பார்த்தேன் என்பதை கண்டுகொள்ளாதவராக, ‘இதுல பாலீஸ்டர்தான் இருக்கு. காட்டன் இல்ல. நாலு மொளம் ஒங்களுக்கு ஓகேதானெ?’ என்றார்.

வெவ்வேறு வண்ணங்களில் நான்கு வேட்டிகள் எடுத்துக் கொண்டு பில் போடும் கவுண்டருக்குச் சென்றேன். எனக்கு வேட்டி எடுத்து கொடுத்த அந்தக் குள்ளமான பெரியவர் அநாயசமாக கவுண்டரைத் தாண்டிக் குதித்து, அருகில் இருந்த தண்ணீர் கேனுக்குச் சென்று தண்ணீர் குடித்தார். அப்போதும் வேட்டியை மடித்தே கட்டியிருந்தார். பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு, துணிப்பையுடன் மாடிப்படிகளில் இறங்கும் போது சுவர்ப்பக்கமாகத் திரும்பி நின்று அவசர அவசரமாக தன் வேட்டியை அவிழ்த்து, மடித்துக் கட்டிக் கொண்டிருந்தார், அந்தப் பெரியவர். வேட்டியின் பின்பக்கம் பெரிதாகக் கிழிந்திருந்தது.

பண்டிட் பாலேஷுடன் ஒரு மாலை

சினிமாவில் யாராவது மண்டையைப் போட்டுவிட்டால் உடனே நம் காதுகளுக்குக் கேட்கும் இசையாக மட்டுமே நான் ஷெனாயைப் பற்றி அறிந்திருந்தேன். ’மே’ என்று ஷெனாய் ஒலிக்க ஆரம்பிக்கும் போதே ஏதோ துக்க செய்தியை அடுத்த காட்சியில் சொல்லப் போகிறார்கள் என்பதை யூகிக்க முடிந்தது. வழக்கம் போல இந்த காற்று வாத்தியத்தையும் சினிமாதான் எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தது. அதற்கு மேல் ஷெனாயைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. வீரகேரளம்புதூர் என்னும் கிராமத்தில் சந்நிதித் தெருவின் ஒரு சிறிய வீட்டில் விநாயகத்து பெரியப்பா ஒரு பழைய கேஸட்டை எடுத்து, பார்ப்பதற்கு காசநோயாளி போல காட்சியளித்த ஒரு உடைந்த டேப்ரிக்கார்டரில் ஒலிக்கச் செய்தார். கேட்ட மாத்திரத்தில் ஜிவ்வென்று மனசுக்குள் புகுந்தது ஷெனாய் இசை. என் காதுகளுக்கு வசந்தா ராகம் கேட்டது. ஆல் இந்தியா ரேடியோவின் ஒலிபரப்பிலிருந்து பதிவு செய்யப்பட்ட அந்த கேஸட்டில் அறிவிப்பாளர் கரகர குரலில் அந்த ராகத்தின் பெயர் கிரிஜா என்றார். என்னடா இது வசந்தாவைப் போய் கிரிஜா என்கிறாரே! ஒருவேளை அந்த அறிவிப்பாளரின் உறவுக்காரப் பெண்மணியின் பெயராக இருக்கக் கூடும் என்று விட்டுவிட்டேன். இந்த ராகக் குழப்பத்தைத் தாண்டி அந்த வாத்தியத்தின் குழைவும், நேர்த்தியும் என்னை குதூகலப்படுத்தியது. ஷெனாயை இப்படியெல்லாம் கூட வாசிக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது. அடுத்த ஒருமணிநேரத்துக்கு விநாயகத்து பெரியப்பாவுடன் கண்மூடிக் கேட்டுக் கொண்டிருந்தேன். கண்ணைத் திறந்து பார்க்கும் போது பெரியப்பா தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார். ஷெனாய் என்ற வாத்தியத்தின் மறுமுகத்தையும், உஸ்தாத் பிஸ்மில்லா கான் என்னும் மாமேதையைப் பற்றியும் நான் அறிந்து கொண்ட மறக்க முடியாத மாலை அது.

பிஸ்மில்லா கானின் ஷெனாய் இசையைத் தொடர்ந்து கேட்டுக் கேட்டு அந்த வாத்தியத்தை திரை இசையில் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். கருப்பு வெள்ளை படங்களில் ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தின் ‘கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்’ என்ற பாடலில் சந்தோஷச் சூழலில் ஷெனாயை அட்டகாசமாகப் பயன்படுத்தியிருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். பின்னர் ஒவ்வொன்றாகக் கவனித்துக் கேட்ட போது ‘ராமு’ திரைப்படத்தின் புகழ் பெற்ற ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ மற்றும் ‘கர்ணன்’ படத்தின் பல பாடல்களிலும் ஷெனாய் அற்புதமாகப் பயன்படுத்தப்பட்டிருந்ததை இனம் கண்டு ரசிக்க முடிந்தது. ‘தெய்வத்தின் தெய்வம்’ திரைப்படத்தின் ‘கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்’ என்ற பாடலில் இசைமேதை ஜி.ராமனாதன் ஷெனாயை ஜானகியின் குரலுடன் இழைய விட்டிருந்த விதம் நிரந்தரமாக என் மனதில் தங்கிவிட்ட ஒன்று.

தமிழ்த் திரையிசையுலகில் இளையராஜாவின் வருகைக்குப் பின்னர் பல இசைக்கருவிகளின் பயன்பாட்டு முறைகள் மாறின. உதாரணத்துக்கு கிடாரை அதற்கு முன்னர் போலில்லாமல் கிட்டத்தட்ட வீணை போல பயன்படுத்தினார் இளையராஜா. ஒற்றை வயலினின் வாசிப்பை இளையராஜாவுக்கு முன், இளையராஜாவுக்குப் பின் என இசைக்கலைஞர்களே பிரித்துச் சொல்லி விளக்குவதை பலமுறை கேட்டிருக்கிறேன். ஷெனாயை இளையராஜா தனது துவக்கக்காலப் படங்களில் முழுக்க முழுக்க கிராமிய இசைக்கு மட்டுமே பயன்படுத்தினார். அதற்கு பிறகு அவர் ஷெனாயை முற்றிலும் புதிய முறையில் இசைக்கச் செய்தார். இளையராஜாவின் வருகைக்கு முன்னரும் ஷெனாயை சந்தோஷச் சூழலுக்கு பயன்படுத்தியிருந்தனர் என்றாலும் அது முற்றிலும் வடநாட்டு இசைமுறைப்படியே, அதாவது ஹிந்துஸ்தானி சாயலிலேயே, அமைக்கப்பட்டிருந்தது. சந்தோஷமாக ஆடிப்பாடி மகிழும் காதலர்களை ஷெனாயைக் கொண்டே உற்சாகப்படுத்தினார் இளையராஜா. மகிழ்ச்சியில் பொதிந்திருக்கும் மெல்லிய சோகத்துக்கு இளையராஜா ஷெனாயை பயன்படுத்தியிருந்த விதத்தை ‘தேவர் மகன்’ படத்தின் ‘மணமகளே’ என்னும் பாடலில் கேட்கலாம்.

பொதுவாக இளையராஜாவிடம் இசைக்கருவிகள் வாசிப்பவர்கள் தத்தம் வாத்தியத்தில் மேதைகளாக இருந்தால் மட்டுமே அவரிடம் வாசிக்க சாத்தியம் என்பர். கிடாரிஸ்ட் சதானந்தன் (பழம்பெரும் இசையமைப்பாளர் சுதர்ஸனம் மாஸ்டரின் மகன் இவர்), வயலினிஸ்ட் வி.எஸ்.நரசிம்மன் மற்றும் ராமசுப்பு, புல்லாங்குழல் கலைஞர் நெப்போலியன் (அருண்மொழி), மிருதங்கக் கலைஞர் மதுரை டி.ஸ்ரீனிவாசன், பாஸ் கிடாரிஸ்ட் சசிதரன், கீபோர்டு கலைஞர் விஜி மேனுவல் மற்றும் பரணி, பழம்பெரும் தபலா கலைஞர் ‘தபலா’ பிரசாத் என எல்லோருமே அசாத்திய திறமை வாய்ந்த ஒப்பற்ற கலைஞர்கள். இந்த கலைஞர்களில் ஒருவர் உஸ்தாத் பிஸ்மில்லா கானின் மாணவர் பண்டிட் பாலேஷ். பல முறையான ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு, ஷெனாய் கச்சேரிகள் செய்வதோடு மட்டுமில்லாமல், சென்னையில் ஹிந்துஸ்தானியைக் கற்றுத்தரும் குருவாகவும் இருக்கிறார்.

சாலிகிராமத்தில் என் வீட்டிலிருந்து நடந்து போகும் தூரம்தான் பாலேஷின் வீடு. அவ்வப்போது சாலிகிராமத்து வீதிகளில் நாங்கள் சந்தித்துக் கொள்வதுண்டு. பார்க்கும்போதெல்லாம், இருவரும் சாவகாசமாக அமர்ந்து இசை குறித்து நிறைய பேச வேண்டும் என்று சொல்லிக் கொள்வோம். பல நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் ஒருநாள் அது அமைந்தது. அவரது வீட்டின் மாடியிலுள்ள ஓர் அறையில் அவரது குருமார்களின் புகைப்படங்களுக்கு அருகே அமர்ந்து பேசத் தொடங்கினோம். பாலேஷின் மகன் கிருஷ்ணா பாலேஷும் உடனிருந்தார்.

முதலில் சம்பிரதாயமாகவே ஆரம்பிக்கிறேன். எனக்கு உங்களைப் பற்றி நன்கு தெரியும். ஆனால் சொல்வனம் வாசகர்களுக்காக உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்?

baleshஎன் சொந்த ஊர் வட கர்நாடகாவின் ஹூப்ளி. என் குடும்பமே இசைக்குடும்பம். என் அப்பா, பெரியப்பா எல்லோரும் ஷெனாய் இசைக்கலைஞர்கள். என் அப்பா, பெரியப்பாவிடம் ஆரம்பத்தில் கற்றுக்கொண்டேன். பிறகு Dr.D.P.ஹிரேமத் அவர்களிடம் ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டேன். அவரிடம் பத்து வருடங்கள் இசை கற்றுக்கொண்டேன். அவ்வப்போது ஷெனாயும் கற்றுக்கொள்வேன். வாய்ப்பாட்டாகப் பாடியதை ஷெனாயில் வாசிக்கச் சொல்வார். அதற்குப்பின் கோதண்ட் சாலுங்கே மஹாராஜ் என்றொருவரிடம் பத்தியலா கரானா முறையில் ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டேன். அதன்பிறகு தார்வாட் ஆல் இந்தியா ரேடியோவில் வாசித்துக்கொண்டிருந்தேன். ஒருமுறை கதக் நகரில் நடைபெற்ற இசைத்திருவிழாவில் நான் யமன் கல்யாண் ராகத்தை வாசிப்பதைப் பார்த்து, அந்த மேடையிலேயே பண்டிட் புட்டராஜ் கவாய் என்னை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டார். பார்வையற்ற பண்டிட் புட்டராஜ் கவாய் பலர் வாழ்விலும் இசையொளியை ஏற்றிவைத்தவர்; பெரிய இசைப்பள்ளியை வைத்து நடத்தினார். சென்ற வருடம்தான் காலமானார்.

வட கர்நாடகம் பொதுவாகவே ஹிந்துஸ்தானி இசையின் மிகப்பெரிய மையமாக இருந்தது. இங்கே கர்நாடக சங்கீதம் போல, அங்கே ஹிந்துஸ்தானி. பீம்சென் ஜோஷி, மல்லிகார்ஜுன் மன்ஸுர், பஸவராஜ் ராஜ்குரு, கங்குபாய் ஹங்கல் போன்ற பல மேதைகள், ஜாம்பவான்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர்தான் புட்டராஜ் கவாய். அருகிலேயே மகராஷ்டிரம் இருப்பதால் பம்பாயிலிருந்து பெரிய வித்வான்கள் அங்கே வந்து கச்சேரி செய்வார்கள். இவர்கள் பலருடைய கச்சேரிகளை நான் கேட்டு வளர்ந்தவன் நான்.

உஸ்தாத் பிஸ்மில்லா கானிடம் எப்போது சென்று சேர்ந்தீர்கள்?

புட்டராஜ் கவாய் அவர்களிடம் கற்றுக்கொண்ட பிறகு உஸ்தாத் பிஸ்மில்லா கானிடம் ஷெனாய் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசையின் காரணமாக வாராணசிக்குச் (वाराणसी) சென்று அவரைச் சந்தித்தேன். அவரிடம் சென்று உங்களிடம் இசை கற்றுக்கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று சொன்னேன். அவர் என்னை வாசிக்கச் சொல்லிக் கேட்டுவிட்டு, “நீங்களே பெரிய வித்வான். உங்களுக்கு நான் சொல்லித் தர என்ன இருக்கிறது?” என்றார். “நான் மட்டுமில்லை. இந்த உலகத்தில் ஷெனாய் வாசிக்கும் எல்லாருக்குமே நீங்கள்தானே குரு?” என்றேன். அவரிடம் ஷெனாய் கற்றுக்கொண்டது என் பாக்கியம். சென்னைக்கு வந்த பிறகு கூட அடிக்கடி வாராணசிக்குச் சென்று அவரைப் பார்த்துவிட்டு வருவேன். அப்போது என் மகனும் என்னோடு வருவார். அவருக்கும் அவர் இசை கற்றுத் தந்திருக்கிறார்.

அவருடனான உங்கள் அனுபவம் எப்படியிருந்தது?

பிஸ்மில்லாகான் சாப் ஒரு குழந்தையைப் போன்றவர். சந்தோஷம், கோபம் இரண்டுமே அப்போதைக்கப்போது அதிகமாகத் தோன்றி மறையும். ஒருமுறை அவரும், எல்.சுப்ரமணியமும் ஜெனீவாவில் யமன் – கல்யாணியில் ஜுகல்பந்தி செய்தார்கள். கச்சேரி முடிந்ததும் பிஸ்மில்லாகான் எல்.சுப்ரமணியத்தை அப்படியே கட்டிப்பிடித்து வாரியணைத்துக் கொண்டார். அவ்வளவு சந்தோஷம் அவருக்கு. அதேபோல் மேடையிலேயே அவரிடம் திட்டுவாங்கியவர்களும் நிறையபேர். [சிரிக்கிறார்.] உஸ்தாத் பிஸ்மில்லா கானுடன் சேர்ந்து வாசித்தவை மறக்க முடியாத நினைவுகள்.

நீங்கள் ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டுக் கச்சேரி, ஷெனாய் கச்சேரிகள் செய்திருக்கிறீர்கள் இல்லையா?

ஆமாம். ஆரம்பத்தில் வட – கர்நாடகாவில் நிறைய கச்சேரிகள் செய்தேன். பிறகு இந்தியா பூராவும் மும்பை, பூனே, டெல்லி, கல்கத்தா, ஆக்ரா, ஜெய்ப்பூர், சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம் என எல்லா பெரிய நகரங்களிலும் கச்சேரி செய்திருக்கிறேன். நிறைய வெளிநாடுகளிலும் செய்திருக்கிறேன். இளையராஜா அவர்கள் வீட்டில் நடக்கும் நவராத்திரி விழாவில் கச்சேரிகள் செய்வேன். வட கர்நாடகாவில் நடக்கும் புட்டராஜ் கவாய் இசைவிழாவிலும் தவறாமல் வாசிப்பேன்.

பொதுவாக ஷெனாய் வாத்தியத்தை இங்கே பலரும் நாதஸ்வரத்தோடு ஒப்பிடுகிறார்கள். அது எந்த அளவுக்கு சரி? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஷெனாயின் மெல்லிய, கூர்மையான ஒலியின் காரணமாகப் பெரும்பாலும் சோக ரசத்தை வெகு அழகாக வெளிப்படுத்திவிடும். மார்வா, ஹிந்துஸ்தானி தோடி போன்ற உருக்கும் ராகங்களுக்கு ஷெனாய்தான் ஏற்ற வாத்தியம். அதே சமயம் நாதஸ்வரத்தின் கம்பீரமான நாதம் மங்கலகரமான இசைக்கு ஏற்றதாக இருக்கிறது. ஷண்முகப்ரியா, கம்பீரநாட்டை போன்ற ராகங்கள் நாதஸ்வரத்துக்காகவே உருவாக்கப்பட்டவை என்று சொல்லிவிடலாம். அதனால் திரையிசையில் பெரும்பாலும் சோகமான காட்சிகளுக்கு ஷெனாயும், கல்யாணம், திருவிழா போன்ற காட்சிகளுக்கு நாதஸ்வரமும் பயன்படுத்துவார்கள். மேலும் நாதஸ்வரம் ஸ்டுடியோ போன்ற closed space-இல் வாசிப்பதற்கான வாத்தியம் இல்லை. கோயில் பிரகாரங்கள், திருவிழாக்கள், ஊர்வலங்கள் போன்ற திறந்தவெளியிலும், இயற்கையான feedback இருக்கும் இடங்களிலும் அது கேட்பதற்கு அற்புதமாக இருக்கும். ஷெனாயில் கம்பீரமாக வாசிக்க முடியாதென்றோ, நாதஸ்வரத்தில் உருக்கமாக வாசிக்க முடியாதென்றோ நான் சொல்லவரவில்லை. நான் இங்கே சொல்பவை பொதுவான பண்புகள்தான். ஸ்டுடியோவில் வாசிக்கப்பட்ட பிரமாதமான திரையிசை நாதஸ்வர இசைத்துணுக்குகள் எத்தனையோ இருக்கின்றன!

ஒருமுறை தனிப்பேச்சில் ஷெனாயோடு சேர்ந்து சாக்ஸஃபோனுடன் சேர்ந்து வாசிக்கவேண்டுமென்று கதரி கோபால்நாத் ஆசைப்பட்டபோது பிட்ச் மாற்றம் வேண்டுமென்பதற்காக ஷெனாயில் சில மாறுதல்கள் செய்து ஒரு புதிய ஷெனாயையே உருவாக்கினேன் என்றீர்கள். பொதுவாக ஷெனாயை எந்த Low, Middle, High Octave இந்த மூன்றில் வாசிப்பார்கள்? எதற்குப் பொருத்தமாக இருக்கும்?

பொதுவாக ஷெனாயை நாங்கள் D, D# அல்லது C# இந்த மூன்றில் ஏதாவது ஒரு ஸ்ருதியில்தான் வாசிப்போம். இந்த ஸ்ருதியில்தான் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் சரளமாக எல்லா ஸ்வரஸ்தானங்களும் வாசிக்க எளிதாக இருக்கும். ராக விஸ்தார், தான்கள் வாசிக்க உகந்த ஸ்ருதி இதுதான். பொதுவாக மீடியம் ஆக்டேவில் நன்றாக வாசிக்கலாம். மிகவும் மேல் ஸ்தாயியில் வாசிக்க வேண்டுமென்றால் ஷெனாயில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட சிறிய ஷெனாய் ஒன்று இருக்கிறது. அதில் வாசிக்கலாம். ஆனால் கேட்பதற்கு அவ்வளவு சுகமாக இருக்காது.

இப்போது சில கச்சேரிகளில் ஷெனாயை தம்பூராவோடு சேர்த்து வாசிக்கிறார்கள். எனக்கு அது பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஷெனாய்க்குத் தம்பூரா ஸ்ருதியெல்லாம் ஒத்துவராது. [சிரிக்கிறார்.] நாதஸ்வரத்துக்கு ஒத்து ஊதுவதற்கு இன்னொரு நாதஸ்வரம் போல, ஷெனாய்க்கு ஒத்து இன்னொரு ஷெனாய்தான். பலபேர் ஒத்து ஊதுவதை ஏதோ ரொம்ப சாதாரணமான விஷயமாக நினைக்கிறார்கள். ஆனால் ஒரு ஷெனாய் கச்சேரியின் வெற்றிக்கு ஒத்து ஊதுபவரின் வாசிப்பும் மிக மிக முக்கியம். அவர்கள்தான் விடாமல் ஸ்ருதியைப் பிடித்துக்கொண்டிருக்கவேண்டும். அது மிக மிகக் கஷ்டம். மெயின் வாசிப்பவருக்கும், ஒத்து வாசிப்பவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கவேண்டும். உஸ்தாத் பிஸ்மில்லா கானிடம் ஒத்து வாசிப்பவர் ஒருவர் இருந்தார். அவர் பெரிய ஸ்ருதி மேதை. அதைப் போல மெயின் வாசிப்புக்கு இயைந்து போகும் வகையில் ஒத்து ஊதுபவர்கள் சில பிடிகளையும் வாசிப்பார்கள். அது மெயின் வாசிப்பவரின் கற்பனைக்குப் பெரிய உதவியாக இருக்கும். அதைப் பிடித்துக்கொண்டு அதிலிருந்து பல விஷயங்கள், ராக விஸ்தார்கள் நம்மால் வாசிக்க முடியும்.

திரையிசைப் பக்கம் எப்படி வந்தீர்கள்?

சிறுவயதிலேயே எனக்குத் திரையிசையின் மீதும் விருப்பம் இருந்தது. நிறைய ஹிந்திப்பாடல்களை ஷெனாயில் வாசித்துப் பயிற்சி செய்வேன். லதா மங்கேஷ்கர், மொஹமத் ரஃபி பாடல்களென்றால் மிகவும் பிடிக்கும். [பாடிக்காட்டுகிறார்.]

ஆனாலும் திரையிசை வேறு, சாஸ்திரிய சங்கீதம் வேறு இல்லையா? அதனால் ஆரம்பத்தில் ஒரு நான்கைந்து வருடங்கள் கஷ்டமாக இருந்தது. ஐம்பது சொச்சம் பேர் ஆர்க்கெஸ்ட்ரா வாசிக்கும்போது நாம் ஏதும் தப்பு செய்துவிடக்கூடாது என்று பதற்றமாக இருக்கும். ஒரு சிறு தப்பு செய்தாலும் எல்லோரும் மீண்டும் வாசிக்கவேண்டியிருக்கும். இப்போது போல அப்போதெல்லாம் tracks mixing கிடையாது. எல்லோரும் நம்மைத் திரும்பிப்பார்ப்பார்கள். அது போல நிறைய நடந்திருக்கிறது. [சிரிக்கிறார்.]

ஹிந்துஸ்தானி வழிமுறையில் நொட்டேஷன் எழுதி வாசிப்பதை ஊக்கப்படுத்துவது கிடையாது. வாய்ப்பாட்டாக ராகத்தைச் சொல்லித் தருவார்கள். அதை அந்த வழியிலேயேதான் கற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் நான் இசை கற்றுக்கொள்ள ஆரம்பித்த காலத்தில் பாத்கண்டே அறிமுகப்படுத்திய நொட்டேஷன் எழுதிப் படிக்கும் முறையும் புழக்கத்துக்கு வர ஆரம்பித்தது. அதனால் எனக்கு அந்த முறையிலும் அறிமுகம் உண்டு. அதனால் நொட்டேஷனைப் பார்த்து வாசிப்பது எனக்கு சிரமமாக இருக்கவில்லை.

திரையிசைக்கு வந்தபின் கே.வி.மஹாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், தேவராஜ் மாஸ்டர், ரவீந்திரன் போன்ற தென்னிந்திய இசையமைப்பாளர்களிலிருந்து ஆர்.டி.பர்மன், எஸ்.டி.பர்மன், நெளஷத் போன்ற வடநாட்டு இசையமைப்பாளர்கள் வரை எல்லோரிடமும் வாசித்திருக்கிறேன். ஆனால் ரொம்ப காலம் இளையராஜா அவர்களிடம் போகவில்லை. அவர் இசை வாசிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கும். சாதாரணமாக வாசித்துவிட முடியாது. அதனால் அவரை அணுகுவதற்கு தைரியம் வரவில்லை. [சிரிக்கிறார்.]

தபேலா பாபு ராவ் என்னுடைய நண்பர். பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைப்பாளர் ஷ்யாம் அவர்களின் ஒலிப்பதிவு நடந்துகொண்டிருந்தது. அப்போது ஸ்டுடியோவுக்கு வந்திருந்த இளையராஜா அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார் பாபு ராவ். என்னுடன் சகஜமாகக் கன்னடத்தில் உரையாடிய அவர் என்னை வாசிக்கவரும்படிச் சொன்னார். அதற்குப்பின்னும் எனக்கு தைரியம் வராமல் பல நாட்கள் போகாமல் இருந்தேன்.

வேறு எல்லோரிடமும் தொடர்ந்து நான் வாசித்துக்கொண்டிருப்பேன். ஒருநாள் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் ரெக்கார்டிங்கிற்கு ஜி.கே.வெங்கடேஷ் வந்தார். அப்படி அவர் அடிக்கடி வந்து, வாத்தியக்கலைஞர்கள் வாசிப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பார். நான் வாசிப்பதைப் பார்த்துவிட்டு என்னை இளையராஜாவிடம் அழைத்துச் சென்று வலுவாகப் பரிந்துரைத்தார். இளையராஜா அவர்கள் அடுத்தமுறை என்னை ஆளனுப்பியே கூட்டிவரவைத்துவிட்டார். முதலில் ஒரு கச்சேரி வாசிக்கச் செய்தார். பிறகு சிரஞ்சீவி நடித்த ஒரு தெலுங்குப்படத்துக்குப் பின்னணி இசை வாசிக்கச் சொன்னார். பிறகு அவரிடம் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்தேன்.

அவருடைய ரெக்கார்டிங் சூழல் எனக்கு மிகவும் புதியதாக இருந்தது. மற்ற ரெக்கார்டிங்கிலெல்லாம் இசைக்கலைஞர்கள் பதிவின்போது பேசிக்கொண்டிருப்பார்கள். ஒரே சத்தமாக, கலாட்டாவாக இருக்கும். ஆனால் இளையராஜா அவர்களின் ரெக்கார்டிங்கில் அவர் உள்ளே நுழைந்தவுடனேயே எல்லாம் கப்சிப்பென்று அமைதியாகி அதீதமான நிசப்தம் நிலவும். அந்தச் சூழலே பதற்றம் தருவதாக இருக்கும். என்னிடம் முன்னரே நோட்ஸ் எல்லாம் கொடுத்திருப்பார்கள். பலமுறை வாசித்துப் பயிற்சி செய்திருந்தாலும், அவர், “என்ன ரெடியா? ஸ்டார்ட்” என்று சொன்னவுடன் எனக்கு எல்லாம் மறந்துபோகும். தொண்டை வறண்டுவிடும். தப்பாக வாசித்துவிடுவேன். ஒருநாள் அவரிடமே சொல்லிவிட்டேன். “நீங்கள் எதிரில் வந்து நின்றாலே ஏனோ என்னால் வாசிக்க முடிவதில்லை” என்றேன். அவர் சிரித்துவிட்டு, “என்ன பாலேஷ், இப்படி சொல்றீங்க? நான் என்ன பேயா, பிசாசா?” என்றார்.

இது எனக்கு மட்டுமில்லை. எல்லா பெரிய கலைஞர்களுக்கும் நடந்து நான் பார்த்திருக்கிறேன். பாம்பேயில் ஒரு ரெக்கார்டிங்கின் போது நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அந்தப் பதிவுக்கு இங்கிருந்து இளையராஜா அவர்களோடு நானும் போயிருந்தேன். பாம்பே திரையிசையில் ஒரு பெரிய இசைக்கலைஞர் ஒருவர் இருக்கிறார். பெயர் ராம்சிங் பாபு என்று நினைவு. இளையராஜா அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர், இவரிடம் வாசித்தப் பழக்கமிருந்தவர்தான். உத்தம் சிங்கின் நண்பர். நன்கு ரிகர்சல் பார்த்து ப்ராக்டீஸ் பார்த்துவிட்டு ரெக்கார்டிங்கில் தப்பாக வாசித்துவிட்டார். அப்புறம் மீண்டும் டேக் போய் பதிவு முடிந்தவுடன், வீட்டுக்கு ஃபோன் செய்து மனைவியிடம், “இன்னிக்கு இளையராஜா ரெக்கார்டிங். எப்படி வாசிப்பேனோன்னு பயந்துகிட்டே இருந்தேன். நல்லவேளையா நல்லா வாசிச்சுட்டேன். I am happy”ன்னு ஹிந்தியில் சொல்கிறார். நான் அவர் பக்கத்திலேயே அமர்ந்திருந்தேன். எனக்கு ஒரே சிரிப்பு.

balesh31

இந்தப் பதற்றத்துக்கு என்ன காரணம்? நீங்கள் எத்தனையோ பேரிடம் ஷெனாய் வாசித்திருக்கிறீர்கள். இளையராஜாவிடம் வாசிக்கும்போது மட்டும் ஏன் அத்தனை கஷ்டப்படுகிறீர்கள்?

பிற இசையமைப்பாளர்களுக்கும் இவருடைய இசையமைப்புக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவர் பிடிகள், நுணுக்கங்களெல்லாம் சாதாரண ரசிகர்களும் ரசிக்கும் வகையில் எளிமையாகத் தெரிந்தாலும், அவை வாசிப்பதற்குக் கஷ்டமானவை. ஒரு Bar-இல் நான்கு நோட்ஸ் எழுதியிருக்கிறார் என்றால், ஒரு நோட்டுக்கும் இன்னொரு நோட்டுக்கும் இடையே இருக்கும் அசைவுகள் வெவ்வேறாக இருக்கும். அதேபோல ஒரு Bar-க்கும், அடுத்த Bar-க்கும் நோட்களின் அசைவுகள் வெவ்வேறாக இருக்கும். அதைப் புரிந்துகொண்டால்தான் சரியாக வாசிக்கமுடியும்.

ஷெனாயை ஒரே ஸ்ருதியில் வாசிப்பதென்றால் நிம்மதியாக வாசித்துவிடலாம். ஆனால் இவரோ பெரும்பாலும் ஸ்ருதியை மாற்றி மாற்றி வாசிப்பது போல்தான் அமைத்திருப்பார். சில ஸ்ருதிகளில் வாசிப்பது ரொம்ப கஷ்டம். ஸ்ருதி மாறும்போது ஸ்வரஸ்தானங்களுக்கான fingering-ஐ மாற்றவேண்டி வரும். நேரடிப் பதிவில் கை சட்டென்று மாறி அடுத்த ஸ்ருதிக்குச் சென்று தப்பில்லாமல் வாசிக்கவேண்டும். அதேபோல சில பாடல்களில் பாடலும், பிற கருவிகளும் ஒரு ஸ்ருதியிலும், ஷெனாய் வேறொரு ஸ்ருதியிலும் இருக்கும். இதெல்லாம் பிடிபடும்வரை அவரிடம் வாசிப்பது ரொம்ப கஷ்டம்.

இளையராஜா அவர்களுக்கு இந்தந்த இசைக்கருவி, இந்தந்த ஸ்ருதியில் இசைக்கவேண்டும் என்ற அடிப்படை லட்சணம் தெரியும். இதோ இந்தப் பாடலை ஷெனாயைக் கொண்டே துவக்குகிறார். மிகச் சரியான ஸ்ருதி இது. பாடலின் துவக்கத்திலிருந்தே வரும் ஷெனாயின் சௌகரியமான ஸ்ருதிக்காகவே முழுப்பாடலையும் அமைத்திருக்கிறார். இதற்கு நேர்மாறாக உற்சாக உச்ச ஸ்ருதியில் இந்தப் பாடலைத் துவக்குகிறார் பாருங்கள். இவர் எதை எப்படி அமைப்பார் என்பதை எங்களால் கணிக்கவே முடியாது.

பிற இசையமைப்பாளர்களிடம் வாசிக்கிறவர்கள் இவர் இசையை அவ்வளவு எளிதாக வாசித்துவிட முடியாது. அங்கே இசையமைப்பாளர் கொடுத்ததைத்தான் வாசிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் எழுதியிருப்பதை வாசிக்க முடியவில்லை என்றால் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து அந்த ஸ்டைலில் தனக்கென்ன வருகிறதோ அதை வாசித்து விடலாம். ஆனால் இவரிடம் ஒரு நோட்டைக் கூட மாற்றி வாசித்துவிட முடியாது. தனக்கு என்ன தேவையோ அதை வெகு தெளிவாக நோட்ஸில் தந்திருப்பார். அது காட்சிக்கு மிகப் பொருத்தமானதாகவும் இருக்கும். இவரிடம் ஒருவர் வாசித்துவிட்டாரென்றால் உலகத்தில் வேறு எங்கே வேண்டுமானாலும் போய் வாசித்துவிடலாம். அதனால் இவரிடம் வாசிக்கும் ஒவ்வொருவருமே மிகப்பெரிய இசைக்கலைஞர்தான்.

ஒவ்வொரு நாளும் காலையில்தான் அன்று இளையராஜா அவர்களின் ரெக்கார்டிங் இருக்கிறதா எனத் தெரியவரும். காலை எட்டு மணி வரை அவருடைய மானேஜர் சுப்பையாவிடமிருந்து ஃபோன் வரவில்லையென்றால் நிம்மதியாக இருக்கும். ஃபோன் வந்துவிட்டால் ஒரே பதற்றமாகிவிடுவேன். ஸ்டுடியோவுக்குச் சென்று நோட்ஸ் வாங்கி ப்ராக்டீஸ் செய்து ரிகர்சல் பார்த்து, ரெக்கார்டிங் முடித்து மதியம் 12 மணிக்கு வெளியே வரும்வரை அந்தப் பதற்றம் நீடிக்கும். அவருடைய ரெக்கார்டிங் 12 மணிக்கெல்லாம் முடிந்துவிடும். அதற்குப்பிறகு மற்ற இசையமைப்பாளர்களிடம் வாசிக்கப்போவேன். இந்தப் பதற்றம் கொஞ்சநாட்கள், அதாவது ஐந்து வருடங்கள் வரை நீடித்தது.

திரையிசையில் இளையராஜா ஷெனாய் வாத்தியத்தை உபயோகித்த விதத்தைக் குறித்துக் கூறுங்களேன்…

பல தென்னிந்திய, வட இந்திய திரையிசைகளில் ஷெனாயை சோக ரசத்துக்கு மட்டுமில்லாமல், சந்தோஷத்துக்கும் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவை பெரும்பாலும் மரபு சார்ந்ததாகவே இருக்கும். ஆனால் இவர் அந்த மரபை மீறி ஷெனாய் வாத்தியத்தை முற்றிலும் நவீனப்படுத்தினார். பொதுவாக ஷெனாயை வீணை அல்லது தபேலாவைப் பின்னணியாக வைத்துதான் இசையமைப்பார்கள். ஆனால் ஷெனாயை, மிருதங்கம், ட்ரம்ஸ், தவில், வயலின், கிதார் போன்ற எல்லா இசைக்கருவிகளோடும் ஒலிக்கவைத்தார். சொல்லிக்காட்டவே முடியாத பல வித்தியாசமான தாளகதிகளின் பின்னணியிலும் ஷெனாயைப் பயன்படுத்தியிருக்கிறார். புல்லாங்குழலோடு ஷெனாயை வாசிக்க முடியும் என்று யாராவது சொல்லியிருந்தால் நான் சிரித்திருப்பேன். ஆனால் ஒரு பாட்டில் ஷெனாய், புல்லாங்குழல் இரண்டையும் பயன்படுத்தினார். ஷெனாயை ஆண் குரல் போலவும், அது கேள்வி கேட்பதாகவும், புல்லாங்குழல் பெண்குரலில் பதில் சொல்வதைப் போலவும் ஒரு கற்பனை அது. ஏதோ ஒரு பாட்டின் இடையிசையில் வரும் சிறிய துணுக்குதான் அது. ஆனால் அதையும் அத்தனை நுணுக்கமாகத்தான் செய்கிறார். ஆனால் அவர் இசைக்குறிப்புகளை எழுதுவதைப் பார்த்தால் அவர் அதற்காக மெனக்கெடுவது போலவே தோன்றாது. எல்லா கஷ்டமும் வாசிக்கும் நமக்குதான். [சிரிக்கிறார்.]

அதைப் போல, ஷெனாயை ஒரு தமிழ் நாட்டுப்புறக்கருவியாகவே மாற்றிவிட்டார். அவருடைய பெரும்பாலான நாட்டுப்புறப்பாடல்களில் ஷெனாய் இல்லாமல் இருக்காது. ஷெனாய் வாத்தியத்தை கொட்டுமேளம், தவில், உறுமி எனப்பிற கிராமியக்கருவிகளோடு அழகாக ஒன்றிப்போகும்படி எத்தனையோ இசைக்கோர்வைகள் தந்திருக்கிறார். இடையிசையை அடுத்த சரணத்தோடு இணைக்கும் வாத்தியமாகப் பல பாடல்களிலும் பயன்படுத்தியிருக்கிறார். இவர் அத்தனை வருடங்களாக கிராமிய இசையில் ஷெனாயைப் பயன்படுத்திய பின்னும், அதை ஒரு வட இந்திய வாத்தியமாகவே பார்ப்பது ஷெனாய் இசைக்கருவிக்கே நாம் செய்யும் துரோகம்தான்.

இசையமைக்க ஆரம்பித்த காலத்திலிருந்து இப்போது வரை தன்னுடைய பாடல்களில் எத்தனையோ பாடல்களின் துவக்க இசையிலும், இடையிசையிலும் ஷெனாயைப் பல்வேறு விதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். இசை ரசத்திலும் சோகத்தையும், மகிழ்ச்சியையும் ஒரு சேர வெளிப்படுத்தும் தருணங்கள், பின்னணி இசை [லஜ்ஜா | ஆண் பாவம் | நாயகன் | மெளனராகம்], நையாண்டிப் பாட்டு, ராஜஸ்தானிய கோலாட்டப் பாட்டு, சம்பிரதாயமான வட இந்திய பஜன் முறை, நவீனமான டிஜிட்டல் ரிதத்தில் அமைக்கப்பட்ட பாட்டுகளில் அவர் ஷெனாயைப் பயன்படுத்தியிருக்கிறார். இப்போது சமீபத்தில் வெளியான அழகர்மலை படத்தில் கூட ஒரு பாட்டில் எவ்வளவு நவீனமாக ஷெனாயைப் பயன்படுத்தியிருந்தார்! உங்கள் படப்பாடல்களில் கூட ஷெனாயைப் பயன்படுத்தினாரே? ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்காகக் கூட வாசித்தேன்.

ஹிந்துஸ்தானி, கர்நாடக சங்கீதம் என இரண்டு மரபிசை வடிவங்களிலும் இரண்டு பெரிய மேதைகளைப் பாடவைத்து அவர் இசையமைத்த பாடல்களிலும் என்னை வாசிக்க வைத்திருக்கிறார். இதற்கு மேல் எனக்கு என்ன கொடுப்பினை வேண்டும்!

’ஹே ராம்’ படத்தில் ‘இசையில் தொடங்குதம்மா’ பாடலை அஜய் சக்ரபர்த்தி என்ற பெரிய மேதையைப் பாடவைத்தார். அப்பாடலின் இடையிசையில் நான் வாசித்திருக்கிறேன். அப்பாடலைப் பற்றிய ஒரு சுவாரசியமான சம்பவம் இருக்கிறது. திரைக்கதைப்படி அப்பாடல் படத்திலேயே இல்லை. படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இளையராஜா அவர்களுக்கு இந்த இடத்தில் ஒரு பாட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியிருக்கிறது. உடனே மேனேஜரிடம் சொல்லி அஜய் சக்ரபர்த்தியிடம் சொல்லிவிட்டார்கள். விஷயம் கேள்விப்பட்டு ப்ரொடக்‌ஷன் தரப்பிலிருந்து ஏற்கனவே செலவு கையை மீறிப்போய்விட்டதே எனத் தயங்கினார்கள். சரி பாட்டைப் பதிவு செய்யவேண்டாம் என்று முடிவுசெய்து தயங்கியபடியே அஜய் சக்ரபர்த்தியை அழைத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவர், “எனக்குப் பணமே வேண்டாம். நான் என் மகளோடு வந்து இளையராஜாவைப் பார்க்கவேண்டும். என் மகளுக்கு அவர் ஆசிர்வாதம் வேண்டும்” என்று சொல்லித் தன் மகள் கெளஷிகி சக்ரபர்த்தியோடு சென்னை வந்து அப்பாடலைப் பாடினார். கெளஷிகி சக்ரபர்த்தியும் இன்று நன்கறியப்பட்ட இளம் ஹிந்துஸ்தானி பாடகி. வட இந்திய இசைக்கலைஞர்கள், ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்களுக்கு அவர் மீது அத்தனை மரியாதை. பாடலைக் கேட்டபின்னும் அதை வேண்டாமென்று யாரும் சொல்வார்களா என்ன? [சிரிக்கிறார்.] அப்படிப்பட்ட முக்கியமான பாட்டில் நான் வாசித்திருக்கிறேன். அதைப்போல கர்நாடக சங்கீத மேதையான டி.என்.சேஷகோபாலன் பாடிய ‘இன்னருள் தரும் அன்னபூரணி’ என்ற பாட்டின் இடையிசையிலும் நான் வாசித்திருக்கிறேன்.

நீங்கள் எத்தனையோ பாட்டுக்கும், பின்னணி இசைக்கும் வாசித்திருக்கிறீர்கள். நீங்கள் வாசித்ததில் உங்களுக்குப் பிடித்த பாடல், இசை எதுவும் இருக்கிறதா?

எத்தனையோ வாசித்தபின் அப்படித் தனியாக எதையும் சொல்லமுடியாதே! [சிரிக்கிறார்.]

‘ஸ்ரீரங்க ரங்கநாதரின் பாதம்’ பாட்டு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதில் இடையிசையில் நான் வாசித்திருக்கிறேன். இந்தப் பாடலை மோகன ராகத்தில் துவக்குகிறார். பின்னர் சரணத்தில் ஹம்ஸத்வனிக்கு பாடல் இயல்பாக மாறுகிறது. ராகங்கள் குறித்த ஆழமான ஞானம் இருந்தால் மட்டுமே இது போன்ற அபாரமான இசையை வழங்க முடியும். நான் வாசித்த பல பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது இந்தப் பாடலில் வரும் ஷெனாய்ப் பகுதி.

‘ஆலப்போல் வேலப்போல்’ பாட்டின் இடையிசையும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கேட்க எவ்வளவு எளிமையாக இருக்கிறது! ஆனால் வாசிப்பதற்கு ரொம்ப கஷ்டமான ஒன்று.

‘மகாநதி’ திரைப்படத்தில் கமலஹாசன் ஜெயிலில் இருக்கும்போது அவர் பெண் பருவமடைந்தபின் அப்பாவைப் பார்க்க ஜெயிலுக்கு வருவார். அப்போது பின்னணியில் ஷெனாயை உபயோகித்திருப்பார். எனக்கு மிகவும் பிடித்ததொரு ஷெனாய் பின்னணி இசை அது. ஆழ்வார்ப்பேட்டை மீடியா ஆர்ட்டிஸ்ட்ஸ் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது. சோகத்தையும், சந்தோஷத்தையும் ஒரே சமயத்தில் வெளிப்படுத்திய இசை அது. அது பரவலான கவனத்தையும் பெற்றது. படம் பார்த்துவிட்டுப் பலரும் என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்கள்.

நீங்கள் திரையிசையில் ஷெனாய் வாசிப்பதைத் தவிர, பாடியுமிருக்கிறீர்கள் இல்லையா?

ஆமாம். திரையிசைக்கு வந்தபின் பல வருடங்கள் நான் பாடுவேன் என்று யாரிடமும் சொன்னதில்லை. இளையராஜா அவர்களின் ரெக்கார்டிங் சமயங்களில் இடைவேளையின்போது என் மனதில் தோன்றும் ராகங்களை மெல்லிய குரலில் ஹம் செய்துகொண்டிருப்பேன். இதை கவனித்த அவர் ‘நீங்கள் நன்றாகப் பாடுகிறீர்களே? நீங்கள் ஏன் பாடக்கூடாது? எங்கே இந்த நோட்ஸைப் பாடுங்கள் பார்க்கலாம்’ என்று என்னைப் பாடச் சொல்லிக் கேட்பார். அப்படித்தான் முதன்முதலில் கலைஞன் படத்தில் அந்த நளினகாந்தி ஆலாபனையைப் பாடினேன். [பாடிக்காட்டுகிறார்.]

உங்களுக்குப் பிடித்த ராகங்கள் என்னென்ன? ஷெனாயில் நீங்கள் பயிற்சி செய்யவேண்டும், வாசித்துப் பார்க்கவேண்டும் என்றால் பொதுவாக என்ன ராகத்தை வாசிப்பீர்கள்?

ராகங்களை வாசிப்பதற்காக நான் தெரிவு செய்வது என் மனநிலையைப் பொருத்தது. ஆனால் யமன் (கல்யாணி), பூபாளி (மோகனம்) இரண்டையும் நான் பெரும்பாலும் வாசிப்பேன். புதிய ஷெனாய் வாங்கினால் பரிசோதித்துப் பார்க்க மேஜர் ஸ்கேல் ராகங்கள்தான் வாசிப்பேன். மைனர் ஸ்கேல் வாசிக்கவேண்டுமென்றால் ஷெனாயின் ரீட் கொஞ்சம் பக்குவமடைந்திருக்கவேண்டும். மார்வா, பூர்யா கல்யாண், பூர்ய தணஸ்ரீ இவற்றையெல்லாம் வாசிக்கவேண்டுமென்றால் ஷெனாய் வாசிப்பில் உண்மையாலுமே நல்ல தேர்ச்சி இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த உருக்கும் ரக்தி பாவம் திரண்டுவரும். மார்வா ராகத்தின் அதே ஆரோகண, அவரோகண ஸ்வரஸ்தானங்களில் மூன்று வெவ்வேறு ராகங்கள் இருக்கின்றன. [பாடிக்காட்டுகிறார்.]

ராகங்களுக்கு ஜீவ ஸ்வரங்கள் ரொம்ப முக்கியம். ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு ஜீவ ஸ்வரம் இருக்கிறது. கல்யாணியின் ஜீவ ஸ்வரம் காந்தாரம். அதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடும்போது அது ஜீவனோடு மிளிறும். கல்யாணியில் ஒரு பாடலை உருவாக்கும்போது கூட அதில் ஜீவ ஸ்வரத்துக்கு முக்கியத்துவம் தந்து அமைக்கும்போது எத்தனை வருடங்களானாலும் உயிர்ப்போடு இருக்கும். [பாடிக்காட்டுகிறார்.]

அடுத்து மோகன ராகத்தின் ஜீவ ஸ்வரங்களைத் தொட்டுப் பாடிக்காட்டுகிறார்.

என்னுடைய படித்துறை படத்தில் பின்னணியில் (Re-recording) நீங்கள் பாடியிருக்கிறீர்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஏனென்றால் ரெக்கார்டிங் சமயத்தில் நான் அங்கே இருந்தேன். முதலில் சுத்த சாரங் பாடினீர்கள். பிறகு வேறெதோ ராகம் பாடினீர்கள். முதலில் சுத்த சாரங்கைக் கொஞ்சம் பாடிக்காட்டுங்களேன்?

பாடுகிறார்.

பிறகு அதை மாற்றி வேறு ராகமாகப் பாடினீர்களே? அது என்ன ராகம்? ஏன் மாற்றினீர்கள்?

பொதுவாகவே நான் பாடப்போகும்போது குரல் பதப்படவேண்டும் என்று இளையராஜா அவர்கள் எனக்குப் பிடித்த ஏதாவது ராகத்தைப் பாடச் சொல்வார். சில சமயங்களில் அவராகவே ராகம் சொல்லிப் பாடச்சொல்லிக் கேட்பதும் உண்டு. பல சமயங்களில் அதுதான் ஒரிஜினலாகப் பாடவேண்டிய ஒன்று என்றெல்லாம் சொல்லி என்னை ஏமாற்றியிருக்கிறார். [சிரிக்கிறார்.] அன்றும் அப்படி எனக்குப் பிடித்த சுத்த சாரங் ராகத்தைப் பாடிவிட்டுப் பிறகு படத்திற்குத் தேவையான கம்பாவதி ராகத்தைப் பாடினேன்.

[பாடிக்காட்டுகிறார்.]

ராகங்களைப் பற்றிப் பேசும்போது நினைவுக்கு வருகிறது. ஹிந்துஸ்தானி ராகங்களை தமிழ்த்திரையிசையில் எந்த அளவுக்குக் கையாள்கிறார்கள்?

பொதுவாகவே தமிழ்த் திரையிசையின் பெரிய மேதைகள் நிறைய ஹிந்துஸ்தானி ராகங்களை உபயோகித்திருக்கிறார்கள். பீம்ப்ளாஸ், தர்பாரி கானடா, மாண்ட், திலங், ஜோன்புரி போன்ற பல ராகங்களை இங்கே வெகு அநாயசமாகக் கையாண்டிருக்கிறார்கள். கர்ணன் திரைப்படத்தில் ஹிந்துஸ்தானி இசையைக் கையாண்ட விதம் வட இந்திய திரையிசை ஜாம்பவான்களையே பிரமிக்க வைத்த ஒன்று. இதனாலேயே தமிழ்த் திரையிசைமைப்பாளர்கள் மீது வட இந்தியாவில் பெரிய மரியாதை உண்டு.

இளையராஜா அவர்களும் ‘ஆகாய வெண்ணிலாவே’ – தர்பாரி கானடா, ‘மனதில் ஒரேயொரு பூ பூத்தது’ – பிருந்தாவன சாரங்கா, ‘மழை வருது’ – பாகேஸ்ரீ, ‘மனதில் உறுதி வேண்டும்’ – திலங், ‘என்னுள்ளில் ஏதோ’ – மதுவந்தி என எல்லா முக்கியமான ஹிந்துஸ்தானி ராகங்களிலும் பாடல்கள் அமைத்திருக்கிறார்.

பிலாஸ்கானி தோடி என்றொரு அரிதான ராகம் இருக்கிறது. தான்ஸேனின் மகன் பிலாஸ்கான். அவர் உருவாக்கிய ராகம் என்பதால் பிலாஸ்கானி தோடி என்று பெயர். அதில் வட இந்தியாவில் கூட திரைப்பாடல்கள் அதிகம் இல்லை. ஆனால் இவர் அதில் பாட்டமைத்திருக்கிறார். ‘உதயகீதம் பாடுவேன்’ பாட்டுதான் அது. [பாடிக்காட்டுகிறார்.] ‘சுத்த சாரங்’ ராகத்தில் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ பாட்டு எவ்வளவு அழகாக இருக்கிறது. [பாடிக்காட்டுகிறார்.] ஷ்யாம்-கல்யாண் என்ற அரிய ராகத்தில் அமைந்ததுதான் ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ பாட்டு, ‘எந்தன் நெஞ்சில் நீங்காத’பாட்டு நளினகாந்தி ராகம் இல்லையா? அதை ஹிந்துஸ்தானியில் ‘கெளட் சாரங்’ என்போம்.

இப்போது புதிதாகத் திரைத்துறைக்கு வரும் இசையமைப்பாளர்களுக்கு இந்த ராகங்கள் எதுவுமே தெரிவதில்லை, புரிவதுமில்லை. தெரிந்தாலும் அவற்றை வெறும் நோட்ஸ்களாக மட்டுமே பார்க்கிறார்கள். ஜீவ ஸ்வரம், ராக ரூபம் இதெல்லாம் ஒன்றுமே தெரிவதில்லை. ‘ட்ரெண்ட் மாறிப்போச்சு’ என்று சொல்லி இதையெல்லாம் எதுவுமே தெரிந்துகொள்ளாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். ‘ட்ரெண்ட் மாறிவிட்டது’ என்றெல்லாம் ஒன்றுமில்லை. ராகங்களை வைத்துக்கொண்டே நவீனமாகவும் பாடல்களை உருவாக்கலாம். ராகங்கள் என்பவை நம் ஆதாரமான மெலடிகள்தான். அவற்றை ஒரு குறிப்பிட்ட வகையில், குறிப்பிட்ட ஸ்வரங்களுக்கு, பிரயோகங்களுக்கு அழுத்தம் கொடுத்துப் பாடும்போது உருவாகும் இசை நீண்டகாலம் ஜீவனோடு இருப்பதைக் கண்டுகொண்ட நம் முன்னோர்கள் அவற்றைப் பாரம்பரியமாகப் பாதுகாத்துவந்தார்கள். அதுதான் ராகம். ராகங்கள் என்பவை ஏதோ மேடையில் பாடப்படும் பழமையான மரபிசை விஷயங்கள் அல்ல. ராகங்களை அடிப்படையாகக் கொண்டு குத்துப்பாட்டைக் கூட அமைக்கலாம். திரையிசையையும், மரபிசையையும் பிரித்துப் பார்ப்பதே பல காலமாகத் தங்கள் நாட்டுப்புறப்பாட்டு, கிராமியக்கூத்து என எல்லாவற்றிலும் ராகங்களை ரசித்துப் பாதுகாத்துவந்த நம் மக்களின் ரசனைக்கு நாம் செய்யும் அவமரியாதைதான்.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா எல்லோருமே ராகங்களின் அடிப்படையில் அந்தந்த காலகட்டத்துக்கேற்ற மாதிரி நவீனமாகத்தானே பாடல்களைத் தந்தார்கள்? இன்னும் அவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறோமே? இன்றும் வரும் பாடல்களை இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து யார் நினைவில் வைத்திருப்பார்கள்? முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களெல்லாம் இசைப் பரிச்சயம் உள்ளவர்களாக இருந்தார்கள். இன்று அவர்களுக்கும் தெரிவதில்லை. அதனால்தான் பல இசையமைப்பாளர்களும் தப்பித்துக்கொள்கிறார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா பூராவுமே அப்படித்தான் இருக்கிறது.

ராகங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் என் குருநாதர் பிஸ்மில்லா கானின் நினைவுதான் வந்து வந்து போகிறது.

[இடையே குறுக்கிட்டு கிருஷ்ணா பாலேஷ் சொல்கிறார்.] பிஸ்மில்லா கான் பற்றியதொரு சுவாரசியமான விஷயத்தை அப்பா சொல்லாமல் விட்டுவிட்டார்.

என்ன அது?

உஸ்தாத் எப்போதுமே வெள்ளி மோதிரங்கள்தான் அணிவார். அவர் தங்க ஆபரணங்களை விரும்பியதில்லை. ஒரு வெள்ளி நவரத்தினக்கல் மோதிரமும், வெள்ளி கைலாசநாதர் மோதிரமும்தான் பிஸ்மில்லா கான் எப்போதும் அணிவார். ஆனால் அப்பாவுக்கு பிஸ்மில்லா கானுக்கு ஒரு தங்கமோதிரம் அணிவிக்கவேண்டுமென்று ஆசை. தயங்கியபடியே உஸ்தாத் அவர்களைக் கேட்டார். அதற்கு உஸ்தாத் சொன்னார்: “இந்த நாட்டின் பிரதமர், அமைச்சர், IAS அதிகாரி யார் கேட்டிருந்தாலும் முடியாது என்று சொல்லியிருப்பேன். லேகின் தும் ஹமாரா ஆத்மி ஹை. தும் ஹமாரே ஹோ. தும் ஏக் கலாகார் ஹோ. அதனால் உனக்கு நான் மறுப்பு சொல்லமாட்டேன்!” என்றிருக்கிறார். பிஸ்மில்லாகானின் உடலைத் தொட்ட ஒரே தங்க ஆபரணம் அப்பா செய்துபோட்டதுதான்.

[கண் கலங்கியபடி பாலேஷ் சொல்கிறார்.] என் குருநாதரின் நினைவுகளும், இளையராஜா அவர்களின் அருகாமையும்தான் இச்சூழலிலும் என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

சட்டென்று அந்த இடத்தில் ஓர் அமைதி நிலவியது. சரி, முடித்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் நான் கிளம்பத் தயாரானபோது ஷெனாயைக் கையில் எடுத்துக் கொண்டு, தனது மகன் கிருஷ்ணாவைப் பார்த்தார் பாலேஷ். உஸ்தாத் பிஸ்மில்லா கான் போன்ற மேதைகளுடன் ஷெனாய் வாசித்த பாலேஷ் என்னும் அந்த ஒப்பற்ற கலைஞர், தனது சாலிகிராமத்து வீட்டில் தன் மகனுடன் இணைந்து எனக்காக ‘ஜோக்’ ராகம் வாசித்தார். கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத பேரனுபவம் அது.

ஒலிப்பதிவு: ஜெ.பார்த்திபன் உதவி : சுவாமிநாதன்
புகைப்படங்கள் : குமரேஷ்

அண்ணன்களின் பாடகன்

‘எல, முத்தக்கா கல்யாணத்துக்கு சின்ன சுப்பையாதான் மேளம் தெரியும்லா? சாயங்காலம் சில்வர் டோன்ஸ் கச்சேரி.’

பெரிய அக்காவின் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது சிறுவனான என்னிடம் பெரியண்ணன் சொன்னான். அவளது திருமணம் திருநெல்வேலியிலுள்ள எங்கள் பூர்வீகப் பெரிய வீட்டில் விமரிசையாக நடந்தது. சின்னசுப்பையாவின் நாதஸ்வரத்தையும் விட சாயங்காலம் ரிஸப்ஷனில் (அப்போதெல்லாம் கல்யாணத்தன்றுதான் ரிஸப்ஷன்) நடக்கவிருக்கும் மெல்லிசைக் கச்சேரியில்தான் எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனாலும் பெரியப்பாவுக்கு பயந்து நாதஸ்வரக் கச்சேரியின் போது முன்வரிசையில் சின்னப்பிள்ளைகள் அனைவரும் அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்துப் பார்த்து தாளம் போட்டுக் கொண்டிருந்தோம். சாயங்காலம் மெல்லிசைக் கச்சேரியின் போது பெரியப்பா அந்தப் பக்கமே வரவில்லை.

எங்கள் வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த மேடையில் வழக்கம் போல தியாகராஜ மாமா ஹார்மோனியத்தில் அமர்ந்திருந்தார். திருநெல்வேலி மெல்லிசைக் குழுக்களில் உள்ள அனைவருமே அநேகமாக பெரியண்ணனின் நண்பர்கள். பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்த்து வந்த அவன் ஒரு தபெலா பிளேயர். கணபதியே வருவாய், முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கு போன்ற சம்பிரதாயத் தொடக்கப் பாடல்கள் முடிந்து சினிமாப் பாடல்கள் முறை வந்த போது ‘மணிப்பூர் மாமியார்’ திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை ஆரம்பித்தார்கள். முதலில் பெண்குரலின் ஆலாபனையைத் தொடர்ந்து ‘ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே’ என்று ஆண்குரல் பாடத் துவங்கியது. தன்மகள்வீட்டு வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்த காக்கும்பெருமாள்பிள்ளை தாத்தா அருகில் உட்கார்ந்திருந்த தன் தோழர் சுப்பிரமணிய பிள்ளை என்னும் எவர்சில்வர் தாத்தாவிடம் கேட்டார்.

‘வே, யார் கொரல் தெரியுதா?’

‘ஜெயராமன் கொரல் தெரியாதாக்கும். எத்தன ரெக்கார்டு கேட்டுருக்கென்.’

சற்றும் தாமதிக்காமல் சொன்னார் எவர்சில்வர் தாத்தா.

மலேஷியா வாசுதேவனின் குரலில் எனக்கு நினைவு தெரிந்த முதல் பாடலாக அந்தப் பாடல்தான் இன்றுவரை என் மனதில் உள்ளது. பின்னர் தேடித் தேடி இனம்பிரித்துப் பாடல்கள் கேட்க ஆரம்பிக்கும் போது ‘ஏ… முத்து முத்தா’ என்று பாடல் துவங்கும் போதே ‘அய், வாசுதேவன்’ என்று தெரிந்து போனது.

0000506343_350

வாசுதேவனின் பாடல்களை எனக்கு நிறைய அறிமுகப்படுத்தியவன் யாரென்று யோசித்துப் பார்த்தால் கணேசண்ணன்தான் நினைவுக்கு வருகிறான். கணேசண்ணன் அப்போது ஐ.டி படித்து முடித்துவிட்டு கண்ணில் படுகிற பெண்களையெல்லாம் காதலித்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் எந்த ஒரு புதிய பாடலையும் கணேசண்ணன் குரலில்தான் நாங்கள் முதலில் கேட்போம். ‘முடிவல்ல ஆரம்பம்’ திரைப்படப்பாடலான ‘தென்னங்கீற்றும் தென்றல்காற்றும்’ பாடலில் ‘வண்ணாத்திப் பாறைக்கு வரவேணும் நாளைக்கு’ என்னும் வரியை கணேசண்ணன் யாரையோ நினைத்தபடி ரசித்துப் பாடுவான். ‘கோழி கூவுது’ படத்தின் ‘பூவே இளைய பூவே’ பாடலின் ’காமாட்சி’ என்று துவங்கும் வசனத்திலிருந்தே ஆரம்பித்து விடுவான். அதுவும் ‘தம்பி ராமகிருஷ்ணா, கூச்சப்படாமல் மற்றவைகளையும் படித்துக் காட்டவும்’ என்று சுற்றி அமர்ந்திருக்கும் எங்களில் யாரையாவது பார்த்துச் சொல்லுவான். பின்னர் எனது இசை வகுப்புகளின் போது சங்கராபரண ராகப் பயிற்சிக்கு மேற்கண்ட பாடல் பேருதவியாக இருந்தது.

காதல்பாடல்கள் என்றில்லை. கணேசண்ணனின் இசைரசனை வித்தியாசமானது. தென்தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களின் பாடலாக பரவலாக அறியப்பட்ட ‘அலை ஓசை’ படத்தின் ‘போராடடா ஒரு வாளேந்தடா’ என்ற வாசுதேவனின் பாடலை கணேசண்ணன் உணர்ச்சிப் பெருக்கோடு பாடிக் கேட்டிருக்கிறேன். அதுவும் அந்தப் பாடலின் முதல் இண்டெர்லூடில் ‘தந்தானே தந்தானே’ என்ற குழுவினர் குரலை திருநெல்வேலிப்பகுதி கோயில் கொடைகளில் மேளக்காரர்கள் உற்சாகமாக வாசிக்க, கும்பக்குடக் கலைஞர்கள் சுழன்று ஆடுவதை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன். நாமும் கூட சேர்ந்து ஆடமாட்டாமோ என்று ஒவ்வொருமுறையும் தோன்றச் செய்யும் அட்டகாசத் துள்ளல் தாளமது.

கணேசண்ணனின் அப்போதைய மனநிலைக்கேற்ப பாடும் பாடல்களில் பெரும்பாலானவை மலேஷியா வாசுதேவனின் பாடல்களே. என்னையும், தம்பியையும் சினிமாவுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு அவ்வப்போது கணேசண்ணனுக்கே வழங்கப்படும். ரத்னா தியேட்டரில் ‘காளி’ படம் பார்த்துவிட்டு திருநெல்வேலி ஊரிலேயே குறுகலான தெருவான வடிவுமுடுக்குத் தெரு வழியாகத் திரும்பி வரும்போது எங்கள் இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு ‘அடி ஆடு பூங்கொடியே’ பாடலை ரஜினிகாந்த மாதிரியே நடந்து, வாசுதேவன் மாதிரியே பாடினான். ‘ஏல, ஒங்களுக்கு என்ன கோட்டியா, ரோட்ட அடச்சுக்கிட்டு போறதப் பாரு. சவத்து மூதியொ’ என்று ஒரு சைக்கிள்காரர் திட்டிவிட்டுச் சென்றதை அவன் பொருட்படுத்தவேயில்லை. அவமானப்பட்டு கையை உதற முயன்ற என்னையும், தம்பியையும் வீடு வரும்வரை அவன் விடவேயில்லை. காரணம், பாட்டு வீட்டுவாசலில்தான் முடிந்தது.

சிலநாட்களாக தன் பக்கத்து வீட்டிலுள்ள ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தான் கணேசண்ணன். நான்கு அல்லது ஐந்து வயதான அந்தச் சிறுமி எந்த நேரமும் கை, வாய் நிறைய சாக்லெட்டாகவே காட்சியளித்தாள். அந்தச் சிறுமியை உட்கார வைத்துக் கொண்டு கணேசண்ணன் சினிமாவில் வருகிற மாதிரியே அத்தனை தத்ரூபமாக ‘வா வா வசந்தமே, சுகந்தரும் சுகந்தமே’ என்று ‘புதுக்கவிதை’ படப்பாடலைப் பாடுவான். குழந்தை அவனை நிமிர்ந்தே பார்க்காமல் வாயிலுள்ள மிட்டாயை முழுங்கி விட்டு, கையிலுள்ளதை வாயில் திணிக்கும். அதற்கெல்லாம் கவலைப்படாத கணேசண்ணன் இன்னொரு முறை அந்தப் பாடலைப் பாடத் தொடங்குவான். அந்தச் சிறுமியின் சித்தியை கணேசண்ணன் தீவிரமாகக் காதலித்து வந்த விஷயம், உச்சினிமாகாளி அம்மன் கோயில் முன்னால் அந்தப் பெண்ணின் வீட்டார் முன் கணேசண்ணன் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்கும் போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது.

மேற்படி சம்பவத்துக்குப் பிறகு திருநெல்வேலியில் எங்கு மெல்லிசைக் கச்சேரி நடந்தாலும் கணேசண்ணன் துண்டுச் சீட்டில் எழுதி ஒரு குறிப்பிட்டப் பாடலைப் பாடச் சொல்லி விண்ணப்பிப்பான். பெருங்குரலெடுத்து வாசுதேவன் ‘பார்வதி என்னைப் பாரடி’ திரைப்படத்தில் பாடியிருக்கும் ‘வாலிபரே வாலிபரே’ என்ற பாடல்தான் அது.

திருநெல்வேலியிலுள்ள புகைப்படக்கலைஞர்களில் முக்கியமானவரான விருத்தாச்சலம் அண்ணன், பெயரில் மட்டுமல்லாமல் உண்மையாகவே புதுமைப்பித்தனின் உறவினர். பெரியண்ணனின் தோழனான அவர் காதலில் தோல்வியடைந்தவர்.

‘அப்படி ஒரு சம்பவம் அவன் வாள்க்கைல நடந்தது அவனுக்கு மட்டுந்தான்டே தெரியும்.’ விருத்தாச்சலம் அண்ணனின் நெருங்கிய நண்பரான அனந்தசங்கர் மாமா சொல்வார்.

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு மிகவும் பிடித்தவர் விருத்தாச்சலம் அண்ணன். அதனாலேயே அவர் தன் சிறுகதைகளிலும், கவிதைகளிலும் ஒரு கதாபாத்திரமாக விருத்தாச்சலம் அண்ணனைச் சித்தரித்திருப்பார். ‘நெஞ்சிலாடும் பூ ஒன்று’ படத்தின் ‘ஒரு மூடன் கதை சொன்னான்’ என்ற பாடலை எப்போது கேட்டாலும் விருத்தாச்சலம் அண்ணனை நினைக்காமல் என்னால் இருக்கமுடிந்ததில்லை. ‘பெண்ணை படைத்தானே பிரம்மனே. பாவம் ஆண்களே, பரிதாபம் நாங்களே’ மற்றும் ‘எந்த மடையனோ சொன்னான், சொர்க்கமாம். பெண்கள் உலகமே நரகமே’ போன்ற வரிகளை உணர்ச்சி பொங்கக் கண்ணீருடன் பாடுவார் விருத்தாச்சலம் அண்ணன்.

‘தம்பி, இந்தப் பாட்ட படிச்சது மலேசியான்னு நெனைக்காதெ. விருத்தாச்சலமாக்கும்… என்னடே முளிக்கெ? நெசமாவே நான்தான் பாடுனேன். எல்லா வரியும் நான் பாடுனதாக்கும்.’ பெனட்ரில் இருமல் மருந்து வாசனையடிக்க, சிகரெட் புகைக்கு இடையே அழுதபடி இதைச் சொன்ன விருத்தாச்சலம் அண்ணன் இப்போது உயிருடன் இல்லை.

இது போன்று ‘சில்வர் டோன்ஸ் டி.ஆர். குமார், ‘ஆடலரசன்’ நெல்லை பிரபாகர், ‘சங்கீத சுதா’ உமாபதி போன்ற புகழ்பெற்ற திருநெல்வேலி மெல்லிசைக்குழு பாடகர்கள் வாயிலாகவே மலேஷியா வாசுதேவனின் பாடல்களை நினைவுகூர்கிறேன். எல்லா கச்சேரிகளிலும் ரஜினி ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாடப்படும் பெரும்பாலான ரஜினி படப்பாடல்கள் வாசுதேவன் பாடியவையே. யோசித்துப் பார்த்தால் ரஜினிகாந்தின் உச்ச நட்சத்திர அந்தஸ்தை நோக்கிய பயணத்துக்கு உதவியாக அமைந்த முக்கியமான பாடல்களைப் பாட இளையராஜா, வாசுதேவனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். மெல்ல மெல்ல இது நிகழ்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

‘நான் போட்ட சவால்’ திரைப்படத்தின் ‘சுகம் சுகமே’ , ‘தர்மயுத்தம்’ திரைப்படத்தின் ‘ஆகாய கங்கை’ ‘பாயும் புலி’ திரைப்படத்தின் ‘பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்’ போன்ற இருகுரல் பாடல்களும், ‘தர்மயுத்தம்’ திரைப்படத்தின் புகழ் பெற்ற ‘ஒரு தங்க ரதத்தில்’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ திரைப்படத்தின் ‘பட்டுவண்ணச் சேலைக்காரி’ போன்ற தனிக்குரல் பாடல்களும் ரஜினிகாந்த்துக்காக வாசுதேவன் பாடிய பல பாடல்களின் உதாரணங்கள். இவற்றுள் ரஜினிகாந்தின் உச்ச நட்சத்திர அந்தஸ்தை உறுதி செய்யும் பாடலாக அவரது ரசிகர்கள் கொண்டாடிய பாடல், ஒரு சாமானியனின் குரலில் ஒலிக்கும் ‘முரட்டுக்காளை’ திரைப்படத்தின் ‘பொதுவாக என் மனசு தங்கம்.’ கிளப்வகை தனிப்பாடல்களில் ரஜினிகாந்தின் மிக முக்கிய பாடலாக இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு பாடலையும் இளையராஜாவின் இசையில் வாசுதேவனே பாடியிருக்கிறார். இன்றைய ரீமிக்ஸ் கலாச்சாரத்தில் சிக்கிச் சீரழிக்கப்பட்டாலும் அந்தப் பாடல் தன் சுயத்தை இன்னும் இழக்கவில்லை என்றே சொல்லவேண்டும். அந்தப் பாடல் ‘அடுத்த வாரிசு’ திரைப்படத்தின் ‘ஆசை நூறுவகை’.

index_02

அடிப்படையில் வாசுதேவனின் குரல் டி.எம்.எஸ், சி.எஸ்.ஜெயராமன் போன்ற நம் முன்னோடி திரையிசைப்பாடகர்களைப் போல கனத்த குரல். இரண்டு ஸ்தாயிகளிலும் தங்கு தடையின்றி பயணிக்கக்கூடிய அந்தக் குரலில் அவர் நவீனமான பாடுமுறையை வெளிப்படுத்தினார். இதனாலேயே மரபான குரலும், நவீனமான விளையாட்டுத்தனமும், துள்ளலும் தேவைப்படும் பாடல்களுக்கு வாசுதேவனை விட்டால் வேறு ஆளே இல்லை என்று சொல்லுமளவுக்கு அவரை உயர்த்தியது. ‘ஆசை நூறுவகை’ போலவே எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு க்ளப் வகைப் பாடல் ‘பாட்டெங்கே’ (பூவிழி வாசலிலே) என்ற பாடல். இப்பாடலின் சரணங்களை மட்டும்தான் வாசுதேவன் பாடியிருப்பார். ஜாஸ் ஃப்யூஷன் வகையறாவைச் சேர்ந்த இப்பாடலில் அவர் வெளிப்படுத்தியிருந்தது முழுக்க முழுக்க மேற்கத்திய ஸ்டைல் சார்ந்ததொரு பாடுமுறையை. வாசுதேவன் பாடும் சரணங்கள், கிட்டத்தட்ட ‘ரிதம் அண்ட் ப்ளூஸ்’ ஸ்டைல் போல மேலுயராத கனத்தோடு இருந்தாலும், “ஏனென்றும் தெரியாது, ஏக்கங்கள் புரியாது”, “வா பூவே வா” போன்ற இடங்களில் அந்தக் குரலின் அழுத்தத்தோடு சேர்த்து அழகான துள்ளலையும் தந்திருப்பார். இப்பாடலின் உயிர்ப்புக்கு வாசுதேவனின் இத்தகைய பாடுமுறை மிக முக்கியமான காரணம். இதைப் போலவே ‘மாமாவுக்கு குடுமா குடுமா’ (புன்னகை மன்னன்) என்ற ராக்-அண்ட்-ரோல் ஸ்டைல் பாடலின் சரணமும் அசாத்தியமானது.

இந்த அநாயசமான குரல்வீச்சுதான் மேற்கத்திய ஸ்டைல், கர்நாடக ராகம் இரண்டையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைத்த முக்கியமான பாடல்களை வாசுதேவனைப் பாடவைக்கும் நம்பிக்கையை இளையராஜாவுக்குத் தந்திருக்கவேண்டும். கடல்மீன்கள் படத்தில் “என்றென்றும் ஆனந்தமே” பாடல் சரசாங்கி ராகத்தில் அமைந்த டிஸ்கோ பாடல். ரிதமும், கிடார் பகுதிகளும் அதற்கொரு தெளிவான மேற்கத்திய சட்டையை மாட்டிவிட்டிருக்கும். டிஸ்கோவுக்கான வழக்கமான எட்டு பீட் வடிவத்தை உபயோகிக்காமல், ஆறு பீட் ரிதத்திலேயே டிஸ்கோவின் எட்டு பீட் உணர்வைத் தந்திருப்பார் இளையராஜா. ‘வாலிபத்தின் ரசனை’ வரிகளில் அதைத் தெளிவாகக் கேட்கமுடியும். இப்படிப்பட்டதொரு முக்கியமான பாடலைப் பாடும்போது ராகபாவத்தை வெளிப்படுத்தும் மெலடி, மேற்கத்தியப் பாடுமுறை இரண்டையும் சிதைக்காமல் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டு. இப்படிப்பட்ட சவாலானதொரு பாட்டை வாசுதேவனிடம் கொடுத்தார் இளையராஜா. பாடலின் ஆரம்பத்தில் வரும் ‘பாபப்ப பாபப்பா’ பிரயோகங்கள், “இசை மழை பொழிந்தது குயிலே” என்ற இடத்தில் ‘குயிலே’யில் வாசுதேவன் வெளிப்படுத்தியிருக்கும் நெளிவு போன்றவற்றை வாசுதேவன் பாடிய விதத்தின் மூலம் இப்பாடலை வெகு சிறப்பான ஒன்றாக்கியது! இதே போன்ற இன்னொரு முக்கியமான ஃப்யூஷன் பாடலான, நெற்றிக்கண் படத்தில் ஜாஸ்-பாப் வடிவில் அமைந்த ‘ராஜா ராணி ஜாக்கி’ என்ற பாடலின் இடையிசையில் வாசுதேவன் மேற்கத்திய சாயல், ஸ்வரம் பாடுவது இரண்டையுமே வெகு அழகாகச் செய்திருப்பார். ‘அஜயா’ என்ற கன்னடப்படத்தில் ‘எல்லா கலைய பல்லே’ என்ற பாட்டில் கர்நாடக சங்கீதம், பாப், டிஸ்கோ என வெவ்வேறு இசைவகைகளைத் தனித்தனியாக ஒவ்வொரு சரணத்தில் பாடிக்காட்டவேண்டிய பாட்டை வாசுதேவனைப் பாடவைத்தார் இளையராஜா.

தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் பெரும்புகழ் பெற்ற ‘ஹரிதாஸ்’ திரைப்படப்பாடலான ‘என்னுடல் தன்னில்’ என்னும் பாடலின் ஒரு பகுதியை ‘எனக்கு நானே நீதிபதி’ என்ற படத்தில் பயன்படுத்தினார் இளையராஜா. ‘அம்மையப்பா’ என்று தொடங்கும் அந்தப் பகுதி ஷண்முகப்ரியா ராகத்தில் அமைக்கப்பட்ட ஒன்று. வேடிக்கையான சிச்சுவேஷனுக்கு சாஸ்திரிய சங்கீதமாக அமைந்த ‘ஹரிதாஸ்’ படப்பாடலை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஓர் அசாத்திய துணிச்சல் வேண்டும். காரணம் அந்தப் பாடலுக்கு மெட்டமைத்தவர், ‘இசைமேதை’ என்றழைக்கப்பட்ட ஜி.ராமநாதன். பாடலைப் பாடியவர், ஒப்பற்ற குரலுக்குச் சொந்தக்காரரும், ‘ஏழிசை மன்னர்’ என்று அழைக்கப்பட்டவருமான எம்.கே.தியாகராஜ பாகவதர். பாகவதருக்கு இணையாக அந்த உச்சஸ்தாயியில் பிசிறில்லாமல் பாட மலேஷியா வாசுதேவனையே தேர்ந்தெடுத்திருந்தார் இளையராஜா. இதற்குக் காரணம், இப்பாடலுக்கு அழுத்தமான, சுருதி சுத்தமாக ஸ்வரங்களைப் பேசக்கூடிய, மரபிசையை லாவகமாகப் பாடும் பாடகர் தேவை. அதே சமயம், முற்றிலும் மரபிசையாக்கிவிடாமல் பாட்டுக்குரிய விளையாட்டுத்தனமும் தேவை. அதற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போனவர் வாசுதேவன். இளையராஜா தன் குரல் மேல் வைத்திருந்த நம்பிக்கையை வாசுதேவன் காப்பாற்றினார். இந்த காம்பினேஷனில் வரக்கூடிய, சாஸ்திரிய சங்கீத தொனியில், ராகங்களில் அமைந்த துள்ளலான பாடல்களைப் பெரும்பாலும் வாசுதேவனையே பாடவைத்தார் இளையராஜா. மணிரங்கு ராகத்தில் அமைந்த ‘சுகராகமே’ (கன்னிராசி), ஆரபி ராகத்தில் அமைந்த ‘ஆசைக்கிளியே’ (தம்பிக்கு எந்த ஊரு), சிம்மேந்திர மத்யமத்தில் அமைந்த ‘மதனமோக ரூப சுந்தரி’ (இன்றுபோய் நாளை வா), சாரங்கா ராகத்தில் அமைந்த ‘காதலில் மாட்டாமல் உலவுகின்ற காளை அவன்’ (பார்வதி என்னைப் பாரடி), ஹரிகாம்போதி ராகத்தில் அமைந்த ‘காதலிச்சுப் பாரு கிளியே’ (தங்கத்தாமரைகள்), போன்றவை அவற்றுக்கு சிறப்பான உதாரணங்கள்.

ஒரு பக்கம் ரஜினிக்காகப் பாடிய துள்ளலான பாடல்கள், இன்னொரு பக்கம் ‘கோடைகாலக் காற்றே’ (பன்னீர் புஷ்பங்கள்), ‘குயிலுக்கொரு நிறமிருக்கு’ (சொல்லத் துடிக்குது மனசு), ‘ஒரு தங்க ரதத்தில்’ (தர்ம யுத்தம்), ‘ஏ ராசாத்தி’ (என் உயிர்த்தோழன்) போன்ற மெலடிப் பாடல்கள், ‘பாட்டெங்கே’, ‘ஆசை நூறு வகை’ போன்ற மேற்கத்திய ஸ்டைல் பாடல்கள், ’என்றென்றும் ஆனந்தமே’, ‘ராஜா ராணி ஜாக்கி’ போன்ற ஃப்யூஷன்கள், ‘கட்டிவச்சுக்கோ எந்தன் அன்பு மனச’ (என் ஜீவன் பாடுது), ‘ராத்திரியில் பாடும் பாட்டு’ (அரண்மனைக் கிளி), ‘கம்மாக்கரை ஓரம்’ (ராசாவே உன்னை நம்பி) போன்ற கிராமியப்பாடல்கள், எண்ணற்ற கேலிப்பாடல்கள் என வாசுதேவன் பாடாத பாடல்வகையே இல்லை. இதனாலேயே வாசுதேவன் வெறும் டப்பாங்குத்துப் பாடல்கள் மூலம் வீணடிக்கப்பட்டார் என்றோ, ‘அவர் வெறும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்தானே?’ என்றோ பேசுபவர்களைப் பார்த்து எனக்கு சிரிப்பாக இருக்கும்.

1

ராகங்களைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் எனது இசையாசிரியர் கிருஷ்ணன் அவர்களிடம் இளையராஜாவின் பாடல்களின் மெட்டுக்களை நான் ஹார்மோனியத்தில் வாசித்துக் காண்பித்து கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். திரைப்படங்கள் பார்க்கும் பழக்கமில்லாத எனது ஆசிரியர் ராகங்களை மட்டும் சொல்லி விட்டு விலகிக் கொள்வார். அந்தந்தப் பாடலின் விசேஷ குணங்களைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொள்வது எனது இசையாசிரியரின் கடைக்குட்டி மகனான பாலாஜியிடம்தான். பாலாஜியும், அவரது மூன்று சகோதரர்களும் வயலின் கலைஞர்கள். இன்றைக்கும் ‘திண்டுக்கல் அங்கிங்கு’ மெல்லிசைக் குழுவில் வயலின் வாசித்து வருபவர்கள். பாலாஜியின் மூத்த சகோதரரான தியாகு அண்ணன் வங்கியில் பணியாற்றிக் கொண்டே கச்சேரிகளிலும் வாசித்து வருகிறார். சகோதரர்கள் அனைவருமே தடுக்கி விழுந்தால் ஏதாவது ராகத்தில்தான் விழுவார்கள். எங்காவது இடித்துக் கொண்டாலும் அது ஏதாவதொரு தாளமாக இருக்கும்.

பாலாஜி வயலினிலும், நான் ஹார்மோனியத்திலும் வாசுதேவனின் பல பாடல்களை வாசித்துப் பார்த்து வியந்திருக்கிறோம். அவற்றுள் ‘கரும்பு வில்’ திரைப்படத்தின் ‘மலர்களிலே ஆராதனை’யும், ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் ‘கோயில்மணி ஓசைதன்னை’யும், ‘சட்டம் என் கையில்’ திரைப்படத்தின் ‘ஆழக்கடலில் தேடிய முத்து’வும், ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் ‘மாப்பிள்ளைக்கு மாமன் மனசு’ பாடலும் தவறாது இடம்பெறுபவை. இதில் ராகங்களின் அடிப்படையிலான பாடல்கள் அதிகம் இடம்பெற்றதை தற்செயலாக ஒருமுறை கவனித்தோம். சண்முகப்ரியாவின் அட்டகாசப் பாடலான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தின் ‘ஊருவிட்டு ஊரு வந்து’, கீரவாணியில் அமைந்த ‘தூறல் நின்னு போச்சு’ திரைப்படத்தின் ‘தங்கச் சங்கிலி’, ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் ‘மலர்களே நாதஸ்வரங்கள்’ என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

கல்யாணி ராகத்தில் எத்தனையோ திரையிசைப்பாடல்கள் உள்ளன. ‘ஒருவர் வாழும் ஆலயம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மலையோரம் மயிலே’ என்னும் இருகுரல் பாடல் கல்யாணி ராகப்பாடல்களில் வித்தியாசமான ஒன்று. சங்கீதமும், நடனமும் கற்ற ஒரு பெண்ணும், ஒரு சாமானியனும் பாடுவதாக அந்தப் பாடலை அமைத்திருப்பார் இளையராஜா. கல்யாணி ராகத்தின் பிடிமானங்களுடன் ஜதியும் சொல்லி சர்வலட்சணமாக ஒருபுறம் சித்ரா பாட, மறுபுறம் ஆன்மாவிலிருந்து அநாயாசமாகப் பாடும் ஆண்குரலுக்குச் சொந்தக்காரர் வாசுதேவன். அந்தப்பாடலை ரொம்பவும் வெகுளித்தனமாக ஆரம்பிப்பார் வாசுதேவன். அவரிடமிருந்து பாட்டை வாங்கி சித்ரா எங்கோ கொண்டு செல்ல, அவ்வளவுதான் வாசுதேவன் என கேட்போருக்குத் தோன்றும். எல்லாம் சரணம் வரைக்கும்தான். சரணத்தில் ‘மாநிறப்பூவே யோசனை ஏனோ, மாமனைத்தானே சேரணும் நீயே’ என்னும் வரியைக் கேட்டுப் பாருங்கள். அந்த வரிக்குப் பின் சித்ராவின் குரல், வாசுதேவனின் ஆத்மார்த்தமான பிடிக்குள் சிக்கி சரணடைந்திருப்பது கண்கூடாக நமக்கு தெரியும்.

இவைபோக வித்தியாசமான வாசுதேவனின் பாடல்களின் பக்கமும் நாங்கள் கவனம் செலுத்துவதுண்டு. ‘பொண்ணுக்கேத்த புருஷன்’ திரைப்படத்தில் பி.சுசீலாவுடன் இணைந்து வாசுதேவன் பாடிய ‘சாரங்கதாரா’ எனும் பாடல் முக்கியமானது. மற்றொன்று அதிகம் அறியப்படாத ‘வாசுகி’ திரைப்படத்தில் மால்குடி சுபாவுடன் வாசுதேவன் இணைந்து பாடிய ‘காதல் நிலவே’ என்னும் பாடல்.

ஒருமுறை இப்படி ஒவ்வொரு பாடலாக நானும், பாலாஜியும் வாசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பாலாஜியின் மூத்த சகோதரரான தியாகு அண்ணன் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார். தயக்கத்தில் நாங்கள் கொஞ்சம் நெளிய, ‘ஏ, என்னையும் ஆட்டைல சேத்துக்கிடுங்கடே’ என்றார் தியாகு அண்ணன். வாசுதேவனின் பாடல்களை ஆரம்பகாலத்திலிருந்து நினைவுகூர்ந்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“சாமானியன் கொரல் பாத்துக்கோ வாசுதேவனுக்குள்ளது. பதினாறு வயதினிலே படத்துலேருந்துதான் அவனுக்கு சூடு புடிச்சுது. தாயளி அஞ்சு பாட்டுல மூணு அவங்குள்ளதுதானெ. அப்புறம் வண்டி நிக்கவே இல்ல. நாலுகால் பாச்சல்தான். ஒரு கோட்டிக்காரப்பய பாடுத மாதிரி மோசமா பாடச் சொன்னா ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாட்ட நல்லா பாடித் தொலச்சுட்டான் வாசுன்னு எளையராஜாவே தந்தி பேப்பர் வரலாற்றுச் சுவடுகள்ல சொல்லியிருந்தாரு, பாத்தியா. அதான் விடாம ரஜினிலே இருந்து ராமராஜன் வரைக்கும் பாட வச்சாரு. வேடிக்கைப் பாட்டும் பாடவச்சிருக்காரு. சீரியஸாவும் பாட்டு குடுத்திருக்காரு. பாலசுப்ரமணியத்துக்கு சமமா இல்லென்னா ஒருத்தன் பாடி நிக்க முடியுமா சொல்லு, பாப்போம்” என்றார்.

தியாகு அண்ணன் பேசப் பேசக் கேட்டுக் கொண்டேயிருக்கத் தோன்றியது. ஒரு கட்டத்துக்கு மேல் அமைதியாகிவிட்டார். மனதுக்குள் ஏதோ வாசுதேவனின் பாடல் ஓடியிருக்கவேண்டும்.

பிறகு பாலாஜியிடமிருந்து வயலினை வாங்கி ஹரிகாம்போதி வாசிக்க ஆரம்பித்தார். மெல்ல ஹரிகாம்போதி ஒரு மலேஷியா வாசுதேவன் பாடலானது. ‘தங்கத்தாமரைகள்’ திரைப்படத்தின் ‘காதலிச்சுப் பாரு கிளியே’ பாடல்தான் அது. அந்தப் பாட்டின் சரணத்தில் ‘காதல்வந்த காளையெல்லாம் கன்னியரைப் பார்த்தால் கண்சிமிட்ட நேரமின்றி ஆசைகளைச் சேர்ப்பார்’ என்ற வரியில் ‘ஆ… ஆ…சைகளைச் சேர்ப்பார்’ என்ற இடத்திலுள்ள பிடிமானத்தை வாசிக்கும்போது கண்ணால் அதை எங்களுக்குக் காண்பித்துக்கொண்டே ‘வாசுதேவன் இந்த எடத்த என்னமா பாடியிருப்பாங்கெ’ என்றார். அந்த இடம் கடந்தவுடன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராய் வயலினை தன் தம்பியிடம் கொடுத்துவிட்டு எழுந்துகொண்டார்.

‘சே, சண்டாளப்பாவி. மனசாரல்லா பாடியிருப்பான்’.

தியாகு அண்ணன் தனக்குத் தானே சொல்வதுபோல்தான் இருந்தது.

பிறந்த நாள்

எந்த ஒரு பள்ளியிலும் யூனிஃபார்ம் அணிந்த பிள்ளைகளுக்கு மத்தியில் யாராவது ஒரு பிள்ளை வண்ண உடை அணிந்து காணப்பட்டால் அது பிறந்தநாள்குழந்தை என்று எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். வாய் நிறைய சிரிப்பும், கையில் சாக்லெட் டப்பாவுமாக அன்றைக்கு முழுக்க அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும். ரொம்பவும் வயதில் சிறியதாக இருந்தால் சாக்லெட் டப்பாவில் பாதியை அதுவே காலி பண்ணிவிடும்.

‘பாப்பா, இன்னைக்கு ஸ்கூல்ல எல்லாருக்கும் சாக்லெட் குடுத்தியா? டப்பா காலியா இருக்கு?’

‘கௌஷிக் மூணு சாக்லெட்ட புடுங்கிட்டான்ம்மா.’

‘அதுசரி. நீ எல்லாருக்கும் குடுத்தியா?’

‘சி.வசுமதி வாங்கி தின்னுட்டு நீ குடுக்கவே இல்லெடின்னா.’

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆளாளுக்கு, ஊர் ஊருக்கு மாறுபடுகின்றன. திருநெல்வேலிப் பகுதியில் முதல் பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளை (அவை எங்கே கொண்டாடுகின்றன?) அவர்களின் நினைவுக்குப் புரியாமலேயே பாடாய்ப்படுத்தி பம்பரமாக ஆக்குவார்கள். முதல்நாள் இரவே வெளியூரிலிருந்து உறவினர்கள் வந்து இறங்கிவிடுவார்கள். வீட்டிற்குள்ளே நுழைந்ததும் செருப்பைக் கிழற்றிப் போட்டுவிட்டு முதல்வேலையாக தொட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை ஈவிரக்கில்லாமல் தூக்கிக் கொஞ்சுவார்கள். அதிலும் சில முரட்டு ஜென்மங்கள் அரைத்தூக்கத்திலிருக்கும் குழந்தையை தூக்கி தட்டாமாலை சுற்றுவார்கள்.

‘ஏல, யாரு வந்திருக்கா பாத்தியா? கொங்கராயக்குறிச்சி அத்த. சொல்லு… கொங்..கரா…யக்..கு..றி..ச்சி அத்த்த்த.’

கொங்கராயக்குறிச்சி என்னும் ஊரின் பெயரை அந்த ஊரின் ஊராட்சிமன்றத் தலைவருக்கேச் சரியாகச் சொல்லவராது. குழந்தை அலறி அழுவதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், ‘அத்த லேட்டா வந்திருக்கேன்னுல்லா கோவப்படுதான்’ என்பார்கள்.

மறுநாள் காலையிலேயே இரண்டு வேன்களில் ஆட்கள் சாமான்களை ஏற்றத் தொடங்குவார்கள். பித்தளை தாம்பாளம், போணிச்சட்டி, தூக்குச்சட்டிகள், எவர்சில்வர் தம்ளர்கள், தட்டுகள், தேங்காய், பழங்கள், மல்லிகை, பிச்சி, கதம்பப் பூமாலைகள், ஒயர்க்கூடைகள், புளியோதரை, எலுமிச்சை, தயிர்சாதத் தயாரிப்புகள், காய்ச்சி ஆறவைத்த தண்ணீர் அடைத்த பாட்டில்கள், சின்ன ஃபிளாஸ்குகள் இவற்றுக்கு மத்தியில் இன்னும் தூக்கக் கலக்கத்தில் உள்ள பிறந்தநாள் குழந்தையும் சிணுங்கிக்கொண்டு யார் மடியிலோ உட்கார்ந்திருக்கும்.

‘எனக்கு, என் தங்கச்சிக்கு, கடைக்குட்டித்தம்பிக்கு அப்புறம் என் பயல்களுக்கு எல்லாருக்கும் திருச்செந்தூர்லதான் மொட்ட போட்டு காது குத்துனது. எங்க அம்மைக்கும் அங்கெதானாம்.’

லட்சத்து சொச்ச தடவையாக ஒரு தாத்தா சொல்லுவார். அநேகமாக அதை எல்லோரும் ஆமோதிப்பார்கள்.

‘ஏ, போற வளில சந்திப்பிள்ளையாருக்கு ஒண்ணு, அப்பொறம் பாளயங்கோட்ட தாண்டும் போது செரட்ட பிள்ளையாருக்கு ஒண்ணு. வெடலய மறந்துராதீங்கடே.’

‘அதெல்லாம் கணேசன் கையிலயே ரெடியா வச்சிருக்கான்.’

கையில் இரண்டு தேங்காய்கள் உள்ள பையுடன் பின்சீட்டில் வாயெல்லாம் பல்லாக கணேசன் உட்கார்ந்திருப்பான். அநேகமாக அவன் திருச்செந்தூர் செல்வது அதுதான் முதல் முறையாக இருக்கும்.

பாளையங்கோட்டை தாண்டியவுடனேயே ஒருவர் சொல்லுவார்.

‘ஏ, அந்த டேப்பத்தான் தட்டி விடுங்களேன். பாட்ட கீட்ட கேட்டுட்டு கொஞ்சம் சந்தோசமாத்தான் போவோமெ. செத்த சவம் மாதிரில்லா உக்காந்துருக்கொம்.’

‘நல்ல காரியத்துக்கு போகும்போது ஒங்க அத்தான் வாயில வார வார்த்தய பாத்தியா? தீயத்தான் வைக்கணும் அவர் வாயில.’

ரகசியமாக அருகிலிருக்கும் பெண்ணிடம் சொல்வாள் அவர் மனைவி.

விரல்சூப்பித் தூங்க ஆரம்பித்திருக்கும் குழ்ந்தையின் தலைக்கு மேலே உள்ள ஸ்பீக்கர் ‘என் உச்சி மண்டைல கிர்ர்ர்ர்ர்ர்ருங்குது’ என்று அலற ஆரம்பிக்க, குழந்தை திடுக்கிட்டு எழுந்து ஸ்பீக்கருக்குப் போட்டியாகக் கதறும். அதன் பெரியம்மையோ, சித்தியோ கோபம் கொள்வாள். என்ன இருந்தாலும் ஒரு தாயில்லையா?

‘எப்பா, அந்த பாட்ட மாத்துங்க. பிள்ளைக்கு புடிக்கல. அளுதான் பாருங்க.’

’புலி உறுமுது புலி உறுமுது’ பாடலுடன் போட்டி போடமுடியாமல் குழந்தை விக்கித்து விசும்ப, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியப்பா முறுக்கு பொட்டலத்தைப் பிரித்து ஆளுக்கொன்றாய் விநியோகித்துவிட்டு மிச்சத்தை மடியில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாய் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடியே தின்ன ஆரம்பிப்பார்.

ஒருமணிநேரப் பயணத்தில் பாட்டையும் ஒலிக்கவிட்டு பெரியவர்களும் இரைச்சலாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். சொல்லமுடியாத துயரத்தில் குழந்தை அழும்போதெல்லாம் இருக்கவே இருக்கிறது, புட்டிப்பால். வலுக்கட்டாயமாக வாயில் திணிப்பார்கள்.

திருச்செந்தூரில் போய் இறங்கும்போதே மற்ற வேன் வந்துவிட்டதா என்ற கவலையில் சுற்றுமுற்றும் பார்ப்பார்கள்.

‘பகவதி அந்த வண்டிலதானே வாரான்? அந்த மூதிக்கு ஒரு ஃபோன போடுங்க. எங்கன வந்துக்கிட்டிருக்கானுவொ. இதுக்குத்தான் நான் அந்த வண்டில வந்திருக்கணும்ங்கென்.’

அந்த வேன் வந்து நிற்பதற்குள்ளாக அதிலிருந்து வீடியோ மற்றும் ஃபோட்டோகிராஃபர் குதித்து ஓடிவருவார்கள்.

‘ஏ, நீங்க இந்த வண்டில வந்திருக்கலாம்லா? எவ்வளவு நேரம் நிக்கோம்?அங் அங்… எடுங்க.’

பின்மண்டையிலிருக்கிற ஒன்றிரண்டு முடியை இழுத்து வழுக்கைத் தலையை மறைக்கும் வண்ணம் சீவியவாறே கேமராவை முறைத்துப் பார்ப்பார் ஒரு மாமா.

’எல, அய்யா. எந்தி. திருச்செந்தூர் வந்தாச்சுல்லா. அன்னா… அங்கெ பாரு கடலு. என்ன பெத்த அய்யால்லா. எந்தி எந்தி.’

அப்போதுதான் தூங்க ஆரம்பித்திருக்கும் குழந்தையின் கன்னத்தைத் தட்டி எழுப்புவார்கள்.

1வெளிப்பிரகாரத்தில் நடந்துவரும்போது கடல்காற்று முகத்தில் அடிக்க, பெரியவர்களுக்கே தூக்கம் வரும். குழந்தைக்குக் கேட்பானேன்? முடியெடுக்கும் இடத்துக்கு வந்து சேர்வதற்குள் அதை மாற்றி மாற்றி வாங்கி ஆளாளுக்குக் கொஞ்சி அதன் கொஞ்சநஞ்சத் தூக்கத்தையும் தொலைப்பார்கள். அழுகையின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் குழந்தை, மொட்டையடிக்கப்போகிறவரைப் பார்த்தவுடன் நிச்சயம் வெடித்து அழத்துவங்கும். ஜடாமுடியும், பெரிய மீசையுமாக இருக்கும் அவர் சிரித்தபடியே , ‘அளக்கூடாது. ஒங்க பேரென்ன ராசா? என் தங்கம்’ என்று வரவேற்பார். குழந்தையின் தாய்மாமனின் மடியில் வைத்து சரட் சரட்டென்று பிஞ்சுத்தலையை மழிக்கத் துவங்கும்போது குழந்தையுடன் சேர்ந்து அருகில் நின்று கொண்டிருக்கும் அதன் தாயும் கண்ணீர் சிந்துவாள். மற்ற உறவினர்கள் காற்று புக இடமில்லாமல் நெருக்கமாக எட்டிப்பார்த்தபடி சூழ்ந்து நிற்பார்கள். ஒருசிலர் கையில் கிலுகிலுப்பை, பலூன், விசில் போன்றவற்றை வாங்கி வந்து அழுது கொண்டிருக்கும் குழந்தையின் முன்னால் வந்து அதன் தாய்மாமனின் காதில் ஊதுவார்கள். தாங்கமாட்டாமல் அவனும் அழ ஆரம்பிப்பான்.

ஒருமாதிரியாக மொட்டை போட்டு முடித்தபின் அழ அழ பிள்ளையைக் குளிப்பாட்டி, மொட்டைத்தலையில் சந்தனத்தை அப்புவார்கள். தாங்கமுடியா எரிச்சலில் குழந்தை கதறத்தொடங்க, அடுத்து காதுகுத்து என்னும் ஆபத்து காத்திருக்கும். இப்போதும் தாய்மாமன் மடிதான் பிள்ளையின் இருக்கை. நாக்கைக் கீழ் உதட்டின் மீது நீட்டியவாறே நாசூக்காக காது குத்த முனைவார் ஆசாரி. எத்தனையோ பிள்ளைகளுக்குக் காது குத்திய அனுபவம் காரணமாக நிதானமாக அதேசமயம் கண்ணிமைக்கும் நேரத்தில் வேலையை முடித்துவிடுவார். இப்போது பயலை சமாதானப்படுத்த பிளாஸ்டிக் நாதஸ்வரம் ஒன்றை வாங்கிவந்து தாய்மாமனின் காதில் வசமாக ஊதுவார் ஒருவர்.

அடுத்து சந்நிதானம் நோக்கிச் செல்வார்கள். கூட்ட நெரிசலில் வேர்த்து விறுவிறுத்து அழுகையும், நடுக்கமும், தூக்கமுமாக இருக்கும் குழந்தையை செந்திலாண்டவன் சன்னதியின் முன் நின்றுகொண்டு ‘எல, அங்கெ பாரு முருகரு. எங்கெ சொல்லு.

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்

சொல்லுலெ. சொல்லுதானா பாரென்.’

ஒருவயதுக் குழந்தையின் கையைப் பிடித்துக் கும்பிட வைத்து நச்சரிப்பாள் அத்தை. அவனுக்கு மட்டும் நன்றாகப் பேசத் தெரிந்திருந்தால் நிச்சயம் அவனது அப்போதைய மனநிலைக்கு பாடாய்ப்படுத்தும் அந்த அத்தையின் தாயாரை வசை பாடியிருப்பான்.

அர்ச்சனை முடிந்து சாமிகும்பிட்டுவிட்டு விடுதிக்கு வந்து பந்தி விரித்து, கொண்டு வந்த எலுமிச்சை, புளியோதரை, தயிர்சாத வகையறாக்களைப் பரிமாறி சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

‘ஏட்டி, ஊறுகாய மறந்துட்டேளா? ஒங்களையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்னன்னு கேக்கென்?’

ஒரு ஓரத்தில் அமர்ந்து பால்குடிக்க மறுக்கும் பிறந்தநாள் குழந்தைக்கு புகட்ட முயன்றுகொண்டிருப்பாள் அதன் தாய்.

சாப்பிட்டு முடிந்து ஆளாளுக்கு ஊர்வம்பு பேசிக் கொண்டே கிளம்ப ஆயத்தமாகும் போது ஒருசிலர் கடல்நீராட சென்றிருப்பார்கள்.

‘எல, ஒங்க அத்தான எங்கெ காணோம்?’

‘திருச்செந்தூர்வரைக்கும் வந்துட்டு கடலாடாம போலாமாய்யா? அதான் அவாள் துண்டக் கட்டிட்டு போயிருக்கா.’

‘ஏ, அவாள் பொத்தாமரைக் கொளத்துல முங்கு போடும்போதே கூட தொணைக்கு நாலுபேரு நிக்கணும். கடல் இளுத்துட்டு போயி எலங்கைல கொண்டு தள்ளீரும். சிங்களன் பயந்துரப் போறான். போயி பாருங்கடே.’

திருச்செந்தூரில் சாயங்காலம் உளுந்தவடை, வாழைக்காய் பஜ்ஜி சகிதம் காப்பி குடித்து விட்டு இரண்டு வேன்களும் கிளம்பும் போது பொழுதுசாயத் தொடங்கியிருக்கும். எல்லோர் தலைகளும் தூக்கத்தில் நடனமாடியபடி பயணிக்க பிறந்தநாள்க்காரன் காய்ந்த சந்தன மொட்டைத்தலையுடன் தன் தாயின் மடியில் கைசூப்பியபடி கொட்டக் கொட்ட முழித்திருப்பான்.

இப்போது ஆங்கிலமுறைப்படி கேக் வெட்டும் கலாச்சாரம் வந்துவிட்டது. ஒருவயது குழந்தையின் பிறந்தநாளுக்கு பேனரெல்லாம் வைக்கிறார்கள். ஒருபுறம் அல்டிமேட் ஸ்டார் ஃபுல்சூட்டில் அட்டகாசமாகச் சிரிக்க, இன்னொருபுறம் இளையதளபதி வேகமாக ஓடி நம்மீது பாய வருகிறார். நடுவில் பிறந்தநாள் குழந்தை மலங்க மலங்க முழித்துக் கொண்டிருக்கிறது.

பிறந்தநாள் குழந்தையே நம்மை வரவேற்பதுபோல அழைப்பிதழ்கள் ஆங்கிலத்தில் அச்சடிக்கப் பட்டு விநியோகிக்கப் படுகின்றன. வசதியுள்ளவர்கள் ஒரு ஹோட்டலின் ஹாலை வாடகைக்கு எடுத்து கொண்டாடுகின்றனர். பெரிய ஸ்பீக்கர்களில் சத்தமாக சின்மயி, தேவன், ராகுல் நம்பியார் போன்றவர்கள் நம்மை வரவேற்கிறார்கள். பெரிய கேக்கின் முன் குழந்தையைத் தூக்கி வந்து, மெழுகுவர்த்தி ஏற்றி, மறுநிமிடமே அணைக்கச் செய்து, பெரியவர்களே பயப்படும்வண்ணம் படார் என்ற சத்தத்துடன் ஒரு வஸ்து வெடித்து ஜிகினாக்கள் வானிலிருந்து நம் தலையை நனைக்கின்றன.

ஹேப்பி பெர்ர்ர்ர்ர்த் டேஏஏஏஏ டூஊஊஊ யூ,
ஹேப்பி பெர்ர்ர்ர்ர்ர்த் டேஏஏஏ டூஊஊஊ யூ
ஹேப்பி பெர்ர்ர்ர்ர்ர்த் டேஏஏஏ டூஊஊஊஊஊஊஊ

(ஏட்டி கொளந்த பேரு என்ன?)

கேக்கை வெட்டி ஆளாளுக்கு குழந்தையின் நாக்கில் பேருக்கு தொட்டுத் தடவி விட்டு, பெரிய பாளத்தை கையில் எடுத்துக்கொண்டு ஒதுங்கி விடுகிறார்கள். அதன் பிறகு குழந்தையின் ஒரு வயது பிறந்தநாளை முன்னிட்டு மதுபான மற்றும் அறுசுவை விருந்து.

எல்லோரும் சாப்பிடும்போது, அழுதுகொண்டிருக்கும் குழந்தையை வேலைக்காரச் சிறுமியிடம் கொடுத்து பார்த்துக்கொள்ளச் சொல்லுவாள் அதன் தாய்.

‘செல்வி, கொஞ்சம் காத்தாட வெளியெ வச்சிரியென். புளுக்கம் தாங்காம அளுதா பாரு.’

மூலக்கரைப்பட்டியிலிருந்து வீட்டு வேலைக்காக வந்திருக்கும் செல்வி குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து சாலையில் செல்லும் கார்களைக் காண்பிப்பாள். பிறப்பதற்கு முன்பே தகப்பனையும், பிறந்தவுடன் தாயையும் முழுங்கிய செல்விக்கு அவளது பிறந்த நாள் நிச்சயம் தெரிந்திருக்காது.

புத்தகம்

இந்த புத்தகக் கண்காட்சியையொட்டி ‘சொல்வனம் பதிப்பகம்’ மூலம் இரண்டு புத்தகங்கள் வெளியாகவிருக்கின்றன. ஒன்று திரு. ராமன்ராஜா அவர்கள் எழுதிய ‘சிலிக்கான் கடவுள்’ கட்டுரைத் தொகுப்பு. மற்றொன்று சுகா எழுதிய ‘தாயார் சன்னதி’ கட்டுரைத் தொகுப்பு.

புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் “உடுமலை.காம்” அரங்கில் (அரங்க எண்: 302) விற்பனைக்குக் கிடைக்கின்றன.
தாயார் சன்னதி – சுகா – 256 பக்கங்கள் – ரூ.150
சிலிக்கான் கடவுள் – ராமன் ராஜா – 160 பக்கங்கள் -ரூ 100