post

தி.க.சி இல்லாத திருநவேலி . . .

இருபத்திரண்டாண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்த புதிதில் மாதத்துக்கு ஒரு முறையாவது திருநவேலி சென்றுவிடுவது வழக்கம். பின் படிப்படியாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எனக் குறைந்து, இப்போது வருடத்துக்கு ஒருமுறை செல்வதே அபூர்வமாகி விட்டது. நண்பன் குஞ்சுவின் மகனது பூணூல் கல்யாணத்துக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

‘எல! கண்டிப்பா நான் வரணுமா?’

தவிர்த்துப் பார்த்தேன்.

‘என் வீட்ல நடக்கிற மொத விசேஷம். இத விட்டா இந்தப்பய கல்யாணந்தான். இதுல நீ இல்லேன்னா நல்லா இருக்குமா? நீயே யோசிச்சுப் பாரு’.

வயதும், அனுபவமும் குஞ்சுவின் நிதானமானப் பேச்சில் தெரிந்தது. தட்ட முடியவில்லை.

கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகளுக்குப் பிறகு பேரூந்தில் திருநவேலி பயணம். வழக்கமாக எனது பயணங்களுக்கான டிக்கெட் போடும் ப்ரொடக்‌ஷன் மேனேஜர் ஜே.கே இந்த முறை ரயில் டிக்கட்டில் கோட்டை விட்டுவிட்டார்.

‘மல்டி அக்ஸில் பஸ், ஸார். சௌரியமா இருக்கும். கோயம்பேடுல நைட் பத்து மணிக்கு எடுத்து, காலைல ஆறு மணிக்குல்லாம் நம்மூர்ல கொண்டு எறக்கீருவான்’.

மல்டி அக்ஸில் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிலிருந்து வெளியே வரவே பதினொன்றரை மணி ஆயிற்று. ஜே.கே சொன்ன மாதிரி பயணம் சௌரியமாக இருக்கும் என்பதற்கு முதல் அறிகுறியாக பஸ்ஸில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் போட்டார்கள். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த புஷ்டியான இளைஞர், வாய் நிறைந்த பாக்குடன் திரைப்படத்தை ரசித்துப் பார்த்தபடி, அவ்வப்போது என் தொடையைத் தட்டிச் சிரித்து மகிழ்ந்தவண்ணம் இருந்தார். அலுப்பும், சலிப்பும் தூக்கத்தை வரவழைக்க, என்னையறியாமல் உறங்கிப் போனேன். சொப்பனத்தில் சிவகார்த்திகேயனும், உங்கள் சத்யராஜும் சுந்தரத் தெலுங்கில் ஏதோ ஹாஸ்யமாகச் சொல்லிவிட்டு, அவர்களே சிரித்தார்கள். மேளம் முழங்க சாமி சப்பரம் ஒன்றை ஆளோடு ஆளாகச் சுமந்து செல்கிறேன். அழுகிய குல்கந்து வாசனை மூக்கில் அடிக்க, கடுமையாக தோள்வலித்தது. அரைத்தூக்கத்தில் முழித்துப் பார்த்தால், பக்கத்து இருக்கை இளைஞர், என் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.

காலை எட்டே முக்காலுக்கு திருநவேலியில் சென்று இறங்கும் போது ஜே.கே ஃபோன் பண்ணினார்.

‘ஸார்! எத்தன மணிக்கு வீட்டுக்குப் போனீங்க?’

oOo

குளித்து முடித்து அப்பாவுடன் காலை உணவைச் சாப்பிட்டு முடிக்கும்போது மீனாட்சி வந்தான்.

‘போவோமால?’

அம்மன் சன்னதியிலிருந்து பைக்கை ஸ்டார்ட் பண்ணும் போது மீனாட்சி கேட்டான்.

‘எங்கே சித்தப்பா போக?’

வழக்கமாக முதல் சோலியாக தி.க.சி தாத்தாவைப் பார்க்கச் செல்வேன்.

‘எங்கெயாவது போ’.

கொஞ்சம் கடுமையாகச் சொன்னேன். கீழப்புதுத் தெரு வழியாகப் போய், தெற்குப் புதுத் தெருவுக்குள் நுழைந்து, வாகையடி முக்கைத் தாண்டும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சந்திப்பிள்ளையார் கோயிலை நெருங்கும் போதே தொண்டை அடைத்தது. வண்டி தானாக சுடலைமாடன் கோயில் தெருவுக்குள் சென்றது. தாத்தாவின் வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி, இறங்கும் போது மீனாட்சியின் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்தேன். தாத்தாவின் வீடு இருக்கும் வளவுக்குள் நுழையும் போதே, மனம் படபடத்தது. வழக்கமாக நான் செல்லும் போது, வாசலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டோ, படித்துக் கொண்டோ இருக்கும் தாத்தா, நிமிர்ந்து பார்த்து ‘வாருமய்யா’ என்று உரக்கச் சொல்லி சிரிப்பார். தாத்தா உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு அருகே உள்ள மரத்தூணில் கட்டப்பட்டிருந்த கொடியில் சாயத்துண்டுகள் கொடியில் காய்ந்து கொண்டிருந்தன. பூட்டப்பட்டிருந்த அந்தக் காலத்து கனத்த மரக்கதவுக்கு முன்னே உள்ள படியில் சிறிது நேரம் நானும், மீனாட்சியும் உட்கார்ந்திருந்தோம். பழைய புத்தகங்களின் வாசனை, பூட்டியிருந்த அந்த வீட்டுக்குள் இருந்து வந்தது.

‘தாத்தா வாடை அடிக்கி. கவனிச்சேளா, சித்தப்பா?’

மீனாட்சி கேட்டான்.

தி.க.சி தாத்தாவின் வாசனையும், புத்தகங்களின் வாசனையும் ஒன்றுதான் என்பதை புத்தகங்களே படிக்காத மீனாட்சி சொன்னதில் ஆச்சரியமில்லை. அவன் தாத்தாவைப் படித்தவன். தாத்தாவின் இறுதி நாட்களில் அவர் மனதுக்கு நெருக்கமாக இருந்த வெகுசிலரில் அவனும் ஒருவன்.

சுடலைமாடன் கோயில் தெருவிலிருந்து வெளியே வரும்போது மனசு வெறுமையாகித் துப்புரவாகத் துடைத்த மாதிரி இருந்தது. எதுவுமே பேசாமல் பைக்கை குறுக்குத்துறைக்கு விட்டான், மீனாட்சி. சாலையோர மருதமரங்களும், வயல்வெளியும் சூழ்ந்த குறுக்குத்துறை ரோட்டில் ஆங்காங்கே புதிய கட்டிடங்கள், வேறு ஏதோ அசலூருக்கு வந்துவிட்டோமோ என்று குழம்ப வைத்தன. சிட்டி நர்சரி பள்ளி, பூமாதேவி கோயிலைத் தாண்டி, ரயில்வே க்ராஸ்ஸிங்கைக் கடந்தவுடன், பழமையும், பாரம்பர்யமும் நிறைந்த குறுக்குத்துறை தென்படத் துவங்கியது. தாமிரவருணியை ஒட்டிய குறுக்குத்துறை முருகன் கோயிலில் வண்டியை நிறுத்தி, உள்ளே கூட்டிச் சென்றான், மீனாட்சி. உள்ளே நுழையும் போதே யாரோ ஒரு தம்பதியினர் சஷ்டியப்த பூர்த்தி சடங்குகளில் அமர்ந்திருந்தனர்.

’அண்டமாய் அவனி யாகி
அறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
என்னருள் ஈச னான
திண்டிறல் சரவ ணத்தான்
தினமும்என் சிரசைக் காக்க’.

மீனாட்சியின் உரத்த குரலில் குறுக்குத்துறை முருகனே ஒருகணம் திடுக்கிட்டு விழித்தார்.

‘சந்தனத்த பூசிக்கிடுங்க, சித்தப்பா. வெயிலுக்குக் குளிச்சையா இருக்கும்’.

சந்தனத்தை அள்ளி என் கைகளில் பூசினான். மோதிர விரலால் தடவி, சிறு தீற்றலாக நெற்றியில் இட்டுக் கொண்டேன். யாரோ ஒருவர் தாமிரவருணியில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன், மண்டபத்தின் வழியாக நெற்றி நிறைய திருநீறுடன் கோயிலுக்குள் நுழைந்தார். வேகவேகமான நடை. பிள்ளையாருக்கு முன் மூச்சிரைக்க ரொம்ப நேரமாகத் தோப்புக்கரணம் போட்டார். ‘ஆயிரத்தெட்டு போடுவாரோ! எண்ணுவோமா’ என்று மனதில் தோன்றி மறைந்தது.

‘பாத்தேளா! அண்ணாச்சில்லாம் ஒருநாளும் சுகர்மாத்திர சாப்பிட மாட்டா. ஆரோக்கிய வாள்கைல்லா வாளுதா’ என்றான் மீனாட்சி.

படித்துறை மண்டபம் வழியாக வரும்போது, ஆங்காங்கே ஜனங்கள் குளித்துக் கொண்டிருந்தனர். ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு, தூக்குச் சட்டி மூடியில் எலுமிச்சம்பழச்சோறு வைத்து சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஈர டிரவுசருடன், தலைகூட சரியாகத் துவட்டாமல், கல்மண்டபத்தில் அமர்ந்தபடி அந்தச் சிறுவர்கள் சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்கள் சாப்பிடுவதை எட்டிப் பார்த்தபடி வந்த மீனாட்சியை ஏசினேன்.

‘எல! சின்னப்பிள்ளேள் சாப்பிடுததை ஏன் எட்டிப் பாக்கே?’

‘இல்ல சித்தப்பா. பக்கத்துல இருக்கிற கிண்ணத்துல அந்த அக்கா பிள்ளையளுக்கு என்ன வச்சிருக்கான்னுப் பாத்தேன். பொரிகடலத் தொவையல்தான். அதானே நல்லா இருக்கும். கூட ரெண்டு வத்தல் வறுத்து கொண்டாந்திருக்கலாம்’.

திருநவேலியை விட்டு ஏன் மீனாட்சி நகர மாட்டேன்கிறான் என்பது புரிந்தது.

மறுநாள் காலையில் சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்குக் கிளம்பும் போது கால்வலியைப் பொருட்படுத்தாமல் அப்பாவும் வந்தார்கள்.

‘போன தடவ உன் கூட வந்ததுதான். அப்புறம் போகவே இல்ல.’

போகிற வழியிலேயே வண்ணாரப்பேட்டையில் காரை நிறுத்தச் சொன்னார்கள்.

‘அங்கே பூச பண்ணுத சொரிமுத்து ஐயர் பிள்ளையளுக்கு பண்டம் வாங்கீட்டுப் போவோம்’.

மீனாட்சியும் வண்ணாரப்பேட்டையில் வந்து காரில் ஏறிக் கொள்ள எங்களின் குலதெய்வக் கோயிலான சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்கு கார் விரைந்தது.

‘பேரப்பிள்ள! தென்கர மகராசா கோயிலோட விசேஷம் என்னன்னு தெரியுமாவே?’

முன்சீட்டிலிருந்த மீனாட்சியிடம் அப்பா கேட்க, ‘தேர் இருக்கிற சாஸ்தா கோயில்லா, தாத்தா’ என்றான், மீனாட்சி.

தென்கரை மகராஜா கோயில் வளாகத்துக்குள்ளேயே இருக்கும் சொரிமுத்து ஐயர் வீட்டு மாமியிடம் பிள்ளைகளுக்கு வாங்கிய பலகாரங்களைக் கொடுத்து விட்டு, கோயிலுக்குள் நுழைந்தோம். வாழ்க்கையில் இரண்டாம் முறையாகவே அந்த கோயிலுக்குள் நுழைகிறேன். ஆனால் அதற்கு முன்பு பல ஆயிரம் முறை வந்ததாக மனது உணர்ந்தது. கோயிலைச் சுற்றிலும் நான் பார்த்திராத என் பாட்டனார், முப்பாட்டனார் போன்ற மூதாதையர் ஆங்காங்கே நின்று, அமர்ந்து, தூண்களில் சாய்ந்தபடி இருந்தனர். அவர்களில் யாரோ ஒருவர், ‘அடிக்கடி வந்துட்டு போலெ’ என்று சொன்னார்கள். தென்கரை மகாராஜா சந்நிதிக்குள் நாங்கள் நுழையவும், மேளச்சத்தம் கேட்டது. சந்நிதியின் ஒரு வாசல் வழியாக பட்டு வேட்டி, சட்டை, கழுத்தில் மாலை சகிதம் மாப்பிள்ளையும், மறுவாசல் வழியாக கண்ணைப் பறிக்கும் கத்திரிப்பூ நிறத்தில் பட்டுப்புடவையுடன் மணப்பெண்ணும் நுழைந்தனர். சுற்றிலும் மினுமினுக்கும் கருப்புத் தோல் கிராமத்து மனிதர்கள். எல்லோர் முகத்திலும் சிரிப்பு நிரந்தரமாகத் தங்கியிருந்தது. சித்தூர் தென்கரை மகாராஜாவுக்கு முன்னால் தாலி கட்டும் போது, மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். சில நொடிகளில் திருமணம் முடிந்தது. மணமக்களுக்காக பூஜை செய்து கொண்டிருந்தார், சொரிமுத்து ஐயர். வெளியே காத்து நிற்கும்போது, ‘இந்தப் பிள்ளைகள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும்’ என்று மனதார வேண்டிக் கொண்டேன்.

‘பெரிய கல்யாண மண்டபத்துல கல்யாணத்த வச்சு, லச்சக்கணக்குல செலவு பண்ணி என்னத்துக்குங்க்கென்! என்ன தாத்தா?’

‘இங்கன வச்சு கல்யாணம் பண்றதுக்கு ஒரு கொடுப்பின வேணும்லா, பேரப்பிள்ளை’ என்றார்கள், அப்பா.

சொரிமுத்து ஐயர் அப்பாவை அடையாளம் கண்டு கொண்டார். பச்சைப்பிள்ளை மாதிரி சிரித்த முகத்துடன் உள்ளே நின்று கொண்டிருந்த தென்கரை மகாராஜாவைப் பார்த்து, ‘எய்யா’ என்று கண்கள் கசிய வணங்கினேன். வேறு எந்தப் பிரார்த்தனையும் சொல்லிக் கொள்ளவில்லை. சில நொடிகளுக்கு முன்னெப்போதும் உணர்ந்திராத நிசப்தம் மனம் முழுதும் பரவி, நிறைந்தது. வெளியே வந்து தளவாய் மாடசாமிக்குக் கொண்டு வந்த பூமாலைகளைக் கொடுத்து வணங்கிவிட்டு, பேச்சியம்மாளிடம் வந்தோம். பேச்சியம்மாள் விக்கிரகம் அப்படியொண்ணும் அலங்காரமானதல்ல. ஆனாலும் துடியான அமைப்பு. அவளிடமும் அடிக்கடி வாரோம் என்று சொல்லி வந்தோம்.

மாலையில் வண்ணதாசன் அண்ணாச்சியைப் போய்ப் பார்க்கலாம் என்று முடிவு செய்து போனால் வீடு பூட்டியிருந்தது. அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, மீனாட்சியுடன் ஜங்ஷன் வந்து சேரும்போது, ஓவியர் வள்ளிநாயகத்திடமிருந்து ஃபோன்.

‘எண்ணே! ஏசாதிய. கூட வேல பாக்கறவர் வீட்டுக் கல்யாணம். நம்ம கைல பொறுப்பக் குடுத்துட்டாரு. எங்கெ இருக்கியன்னு சொல்லுங்க. இந்தா வாரேன்’.

ஈரடுக்கு மேம்பாலத்துக்கு அருகே வேளுக்குடி கிருஷ்ணனின் நிகழ்ச்சி குறித்த பேனர் இருந்தது.

‘ஆகா! பிரமாதமாப் பேசுவாரே! முடிஞ்சுட்டா? கேக்கலாமே!’ என்றேன்.

’ஆங்! அதெல்லாம் நாம கேக்கக் கூடாது, சித்தப்பா. சவசவன்னு இருக்கும்’.

சட்டென்று சொன்னான், மீனாட்சி.

‘மெட்ராஸுக்குப் போயி சேரக்கூடாதவங்க கூடல்லாம் சேந்து ரொம்பல்லா கெட்டுப் போயிட்டிய.

‘ஏம்ல? ஆள்வார் பாசுரம்ல்லாம் எவ்வளவு நல்லா இருக்கும்! அதையெல்லாம் ஒதுக்கிட்டா அப்புறம் என்னல தமிளு?’

‘மாணிக்கவாசகர்ட்ட இல்லாத தமிளா? வைணவத் தமிளுல்லாம் அதுக்கிட்ட நிக்க முடியுமா? அதுல்லாம் நஞ்சு தோய்த்த தமிளு, சித்தப்பா. அத நாம கேக்கப்படாது. அப்படியே கேட்டாலும் அது நம்மள ஒண்ணும் செய்யாது. ஏன்னா நாம ஆலாலகண்டனுகள்லா!’

மேற்கொண்டு பேசினால் அந்த வீரசைவன், என் காதைக் கடித்துத் துப்பிவிடுவான் என்பதால், ‘சாப்பிடுவோமால? பசிக்கி. வள்ளி வந்துக்கிட்டிருக்கானான்னு கேளு’ என்று பேச்சை மாற்றினேன்.

கண்ணம்மன் கோயில் தெருவிலுள்ள ஒரு சாலையோரக்கடையில் ருசியும், பதமுமாக சுடச்சுட இட்லி, தோசை., சாம்பார், சட்னி. சென்னையில் உயர்ரக ஹோட்டல்கள் எதிலும் நான் காணாத சுவை.

‘அண்ணாச்சி! மொளாப்பொடி வைங்க’.

மீனாட்சி என் இலையைக் காட்டி சொன்னான்.

‘சித்தப்பா! எண்ணெ விட வேண்டாம். பாமாயிலு. நெஞ்சக் கரிக்கும்’.

சாப்பிட்டு முடித்து மீனாட்சி விடைபெற்றுக் கொள்ள, வள்ளிநாயகத்துடன் டவுணுக்குத் திரும்பினேன்.

‘கீள்ப்பாலம் வளியா நடந்து போவோமாண்ணே?’

தனது டி.வி.எஸ் 50யை வள்ளி உருட்டியபடியே, என்னுடன் நடக்க ஆரம்பித்தான். பாலத்தின் இறக்கம் வரும்போது, ‘இப்பம் என்னண்ணே படிச்சுக்கிட்டிருக்கிய?’ என்று வள்ளி கேட்க, ‘ரொம்ப நாள் களிச்சு புதுமைப்பித்தன மறுபடியும் படிக்கேண்டே! அதுவும் சங்குதேவனின் தர்மம் படிச்சுட்டு, மேற்கொண்டு படிக்க முடியாம மூடி வச்சுட்டேன் பாத்துக்கோ’. நான் இப்படி சொல்லவும், உருட்டிக் கொண்டிருந்த டி.வி.எஸ் 50யை நிறுத்தி, ‘எண்ணே!’ என்று கிட்டத்தட்ட வள்ளி அலறினான். ‘என்னாச்சு வள்ளி?’

‘எண்ணே! சங்குதேவனின் தர்மம் கதைல வார கைலாசபுரம் ரோட்டுலதானே இப்பம் நாம நிக்கோம்’ என்றான்.

பிறகு டவுண் வரைக்கும் புதுமைப்பித்தனும் எங்களுடன் நடந்து வந்தார். ஆர்ச்சுக்கு அருகில் ‘இங்கன ரெண்டு நிமிஷம் நிப்போம்’ என்றான், வள்ளி. காரணம் கேட்டதற்கு, நயினார் கொளத்துக் காத்தும், சாமிசன்னதி காத்தும் சேந்து அடிக்கிற எடம் இது ஒண்ணுதான். கொஞ்சம் அனுபவியுங்க’ என்றான். ‘இந்தப் பயலுக நம்மள மெட்ராஸுக்கு ரயிலேற விட மாட்டானுவ போலுக்கே’ என்று பயமாக இருந்தது. அம்மன் சன்னதியில் வீட்டுக்கு முன்னால் வந்து நிற்கும் போது, கா.சு. பிள்ளை நூலகத்துக்கு அடுத்துள்ள இடிந்த வீட்டின், தூசு படிந்த நடைப்படியில் அமர்ந்து ஒரு கோட்டிக்காரத் தோற்றத்து மனிதர் , இலையை விரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ‘அங்கெ பாரு வள்ளி’ என்றேன்.

‘கல்கி ஞாவகம் வருதுண்ணே’ என்றான், வள்ளி. சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்தக் கோட்டிக்காரரைப் பார்த்தபடியே மேலும் சொன்னான்.
‘குறுக்குத்துறயப் பத்தி கல்கி சொன்னாருல்லா! சுழித்து ஓடும் ஆறு. இவ்வளவு அழகான படித்துறை. இந்த நீர் வீணாக ஓடிப்போய்விடக்கூடாதே என்பதற்காக இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எப்போதும், யாராவது ஒருவர் குளித்துக் கொண்டேயிருக்கும் குறுக்குத்துறைன்னு. அந்த மாரி திருநவேலில எந்த நேரமும், யாராவது ஒருத்தன் சாப்பிட்டுக்கிட்டிருப்பான்’. . . .

சில நொடிகள் மௌனத்துக்குப் பிறகு ‘கெடைக்கவும் செய்யும்’ என்றான். நான் வள்ளியின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

மறுநாள்தான் நான் திருநவேலிக்குச் சென்றதற்கான நாள். ‘காலைல ஆறர மணிக்குல்லாம் வந்துருல. நம்ம சிருங்கேரி மடம்தான்’ குஞ்சு சொல்லியிருந்தான். நண்பன் ராமசுப்பிரமணியனுடன் மண்டபத்துக்குள் நுழையும் போது, ஹோமப்புகை நடுவே பிராமண வேஷத்திலிருந்து குஞ்சுவும், அவன் மகனும் சிரிப்பை அடக்க முடியாமல் என்னைப் பார்த்து சிரித்தார்கள். இருவருமே பூஜை மந்திரங்களுக்கு வாயசைத்துக் கொண்டிருந்தனர். குஞ்சுவின் உறவினர்கள் ஒவ்வொருவராக என்னிடம் வந்துப் பேசினார்கள். பெண்கள் பேசும் போது மட்டும், கண்ணைக் கசக்கிக் கொண்டு, வாயசைப்பதை நிறுத்தி தூரத்திலிருக்கும் என்னை உன்னிப்பாக கவனித்தான், குஞ்சு. அவ்வப்போது பூஜையிலிருந்து எழுந்து வந்து என் தோளில் கைபோட்டபடி ‘எங்க மாமா’ என்று எல்லோருக்கும் காட்டும் வண்ணம் நின்று கொண்டான், குஞ்சுவின் மகன். மண்டபத்தில் பெரும்பாலும் பிராமின்ஸ் என்பதால் முக்கால்வாசி பேர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார்கள். ஒரு மாமி என்னிடம் வந்து, ‘நீங்க அவர்தானே?’ என்றார். ‘ஆமாங்க’ என்று பொத்தாம் பொதுவாகத் தலையசைத்து வைத்தேன். உடனே யாருக்கோ ஃபோன் பண்ணி, ‘ஏடீ, ஒனக்கு ரொம்பப் புடிக்குமே, சுரா! அவர் வந்திருக்கர். அதான்டி ஆனந்த விகடன்ல மூங்கில் காத்து எளுதுனாரே! அவரேதான்’ என்றார்.

சிறு வயதிலிருந்தே நான் பார்த்து பழகிய சிறுவர்கள், என்னைப் பார்த்துப் பழக்கப்பட்ட பெரியவர்கள் சூழ பந்தியில் அமர்ந்து சாப்பிட்டேன். குஞ்சுவும் வழக்கம் போல என்னருகிலேயே உட்கார்ந்து கொண்டான்.

கண்ணை மூடி முழிக்கும் முன் சென்னைக்குக் கிளம்பும் நேரம் வந்தது. ஏற்கனவே ஜே.கேயிடம் ‘டிரெயின்லயோ, ஃபிளைட்லயோ ரிட்டர்ன் டிக்கட் போடுங்க. பஸ்ல போடறதா இருந்தா, நான் திருநவேலிலயே இருந்துக்கிடுதேன்’ என்று சொல்லியிருந்தேன். ஏதோ ஒரு படப்பிடிப்புக்காக திருநவேலிக்கே வந்திருந்த ஜே.கே, ‘சாயங்காலம் ஸ்டேஷனுக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்திருங்க, ஸார். டிக்கட்டக் கையோட கொண்டுட்டு வாரேன்’ என்றார்.

கால்வலியைப் பொருட்படுத்தாமல் அப்பாவும் ஸ்டேஷனுக்கு கிளம்ப முயல, ‘வேண்டாம், நீங்க அங்கெ வந்து நின்னுக்கிட்டிருக்க வேண்டாம்’ என்று சொல்லித் தடுத்து, விழுந்து வணங்கி, திருநீறு பூசச் செய்து கிளம்பினேன். வழக்கமாக மீனாட்சி, எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கிருஷி, ஓவியர் வள்ளிநாயகம் போன்றோருடன் ரயில்வே ஸ்டேஷனில் அரட்டையடித்து விட்டு ரயிலேறுவது வழக்கம். இந்த முறை ஒருமணி நேரத்துக்கு முன்பே வண்ணதாசன் அண்ணாச்சி வந்து விட்டார்கள். தி.க.சி தாத்தா இறந்த பிறகு அண்ணாச்சியை அப்போதுதான் பார்த்தேன். தோள் தொட்டு அணைத்துக் கொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘இந்த மட்டம் திருநவேலி ட்ரிப்பு ரொம்ப விசேஷம், தாத்தா இல்லாத ஒரு கொறயத் தவிர. ஆனா அதயும் நீங்க வந்து இல்லாம பண்ணிட்டிய’ என்றேன்.

‘பச்ச சிக்னல் போட்டுட்டான். ஏறு’ என்று அண்ணாச்சி பிடித்து ரயிலில் ஏற்றி விட்டார்கள்.

ரயில் நகர நகர, மனதுக்குள் ‘வாருமய்யா பேரப்புள்ள, தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி, எப்போது, இந்த நீர் வீணாக ஓடிப்போய்விடக்கூடாதே என்பதற்காக இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எப்போதும், யாராவது ஒருவர் குளித்துக் கொண்டேயிருக்கும் குறுக்குத்துறை, பாமாயில் நெஞ்சக் கரிக்கும், நயினார் குளத்துக் காத்தும், சாமி சன்னதிக் காத்தும் சேத்து அடிக்கிற இடம், சங்குதேவன் நடந்த கைலாசபுரம் ரோடுல்லா, கால்வலின்னாலும் பரவாயில்ல. நானும் வாரேன்’ . . . . . இப்படி பல ஒலிகளும், பிம்பங்களுமாக ஓடிக் கொண்டிருந்தது. சட்டென்று ஒரு சிறுவனின் அழுகுரல் கவனம் கலைத்தது. தன் தாயுடன் நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் திருநவேலியிலிருந்து சென்னைக்குத் திரும்புகிற, சேரன்மகாதேவியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.ஆதித்தனின் பேரன் உரத்த குரலெடுத்து அழுது கொண்டிருந்தான்.

‘திருநவேலி நல்ல ஊரும்மா. நாம இங்கெயே இருக்கலாம்மா. ப்ளீஸ். எறங்கிப் போயிரலாம்மா’.

கம்பார்ட்மெண்டில் இருந்த எல்லோரும் அவனைப் பார்க்கத் தொடங்கினர். தர்மசங்கடத்துடன் அவனது தாயார், ‘சத்தம் போடாதே. எல்லாரும் பாக்காங்க பாரு’ என்று கண்டிப்பான குரலில் அதட்டினார்.

‘விடுங்கம்மா. அவனாவது வாய்விட்டு அளட்டும்’ என்றேன்.

post

ஆசான்களின் ஆசான்

ஜெயகாந்தனின் எழுத்து எனக்கு அறிமுகமாவதற்கு முன்பே அவரது பெயரும், புகழ் பெற்ற அவருடைய பல பேச்சுகளும், எனது தகப்பனார் மூலம் எனக்கு நன்கு பரிச்சயம். அதனால்தானோ என்னவோ, பதின்வயதுகளின் மத்தியில் அப்பாவின் நூலறையில் ஜெயகாந்தனின் புத்தகங்களை எடுத்து வாசிக்கத் துவங்கியபோது, ‘ஜெயகாந்தன்’ எனக்கு அந்நியமாகத் தெரியவில்லை.

‘காதல் என்பது மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்பமான காரணங்களே போதும். காதல்வயப்பட்டவர்களிடையே கூட அந்தக் காதல் வளர்வதற்கும், மேன்மையுறுவதற்கும் அந்தக் காதலோடு சேர்ந்த வேறு குணநலன்களே காரணமாயிருக்கின்றன’.

அந்த இளவயதில் ஜெயகாந்தனின் மேற்கண்ட வரிகளை நான் படித்ததனாலேயே ‘நீ நடந்தால் எனக்கு கால் வலிக்கிறது. நீ குனிந்தால் எனக்கு குறுக்கு வலிக்கிறது’ போன்ற காதல் கவிதைகளிலிருந்து என்னால் தப்பிக்க முடிந்தது. இன்றைய என் வாசிப்பின் தேர்வை, அடிப்படை ரசனையை ஜெயகாந்தனின் எழுத்துகளின் வாயிலாக எனக்குக் கிடைத்த வாசிப்பனுபவத்தின் மூலமாகவே நான் அமைத்துக் கொண்டேன். பரிட்சைக்குப் படிப்பது போல ஜெயகாந்தனின் சிறுகதைகள், கட்டுரைகள், முன்னுரைகள், குறுநாவல்கள், நாவல்கள் என ஒன்று விடாமல் படித்துத் தீர்த்த நாட்களை அசை போடுவதே இப்போதும் சுகமாக உள்ளது.

சென்னைக்கு வந்தபின் ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவும் என்னைப் போலவே தீவிரமான ‘ஜெயகாந்தனின் வாசகர்’ என்பதை அறிந்த போது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. ‘ஜெயகாந்தன் படிச்சிருக்கியா?’ என்று சாதாரணமாகக் கேட்கப் போக, நான் வரிசையாக ஜெயகாந்தனின் கதைகளைப் பற்றி ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல, வாத்தியாருக்கு அத்தனை மகிழ்ச்சி. வாத்தியார் மறந்து போயிருந்த ஜெயகாந்தனின் கவிதைகளில் ஒன்றிரண்டை அவருக்கு நினைவுபடுத்தினேன்.

‘ஒற்றைச் செருப்பு
ஒன்று கிடக்கிறது
இடமோ வலமோ
எதுவும் தெரியவில்லை
குப்புறக் கிடந்து
குமுறி அழுகிறது!
இணையைப் பிரிந்த
இலக்கியச் சோகம்
இதற்கு மட்டும்
இல்லையா என்ன?
பொருள்வயின் பிரிந்ததோ?
போர்வயின் பிரிந்ததோ?
உயிர்செலப் பிரிந்ததோ?
ஊழ்வினை மேல்வந்து
உறுத்தலால் பிரிந்ததோ?
கவிதையின் சோகமிக்
காலணிக்கில்லையோ?’

‘ரொம்ப சந்தோஷம்பா. யூ நோ சம்திங்? ஜெயகாந்தனைப் பத்திப் பேசறதுக்கு ஆள் கெடைக்காம நான் ரொம்ப நாளா தவிச்சுக்கிட்டிருந்தேன்’ என்றார், ‘வாத்தியார்’. உற்சாகமான மனநிலையில் இருக்கும் போது, அவருக்கு மிகவும் பிடித்த ஜெயகாந்தனின் கவிதையொன்றை நினைவுபடுத்திச் சிரிப்பார். ‘எங்கே? அந்த வரிகளச் சொல்லு’.

‘அட்சய வயிறு படைத்தீரே? – ஓர்
அட்சய பாத்திரம் பார்த்தீரோ?
பிச்சை கிடைத்துப் புசித்தீரே! – அந்தப்
பிச்சையிட் டவனைப் பார்த்தீரோ?
லச்சையை விட்டுச் சுகித்தீரே! – என்
லாகிரிப் பொருளைப் பழிப்பீரோ?
பத்தினிக் கதைகள் படிப்பீரே! – உம்
மச்சினி கிடைத்தால் விடுவீரோ?’

உரக்க சிரித்து, ‘அந்த மனுஷன் தொடாத ஏரியாவே கெடயாதுப்பா’ என்பார். அவ்வப்போது ஜெயகாந்தனைப் பார்க்க ‘வாத்தியார்’ செல்லும் போது, உடன் செல்லும் நான் சற்றுத் தள்ளி நின்று கொள்வேன். எத்தனையோ முறை ஜெயகாந்தனிடம் அறிமுகப்படுத்த அழைத்து ‘வாத்தியார்’ வற்புறுத்திய போதும், பணிவோடு தவிர்த்து வந்தேன். அதற்குக் காரணம், ஜெயகாந்தன் என்னும் ஆளுமையின் மேல் எனக்கிருந்த மரியாதை கலந்த பயமா, என்ன என்று இப்போது யோசித்துப் பார்த்தால் சொல்லத் தெரியவில்லை. ஜெயகாந்தனின் மணிவிழா நடந்தபோது, விழாவில் கலந்து கொள்ள வாத்தியாருடன் நானும் சென்றிருந்தேன். காமராஜர் அரங்கத்தில் நாங்கள் நுழைந்த போது, அரங்கம் நிறைந்திருந்தது. இருக்கைகளில் இடமில்லாமல் பலர் தரையில் உட்கார்ந்திருந்தனர். காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார், மத்திய அமைச்சர் அருணாசலம் போன்றோர் கலந்து கொண்ட அந்த விழாவில் வாத்தியாரின் பேச்சு அத்தனை அற்புதமாக அமைந்தது. ஜெயகாந்தனின் எழுத்து, தனிப்பட்ட முறையில் தன்னை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதைப் பற்றி ஆத்மார்த்தமாக பேசினார். மறுநாள் ஜெயகாந்தனைப் பார்க்க வாத்தியார் சென்றிருந்த போது ஜெயகாந்தன் ஆங்கிலத்தில் சொன்னார்.

’நேற்று உங்கள் பேச்சு நன்றாக இருந்தது, என்னுடையதையும் விட’.

பெரும்பாலும் வாத்தியாருடன் பேசும் போதெல்லாம் ஜெயகாந்தன் ஆங்கிலத்தில் பேசுவதை கவனித்திருக்கிறேன். இத்தனைக்கும் ‘வாத்தியார்’ தமிழில்தான் ஜெயகாந்தனிடம் பேசுவார்.

ஜெயகாந்தனைத் தவிர்த்து பிற எழுத்தாளர்களின் எழுத்துகளின்பால் மனம் திரும்பிய பிறகும், ஜெயகாந்தனை வாசிப்பது தொடர்ந்து கொண்டுதானிருந்தது. இலக்கியப் பரிச்சயம் உள்ள, நெருக்கமான நண்பர்களிடம் ஜெயகாந்தனின் எழுத்துகளைப் பற்றிச் சொல்வதுண்டு. நேரடியாக நவீன தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்துவிட்டபடியால் ஜெயகாந்தனை தான் வாசித்ததே இல்லை என்று நண்பர் செழியன் ஒருமுறை சொன்னார். செழியனுக்கு ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பொன்றைக் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்னேன். அந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த ‘நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்’ என்ற சிறுகதை இருந்தது. என்னைப் போலவே செழியனையும் அந்தச் சிறுகதை வெகுவாக பாதித்து விட்டதாக செழியன் சொன்னார்.

‘திருவல்லிக்கேணில ஒரு வீட்டு ஜன்னல்ல யாரோ ஒரு பாட்டி உக்காந்திருக்கிறத பாத்து, எனக்கு ‘நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்’ கத ஞாபகம் வந்திடுச்சு. என் கைல கேமரா இருந்திருந்தா ஃபோட்டோ எடுத்துட்டு வந்து ஒங்கக்கிட்ட காமிச்சிருப்பேன். என்னா கதைங்க, அது!’.

அதற்குப் பிறகு ஜெயகாந்தனின் கதைகளைப் பற்றிப் பேச எனக்கு செழியன் கிடைத்தார்.

நண்பர் ஜெயமோகனும், நானும் ஜெயகாந்தனின் எழுத்துகளைப் பற்றி மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம். அவரது புகழ் பெற்ற சிறுகதைகளான ‘யுகசந்தி, அடல்ட்ஸ் ஒன்லி, குருபீடம், லவ் பண்ணுங்கோ ஸார், மௌனம் ஒரு பாஷை, அக்கினிப் பிரவேசம், நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’ போன்றவை தவறாமல் எங்கள் உரையாடலில் இடம்பெறுபவை. இவற்றில் ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’ சிறுகதை பற்றி ஜெயமோகன் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார். ஜெயகாந்தனின் சிறுகதைகளில் எங்கள் இருவருக்கும் பிடித்த கதை, ‘எங்கோ, யாரோ, யாருக்காகவோ’. குறுநாவல்களில் ‘விழுதுகள்’. காசியில் ஒரு நாள் மாலையிலிருந்து நள்ளிரவு வரைக்கும் ‘விழுதுகள்’ பற்றி நானும், ஜெயமோகனும் பேசிக் கொண்டிருந்தோம். அன்றைய என் சொப்பனத்தில் ‘விழுதுகள்’ குறுநாவலின் ‘ஓங்கூர் சாமி’ கையில் சிலும்பியுடன் வந்தார்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நண்பர் ஜெயமோகனுடன் ஜெயகாந்தனை சந்திக்கச் சென்றிருந்தேன். பழைய அச்சம் கொஞ்சம் விலகியிருந்தது. ஜெயகாந்தனை ‘அப்பா’ என்றழைக்கும் நண்பர் அன்பு எங்களை அழைத்துச் சென்றார். எங்களுடன் நண்பர் செழியனும் வந்திருந்தார். மாடிப்படிகளேறி நாங்கள் சென்ற போது, சபை கூடியிருந்தது. வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தோம். ஒரு நீள மர மேஜைக்கு முன்னால், நடுநாயகமாக சுழலும் நாற்காலியொன்றில் ஜே.கே வீற்றிருந்தார். தரையில் யாரோ ஒரு தோழர் மும்முரமாக ஏதோ ஒரு வஸ்துவை தயாரித்துக் கொண்டிருந்தார். மிக தீவீரமாக பேசிக் கொண்டிருந்த ஜே.கே, எங்கள் வருகையினால் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டுதானிருந்தார். சிறிது நேரத்தில் தரையில் இருந்தபடியே அந்தத் தோழர், ஒரு துணியைச் சுற்றி, அந்த ‘ஏதோ’வை கோயில் பிரசாதம் போல பவ்யமாக ஜே.கே.யிடம் கொடுக்க, ஜே.கே அதை வாங்கி, முறுக்கிய தன் மீசையை விலக்கி, வாயில் வைத்து உள்ளிழுத்து, சிலநொடிகளுக்குப் பின் புகையை வெளியே விட்டார். கண்கள் முன்னைவிட ஜொலித்தன. எனக்கு ‘ஓங்கூர் சாமி’யை நேரில் பார்ப்பது போல இருந்தது. ஒரு சின்ன செருமலுக்குப் பின் மீண்டும் பேசத் தொடங்கினார். இதற்குள் அந்த ‘ஏதோ’ மேஜையைச் சுற்றிலும் உள்ள மற்ற அன்பர்களின் கைகளில் ஒரு ரவுண்டு வந்தது. இந்த சூழலில் சும்மா அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சிறிது நேரத்திலேயே லேசாக தலைசுற்ற ஆரம்பித்தது. என்னை ஒட்டிக் கொண்டு அருகிலேயே அமர்ந்திருந்த செழியன் தூரத்தில் தெரிந்தார். எதிரே அமர்ந்திருந்த நண்பர் அன்பு, உருமாறி பெண்பிள்ளை போல காட்சியளித்தார். ஜெயமோகன் மூன்று குரல்களில் பேசிக் கொண்டிருந்தார். ஜே.கே.வுக்கு வணக்கம் சொல்லிக் கிளம்பும் போது செழியனின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, படிகளில் இறங்கினேன். ‘சிவமூலிகை’யை சுவாசித்ததால், அன்றைய இரவு நண்பர் ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருக்க முடியாமல் சீக்கிரமே உறங்கிப் போனேன். ஆனாலும் வழக்கம் போல ஜெயமோகன் தொடர்ந்து என்னிடம் பேசிக் கொண்டுதானிருந்தார்.

அதற்குப் பிறகு ஜே.கேயை சந்திப்பதற்கு ஜே.கே.யை தன் மானசீக குருவாக ஆராதிக்கிற எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசன் அவர்களுடன் பலமுறை சென்றிருக்கிறேன். அந்த சமயங்களில் சிவமூலிகையை, தன்னுடைய பழக்க, வழக்கங்கள் பற்றிய ஒளிவுமறைவில்லாத ஜே.கே விட்டொழித்திருந்தார். வ.ஸ்ரீநிவாசனுக்கும், ஜெயகாந்தனுக்கும் ஏற்கனவே நல்ல அறிமுகமும், தொடர்பும் இருந்த காரணத்தினால் அவருடன் போகும் போதெல்லாம் மெல்ல மெல்ல ஜே.கே.யுடன் நெருக்கமாகப் பேச முடிந்தது. ஒன்றிரண்டு சந்திப்புகளில் ஜே.கேக்கு என்னைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது. சில நேரங்களில் எங்களுடன் நண்பர் கே.பி.விநோத்தும் வருவார். அந்த சமயத்தில் ஜெயகாந்தனின் எழுத்துகளைப் படித்திராத விநோத்துடன் ஜே.கே பிரியமாகப் பேசுவார். ஒருநாள் அப்படி பேசிக்கொண்டிருக்கையில் விநோத், ஜே.கேயிடம் சொன்னார்.

‘ஐயா! இப்பதான் நான் ‘யுகசந்தி’ படிச்சேன்’.

உடனே ஜே.கே. கேட்டார்.

‘முன்ன ஒரு ‘யுகசந்தி’தான் இருந்தது. இப்ப இன்னொண்ணும் இருக்கே! நீங்க எதை படிச்சீங்க?’

அருகில் அமர்ந்திருந்த எனக்கு சட்டென்று நெஞ்சடைத்தது. ஏனென்றால் ஜே.கே குறிப்பிட்ட இன்னொரு ‘யுகசந்தி’ கட்டுரை ‘வார்த்தை’ சிற்றிதழில் அப்போதுதான் வெளிவந்திருந்தது. அதை எழுதியவன், நான்.

கே.பி.விநோத் பதிலளித்தார். ‘இவரோட ‘யுகசந்தி’யப் படிச்சுட்டு அப்புறமா நீங்க எழுதின ’யுகசந்தி’யப் படிச்சேன்யா’.

நான் மனதுக்குள் கே.பி.விநோத்தை கெட்ட வார்த்தைகளில் ஏச ஆரம்பித்தேன். ‘வாய வச்சுக்கிட்டு இந்த மலயாளத்தான் சும்மா கெடக்க மாட்டான், போலுக்கெ! வெளிய போன ஒடனெ வளுக்கமண்டைல நங்கு நங்குன்னு நாலு குட்டு குட்டணும்’.

’யுகசந்தி’ன்னு நம்ம தலைப்புல என்ன எழுதியிருக்காருன்னு பாப்போமேன்னு படிச்சுப் பாத்தா, அதுல யுகசந்தியப் பத்தி என்ன இருக்கு? எல்லாம் ஜெயகாந்தனப் பத்தில்ல எழுதி வச்சிருக்காரு!’.

ஜே.கே என்னைக் காண்பித்து சொன்னார். அத்தோடு அந்த டாப்பிக் முடிந்தது. எனக்கும் உயிர் போய் வந்தது. ஆனாலும் மனதுக்குள் ஜெயகாந்தன் நாம் எழுதியதைப் படித்திருக்கிறார் என்கிற நிறைவு.

ஜெயமோகனும், நானும் நெருக்கமான நண்பர்கள் என்பதை ஜே.கே அறிவார். அதனாலேயே நான் போனவுடன், ‘என்ன? ஜெயமோகனும், நீங்களும் இப்ப எதைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கீங்க?’ என்று கேட்பார். ஒருநாள் அப்படி அவர் கேட்டபோது சொன்னேன். ‘சைவ, வைணவ பெயர்களப் பத்திப் பேசிக்கிட்டிருக்கோம்’.

‘அதுல என்ன டிஸ்கஷன்?’

‘இல்ல. வைணவப் பெயர்களை வச்சுருக்கிற சைவர்களப் பாக்க முடியுது. ஆனா சைவப் பெயர்கள் வச்சிருக்கிற வைணவர்கள்னு யாரையும் சட்டுன்னு சொல்லிட முடியலியே!’

ஆமோதிக்கும் விதமாகத் தலையை ஆட்டியபடி சொன்னார்.

‘ஆமாமா. ஒரு பரமசிவ ஐயங்கார நீங்க பாத்துர முடியாது. ஆனா வீர சைவர்கள் கூட வைணவப் பெயர்கள் வச்சுக்குவாங்க. அதுக்கு சிறந்த உதாரணமே . . .’

சில நொடிகள் என்னைப் பார்த்துவிட்டு, ‘வேற யாரு? ஒங்க அப்பன்தான்’ என்றார்.

வ.ஸ்ரீநிவாசன் அவர்களுடன் ஜே.கேயை அடிக்கடி சென்று பார்ப்பது தொடர்ந்தது. தனது நீண்டநாள் பழக்கவழக்கங்கள் அனைத்தையும் அவர் முற்றிலுமாக துறந்திருந்தார். சில சமயம் அமைதியாக எதுவுமே பேசாமல் அமர்ந்திருப்பார். நாங்களும் அவரது அமைதியைத் தொந்தரவு செய்யாமல் சபையில் அமர்ந்திருந்து விட்டு கிளம்பி வருவோம். நன்றாக அவர் பேசிக் கொண்டிருக்கும் போது எங்களுக்குக் கிடைக்கும் அதே சுகானுபவத்தை, அந்த அமைதியிலும் எங்களால் உணர முடிந்திருக்கிறது. பிற சமயங்களில் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பார். ஒருநாள் நாங்கள் சென்ற போது, ‘கடித இலக்கியம்’ பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். நாங்கள் சென்று அமர்ந்தவுடன், என் பக்கம் திரும்பிப் பேச ஆரம்பித்து விட்டார்.

‘நீங்கள் என்னை மதித்து எனக்கு ஒரு கடிதம் எழுதுகிறீர்கள். பதிலுக்கு உங்களை மதித்து நான் ஒரு கடிதம் எழுதுகிறேன். உங்கள் அந்தரங்கத்தை நானும், எனது அந்தரங்கத்தை நீங்களும் மதிப்பதனாலேயே நாம் இருவரும் தனிப்பட்ட முறையில் நம் எண்ணங்களை பரிமாறிக் கொள்கிறோம். இதை ‘கடித இலக்கியம்’ என்கிற பெயரில் பொதுவில் வெளியிடுவது, நாம் இருவருமே ஒருவரைக்கொருவரை அவமதித்துக் கொள்ளும் செயல், இல்லையா?’

எனக்கு மனதுக்குள் அவர் எழுதிய ‘அந்தரங்கம் புனிதமானது’ சிறுகதை ஓடிக்கொண்டிருந்தது.

ஜே.கேயிடம் நான் ஆச்சரியப்பட்ட பல விஷயங்களில் குறிப்பாக சொல்வதென்றால், அவருடைய நினைவாற்றல். அவரது ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ புத்தகத்திலிருந்து அவரது சொற்பொழிவுகள் பற்றி நான் நினைவுபடுத்திச் சொன்ன போதெல்லாம், ஒரு வார்த்தை கூட பிசகாமல் அவற்றை அப்படியே மீண்டும் சொல்வதைக் கேட்டு அசந்து போயிருக்கிறேன். அவர் எழுதிய, பேசிய வார்த்தைகள் அத்தனையும் நிதானமான சிந்தனையில் உதித்தவைகளே. இதை அவர் சொல்லச் சொல்ல பல கதைகளை எழுதிய பி.ச.குப்புசாமி அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ‘அந்த இடத்துல அந்த வார்த்தைக்கு பதிலா, வேற வார்த்தை போடணும்னோ, இத கொஞ்சம் மாத்தி எழுதணும்னோ ஜே.கே ஒருபோதும் சொன்னதேயில்ல. முதல் முறையா சொல்லும் போதே அத்தனை தெளிவோட, சுத்தமா வந்து வார்த்தைகள் ஒவ்வொண்ணா விழும்’.

நேர்ப்பேச்சிலும் அத்தனை தெளிவை ஜே.கே.விடம் பார்த்திருக்கிறேன். அவரது வீட்டை இடித்துவிட்டு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட இருப்பதால், ஜே.கே வீடு மாறுகிறார் என்ற செய்தியை நண்பர் அன்பு சொன்னார். ஜே.கே தன் நண்பர்களை சந்திக்கிற ‘மடம்’ இனி இருக்காதே என்கிற கவலையுடன் அவரைப் பார்க்க அன்புவுடன் சென்றேன். ஜே.கேயுடன் சிறிதுநேரம் இருந்துவிட்டு, கிளம்பும்போது முதன்முறையாக அனிச்சையாகக் குனிந்து அவர் பாதங்களைத் தொட்டேன். ‘நல்லதே நடக்கட்டும்’ என்று ஆசீர்வதித்தார். விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்து நான் செருப்பை மாட்டிக் கொண்டிருக்கும் போது, உள்ளிருந்து ஜே.கே சொன்னார்.

‘மூத்தோரை மதிக்கும் பண்பு, நம் இளையதலைமுறையினரிடம் மறைந்து போய்விடாதுங்கற என் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது, உங்கள் பண்பு. இது நம் மரபு. ஒருபோதும் இதை விட்டுடக் கூடாது’.

அதன்பிறகு ஜே.கே வீடு மாறியபின்னர் நண்பர் ஜெயமோகன் சென்னைக்கு வரும்போதெல்லாம் நானும், அவரும் சென்று ஜே.கே.வைப் பார்ப்பதுண்டு. அதிகமாகப் பேசாத, புன்னகை தவழ்ந்த முகத்துடன், அமைதியாக அமர்ந்திருக்கிற ஜே.கே.யைப் பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வருவோம். அவரது புதிய வீட்டில் ‘வீடு’ இருந்தது. ‘மடம்’ இல்லை. இதுபற்றி மாமியே குறைப்பட்டுக் கொண்டார்கள். ‘இந்த ஃபிளாட் கட்டும் போது, ஜே.கே.க்குன்னு ஒரு மடம் வேணுமேன்னு எங்களுக்குத் தோணவே இல்ல. அதுதான் அவரோட இடம்’.

‘வாத்தியார்’ பாலுமகேந்திரா காலமாவதற்கு சில நாட்களுக்கு முன்பு ‘ஜே.கே உடம்பு சரியில்லாம இருக்காராமே! ஒருநாள் அவரப் போயி பாத்துட்டு வரலாம். என்னைக் கூட்டிட்டு போ’ என்றார். வாத்தியார் கேட்டு நான் செய்ய முடியாமல் போனது அது ஒன்றுதான்.

’எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்’ என்கிற தலைப்பில் ஜெயகாந்தனைப் பற்றிய ஆவணப்படம் தயாரித்த இளையராஜா அவர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் தவறாமல் என்னிடம் கேட்கும் கேள்வி. ‘ஜே.கேயப் பாத்தியா? என்ன சொன்னார்?’

ஒவ்வொரு சமயமும் ஒவ்வொன்றைச் சொல்வேன். ஞானபீட விருது தனக்கு வழங்கப்பட்டது குறித்து ஜே.கே சொன்னதைச் சொல்லும் போதெல்லாம் அப்படி ரசிப்பார், இளையராஜா.

‘ஞானம் என்பது பீடமல்ல. கிரீடம். அதை நான் ஏற்கனவே தரித்திருக்கிறேன்’.

‘யோசிச்சுல்லாம் இப்படி சொல்ல மாட்டாரு, ஜே.கே. சின்ன வயசுல இருந்து அவரு பேச்சு எவ்வளவு கேட்டிருக்கேன்!’

பழைய நினைவுகளில் மூழ்கிப் போவார், இளையராஜா.

‘வாழ்க்கைல எத்தனையோ பெரிய ஆட்களப் பாத்தாச்சு. ஆனா நான் பாத்ததிலயே ஹீரோன்னா அது ஜே.கே தான்ப்பா.’

இளையராஜா சொல்வதை இன்னும் பலர் வேறு வேறு வார்த்தைகளில் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

சமீபத்தில் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஜே.கே எழுதிய ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ நாவலை நினைவுபடுத்தும் விதமாக நான் ஏதோ சொன்ன போது, பி.ஏ.கே சொன்னார்.

‘அட! என்ன ஒரு கோ-இன்ஸிடன்ஸ் பாருங்க! நான் இப்ப அந்த நாவல்தான் படிச்சுக்கிட்டிருக்கேன்’.

ஒரே ஊர்க்காரர்கள் ஒத்தசிந்தனையுடைவர்களாகத்தான் இருப்பார்களோ என்று நான் சந்தோஷமாகச் சந்தேகிக்கும் வண்ணம், என் மனதில் ஜெயகாந்தனைப் பற்றி ரகசியமாக நான் ஒளித்து வைத்திருக்கும் வார்த்தைகளை, தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த, பி.ஏ.கிருஷ்ணனின் குரலில் கேட்டேன். ‘இன்னைக்கு இருக்கிற அளவுகோல்கள வச்சு நாம ஜெயகாந்தன மதிப்பிடக் கூடாது. இன்னும் சொல்லப் போனா நாம அவர மதிப்பிடவே கூடாது. ஏன்னா, நமக்கு அவர் ஆசான்லா’.

post

என்னை ‘நான்’ ஆக்கியவர் . . .

கைபேசியில் அவரது எண்ணுடன் கம்பீரமான அவரது பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்தை வைத்திருப்பேன். அவர் அழைக்கும்போது ‘மூன்றாம் பிறை’யின் ‘பூங்காற்று புதிதானது’ பாடலின் துவக்க இசை ஒலிக்கும். அதை முழுமையாக ஒலிக்க ஒருமுறையும் விட்டதில்லை. ’ஸார்’ என்பேன். நிதானமான குரலில் ‘நான் பாலு பேசறேன். உன்னால ஒரு பத்து நிமிஷம் வந்துட்டு போக முடியுமா? என்பார். ‘கிளம்பி வாடா’ என்று சொல்வதற்கான முழு உரிமையும் கொண்ட அந்த மனிதரின் அடிப்படையான பண்பு, இது. அழைத்த சில நிமிடங்களில் அவர் முன் போய் நிற்பேன். படித்துக் கொண்டோ, எழுதிக் கொண்டோ இருப்பவர் சட்டென்று அதை ஏறக்கட்டிவிட்டு, ‘உக்காரு. ப்ளாக் டீ சாப்பிடலாமா?’ என்பார். ‘ஏதும் முக்கியமான விஷயமா, ஸார்?’ என்று கேட்டால், ‘உன்னப் பாக்கணும் போல இருந்துச்சு. அதான்’ என்பார்.

இருபத்தோரு ஆண்டுகளாக அவரது வீடு, அலுவலகம் இருக்கும் பகுதியிலேயே வசித்து வருகிறேன். எந்த நேரமும் அவர் அழைத்தால் ஓடிப் போய் நிற்க வேண்டும் என்கிற ஒரே காரணத்தைத் தவிர வேறில்லை. அதனாலேயே இன்றைக்கும் சென்னையில் எனக்கு சாலிகிராமத்தை விட்டால் வேறு எந்த ஒரு பகுதிக்கும் துணையில்லாமல் போய்வரத் தெரியாது. அவர் அழைக்காமல் நானாகப் போயும் பார்ப்பதுண்டு. எப்போதும் திறந்தே இருக்கும் அவரது அறையின் கதவைத் தட்டி ‘ஸார்’ என்றால், நிமிர்ந்து பார்த்து எப்போதும் அவர் சொல்லுவதைச் சொல்லுவார். ‘நம்புவியா? இப்ப நீ வரலேன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல நானே உனக்கு ஃபோன் பண்ணியிருப்பேன்’.

தொன்னூறுகளில் துவக்கத்தில் நான் அவருடன் வந்து இணைந்த நாளிலிருந்து இன்றுவரை என் வாழ்வின் ஆதாரமாகத் திகழும் பாலுமகேந்திரா என்னும் உன்னதமான கலைஞன்பால் எனக்கேற்பட்ட ஈர்ப்புக்குக் காரணமென்னவோ அவரது திரைப்படங்கள்தான். ஆனால் பாலுமகேந்திரா என்கிற மனிதர், பாலு மகேந்திரா என்னும் ஆளுமை, பாலுமகேந்திரா என்றழைக்கப்படுகிற என்னுடைய குருநாதரை மறக்க முடியாமல் செய்து, தொடர்ந்து அவருடைய நினைவுகளால் இன்னும் கதறச்செய்து கொண்டிருப்பது அவருடனான எனது தனிப்பட்ட அனுபவங்கள்தான். அவை எல்லாமே நினைத்து நினைத்து மகிழக்கூடிய சுகமான அனுபவங்கள் மட்டுமல்ல. வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் மூத்த அந்த பெரிய மனிதரிடம் சண்டை போட்டிருக்கிறேன். கோபம் கொண்டு பேசாமல் இருந்திருக்கிறேன். முகத்துக்கு நேராக முறைத்திருக்கிறேன். ஓரிருமுறை அவரை விட்டு விலகிச் சென்றிருக்கிறேன். அப்படி கோபித்துச் சென்ற ஒரு சந்தர்ப்பத்தில், சென்னையில் உள்ள என் வீட்டு படுக்கையறையில், தூங்கி விழிக்கும் போது என் முன் அமர்ந்திருந்தார். பாலுமகேந்திரா என்னும் அந்த மகத்தான ஆளுமைக்கு முன்னால் சின்னஞ்சிறு பயலான நான் சுக்குநூறாகிப் போன மறக்கவே முடியாத தருணமது. இன்னொருமுறை கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, திருநெல்வேலிக்குச் சென்று விட்டேன். மறுநாளே தன் துணைவியாரோடு திருநெல்வேலிக்கு வந்தவர், ‘நீ இருந்து அவனைக் கூட்டிக்கிட்டு வா’ என்று அகிலா அம்மையாரிடம் சொல்லி அவரை எங்கள் இல்லத்திலேயே விட்டுவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, செ.கணேசலிங்கம், செ.யோகநாதன், எஸ்.பொ, கோமல் சாமிநாதன், வண்ணநிலவன் போன்ற இலக்கிய மற்றும் பத்திரிக்கையுலக ஆளுமைகளோடு பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர். இளையராஜா, கமல்ஹாசன், பரதன், கிரீஷ் காசரவல்லி, கே.விஸ்வநாத், ஷாஜி கருண், கவிஞர் வாலி, மோகன்லால், மம்முட்டி, மகேஷ்பட், அனந்து, கிரேசி மோகன் போன்ற திரையுலகக் கலைஞர்களுடன் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர். இன்று நான் சினிமாவில் இருப்பதற்கு மட்டுமல்ல, சென்னையில் நான் இருப்பதற்கே காரணமானவர். ஏற்கனவே எனக்கிருந்த வாசிக்கும் பழக்கத்தைத் தீவிரப்படுத்தியவர். தனது முதல் படமான ‘கோகிலா’வை திரையிட்டு, தன் அருகிலேயே என்னை அமரவைத்துக் கொண்டு ‘ஷாட் பை ஷாட்’டாக Film making என்பது ஒன்றும் கம்பசூத்திரமல்ல என்பதை எளிமையாக விளக்கியவர். இது போன்ற எத்தனையோ உலகத் திரைப்படங்களை அருகில் அமர்ந்து பார்க்கச் செய்து தொழில்நுட்ப அறிவை சுவையாகப் புகட்டியவர். பின்பு அவரது சினிமா பட்டறையில் அவருடைய தற்போதைய மாணவர்களுக்கு என்னை வகுப்பெடுக்க வைத்தவர். இப்படி இன்னும் பல பல.

சினிமா மற்றுமல்லாமல் வாழ்வின் யதார்த்தமான விஷயங்களை மிக எளிதாகப் புரியும்படி உரைத்தவர். அவரது நண்பர் ஒருவரின் இல்லத்துக்கு என்னை அழைத்துச் சென்றிருந்தார். தென்னக ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூர்த்தி என்ற அந்த மனிதருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. திரு. மூர்த்தி, Wildlife Photographyயில் உலக அளவில் சிறந்து விளங்கும் அல்ஃபோன்ஸ் ராயின் தகப்பனார். ’மூர்த்தி! இந்தப் புள்ளைக்கும் ஒங்க ஊர்தான்’. சந்தோஷமாக அறிமுகம் செய்து வைத்தார். ஊர்ப்பாசம் கண்களில் கொப்பளிக்க பெரியவர் மூர்த்தி காபி கொடுத்து உபசரித்தார். அப்போதெல்லாம் காபி, டீ அருந்தும் பழக்கம் எனக்கில்லை என்பதால் காபியைத் தவிர்த்தேன். ‘அப்ப பால் சாப்பிடறீங்களா? ஜூஸ் தரட்டுமா? என்று கேட்டார், மூர்த்தி.

காரில் வீடு திரும்பும் போது வாத்தியார் சொன்னார்.

‘காபி, டீ குடிக்காதது நல்ல பழக்கம்தான். ஆனா யார் இடத்துக்கோ நாம போயிருக்கும் போது, அவங்களால அதுதான் குடுக்க முடியும்னா யோசிக்காம வாங்கிக் குடிச்சிடு. உனக்காக அவங்க அவங்க வீட்ல இல்லாத ஒண்ண தயார் பண்ணிக் குடுக்கிற சிரமத்தை இனியாவது தவிர்த்திடு’.

வேதவாக்காக இன்று வரை நான் கடைப்பிடித்து வரும் பழக்கம், இது. இப்படி அறிவுறுத்தியவர் ஒருபோதும் என்னை அசைவம் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியதில்லை. ‘எப்படிப்பா சைவம் மட்டுமே சாப்பிட்டு உன்னால இருக்க முடியுது!’ என்று வியந்ததோடு சரி.

மாற்று அபிப்ராயமுடையவர்களை கொலைவெறியுடன் முறைத்துப் பார்ப்பதை இயல்பாகத் தவிர்க்கச் செய்தவர். நெருக்கடியான காலக்கட்டத்தில் அவரை கடுமையாக வசை பாடியவர்களிடத்திலும் மரியாதையுடன் பழகியவர். இன்றுவரை அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள முனையும் பழக்கம், இது. மாற்றுக் கருத்துடையவர்களை முறைப்பதில்லையே தவிர அவரைப் போன்று இன்முகம் காட்டிப் பழக இயலாமல் விலகிச் சென்று விடுகிறேன்.

இயல்பிலேயே Dog Loversஆன அவரும், நானும் மிக அதிகமான நேரங்களில் நாய்களைப் பற்றிப் பேசியிருக்கிறோம். ‘மூன்றாம் பிறை’ சுப்பிரமணி, ‘சத்மா’ சில்கி போன்ற நாய்களுக்குப் பிறகு, ‘பீட்டர்’ என்னும் லேப்ரடார் வகை நாயை பிரியமுடன் வளர்த்து வந்தார். ‘பீட்டர்’ காலமான பிறகு நாயில்லாத அவர் வீட்டைப் பார்க்கப் பிடிக்காமல், சாலிகிராமத்துக் குப்பைத் தொட்டியிருந்து, பிறந்து இரண்டு நாட்களே ஆகியிருந்த தெருநாய்க்குட்டி ஒன்றை எடுத்து அவரிடம் சென்றுக் கொடுத்தேன். பச்சைக் குழந்தையை வாங்குவது போல கைகளில் ஏந்திக் கொண்டார். வாங்கிய மறுநிமிடமே, ‘சுப்பிரமணி! மறுபடியும் வந்துட்டியாடா?’ என்றார். சுப்பிரமணி என்ற சுப்புவுக்குத் துணையாக ‘வள்ளி’ என்கிற இன்னொரு நாட்டுநாய்க்குட்டியை வளர்க்கத் துவங்கினார். கடந்த மாதத்தில் ஒருநாள் வீட்டுக்குச் சென்ற என்னைப் பார்த்து மெதுவாக நடந்து அருகில் வந்து கொஞ்சினான், சுப்பு. தடவிக்கொடுத்தபடியே, ‘டல்லாயிட்டானே ஸார், இவன்?’ என்றேன்.

‘வயசாகுதில்லையா? அதான். His days are numbered’ என்றவர், ‘சுப்பு, இங்க வாடா’ என்றழைத்து அதன் தலையையும், கழுத்தையும் தடவிக் கொடுத்தவாறே, ‘எனக்கு முன்னாடி நீ போயிடாதடா’ என்றார்.

ஆனந்த விகடனில் நான் எழுதிய ‘மூங்கில் மூச்சு’ தொடரின் இரண்டாவது வாரத்திலேயே அவரைப் பற்றி எழுதியிருந்தேன். படித்துவிட்டு தொலைபேசியில் பேச முடியாமல் உடைந்து அழுதார். ‘உனக்கெல்லாம் ஒண்ணுமே செய்யாத சாமானியன் நான். என்னைப் போயி இப்படித் தலையிலத் தூக்கி வச்சு எழுதியிருக்கியேம்மா!’ என்றார். சென்ற வருடம் அதே விகடனில் நான் எழுதிய ‘சஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும்’ சிறுகதையைப் படித்து விட்டும் தாங்க முடியாமல் அழுதார். அந்தக் கதையின் பின்னணியை நாங்கள் இருவரும் அறிந்திருந்ததே அவரது அழுகைக்குக் காரணம். அவர் காலமான அன்று நிகழ்ந்த சில கசப்பான விஷயங்களைக் கண்டும், காணாமல் கண்ணாடிப் பெட்டிக்குள் படுத்திருந்த வாத்தியாரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘சஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும்’ சிறுகதையின் கடைசி வரி, துல்லியமாக வாத்தியாரின் வாழ்விலும் நடந்தேறும் என்று உறுதியாக நம்பினேன். அதுவே நடந்தது.

இயற்கையான தலைவழுக்கையை தொப்பி போட்டு மறைத்தததைத் தவிர, தன்னுடைய எந்த பலவீனத்தையும் அவர் மறைத்ததில்லை. அதையுமே ‘தலைமுறைகள்’ படத்துக்காகத் துறந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளையராஜாவைப் பார்க்க காரில் சென்று கொண்டிருந்தோம். செல்லும் வழியில் ‘தலைமுறைகள்’ திரைப்பட போஸ்டர் ஒன்றில் வழுக்கைத்தலையுடன் அவர் இருக்கும் க்ளோஸ்-அப் புகைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது.

‘இதுக்குத்தான் இத்தன வருஷமா மறச்சு வச்சிருந்தீங்களோன்னு தோணுது’ என்றேன்.

‘Exactly. சொக்கலிங்க பாகவதர் இருந்தாருன்னா அவரத்தான் நடிக்க வச்சிருப்பேன். நானே இதை எப்படி செஞ்சேன்னே தெரியல’ என்றார்.

‘இத செஞ்சது நீங்க இல்ல, ஸார். காலம்’ என்றேன்.

நான் இப்படி சொல்லவும் என் கைகளைப் பிடித்துக் கொண்டவர், ‘நான் முதன்முதல்ல ஷேவ் பண்றத நிறுத்தினவுடனே நீதான் வந்து சத்தம் போட்டே. இப்ப நீதான் இதையும் சொல்றே’ என்றார். மருத்துவமனையில் இளையராஜாவைப் பார்த்தவுடன், ‘என்ன ராஜா, இது! ஹாஸ்பிட்டல்ல வந்து படுத்துக்கிட்டு! நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் நாலஞ்சு படம் பண்ண வேண்டாமா?’ என்றார்.

‘தலைமுறைகள்’ திரைப்படத்துக்கு அடுத்ததாக ஒரு திரைக்கதையை எழுதும் திட்டத்திலிருந்தார். முழுக்கதையையும் என்னை அழைத்துச் சொன்னவர், ’உன்கிட்ட சொன்னதுக்கப்புறம்தான் ராஜாக்கிட்ட சொல்லணும்னு நெனைக்கிறேன். இன்னும் இதை கொஞ்சம் ஷேப் பண்ணிட்டு, ராஜாவப் போய்ப் பாத்து சொல்லிடலாம். நீயும் வந்திடு’ என்று சொன்னபோது, அது நடக்கும் என்று நம்பினேன்.

கடந்த வியாழனன்று காலை இயக்குனர் வெற்றி மாறன் எனக்கு ஃபோன் பண்ணி, ‘எங்கண்ணே இருக்கீங்க?’ என்றான்.

‘வீட்லதான். ஏன் வெற்றி?’ என்று கேட்டதற்கு,

‘சரி சரி. பதட்டப்படாம கெளம்பி விஜயா ஹாஸ்பிடல் போங்க. ஸார்க்கு ஒடம்பு முடியலியாம். நான் பெங்களூர்ல இருக்கேன். மத்தியானம் வந்துடறேன்’ என்றான்.

விஜயா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் வாசலில் அமர்ந்திருந்த அகிலா அம்மாவைத் தவிர்த்து சற்றுத் தள்ளி வந்தேன். ‘வந்துட்டியா?’ என்று என்னை அடையாளம் தெரிந்து கொண்டு கையை எட்டிப் பிடித்தார், நான் வாழ்க்கையில் முதன் முறையாகப் பார்க்கும் அர்ச்சனா அக்கா. என்னைப் பார்த்ததும், அருகில் வந்து நின்று கொண்ட பாலாவும், நானும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. இயக்குனர்கள் சீனுராமசாமியும், ராமும் வந்து சேர்ந்தனர். சீனு ‘ஸாருக்கு ஒண்ணும் ஆயிருக்காதுண்ணே’ என்று சொல்லிக் கொண்டே இருந்தான். ராம் தொடர்ந்து என்னிடத்தில் ‘ஸார் நல்லாத்தானே இருக்காரு?’ என்று கேட்டபடி இருக்க நேரடியாக பதில் சொல்லாமல் ஏதேதோ சொல்லி சமாளித்தேன். சைகை காண்பித்து பாலா என்னை வெளியே அழைக்க, இருவரும் விஜயா மருத்துவமனைக்கு வெளியே வந்தோம். பாலா ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து இழுக்கத் துவங்கினார். பாலாவின் முகம் எனக்கு வாத்தியாரின் உடல்நிலை குறித்த உண்மையைச் சொல்லாமல் சொல்லியது.

‘கெளவன் போயிட்டானோ, பாலா?’ கேட்கும்போதே என் குரல் உடைந்தது.

பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு ‘ஆம்’ என்பது போல தலையசைத்த பாலாவிடம் அதற்குப் பிறகு எனக்குப் பேச ஒன்றுமில்லாமல் போனது.

உடம்பும், மனசும் நடுங்கியதே தவிர அழுகை வரவில்லை. சீனுராமசாமி, ராம் இருவரையும் அழைத்து, ‘ரெண்டு பேரும் கெளம்பி நம்ம ஸ்கூலுக்குப் போயி ஏற்பாடுகள கவனிங்கடா’ என்றேன். ‘மறக்காம அவரோட தொப்பிய எடுக்கணும்’ என்றார் பாலா. அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகளைச் செய்யத் துவங்கினோம்.

என் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் ‘பாலு மகேந்திரா சினிமா பட்டறை’யில் வாத்தியாருக்காகக் காத்திருந்தோம். படுத்திருந்த வாத்தியாரை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கும்போது கூட அழுகை வரவில்லை. எல்லோரும் வந்தனர். அஞ்சலி செலுத்தினர். கண்ணீர் உகுத்தனர். இரவு நெருங்கவும் மகனிடம், ‘இன்னைக்கு ஒருநாள்தான் பாலு தாத்தா கூட அப்பாவால இருக்க முடியும். என்னைத் தேடாதே’ என்று ஃபோனில் சொன்னேன். நள்ளிரவில் உறங்குவது போலவே எங்களுக்குத் தோன்றிய வாத்தியாரின் உடலுக்கருகே அமர்ந்தபடி நானும், அர்ச்சனா அக்காவும் விடிய விடிய அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இடையிடையே ‘அக்கா! வாத்தியார் மூச்சு விடற மாதிரியே இருக்குக்கா’ என்று பதறினேன். எழுந்து சென்று கண்ணாடிப் பெட்டிக்குள் எட்டிப் பார்த்தோம். இருவருக்குமே அது பைத்தியக்காரத்தனம் என்று தோன்றினாலும் அதைச் செய்தோம். பாலுமகேந்திரா என்கிற மகத்தான மனிதரைப் பற்றிய நான் கேள்வியேபட்டிராத செய்திகளை கண்ணீருடன் அர்ச்சனா என்கிற நடிகைக்குள் இருக்கிற சுதா என்ற அந்தப் பெண்மணி சொல்லச் சொல்ல வாத்தியாரை கைகூப்பி அழுதபடி வணங்கியபடியே அமர்ந்திருந்தேன்.

இலங்கையில் ‘அமிர்தகழி’ என்னும் சிற்றூரில் துவங்கிய அந்த மனிதரின் வாழ்க்கைப் பயணம், சென்னையில் ‘போரூர்’ மின் தகன மயானத்தில் முடிவடைந்தபோது முழுவதுமாக நொறுங்கிப்போய்விட்டேன். ’மறுபடியும்’ திரைப்படத்தை ‘என்னை ‘நான்’ஆக்கிய எல்லா பெண்களுக்கும்’ என்றொரு டைட்டில் கார்டு போட்டு சமர்ப்பித்திருப்பார், ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா. என் வாழ்க்கையை வடிவமைத்த அந்தப் பெரிய மனிதரை இழந்துத் தவிக்கிறேன். இரவெல்லாம் எழுந்து உட்கார்ந்து கதறி அழுகிறேன். அந்த மனிதர் இருக்கும் போது ஒன்றும் தெரியவில்லை. இப்போதுதான் இன்றைய ‘என்னை’ தட்டித் தடவி உருவாக்கியவர் அவர்தான் என்பது எனக்கு புரியவருகிறது. திருச்சியிலிருக்கும் Caricaturist சுகுமார்ஜி என்கிற நண்பர் வரைந்திருந்த வாத்தியாரின் கேரிகேச்சர் ஒன்றை, ஃபிரேம் செய்து சமீபத்தில் வாத்தியாரிடம் சென்று கொடுத்தேன். அதைப் பார்த்த மாத்திரத்தில் மகிழ்ந்தவர், ‘அவருக்கு ஃபோன் பண்ணேன். ஒரு நன்றி சொல்லிடலாம்’ என்றார். அவரது ஃபோன் நம்பர் என்னிடத்தில் அப்போது இருக்கவில்லை. ‘நீங்க வேணா அவருக்கு நன்றி சொல்லிப் பேசுங்க. வீடியோல பதிவு பண்ணி அவருக்கு அனுப்பிடறேன்’ என்றேன். அவரது மேஜையில் இருந்த அந்த கேரிக்கேச்சர் படத்திலிருந்து அவரது ஸ்டைலிலேயே Slow pan இல் கேமராவை நகர்த்தி, அவருக்கு focus செய்து Action sir என்றேன். பேசத் துவங்கினார். பொக்கிஷமாக என்னிடமுள்ள அந்த வீடியோவைப் பார்த்து மீண்டும் மீண்டும் அழுது கொண்டிருக்கிறேன்.

‘வாழ்க்கைல முக்கியமான விஷயங்களை மனதால முடிவு செய்யாதே. பொறுமையா அறிவால முடிவெடு’ என்பார் வாத்தியார். எழுபது வயதைத் தாண்டிய, உடல்நலம் குன்றிய முதியவர் காலமாவது இயற்கைதான் என்பதை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. சம்பிரதாயமாக அனைவரும் ‘அவர் மறைந்தாலும் அவர் படைப்புகள் நம்மிடையே வாழும்’ என்கிறார்கள். ‘எவனுக்குய்யா வேணும் படைப்பு? எனக்கு எங்க வாத்தியார் வேணும்யா’ என்று கத்தத் தோன்றுகிறது.

நாக்கு

திருநவேலியிலிருந்து ஓவியர் பொன் வள்ளிநாயகம் ஃபோன் பண்ணினான்.

“எண்ணே! இன்னும் எந்திக்கலையா? காலைலயே மெஸேஜ் அனுப்புனனே பாக்கலயோ”

“இல்லயடே. என்ன விஷயம்? தி.க.சி. தாத்தா சும்மா இருக்காள்லா?”

“அவாளுக்கென்ன! ஜம்முன்னு இருக்கா. இப்பம் அங்கெதான் இருக்கென்… இன்னைக்கு நெல்லையப்பருக்கு திருக்கல்யாணம்லா! ஒதயத்துலயே எந்திரிச்சு குளிச்சு முளுகி வீட்டம்மாவும், நானும் கோயிலுக்கு வந்துட்டோம். நாலு மணிக்குல்லாம் தாலியக் கட்டிட்டாருல்லா! அதச் சொல்லத்தான் கூப்பிட்டேன்.”

வள்ளி சொல்வதற்கு இன்னும் விஷயம் இருக்கிறது என்பது தெரியுமென்பதால், “ம்ம்ம். அப்புறம்?” என்றேன்.

‘நாலே முக்காலுக்கெல்லாம் பந்தியப் போட்டுட்டானுவொ! கேஸரி, பொங்கல், உளுந்தவட, சாம்பார், தேங்காச் சட்னி . . . அத ஏன் கேக்கிய? வெளுத்துட்டான்”.

அத்தனையும் சாப்பிட்ட சுவை நாவிலும், மனதிலும் தங்கியிருக்க மேலும் தொடர்ந்தான், ஓவியன்.

“கைகளுவும்போது லோடுமேன் முருகானந்தம், ‘காலைலப் பந்தி அஞ்சு மணிக்குல்லாம் முடிஞ்சிட்டு. அப்பம் மத்தியானப் பந்தி பதினோறு மணிக்குல்லாம் போட்டுருவாங்க. வராம போயிராதே வள்ளிண்ணே’ன்னு சொல்லுதான்.திருநவேலிக்காரன் திருநவேலிக்காரன்தாம்ணே! என்ன சொல்லுதிய?”

வள்ளிநாயகம் சொல்வது திருநவேலிக்கும் மட்டும் பொருந்தாதுதான். சுவையான உணவைத் தேடி அலைகிற மனதுடைய மனிதர்கள் எல்லா ஊர்களிலும்தான் இருக்கிறார்கள். வீட்டில் என்னதான் ருசியாகச் சமைத்தாலும் வெளியிடங்களில் சாப்பிட மனம் கிடந்து அலைந்து கொண்டேதான் இருக்கிறது.

“விசேஷ வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சுங்கெ! ஆடிமாசத்துல மூர்த்தம்தான் வைக்க மாட்டானுவொ. ஒரு சடங்கு வீடு வரப்பிடாதாய்யா!”

இப்படி புலம்புபவர்களுக்கான விசேஷ வீட்டு சாப்பாட்டைப் போடுவதற்காகவே சில மெஸ்கள், மெஸ் வேடத்தில் இருக்கும் சிறு ஹோட்டல்கள் என திருநவேலியில் நிறைய உள்ளன.

சென்னையில் நடக்கும் விசேஷ வீடுகளில் போடப்படும் சாப்பாட்டைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்போது உள்ள நடைமுறையில் போடப்படும் சாப்பாட்டில் வகைகள் என்னவோ விதவிதமாகத்தான் உள்ளன. கைகளில் பிளாஸ்டிக் க்ளவுஸும், தலைக்கு குளியல் கவரும் போட்டு, சீருடையில் கேட்டரிங் ஊழியர்கள் பரிமாறும் சாப்பாட்டில் சுவை இல்லாமலில்லை. ஆனாலும் திருநவேலி விசேஷ வீடுகளில் கைநனைத்த எந்த ஒரு மனிதனையும் பெருநகர நவீனப் பந்திகள் திருப்திப்படுத்தி விடமுடியாது.

“அவன் என்னவே! மண்சட்டிப்பானைல தயிரக் குடுக்கான். மோர நல்லா நாலு கரண்டி அள்ளி ஊத்தி எலைல வளிஞ்சு ஓட வேண்டாமா!”

“பந்தி சமுக்காளத்த விரிச்சு, நல்லா சம்மணம் போட்டு உக்காந்து சாப்பிட்டாதானெ திங்கற சோறு செமிக்கும்! நீங்க ஒய்யார மயிரா டேபிள் சேர் போட்டு எலையப் போட்டுத் திங்கதுக்கு சென்ட்ரல் கபேக்குப் போயி வெஜிடபிள் பிரியாணி திங்க வேண்டியதானேங்கென்! நல்லா பட்டசோம்ப போட்டு மணக்க மணக்க குடுப்பான். என்ன மருமகனெ! நான் சொல்லது சரிதானெ!”

திருநவேலியைப் பூர்விகமாகக் கொண்ட ரெஜினால்டு சித்தப்பாவின் மகன் திருமணம் சென்னையில் நடந்தது. திருமணம் சென்னையில் நடந்தாலும், மண்டபம் முழுக்க திருநவேலி ஆட்கள் நிறைந்திருந்ததனால், முழுக்க முழுக்க திருநவேலி பாஷை காதில் ஒலிக்க, பாளையங்கோட்டையில் இருக்கும் உணர்வு ஏற்பட்டது.

“அத்தானோய்! என்னய்யா அந்தப் பக்கமே லாந்திக்கிட்டிருக்கிய! கொஞ்சம் ஆம்பளேளு பக்கமும்தான் திரும்பிப் பாருங்களேன்”.

“ஒங்க மோரைகள்லாம் பாக்கற மாதிரியாவே இருக்கு! கொஞ்சம் நேரம் குளுகுளுன்னு இருக்குறது பொறுக்காதே”.

சுத்தமான திருநவேலி அத்தான் – மைத்துனர் கேலிப் பேச்சுகள். பாதிரியாரின் தலைமையில் திருமணம் நடந்து முடிந்தவுடன் ரெஜினால்டு சித்தப்பா, “மகனே சாப்பிடாம போயிராதே! வெஜிட்டேரியன் சப்பாடுதான். பந்தி மாடில”என்றார்.

சென்னையில் உள்ள யாரோ கேட்டரிங் சர்வீஸ் சமையல்தான் என்றாலும், சுற்றிலும் உள்ள திருநவேலிக்காரர்களின் குரல்கள், காதில் விழுந்து மனதை நிறைத்தது. அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர், வேகவேகமாகச் சாப்பிட்டு முடித்து இலையை மூடினார்.

“அண்ணாச்சி. வத்தக்கொளம்பு சாப்பிடலியா?”

“வத்தக் கொளம்ப நான் பாக்கவே இல்லையே!” வருத்தத்துடன் சொன்னார்.

“நல்ல டேஸ்ட்டு அண்ணாச்சி. நம்ம ஊர்ல சாப்பிட்ட மாரியே இருந்தது. படக்குனு எலைய மூடிட்டேளே!” என்றேன்.

“மெட்ராஸ் ஊர்ல நம்மள யாருக்குத் தெரியப்போகுது! ஏ, தம்பி! கொஞ்சம் சோறு போட்டு வத்தக்கொளம்பு ஊத்துங்க” மடக்கிய இலையை விரித்து, சரி பண்ணினார்.

இப்படி அபூர்வமாக அமைவது தவிர, சென்னையின் விசேஷ வீட்டு சாப்பாட்டில் என்னைப் போன்ற திருநவேலிக்காரர்கள் எதிர்பார்க்கிற, சொல்ல முடியாமல் சுவைக்க மட்டுமே தெரிந்த ஏதோ ஒரு ருசி கிடைப்பதேயில்லை. அதனால்தான் ஹோட்டல் ஹோட்டலாக ஏறி இறங்குகிறோம். சாலிகிராமத்துச் சுற்றுப் பகுதிகளில் இருக்கிற எல்லா ஹோட்டல்களோடும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அநேகமாக எல்லா ஹோட்டல் ஊழியர்களுக்கும் என் முகம் பரிச்சயம் என்று சொல்லலாம். அருகில் வந்து, “‘சும்மா இருக்கேளா” என்று கேட்பதில்லையே தவிர ஒரு சினேகப் புன்னகையை உதிர்க்காமல் இருக்க மாட்டார்கள். பெரிய ஹோட்டல்களிலிருந்து பெயர்ப் பலகை கூட இல்லாத சின்ன ஹோட்டல்களையும் விட்டு வைப்பதில்லை. ‘பாட்டையா’ பாரதி மணியின் ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகம் முடிந்து நானும் நண்பர் மனோவும் அவரது பைக்கில் கிளம்பும் போதே, மனோ சொன்னார். “சுகா. பசிக்குது. திருநவேலி ஹோட்டலுக்கு போலாமா? நாம சேந்து போயி ரொம்ப நாளாச்சு” என்றார். சாலிகிராமத்துக்கு நாங்கள் வந்து சேரும்போது திருநவேலி ஹோட்டல் பூட்டியிருந்தது. ஏற்கனவே பாட்டையாவின் நடிப்பைப் பார்த்த பாதிப்பினால் ஏற்பட்ட மனச்சோர்வுடன் பசியும் சேர்ந்து கொள்ள, மனோவின் முகம் ஏமாற்றத்தில் வாடியது.

“இப்ப என்ன செய்றது, சுகா?”

“ஒண்ணும் பிரச்சனையில்ல, மனோ. வண்டிய நான் சொல்ற எடத்துக்கு விடுங்க”.

காவேரி தெருவிலுள்ள ‘முத்துலட்சுமி பவனு’க்கு மனோவை அழைத்துச் சென்றேன். சுடச்சுட இட்லியும், சாம்பாரும், தேங்காய்ச் சட்னியும் மனோவை உற்சாகப்படுத்தின. “இந்த வழியா எத்தனவாட்டி போயிருக்கேன். ஆனா இந்தக் கடய மிஸ் பண்ணிட்டேனே! சே” புலம்பியபடி தொடர்ந்து அரைமணிநேரம் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார், மனோ.

முத்துலட்சுமி பவனி’ன் சொந்தக்காரர், கழுகுமலைக்காரர். ஊர்ப்பாசத்தில் என்னைப் பார்த்தால் மகிழ்ச்சியில் மலர்ந்து, “ஸார் வாங்க” என்றபடி உள்ளே எட்டிப்பார்த்து, “ஏட்டி. சட்னி அரஞ்சுட்டா?” என்று குரல் கொடுப்பார். உள்ளே அவரது வீட்டம்மா அப்போதுதான் கிரைண்டரில் தேங்காய்ச் சட்னியை அரைய விட்டிருப்பார்கள். “ஒரு பத்து நிமிசம். அதுவரைக்கும் ரெண்டே ரெண்டு புரோட்டா சாப்பிடுதேளா! சைவக் குருமாதான். பிச்சுப் போடச் சொல்லுதென். அதுக்குள்ள சட்னி ரெடியாயிரும். இட்லியும் வெந்திரும்’.

திருநவேலி ஹோட்டல் இல்லையென்றால், அந்த ஏமாற்றத்தை சரி செய்வது, முத்துலட்சுமி பவன்தான். திருநவேலி ஹோட்டல் எப்போது திறந்திருக்கும், எப்போது மூடியிருக்கும் என்பதை ‘வானிலை அறிக்கை ரமணன்’ அவர்களால் கூடக் கணிக்க முடியாது. பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் சென்னைக்கு வரும் போதெல்லாம் கேட்பார்.

“சுகா. நீங்க ‘தாயார் சன்னதி’ல எளுதுன திருநவேலி ஹோட்டலுக்கு எப்பதான் கூட்டிட்டுப் போகப் போறிய?”

சமீபத்தில் அதற்கு சந்தர்ப்பம் வாய்த்தது. காலை ஒன்பது மணியளவில் அவரை அழைத்துச் சென்றேன். சின்னஞ்சிறிய திருநவேலி ஹோட்டலின் உள்ளே நிற்கக் கூட முடியாத அளவுக்குக் கூட்டம். இருவரும் சிறிது நேரம் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தோம். இதற்குள் பேராசிரியரை அடையாளம் கண்டுகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் எழுந்து அவரை வணங்கினார்கள்.

“உள்ளெ வேணா போயி நிப்போமா சுகா?” என்றார், பேராசிரியர்.

“வேண்டாம் ஸார். எச்சிக்கையோட ஒங்க ரசிகர்கள் ஒங்களுக்குக் கை குடுக்க சான்ஸ் இருக்கு” என்று சொல்லித் தடுத்து வைத்தேன். நேரம் ஆக ஆக, இடம் காலியாகவேயில்லை.

“என்ன சுகா? யாருமே எந்திரிக்க மாதிரி தெரியலியே!”என்றார், பேராசிரியர்.

“ஒங்களப் பாத்த சந்தோஷத்துல எல்லாரும் கூட ரெண்டு எண்ணெ தோச சொல்லிட்டாங்கன்னு நெனைக்கிறேன்” என்றேன்.

சிறிது நேரத்தில் ஒரு இடம் காலியாக, பேராசிரியரை உட்கார வைத்தேன். திருநவேலி ஹோட்டல் உரிமையாளர் கதிருக்கு பேராசிரியரைப் பார்த்து சந்தோஷம் தாங்க முடியவில்லை.

“எண்ணே! ஸாரயே நம்ம கடைக்குக் கூட்டிட்டு வந்துட்டீங்களே” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

“நேத்து காலைல சாப்பிடதுக்கப்புறம் ராத்திரிதான் சாப்பிட்டேன், சுகா. தோசை ருசி நாக்குலயே தங்கிடுச்சு” மறுநாள் பேசும் போது சொன்னார், பேராசிரியர்.

நல்ல உணவுவகைகளை ருசிப்பது ஒரு வகை. ருசித்ததை ரசித்துச் சொல்வது ஒருவகை. இந்த இரண்டிலும் தேர்ந்தவர், நண்பர் கோலப்பன். ‘ஹிண்டு’வில் (தி இந்து அல்ல) பணிபுரியும் அவர், நாகர்கோயிலுக்கு அருகே உள்ள ‘பறக்கை’ என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரு நாள் சொன்னார்.

“சுகா. எங்கம்ம பறக்கைலேருந்து வந்திருக்கா. உளுந்தக்களிய நல்லெண்ணய ஊத்தி உருட்டி வச்சிருந்தா பாருங்க. ரெண்டு மூணு உருண்டய தின்னு போட்டேன். வயிறு தாயளி திம்முன்னு இருக்குல்லா.”

“தாயொடு அறுசுவை போம், கோலப்பன். இன்னும் ரெண்டு தின்னுங்க” என்றேன்.

தெற்கே உள்ளவர்கள்தான் ருசியைத்தேடி அலைபவர்கள் என்றில்லை. சென்னையில் நல்ல ஹோட்டல்களைத் தேடிப் பிடிப்பதற்காகவே எனக்கொரு நண்பர் இருக்கிறார். நட்பாஸ் என்கிற பாஸ்கர்தான் அவர். எண்ணிலடங்கா புனைப்பெயர்களில் இணையத்தில் எழுதும் அவர், ஒரு தீவிர வாசகர் (அவருடைய எழுத்துக்கு).

“ஸார்! கே.கே நகர்ல ‘ஒன்லி வடை’ன்னு ஒரு கட தொறந்திருக்காங்க. எப்படியாது அவங்களுக்கு ஒரு வாய்ப்பு குடுக்கணும், ஸார்”.

“மைலாப்பூர் மாமி மெஸ்ல நாம பொங்கலும், வடையும் சாப்பிட்டு நாளாச்சு. பாவம் ஸார், அவங்க. நாளைக்காவது போவோமா?”

இப்படி குறுஞ்செய்திகளை எனக்கு அனுப்பும் இலக்கிய உபாசகர், பாஸ்கர்.

வழக்கமாக நான் அழைத்துச் செல்லும் திருநவேலி ஹோட்டல் தவிர, ஆற்காடு சாலையின் பரணி மருத்துவமனைக்கு எதிரே உள்ள மற்றொரு திருநவேலி ஹோட்டலையும் பாஸ்கருக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறேன். அந்த ஹோட்டலில் கிடைக்கும் சின்ன அடை காலியாகிவிடுமோ என்கிற பதற்றத்தில், கே.கே நகரிலிருந்து சாலிகிராமத்துக்கு, இருபது கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டாத அவரது டூவீலரில், புயல் போலக் கிளம்பி வருவார், பாஸ்கர்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு மாலைப் பொழுதில் நானும், பாஸ்கரும் கே.கே நகர் பிள்ளையார் கோயிலுக்கு அருகே வழக்கமாக நாங்கள் காப்பி சாப்பிடும் கடையில் அமர்ந்து சமோசா தின்றபடி காப்பி குடித்துக் கொண்டிருந்தோம். பேண்ட் பாக்கெட்டிலிருந்த கைபேசி ஒலித்தது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராஜகோபால் அழைத்தார். ராஜகோபால் மீது எனக்கிருக்கும் தனி பிரியத்துக்குக் காரணம், அவரும் திருநவேலிக்காரர். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கிறோம் என்கிற மமதை சிறிதும் இல்லாதவர். சாதாரண ஆனந்த விகடன் வாசகர்களிடம் கூட சகஜமாகப் பேசிப் பழகக்கூடியவர்.

“வணக்கம் ராஜகோபால்! சௌக்கியமா?” என்றேன்.

“எங்கண்ணே இருக்கிய? நான் ஒரு வாரமா ஒங்க ஏரியாலதான் சுத்திக்கிட்டிருக்கேன்” என்றார்.

“அடடா! என்ன விஷயம்? வீடு மாத்திட்டேளா?” அவர் நிலைமை தெரியாமல் இப்படிக் கேட்டுத் தொலைத்து விட்டேன்.

“வீட்டம்மாவ இங்கெ விஜயால அட்மிட் பண்ணியிருக்கெண்ணே. நாலு நாளா ஐ.சி.யூ.ல இருந்துட்டு இன்னைக்குத்தான் ஜெனரல் வார்டுக்கு மாத்துனோம்” என்றார்.

அதிர்ந்து போனேன். ராஜகோபால் தொடர்ந்து விவரம் சொல்லிக் கொண்டிருந்தார். என் முன்னால் காப்பி ஆறிக் கொண்டிருந்தது. அதை நான் கவனிக்காமல் பேசுகிற தீவிரத்தை என் முன்னே அமர்ந்திருந்த பாஸ்கரும் உணர்ந்து அமைதியாக நான் பேசுவதையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“எப்பன்னாலும் எனக்கு ஃபோன் பண்ணுங்க. என்னைக்கு டிஸ்சார்ஜ் பண்றீங்கன்னும் தகவல் சொல்லுங்க” என்று வருத்தத்துடன் சொல்லிவிட்டு, ஃபோனை கட் செய்யப் போனேன்.

“எண்ணே! ஒரு முக்கியமான விஷயம். நான் ஒங்களுக்கு ஃபோன் பண்ணுனதே அதுக்குத்தான்”.

“சொல்லுங்க தம்பி. தயங்காதிய”.

“இந்த திருநவேலி ஓட்டல் பூட்டியே கெடக்கெ! ஏம்ணே? இதோட நாலஞ்சு மட்டம் போயிட்டு வந்துட்டேன்” என்றார், ராஜகோபால்.

எழுத்துக்காரர் வண்ணநிலவனுடன் சில நிமிடங்கள் . . .

கல்லூரி முடித்த காலத்தில் வண்ணநிலவனின் ‘கரையும் உருவங்கள்’ சிறுகதையைப் படித்த போது, அக்கதையின் நாயகன், அப்போதைய ‘நான்’ என்பதை அறிந்து அதிர்ந்தேன். இத்தனை ஆண்டுகள் கழித்து அவரது ‘உள்ளும், புறமும்’ கதையைப் படிக்கும் போது, அதன் நாயகன், இப்போதைய ‘நான்’ என்பதை உணர முடிகிறது. மனதுக்கு நெருக்கமான வண்ணநிலவன் அண்ணாச்சியை நான் முதன்முதலாக சந்தித்த போது, அவர் ‘சுபமங்களா’ பத்திரிக்கையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். சுபமங்களா அலுவலகத்துக்கு தனது நண்பர் கோமல் சுவாமிநாதனை சந்திக்க ‘வாத்தியார்’ பாலு மகேந்திரா செல்லும் போதெல்லாம், என்னையும் உடன் அழைத்துச் செல்வார். கோமலுடன் வாத்தியார் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் நான் வண்ணநிலவன் அண்ணாச்சியிடம் பேச்சு கொடுப்பேன். எந்த இடத்திலும் வண்ணநிலவன் என்ற எழுத்தாளரை என்னால் பார்க்க முடிந்ததே இல்லை. திருநெல்வேலி மாவட்டத்தின் தாதன்குளம் என்ற சிறுகிராமத்தில் இன்னமும் வசிக்கிற ராமச்சந்திரன் என்கிற ஓர் எளிய மனிதரைத்தான் ஒவ்வொரு சந்திப்பிலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனந்த விகடனிலிருந்து ‘மூங்கில் மூச்சு’ புத்தகமாக வெளிவந்த போது, வண்ணநிலவன் அண்ணாச்சி அணிந்துரை எழுதிக் கொடுத்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவரை சந்தித்த பிறகு, இடையில் ஒருமுறை ‘சாரல்’ விருது விழாவிலும், பிறகு இரண்டொரு முறை தொலைபேசியில் பேசிக் கொண்டதோடும் சரி. கடந்த வாரத்தில் ஒருநாள் தொலைபேசியில் அவரிடத்தில், சொல்வனத்துக்காக ஒரு பேட்டி எடுக்க நினைக்கும் விருப்பத்தைச் சொன்ன போது, ‘பேட்டி என்னய்யா பேட்டி? நீங்க வாங்க. நாம பேசிக்கிட்டிருப்போம்’ என்றார். அவர் சொன்னது போலவே, இது பேட்டி அல்ல. வண்ணநிலவன் என்கிற ஒரு மகத்தான எழுத்தாளரை, ராமச்சந்திரன் என்கிற தாதன்குளத்து அண்ணாச்சியை, சந்தித்தபோது, அவர் என்னோடு பகிர்ந்து கொண்ட விஷயங்கள், இதோ உங்களுக்காக . . .

பேச்சை திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திலிருந்துத் துவக்கினேன்.

சுகா: ஊர்ல ஆனித்திருவிளா ஆரம்பமாயிட்டு. தேரோட்டத்துக்குப் போகப்போறேளா?

வண்ணநிலவன்: எங்கெ போக! போகணும்னு ஆசதான். சின்னபுள்ளையில பாத்தது. எளுபத்து மூணுல பாளையங்கோட்டையை விட்டு சென்னை வந்ததுதான். அதற்கப்புறம் தேரோட்டமே பாக்கலை. போலாம்… வெட்டி முறிக்கற வேலை ஒண்ணும் இல்ல. ஆனா அந்த நேரத்திலே போணும்லா… இங்க ஒண்ணுமே தெரிய மாட்டேங்கு. அங்க இருந்தாலாவது யாராவது சொல்லுவாங்க, கொடியேத்தம் அது இதுன்னு தகவல் காதுல விளும்… இங்க ஒண்ணும் கெடையாது. நாமளா காலண்டரா பாத்தாதான், அதுலே ஏதாவது போட்டிருந்தாதான் உண்டு. எங்க. அது அப்படிதான். நெறைய விஷயங்கள் விட்டுப்போச்சு. நிறைய எளந்துட்டோம், என்ன பண்ண முடியும்? (சிரிக்கிறார்) வந்துட்டோம். வந்தது சரியான்னும் தெரியல, தப்பான்னும் தெரியல. ரெண்டு மாதிரியும் இருக்கு (சிரிக்கிறார்) அங்க இருந்தா வேலையும் இல்ல. அதப் பாத்தா சரிதான்னு தோணுது. நல்ல விஷயங்களை, ஊரு சம்பந்தப்பட்ட விஷயங்களை முளுசா எளந்துட்டோம்.

சுகா: இப்படியும் இருக்கு… ஆனா இன்னொரு விஷயமும் இருக்கு. நான் திருநவேலிய விட்டு வந்து இருவது வருஷமாகுது. என் மனசுல இருக்கற திருநவேலியே இப்போ பார்த்தா இல்ல. என் மனசுல இருக்கற திருநவேலியே இல்லன்னா, உங்க மனசுல இருக்கற திருநவேலி எங்க?

வண்ணநிலவன்: ஆமா, சுத்தமா கிடையாது. கல்யாணியைக் (வண்ணதாசன்) கூட சுடலைமாடன் கோயில் தெரு வீட்லதான் பாத்திருக்கேன். மாடியில உக்காந்திருப்பாரு, ஊஞ்சலில் பேசிக்கிட்டிருப்போம். அங்கதான் பாத்திருக்கேன். இப்ப கல்யாணியையே அந்த இடத்தில் பாக்க முடியல… பெருமாள்புரத்தில போயி செட்டில் ஆயிட்டாரு. திருநெல்வேலியும் மின்ன மாதிரி இல்லை. நிறைய கெட்டிடங்கள் அது இதுன்னு நெறிய மாறிப் போச்சு. அப்ப ஃப்ளை ஓவர்லாம் கிடையாது. நான் வரும்போதுதான் ஜங்சன் ப்ளை ஓவர் வேலை நடந்துக்கிட்டுருந்துது. இப்ப மெட்ராசுக்கும் திருநெல்வேலிக்கும் வித்தியாசமில்ல. எல்லா ஊருமே அப்படித்தான் ஆயிருக்குங்காங்க. எல்லா ஊருமே அதனோட சொந்தத் தன்மையை எளந்தாச்சு. இந்த பதினைந்து இருபது வருஷத்தில் இவ்வளவு மாற்றங்கள். ரொம்ப வேகமா மாறிட்டு.

சுகா: இப்போ, நம்ம கண்ணு முன்னாடியே ஊர் மாறிப்போய்ட்டாலும், என் மனசுல இருக்கற திருநவேலியத்தான் திரும்பத் திரும்ப எளுதுகிட்டு இருக்கேன். நீங்களும் அப்படித்தான்னு நெனக்கிறேன். ஆக, திருநவேலிங்கறது ஊர் மட்டும் இல்லையோ?

வண்ணநிலவன்: திருநவேலின்னு ஒரு வளக்கு சௌரியத்துக்காகச் சொல்லுதோம். ஆனா அது வெறும் ஊர் மட்டுமில்ல. அது அந்த மண் சார்ந்த வாழ்க்கை. பளக்க வளக்கங்கள், கலாசாரம்னு அது இதுன்னு எல்லாம் கலந்ததுதான்.

சுகா: பாரதியும், புதுமைப்பித்தனும் தவிர்க்கவே முடியாத திருநவேலி எழுத்தாளர்கள். இலக்கியத்துல ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துக்கான முக்கியத்துவம்னு ஏதாவது இருக்கறதா நெனக்கீங்களா? இலக்கியத்துல திருநவேலிக்காரங்க ஆதிக்கம் செலுத்தறாங்கங்கற மாதிரி கிண்டலாவும், கோவமாவும் நெறய பேர் சொல்லுதாங்க.

வண்ணநிலவன்: திருநவேலின்னு இல்ல. இப்போ தஞ்சாவூர எடுத்துக்கிட்டீங்கன்னா, தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராமன், கரிச்சான்குஞ்சுன்னு வரிசையா நல்ல எழுத்தாளர்கள். கோயமுத்தூர்லேருந்து ஆர்.ஷண்முகசுந்தரம் – இன்னிக்கு அவர எல்லாரும் மறந்துட்டாங்க, ஆனா மிக முக்கியமான எழுத்தாளர். இப்போ கி.ராஜநாராயணனைப் பாருங்க, புதுச்சேரியில இருக்காரு. ஆனா அதிகமும் சின்ன வயசுலப் பார்த்த கரிசல் மண்ணைப் பத்திதான் எளுதுதாரு.

என்கிட்டே நெறைய பேர் ‘நீங்க ஏன் மெட்ராசைப் பத்தி எளுதல’ன்னு கேப்பாங்க. ஒண்ணு ரெண்டு கதைகள்ல மெட்ராஸ் பின்புலமா வந்திருக்கு. ஆன இது ஜியாகிரபி சம்பந்தப்பட விஷயம் இல்லை. அதுல பிரதானமா பாத்திரங்கள். உணர்ச்சிகள், சிருஷ்டிகள் இதைத்தான் சொல்லுதோம். அப்புறம் அதுக்குள்ளே தமிழ் பாஷையினுடைய அளகு இருக்கு, அதையும் இதுக்குள்ளே கொண்டாறோம். திருநெல்வேலியை பேக் ட்ராப்புன்னு வேணா சொல்லலாம். ட்ராமால்ல பின்னால ஒரு ஸ்க்ரீன் தொங்க விடுதாம்லா! அதுல ரோடு இருக்கும், வீடு இருக்கும். அந்த மாதிரி சொல்லலாம். ரஷ்ய இலக்கியம் நம்மை பாதிக்கதானே செய்யுது? டால்ஸ்டாய், தாஸ்தேவஸ்கி, ஹெமிங்வே படிக்கோம். அதெல்லாம் நம்மை பாதிக்கதானே செய்யுது? ஊரு பேரு எல்லாம் வேற, இருந்தாலும் வேற நாட்டு இலக்கியம் நம்மை பாதிக்கதானே செய்யுது?

இப்ப இலக்கியம்னா என்ன அப்படின்னாக்க…மனித உணர்வுகள், மனித சுபாவங்கள் இதைச் சொல்றதுதான் இலக்கியம். அது எந்த மண் சார்ந்ததும் இல்ல. அதனால் நீ திருநெல்வேலி கதை எளுதல, மெட்ராஸ் கதை எளுதல, தஞ்சாவூர்க் கதை எளுதல, நீ திருநவேலிக்காரன் இப்படில்லாம் சொல்றது சுத்தமான பேத்தல்.

அதனால எழுத்து வளம்ங்கறது ஒரு குறிப்பிட்ட மண் சார்ந்ததுன்னு சொல்ல முடியாதுன்னுதான் நெனக்கேன். ஊர் சம்பந்தப்பட்ட ஞாபகங்கள், பழக்க வழக்கங்கள், எல்லார் மனசிலும் இருக்கு. இது பற்றி ஒண்ணும் பெரிசா சொல்ல முடியாது. எழுத்தாளர்கள் பெரும்பாலும் 18, 20 வயது வாழ்க்கையைதான் எழுதறதா சொல்லுதாங்க… அந்த மாதிரிதான் எளுத வேண்டியிருக்கு. அந்த காலகட்டம் பற்றி சொல்றதுக்கே நிறைய விஷயம் இருக்கே. பாத்த, கேள்விப்பட்ட சம்பவங்கள் ரொம்ப இருக்கு. அதைச் சொல்ல வேண்டியிருக்கு. அதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க.

சுகா: பதினெட்டு, இருபது வயசு இளைஞர்களால, இல்லாட்டி அந்த அனுபவத்தை முன்வச்சு எளுதறவங்களால முதிர்ச்சியான அனுபவங்கள் எளுத முடியாதுன்னு ஒரு கருத்து இருக்கே?

வண்ணநிலவன்: அது ரொம்ப மரபான, பளைய பார்வை. நான் அதை ஒத்துக்க மாட்டேன். எத்தனையோ இளைஞர்கள் எவ்வளவோ முதிர்ச்சியோட நடந்துக்கறவங்க இருக்காங்க. இலக்கியம்கறது இன்னொரு மனுஷன, மனுஷாளுக்கிடையே இருக்கற உணர்ச்சிகளைச் சொல்றதுதான். அந்த வயசுல, உள்வாங்கிக்கிட்ட உணர்ச்சிகள் நம்ம மனசுக்குள்ல போயிருக்கு. அதை நாம திரும்பிப் பார்க்கையில சில சமயம் சந்தோஷமா இருக்கு. சில சமயம் வேற உணர்ச்சிகள் வருது. நாம சின்ன வயசுல பார்த்த பெரியவங்க, நம்ம அப்பா, அம்மா, தாத்தா, ஆச்சி, அவங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள், எல்லாமே நமக்குள்ள மனசுல இருக்கறதுதான். ஒரு மட்டம், சுந்தர ராமசாமி கூடப் பேசிக்கிட்டு இருக்கும்போது வயது முதிர்ந்தவங்கதான் எளுதணும்னு ராஜாஜி சொன்னதாச் சொன்னாரு. எனக்கு அதுல உடன்பாடு இல்லை. பாரதிக்கே சாகும்போது வயசு கொறைவுதானே? புதுமைப்பித்தனுக்கும் வயசு ரொம்ப இல்லை. இளைஞர்கள்தான் ரொம்ப எளுதியிருக்காங்க. முதியவர்களுக்குதான் மனப்பக்குவம் இருக்கும், முதிர்ச்சி இருக்கும்ங்கறது, ரொம்ப தப்பான பார்வை.

சுகா: இப்போ நேர்ல பேசும்போது இவ்வளவு தீவிரமாவும், உதாரணங்களோடவும் இலக்கியம் பத்திப் பேசுதீங்க. இந்த விஷயங்களை எல்லாம் ஏன் கட்டுரை வடிவத்தில் எளுதல, அதுல உங்களுக்கு ஆர்வம் இல்லையா?

வண்ணநிலவன்: ஆர்வம் இல்லைனு இல்ல. பொதுவா யாராவது கேட்டாதான் நான் எளுதறது. இப்ப நீங்க கேக்கப்போயிதான் நான் பதில் சொல்லுதென். இந்த மாதிரிதான் சமாசாரம் இருக்கு. கதைகள் கூட யாராவது பத்திரிக்கையில் கேப்பாங்க, அப்பதான் எளுதுவேன். இப்ப இந்த மாதிரி கட்டுரை வேணும், இதைப் பத்தி எளுதுங்கன்னு யாராவது கேட்டா கண்டிப்பா நான் எளுதுவேன். ‘பின்நகர்ந்த காலம்’னு ஒரு புத்தகம் எழுதிருக்கேன். அதுல நான் எளுத்தாளனானது, பத்திரிகையாளனானது, எளுத்தாளர்கள நேர்ல பார்த்ததுன்னு சொந்த அனுபவங்கள, சம்பவங்கள எளுதிருக்கேன். ஆனால், இலக்கியக் கோட்பாடுகள் பத்தி நுட்பமான விஷயங்கள்லாம் எளுதல. யாராவது கேட்டா நிச்சயம் எளுதித் தருவேன். டிமாண்ட் இருந்தாதானேய்யா சப்ளை இருக்கும்? (சிரிக்கிறார்)

சுகா: இதை நீங்க ஏற்கனவே பலமுறை சொல்லிக் கேட்டிருக்கேன். இப்போ கேட்டாலும் ஆச்சரியமாத்தான் இருக்கு. எப்பவுமே யாராவது கேட்டால்தான் எளுதுவீங்களா?

வண்ணநிலவன்: ஆமா அது அப்படித்தான். ஆரம்பத்துல ரெண்டு மூணு கதைகள நானாத்தான் எளுதி வல்லிக்கண்ணன்கிட்ட குடுத்தேன். அதையும் சும்மா பாருங்க, இது ஏதும் தேறுமான்னு கேட்டுதான் குடுத்தேன். அவாளாவே வண்ணநிலவன்னு பேரு வச்சு அதை பப்ளிஷ் பண்ணிட்டாக. அதைப் படிச்சிட்டு திகசி தாமரை பத்திரிகையில எளுதச் சொல்லி கேட்டாக. அப்படித்தான் நெறைய கதை எளுதியிருக்கேன். சுதேசமித்திரன்ல தீபாவளி மலர் போடுவாங்க அப்போ எல்லார்கிட்டயும் கதை கேப்பாங்க. அப்படி கேட்டுதான் நிறைய கதை எளுதியிருக்கேன். இந்த மாதிரி பல சந்தர்ப்பங்கள்ல கேட்டப்போதான் எளுதிக் கொடுத்திருக்கேன். இது நல்ல பளக்கமா கெட்ட பளக்கமான்னு தெரியல, ஆனா மெஷின் அப்படிதான் ஓடுது. ஸ்டார்ட் அப்படின்னு சொன்னாதான் மெஷின் ஓடுது ( சிரிக்கிறார்). நீங்க கேமராவச் சொல்லுதீங்கள்லா அந்த மாதிரி.

சுகா: ஒரு வேளை எழுத்தாளன்னு தன்னை அடையாளப் படுத்திக்கறவங்களாலதான் நெறைய எளுத முடியுமோ?

வண்ணநிலவன்: ‘எளுத்தாளங்கறவன் டெய்லி பத்து பக்கம் எளுதணும்ய்யா’ன்னு கநாசு சொல்லுவாரு. ஆனா நான் அப்படி நெனக்கல. எளுத்தாளனுக்கு என்று தனி ஐடென்ட்டிபிகேஷன் கெடையாது. மத்த தொளில் செய்யறவன், வேலை செய்யறவன் மாதிரிதான் எளுத்தாளனும்.

சுகா: எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எனக்கு ஒரு வாட்டி கடிதம் எளுதிருந்தாரு ‘எழுத்தை விட்றாதீங்க. லகான் கையை விட்டுப் போயிரும்’னு. அது உண்மைதானா?

வண்ணநிலவன்: அதுல ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்யுது. சித்திரமும் கைப்பளக்கம்னு சொல்லுதோம் இல்லையா? ஒரு வேலையை செஞ்சுக்கிட்டு இருந்தாதான் டச் இருக்கும்னு சொல்றதுதான். அது இல்லைன்னாக்க உங்க எளுத்துக்கள்ல ஒரு சின்ன வித்தியாசம் வரும். அது வேற மாதிரி மாறிரும்.

எளுத்துன்னு இல்லை. எதுன்னாலும் நீங்க செஞ்சுக்கிட்டே இருக்கணும். கிருஷ்ண பரமாத்மா ‘தொழில் செய்’ன்னு சொல்லியிருக்கான்னா அது இந்த மாதிரிதான். செஞ்சுக்கிட்டிருக்கறதை விட்டிரப்படாது. கடைசி வரைக்கும் அதைச் செய்யணும். நீங்க சினிமா டைரக்டர்னா தொடர்ந்து அதைச் செய்யணும். அது இல்லைன்னா விட்டுப் போயிருமில்லையா? புதுசா என்ன வந்திருக்கு, என்ன செய்யுதாங்க அப்படிங்கற தொடர்பே விட்டுப் போயிரும் இல்லையா?

சுகா: ‘ஒரு நாள் வாத்தியம் வாசிக்காட்டாலும் அடுத்த நாள் அது தெரிஞ்சுரும்’னு எங்க இசை வாத்தியார் சொல்வாரு. எளுத்தும் அப்படித்தானா?

வண்ணநிலவன்: உண்மைதான், அது உண்மைதான். கேட்டாதான் எளுதுதோம்ங்கும்போது யாரும் கேட்காதபோது விட்டுப் போயிருது. செரமமா இருக்கு. அந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்யுது.

சுகா: அப்போ ‘அவள் அப்படித்தான்’ சினிமாவுக்கும் கேட்டுதான் எளுதுனீங்களா?

வண்ணநிலவன்: அது தற்செயலாதான் நடந்தது. ருத்ரையா எனக்கு ஃபிரண்டு. பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிக்கற காலத்துல அவர் எனக்கு ஃபிரண்டு. அப்ப அவர் என்னையப் பாத்து, ‘கடல்புரத்தில்’ எளுதின வண்ணநிலவன்னு கொஞ்சம் ஒதுங்கியே இருப்பாரு. என்கிட்ட அதிகம் பேச மாட்டார். அப்புறம் பளகப் பளகப் பேசினார்னு வைங்க. வாங்கய்யா போங்கய்யாங்கற அளவுக்கு வந்துச்சு. அவரு படம் எடுக்கும்போது நான் அவருக்கு ஃபிரண்டா இருந்ததால என்னை அவர் பயன்படுத்திக்கிட்டாரு. நான், ராஜேஷ்வர், அனந்து ஸார் மூணு பேரும் எளுதுனோம். ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் வசனமா எளுதுனோம். இது தற்செயலா நடந்தது. அப்புறம் அவரது அடுத்த படத்தைப் பற்றி பேச்சு வந்தபோது, கதை இது வேண்டாம்யா பாரதிராஜால இருந்து எல்லாரும் சாதாரணமா வில்லேஜ் லைஃபைப் பத்தி எடுத்துக்கிட்டு இருக்காங்க, கிராமத்து அத்தியாயம்னு வில்லன்லாம் வச்சு இந்த மாதிரி வில்லேஜ் கதைல்லாம் வேண்டாம்யான்னு சொன்னேன். அவர் அப்ப இருந்த வேகத்துல இல்ல ஒரு படம் பண்ணிருவோம்னு பண்ணினாரு. அதுல நான் ஒண்ணும் எளுதல. அவரும் உனக்குத்தான் இந்தக் கதை புடிக்கலயேய்யா வேற ஆளை வச்சு எளுதிக்கிடுதேன், அடுத்த படத்துல பாத்துக்குவோம்ன்னுட்டாரு.

நான், வேலையில்லாத காலத்தில் சினிமாவில் சிலபேர்கிட்ட வாய்ப்பு கேட்டிருக்கேன். சும்மா இருக்கமே, சினிமால வாய்ப்பு கிடைச்சா பொருளாதார ரீதியா ஏதாவது இருக்குமேனு நினைச்சது உண்டு. நாம அங்க போயி என்ன பண்ண முடியும்னே தெரியல. சினிமா டிஸ்கஷன் எனக்குப் புடிக்கவே புடிக்காது. கதையைப் பத்தி உட்கார்ந்து டிஸ்கஸ் பண்றது எனக்குப் பிடிக்காத ஒண்ணு. கதை எளுதறது என்பது பேப்பர் பேனா எடுத்துக்கிட்டு எளுதணும், அவ்வளவுதான். சினிமால அப்படிக் கிடையாது. உக்காந்து பேசித்தான் கதையை உருவாக்குதாங்க. எனக்கு அது ஒத்து வராத சமாசாரம். பாலு மகேந்திரா கிட்டகூட போயிருக்கேன். அவரும் ஒரு கதையைச் சொன்னாரு, ரெண்டு நாள் போனேன், மூணாம் நாள் போரடிச்சுப் போச்சு. அப்புறம் நான் போகலை.

சுகா: ஆமா, நீங்க கதைய எளுதி என்கிட்டதான் குடுத்தீங்க. கடல் பக்கத்துல நடக்கற மாதிரி கதை. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.

வண்ணநிலவன்: ஆமா, ஆமா… அப்புறம் வேற யாரையும் முயற்சி பண்ணலை. சினிமால எனக்கு எதுவும் அங்க போயி செய்யணும்ங்கற ஆசையும் இல்லை. ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன்லாம் தொடர்ந்து செய்தாங்க. கருத்தா செய்தாங்க இல்லையா? எனக்கு அந்த மாதிரில்லாம் முடியாது. நான் அதுக்கு லாயக்கும் இல்லை. நான் லாயக்கில்லைங்கறதை மொதல்ல சொல்லணும். நான் முடியாதுங்கறதவிட , நான் அதுக்கு பொருத்தமில்லைங்கறதத்தான் சொல்லணும். எனக்கே தெரியும், நாம இதுக்கு சரியில்லை அப்படின்னு.

எளுத்துக்கே நான் லாயக்கில்லாத ஆள்தான். ஏதோ விபத்தா இது நடந்து போச்சு. அப்படித்தான் நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். ’எஸ்தர்’ சிறுகதை எளுதும்போது சாதாரணமாதான் எளுதுனேன். அது இவ்வளவு பிரமாதமா வரும்னோ நினைக்கல. எஸ்தர் கதையோ கடல்புரத்திலோ சாதாரணமாதான் இங்க வீட்டில பேப்பரும் பேனாவும் வெச்சு சாதாரணமாதான் எளுதுனேன். அதுக்கு இவ்வளவு பேரு வரும்னு எளுதும்போதும் தோணல அதுக்கு அப்புறமும் தோணல. அதுக்கு எப்படியோ ஜனங்ககிட்ட ஒரு பேரு கிடைச்சுட்டுது.

இது தன்னடக்கம் இல்லை. உண்மையானது இது. யோசிச்சுப் பாத்தா, என்ன நான் எளுதியிருக்கேன்? ஒண்ணுமில்ல. இதுக்குக் கிடைச்சிருக்கிற இவ்வளவு புகழ் எனக்கு ஆச்ச்சரியமாவும் கூச்சமாவும் இருக்கு.

க.நா.சுல்லாம் அவ்வளவு பண்ணியிருக்கார். எவ்வளவு மொழிபெயர்ப்பு பண்ணியிருக்கார், அவரே எவ்வளவு நாவல் எழுதியிருக்கார். பெரிய சாதனையாளர்கள் எல்லாம் இருக்காங்க. ஜானகிராமன் பாருங்க, எத்தனை நாவல் எழுதியிருக்கார். அப்படில்லாம் நான் ஒண்ணும் பண்ணிரல. ஏதோ கொஞ்சம் பண்ணினதுக்கு இது கெடச்சிருக்கு. வண்ணதாசன் கூட கேலியாச் சொல்வாரு, ‘அவனுக்கு யோக ஜாதகமய்யா’ன்னு. அதுதான் உண்மைன்னு கூட நெனச்சுக்கிடுவேன். (சிரிக்கிறார்)

சுகா: ஆனா அப்படி சொல்ற வண்ணதாசன் அண்ணாச்சிதான், என்கிட்டயும், மற்றும் பல பேர்கிட்டயும், அவர் எளுத்த சிலாகிக்கும்போது, ‘நான் என்ன எளுதீருக்கேன்? வண்ணநிலவனப் படிங்க’ன்னு சொல்லுதாரு.

வண்ணநிலவன்: ஆமாமா. அப்படி அவர் சொல்லிக்கிட்டேதான் இருக்காரு. ஆனா, என்னைப் பொருத்தவரைக்கும், கொஞ்சமாத்தான் எளுதி இருக்கேன். என்னோட எளுத்து இப்பவும் சாதாரணமாதான் இருக்கு. ஆனா அதுக்குன்னு ஒரு முக்கியத்துவம் இருக்குன்னு நெறைய பேரு சொல்றதிலேருந்து தெரியுது. என்னத்துனால அந்த முக்கியத்துவம்னு என்னால புரிஞ்சுக்க முடியல.

சுகா: நீங்க தமிழ்ல உங்க முன்னோடிகள் அத்தனை பேரோட எளுத்தையும் வாசிச்சிருக்கீங்க. உலக இலக்கியமும் வாசிச்சிருக்கீங்க. நல்ல வாசிப்பு அனுபவம் இருக்கு. அதே சமயம் உலக சினிமாவும் நிறைய பாத்திருக்கீங்க. உங்க காலகட்டத்துல உலக சினிமாவுல அத்தனை முக்கியமான படங்களையும் பாத்திருக்கீங்க. இத்தனை பயிற்சியும் வச்சிக்கிட்டு, ‘அவள் அப்படித்தான்’னு ஒரே ஒரு சினிமா பங்களிப்புக்கு அப்புறம் ‘நான் சினிமாவுக்கு லாயக்கு இல்லை’ன்னு நீங்க சொல்றத என்னால ஏத்துக்க முடியல.

வண்ணநிலவன்: நல்ல சினிமா, பாரலல் சினிமான்னு கேரளாவில்கூட முயற்சி பண்ணலாம், இந்தியில்கூட முயற்சி பண்ணலாம். தமிள்ல ஒண்ணுமே செய்ய முடியல.

சுகா: அதுக்கு என்ன காரணம்னு நெனக்கீங்க?

வண்ணநிலவன்: தமிழ் மக்கள், சினிமான்னு இல்லை, கதைன்னு எடுத்துக்கிட்டாலும் அவங்க ஒரு ஸ்டீரியோடைப் வச்சுக்கிட்டாங்க. கட்சிக்காரன்னா எப்படி இருக்கணும் அப்படின்னு ஒரு ஸ்டீரியோடைப். அப்படி ஸ்டீரியோடைப் வேணும்னு ஜனங்களா கேக்கலை. பாலிடிக்ஸ், சினிமா இப்படின்னு மீடியா உண்டாக்குது. அதை மக்கள் அப்படியே வாங்கி வச்சுக்கறாங்க. அவங்க அதைக் கேள்வி கேட்பதே இல்லை. தொடர்கதைன்னா இப்படிதான் இருக்கணும் அப்படின்னு இருக்கு. அதே மாதிரி சினிமான்னா இப்படிதான் இருக்கணும்னு இருக்காங்க. நாலு பைட்டைக் குடு, நாலு பாட்டக் குடுன்னு ஜனங்க கேக்கல. தொடர்கதைன்னா சஸ்பென்ஸ் இருக்கணும், திருப்பங்கள் இருக்கணும்னுலாம் ஜனங்க கேக்கல. ஆனா இவங்க குடுக்காங்க. இந்த ஸ்டீரியோடைப் மாறதுக்கு ரொம்ப காலம் ஆகும்.

இப்போ சொல்லுதாங்கள்லா, இலக்கியம்னா இப்படித்தான் இருக்கனும்னு… அப்படிக் கெடையாது. இலக்கியத்துக்குப் பல முகங்கள் இருக்கு. உரைநடையாவே, கதையே இல்லாமலேயே கதை சொல்லலாம். மௌனியின் கதைங்க காதல் கதைங்கதான். ஒண்ணுமே கெடையாது. ஒரு பொண்ணுக்காக ஆண் ஏங்கிக்கிட்டு இருக்கற கதைதான் பெரும்பாலும். முப்பத்தி ரெண்டு கதைதான் எளுதியிருக்காரு. கதைன்னு ஒண்ணுமே கெடையாது. ஆனா பாஷையை என்னமோ ஒரு மாதிரி ஆக்கியிருக்காரு. பாஷை வந்து உங்களை உள்ள கூட்டிட்டுப் போயிரும்.

அந்த மாதிரி எளுத்தை இலக்கியம் இல்லைன்னு சொல்லிற முடியாது. இலக்கியம்னா கதைதான் சொல்லனும்னு இல்லன்னு சொல்ல வரேன். எதுவுமே ஸ்டீரியோடைப் கெடையாது. அப்படி கூடாது. கிரியேட்டிவ்வா இருக்கற ஒரு ஆள் வந்து எந்த ஸ்டீரியோடைப்பையும் ஏத்துக்க மாட்டான்.

சுகா: இது மாற காலம் ஆகும்னு சொல்லுதீங்க. ஆனா அப்படித் தெரியலியே? ‘அவள் அப்படித்தான்’ வந்து முப்பது வருஷமாச்சே? மாற்றம் எப்போது வரும்?

வண்ணநிலவன்: தெரியலையே… எட்டு தலைமுறை பத்து தலைமுறைகூட ஆகலாம். காலம்கறது நம்ம முப்பது வருஷம் நாப்பது வருஷம் கெடையாது. பல தலைமுறை ஆகலாம் மாறதுக்கு.

சுகா: கேரளா மாதிரி இல்லாம இங்கே இலக்கிய வாசிப்பு குறைவா இருக்கறதால நம்ம சினிமா இப்படி இருக்கோ?

வண்ணநிலவன்: நான் அப்படி நெனைக்கலை. இங்க வாசிப்பு இருக்குன்னுதான் நெனைக்கென். ஏன்னா, என் கதையையே நெறைய உல்டா பண்ணி சினிமா பண்ணியிருக்காங்களே! வாசிப்பு இல்லாம இது எப்படி முடியும்? கடல்புரத்தில், எஸ்தர் எல்லாம் அவனை ஏதோ ஒரு விதத்தில பாதிக்குது. இல்லாட்டி இது எப்படி முடியும்? அதுக்காக நான் கேஸ் போடப்போறதில்ல, அதுக்கான தேவையும் இல்லை, அதை விடுங்க. ஆனா படிச்சிருக்கான்னு தெரியுது. சரி ஏதோ கதையைத் களவாங்கறதுக்காகவாவது படிக்கானேன்னு சந்தோஷப்பட்டுக்கிட வேண்டியதுதான். (சிரிக்கிறார்.) அப்படியாவது அந்தக் கதையை ஒளுங்கா எடுக்கானான்னா அதுவும் இல்ல. அதுல உள்ள சின்னப் பகுதியை எடுத்து நைஸா உள்ள வச்சுருதான். ஆனா கதையை விட்டுருதான்.

சுகா: அப்படீன்னா வண்ணநிலவன்ங்கற ஆளே தேவையில்லாம போயிருதே! தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கிட்டு வண்ணநிலவனை மதிக்காம விடலாமா? அது தப்பில்லையா? நியாயமா அவரக் கொண்டாடல்லா செய்யணும்?

வண்ணநிலவன்: கொண்டாடணும்னு நான் நினைக்கல. கொண்டாடணும்ங்கற ஹீரோ வர்ஷிப் எனக்கு என்னைக்கும் பிடிக்காது. எதையும் கொண்டாடணும்ங்கறது அவங்க சாதனைக்காக நாம அதைச் சொல்லுதோம். பாரதியைக் கொண்டாடாம இருக்க முடியாது. பாரதி அவ்வளவு செஞ்சிருக்காரு, அதனால அவரைக் கொண்டாடுதோம். அதே மாதிரி எளுத்தாளர்கள்ல ஜானகிராமன், சுந்தர ராமசாமில்லாம் நெறைய செஞ்சிருக்காங்க அப்படின்னு இருக்கும்போது அதுக்கு ஒரு வேல்யூ உண்டு. அந்த வேல்யூ ரொம்ப பெரிசா இருக்குன்னு நமக்குத் தோணுது. இங்க இருந்து பாக்கும்போது பிரம்மாண்டமா தெரியுது. அந்த அளவுக்குத் தெரியுது, மனசை பாதிக்கறதால அப்படி தெரியுது. ஆனா கொண்டாடணுமான்னு தெரியல. அப்படிப் பாத்தா வேற தொளில் பண்ணுதான். அதையெல்லாம் ஏன் கொண்டாடக் கூடாது? வேற தொளிலெல்லாம் தொளிலே இல்லையா? நாம் ஏன் இலக்கியத்தையும் சினிமாவையும் பெரிசு பண்ணிக்கிட்டு இருக்கோம்? ஒரு பெரிய விஞ்ஞானி இருக்கான். ஏன் அந்த ஆளை நாம கொண்டாட மாட்டெங்கோம்? வேற தொளில் எத்தனையோ இருக்கே? இந்த ரெண்டே ரெண்டுதான்னு இல்லையே? மனித வாள்க்கையை பாதிக்கற விஷயம் எத்தனையோ இருக்கே? நாம ஏன் அதை எல்லாம் கொண்டாடறது இல்லை?

சுகா: சாதாரணமா படிக்கற பையன் நல்லா படிச்சு என்ஜினியர் ஆகிட முடியும். ஆனா அவன் எவ்வளவு குட்டிக்கரணம் அடிச்சாலும் இலக்கியவாதி ஆயிற முடியாதில்லையா? அப்படித்தானே சொல்லுதாங்க!

வண்ணநிலவன்: இல்லை, நான் அப்படி நினைக்கல. இலக்கியவாதிக்கு விசேஷத்தன்மை ஒண்ணும் கெடையாது. அவங்க செஞ்ச சாதனைகளால அப்படி தோணுது. கான்ட்ரிப்யூஷன் நெறைய இருக்கு. ஒருத்தரின் கான்ட்ரிப்யூஷன் நிறைய இருக்கும்போது அவனை பிரம்மாண்டமா பாக்கோம். அது ஒண்ணே ஒண்ணு இல்லாட்டி அவனை யாரும் யோசிக்கப் போறதில்ல. பத்தோட பதினொன்னுன்னு மறந்துருவாங்க. விசேஷம் ஒண்ணும் கெடையாது. இந்தத் தெறமை ஒண்ணும் கெடையாது.

யாராலையும் முடியும். இப்ப எளூத்தாளன் ஆகணும்னா நெறைய படிக்கணும். படிச்சு உங்க மனசுக்குள்ள போகணும். அது எப்படி வெளிய வருதுன்னு நாம சொல்ல முடியாது. எல்லாரும்தான் படிக்காங்க, ஆனா வெளிய வரும்போது எப்படி மாறுது, என்ன ரசாயன மாற்றம் நடக்குது அப்படின்னு சொல்ல முடியாது. அத வெச்சுதான் அதனோட மதிப்பைச் சொல்லுதோம். அதனால இது ஒரு பெரிய காரியம்னு நான் நெனைக்கவேயில்லை. அது அப்படிச் சொல்லக் கூடாது. எதையுமே பெரிசுன்னு நாம கொண்டாடக் கூடாது. எனக்கு அப்படி பளக்கம் கிடையாது. செய்யக்கூடாது அப்படின்னுதான் நான் நெனைக்கேன்.

தவிர ஒரே துறையில பல பேர் இருக்காங்க. நான் எளுதிக்கிட்டு இருக்கும்போதே பூமணி, வண்ணதாசன், கலாப்ரியா, விக்கிரமாதித்யன் எல்லாரும்தான் எளுதிக்கிட்டு இருந்தாங்க. அது மாதிரிதான் பாக்கேன். அதே மாதிரி முந்தின தலைமுறையில் ஜானகிராமன், புதுமைப்பித்தன், கு.ப.ரா., பிச்சமூர்த்தின்னு இருபது முப்பது பேர் தேறுதாங்க.

சூழ்நிலை ரொம்ப முக்கியம். எழுதறதுக்கான சூழல் இருக்கில்லையா, சூழல்னா சும்மா பேப்பர், பேனா, லைட்டு அந்த மாதிரி வசதியில்லை. ஒத்துப்போற மனோபாவம் இருக்கறவங்களோட இருக்கறது, எளுதறதுக்கான பத்திரிகைகள், அதுக்கான வேண்டுதல், அதெல்லாம் இருக்கணும். அதெல்லாம் இருந்தா நல்லா வர முடியும். இல்லையின்னா கஷ்டம்தான்.

சுகா: இவ்வளவு நேரம் உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கறதுல, நான் கவனிக்கற ஒரு விஷயம், ஒரு எழுத்தாளனாக இருக்கறதுல உங்களுக்கு அப்படி ஒன்னும் பெருமையில்லையா?

வண்ணநிலவன்: பெருமை கிடையாது, இது ஒரு வேலை மாதிரிதான். டீக்கடைக்காரன் என்ன பண்ணுதான்? அவன் டீ போடுதான். நல்ல டீ போட்டுக் கொடுத்தா அந்தக் கடைக்குத் தேடிப் போறோம். அது மாதிரி நல்லா எளுதுனா, படிப்பீங்க, அவ்வளவுதான். நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு சொல்லிட்டுப் போயிருவோம், அவ்வளவுதான். இப்ப நானே அப்படிதானே? இந்தக் கதை நல்லா இருக்கு, நல்லா இல்லை அப்படிங்கேன். அது மாதிரிதான் இதுவும். இதுல ஒரு பெருமையும் கெடையாது. என் பிள்ளைங்க என் கதைகளைப் படிச்சது கெடையாது. அதுக்காக அவங்களுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லையே? என் கதைகளைப் படிக்காததால ஒரு நஷ்டமும் கெடையாது. ‘சாதனையாளர்’னு ஒரே ஒரு ஆள் மட்டுமில்லை. எந்தத் துறையிலும் எத்தனையோ சாதனையாளர்கள் இருக்காங்க. அதை மனசுல வச்சுக்கிட்டாப் போதும்.

சுகா: அப்போ எழுத்தாளர்களுக்குன்னு தனித்துவம் இருக்க வேண்டாமா?

வண்ணநிலவன்: தனித்துவங்கறது… ஜானகிராமன் எளுத்துக்கும் க.நா.சு எளுத்துக்கும் தனித்துவம் இருக்கு. அவர் வேற மாதிரி எளுதுதாரு. தனித்துவம் இருக்கு. அதுக்காக அதை ரொம்ப பெரிசுபடுத்த வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருத்தர் பார்வையையும் அவரவர்தான் சொல்ல முடியும். அவரவருக்கு பொறுப்புகள், சார்புகள் இருக்கும். அதையெல்லாம் அவங்கவங்கதான் வெளிப்படுத்த முடியும். அப்படி பாத்தா எளுத்தாளன் எல்லாருக்குமே தனித்துவம் இருக்கே… என்னோட எளுத்துல எந்த விசேஷமும் இருக்கறதா நான் நெனைக்கல. எல்லாரோட எளுத்தையும் படிச்சுட்டுதான் நான் இதைச் சொல்லுதேன். என்னோட எளுத்துல என்ன விசேஷம்னு கேட்டா நீங்க பதில் சொல்ல முடியுமா? யாராலையும் சொல்ல முடியாது. இது ஒரு மாயைதான். இது ஒரு தோற்றம்.

சுகா: அப்படிச் சொல்லமுடியாது. உங்க எழுத்தோட விசேஷம்ங்கறதப் பத்தி மட்டுமே என்னாலே ரொம்ப நேரம் பேச முடியும். உங்க கதையின் தலைப்பு ‘மனைவியின் நண்பர்’ மட்டுமே என்னை எவ்வளவோ டிஸ்டர்ப் செஞ்சிருக்கு. இது மாதிரி நெறைய சொல்ல முடியும்.

வண்ணநிலவன்: இருக்கு. நான் ஒட்டுமொத்தமாதான் பாக்கேன். தனி மனுஷனை பெரிசா சொல்றதுங்கறத நான் அடிப்படையில் ஏத்துக்க மாட்டேன். எந்த துறையானாலும் சாதனையாளர்னு சொல்லுதாங்களே, அதுவே தப்பானதுதான் என்பது என் அபிப்பிராயம். நெறைய பேர் இருக்காங்க. ஒருத்தர் ஒருத்தரா சாதனையாளர்னு சொல்லலாம். எந்த விஷயத்துலயுமே ஒருத்தனுக்குதான் முக்கியத்துவம் அப்படின்னு கொடுக்க முடியுமா அப்படிங்கறதுலயே எனக்கு சந்தேகம் இருக்கு. இதை என்னால் ஏத்துக்க முடியாது.

சுகா: சமீபத்தில போகன் என் எழுத்தைப் பாராட்டுனப்போ, நான் அதை மறுத்துப் பேசுனேன். அதுக்கு அவரு, “உங்க ஊர் எழுத்தாளர்களுக்கு எல்லாம் ஏதோ ஒரு பயம், கூச்சம் இருக்கு. பாராட்டுனாலே விலகி ஓடறீங்க” அப்படீன்னாரு. உங்களைப் பார்த்தா அது உண்மையோன்னு படுது.

வண்ணநிலவன்: பய உணர்ச்சிலாம் கிடையாது. திருநெல்வேலிகாரங்கதான் இப்படின்னு இல்ல. தி ஜானகிராமனை நேரில் பாத்தீங்கன்னா நேர்ல பேசினீங்கன்னா அவர்கிட்ட இலக்கியம் பத்தியே பேச முடியாது. ஜானகிராமன பல தடவை நான் பாத்திருக்கேன், பல நாட்கள் அவர் கூடவே இருந்து பளகியிருக்கிறேன். இலக்கியம் பத்தியே பேச மாட்டாரு. கதையைப் பத்தின்னா வேற ஏதாவது கதையைப் பத்தி பேசுவாரு. இது நல்லாயிருக்கய்யா அப்படிம்பார். அவரைப் பாத்தாக்க நம்ம மனசுல அவரோட நாவல்கள் எல்லாம் உக்காந்திருக்கும். அதோட அவரை நாம பாப்போம். ஆனா அவர் சாதாரணமாதான் இருப்பார். என்னய்யா இதெல்லாம், சில நேரம் சில கதை சரியா வருது, சில நேரம் சரியா வரதில்லை, என்ன சொல்ல முடியும் அப்படிம்பார். அவ்வளவுதான் சொல்லுவார். அதுக்கு மேல ஒண்ணுமே சொல்ல மாட்டார். பேட்டி கேட்டா மாட்டேன்னுடுவார். ஒண்ணும் சொல்ல மாட்டார். கதைகளுக்கு முன்னுரையே ஜானகிராமன் எளுத மாட்டார். அதென்ன சொல்றது அதான் சொல்லிட்டே இருக்கேனே போதுமே அப்படிம்பார். அந்த மாதிரிதான் தோணுது. வெளியே உள்ள உலகத்துக்கும் எனக்கும் ஒரு பெரிய இடைவெளி இருக்கற மாதிரி இருக்கு. அந்த வித்தியாசம் எனக்கு வேண்டாம்னு தோணுது. ஆனா அது இருக்கத்தான் செய்யுது. நான் வேண்டாம்னு நெனைக்கேனே தவிர அது இருக்கத்தான் செய்யுது. அதை என்ன பண்ண முடியும்?

சுகா: இப்படி ஒவ்வொரு எழுத்தாளருக்குமே ஒரு பார்வை இருக்கே? தி.ஜா முன்னுரையே எழுத மாட்டார்னு சொல்லுதீங்க. ஜெயகாந்தனின் முன்னுரைகளையே தொகுத்து புத்தகமா வந்திருக்கே?

வண்ணநிலவன்: அவரோட முன்னுரைகளுக்கு தனிச் சுவை உண்டு. பிரமாதமா இருக்கும் . அவரோட கட்டுரை நடை பிரமாதமா இருக்கும்.

சுகா: ஆமா, ஜெயகாந்தன் கிட்ட எழுத்தாளன்ற இறுமாப்பு, கம்பீரம் எல்லாம் இருந்தது. அது ரசிக்கக்கூடியதாகவும் இருந்தது.

வண்ணநிலவன்: ஆமாம், ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரின்னுதான் எடுத்துக்கணும். ஜானகிராமன் பேசவே மாட்டாரு, மீட்டிங் கூட வர மாட்டாரு. அந்த மாதிரிதான் அவர். இவரும் அவரும் ஒரே காலத்தில் எளுதுனவங்கதான். இவர் எப்படியிருக்கார்! சண்டமாருதமா இருக்கார். இதை இப்படிச் சொல்லலாம் – குண விசேஷம்னு சொல்லலாம். இன்டிவிஜூவாலிட்டி இருக்கு இல்லியா? அதுல வர வித்தியாசம்தான் இது. ரெண்டு பெரும் ஒரே காலத்தில் எளுதுனவங்கதான் .ஆனா ஜெயகாந்தன் எங்கே? ஜானகிராமன் எங்கே? (சிரிக்கிறார்) நேர்ல பளகினவங்களுக்கு ரெண்டு பேரையும் தெரியும்.

சுகா: அதே மாதிரிதான் இப்போ நம்மகூட இருக்கற அசோகமித்திரன். அவரைப் பார்க்கும்போது, பேசறதையெல்லாம் கேக்கும்போது எனக்கென்னவோ உங்ககிட்ட அவர் சாயல் இருக்க மாதிரி இருக்கு.

வண்ணநிலவன்: ஆமா, ஆமா… அசோகமித்திரன் கதைகள்ல வரும் பாத்திரங்கள் சாதாரணமாகத்தான் இருக்கும். பிரம்மாண்டமான பாத்திரங்களைப் படைத்ததில்லை. ஜேஜே மாதிரி ஒரு கேரக்டர் எந்த கதையிலயாவது இருக்கா? கெடையாது. ஜெயகாந்தன் கதையில வரும் சில கேரக்டர் பிரம்மாண்டமா நிக்கும். அந்த மாதிரி கிடையாது. அவர் கதைகள் எல்லாமே சாதாரணமாத்தான் இருக்கும். அம்மா, அப்பா, தங்கை, தம்பி இந்த மாதிரி சாதாரண வாள்க்கைலதானே இருக்கார், அதைத்தானே அவர் வாள்ந்ததா சொல்லிக்கிட்டு இருக்கார், கதையும் அப்படித்தான் இருக்கும். அவருக்குள்ள என்ன இருக்கோ அதைத்தானே அவர் வெளியிலே கொண்டாந்திருக்கார், அது அப்படித்தான் இருக்கும். அப்படித்தான் இருக்காரு. அவரோட படைப்புக்கும் அவருக்கும் எந்த வித்தியாசமும் இல்ல.

சுகா: உங்க முன்னோடிகள் மேல உங்களுக்கு இருக்கற மரியாதை எல்லாருக்கும் நல்லாத் தெரியும். உங்க அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்களேன்…

வண்ணநிலவன்: இப்ப எளுதறவங்கள்ல, எஸ்.ராமகிருஷ்ணன் என்னுடைய கதையெல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லுதாரு. ஆனா என்னால ராமகிருஷ்ணன் கதைகளைப் படிக்கவே முடியல. அவர் ஷங்கண்ணா என்ற பேரில் அற்புதமான சிறுகதைகள் எளுதியிருக்காரு. ஆனா, இப்ப வரவர அவரோட எளுத்து வந்து அதோட அழகு, அதோட மென்மை, அந்த நுட்பம் எல்லாம் போயிட்ட மாதிரி இருக்கு. அப்படித்தான் கோணங்கியும். அவரோட மதினிமார் கதைகள் பிரமாதமா இருந்தது. இப்ப எழுதற கோணங்கிய நாம வாசிக்கவே முடியல. பாழி கீழின்னுல்லாம் எளுதினா ஒண்ணும் புரியவும் மாட்டேங்கு.

ஜெயமோகனச் சொல்லாம இருக்க முடியாது. அவர்கிட்டே இருக்கிற சிக்கல் என்னன்னா, எக்கச்சக்கம் எளுதுதாரு. எதைப்பத்தி வேணா சொல்லுதாரு. இப்ப இந்த பேப்பரைப் பத்தி அபிப்பிராயம் சொல்லுன்னா உடனே சொல்லிருதாரு. அது ரொம்ப டேஞ்சர். ஆபத்தான இடத்துக்கு போயிட்டிருக்காரு. அப்புறம் ஒண்ணுமே எளுத முடியாம போயிரும். எளுத முடியாம போயிடும்னா எளுதிட்டு இருப்பார், வசவசன்னு போயிரும். அவரோட விஷ்ணுபுரம் கதை ரொம்ப விசேஷம்னு சொன்னாங்க. ஆனா என்னால அந்தக் கதைக்குள்ளயே போக முடியல. என்னைப் பொருத்தவரைக்கும், அவரோட ‘ரப்பர்’தான் எனக்கு இன்னைக்கும் நல்லா இருக்கு. ‘ரப்பர்’ நாவல் வந்து ரொம்ப அருமையான நாவல். தமிழ்ல கிளாஸிக்ஸ்ன்னு பத்து இருபது சொன்னா அந்த நாவலையும் சொல்லணும். அப்புறம் வந்த நாவல்கள்லாம் படிச்சேன். எனக்கு அப்பீல் ஆகல. ஜெயமோகனால எந்த விஷயத்தையும் கதையா எளுதிர முடியுது. அது ஒரு திறமைதான். எந்த ஒரு விஷயத்தைக் குடுத்தாலும் இந்த வாட்சைப் பத்தி ஒரு கதை எளுதுன்னா கதை எளுதிருவாரு. அவரோட தெறமை அப்படிப்பட்டது. ஆனா அது எல்லாமே இலக்கியமா இருக்குமான்னா சந்தேகமாத்தான் இருக்கு.

யானை டாக்டர் கதையில என்ன சொல்றார், திரும்பத் திரும்ப யானைக்கு ட்ரீட்மெண்ட் பண்றதை ஒரு மூணு பக்கம் சொல்றார். ஆச்சா, யானை டாக்டர்ன்னு ஒருத்தன் இருந்தான், யானைங்ககிட்ட பரிவா இருந்தான், அது சரிதான் ஆனா, அது இலக்கியபூர்வமா ஆகலை. அது செய்தியாதான் இருக்கு. செய்தியாதான் எனக்கு உள்ள போகுது அது. அதுக்கு மேல போக மாட்டேங்குது. ஆத்மானுபூதியா, தேடறதுன்னு இருக்குல்ல, ஏதோ ஒண்ணைத் தேடறதுன்னு இருக்குல்ல, ஒரு கதைன்னா ஏதோ ஒண்ணைத் தேடறதா இருக்கனும்ல, ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்ற மாதிரி இருக்கணும். இது இல்லாத வேற ஒண்ணு சொல்ற மாதிரி இருக்கணும். ஸ்க்ரீனுக்குப் பின்னாடி, மெல்லிய திரைக்குப் பின்னாடி வேற ஏதோ ஒண்ணு தெரியற மாதிரி இருக்கணும். அந்த மாதிரியெல்லாம் ஒரு அனுபவமும் கிடைக்கலைய்யா.. ஒரு இதைப் படிக்கற மாதிரி இருக்கு. ஒரு பேப்பரைப் படிக்கற மாதிரி இருக்கு. அவரோட கதைகள் அப்படித்தான் இருக்கு.

சுகா : ஒங்க சமவயசு எழுத்தாளரான நாஞ்சில் நாடனோட எழுத்து ஒங்களுக்குப் புடிச்சிருக்கா?

வண்ணநிலவன்: நாஞ்சில் நாடனின் நாவல்கள் ரொம்ப பிரமாதமா இருக்கு. சிறுகதைகள்ல ஏதோ ஒரு சுவை குறையற மாதிரி இருக்கு. ஏதோ ஒரு சுவை. கதைகள் மோசம்னு சொல்ல வரலை. ஏதோ ஒரு சுவை கொறையுது. ஆனா நாவல்கள் அப்படியில்லை.

அவரோட நாவல்களுக்கும் கதைக்கும் எனக்கு ஒரு வித்தியாசம் தெரியுது. அவர் எளுதற விதத்துல நாவல்கள் ரொம்ப பிரமாதமா இருக்கும். நாவல்களின் உரைநடையும் சரி, அந்த உருவம், கட்டுக்கோப்பு இதெல்லாம் ரொம்ப வித்தியாசமா இருக்கும். சிறுகதைகள்லயும் அந்தக் கட்டுக்கோப்பு இருக்கு. ஆனா அந்த சுவை வித்தியாசம் இருக்கு. சில கதைகள்ல வந்து ஏதோ ஒரு அம்சம் குறைவா இருக்கு. அது என்னன்னு படிச்சாதான் சொல்ல முடியும். அந்த வித்தியாசம் தெரியுது எனக்கு, ஆனா அது என்னன்னு சொல்லத் தெரியல.

சுகா: இப்போ எளுதிக்கிட்டு இருக்கறவங்களல்லாம் படிக்கீங்களா?

வண்ணநிலவன்: இப்ப படிக்கறதில்ல. படிக்கவே முடியல. படிக்க முடியலன்னா அவங்களுக்குள்ள போக முடியல. அந்த எளுத்துகள் உள்ள போக முடியல. அந்த மாதிரி இருக்கு. அதில இப்ப செந்தில்குமார் அப்படின்னு ஒரு பையன் எளுதுதாரு. அவர் கதைகள் பரவாயில்லாத மாதிரி இருக்கு. சில கதைங்க நல்லா இருக்கு, சில கதைங்க சாதாரணமாத்தான் இருக்கு. அப்புறம் புதுப்பசங்க கதைகள்ல ரொம்ப கதைகள் வாசிக்கல. எனக்கு வாசிக்க முடியலன்னே சொல்லலாம். படிச்சா, படிக்க முயற்சி பண்ணினா, படிக்க முடியல. அது என்னன்னு தெரியல. என்னுடைய தப்புன்னுதான் நான் நெனைக்கேன். அவன் ஏதோ எளுதியிருக்கான், பத்து பக்கத்துக்கு ஏதோ எளுதியிருக்கான்; அதைப் படிக்க முயற்சி பண்ணணுமில்ல, ஆனா உள்ளே போக முடியல. முதல் பாராலேயே சாதாரணமா தூக்கி வச்சுரலாம்னு இருக்கு. அந்த மாதிரி தோணிருது.

சுகா: இணையத்தில எழுதறதெல்லாம் வாசிக்கிறீங்களா?

வண்ணநிலவன்: அய்யய்யய்யய்யே! அது வாந்தி பேதியாயில்லா இருக்கு! காலரா வந்த மாதிரி. அது என்ன எளுதுதாங்க எல்லாரும்… நமக்கு இருக்கறதும் போயி, எளுத முடியாமப் போயிரும்னு பயம் வந்துட்டுது, அதனால படிக்கறதில்ல.

சுகா: இப்போ வர்ற எழுத்துகள் எதையும் படிக்க முடியாமல் இருப்பது தேக்கமா?

வண்ணநிலவன்: தேக்கமா என்னன்னு தெரியல, எனக்கு முடியல. சிலது படிக்கோம், சிலது படிக்கலை. தேவைக்குப் படிக்கோம்னு வைங்க. அது உள்ள இளுத்துக்கிட்டு போகணும்லா? அது இல்ல. அதை நீங்கதான் செய்யணும், நானா செய்ய முடியும்? நான் வாசகன்தான், நிறைய படிச்ச வாசகன், கொஞ்சம் தெரிஞ்சவன். இந்த வாசகனை உள்ள இளுக்கறது ஒங்க வேலைதான். அது இப்ப இல்லை.

முன்னாடி எம்எல்வி கச்சேரி நெறய கேட்டிருக்கேன். சின்ன வயசுலயும் கேட்டிருக்கேன் அப்புறமும் கேட்டிருக்கேன், ரொம்ப ராக அனுபவம்லாம் கெடையாது. மைலாப்பூர் சீனிவாஸ் சாஸ்திரி ஹால்ல ஒரு தடவை பாடினாங்க. எங்க வீடு அந்தப் பக்கம் இருந்தது. கச்சேரி நடந்தா அடிக்கடி அந்தப் பக்கம் போவேன். அப்ப லதாங்கின்னு ஒரு ராகம் பாடினாங்க. எனக்கு கண்ணீர வந்துட்டு. அப்புறம்தான் அது என்ன ராகம்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். அளுதுக்கிட்டு இருக்கேன் நான். கண்ணீர் வடியுது அந்த ராகம் கேட்டு. அவ்வளவு அற்புதமா பாடியிருக்காங்க. அதுக்கு முன்னாடி நான் அவங்க கச்சேரி பல தடவை கேட்டிருக்கேன். ஆனா அன்னைக்கு அந்த ராகம் கேக்கும் போது அப்படி குளைவா இருந்தது. இப்ப உள்ள சங்கீதத்தைக் கேட்டா அப்படியெல்லாம் ஏதும் சொல்லத் தோணல. சுதா ரகுநாதன்லாம் பாடுதாங்க. இருக்கு. கடகடன்னு ஒரு ராகத்தைப் பாடி முடிச்சுட்டு போறாங்க. எம்எல்வி ராகம் எப்படி உங்களை பாதிச்சது, எப்படி மனசுக்குள்ள புகுந்தது, அந்த வித்தியாசம்தான் அப்போ உள்ள எளுத்துக்கும், இப்போ உள்ளதுக்கும். இப்போ வர்ற எளுத்தெல்லாம் ஒண்ணுமே இல்லாத மாதிரி இருக்கு.

ஆனா எல்லாரும் படிக்காங்க இப்ப. அப்படி நெறைய படிச்சாலும் வாசகனோட தேவையே ரொம்ப கீளடைஞ்சுதட்டுது அப்படின்னுதான் நெனைக்கென். சோ ‘எல்லாமே கீழ இறங்கிக்கிட்டு இருக்கு. எல்லா துறையிலுமே ஸ்டாண்டர்ட் கீழேதான் இறங்கிக்கிட்டு இருக்கு’ அப்படிம்பார். நான்கூட ‘அப்படிச் சொல்லாதீங்க. நீங்க பாத்தது அடுத்தவன்கிட்ட இல்லேங்கறதுக்காக அப்படிச் சொல்லாதீங்க அப்படின்னு’ அவர்கிட்ட ஆர்க்யூ பண்ணுவேன். ‘இல்லய்யா… அது அப்படிதான்யா’ அப்படீம்பார். அது நெறைய விஷயங்கள்ல உண்மையா இருக்குமோன்னு தோணுது. நான் படிக்காததுன்னால, இவங்கல்லாம் எளுதாம இல்ல. இவங்களும் புஸ்தகம் எளுதிக்கிட்டுதான் இருக்காங்க. நெறைய வருது. அது நின்னுரும். அதையும் சொல்லத்தான் போறாங்க. இப்ப என்னை மாதிரி இந்த காலத்தில் உள்ளவன் அம்பது வருஷம் களிச்சு அவன் படிச்ச கதையை சொல்லிக்கிட்டுதான் இருக்கப் போறான். அது அப்படிதான் இருக்கும். எனக்கு நான் படிச்சதுக்கும் இந்த காலத்து எளுத்துக்கும் வித்தியாசம் இருக்கு. அதை என்னால படிக்க முடியல அப்படின்னுதான் சொல்லத் தோணுது. அது தேக்கம்னா தேக்கம்தான். அதை என்ன சொல்றது! (சிரிக்கிறார்).

சுகா: எம்.எல்.வி பாடின லதாங்கி பத்திச் சொன்னதுனால கேக்கேன். இசைல ஒங்களுக்கு எந்த அளவுக்கு ஆர்வம்? முறையா படிச்சிருக்கீங்களா?

வண்ணநிலவன்: இசையறிவுல்லாம் கெடையாது. அடிப்படைல ரசனை உண்டு. கேட்டு கேட்டு மேலும் அது கூடிப் போச்சு. அப்ப திருநவேலி சங்கீத சபால ஒரு கச்சேரி விட மாட்டேன். மஹராஜபுரம் சந்தானம் கச்சேரியெல்லாம் அங்கெ கேட்டதுதான். நான் வேல பாத்த வக்கீல், சங்கீத சபால உறுப்பினரா இருந்தாரு. அவங்க ஃபேமிலில யாரும் கச்சேரிக்குல்லாம் போறதுல பெருசா ஆர்வம் காட்ட மாட்டாங்க. ஆனா, நான் அவங்க பளக்கத்துல சங்கீத சபா கச்சேரி எல்லாத்துக்கும் போவேன்.

அதுபோக எனக்கு நாதஸ்வரத்துல் ரொம்ப ஆர்வம் உண்டு. காருகுறிச்சி அருணாசலம்லாம் நேர்லயே கேட்டு ஒரே கிறுக்கு. அப்ப திருவையாறுல மன்னர் கல்லூரின்னு நாதஸ்வரம் சொல்லிக் குடுக்க ஒரு கல்லூரி இருந்தது. ஃபீசுல்லாம் கெடயாது. மான்யத்துலதான் சொல்லிக் குடுத்தாங்க. அந்தக் கல்லூரி விளம்பரத்த பேப்பர்ல பாத்து, நாதஸ்வரம் படிக்கதுக்கு எளுதிப் போட்டுட்டேன். அங்கெயிருந்து கெளம்பி வரச் சொல்லி பதிலும் வந்துட்டுது. ஆனா எங்க சித்தப்பா தாறுமாறுமா ஏசிப்போட்டாக. ‘ஒனக்கென்ன கோட்டியால? மேளக்காரனா ஆகணும்னு அலையுதெ!’ன்னு சொல்லி, போகவேப்படாதுன்னு சொல்லிட்டாக. யாரு கண்டா! அன்னிக்கு மட்டும் போயிருந்தேன்னா, ஒரு அஞ்சாறு வருஷம் நாதஸ்வரம் படிச்சுட்டு, அப்படியே என் வாள்க்கையே மாறியிருக்கலாம்.

அப்புறம் இங்கெ மெட்ராஸ்க்கு வந்ததுக்கப்புறமும் கச்சேரி கேக்கறது நிக்கல. அப்பப்ப போவேன். நெய்வேலி சந்தான கோபாலன், சுதா ரகுநாதன்னு எல்லார் கச்சேரியும் கேக்கறதுண்டு. ஆனா எனக்கு ரொம்பப் புடிச்சது, சஞ்சய் சுப்பிரமணியம். புள்ளைங்க படிப்புக்காக, கொஞ்ச நாளைக்கு நங்கநல்லூர்ல இருந்தேன். அங்கெ ஆஞ்சனேயர் கோயில் ரொம்ப ஃபேமஸ்லா! அங்கெ சஞ்சய் சுப்பிரமணியத்துல இருந்து எல்லாரும் வந்து கச்சேரி பண்ணுவாங்க. ஒருமட்டம் பிஸ்மில்லாகானே வந்து கச்சேரி பன்ணுனாரு.

சுகா: சினிமாப் பாட்டுல ஆர்வம் உண்டா?

வண்ணநிலவன்: என்ன இப்பிடி கேட்டுட்டிய? சினிமாப் பாட்டு கேக்காம எப்பிடி? 50,60ல வந்த சினிமாப் பாட்டுல்லாம் இப்பவும் கேக்கேன். சன் லைஃப் , முரசு டி.வி இதுலயெல்லாம் பளைய பாட்டாப் போடுதாங்க. அதையெல்லாம் பாக்கறதும், கேக்கறதும் தெனமும் நடக்கு. ஜி.ராமனாத ஐயர், சுப்பையா நாயுடு பாட்டுல்லாம் ரொம்ப இஷ்டம். அப்புறம் விஸ்வநாதன் – ராமமூர்த்தி பத்திக் கேக்கவே வேண்டாம். இளையராஜா பாட்டோட சினிமாப் பாட்டு கூட தொடர்பு விட்டுப் போச்சு. இப்பல்லாம் யார் பாடுதாங்க, என்ன படம், என்ன பாட்டுன்னு ஒரு வெவரமும் வெளங்க மாட்டேங்கு. வெளங்கவும் வேண்டாம்னு தோணுது. அது பக்கமே போறதில்ல.

சுகா: கொஞ்சகாலம் கண்ணதாசன் கிட்டயும் வேலை பார்த்திருக்கீங்க இல்லையா?

வண்ணநிலவன்: கண்ணதாசன் மகா பெரிய ஆளு. அவர் பாட்டு எளுதுனது, சினிமா பாட்டு எளுதறவரா போயிட்டாரே தவிர அது கொறைச்சல்னு சொல்ல முடியாது. அதிலேயே நெறைய செஞ்சிருக்காரு. ரொம்ப மதிப்பு அவர் மேல. பர்சனலா தெரிஞ்சதனாலயும், இதனாலயும் ஒரு பெரிய மதிப்பு. இப்பமும் இத்தனை வயசுக்கு அப்புறமும் அவர் மேல உள்ள மதிப்பு கொறையல. அவர் பாடல் வரிகள்ல ஏதேதோ விஷயங்களைச் சொல்லிட்டுப் போயிடறார்… சாதாரணமா சந்தத்துக்குதான் எளுதுனார். ஆனா, அதுல எங்கேயோ கொண்டுட்டுப் போயிருவார். வெள்ளத்துல, சுளலுக்குள்ள கொண்டுட்டுப் போன மாதிரி கொண்டுட்டுப் போயிருவார். அந்த மாதிரி இடங்க நிறைய இருக்கு. சும்மா கதாநாயகன் கதாநாயகி பாடற பாட்டில கூட உயர்வா எதாவது வந்திரும். அதான் அவரோட இந்த ஸ்தானம்ங்கறது.

ஊமைப்பெண் ஒரு கனவு கண்டாள் பாட்டுல ‘குழந்தைகள் நினைப்பதை யாரறிவார், அந்த பரம்பொருள் எண்ணத்தை யாரறிவார்’ அப்படின்னு சொல்லியிருப்பார். அதுல அதச் சொல்லியிருக்கார் பாருங்க. சாதாரண சிச்சுவேஷன்தான். எனக்கு ஆச்சரியமா இருக்கு. அந்த பாட்டுல அதுக்கு அவசியமே இல்லை. ஏதோ ஒரு விஷயம் இருக்கு அவருக்குள்ள. ஏதோ ஒரு ஆளம் இருக்கு. அந்த ஆளம்தான் கவிதையா வருது.

சுகா: கண்ணதாசனின் பலம், அந்த ஆழத்துக்குக் காரணமா புராண இதிகாசங்கள் உட்பட அவரோட பரந்த வாசிப்பைச் சொல்லுவாங்க. இப்போ எழுதறவங்ககிட்ட அந்த மாதிரியான வாசிப்பு இல்லைங்கறதாலதான் அப்படி கவிதைகள் வரலேன்னு சொல்லுதாங்களே?

வண்ணநிலவன்: அது வந்து ஒரு சேர்மானம்தான். இப்ப எளுதறவங்களுக்கு வாசிப்பு இருக்கா என்னன்னு எனக்குத் தெரியல. சேர்மானம்னா கண்ணதாசனுடைய காலம், அவரோட குடும்பம், அவர் வாள்ந்த கலாசாரம். பாசமலர்ல அந்த மாதிரி பாட்டு எளுத … அந்த மாதிரி ஸ்டோரியே இல்லையே இப்ப. அத்தை மாமா கதைல வருதே… கொளந்தையை ஒருத்தன் வச்கிக்கிட்டு அப்படி பாடற மாதிரி எல்லாம் வருதே. இப்ப அந்த மாதிரி கதை எளுத முடியுமா… இப்ப அந்த மாதிரி கதையே இல்ல. வாள்க்கையும் அப்படி கெடையாது. கொளந்தைகளே கெடயாது. எல்லாம் ஒரே கொளந்தைன்னு ஆயிட்டு. அப்புறம் அத்தை மாமாவுக்கு, சித்தப்பாவுக்கெல்லாம் எங்கே போக? இந்த சாரம், பாஷையினுடைய உத்வேகம், எல்லாம் சேர்மானம்தான். ஜெயகாந்தனும் அதுதான். எல்லாம் சேர்மானம். சேர்மானம் அப்ப இருந்தது. அது இப்ப இல்லை. அதான் காரணம்னு நெனைக்கேன். இப்பா நான் யாரையும் குத்தமாச் சொல்ல முடியாது. அந்த சேர்மானம் இல்லையோன்னு தோணுது. அது இருந்தாதானே பாத்து எளுத முடியும்? உங்களுக்குள்ள போயிருந்தாதானே எளுத முடியும்? அது இல்லாதபோது அதை எப்படி நீங்க எளுத முடியும்னு தெரியல.

சுகா: எப்படியும் ஜெயகாந்தன் பேச்சு வந்திருதே…

வண்ணநிலவன்: வராம எப்படி? அவரோட எளுத்துகள் ரொம்ப வேகமா பேசி எளூதின எளுத்துகள்தான். ஓஓஓன்னு போட்டு எளுதுவார். அதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்திதான், அப்படில்லாம் எளுதியிருக்க வேண்டாம்.

அப்புறம் இன்னொன்னு பாத்திங்கன்னா கலையே வந்து சரியா தப்பாங்ககிறதைவிட ஒரு ஆச்சரியம்தான். வாள்க்கைல ஆச்சரியத்தின் அடிப்படைலதான் எல்லாத்தையும் பேசுதோம். எல்லா விஷயத்திலயும் அப்படிதான் பேசுதோம். எதையுமே நமக்குக் கரெக்டா சொல்லத் தெரியல அல்லது பாக்க முடியல. அப்படி பாத்தா எப்படி இருக்கு, ட்ரையா இருக்கு. ரொம்ப கரெக்டா ஒருத்தன் பேசுதான்னு வைங்க அவன் பேச்சைக் கேக்கவே முடியாது. ரொம்ப சரியா ஒருத்தன் பேசுதான்னா அது பொருளாதாரத்தைப் பத்திப் பேசற மாதிரி ஆயிருமோ, என்னவோ… அப்படித்தான் இருக்கு. வாள்க்கையே அப்படித்தான் இருக்கு. எல்லா விஷயத்திலயும் கொண்டாடறது, அல்லது ஒண்ண மிகைப்படுத்திச் சொல்றது, அதுதான் இருக்கு.

இலக்கியமும் அதைத்தான் செய்யுது. இப்ப நாம கதைகள்ல எளுதற மாதிரியா பாத்திரங்கள் இருக்கு? இப்ப நான் எளுதற மாதிரியா இருக்காங்க, இல்ல. அதுல நான் ஏதோ ஒண்ணக் கூட்டுதேன். மிகைப்படுத்திதான் சொல்லுதோம். அப்படித்தான் இருக்கு. ஆனா ஜெயகாந்தனோட, மிகைப்படுத்தல் , சில கதைகள்ல ரொம்ப கூடுதலா போயிருது. அதேசமயம் பாத்தீங்கன்னா, அவரு அபாரமான பாத்திரங்களைப் படைச்சிருக்காரு. அவரளவுக்கு தமிள்ல பாத்திர சிருஷ்டிகளைச் செஞ்சவங்க இருக்காங்களான்னு சொல்ல முடியல. நிறைய பாத்திரங்களைக் கண் முன்னால கொண்டு வந்துரக்கூடிய ஆளு. அதுதான் அவரோட சிறப்பு.

ஏற்கனவே சொன்ன மாதிரி அவரோட கட்டுரைகள் எனக்கு ரொம்பப் புடிக்கும். அது உண்மையான விஷயம். அதில என்னமோ பண்ணுதாரு. இந்த பாஷை வந்து அவர் கைகளில் ஏதோ ஆயிருது…நாக்குல போட்டா அவ்வளவு தித்திப்பா இருக்கற பண்டம் மாதிரி இருக்கு.

அதேமாதிரி ஜெயகாந்தன் பேச்சை நெறைய கேட்டிருக்கேன் விரும்பித் தேடிப் போய் கேட்டிருக்கேன்.

கண்ணதாசன் பேச்சும் ரொம்ப நல்லா இருக்கும். அவர்ட்ட வேலை பாத்ததுக்காகச் சொல்லலை. உண்மையிலேயே நல்லா இருக்கும். அது மாதிரில்லாம் பேசுறதுக்கு இப்போ உள்ள எளுத்தாளர்களுக்கு பேச்சு தெரியாது. அதானே சொல்லுதேன், இவங்க எளுதறதே சரியில்லை, அப்புறம் எதுக்கு பேசப் போறே? அதுவும் ஒரு கலை. ஆமா. பேசுறதும் ஒரு கலைதான். இதையே சரியா செய்ய முடியல நீ. அங்க போயி என்னச் செய்யப் போறே?

சுகா: எழுத்தாளன் எல்லாத்துக்கும் அபிப்பிராயம் சொல்லிக்கிட்டு இருக்க வேண்டாம், எப்பப் பாரு எல்லாத்தையும் பத்தி பேசிக்கிட்டு இருக்க வேண்டாம்னு உங்க சுபாவத்தை வைத்து சொல்லுதீங்களா, இல்லை பொதுவாகச் சொல்லுதீங்களா?

வண்ணநிலவன்: என்னைக் கேட்டா உங்க தொளில நீங்க பாத்தா போதும். உங்க தொளில் பேப்பரும் பேனாவும் வச்சுக்கிட்டு எளுதறதுதான். அதுக்கு மேல… மேடைப் பேச்சு, ஜெயகாந்தன் மாதிரி பேச முடியுமா? இப்ப நான் மீட்டிங் போகாததுக்குக் காரணம் அதான். எல்லாரும் பேசுதாங்க. கேக்க முடியல. ஏதோ தீசிஸ் படிக்கற மாதிரி இருக்கு. இலக்கியத்தை பத்தி பேசும்போது கல்லூரி பேராசிரியர்கள், நற்றிணை குறிஞ்சிப் பாட்டுல ஏதோ ஒன்னை புடிச்சுக்கிட்டு பேசுவாங்கள்லா?. அந்த மாதிரி பேசுதாங்க. மலையாளத்து ரம்பம் போட்டா மாதிரி இருக்கு. அதனாலயே கூட்டங்களுக்குப் போறதே கிடையாது. ஏன்னா அவங்ககிட்ட தெரிஞ்சுக்கறதுக்கு நமக்கு செய்தி ஒண்ணும் இல்ல. உங்ககிட்ட பேசுதேன்னா ஏதாவது தெரிஞ்சுக்க முடிஞ்சா நல்லது எனக்கு. அதுக்காக எல்லார்கிட்டயும் எல்லாம் தெரிஞ்சுக்க முடியாது. ஆனா அப்படி இருந்தா நல்லது இல்லையா? மெனக்கெட்டு பஸ் ஏறி அங்க போய் ரெண்டு மணி நேரம் உக்காந்திருக்கத் தயாரா இருக்கேன். ஆனா ஒண்ணுமே இல்லாம நம்மளப் புடிச்சு, இந்த மாதிரி சாகடிச்சா என்ன பண்ண முடியும்? ஓடியே வந்திருவேன்.

சுகா: இந்த இலக்கியத்தைப் பல பிரிவால்லாம் பிரிக்காங்களே! அதைப் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

இலக்கியத்தை அப்படில்லாம் பிரிக்க முடியாது. இப்ப கி.ராஜநாராயணன் மாமா கரிசல் இலக்கியம் எளுதிட்டதா சொல்லுதாங்க. ஆனா எண்ட்ட கேட்டா, கரிசல் இலக்கியம், மத்த இலக்கியம் அப்படின்னுலாம் ஒண்ணும் கெடையாதுன்னுதான் சொல்லுவேன். அப்படிப் பாத்தா, வேற மொளி இலக்கியம் உங்களை பாதிக்காது. இப்ப தாகூர் உங்களுக்குப் பிடிக்குது. சரத் சந்திரர் பிடிக்குது. டால்ஸ்தாய் படிக்கீங்க. அதெல்லாம் உங்களை எப்படி பாதிக்குது? அவங்கள்லாம் மண் சார்ந்தோ பூமி சார்ந்தோ பூகோளம் சார்ந்தோ இல்ல. அப்புறம் இந்த முற்போக்கு, பிற்போக்கு இதெல்லாம் இப்ப இல்ல. ஓஞ்சு போச்சு. அதுவும் தப்பு. அந்த மாதிரியெல்லாம் ஒண்ணும் கெடையாது. இப்ப கம்ப ராமாயணம் ஏதோ ராமன்னு ஒரு ராஜா இருந்தான்னுதான் கதை. அதைத்தான் எளுதியிருக்கார். ஆனா கம்ப ராமாயணம் எவ்வளவு சுவையா இருக்கு சொல்லுங்க. அந்த இலக்கியத்தினுடைய ஆளுமை இன்னும் நின்னுக்கிட்டிருக்கு… படிச்சா நம்மளை உள்ள இழுத்துக்கிடுது. அதுக்கெல்லாம் இப்படிச் சொல்ல முடியுமா? உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ராஜாவுடைய வாள்க்கையைச் சொல்லுது அப்படின்னு சொல்ல முடியுமா, அல்லது முற்போக்கு இலக்கியம் இல்லன்னு சொல்ல முடியுமா? லீனியர் நான் லீனியர்ன்னு என்னென்னமோ சொல்லுதாங்க. அதெல்லாம் சும்மா.

இப்ப பெண்ணியம்ங்காங்க. தலித் இலக்கியம்ங்காங்க. இதெல்லாம் பேத்தல். இது முட்டாள்தனம் அல்லது பேத்தல் அப்படின்னுதான் சொல்லுவேன். எல்லாரும் எல்லாத்தைப் பத்தியும் எளுதலாம். ஆம்பளை எளுதுனாத்தான் இலக்கியம், பொம்பளை எளுதுனா இலக்கியம் இல்லைன்னு சொல்ல முடியாதுல்லா, அந்த மாதிரிதான். யாரும் எந்த விஷயமும் எளுதலாம். சரியா இருக்கா… இப்ப நீங்க குடிக்கீங்க ஒரு தண்ணி. எப்படியிருக்கு சொல்லலாமில்லையா? இது சிறுவாணித் தண்ணி மாதிரி இருக்கா, சரி. சிறுவாணித் தண்ணிங்கறது ஒரு உச்சபட்சம். அது மாதிரிதான். மத்ததெல்லாம் அதுக்கப்புறம் வச்சுக்கோ. அப்படித்தான் சொல்ல முடியும்.

உயர்ந்த அம்சம்னு ஒண்ணு இருக்கு. அது இருக்கா என்னன்னு தேட வேண்டியிருக்கு. அது இருந்தா சரிதான். அது யாரு எளுதுனா என்ன? அதனால, தாழ்த்தப்பட்டவனைப் பற்றி தாழ்த்தப்பட்டவன்தான் எளுதணும் அப்படின்னா என்னாகும்? அது பேத்தல்தான். குபரா எளுதியிருக்காரு. பண்ணைச் செங்கான்னு ஒரு கதை எளுதியிருக்காரு. ரொம்ப அருமையான கதை. மிகச் சிறந்த கதைகள்ல ஒண்ணு. தாழ்த்தப்பட்ட ஒரு விவசாயியைப் பத்திதான் எளுதியிருக்காரு. அப்ப குபரா ஒரு பிராமணன் அவர் எளுதலாமா அப்படின்னு கேக்க முடியுமா? அப்படிக் கேட்டா என்ன சொல்லுவீங்க? அவருக்கு மனசை அப்படி பாதிச்சிருக்கு, எளுதிட்டார். ஜாதி அடிப்படையில் பிரிக்கறது, பெண்கள் அப்படின்னுல்லாம் பிரிக்கறது, கோஷம் போடறது இதெல்லாம் பொலிட்டிக்கல் ஜார்கன்ஸ். நமக்குத் தேவையில்லாத விஷயங்கள். இலக்கியத்துக்குத் தேவையில்ல. இலக்கியம் அது பாட்டுக்கு… இப்போதைக்குப் பெரிசா இருக்கற மாதிரி தெரியும். ஆனா அது காலப்போக்கில் நிக்காது. உண்மையான இலக்கியம்தான் நிக்கும்.

சுகா: நாஞ்சில்நாடன் அடிக்கடி ஒரு விஷயம் சொல்லுவாரு, தனிப்பேச்சிலயும் சொல்லிருக்காரு, பொதுவுலயும் சொல்லிருக்காரு, ‘உண்மையான எளுத்துதான் எப்போவும் நிக்கும். புதுமைப்பித்தனுக்கு அப்புறம் எத்தனையோ எழுத்தாளர்கள் வந்திருந்தாலும், புதுமைப்பித்தனுக்கு அப்புறம் வண்ணநிலவன்தான்’னு….

வண்ணநிலவன்: அவர் எப்படிச் சொல்லுதார்ன்னு தெரியல. புதுமைப்பித்தனுக்கும் எனக்கும் என்ன ஒற்றுமை இருக்குன்னு தெரியல. ஆனா நான் என்ன நெனைக்கேன்னா புதுமைப்பித்தன் கதைகளை ஒரே மாதிரி எளுதல. வித்தியாசம் வித்தியாசமான உரைநடை, வித்தியாச வித்தியாசமான உருவ அமைப்புகள்ல எளுதியிருக்காரு. நானும் அந்த மாதிரி எளுதியிருக்கேன்.

என் கதைகள்லயும் கேலி கிண்டல்லாம் இருக்கும். சில கதைகள்ல கிண்டல் இருக்கும். லிட்டரேசச்சர்னாலே சீரியசாதான் இருக்கணும், சோகச் சுவை ஒண்ணுதான் இலக்கியம்னு இல்லை. எல்லா விஷயத்தையும் நான் எளுதியிருக்கேன். அதை வச்சு அவர் அப்படி சொல்லுதாரோ, என்னமோ தெரியல. ஆனா புதுமைப்பித்தன் அளவுக்கு என்னை நான் நெனைச்சுக்கிட முடியாது. நெனைச்சுக்கறதும் தப்பு.

சுகா: கம்பராமாயணத்தப் பத்திச் சொன்னதனாலே கேக்கறேன். மரபிலக்கியங்கள், கம்பராமாயணத்துலயெல்லாம் ஈடுபாடு உண்டா?

வண்ணநிலவன்:என்ன, இப்படி கேட்டுட்டீங்க? கம்பராமாயணப் பரிச்சயம் சின்னப் புள்ளைல இருந்தே இருந்தது. அப்புறம் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் விளக்கவுரையோட எளுதுனத முளுமையாப் படிச்சிருக்கேன். அத எனக்கு குடுத்தவரு, சோ. கம்பன் எளுதுனத அத்தன சுவையா, எளிமையா, விளக்கமா சொல்லியிருப்பாரு கோபாலகிருஷ்ணமாச்சாரியார். எப்பவாது கம்பராமாயணத்தப் பத்தி எளுதணும்னு அதுலேருந்து நெறய குறிப்புகள்லாம் எடுத்து வச்சேன். சந்தர்ப்பம் அமையறப்ப எளுதனும். அப்புறம் சங்க இலக்கியம், பக்தி இலக்கியமான தேவாரம், திருவாசகமெல்லாம் காதுல விளுற சூளல்லயே வாள்ந்தததுல்லாம் ஒரு கொடுப்பினைன்னுதான்யா சொல்லணும். அதயெல்லாம் எளுதறவங்க எல்லாருமே படிக்கணும். எளுதறவங்கன்னு இல்ல. எளுத, படிக்கத் தெரிஞ்ச எல்லாருமே நம்ம மொளில உள்ள அளகத் தெரிஞ்சுக்கிடக்காவது அதெயெல்லாம் படிக்கணூம்.

சுகா: ஆரம்பகாலத்துல நீங்க கூட கவிதைகள் எல்லாம் எழுதியிருக்கீங்க இல்லையா? இப்போ ஏன் நிறுத்தீட்டிங்க?

வண்ணநிலவன்: என்னை கவிஞன்னு சொல்ல முடியாது. எல்லாம் பண்ணிப் பாப்போம். டிராமா கூட எளுதியிருக்கேன். கணையாழியில எல்லாம் வந்திருக்கு என் நாடகங்கள். எல்லாம் பண்ணிப் பாப்பேன். சும்மா எல்லா முயற்சியும் பண்ணிப் பாப்போம் அப்படின்னு தோணும். அது மாதிரி எளுதுனது. கவிதைக்குத் தகுதியான ஆள் இல்ல நாம அப்படின்னு எனக்கு அபிப்பிராயம். ஏன்னா அந்த மனசு என்கிட்டே கெடையாது. வண்ணதாசனுக்கு அந்த மனசு உண்டு. அதனால அவர் அந்த மாதிரி எளுத முடியும், நான் எளுத முடியாது. நான் உரைநடைக்காரன்தான். ரொம்ப இயல்புல நான் வந்து உரைநடைக்காரன்தான். அத ஒளுங்கா எளூதுனாலே போதும் அப்படின்னு தோணிட்டு. (சிரிக்கிறார்).

சுகா: இப்போ வண்ணதாசனுக்குள்ள கவிதை மனசுக்குக் காரணம் அவர் பிடிச்ச இடத்துல, பிடிச்ச ஊர்லயே இருக்கறதாலயா இருக்குமா?

வண்ணநிலவன்: இருக்கலாம். நமக்கு வேர் அங்கதான் இருக்கு. சுடலைமாடன் கோயில் தெருக்குள்ள போனாலே என்னமோ மாதிரி ஆயிருதே. . இவ்வளவுக்கும், அந்த ஆட்கள்லாம் தெரியாத ஆட்கள்தான். அந்த தெருவில் இருக்கறவங்க ஒருத்தரும் தெரியாது.

தாதங்குளம் போயிருந்தேன். எங்க ஊரு தாதங்குளம்தான். அங்க எங்க வீடே இல்ல அந்த எடத்தில. எங்க வீட்டுக்குப் பக்கத்துல பல வீடுங்க இருந்தது அந்த வீடுகள்லாமே இல்ல. அந்த தெருவே இல்லைன்னு சொல்லணும். அந்த அளவுக்கு எல்லாரும் வெளியே போயிட்டாங்க வீட்டெல்லாம் இடிச்சுட்டாங்க. ஆனா அங்க போன பின்னாடி அங்க போனா ஏதோ பண்ணுது. அந்த மண்ணு செய்யற வேல…

டான் ஜூவான்னு ஒரு கேரக்டர் லத்தீன் அமெரிக்க இலக்கியத்துல வரும். அந்த டான் ஜூவான் ஒரு சித்தர் மாதிரி. திடீர் திடீர்னு அவன் எதுவாவது சொல்லுவான். அவன் அந்த மாதிரி சொன்னதுல பவர் ஸ்பாட் அப்படின்னு ஒரு விஷயத்தைப் பேசுவான். காட்டு வளியில போயிட்டே இருப்பான். ஒரு எடத்துல நல்ல சிந்தனையெல்லாம் வரும். இந்த எடத்துல நில்லு. நல்ல சிந்தனைகள்லாம் வரும். அப்படிம்பான். அந்த மாதிரி அந்த ஊரெல்லாம் நமக்கு பவர் ஸ்பாட்டு மாதிரி ஏதோ பண்ணுது. எல்லோரோட இருக்கும்போதும் அப்படி இருக்கறதில்லை. சில பேரோட இருக்கும்போது சந்தோஷமா இருக்கு. பேசாட்டா கூட நமக்கு சந்தோஷமா இருக்கு. அந்த மாதிரி எல்லாம் இருக்கு. அது என்னத்துனாலன்னு சொல்ல முடியுமா? விஞ்ஞானபூர்வமா சொல்ல முடியுமா?

அது மாதிரிதான் இதுவும். இந்த விஷயமும் எப்படின்னு சொல்ல முடியாது (சிரிக்கிறார்)

சுகா: முந்தி ஒரு முறை சுபமங்களா பேட்டியில, “திருநவேலியில ஒரு ஆயிரம் ரூவா சம்பளத்துல ஒரு பலசரக்குக் கடைல வேலை கெடைச்சா ஊருக்குத் திரும்பிப் போய்ருவேன்”ன்னு சொல்லியிருந்தீங்க, இப்பவும் அப்படித்தானா?

வண்ணநிலவன்: இப்பவும் எனக்கு அந்த ஒரு எண்ணம் இருக்கத்தான் செய்யுது. திருநெல்வேலியில இருக்கலாம் அப்படின்னுதான் தோணுது. இப்ப கல்யாணில்லாம் பாக்கியவான்தான். அவரைப் பாத்தா பொறாமையா இருக்கு. அங்கேயே இருக்கறதுக்கு அவர் குடுத்து வச்சிருக்கணும் பாத்தேளா? திருநெல்வேலி மாறிட்டு. அதையும் நான் ஏத்துக்கிடுதேன். ஆனா எனக்கு திருநெல்வேலி பிடிச்சிருக்கு. இந்த மாதிரி ஒரு வீடு குடுத்து எளுதுய்யா அப்படின்னா எளுதத்தான் செய்வேன். இந்த ஊர்ல ஒட்ட முடியல. ஒட்டலியே. முப்பத்து அஞ்சு வருஷம் ஆச்சு. இந்த ஊர்ல எனக்கு ஒட்ட முடியலயே. இருக்கேன். ஆனா இருக்கேனே தவிர இந்த ஊரோட மனசு தோய மாட்டேங்கு. திருநெல்வேலிக்குப் போயி இருக்க முடிஞ்சதுன்னா எனக்கு ரொம்ப இதுவாத்தான் இருக்கும். இங்க வீடெல்லாம் இருக்கு. போக முடியாது. அது சாத்தியமே இல்லை.

குருவிக்கத ஒண்ணு இருக்குல்லா. ஒரு துறைமுகத்தில் கப்பல் நிக்கும். கப்பல்ல தானியங்கள்லாம் சிந்தியிருக்கும். குருவி அதைப் பொறுக்கித் தின்னுகிட்டு இருக்கும். கப்பல் புறப்பட்டுருது. அந்த ருசியில அது அந்தக் கப்பல்லயே உக்காந்திருது. கப்பல் போயிருது. ரொம்ப தூரம் போயிருது. சாப்பிட்டு முடிச்சதும் நம்ம இடத்துக்குப் போகணுமே, கரைக்குப் போகணுமேன்னு பாத்தா கடல். கொஞ்ச தூரம் பறக்கும் அப்புறம் கப்பலுக்கு வரும். மறுபடியும் கொஞ்ச தூரம் … இப்படி… போகவே முடியல. கடைசில கப்பல்லயே இருந்திரும். போகவே முடியாது. இனிமே கரைக்குப் போகவே முடியாது.

அந்தக் குருவி மாதிரிதான் ஆகிப்போச்சு என் வாள்க்கையும்’

‘என் வாள்க்கையும்தான் அண்ணாச்சி’.

விடைபெற்றுக் கொண்டேன்.

சுப்பையாவின் மருமகன்

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்ததிலிருந்தே சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா மடைதிறந்த வெள்ளமாக, தேவாரமும், திருவாசகமுமாகப் பாடி வந்தார். இடையிடையே கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் வேறு. மரபின் மைந்தன் பாடிய ஒவ்வொரு பாடலும் எனக்கும் தெரியும் என்பதாகக் காட்டிக் கொள்வதற்கு ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்தது. சில இடங்களில் கண்மூடி பக்தியில் மூழ்கிக் கிடப்பதான பாவனையில் சமாளித்தேன். உடன் வந்த ‘இசைக்கவி’ ரமணன் அவர்கள் ஒருபடி மேலே போய், மரபின் மைந்தனின் குரலுக்கு வாயசைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தார். சொக்கநாதர் சந்நிதிக்குள் நுழையவும், மரபின் மைந்தனுக்கு முந்திக் கொண்டு, இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி ‘திருச்சிற்றம்பலம்’ என்று உரத்த குரலில் சொல்லிவிட்டு,

’நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க ’

என்று ஆரம்பித்து,

’சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து’

வரைக்கும் நிறுத்தாமல் ஒப்பித்து,

‘நம பார்வதிபதயே, ஹரஹர மஹாதேவா
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’

என்று சம்பிரதாயமாக முடித்து கண் திறந்தேன். ‘இசைக்கவி’ கண்கலங்க என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அத்தனை நேரம் கண் மூடியிருந்ததால், முழு சிவபுராணத்துக்கும் அவர் வாயசைக்க முயன்றாரா என்று பார்க்க முடியவில்லை. ‘அற்புதமா சிவபுராணம் பாடினே, சுகா’. தோளைத் தொட்டுச் சொன்னார். எனக்கு அது மட்டும்தான் தெரியும் என்கிற ரகசியத்தை அவரிடம் சொல்லாமல் தவிர்த்தபடி, ‘எல்லாம் அவன் செயல்’ என்று சொக்கநாதரைக் காட்டினேன். சரியாக மரபின் மைந்தன் சொக்கநாதரை மறைத்தபடி நின்றார்.

வெளியே வந்து காரைத் தேடும் போது, இசைக்கவி சொன்னார்.

‘ஏம்பா, கோயிலுக்கு வந்துட்டு சும்மா போகக் கூடாதுப்பா. ஒரு ஜூஸ் குடிக்கணும்’.

அந்தச் சம்பிரதாயம் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் மரபின் மைந்தன் வேறோர் முடிவில் இருந்தார்.

‘அன்னைக்கே ஒங்கக்கிட்டெ சொன்னேன்ல! பெரியவரப் பாத்துட்டு வந்திருவோம். வீட்லதான் இருக்கா. பேசிட்டென்’ என்றார்.

ஏற்கனவே பெரியவரைப் பற்றிச் சொல்லியிருந்தார். எனக்கு அப்போதே மனசு வேடிக்கையை விட்டு கவனமானது. பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்களின் ஓட்டுனரிடம் கேட்டார், மரபின் மைந்தன். ‘இங்கெருந்து நாகமலை புதுக்கோட்டைக்குப் போகணும்’. ஓட்டுநருக்குத் தெரிந்திருந்தது. அங்கு சென்று ஒவ்வொரு இடமாகத் தேடி ‘சர்வோதயா நகர்’ சென்றடைந்தோம். எங்களைப் பின் தொடர்ந்து ‘தஞ்சை’ செழியனும் தன் காரில் வந்து கொண்டிருந்தார். காரிலிருந்து இறங்கி முகவரியை விசாரிக்கும் போது, எங்களைப் போன்றே அவரும் மரபின் மைந்தனிடம், ‘நெஜம்மாவே அவரத்தான் பாக்கப் போறோமா?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். கடைசியில் ஒரு மளிகைக்கடைக்கார வெள்ளைமீசை அண்ணாச்சி சொன்னார். ‘வலதுபக்கம் போயி வலதுப்பக்கமே திரும்புங்க. கடைசி ஒத்த வீடு.’

அந்தக் கடைசி ஒத்த வீட்டின் வாசலில் V.O.C.Valeswaran என்று ஆங்கிலத்தில் எழுதிய போர்டு ஒன்று தொங்கியது. நண்பகல் வெயிலும், அமைதியும், புழுக்கமுமான ஒரு சூழலில் மரபின் மைந்தன் அந்த வீட்டின் வாசல் கதவைத் தட்டி, ‘ஐயா’ என்றார்.

‘யாரு?

இந்தா வாரேன்’

என்ற குரலை முதலில் அனுப்பி விட்டு, பின் மெதுவாக கால்களைத் தரையில் தேய்த்தபடி, தளர்ந்த நடையுடன், கிழிசலான பனியன் அணிந்த முதியவர் ஒருவர் கதவைத் திறக்க வந்தார். நன்றாகப் படிய வாரிய சிகை. நெற்றிச் சுருக்கங்களுக்கிடையே திருநீற்றுக் கோடு.

’வணக்கம். முத்தையா வந்திருக்கென்’ என்றார் மரபின் மைந்தன். உதடுகளில் பொதிந்திருந்த நிரந்தரப் புன்சிரிப்புடன்

‘ஆகா, வாங்கய்யா வாங்க’

என்று கதவைத் திறந்தவர், ‘இசைக்கவி’ ரமணன் அவர்களைப் பார்த்து, கண்களை அகலத் திறந்தபடி

‘ஐயா வாங்க. ஒங்கள பொதிகைல பாத்து ரசிச்சிருக்கம்லா’

என்றபடி வணங்கினார். உள்ளே நுழையும் போதே, சத்தமாக

‘ஏட்டி, ஆரு வந்திருக்கா பாரு. பொதிகைல கவித சொல்லி பாட்டா படிப்பாகள்லா. அவுக’ என்றார்.

உள்ளிருந்து பெரியவரின் துணைவியார் வந்து, எங்கள் எல்லோரையும் விட்டு விட்டு , இசைக்கவியை வணங்கி,

‘ஒங்க பாட்டுல்லாம் எங்களுக்குப் புடிக்கும்’ என்றார்.

அனைவரும் கிடைத்த இருக்கைகளில் அமர்ந்த சில நொடிகளுக்கு காரணமேயில்லாமல் ஓர் அமைதி சூழ்ந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, ஏற்கனவே உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருந்த ‘இசைக்கவி’ அவர்கள், ஏதேனும் கவி இயற்றிப் பாடிவிடுவாரோ என்று கலக்கத்தில் இருந்தேன். நல்ல வேளையாக அந்த அமைதியை மரபின் மைந்தன் கிழித்தார்.

‘ஐயா, ரெண்டுக்கெட்டான் வேளைல வந்து தொந்தரவு பண்ணிட்டோமோ?’.

மரபின் மைந்தனின் முகத்தை உற்றுப் பார்த்த பெரியவர்,

‘நான் என்னத்த செய்யப் போறேன்? யாருக்காது காயிதம் எளுதுவென். அதத்தவிர வேற சோலி கெடயாது. ஒங்களுக்கே எத்தன காயிதம் போட்டிருக்கென்’ என்றார்.

ஏழெட்டு பேர் அமர முடிகிற அந்த சிறிய ஹாலில் இரண்டு, மூன்று வ.உ.சி புகைப்படங்கள் இருந்தன. அதில் ஒன்றை நான் உற்றுப் பார்க்க,

‘அந்தப் படம் ஒரு வெள்ளைக்கார அதிகாரி குடுத்தது. அத எங்க அண்ணன் ஒடச்சுப் போட்டான். அப்புறம் நான் பந்தோபஸ்து பண்ணி வச்சிருக்கென்’ என்றார், பெரியவர்.

’ஒங்க பேரே வெள்ளக்காரன் பேருதானெ!’ என்றேன். சில நொடிகள் ஏதும் சொல்லாமல் இருந்து விட்டு,

‘அந்த நன்றியெல்லாம் இப்ப உள்ள மனுசாளுக்கிட்டெ நாம எதிர்பார்க்கக் கூடாது’ என்றார்.

சில நொடிகள் ஏதும் சொல்லாமல் இருந்து விட்டு,வ.உ.சி அவர்கள், தான் மீண்டும் வக்கீல் தொழில் செய்வதற்கு உதவிய வாலேஸ் என்ற வெள்ளைக்கார அதிகாரியின் பெயரை, நன்றிக்கடனாக தன் மகனுக்கு வைத்தார் என்னும் செய்தி அறிந்ததுதான். அதைத்தான் பெரியவர் அப்படி சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். சூழலை மாற்ற வேண்டும் என்று விரும்பினாரோ, என்னவோ! இசைக்கவி ரமணன் அவர்களைப் பார்த்து பெரியவர்,

‘எய்யா. டி.வி.ல எத்தனையோ மட்டம் ஒங்க பாட்டக் கேட்டிருக்கொம். இப்ப எங்களுக்காகப் பாடுங்களென்’

என்றார். என் கையில் கேமரா இருப்பதைப் பார்த்தவுடன்

‘நீங்க ஃபோட்டோ எடுக்கப் போறதா இருந்தா, சட்ட போட்டுட்டு வந்திருவென். இதுக்குன்னே ஒரு நல்ல சட்டய பத்திரப்படுத்தி வச்சிருக்கெம்லா’

என்றார். சொன்னபடியே சட்டை போட்டு வந்தார். இசைக்கவி பாடத் தயாராக, உள்ளே சென்ற தன் மனைவியைக் கூப்பிடும் விதமாக,

‘ஏட்டி, ஒன் காப்பிக்கடயக் கொஞ்சம் சாத்திட்டு இங்கன வா. அவாள் பாடப் போறா’ என்றார். ஸ்விட்ச்சைத் தட்டினாற் போல் இசைக்கவி அவர்கள் எங்கு சென்றாலும் தவறாமல் பாடும் ‘அந்த எட்டயப்புரத்துச் சுப்பையா’ என்ற பாடலை சுருதிவிலகாமல் நயமாகப் பாடினார். பாட்டு முடிந்ததும், உள்ளே சென்று ஒரு பொன்னாடையை எடுத்து வந்து இசைக்கவிக்குப் போர்த்தி மரியாதை செய்தார், பெரியவர். இசைக்கவி கண்கலங்கினார். இதற்குள் பெரியவர் வாலேஸ்வரன் அவர்களின் துணைவியார், எல்லோருக்கும் தேநீர் கொண்டு வந்தார்கள். தம்ளரைக் கையில் வாங்கிய மறு கணமே, கண்ணீரைக் கூட துடைக்காமல், ஒரு ஸ்டூலில் இருந்த தட்டில் உள்ள முறுக்கை எடுக்கப் பாய்ந்தார் இசைக்கவி.

‘டீல ஊறப்போட்டு சாப்பிடப் போறேளா?’ கண்சிமிட்டி சிரித்தார், பெரியவர்.

மரபின் மைந்தன் சர்க்கரையைத் தவிர்க்கும் பொருட்டு, தன் தேநீர் தம்ளரிலிருந்து எல்லோருடைய தம்ளரிலும் கொஞ்சம் ஊற்றினார்.

‘என்ன?’ என்றார் பெரியவர்.

‘ஒண்ணுமில்ல. அவாள் பெருமாள் கோயில் தீர்த்தம் மாரி எல்லாருக்கும் வளங்குதா’ என்றேன்.

‘எனக்கு தீர்த்தம் மாரி ஒரு மடக்குதான் என் வீட்டம்மா குடுத்திருக்கா’

கையில் உள்ள தம்ளரைக் காண்பித்தார், பெரியவர். ஒரு நமட்டுச் சிரிப்புடனான சுயஎள்ளலிலேயே வாழ்கிறார் மனிதர் என்பதை அங்கிருந்த ஒவ்வொரு நொடியிலும் உணர முடிந்தது. ஏற்கனவே மரபின் மைந்தன், பெரியவரின் நகைச்சுவை உனர்வைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். கோவைக்கு ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கிறார், பெரியவர் வாலேஸ்வரன். மதியம் மோர்ச்சோறும், இரவுக்கு மிளகாய்ப்பொடி தடவிய இட்லியும் கையோடு கொண்டு வந்திருக்கிறார். இரவு உணவை தங்களுடன் சாப்பிட வற்புறுத்தியிருக்கிறார், மரபின் மைந்தன். உடனே ஃபோனில் மனையிடம் அனுமதி கேட்டாராம், பெரியவர்.

‘ஏட்டி. மத்தியானத்துக்கு நீ கட்டிக் குடுத்த மோர்ச்சோத்த சாப்பிட்டுட்டென், கேட்டியா! ஆனா ராத்திரிக்கு இவங்கல்லாம் அவங்க கூட வெளிய சாப்பிடச் சொல்லுதாங்க’

‘சாப்பிட வேண்டியதானெ? இதுல என்ட்ட கேக்க என்ன இருக்கு?’

‘இல்லட்டி. அவங்க கூட சாப்பிட்டுருதென். ஆனா நீ குடுத்த மொளகாப்பொடி இட்லிய என்ன செய்ய? திருப்பிக் கொண்டு வந்துரவா?’

ஊருக்குத் திரும்பிய பிறகு மரபின் மைந்தன் ஃபோன் பண்ணியிருக்கிறார். ஃபோனை வைக்கும் போது பெரியவரிடம் மரபின் மைந்தன் சொல்லியிருக்கிறார்.

‘அம்மாக்கிட்டெ நான் ரொம்ப விசாரிச்சதாச் சொல்லுங்க’.

‘இப்ப அவ தூங்கிக்கிட்டிருக்கா. இப்பவே எளுப்பி நீங்க விசாரிச்சதாச் சொல்லவா? இல்ல அவ எந்திரிச்சதுக்கப்புறம் சொல்லவா?’

இவையெல்லாம் நினைவுக்கு வர, பெரியவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் சிரித்தபடியே அமர்ந்திருந்தேன்.

‘ஒங்க அப்பாவும் இப்படித்தான் ஹாஸ்யமா பேசிக்கிட்டு இருப்பாங்களோ?’ இசைக்கவி கேட்டார். அதற்கு பெரியவர் வாலேஸ்வரன் சொன்ன பதில்.

‘அவாள் அப்படி இருந்திருக்க வாய்ப்பில்ல’. சற்றுநேர அமைதிக்குப் பிறகு சொன்னார். ‘கப்பல் ஓட்டுனதுல எங்க அப்பாக்கு நஷ்டம்தான். ஆனா சொத்துல்லாம் போனது, தொழிற்சங்கத்துலதான்’.

‘ஒங்க அப்பாவோட புஸ்தகத்தையெல்லாம் அரசுடைமை ஆக்குனாங்களே!’ மரபின் மைந்தன் கேட்டார்.

‘அத டிஸ்ஹானர் பண்ணி திருப்பி அனுப்பிட்டாங்கய்யா’ என்றார் பெரியவர்.

‘ஏன்?’ என்ற கேள்விக்கு சிரித்தபடியே, ‘வேற ஒன்ணுமில்ல. அந்த அதிகாரியப் பாத்து நான் சலாம் போடல. அவ்வளவுதான்’ என்றவர், ‘அப்ப மூவாயிர ரூவா பென்ஷன்ல குடும்பம் நடத்த வேண்டிய சூழல். அதான் அப்பிடியே விட்டுட்டென் இப்பம்னா கேஸு கீஸு போட்டிருப்பென். பிள்ளேள்லாம் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்கல்லா ’ என்றார். மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தோம். பெரியவர் தொழிலாளர் நலத்துறை அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றார், மரபின் மைந்தன்.

கிளம்பும் நேரம் வந்தது. எல்லோரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அந்த முதிய தம்பதியினரின் கால்களில் விழுந்து வணங்கினோம். ஆசீர்வாதம் வாங்க சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணிய இசைக்கவி கூடுதலாக ஒரு சில நொடிகள் கீழே கிடந்தார். ‘எளுப்பி விடணுமோ?’ என்றார் பெரியவர். வெடித்து சிரித்தபடி கிளம்பினோம்.

‘ஏட்டி. இவாளுக்கெல்லாம் மத்தியானம் சாப்பாட்ட போட்டு பயங்காட்ட வேண்டாமா? இப்பிடி தப்பிச்சு போக விடுதியெ!’ மனைவியைப் பார்த்துச் சிரித்தபடிக் கேட்டார்.

வாசல் வரைக்கும் வழியனுப்ப வந்தவர், இசைக்கவி ரமணன் அவர்களிடம், ‘எய்யா. அந்த எட்டயப்புரத்துச் சுப்பையான்னு படிச்சேளே, சுப்பையா மாமாவப் பத்தி! கண்ணீர் வந்துட்டு. . . . எங்க குடும்பமாது வறுமைல கஷ்டப்பட்டுச்சு. ஆனா சுப்பையா மாமா குடும்பம் பட்டினில சங்கடப்பட்டுது . இருக்கும் போது சோறு போடாம இப்ப பாரதி பாரதிங்கானுவொ, சவத்துப் பயவுள்ளய! ஆத்தரமா வருதுய்யா’என்றார், எண்பது வயதைக் கடந்த பெரியவர் வ.உ. சி. வாலேஸ்வரன்.

விருந்தோம்பல்


Courtesy: The Hindu

ஒங்களால எங்க வீட்ல நடக்கக் கூடாததல்லாம் நடந்துக்கிட்டிருக்குங்க’. பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் தொலைபேசியில் சொன்னார். ’ஐயையோ! என்ன ஸார் ஆச்சு?’ பதறினேன். ‘பின்னே? நீங்க எங்க வீட்டுக்கு சாப்பிட வாரிய. அதான் அதிசயமா எங்க வீட்ல சைவ சமையல் நடந்துக்கிட்டிருக்கு. நானே போயி காய்கறில்லாம் வாங்கிட்டு வந்தேன்’ என்றார். மிகச் சமீபத்துப் பழக்கம். ஆனால் பல வருடங்களாக நெருங்கிப் பழகியது போன்ற உணர்வு. கலப்படமில்லாத அன்பைப் பொழியும் பேராசிரியர் எனக்கு ஃபோன் பண்ணுகிறார் என்றால், அவர் காரில் வத்தலகுண்டு பட்டிமன்றத்துக்கோ, நாகர்கோயிலில் ஏதேனும் சொற்பொழிவுக்கோ, இல்லை ஏதேனும் திரைப்படப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காகவோ சென்று கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ஆங்காங்கே வண்டிகள் சர் சர்ரென்று செல்லும் சத்தம் கேட்கும். இடையில் யாராவது வந்து பேச்சு கொடுப்பார்கள்.

‘ஐயா, நீங்கதானெ ஜெயா டி.வில ஜோசியம் சொல்றது?’

இதற்கிடையில் என்னிடமும் பேசுவார்.

பேராசிரியரிடம் எனக்குப் பிடித்த பண்பே, அவரது சுயஎள்ளல்தான். தன்னுடைய தொழில்நுட்ப அறிவு குறித்து அவருக்கும், எனக்குமான சம்பாஷணை, எப்போதுமே வேடிக்கைதான். எப்போது குறுஞ்செய்தி அனுப்பினாலும், உடனே ஃபோன் பண்ணுவார். ஆனால் தனக்கு வந்த குறுஞ்செய்தியைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் வைத்து விடுவார். ’ஏன் ஸார் எஸ் எம் எஸ்ஸுக்குப் போயி இப்படி பதட்டமடைறீங்களே!’ என்று கேட்டால், இப்படி சொல்லுவார். ‘சுகா, என்னதான் இப்ப நகர வாழ்க்கைக்குள்ள வந்துட்டாலும், நான்லாம் இன்னும் மனதளவுல கிராமத்தான்தான். சிறு வயசுல நம்ம ஊர்கள்லல்லாம் தந்தி வந்துட்டாலெ, ஊரே கூடி அழுகிற கலாச்சாரத்துல வளந்தவன். சட்டுன்னு மாறிட முடியுங்களா? ஒருமுற நான் வீட்ல இல்லாதபோது எனக்கு தந்தி வந்திருக்கு. தந்திய வாங்கி வச்சுக்கிட்டு ஊரே என் வீட்டுவாசல்ல காத்து நிக்குது. தெருமுக்குல என் பைக் திரும்பவும், ‘கே’ன்னு ஒரே கதறல். ஒருத்தரு என் பைக்கை வாங்கி ஸ்டாண்ட் போடறார். இன்னொருத்தர், என் கையப் புடிச்சு என் வீட்டுக்கு எனக்கே வழிகாட்டிக் கூட்டிட்டுப் போறாரு. வேற ஒரு அம்மா, வீட்டுக்குள்ள போயி தண்ணி கொண்டு வந்து குடுத்து, ‘மொதல்ல கொஞ்சம் தன்ணி குடிச்சுக்கப்பா’ங்குது. என் வீட்டுக்கு வந்து போற சொந்தக்காரங்க யாராயிருக்கும்னு அவங்களே ஆளாளுக்கு கற்பன பண்ணிக்கிட்டு, ‘தைரியமா இரு’ன்னு கண்ணீரோட, என் தோளத் தட்டிக் குடுக்க்றாங்க. கடைசில தந்தியப் பிரிச்சுப் பாத்தா, ‘போடிநாயக்கனூர் ப்ரோக்ராம் போஸ்ட்போண்ட்’னு வந்திருந்தது. ஆக எங்களப் பொருத்தவரைக்கும் இந்த எஸ் எம் எஸ்ஸையெல்லாம் நாங்க அந்தக் காலத்துத் தந்தியாத்தான் பாவிப்போம்’.

குறுஞ்செய்திக்கே இப்படியென்றால், மின்னஞ்சலுக்கு அவர் அடைகிற பதற்றம், அவர் வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவர்களின் பதற்றத்தை விட அதிகம். ஒற்றை மின்னஞ்சல் மூலம், பேராசிரியரை எந்த ஊரிலிருந்தும் நேரிலேயே வரவழைத்து விடலாம். இத்தனைக்கும் ‘உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்’ என்கிற குறுஞ்செய்தி போதுமானது. மின்னஞ்சலைப் பார்த்திருக்கவே மாட்டார்.

‘அட! அத ஏன் கேக்குறீங்க சுகா! கமல் இப்படித்தான் அடிக்கடி, ‘பேராசிரியர் தொழில்நுட்ப அறிவை வளத்துக்குங்கம்பாரு. ஒருதடவ அந்த நம்பர எனக்கு எஸ் எம் எஸ் அனுப்புங்கன்னு சொல்லிட்டு ஃபோன வச்சுட்டாரு. அப்புறம் நான் தடவி தடவி, கமலத் தவிர மத்த எல்லாருக்கும் அவரு கேட்ட நம்பர அனுப்பி வச்சு . . . கடைசியா அவருக்கும் ஒரு ப்ளாங்க் எஸ் எம் எஸ் அனுப்பினேன்னா பாத்துக்குங்களேன். இதுக்கே சாயங்காலம் வரைக்கும் ஆயிப் போச்சுங்க’.

தொலைக்காட்சிகளில், இணையத்தில் கேட்டிருக்கிறேனென்றாலும் பேராசிரியரின் பேச்சை நான் முதலில் நேரில் கேட்டது, சென்னையில் அவர் ‘நெடுநல்வாடை’ பற்றிப் பேசும் போதுதான். வெறும் துணுக்குத் தோரணங்களாக பட்டி மன்றம் பேசுபவர்தானே என்று நினைப்பவர்களை வியக்க வைக்கும் பேச்சு, அது. பழந்தமிழில் பயிற்சி என்பதில் கூட ஆச்சரியமில்லை. நவீன இலக்கியத்திலும் அவருக்கிருக்கும் ஆர்வம் அளவிட முடியாதது. அநேகமாக நவீன இலக்கிய உலகில் எழுதிக் கொண்டிருக்கும் எல்லோருடைய படைப்பையும் தேடிப் பிடித்துப் படித்து விடுகிறார். ‘எப்படி ஸார் எல்லாத்தையும் படிச்சுடறீங்க?’ என்று கேட்டால், ‘முன்னாடில்லாம் பேசறதுக்காகப் படிச்சேன். இப்பல்லாம் படிக்கிறதுக்காகப் பேசறேன்’ என்பதுதான் அவருடைய பதிலாக இருக்கிறது. சமீபகாலமாக நான் படிக்காமல் விட்டுப் போன புத்தகங்களைப் பற்றி பேராசிரியரிடமே கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்.

நான் பேச ஆரம்பிச்ச புதுசுல எங்கப்பா முதல்நாளே கூப்பிட்டு, அது படிச்சியா, இது படிச்சியான்னு கேப்பாருங்க. படிக்கிற பழக்கம் அவர்கிட்டேருந்து வந்ததுதான். அவரு எறந்து, நான் கொள்ளி வைக்கும் போது, ஒரு நூலகத்துக்குக் கொள்ளி வைக்கிற உணர்வுதாங்க எனக்கிருந்தது.’

சிரிக்கச் சிரிக்கப் பேசுகிற பேராசிரியர், சாதாரணமாக இப்படிச் சொல்லி அழ வைப்பார். உடனே நம் மூடை மாற்றும் பேச்சு, அவருடையது. ‘நான் என்னவா வரக்கூடாதுன்னு அவர் நெனைச்சாரோ, அப்படித்தானே வந்தேன்! அதாங்க, தமிழாசிரியரா ஆயிட்டேன்ல! ஏன்னா எங்கப்பாவும் ஒரு தமிழாசிரியர்’.

மதுரையில் நான் தங்கியிருந்த விடுதியிலேதான் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பொதிகை டி.வி. புகழ் ‘இசைக்கவி’ ரமணன் அவர்களும் தங்கியிருந்தனர். மாலையில் விடுதிக்கு எதிரே இருக்கும் ராஜா முத்தையா மன்றத்தில் பேராசிரியரின் தலைமையில் ‘கண்ணதாசன் பாடல்கள்’ குறித்த பட்டி மன்றத்தில் பேச வந்திருந்தார்கள். ‘வேற ஹோட்டல்னா கூட நீங்க தப்பிச்சிரலாம். இப்ப தப்பிக்க வளியேயில்ல. எங்க பேச்ச கேட்டுத்தான் தீரணூம்’. மரபின் மைந்தன் மிரட்டினார். ‘ஸார் பாடுறதா சொன்னாங்களே! அவாள் பாடுறதும் பேச்சுலதான் வருமோ?’ என்று ‘இசைக்கவி’ ரமணனைக் காண்பித்துக் கேட்டேன். ‘சுகா, இது உங்க கையில்ல. காலு. தயவு செய்து முன்வரிசைல உக்காந்து சிரிச்சு கலாட்டா பண்ணிடாதீங்க, ப்ளீஸ்’ என்றார், இசைக்கவி. ‘அப்ப நீங்க நெஜம்மாவே நீங்க பாட ட்ரை பண்ணுவீங்களா?’ என்றேன். ’முத்தையா, கண்டிப்பா இந்த நிகழ்ச்சில நான் கலந்துக்கிடத்தான் வேணுமா?’ மரபின் மைந்தனிடம் கேட்டார், இசைக்கவி.

பேராசிரியர் காரை அனுப்பி வைத்து ஃபோனும் பண்ணினார். ‘சுகா, நீங்க வர்றது சந்தோஷம்னா, ஐயா வர்றது கௌரவம். அவர நல்லபடியா கூட்டிட்டு வாங்க’ என்றார். ‘ஐயா’ என்று பேராசிரியர் மரியாதையுடன் சொன்னது, வண்ணதாசன் அண்ணாச்சியை. அண்ணாச்சி அன்று காலை திருநெல்வேலியிலிருந்து கிளம்பி மதுரை வந்திருந்தார்கள்.

‘அமுதகம்’ என்று பெயரிட்ட பேராசிரியர் வீட்டு வாசலில் பேராசிரியரும், அவர் துணைவியாரும் நின்று எங்களை வரவேற்றனர். எங்களுடன் தஞ்சை செழியனும், அவர் நண்பரும் வந்திருந்தார்கள். முதலில் பேராசிரியர் தன் வீட்டு நூலகத்துக்கு அழைத்துச் சென்றார். கீழே ஒன்று, மாடியில் ஒன்று என இரண்டு நூலகங்கள். பழைய, புதிய புத்தகங்கள் ஒவ்வொன்றும், நம்பர் போட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்னாலுள்ளவையோ என சந்தேகிக்கும் வண்ணம், பார்க்கும் போதே தும்மலை வரவழைத்தன, சில அரதப்பழசான புத்தகங்கள். வண்ணதாசன் அண்ணாச்சி ஒரு பழைய புத்தகத்தை எடுத்து பூப்போலப் புரட்டினார். அடுத்தடுத்தப் பக்கங்களை அவர் புரட்டும் போது, எந்தப் பக்கத்திலிருந்தாவது ஏதேனும் பூதம் குதித்து, எங்களைச் சுற்றி வந்து காலைக் கடித்துவிடுமோ என்று கலக்கமாக இருந்தது. நல்லவேளையாக அதற்குள் சாப்பிட அழைத்தார்கள்.

டைனிங் டேபிளில் இலை போட்டு, அநேகமாக இதுநாள் வரை நான் கேள்விப்பட்ட அத்தனை காய்கறிகளும் வரிசையாக அணிவகுத்தன. அவைபோக நவதானியங்கள், சாம்பார், ரசம், திருநவேலி வத்தக்குழம்பு, நாகர்கோயில்காரர்களுக்குப் போட்டியாக ஒன்றுக்கு இரண்டு பாயாசம், அப்பளம் என விருந்து அமர்க்களப்பட்டது. இரண்டாவது பாயசமான இளநீர்ப் பாயாசத்தை விருந்துக்குப் பின் அருந்துவதாக ஏற்பாடு. எங்கே பேராசிரியரும், அவர் துணைவியாரும் அதைக் கொடுக்க மறந்துவிடுவார்களோ என்கிற பதற்றத்தில் அவசரவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், ‘இசைக்கவி’. ‘ஸார்! சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம் இளநீர்ப் பாயாசம் தர்றதா சொன்னீங்க. மறந்துராதீங்க’. நொடிக்கொருதரம் நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தார். ‘இளநீ . . . .ர்ப் . . . பாயாசமே . . . . உனை அருந்தினால் . . . பறக்கும் என் ஆயாச . . . மே’ என்று அவர் பாடத்தான் இல்லை. முழு விருந்தையும் பேராசிரியரும், அவர் துணைவியாரும் நின்று பரிமாறினார்கள். எனக்கு என் பெற்றோரின் விருந்தோம்பல் நினைவுக்கு வந்து கண்ணீர் துளிர்த்தது.

விருந்து முடிந்து, இளநீர்ப் பாயாசம் வந்து இசைக்கவியை ஆசுவாசப்படுத்தியது. ‘பாயாசம், ஆயாசம்’ பாட்டு பிறக்கும் முன்னே மரித்து, எங்களை ஆசுவாசப்படுத்தியது. பேராசிரியர் சாப்பிட்டு விட்டு வந்து, தாம்பூலம் தரிக்க ஏற்பாடு செய்தார். தான் எழுதிய புத்தகங்களை எடுத்து வந்து கையெழுத்திட்டு எங்களுக்குக் கொடுத்தார். எனக்குக் கொடுக்கும் போது மட்டும், அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. காரணம், ஏற்கனவே எனது ’தாயார் சன்னதி’ புத்தகத்தை அவருக்கு நான் கொடுத்திருந்தேன். பழிக்குப் பழி வாங்கிவிட்ட திருப்தி, பேராசிரியரின் முகத்தில் தெரிந்தது. ‘இனி நீங்க தப்பிக்க முடியாது’ என்றார். ‘ஏன்? அதான் குடுத்துட்டீங்களே! எப்படியும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிருவேன். நம்புங்க’ என்றேன். ‘அதெல்லாம் அவ்வளவு லேசுல தட்டிக்களிச்சுர முடியாது. ரெண்டு நாளைக்கு ஒருக்க ஃபோன் பண்ணி அந்தந்த புஸ்தகத்துல இருந்து கேள்வி கேப்பேன்’ என்றார், பேராசிரியர். நாக்கில் மிச்சமிருந்த இளநீர்ப் பாயாசத்தின் சுவை மனதுக்குள் பரவுவதற்கு முன்பே தடுத்தார்.

மாலையில் ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த ‘கண்ணதாசன் சிறந்து விளங்கியது அவரது தனிப்பாடலிலா, திரைப்பாடலிலா’ என்கிற பட்டிமன்றத்துக்குச் சென்றோம். அரங்கம் நிரம்பி வழிந்தது. கவிஞர் சக்தி ஜோதி வந்திருந்தார். வணக்கம் சொன்னார். அவரை அதற்கு முன்பு நாற்பத்திரண்டு புகைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். முன்வரிசையில் வண்ணதாசன் அண்ணாச்சியும், நானும் சென்று அமர்ந்தோம். மேடையில் பட்டிமன்றத்து நடுவராக வீற்றிருந்த பேராசிரியர், வண்ணதாசன் அண்ணாச்சியையும், என்னையும் வரவேற்று எங்களைப் பற்றி ஒருசில வார்த்தைகள் பேசினார். முதலில் வண்ணதாசன் அண்ணாச்சி எழுந்து நின்று கைத்தட்டல்களுக்கிடையே அரங்கில் அமர்ந்திருந்தவர்களை வணங்கினார். அடுத்து நான். ‘மூங்கில் மூச்சு, தாயார் சன்னதியோடு என் தகப்பனாரின் பெயரையும் சேர்த்து பேராசிரியர் சொல்ல, அரங்கமே அதிர, நடுங்கும் கால்களுடன் எழுந்து நின்று அனைவரையும் வணங்கி, இருக்கையில் ’சொத்’தென்று சரிந்தேன்.

கண்ணதாசனின் தனிப்பாடல்கள் பற்றிப் பேசிய சகோதரர் ‘மரபின் மைந்தன்’ முத்தையா எந்தவிதக் குறிப்புமில்லாமல் அருமையாகப் பேசினார். கவிஞர் வைரமுத்து சொன்னாராம். ‘என்னிடம் இருக்கும் அத்தனை புத்தகங்களும் அழிந்து போனாலும் எனக்குக் கவலையில்லை. என்னுடன் முத்தையா இருக்கிறார்’ என்று. பொதுவாக வைரமுத்து அவர்களின் புகழ்ச்சியில் அதீதம் இருக்கும் என்பது எல்லோருக்கும் (அவருக்குமே) தெரிந்த ஒன்று. ஆனால் ‘மரபின் மைந்தன்’ விஷயத்தில் அது முற்றிலும் உண்மை. நண்பர் ஜெயமோகனின் ‘கொற்றவை’ வெளிவந்த வெகுசில நாட்களிலேயே அதைப் படித்து, ஜெயமோகனிடமே அதைப் பற்றி விவாதித்து அதிர்ச்சிக்குள்ளாக்கினவர், அவர். ஆக, கொற்றவை வாசகர் ஒருவரை எனக்குத் தெரியும். (நான் இப்படியெல்லாம் பேசுவதாலேயே கொற்றவை புத்தகத்தை ‘நண்பன்’(?) என்று எழுதி, எனக்குப் பரிசளித்தார், நண்பர் ஜெயமோகன்). அடுத்து ‘இசைக்கவி’ பேச வந்து, பாடினார். மைக் முன் வரும்போதே, முன்வரிசையில் இருந்த என்னைப் பார்த்து, ‘அமைதியா உக்காந்திரு. கொன்னிடுவேன்’ என்பது போல சைகை காட்டி, மிரட்டினார். அவரது மிரட்டல் அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்தது. ஆனால் அவரது பாட்டு சிரிப்பை விரட்டியது. மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொண்டார், ‘இசைக்கவி’. அடுத்தடுத்து இரண்டு பெண்கள். அவர்கள் பங்குக்கு ஒருவர் பாட, மற்றொருவர் முயன்றார். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு சீட்டு வந்தது. ‘இசைக்கவி’ மேலும் பாட வேண்டும் என்று அதில் எழுதியிருந்ததாக பேராசிரியர் அறிவித்தார். ‘இசைக்கவி’ வந்து பாடினார். இந்த முறையும் என்னை எச்சரிக்க அவர் தவறவில்லை. ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்கிற பாடலை தன் குரலில் அழகாகப் பாடினார். நிகழ்ச்சி முடியும் வரைக்கும் தேடினேன். சீட்டு எழுதிக் கொடுத்தவர் கடைசி வரைக்கும் கண்ணில் தட்டுப் படவேயில்லை.

முடிவுரையில் வழக்கம் போல பேராசிரியரின் பேச்சில் சுவைக்குக் குறைவில்லை. நிகழ்ச்சி முடிந்து, இரவு உணவுக்குப் பின்னர் எங்கள் அறைக்கு வந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பேராசிரியர் கிளம்பிச் சென்றார். பிறகு பதினோரு மணிக்கு மேல் அதிகாலை நான்கு மணிவரைக்கும் வண்ணதாசன் அண்ணாச்சியும், நானும் பேசிக் கொண்டிருந்தோம். திருநவேலி பற்றிய எங்கள் இருவருக்குமான பார்வைகள், ஆசைகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், சந்தோஷங்கள் என நீண்டது, எங்கள் பேச்சு. அண்ணாச்சியின் ஒவ்வொரு கதையாக நினைவுபடுத்திச் சொல்லிக் கொண்டேயிருந்தேன். அவரது ‘போய்க் கொண்டிருப்பவள்’ கதையைப் பற்றிப் பேசியபோது, ‘நடுராத்திரி ரெண்டு மணிக்கு ‘போய்க்கொண்டிருப்பவள்’ பத்தி ஒரு மனுஷன் பேசறதக் கேக்கும் போது இந்தாக்ல செத்துப் போயிரலாம் போல இருக்கெய்யா’ என்றார். மறக்க முடியாத அந்த இரவில், அந்த மதுரை விடுதியறையில் எங்களுக்காக அன்று இரவு முழுவதும் தாமிரவரணி ஓடிக் கொண்டேயிருந்தது.

சென்னைக்கு நான் வந்த பிறகு பேராசிரியர் பேசும் போது இதைச் சொன்னேன். ‘நல்ல வேள சுகா. நான்லாம் கெளம்பிப் போனேன்! நானும் எடஞ்சலுக்கு உக்காந்தேயிருந்தேன்னு வைங்க. அவுகளும், நீங்களும் இப்பிடில்லாம் பேசிக்கிட்டிருந்திருப்பீங்களா!’ என்றார். பேராசிரியரின் உயர்ந்த குணங்களில் ஒன்று இது. மதுரை நிகழ்ச்சிக்குப் பிறகு பேராசிரியரை இன்னும் நேரில் சந்திக்கவில்லை. ஆனால் அவ்வப்போது ஃபோனில் பேசுவோம்.

‘என்ன சுகா! எங்கெ இருக்கிய?’

‘நான் இருக்கிறது இருக்கட்டும். நீங்க மதுரல இல்லியே?’

‘அதெப்படி? மதுரைல இருந்து ஃபோன் பண்ணினாத்தான் நீங்க எடுக்க மாட்டியளே! இப்ப கோவைல இருக்கென். விஜயா பதிப்பகத்துல நெறய புஸ்தகங்க வாங்கிட்டு வந்தேன். ராத்திரிக்கு ஆச்சு.’

பேராசிரியரின் பிசியான சுற்றுப்பயணங்களில் அவ்வப்போது மதுரையும் எட்டிப் பார்க்கும். போனால் போகிறதென்று அவர் பணிபுரியும் தியாகராஜர் கல்லூரிக்கும் அவ்வப்போது சென்று வருகிறார். மூன்று நாட்கள் அவர் தொடர்ச்சியாக கல்லூரிக்குச் சென்றால் கல்லூரி நிர்வாகமே அவரை ஏதாவது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வெளியூருக்கு அனுப்பி விடுகிறது. மாணவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதை பேராசிரியரிடமே பலமுறை சொல்லியிருக்கிறேன். அடக்க முடியாமல் சிரித்து விழுந்திருக்கிறார். அவரது நண்பர்கள், செல்லுகின்ற இடத்தில் அவர் சந்திக்கும் பெரிய மனிதர்கள் அனைவரிடமும் என்னைப் பேசச் செய்வார். அப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்கிற அவசியமே அவருக்கில்லை. ஆனாலும் அவரது பரந்த மனமானது, தனக்குத் தெரிந்த எல்லா மனிதர்களும், தன் நண்பர்களுக்கும், தனக்குப் பிரியமானவர்களுக்கும் தெரிய வேண்டும் என்று நினைக்கிறது.

சென்ற மாதத்தில் ஒருநாள் ஃபோன் பண்ணினார். வழக்கம் போல நான் ஃபோனை எடுத்த எடுப்பிலேயே, ‘ஸார், நீங்க மதுரைல இல்லியே? ஆமான்னீங்கன்னா ஃபோனை வச்சிருவென்’ என்றேன். ‘இல்ல சுகா. சென்னைக்கு வந்திருக்கென். கொஞ்சம் இருங்க. உங்கக்கிட்டெ ஒருத்தர் பேசணுங்கறாரு’.

‘வணக்கம். எப்பிடி இருக்கீங்க. நான் கமலஹாசன் பேசறேன்’ என்றது எதிர்முனைக்குரல்.

திருநவேலியும், திருநெல்வேலியும் . . .

கி.ரா. பாட்டையாவின் ‘கதவு’ சிறுகதையை குறும்படமாக யாரோ எடுத்திருக்கிறார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் எடுத்திருப்பது, பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியின் விஷுவல் கம்யூனிக்கேஷன் மாணவர்கள் என்னும் தகவலை எனக்குச் சொன்னவர், கவிஞர் க்ருஷி. அதுவும் ‘கதவு’ குறும்படத்தின் திரையிடலுக்காக நான் திருநவேலிக்கு வர வேண்டும் என்றார். ‘குறும்படம் எடுத்த இயக்குனர், நீங்க கண்டிப்பா வரணும்னு பிரியப்படுதாரு. வாரேளா?’ என்று க்ருஷி ஸார்வாள் கேட்டபோது, உடனே வருகிறேன் என்று சொல்ல முடியவில்லை. சென்னையில் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருக்கும் வேலைகளுக்கிடையே திருநவேலிக்குப் போய்வர, மனம் விரும்பினாலும் சூழல் ஒத்துழைக்கவில்லை. ‘யோசிச்சு சொல்லுங்க. ஆனா பாஸிட்டிவா சொல்லுங்க’ என்றார் ஸார்வாள். அடுத்தடுத்து இரண்டு, மூன்று அழைப்புகள், குறுஞ்செய்திகள். கிடப்பது கிடக்கட்டும், திருநவேலிக்குச் சென்று வரும் வாய்ப்பைத் தவற விட வேண்டாம் என்று கிளம்பிவிட்டேன்.

சென்னைக்கு வந்துவிட்ட இருபது ஆண்டுகளில் எப்போது திருநவேலிக்குக் கிளம்பினாலும், பயணத்துக்கு முந்தைய நாளிலிருந்தே திருநவேலி கண்ணுக்குப் புலப்படத் துவங்கி விடும். எக்மோருக்குள் நுழையும் போது, நெல்லை எக்ஸ்பிரஸ்ஸோ, கன்னியாகுமரியோ, அனந்தபுரியோ கண்ணில் பட்டால் பாதி திருநவேலியைப் பார்த்த மாதிரிதான். ஏறி இடம் பார்த்து, கால்களுக்கடியில் பெட்டியைத் தள்ளி விட்டு, எதிரெதிர் மனிதர்களின் முகம் பார்த்து, லேசாகச் சிரித்து வண்டி கிளம்பும் போது,

‘வே மாப்ளே! ஒமக்கு அப்பர்ல சீட்டு. தவளும் கிருஷ்ணர் மாதிரி தவள்ந்து போரும்’.

‘எல, கணேசன்ட்ட இட்லி பொட்டணத்த எங்கெ வச்சான்னு கேளு. இந்தப் பைல புளியோதரல்லா இருக்கு. சவம் ராத்திரி பூரா எதுக்களிச்சுக்கிட்டேல்லா கெடக்கும்!’

‘ஏளா, மண்ணெண்ணெய ஒளிச்சு வையி. ட்டி.ட்டி.ஆர் வாராரு’.

தாம்பரம் தாண்டுவதற்குள் ‘திருநவேலி பாஷை’ பேசும் மனிதர்கள், திருநவேலியை ரயிலுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள்.

முன்பெல்லாம் தெரிந்த ‘திருநவேலி முகங்கள்’ ஒன்றிரண்டாவது கண்ணுக்குத் தென்படும். இப்போது சமீபகாலமாக அப்படி நடப்பதில்லை. அடுத்தடுத்த தலைமுறையினரின் முகங்கள் நான் அறியாத காரணமா, இல்லை எனக்குத் தெரிந்த, ஆனால் நான் பழகியேயிராத முந்தைய பழைய மனிதர்கள் இப்போதெல்லாம் பயணம் செய்வதில்லையா, அறியேன். திருநவேலி ரயில்வே ஸ்டேஷனில் போய் இறங்கியபோது, ரயிலுக்குள் இருந்த திருநவேலியைப் பார்க்க முடியவில்லை. வேறு ஏதோ ஓர் ஊரில் போய் இறங்கிய உணர்வுதான் ஏற்பட்டது. அதனாலேயே, திருநவேலிக்குச் செல்வதாக இருந்தால் யாருக்குச் சொல்கிறேனோ, இல்லையோ! மீனாட்சிக்குச் சொல்ல மறப்பதில்லை. நான் அறிந்த திருநவேலிக்காரர்களில் இன்னும் பழைய திருநவேலியை விடாமல் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களில் மீனாட்சிசுந்தரமும் ஒருவன். தாமிரவரணிக் குளியல், நெல்லையப்பர் கோயில் தரிசனம், இருட்டுக்கடை அல்வா, துணி எடுத்துத் தைத்த டெரிக்காட்டன் சட்டை, பேண்ட், கூடுமானவரை வேட்டி சட்டை(கோ-ஆப்டெக்ஸ்). தோற்றத்திலும் அவனை ஒத்திருக்கும் 30 கிலோமீட்டரை எப்போதுமே தாண்டாத டி.வி.எஸ் 50, வாரத்துக்கு இருமுறை சவரத்தை சந்திக்கும் இளநரை முகம் என மீனாட்சி எழுபது, எண்பதுகளின் திருநவேலிச் சித்திரத்தைக் கண்முன் நடமாட விடுபவன்.

‘எல! சாய்ங்காலம் ஜானகிராம் ஹோட்டல்ல ஒரு நிகள்ச்சி. நாலரைக்குல்லாம் வந்திரு.’

‘எலக்கியமா, சித்தப்பா?’

‘ம்ம்ம். கிட்டத்தட்ட அப்படித்தான். ஏன் கேக்கெ?’

‘சரி. அப்ப ராத்திரி சாப்பாட்ட சோலிய முடிச்சிருவாங்க. வீட்ல சொல்லிட்டு வந்திருதென்’.

‘கதவு’ குறும்படத் திரையிடலுக்கான அழைப்பிதழில் ‘கரிசல்’ எழுத்தாளர்கள் அனைவரின் பெயர்களும் இருந்தன. அநேகமாக அனைவரும் வந்திருந்தனர். வண்ணதாசன் அண்ணாச்சி, நீண்ட நாட்களாக நான் சந்திக்க விரும்பிய தமிழ்ச்செல்வன் அண்ணாச்சி, கவிஞர் தேவதச்சன், எழுத்தாளர்கள் உதயசங்கர், சோ.தர்மன், தாங்க முடியா கொடுங்கவிதை ஒன்றை படித்த நிரந்தர முகபாவனையுடனான பண்பாட்டு ஆய்வாளர் ஐயா தொ.பரமசிவன், பிரியத்துக்குரிய தோழர் நாறும்பூநாதன் என ஒரே எழுத்தாளர் கூட்டம். தோழர் நாறும்பூநாதன் என்னருகில் அமர்ந்து மெதுவான குரலில், வழக்கமாக அவர் சொல்லும் செய்தியைச் சொன்னார். ‘இன்னிக்கு பாத்து எனக்கு வேற ஒரு நிகள்ச்சி இருக்கு, பாத்துக்கிடுங்க. நான் போயிட்டு ராத்திரி எப்படியாது வந்திருதென்’.

(தோழர் நாறும்பூநாதனுடன்)

குறும்படத்தைத் துவக்கும் முன், என்னை அறிமுக உரை நிகழ்த்தச் சொன்னார்கள். ‘மூத்த படைப்பாளி கி.ரா பாட்டையாவின் சிறுகதை ஒன்றை குறும்படமாக எடுத்திருப்பதற்காக இந்த குறும்படத்தின் தயாரிப்பாளரை முதலில் பாராட்டுகிறேன்’ என்று துவங்கி ‘ஒரு படைப்பாளியை அவர் வாழும் காலத்திலேயே கௌரவிப்பது முக்கியமானது. உயிரோடு இருக்கும் போது மதிக்காம, செத்துப் போன சுப்பையாவுக்கு சிலை வைத்து நாம கும்பிடறத இனிமேலாவது செய்ய வேண்டாம்’ என்றேன். சுப்பிரமணிய பாரதிதான் சுப்பையா என்பது திருநவேலிக்காரர்களுக்குத் தெரிந்திருந்தது. குறும்படம் துவங்கியது. மிகச் சில குறைகளுடன், கூடுமானவரை சரியான முறையில், மூலக்கதையைச் சிதைக்காமல் எடுக்கப்பட்டிருந்தது. கரிசல் கிராமத்து சிறுவர், சிறுமிகளின் தேர்வு அசலாக இருந்தது. இன்றைய தலைமுறையினருக்கு கொஞ்சமும் பரிச்சயமில்லாத , புரிந்து கொள்ள இயலாத விஷயங்களை ‘கதவு’ குறும்படம் காண்பித்தாலும், கதையின் அடிப்படையான விஷயமாக ‘குழந்தைமை’யே என் கண்ணுக்குத் தெரிந்தது. தங்கள் குழந்தைமையை, விளையாட்டை, தட்டிப் பறிக்கப்பட்ட விளையாட்டின் உரிமையை, இழந்து தவிக்கும் குழந்தைகளின் கதையே ‘கதவு’. அவர்களின் வறுமையையும் தாண்டி இந்தக் கவலையே அவர்களின் கண்களின் நிறைந்து நிற்கிறது. அதை முடிந்த அளவில் சரியாகவே சொல்ல முயன்றிருந்தார் ‘கதவு’ குறும்படத்தின் இயக்குனர் மரிய தங்கராஜ். குறும்படத்தின் இறுதியில் தன்னுடைய நேர்காணலில் கி.ரா பாட்டையாவும் இதையே சொன்னது நிறைவாக இருந்தது.

படம் முடியும் நேரத்தில் மின்னலென அரங்கத்துக்குள் நுழைந்தார் ஒரு மனிதர். கையில் ஒரு ஊன்றுகோலும் , தலையில் ‘பித்துக்குளி’ முருகதாசின் காவித்துணியும், நெற்றியில், தமிழ் சினிமாவில் வில்லனை அழிக்கப் புறப்படும் நாயகனின் நெற்றியில் காதலியோ, ஆசைநாயகியோ, அன்னையோ, சித்தியோ, பெரியம்மையோ இடும் நீண்ட குங்குமத் தீற்றலுமாக வந்த அந்த மனிதர், படம் முடிந்ததும் சட்டென்று மைக்கைப் பிடுங்கினார். பிடுங்கிய வேகத்தில் ‘அரட்டை அரங்கம்’ விசுவின் குரலில் ‘கண் . . . . .ணா’ என்று அலறலுடம் மிமிக்ரி பண்ண ஆரம்பித்து விட்டார். அரங்கத்திலிருந்த இலக்கியவாதிகள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, யாரோ ஒருவர் மட்டும் மட்டும் பின்னால் இருந்து கைதட்டினார். திரும்பிப் பார்த்தேன். நான் சந்தேகப்பட்ட மாதிரியே என்னுடன் வந்த மீனாட்சிதான் அது. என்னைப் பார்த்ததும் தட்டிக் கொண்டிருந்த கைகளை மடக்கிக் கொண்டான். அழையா விருந்தாளியாக வந்து இம்சித்த ‘மிமிக்ரி’காரரிடமிருந்து மைக்கைப் பறிப்பது, ஒரு பின்நவீனத்துவ சிறுகதையைப் படிப்பதை விட சிரமமாக இருந்தது. அதற்குள் அவர் ‘கும்கி’ விக்ரம் பிரபுவின் குரலுக்கு முயன்று கொண்டிருந்தார். வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ‘மிமிக்ரி’ மாமா, ‘வாகை’ சந்திரசேகரின் குரலில் கூடியிருந்த இலக்கியவாதிகள் அனைவரையும் ஆங்கிலத்தில் சபித்தபடி அரங்கை விட்டு வெளியேறினார். கவிஞர் க்ருஷி அதையும் ஆமோதிக்கும் பாவனையில் அமர்ந்திருந்தார்.

அண்ணாச்சிகள் வண்ணதாசன், தமிழ்ச்செல்வன், தேவதச்சன் போன்றோர் இளம் இயக்குனர் மரிய தங்கராஜை வெகுவாக ஊக்குவித்தனர். தமிழ்ச்செல்வன் அண்ணாச்சி, தோழர் உதயசங்கர் உட்பட கரிசல் எழுத்தாளர்கள் அனைவரும் கி.ரா பாட்டையாவை ‘நைனா’ என்று உரிமையுடன் விளித்தது, இயல்பாக இருந்தது. வண்ணதாசன் அண்ணாச்சி கி.ராவைப் பற்றிப் பேசும் போது சொன்னார். ‘சுகாவுக்கு பாட்டையா. கோவில்பட்டிக்காரங்களுக்கு ’நைனா’. எனக்கு ‘மாமா’.

’கூகை’ எழுதிய சோ.தர்மன் அண்ணாச்சி, நரைத்த நீண்ட மீசை துடிக்க, தன்னுடைய இயல்பான மொழியில் ‘கதவு’ குறும்படத்தைப் பாராட்டிப் பேசினார்.

‘சோத்துச் சட்டியா படத்துல என்ன காட்டியிருந்திய ? எவர்சில்வரா? எனக்கு சரியா தெரியல. அதான் கேட்டென். . . . .எவர்சில்வர்தானா? வாய்ப்பே இல்ல. . . . ஐம்பதுகள்ல ஏது எவர்சில்வர்? ஈயம்தான்’.

‘அப்புறம் சோத்துப் பருக்கைய காமிச்சிருந்தீங்களோ? எனக்கு தெரியல. அதான் கேட்டென். . . . . சோத்துப் பருக்கையேதானா? அதெப்படி சோறு இருக்கும்? அப்பல்லாம் சோறே அபூர்வம். கம்மங்கஞ்சிய காமிச்சிருக்கணும்’.

‘அப்புறம் நாய் வந்து குடிச்சுட்டு போயிட்டுன்னு அந்த புள்ள சொல்லுது. அதெப்படி சொல்லுவாங்க, கரிசல் மண்ணுல? நாய் வாய் வச்சிட்டுன்னுதான் சொல்லணும்’.

’மத்தபடி நல்லா எடுத்திருக்கீங்க. வாழ்த்துகள்’.

மறுநாள் மாலை சென்னைக்குத் திரும்ப ரயில். காலையில் மீனாட்சியுடன் தி.க.சி தாத்தாவைப் பார்க்கக் கிளம்பினேன். அம்மன் சன்னதி, கீழரதவீதி, தெற்குரதவீதி, மேல ரதவீதி எல்லாமே மாறியிருந்தது.

‘தெரிஞ்ச மனுசங்களத்தான் காணோம். கட்டிடங்களுமால மாறும்?’ மீனாட்சியிடம் கேட்டேன்.

’இதுக்கே இப்பிடி சொல்லுதேளே! இன்னும் நீங்க வடக்கு ரதவீதிய பாக்கலேல்லா? வாங்க’.

கூட்டிக் கொண்டு போய் ராயல் டாக்கீஸ் முன்பு கொண்டு போய் நிறுத்தினான். அங்கு பிரமாண்டமாய் ‘போத்தீஸ்’ கட்டிடம் எழும்பி நின்று கொண்டிருந்தது. ‘ராயல் டாக்கீஸ்’ இடிக்கப்பட்டதும், அங்கு ‘போத்தீஸ்’ வந்து விட்டதும் நான் ஏற்கனவே அறிந்ததுதான். இருந்தாலும், அன்றைக்கு அந்தச் சூழலில் ஏனோ துக்கம் தொண்டையை அடைத்தது.

‘எல, பொதுமக்கள் நீங்க எல்லாரும் தெரண்டு போய் நின்னு, ராயல் டாக்கீஸ இடிக்க விடாம தடுத்திருக்கலாம்லா?’

சுத்த கோட்டிக்காரத்தனம்தானென்றாலும் மீனாட்சியிடம் இப்படி கேட்கத் தோன்றியது.

நான் வருவதை ஏற்கனவே அறிந்திருந்த தி.க.சி தாத்தா தன் வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்றார்.

‘வாங்கய்யா பேரப்பிள்ள. நேத்து ‘கதவு’ குறும்பட நிகழ்ச்சில நீங்க பேசுனது, இன்னிக்கு ஃபோட்டோவோட தினமணில வந்திருக்கே! நல்லா பேசியிருக்கேரு!’

காரை பெயர்ந்த சுவரின் பின்னணியில் தி.க.சி தாத்தாவுக்கு அருகில் உள்ள படியில் மீனாட்சி உட்கார்ந்து கொண்டான். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதையே கவனித்துக் கொண்டிருந்தேன். மனம் எங்கெங்கோ அலைந்தது. இரண்டு வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த வர்கள் இருவரும் அந்த சமயத்தில் , அவர்களின் அந்நியோன்யத்தில் எனக்கு ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்களாகத் தெரிந்தார்கள்.

’கதவு’ குறும்பட நிகழ்ச்சி ஒன்றைத் தவிர, இந்த முறை திருநவேலி பயணம் அவ்வளவாக ருசிக்கவில்லை. குஞ்சு ஊரில் இருந்திருந்தானென்றால் ஒருவேளை நன்றாக இருந்திருக்கலாம். அவனும் திருவனந்தபுரம் சென்று விட்டான். அந்த வெறுமையும் ஒரு காரணம். ‘பாக்கேன்’ என்பதை ‘பாக்கிறேன்’ என்றும், ‘சொல்லுதென்’ என்பதை ‘சொல்றேன்’ என்றும் திருநவேலியை, திருநெல்வேலியாக்கும் இளைஞர்களின் நாகரிகப் பேச்சு ஒருபுறம். தோற்றத்திலேயே மாறத் துவங்கியிருக்கும் திருநவேலி நகரம் மறுபுறம். ‘அதெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது. சரி சரி. கடமயச் செய்யாம போயிராதிய. அம்மையப்பனப் பாத்துட்டு வந்திருவோம், வாங்க’. நெல்லையப்பர் கோயிலுக்கு அழைத்துச் சென்றான், மீனாட்சி. உள்ளே நுழையும் போதே அவன் சட்டை கிழன்று, கைகளில் மடிந்தது. கோயிலுக்குள்ளே மழைநீர் தேங்காமல் வடியும் விதமாக, நடுவில் குழி தோண்டிப் போட்டிருந்தார்கள். காந்திமதியம்மையை வணங்கிவிட்டு, சுவாமி சன்னிதிக்குச் செல்லும் வழியில் , முகப்பில் மாக்காளையைப் பார்க்கும் போதே, மனதுக்குள் இனம் புரியாத பரவசம். உள்ளே நெல்லையப்பர், ராமக்கோனின் கோடரியால் வெட்டப்பட்ட நெற்றியுடன், சின்னப் பிள்ளையாக இருக்கும் போது நான் பார்த்த அதே நெல்லையப்பராக இருந்தார்.

பாட்டையா பார்த்த மனிதர்கள்

கதையல்லாத Non fiction ஐட்டங்களின் மேல் சிறுவயது முதலே எனக்கோர் ஈர்ப்புண்டு. ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாரின் கடிதங்கள் தொடங்கி ஜெயகாந்தனின் ‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’ மற்றும் ‘அவர்கள் வெளியே இருக்கிறார்கள்’, சுஜாதாவின் ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள், கற்றதும் பெற்றதும்’, வண்ணதாசன் அண்ணாச்சியின் ‘என்றென்றும் அன்புடன்’, நாஞ்சில் சித்தப்பாவின் ’தீதும், நன்றும்’, பெரியவர் அ.முத்துலிங்கத்தின் கதையும், கட்டுரையுமல்லாத நடைச்சித்திரங்கள் வரை மனதைக் கவர்ந்தவை, கவர்பவை அவைதாம். (இந்தப் பட்டியலில் இன்னும் இரண்டு புத்தகங்களைச் சொல்லலாம் என்று பார்த்தால் பாழாய்ப் போன தன்னடக்கம் தடுத்துத் தொலைகிறது, சனியன்.) மேற்சொன்னவை யாவுமே புத்தகவடிவில் என்னிடத்தில் உள்ளன. ஆனால் இவற்றுள் மீண்டும், மீண்டும் எடுத்துப் படிக்கும் புத்தகமாக ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், அது பாரதி மணி அவர்களின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தைத்தான். ஊருக்கெல்லாம் அவர் (பாரதி படத்துக்குப் பிறகு) பாரதி மணி. எனக்கு அவர் ‘பாட்டையா’. இப்போது பலரும் அவரை ‘பாட்டையா’ என்றழைப்பதைப் பார்க்கும் போது, அவரை அப்படி விளித்த முதல் ஆள் நான் என்பதில் மகிழ்கிறேன்.

‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தின் கட்டுரைகள் அனைத்தையும் ‘உயிர்மை’யில் வெளிவந்த போதே படித்திருக்கிறேன். சிலவற்றை அதற்கு முன்பே. முதல் கட்டுரைக்கே ஜெயமோகன் என்னும் வாசகர் பாட்டையாவுக்குக் கிடைத்தார் என்றால் அதற்கு மேல் அவரது எழுத்தைப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்லை. அப்படியென்றால் இந்தக் கட்டுரையை இப்படியே முடித்து விடலாமா? அதுவும் முடியாது. நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது.

மொத்தம் பதினெட்டு கட்டுரைகள். அவற்றில் மூன்று ‘அமுதசுரபி’யிலும், ஒன்று ‘உயிர் எழுத்து’ இதழிலும், மற்றொன்று ‘தீராநதி’யிலும், பிற அனைத்தும் ‘உயிர்மை’யிலும் வெளியானவை. ‘பாட்டையா’வைப் போல நானும் ஒரு சங்கீதக் கோட்டி என்பதால், இந்தப் புத்தகத்தின் என்னுடைய Most favourite ’நாதஸ்வரம் – என்னை மயக்கும் மகுடி’ என்னும் கட்டுரைதான். சின்னஞ்சிறுவனாக தன் தகப்பனாருடன் கன்னியாகுமரி ஜில்லாவின் சுசீந்திரம், மஹாதானபுரம், ஆராம்புளி(ஆரல்வாய்மொழி), தேரூர், பத்மநாபபுரம், பூதப்பாண்டி, மண்டைக்காடு, ராஜாக்கமங்கலம் போன்ற ஊர்த் திருவிழாக்களுக்குச் சென்று தான் கேட்டு ருசித்த நாதஸ்வரக் கச்சேரிகளை நினைவுகூரும் அசத்தலான கட்டுரை இது. நாதஸ்வரத்தை நாகஸ்வரம் என்றுதான் அழைக்க வேண்டும் என்பது தெரிந்தாலும், அது இன்றைக்கும் பெரும்பாலோனாரால் நாதஸ்வரம் என்றே அழைக்கப்படுகிறது. அதையும் இந்தக் கட்டுரையில், எனக்கு நாதஸ்வரம்தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறார். நாதஸ்வரத்தின் போனஜென்மத்துப் பெயர் ‘திமிரிநாயனம்’ என்பதையும், அது ‘பாரிநாயனம்’ ஆக மாறியதையும் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையைத் தேடிப் பிடித்துப் படியுங்கள். இதுபோக, தான் கேட்டு ரசித்த நாதஸ்வர மேதைகளைப் பட்டியல் இடுகிறார். ‘நாதஸ்வரச் சக்கரவர்த்தி’ திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி பி. அருணாசலம், நாச்சியார்கோயில் ராகவபிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல் என இவர் அடுக்கும் போது பொறாமையில் வயிறு எரிகிறது. அதுவும் என் உள்ளம் கவர்ந்த நாதஸ்வர மாமேதை காருகுறிச்சியாரை ‘குருவை மிஞ்சிய சிஷ்யர்’ என்று, பெரியவர் ராஜரத்தினம் பிள்ளையுடன் ஒப்பிடும் போது மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது. சுசீந்திரம் கோயில் மேடையில் தன் சிஷ்யர் காருகுறிச்சி பின்னால் அமர்ந்திருக்க ராஜரத்தினம் பிள்ளை வாசித்த கச்சேரியின் போது ‘மேடைக்கு முன்னால் உட்கார்ந்து, தலையாட்டி, பஞ்சமம் போனாலே கைதட்டும் சுசீந்திரம்காரர்கள் பேசிக் கொண்டதை இப்படி சுவாரஸ்யமாகக் குறிப்பிடுகிறார்.

ராஜரத்தினம் பிள்ளை அடிக்கடி வெள்ளி டம்ளரில் ‘ஏதோ’ குடிப்பதைப் பார்த்துவிட்டு, இப்படி சொல்வார்களாம். ‘அன்னா அந்த பிளாஸ்கிலெருந்து, வெள்ளி தம்ளர் வளியா உள்ளெ போகுல்லா, அதுதான் தோடியாட்டும், காம்போதியாட்டும், கல்யாணியாட்டும் வெளீல வருது’.

ஒரு மனிதர் செத்துப் போனதற்குப் பிறகு அவரை ‘இந்திரன் சந்திரன்’ என்றுதான் எழுத வேண்டும் என்கிற அசட்டுசம்பிரதாயத்தை மீறி, உள்ளது உள்ளபடியே எழுதப்பட்டிருக்கிற ‘சுப்புடு’ பற்றிய கட்டுரை ஒன்றும் இந்தப் புத்தகத்தில் உள்ளது. ஆனால் அதைப் படிக்கும் ‘சுப்புடு அபிமானிகள்’ யாருக்கும் வருத்தம் வராதவண்ணமே கட்டுரை அமைந்திருப்பதை, அதை முடித்திருக்கும் விதம் நமக்கு சொல்கிறது.

‘ஜவஹர்லால் நேரு இவரு தோள்ல கைபோட்டாராம்லா! நல்லா கத விடுதாருவே, பாட்டையா’ என்றுதான் ‘நான் பார்த்த ரோஜாவின் ராஜா’ கட்டுரையைப் படித்தபோது நினைக்கத் தோன்றியது. ஆனால் பெரியவர் வெங்கட் சாமிநாதன் தன்னுடைய அணிந்துரையில் (அது அணிந்துரைதானே?) ‘ராஜீவ் காந்தியாவது, ஷேக் ஹசீனாவாவது, மனுஷன் அளக்கிறார் என்று தோன்றலாம். இல்லை, அவர் சொன்னவற்றில் சொல்லாமல் விட்டதும் நிறைய உண்டு’ என்கிறார். உண்மைதான். பாட்டையா நேரில் சொன்ன, எழுத்தில் சொல்லாமல் விட்ட பல விஷயங்களை அறிவேன். அதையெல்லாம் அவர் எழுதினால், இணையத்தில் பாய்கிற 66A மாதிரி, வேறேதாவது A,Bயில் தொடங்கி Z வரை அவர் மீது பிரியமாகப் பாய்ந்துத் தழுவக்கூடும். நானும் புழலுக்கோ, பாளையங்கோட்டைக்கோ ஆரஞ்சுப் பழம் வாங்கிக் கொண்டு போய்ப் பார்க்க வேண்டியதிருக்கும். அப்போதும் கூட, பாட்டையா ‘மசால்வடய எங்கல, காணோம்?’ என்று கோபித்தாலும் கோபிப்பார்.

இந்தத் தொகுப்பில் உள்ள ‘நான் வாழ்ந்த திருவாங்கூர் சமஸ்தானம்’ கட்டுரையை நாஞ்சில் நாடன் சித்தப்பா உட்பட பல பெரியவர்கள் வரலாற்று ரீதியான பல பதிவுகளைக் கொண்ட மிக முக்கியமான கட்டுரை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். நம் ஊர் மதிய உணவுத் திட்டத்துக்குத் தாத்தாவான(அப்படித்தான் கட்டுரையில் சொல்கிறார்) Vanchi poor fundஇன் கஞ்சியும், சம்மந்தியுமான இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது திருவிதாங்கூர்தான் என்னும் செய்தியில் தொடங்கி, இன்னும் எத்தனையோ இந்தக் கட்டுரையில் அறிந்து கொள்ள முடிகிறது. கொள்கை மாறுபாடுடைய நேருவைப் போன்றவர்களே மதிக்கும் அளவுக்கு ஆங்கிலப்புலமை கொண்ட Sir C.P. ராமசாமி ஐயரின் மார்பிள் சிலை, கிளர்ச்சியின்போது தரையில் கோலமாவாகச் சிதறியிருந்ததைக் கண்ணால் பார்க்க முடிகிறது. மலையாளிகளின் Personal hygeineஉம், பத்மநாபசுவாமி கோயிலைச் சுற்றி மலிந்திருக்கிற ‘யானைக்கால்’ வியாதியும், ‘பெரிய பை’ வியாதியும், கூடவே புத்தக ஆசிரியர் நாவாப் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் ஆசனம் கற்றுக் கொண்டதையும் சுவாரஸ்யமாக நமக்கு சொல்கிறது, இந்தக் கட்டுரை.

இந்தப் புத்தகத்தில் ‘செம்மீனும் தேசிய விருதுகளும்’ கட்டுரையைப் படித்தால் பாட்டையாவை வியக்காதவர்களே இருக்க முடியாது. தில்லி பிலிம் சொஸைட்டியில் தான் பார்த்த உலக சினிமாக்களைப் பற்றி விவரமாகச் சொல்லிகொண்டே கட்டுரையைத் துவக்கும் அவர், ஒருகட்டத்தில், அதாவது ஐந்தாவது பக்கத்தில்தான் போனால் போகிறது என்று கட்டுரையின் தலைப்புக்குள் வருகிறார். தேசிய திரைப்பட விருதுக்கான தேர்வுக் கமிட்டி எந்த லட்சணத்தில் இயங்குகிறது என்பதைப் படம் போட்டுக் காட்டும் இந்தக் கட்டுரையில் நடிகர் திலகம், ’வாத்தியார்’ பாலுமகேந்திராவை அறிமுகப்படுத்திய ராமு காரியாட் போன்றவர்கள் சர்வசாதாரணமாக வந்து போகிறார்கள். அகில இந்திய அளவில் புகழ் பெற்ற தகழியின் ‘செம்மீன்’ திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைப்பதற்கு பாட்டையா முக்கிய காரணம் என்று சொன்னால் நம்புகிற மாதிரியா இருக்கிறது? ஆனால் தில்லி விஞ்ஞான பவனில் விருது விழாவின் போது, பாட்டையாவின் கைகளைப் பிடித்து, ‘வளரே நந்நி, வளரே நந்நி’ என்று சொல்லி கண்களில் ஒற்றி, மேடையில் தனக்குப் போட்ட மாலையை, பாட்டையாவின் கழுத்தில் போட்டு ராமு காரியாட் மகிழ்ந்ததைப் படித்தபின் நம்பாமல் எப்படி இருப்பதாம்?

பாட்டையாவுக்கு நாக்கு நாப்பது முழம் நீளம் என்று நான் எனது ‘பந்தி’ கட்டுரையில் எழுதியிருந்தேன். அதற்குக் காரணமான ஒரு கட்டுரை, ’தில்லியில் தென்னிந்திய ஹோட்டல்களும் கையேந்தி பவன்களும்.’ சிறுவயதில் திருநவேலியின் ‘விஞ்சை விலாஸ்’ இட்லி சாம்பாரும், இப்போது சென்னையில் சாலிகிராமத்து ‘திருநெல்வேலி சைவாள் ஹோட்டல்’ எண்ணெய் தோசையும் சாப்பிடும் என்னைப் போன்ற எச்சிக்கலை சைவனை, மேலும் எச்சிக்கலையாக்கும் இந்தக் கட்டுரையை நான் எத்தனை முறை படித்தேன் என்று கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. கனாட்பிளேஸ் மதராஸ் ஹோட்டல் சட்னி வெறும் பொட்டுக்கடலையாலேயே தயாரிக்கப்பட்டிருக்குமாம். சிறுவயதில் சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது , தலைக்குத் தேய்த்த கடலைமாவு வாயில் வழிந்தால் என்ன ருசியோ அதே ருசிதான் மதராஸ் ஹோட்டல் சட்னிக்கும் என்கிறார், பாட்டையா. மனுஷனுக்கு என்ன ரசனை, பாருங்கள்!

மொரார்ஜி தேசாயின் புதல்வரான காந்திபாய் தேசாய் பற்றிய கட்டுரையான ‘தலைவர்களும், தனயர்களும்’ மற்றுமோர் வியக்க வைக்கும் முக்கியமான கட்டுரை. அந்தக் கட்டுரையில் இப்படி சொல்கிறார். ”Frankfurt Airport சிறிய சுத்தமான நகரம் போல் இருக்கும். Sex shopகளில் உடம்பில் பொட்டுத்துணியில்லாமல் , போனால் போகிறதென்று காலுக்கு செருப்பு மட்டும் போட்டுக் கொண்டு நடமாடும் பெண்களை ஓரிரு தடவைகளுக்குப் பார்க்க காணமுடியாது. இலைமறைவு காய்மறைவுதானே நமக்குத் தெரியும்?”. இவ்வளவு நன்னூலாகச் சொல்லும் ‘பாட்டையா’ இதே கட்டுரையில் ஒரு சமஸ்கிருதப் பாடலுக்கு விளக்கம் சொல்லியிருப்பதைப் படித்துப் பாருங்கள். ‘பாட்டையா’ எப்பேர்ப்பட்ட ஆசாமி என்பது என்பது உங்களுக்குப் புரியும். நானே கூட அதைச் சொல்லிவிடுவேன். ஒருவேளை லேடீஸ் இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தால்? கூச்சமாக உள்ளது. புத்தகத்திலேயே படித்துக் கொள்ளுங்கள்.

இந்தியன் ரயில்வேயைக் குறை கூறுபவர்கள் சிவன்கோயிலில் விளக்கணைத்த பாவத்துக்கு ஆளாவார்கள். இப்படி துவங்குகிறது, ‘ஒரு நீண்ட பயணம்’ கட்டுரை. ரயிலைப் பிடிக்காத, ரயில் பயணத்தை விரும்பாத மனிதர்கள் ஒருவேளை இருக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரையைப் பிடிக்காதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. நிலா, கடல், யானை வரிசையில் ரயிலையும் சேர்க்கும் பாட்டையா, ரயில் பிரயாணத்தை மிகவும் நேசிக்கிறார். முடிந்தால் லண்டனுக்கும் ரயிலில் போகத் தயார் என்கிறார். தில்லியிலிருந்து தில்லியிலிருந்து சென்னை வரைக்கும் ப்ராட்கேஜில் ஓடும் ஜி.டி.எக்ஸ்பிரஸ்ஸிலும், பிறகு சென்னையிலிருந்து நெல்லை வரை மீட்டர்கேஜில் டின்னவேலி எக்ஸ்பிரஸ்ஸிலும், பிறகு ரிட்டர்னாகவும் கட்டுரை முழுதும் நம்மை ரயிலில் அழைத்துச் செல்கிறார். ஐம்பதுகளில் தில்லியிலிருந்து சென்னைக்கு கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்ஸும், ஜனதா எக்ஸ்பிரஸ்ஸும்தான் ஓடிக் கொண்டிருந்தனவாம். ஆனால் பயணிகள் ‘போன ஜென்மத்தின் பிரும்மஹத்தி தோஷம் இருந்தாலொழிய ஜி.டி எக்ஸ்பிரஸ்ஸையே விரும்புவார்களாம். காரணம், ஜனதா எப்போது சென்னை வந்து சேருமென்று அப்போதைய ரயில்வே மந்திரி ஜகஜீவன்ராமுக்கே தெரியாதாம். வழியில் எந்த பிளட்ஃபாரத்தைப் பார்த்தாலும் உடனே நிற்க வேண்டுமென்ற தணியாத ஆசை ஜனதா எக்ஸ்பிரஸ்ஸுக்கு உண்டாம். குறுக்கே ஒரு எருமைமாடு போனாலும், அதற்கு வழிவிட்டபிறகே தொடருமாம்’. நாகர்கோவில் கொலஸ்ட்ரால் இது.

திருநவேலி இருட்டு லாலா கடை ஹரி சிங் மாமாவைத் தவிர வேறெந்த சிங்கையும் அறியாத என்னைப்போன்றவர்க்கு, சிங் என்றாலே முட்டாள் சர்தார்ஜி ஜோக்குகளில் காணப்படுபவர்கள்தாம். இப்போது தில்லியில் இருப்பவரைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் ’சிங் இஸ் கிங்’ படித்த பிறகு அவர்களை வணங்கத் தோன்றுகிறது. சீக்கியர்களைப் பற்றி கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள பல செய்திகள் உள்ளன. குறிப்பாக ’பிச்சையெடுக்கும் ஒரு சர்தார்ஜியை நான் பார்த்ததில்லை. கைகால் இல்லாதவர் கூட தில்லி கோடையின் போது, ஒரு மரத்தடியில் பெரிய மண்பானையில் குளிர்ந்த நீரும், குடிக்க ஒரு பெரிய குவளையும் வைத்திருப்பார். தண்ணீர் குடித்துவிட்டு முன்னால் விரித்த கைக்குட்டையில், உங்களுக்குப் பிரியமிருந்தால் முடிந்ததைப் போடலாம். ஆனால் சர்தார்ஜி கைநீட்டி கேட்கமாட்டார்கள்’ என்று கட்டுரையில் சொல்கிறார், பாட்டையா. பஞ்சாபிகளின் புத்திசாலித்தனத்துக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசுதான் இன்று பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது என்கிற ரகசியம் சொல்கிறார். விருந்தாளிகளுக்கு ஒன்றரை லிட்டர் பிடிக்கும் பெரிய லோட்டாவில் அவர்கள் கொடுக்கும் லஸ்ஸி, மில்கா சிங் பேசும் சுத்தமான தமிழ் வசவு வார்த்தைகள், பாட்டையா வீட்டுக்கு ஷிவாஸ் ரீகல் சாப்பிட வரும் குஷ்வந்த்சிங் என இவர்கள் அனைவரைப் பற்றியும் ஒற்றவரியில் இப்படி சொல்கிறார், பாட்டையா. ‘வயிற்றில் பல் இல்லாதவர்கள்’.

இவை போக சுஜாதா, பூர்ணம் விசுவநாதன் ஆகியோருக்கான அஞ்சலிக் கட்டுரைகள், மற்றும் நாஞ்சில் நாடன் சித்தப்பா வெகுவாக வியக்கும் ‘பங்களாதேஷ் நினைவுகள்’. அந்தக் கட்டுரையை பல சமூக, அரசியல் கேள்விகளை உள்ளடக்கியிருப்பது என்கிறார். உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் தகவல்கள் அடங்கியுள்ள கட்டுரை, அது. ’பூர்ணம்’ விசுவநாதனுக்கு பூர்வீகம் ‘திருநவேலி’ என்னும் செய்தியை ‘பாட்டையா’ சொல்லித்தான் அறிந்தேன். நிறைய வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறார். பாபி பேதி(பேடி அல்ல), கான் (கேன்ஸ் அல்ல), லாலு (லல்லு அல்ல). ஸ்வ்யீட் (ஸூட்டு அல்ல- suite).

ஒட்டுமொத்தப் புத்தகமும் ‘பாரதி மணி’ என்னும் தனிமனிதர், அவர்தம் வாழ்க்கையில் பார்த்த, பழகிய மனிதர்களைப் பற்றியதுதான். ஆக, எல்லாக் கட்டுரைகளிலும் பாட்டையா இருக்கிறார். ஆனால் ஒரே ஒரு கட்டுரையில்தான் அவர் நிறைந்து நிற்கிறார். கண் கலங்க அண்ணாந்து பார்த்து வணங்க வைக்கிறார். அது, ‘தில்லி நிகம்போத் சுடுகாடு’ என்னும் கட்டுரை. இந்தக் கட்டுரையைப் பற்றி ஒரு வார்த்தையைக் கூட இந்த இடத்தில் நான் சொல்ல விரும்பவில்லை. படிக்காதவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். படித்தவர்கள் எப்படியும் மீண்டும் மீண்டும் படிப்பார்கள்.

‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தைப் பற்றி அ. முத்துலிங்கம், அசோகமித்ரனில் தொடங்கி ‘பாட்டையா’ பாரதி மணி வரை எத்தனையோ பேர் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கட்டுரையை நானாகத்தான் எழுதுகிறேன். ’எல, நானும் ரெண் . . . .டு, மூ . . . .ணு வருசமா சொல்லிக்கிட்டே இருக்கென். ஒளுங்கா, மரியாதயா என் பொஸ்தகத்த பாராட்டி எளுதுதியா? இல்ல, ஒன்ன வாரியலக் கொண்டு அடிக்கட்டுமா?’ என்று என்னை மிரட்டி எழுதச் சொன்னவர் ‘பாட்டையா’ இல்லை. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

தேவனின் கோயில்

‘கதாநாயகியோட அம்மாவா நடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு நடிகைகளேதானே வளச்சு வளச்சு நடிக்காங்க! சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு அம்மாவத் தேடிப் புடிச்சு நடிக்க வச்சா என்ன?’ இந்த விபரீத ஆசை யின் தேடலில் ஒரு பெண்மணியின் புகைப்படம் கிடைத்தது. அச்சு அசலான நடுத்தரத் தமிழ்க்குடும்பத்து பெண்மணி. மதுரை மாவட்டத்தின் ஏதோ ஓர் பள்ளியின் ஆசிரியை.

‘நடிக்க வருவாங்களாப்பா?’

‘அவங்க ஹஸ்பண்டுக்கிட்ட பேசச் சொன்னாங்க, ஸார்.’

உதவி இயக்குனர் சொன்னார்.

‘அதுக்கென்ன? பேசிட்டா போச்சு. நம்பர் இருக்கா?’

‘இருக்கு ஸார்’.

‘குடு. பேசலாம்.’

‘னைன், எய்ட், த்ரீ, டூ . .’

‘என்ன பண்றாராம், ஸாரு?’

‘போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸார்’.

‘வடிவுக்கரசியம்மா டேட்ஸ் இருக்கான்னு செக் பண்ணுங்களென்’.

நொடிப்பொழுதில் முடிவை மாற்றினேன். ஆனால் தற்செயலாக பெயர் தெரியாத அந்த டீச்சரம்மாவின் வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. Staff roomஇல் சக டீச்சர்களின் கேலிச் சிரிப்பொலிகளுக்கிடையே, ‘டீச்சர் நல்லா பாடுவாங்க ஸார்’ என்ற குரலைத் தொடர்ந்து, ‘கொஞ்சம் அமைதியாத்தான் இருங்களென்’ என்று யாரோ சொல்கிறார்கள். முகம் முழுதும் பெருகிய வெட்கத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, கூச்சம் விலகாமல், தலை கவிழ்ந்தபடி, மேஜையில் கைகளை ஊன்றியபடி அந்த டீச்சர் பாட ஆரம்பிக்கிறார், ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே’. அவர் பாட ஆரம்பித்த அந்த நொடியில் என் மனம் கலங்க ஆரம்பித்தது. ஆனால் பாட்டு போகப் போக டீச்சரின் கூச்சம் மறைந்து அந்தப் பாடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தார். முகத்தில் அத்தனை துலக்கம். . ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்று சரணத்தைத் தொடங்கும் போது குரலில் அத்தனை உருக்கம். தலையைக் குனிந்தவாறே பாடியபடி ’மறந்தாதால்தானே நிம் . . . .மதி’ என்று முடித்துவிட்டு, வலிய வரவழைத்த சிரிப்புடன் நிமிர்ந்தார். ’டீச்சர் நல்லா பாடுவாங்க ஸார்’ என்று சொன்னவுடன், அவர் ஏன் இந்தப் பாடலைப் பாடினார்? இந்தப் பாடலைத் தவிர வேறெந்தப் பாடலைப் பாடியிருந்தாலும், அது இந்தளவுக்கு நம்மைக் கவர்ந்திருக்குமா என்று மனதுக்குள் பல கேள்விகள்.

folder

‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் ‘தேவனின் கோயில்’ பாடல், வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையில்லை. நானாக அந்தப் பாடலைக் கேட்பது போக, டீச்சரைப் போல யாராவது ஒருவர் தேவனின் கோயிலுக்குள் இழுத்துச் சென்று விடுவர். சிலசமயங்களில் காரணமேயில்லாமல் சில பாடல்கள், நாள் முழுதும் நம் மனதைச் சுற்றி வருவது போல , ஒருநாள் ‘தேவனின் கோயில்’ பாடலைத் தொடர்ந்து நாள்முழுக்க முணுமுணுத்துக் கொண்டேயிருந்தேன். சொல்லிவைத்தாற்போல நண்பர் விக்கி, நெதெர்லேண்ட்ஸிலிருந்து ஃபோனில் அழைத்தார்.

‘சுகா, குருவி சேக்குற மாரி துட்டு சேத்து, குட்டியானை கணக்கா ஒரு பியானோ வாங்கியிருக்கென்’.

‘வாசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா, விக்கி?’.

‘பொறவு? அதே சோலிதானெ!’.

‘தேவனின் கோயில் வாசிச்சு பாருங்க’ .

சிலநொடிகள் மௌனம். ‘விக்கி, விக்கி. லைன் கட் ஆயிட்டா?’

‘என்ன சுகா இது அநியாயம்? அந்தப் பாட்டப் பத்திப் பேசத்தானெ ஒங்களக் கூப்பிட்டென். ரைட் ஹேண்ட் நோட்ஸ்லாம் ப்ராக்டிஸ் பன்ணிட்டென். லெஃப்ட் ஹேண்ட்ல பாஸ் கிதார் நோட்ஸ்தான் கைய ஒடிக்கி. எப்படியும் இன்னும் ஒரு மாசத்துல் வாசிச்சிருவ்வேன்னுதான் நெனைக்கென்’.

என்னைப் போலவே திருநவேலிக்காரரான விக்கி, வயலினும், பியானோவும் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர். ’தேவனின் கோயில்’ பாடலின் பாஸ்கிதார் பகுதிகளை ஒரு மாதத்தில் வாசித்து விடுவேன் என்று விக்கி சொன்னதில் அர்த்தமில்லாமலில்லை. பொதுவாகவே இளையராஜாவின் பாடல்களின் ஆதார அஸ்திவாரமே, பாஸ்கிதார்தான். ஒட்டுமொத்தப் பாடலின் கட்டுமானத்தையும் தாங்கிப் பிடிக்கும் பாஸ்கிதாரின் அற்புதமான வாசிப்பை ‘தேவனின் கோயில்’ பாடல் முழுவதும் நாம் கேட்கலாம். சினிமா பாட்டு கேட்பது தெய்வக்குற்றம் என்கிற அளவுக்கு கொள்கைப்பிடிப்புடைய கிறிஸ்டோஃபர் ஸார்வாள் தனது கிதார் பயிற்சியின் போது ‘தேவனின் கோயில்’ பாடலின் கிதார் பகுதிகளை, ரகசியமாக ரசித்து வாசித்ததை ஒருமுறை பார்த்திருக்கிறேன்.

திருநவேலியின் லாலா சத்திர முக்கில் இருக்கும் ‘சதன் டீ ஸ்டாலில்’ அதிகாலை நேரத்தில் நடிகர் திலகத்தின் குரலுடன் ‘அறுவடை நாள்’ பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். சிவாஜி ஃபிலிம்ஸின் தயாரிப்பு, அது. ‘ப்ரேமம் ப்ரேமாதி ப்ரேமப்ரியம் ப்ரேமவஸ்யப்ரேமம்’ என்று இளையராஜாவின் குரலில் அந்தப் பாடல் துவங்கும் போதே கணேசண்ணனின் கண்கள் கலங்கத் துவங்கும். சொல்லியிருந்த ’விவா டீ’ கைக்கு வரவும், கொஞ்சமும் கூச்சப்படாமல் தரையில் உட்கார்ந்து பாடலைக் கேட்க ஆரம்பிப்பான். பாட்டு முடிந்த பிறகுதான் கண்களைத் திறப்பான். ‘அண்ணாச்சி, இன்னொரு மட்டம் இந்தப் பாட்ட போடுங்களென்’ என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டு, என்னிடம் ‘தம்பி, இன்னொரு விவா டீ சொல்லென்’ என்பான். சதன் டீக்கடைக்காரர் கணேசனுக்கு மட்டும் ‘விவா டீ’க்கு பதிலாக, வேறேதும் ஊனா பானா கொடுத்துவிட்டாரோ என்று சந்தேகிக்கும் வண்ணம் பாடல் முடிந்ததும் கணேசண்ணன் பிதற்ற ஆரம்பிப்பான்.

‘இந்தப் பாட்ட எளுதுனவன், பாடுனவ, எசையமைச்சவன் எல்லாரயும் சுட்டுக் கொல்லணும்டெ. துஷ்டி வீட்டுக்கு வந்த மாரில்லா சவம் அளுக அளுகயா வருது. இன்னொரு மட்டம் கேட்டென்னா மூச்சு முட்டி செத்தே பெயிருவென்’.

ஆனாலும் அன்று மாலையே, ‘சதனுக்குப் போவோமா? தேவனின் கோயில் கேட்டுட்டு வருவோம்’ என்பான்.

கணேசண்ணன் சொன்னது போல, தேவனின் கோயில் பாடலோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரது பங்களிப்பும் அந்தப் பாடலை எங்கோ உயரத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. சித்ராவின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கை ‘தேவனின் கோயில்’ பாடல் ஆற்றியிருக்கிறது. மிக சன்னமான தொனியில் இந்தப் பாடலைப் பாடத் துவங்கும் அவர், இரண்டாவது சரணம் முடியும் இடமான ‘நானோர் கண்ணீர்க் காதலி’ என்னும் போது குரல் உடைந்து, அதேசமயம் ஸ்ருதிவிலகாமல் பாடி, கேட்பவரைக் கலங்க வைக்கிறார். அந்த சமயத்தில் முழுமையாக தமிழைப் புரிந்து கொண்டு பாடக்கூடியவராக சித்ரா இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்ற வரியிலும், ’கேட்டால் தருவேன் என்றவன் நீயே, கேட்டேன் ஒன்று தந்தாயா’ என்ற வரியிலும் அவரது குரலிலுள்ள உணர்ச்சியை கவனித்தால், ‘யாருப்பா சொன்னா அது மலையாளத்துப் பிள்ளன்னு? அது நயம் தமிளச்சில்லா’ என்று அடித்துச் சொல்லி விடலாம்.

ilayaraja_yesudas_chithra_fazil

இதுபோல ‘வாடி என் கப்பக்கிழங்கே’ பாடலாசிரியராகவே அதிகமாக அடையாளம் காட்டப்பட்டுவரும் கங்கை அமரனின் மிக முக்கியமான பாடல்களில் ஒன்று ‘தேவனின் கோயில்’. கன்னியாஸ்திரியாக மாறுவதற்கான பயிற்சியில் உள்ள ஒரு பெண் காதல்வயப்படுகிறாள். காதலனுடன் இணைய முடியவில்லை. இதை பாடலின் முதல் வரியிலேயே எவ்வளவு எளிமையாகச் சொல்லிவிடுகிறார்! ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே!’. காதலனுடன் இணைய முடியாத காதலியை, ‘பிரிந்தே வாழும் நதிக்கரை போல, தனித்தே வாழும் நாயகி’ என்கிறார், கங்கை அமரன். துக்கத்தின் விளிம்பில் நின்று அவள் தன்னைப் பற்றி ’ஒருவழிப்பாதை என் பயணம்’ என்று பாடியபடியே, ’இணைவது எல்லாம் பிரிவதற்காக, இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக, மறந்தால்தானே நிம்மதி’ விரக்தியின் உச்சத்தைச் சொல்கிறார்.

‘தேவனின் கோயில்’ பாடலின் இசையமைப்பை எடுத்துக் கொண்டால் அதன் மெட்டைச் சொல்வதா, வாத்தியங்களின் அமைப்பைச் சொல்வதா, அதன் தாளத்தைச் சொல்வதா, எதைச் சொல்வது என்று புரியவில்லை. மிக எளிமையாகச் சொல்வதாக இருந்தால் இது ஒரு சோகப்பாடல். ஆனால் பாடலின் துவக்கத்தைக் கேட்டால் ‘ப்ரேமம் ப்ரேமாதி’ என நவீனமான முறையில் பல்குரல் பதிவாக இளையராஜாவின் குரல் கேட்கிறது. பிறகு சித்ரா ’தேவனின் கோயில்’ எனத் துவங்கும் போதே நம் மனம் கனக்கத் துவங்குகிறது. ’இங்கு என் ஜீவன் தேயுதே’ என்னும் வரியில் தேயு . .தே என்கிற ஒரு வார்த்தையில், பின்னால் வர இருக்கும் இசை பூகம்பத்தை நமக்கு சொல்லாமல் உணர்த்திவிடுகிறார், இளையராஜா. பல்லவி முழுதும் தாளம் ஏதுமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் முதல் இடையிசை (First interlude) தேவாலய மணியின் ஓசையுடன் துவங்கும் போதே, படம் பார்க்காமலேயே நம் கண்கள் முன்னால் காட்சி விரிகிறது. ‘அறுவடை நாள்’ திரைப்படத்தில் வரும் தேவாலயம், பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி வளாகத்திலுள்ள மிகப் பிரமாண்டமான தேவாலயம். ஒவ்வொரு முறை அந்தப் பக்கம் செல்லும் போதெல்லாம், அந்த தேவனின் கோயிலை சிலமணித்துளிகள் நின்று பார்ப்பது என் வழக்கம். ‘இதயெல்லாம் பாக்காமலயெ அந்த மனுஷன் எப்பிடித்தான் அப்பிடி ஒரு பாட்டு போட்டாரோ’ என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.

இப்படி ஒரு சோகப்பாடலுக்கு இளையராஜா அமைத்திருக்கும் தாளம், சற்றே துள்ளலானது. வழக்கமாக சோகரசம் தொனிக்கும் பாடலென்றால் பண்டிட் பாலேஷுக்கு ஃபோன் செய்து, ‘செவன் டூ ஒன் வந்திருங்க பாலேஷ்ஜி’ என்று ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து சொல்லி விடுவார்கள். அவரும் சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து கிளம்பும் போதே தானும் மூக்கைச் சிந்தி, தன் ஷெனாயுக்கும் மூக்கைச் சிந்தச் செய்து கைக்குட்டையால் துடைத்து, அழைத்துச் செல்வார். ‘பாலேஷ்ஜி, ஒரு நாலு பார் ஹைபிட்ச்ல வாசிச்சு ஃபில் பண்ணிருங்க’ என்பார்கள். ஆனால் ‘தேவனின் கோயில்’ பாடலில் ஷெனாய்க்கு வேலையில்லை. இது போன்ற சோக கீதங்களில் கிட்டத்தட்ட ஷெனாயின் வேலையைச் செவ்வனே செய்திடும் புல்லாங்குழலும் நவீனமாகக் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விரு வாத்தியங்களின் வேலையையும் இந்தப் பாடலில் கிதார் எடுத்துக் கொள்கிறது. முதல் இடையிசையின் முடிவில் ’நானொரு சோக சுமைதாங்கி’ என்று பாடலின் மிக முக்கியமான பகுதியை சித்ரா துவக்குவதற்கு வசதியாக ’இந்தா புடிச்சுக்கோ, மகளே’ என்று தளம் அமைத்துக் கொடுக்கிறது, கிதார். பாடலின் துவக்கத்தில் பலகுரல்களாக ஒலித்த இளையராஜாவின் குரல், இரண்டாவது இடையிசையில் தெம்மாங்காக உச்சஸ்தாயியில் உற்சாகமாக ஒலிக்கிறது. ஆனால் எந்த வகையிலும் அந்த துள்ளலொலி பாடலின் மைய உருவைக் குலைக்கவில்லை. இது போன்ற நம்ப முடியாத இசை ஆச்சரியங்களெல்லாம் இளையராஜாவிடம் மட்டுமே சாத்தியம்.

ஒருநாள் திரைப்பட இயக்குனரும், நடிகருமான நண்பர் அழகம்பெருமாள் சொன்னார்.

‘வே, அத ஏன் கேக்கேரு? ராத்திரி சரக்கப் போட்டுட்டு ஒளுங்கா மரியாதயா செவனேன்னு கட்டய சாத்துறத விட்டுட்டு தேவனின் கோயில் பாட்டக் கேக்கலாமாய்யா? சவம் காலச் சுத்துன பாம்பா விடிய விடிய கொன்னு எடுத்துட்டுல்லா. படுக்கும் போது மணி என்னங்கேரு? காலைல எட்டர. ஒரு சினிமாப் பாட்டு இப்பிடியாவே மனச அறுக்கும். ச்ச்சை’.

கணேசண்ணன், கிறிஸ்டோஃபர் ஸார்வாள், பெயர் தெரியாத அந்த டீச்சர், சகோதரர் விக்கி, நண்பர் அழகம்பெருமாள் என யாராவது ஒருவர் அவ்வப்போது என்னை ‘தேவனின் கோயில்’ பாடலுக்குள் இழுத்துச் சென்று விட்டு விடுவார்கள். நானும் கொஞ்ச நாட்களுக்கு அதற்குள்ளேயே கிடப்பேன். கடந்த ஒருவாரகாலமாக ‘தேவனின் கோயில்’ பாடலை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த முறை, இப்படி ஒரு கட்டுரை எழுதிவிடும் அளவுக்கு என்னை ‘தேவனின் கோயிலுக்குள்’ கொண்டு போய் விட்டு, கதற வைத்தது யார் என்று தீவிரமாக யோசித்து, சற்று சிரமப்பட்டே விடையைக் கண்டுபிடித்தேன். அது வேறு யாருமல்ல. நானேதான்.