வாசம்

கிறிஸ்டி டீச்சர் வீட்டுக்கு டியூஷனுக்குப் போகும் போதெல்லாம் டெட்டால் வாசமடிக்கும். டீச்சரின் தகப்பனார் ஒரு டாக்டரிடம் கம்பவுண்டராக வேலை பார்த்தார். அதனால்தான் டெட்டால் வாசம். இத்தனைக்கும் என் கண்ணுக்கு டெட்டாலோ, வேறேதும் மருந்துகளோ தட்டுப்பட்டதேயில்லை. ராதாகிருஷ்ணன் டாக்டரின் ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலுக்குக் காட்டப் போகும் போது அங்கு கிறிஸ்டி டீச்சர் வீட்டுவாசமடித்தது. அப்போதுதான் அது ஆஸ்பத்திரி வாசம் என்று எனக்கு பிடிபட ஆரம்பித்தது. ஹைஸ்கூலுக்குப் போன பிறகு நான் கிறிஸ்டி டீச்சரைப் பார்க்கவேயில்லை, இன்றுவரை. ஆனால் ஒவ்வொரு ஆஸ்பத்திரி வாசத்திலும் காட்டன் புடவையணிந்த, ஒல்லியான, எப்போதும் பவுடர் பூசிய கிறிஸ்டி டீச்சரின் முகம் என் நினைவுக்கு வந்து போகிறது.

நண்பன் குஞ்சுவின் வீட்டுக்கு நான்கு வீடுகள் தள்ளி இருக்கிறது, இருட்டு லாலாக்கடை மாமாவின் வீடு. அவர் வீட்டுக்கு அருகேயே இன்னொரு வீட்டில்தான் இருட்டுக் கடை அல்வா தயாராகிறது. குஞ்சுவின் வீட்டைத் தாண்டும் போதே நெய்கலந்த ஒரு இனிப்பு வாசம் சுற்றிச் சுற்றி வரும். பழக்கப்பட்டு விட்டதால் அங்குள்ள ஜனங்கள் அந்த வாசத்தை சட்டை பண்ணுவதில்லை. அந்த வாசத்தைக் கடந்து செல்பவர்களில் யாரேனும் ‘ஏ எப்பா, என்னமா மணக்கு’ என்று மூச்சை இழுத்துச் சொல்லி வாசம் எங்கிருந்து வருகிறது என்று திரும்பித் திரும்பிப் பார்த்து சென்றார்களானால் அவர்கள் வெளியூர்க்காரர்கள் என்று எங்களுக்கு தெரிந்துவிடும். இருட்டு லாலா மாமாவிடம் ஒரு நாளும் அல்வா வாசமடித்து நாங்கள் பார்த்ததில்லை.

வேறொரு லாலாக்கடையில் சரக்கு போடும் நண்பன் சந்திரஹாஸன் தூரத்தில் வரும்போதே டால்டா வாசம் நம் மூக்கை வந்து முட்டும். ‘எல, கட்டையன் வாரான் போலுக்கு’ என்பான் குஞ்சு. இத்தனைக்கும் சந்திரஹாஸன் வேலை முடிந்து வீட்டுக்குப் போய் நன்றாகக் குளித்து முழுகி வேறு உடை அணிந்துதான் வருவான். டால்டா வாசம் அவன் உடம்புடனே தங்கிவிட்டது. ‘எல, இவன் என்னத்தெ குளிச்சாலும் இந்த டால்டா வீச்சம் போக மாட்டக்கெ’. அவன் காதுக்குக் கேட்டால் கஷ்டப்படுவான் என்பதால் நாங்கள் எங்களுக்குள்ளே பேசிக் கொள்வோம்.

சுருட்டு வாசத்தை எங்களுக்கு முதன்முதலில் காண்பித்தது சண்முகம் பிள்ளை. பேப்பர் போடும் சண்முகம் பிள்ளை நடந்தே திருநெல்வேலியைச் சுற்றி வருபவர். திருநெல்வேலியின் எல்லா தெருக்களிலும் அவரை பார்க்கலாம். மடித்து கட்டிய வேட்டியும், மேல் துண்டும் அணிந்திருப்பார். நெஞ்சோடு அணைத்துப் பிடித்திருக்கும் பேப்பர், புத்தகங்கள். அவர் மார்போடு மார்பாக எங்களின் நாயகர்களான இரும்புக்கை மாயாவி, ரிப் கிர்பி, டெஸ்மாண்ட், மந்திரவாதி மாண்ட்ரேக், லொதார், சுட்டிக் குரங்கு கபிஷ், வேட்டைக்காரன் மாத்தையா என எல்லோரும் சாய்ந்திருப்பர். சண்முகம் பிள்ளையின் வாயில் எப்போதும் சுருட்டு புகைந்து கொண்டிருக்கும். அதை பாதியைச் சவைத்துத் தின்றிருப்பார். பக்கத்தில் வந்தால் நாற்றம் முகம் சுளிக்க வைக்கும்.

‘அண்ணாச்சி, இந்த நாத்தத்தை எப்படி குடிக்கியெ? சை . . .’

மூக்கைப் பொத்திக் கொண்டு கேட்போம்.

‘நாத்தம் ஒங்களுக்குத்தானடே!’

சுருட்டின் நுனியைச் சவைத்துக் கொண்டே சொல்வார்.

வாழ்க்கையில் காபி குடித்து பழக்கமில்லாத எனக்கு காபி வாசமென்றால் அது ஆறுமுகச் சித்தப்பாதான். நரசுஸ் காபிக்கடையின் மேனேஜராக நீண்ட நாட்கள் வேலை பார்த்த ஆறுமுகம் சித்தப்பாவை நாங்கள் அழைப்பதே ‘நரசுஸ் சித்தப்பா’ என்றுதான். அந்த காலத்தில் நெல்லையில் புகழ் பெற்ற நாடக நடிகர். கலாட்டா கல்யாணம் படத்து சிவாஜி சாயலில் இருப்பார். பெரும்பாலும் வேட்டி சட்டைதான் உடையென்றாலும் பேண்ட் ஷர்ட்டும் அணிவதுண்டு. பெயருக்கேற்ப சித்தப்பாவின் வேட்டி சட்டையெங்கும் காபி மணக்கும். அதுவும் நரசுஸ் காபி. ‘சித்தப்பாவை பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு ஒரு தம்ளர்ல சூடா வெந்நி குடிச்சாலும் காபி குடிச்சாப்புல இருக்கும்லா’. நைஸாகச் சீண்டுவான் கணேசண்ணன். ‘ஆனா ஒன்கிட்ட வந்தாலே கிரகப்பிரவேசத்துக்குப் போன மாதிரிலாடே இருக்கு’ என்பார் நரசுஸ் சித்தப்பா. கணேசண்ணன் நன்றாகப் படித்து ஏதேதோ வேலை பார்த்து இப்போது வீடுவீடாக வெள்ளையடித்து வருகிறான். சுண்ணாம்பு, பெயிண்ட் என கலந்து கட்டி எப்போதும் ஒரு புது வீட்டுவாசம் அவன் மீது அடிக்கும்.

கோடை விடுமுறைக்கு ஆழ்வார்குறிச்சியில் அம்மையின் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் நெல் அவித்துக் கொண்டிருப்பார்கள். வெயிலோடு இந்த புழுங்கல் வாடையும் சேர்ந்து கொண்டு ஒருவித கதகதப்பான மணம் வீசும். இப்போது அங்கு நெல்லெல்லாம் அவிப்பதில்லை. ஆனால் அந்த வாசம் மட்டும் அந்த வீட்டிலேயே தங்கிவிட்டதாகத்தான் தெரிகிறது. கல்யாண வீடுகளின் ஆக்குப்புரைகளில் வீசும் சோற்று வாசமும், குழம்புக் கொதியின் வாசமும் எனக்கு ஏனோ நெல் அவிக்கும் வாசத்தோடு சேர்ந்து ஆழ்வார்குறிச்சியின் ஞாபகத்தை ஏற்படுத்தும்.

நண்பன் ராமசுப்ரமணியனின் வீட்டுக்கு எப்போது சென்றாலும் சாம்பிராணி வாசமடிக்கும். அவனது ஆச்சிக்கு சாம்பிராணி வாசமில்லையென்றால் வீட்டில் இருக்கவே பிடிக்காது என்பார்கள். அவ்வளவு பெரிய வீட்டில் ஏதோ ஒரு மூலையில் கொளுத்தி வைக்கப்பட்டிருக்கும் சாம்பிராணியின் புகை வீடு முழுக்க தவழ்ந்து வரும். இப்போது அந்த வீட்டை விற்றுவிட்டார்கள். வீட்டின் முகத்தைத் திருத்தி உள்ளேயும் ஏதேதோ வாஸ்து மாற்றங்கள் செய்து பழமையை இழந்து அந்த வீடு அதே இடத்தில் வேறொரு வீடாய் நின்றுகொண்டிருக்கிறது. உள்ளே சாம்பிராணி வாசம் அடிக்கிறதா என்று போய் பார்க்கவில்லை.

திருநெல்வேலியில் அப்போதெல்லாம் கையிலுள்ள டேப்பைத் தட்டி பாடியபடியே ஒரு சாய்பு வருவார். நீண்ட தாடியுடன் அநேகமாக பச்சை நிற நீள அங்கியும், கூம்புவடிவக் குல்லாவும் அணிந்து கொண்டு வீடு வீடாக வந்து வாசலில் நின்று பாடுவார். காசு கொடுத்தவுடன் தன் தோள்ப்பையிலிருக்கும் விதவிதமான குச்சிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து சிறுவர்களுக்குக் கண்மை வரைந்து விட்டு செல்வார். நெருக்கமாக அவரிடம் கண்மை வரைவதற்கு கண்ணைக் காட்டிக் கொண்டு நிற்கும் போது ஒரு வாசமடிக்கும். அப்போது அது என்ன வாசமென்று தெரியவில்லை. ‘கண்மைசாய்பு’ வாசம் என்றுதான் அதற்கு பெயர் வைத்திருந்தோம். பின்னர் வெகுகாலத்துக்குப் பின் சர்வோதய சங்கத்தில் ஜவ்வாது வாங்கியபோதுதான் ‘கண்மைசாய்பு’ வாசத்தின் உண்மையான பெயர் தெரிய வந்தது.

குட்டிக்குரா பவுடரை இப்போது நான் எங்குமே பார்க்கவில்லை. சின்ன வயதில் அந்தப் பவுடரின் வாசத்துடனேயேதான் வளர்ந்தேன். ஸ்டேட் பேங்கில் வேலை பார்க்கும் எனது பெரியண்ணன் குட்டிக்குரா பவுடர்தான் போடுவான். எல்லோரையும் போல முகத்துக்கு மட்டுமல்ல. முகம், கழுத்து, கை, கால் என குட்டிகுராவில் குளித்து எழுவான். அவன் பேங்க் முடிந்து தெரு முக்கு திரும்பும் போதே ‘பெரியண்ணன் வாரான்’ என்று சொல்லிக் கொள்வோம். வயதாக ஆக அவனது முடி முழுதும் கொட்டிப் போக பிறகு குட்டிக்குரா அவனது தலையிலும் இடம் பிடித்து விட்டது. அண்ணனின் புண்ணியத்தில் இத்தனை ஆண்டுகளில் இப்போது நினைத்தாலும் குட்டிக்குரா பவுடரின் வாசத்தை என்னால் உணர முடிகிறது.

ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று என் வீட்டுக்கு வந்த உதவி இயக்குனர் தியாகு ‘ஸார், கீழே யார் வீட்டிலயோ இன்னைக்கு மீன் கொழம்பு’ என்றான். குஞ்சுவும் இப்படித்தான். யார் வீட்டில் உப்புமா கிண்டினாலும் தெருவில் நடந்து போகும் போதே சொல்லிவிடுவான். இதைவிட கொடுமை, எங்காவது கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தாலே அவன் மூக்கு கண்டுபிடித்துவிடும். அந்த விதத்தில் அவன் ஒரு உசத்தியான நாய். தாமிரபரணியில் குளிக்கும் போது யார் யார் என்னென்ன சோப் போடுகிறார்கள் என்பதை பார்க்காமலேயே சொல்லும் திறன் அவன் மூக்குக்கு உண்டு. மீனாட்சி ஒரு படி மேல். ‘சித்தப்பா, அந்த அக்கா தலைக்கு வேப்பெண்ணெ தேச்சிருக்கா’ என்பான். தாமிரபரணியை நினைவு கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும், லை·பாய் சோப் வாசத்தோடுதான் தாமிரபரணி என் கண்முன் ஓடுகிறது. கூடவே கோபால் பல்பொடி வாசமும். மேலுக்கும், வேட்டிக்கும் லை·பாய் சோப்பையே பயன்படுத்தும் மனிதர்களை நான் அதிகம் தாமிரபரணியில் பார்த்திருக்கிறேன்.

சமீபத்தில் ஒரு கல்யாண வீட்டில் கிறிஸ்டி டீச்சரைப் பார்த்ததாக குஞ்சு சொன்னான். முன்னை விட இப்போது டீச்சர் குண்டாகியிருப்பதாகவும், உடன் வளர்ந்த இரண்டு பையன்கள் இருந்தனர் என்றும் சொன்னான். தன்னை அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லையென்பதால் தான் போய் அவர்களிடம் பேசவில்லை என்றான். ‘நீ எப்பவும் சொல்லுவியே, ஆஸ்பத்திரி வாட. அது அவங்ககிட்டெ இல்லயே’ என்ற குஞ்சுவிடம், ‘அப்படின்னா அது கிறிஸ்டி டீச்சர் இல்ல’ என்றேன்.

[email protected]

வலி

இரண்டு தினங்களுக்கு முன் காலை எட்டு மணியளவில் எழுத்தாளர் வ.ஸ்ரீனிவாசன் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார். சாதாரணமாக எப்போதும் பேசும் தொனியில் ‘சொல்லுங்க ஸார்’ என்றேன். ஆனால் எதிர்முனைக்குரல் பதற்றமாக இருந்தது.

‘சுகா, இங்கெ பாரதிமணி ஸாரை பாக்க வந்தேன். ஸார் கால்வலியால துடிச்சிக்கிட்டு இருக்கார். அவரால உக்கார, நிக்க, படுக்கன்னு எதுவுமே செய்ய முடியலெ. ரொம்ப சிரமப்படுறார்’.

‘ஒடனெ வரென் ஸார்’.

ஃபோனை வைத்த பதினைந்தாவது நிமிடத்தில் நானும், நண்பர் மனோவும் பாரதி மணி ஸார் வீட்டுக்குச் சென்றோம். (நான், வ.ஸ்ரீ, மனோ, பாரதிமணி அனைவரும் ‘எழுத்தும், எண்ணமும்’ குழுமத்தில் தொடர்ந்து எழுதி வருபவர்கள்) அதற்குள் வ.ஸ்ரீ ஸார் மாத்திரை வாங்கிக் கொடுத்திருந்தார். எங்களைப் பார்த்ததும் பாட்டையாவுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. இருந்தாலும் ‘என்ன இது. ஒங்க எல்லாரையும் சங்கடப்படுத்துறேனே’ என்றார். ஆஸ்பத்திரிக்கு அழைத்தோம். ‘பொறுத்துக்கக் கூடிய வலிதான். இப்போ அவசியமில்லை’ என்றார். சுமார் ஒருமணிநேரம் அவருடன் இருந்தோம். உயிர்மை வெளியிட்டிருக்கும் பாரதிமணி அவர்கள் எழுதிய ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகம் சுடச்சுட வந்திருந்தது. அதில் அவரைப் பற்றி அடியேன், வ.ஸ்ரீ, மனோ மூவரும் எழுதியிருந்தோம். எழுதிய பொய்க்கு தண்டனையாய் ஆளுக்கொரு புத்தகம் கொடுத்தார். வணங்கி வாங்கிக் கொண்டோம். கலை, இலக்கியம், இசை என பல்வேறு திசைகளில் எங்கள் உரையாடல் பயணித்தது. பேச்சு சுவாரஸ்யத்தின் நடுவே பாட்டையா கால் மடக்கி உட்கார்ந்திருந்ததை கவனித்தோம். ‘அட, இப்பொ என்னால உக்கார முடியுதே’ என்றார். பேச்சில் உற்சாகம் மேலும் கூடியது. அன்றைக்கு நாங்கள் பேசிச் சிரித்த அனைத்து சமாச்சாரங்களும் ‘கழுத்தும், கன்னமும்’ குழுமத்தில் வரவேண்டியவை.

‘ஒங்க காலுக்கு ஒண்ணும் இல்லெ ஸார். எதுனாலும் எங்களுக்கு ஃபோன் பண்ணுங்க. எந்த ராத்திரியும் எங்கள கூப்பிடறதுக்கு நீங்க தயங்க வேண்டாம்’ என்று சொல்லி விட்டு கிளம்பினோம். ‘ஆகா, உங்களுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்’. பாட்டையாவின் குரல் தழுதழுத்தது. மாலையில் மறுபடியும் தொலைபேசிமூலம் விசாரித்துக் கொண்டோம். ‘இப்போ கொஞ்சம் தேவலை’ என்றார். நேற்று காலை மறுபடியும் வ.ஸ்ரீ அவர்களிடமிருந்து ஃபோன். மணிஸார் இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டிருக்கிறார் என்று தகவல் சொன்னார். மீண்டும் நானும், மனோவும் கிளம்பிச் சென்றோம். அழைப்பு மணி அழுத்தி காத்து நின்றோம். கதவை வந்து திறப்பதில் கூட சிரமம் இருந்தது பாட்டையாவுக்கு. ‘என்னால முடியலப்பா. என் கால் என் வசமில்ல’ என்றார். சுவர் பிடித்தே தன் அறைக்குச் சென்றார். சற்று நேரத்தில் வ.ஸ்ரீ அவர்கள் தன் காரை எடுத்துக் கொண்டு வந்துவிட பாட்டையாவை எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என்று விவாதித்தோம். சில நண்பர்களிடம் ஃபோன் மூலம் யோசனை கேட்டுக் கொண்டிருந்தோம்.

‘நீங்கல்லாம் எனக்குன்னு கெளம்பி வரேளே. எத்தன பேருக்கு இந்த கொடுப்பினை கெடைக்கும்’. பாட்டையா நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார். ‘ஒரு மார் வலி, கீர்வலின்னா கௌரமாவாது இருக்கும். கால்வலில செத்துப் போறதுன்னா கேவலம் இல்லையா’. இப்படி இருந்தது அவரது பேச்சு. ‘சினிமாலதான் ஆஸ்பத்திரி ஸீனெல்லாம் பாத்திருக்கேன். நானா ஆஸ்பத்திரில இத்தனை வருஷத்துல ஒரு நாளும் அட்மிட் ஆனதேயில்ல’ என்றார். ‘இப்பவுமெ ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு நான் சம்மதிக்கறதுக்கு காரணம் அடுத்த வாரம் எனக்கு ஷூட்டிங் இருக்கு. நம்மள நம்பி படம் எடுக்கறான். அவன் செரமப்படக்கூடாது பாரு’ என்றார். ரஜினிகாந்துக்கு அப்புறம் இவருக்கு சினிமா மீது இருக்கும் தொழில் பக்தியை நினைத்து கண்ணீர் விட்டேன். ‘அளாதெ சுகா, எனக்கு ஒண்ணும் ஆகாது’ என்றார் பாட்டையா.

அதுவரை பரணி ஆஸ்பத்திரியா, விஜயாவா என்பது குறித்து எங்களால் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். ‘ஏம்பா, ஆபரேஷன் தியேட்டருக்குள்ளெல்லாம் சினிமாவுல வர்ற மாதிரி எல்லாரும் முகமூடி போட்டுக்கிட்டு பயமுறுத்துவாளா என்ன’ என்றார். ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல ஸார். ஒரு அரை மணிநேரம் டென்ஷனுக்கு பெறகு டாக்டர் வெளியில வந்து பெண் குளந்த பொறந்துருக்குன்னு சொல்வார்’ என்றார் வ.ஸ்ரீ. ‘அத மனோக்கிட்டே வந்து சொல்லி கைகுடுத்து கங்கிராஜுலேஷன்ஸ்ன்னு சொல்வாரில்லையா ஸார்’ என்றேன் நான். சிரித்துக் கொண்டே மனோ கிளம்பி எங்களுக்கு முன்னால் விஜயா ஹெல்த் சென்டர் சென்றார்.

சிறிது நேரத்தில் மனோ டாக்டரிடம் பெயரை பதிவு செய்து விட்டு ஃபோன் பண்ணவும் நானும், வ.ஸ்ரீ அவர்களும் பாட்டையாவை மெல்ல மாடிப்படியிலிருந்து இறக்கிக் கூட்டி வந்து வ.ஸ்ரீ அவர்களின் புதிய சான்ட்ரோ காரில் ஏற்றினோம். வடபழனி பஸ்ஸ்டாண்ட் அருகில் வந்தவுடன் என்னுடைய வழக்கமான திசையறிவில் விஜயா கார்டனுக்குள் காரை திருப்பச் சொன்னேன். திசை விஷயத்தில் எனக்கு தாத்தாவான வ.ஸ்ரீயும் உடனே காரை விஜயா கார்டனுக்குள் திருப்ப எத்தனித்தார். எதற்கும் கேட்டு விடுவோமே என்று மனோவுக்கு ·போன் பண்ணினேன். ‘சரியா போச்சு. ஏன் சுகா, அவர என்ன ரெக்கார்டிங் தியேட்டருக்கா கூட்டிக்கிட்டு போகப் போறோம்? அடுத்த லெஃப்டுல திரும்புங்கய்யா’ என்றார் கடுப்புடன்.

விஜயா ஹெல்த் சென்டரை முதன்முறையாக சுற்றிப் பார்த்தபடியே உள்ளே சென்று பாட்டையாவை உட்கார வைத்தோம். வ.ஸ்ரீ அவர்கள் பாட்டையாவுடன் டாக்டரின் அறைக்குள் செல்ல, நானும், மனோவும் வராந்தாவில் நகம் கடித்துக் காத்திருந்தோம். ஸ்கேன் எடுக்கச் சொல்லியிருப்பதாக ஒரு சீட்டுடன் இருவரும் வெளியே வந்தனர். எதிரே இருக்கும் ஸ்கேன் சென்டருக்குச் சென்றால் அங்கு இரண்டு மணிநேரம் காத்திருக்கச் சொன்னார்கள். மணி மதியம் ஒன்றைத் தொட இருந்தது. கேன்டீனுக்குச் சென்று வரலாம் என்று கிளம்பினோம். ஒரே காம்பவுண்ட்டுதான் என்றாலும் கேன்டீனுக்கு கொஞ்சம் நடக்க வேண்டியிருந்தது. பாட்டையாவால் முடியவில்லை. ஒரு ஒரமாக உட்கார்ந்து பைப்பைப் பற்ற வைத்து இழுக்க ஆரம்பித்து விட்டார். ‘ஸார், ஹாஸ்பிட்டல் ஸார்’ பதறினேன். ‘ஸோ வாட்?’ என்றார் எகத்தாளமாய். ஒருமாதிரியாக கிளப்பிக் கூட்டிச் சென்றோம். போகும் வழியில் ஒரு வீல் சேர் இருந்தது. இதில் வைத்து தள்ளிச் சென்று விட்டால் என்ன? என்றார் மனோ. அங்கிருக்கும் செக்யூரிடி அதற்கு அனுமதிக்க மறுத்தார். பாட்டையாவோ ‘மனோகர் வேற ஆச காட்டிட்டான். நான் இதுவரைக்கும் இந்த வண்டில போனதே இல்ல. வந்தா நான் இதுலதான் வருவேன்’ என்று அடம் பிடிக்க ஆரம்பித்தார். இதென்னடா வம்பாப் போச்சு என்று வ.ஸ்ரீ அவர்கள் உள்ளே சென்று அனுமதி வாங்கி வந்தார்.

மூணாங்கிளாஸ் பையன் ரங்கராட்டினம் ஏறுவது போன்ற முகபாவத்துடன் சந்தோஷம் பொங்க பாட்டையா வீல் சேரில் அமர, மனோ அதைத் தள்ள ஆரம்பித்தார். நானும், வ.ஸ்ரீ அவர்களும் ‘பொன்னை விரும்பும் பூமியிலே’ பாடியபடியே பின் தொடர்ந்தோம். ‘சுகா, நானும் எத்தனையோ வண்டில போயிருக்கென். இந்த வண்டி ரொம்ப நல்லாயிருக்கு. எவ்வளவுன்னு கேட்டு ஒண்ணு வாங்கி போடு. ஆனா டிரைவர் மட்டும் மனோதான். சும்மா சொல்லக் கூடாது. நல்லாவே ஓட்டறான்’ என்றார் பாட்டையா. மனோ சிரித்தபடியே தள்ளிச் செல்ல கையில் சாப்பாட்டுக் கூடையுடன் ஒரு பெண்மணி எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தபடியே தெலுங்கில் ஏதோ முணுமுணுத்தபடி கடந்து சென்றார்.

கேன்டீனில் அதிகக் கூட்டமில்லை என்றாலும் வாகாக ஒரு இடம் பார்த்து அங்கு அமர்ந்து கொண்டார் பாட்டையா. காலையில் காபி மட்டும் குடித்திருந்ததால் தனக்கு ஒரு தயிர் சாதம் வேண்டும் என்றார். மனோ காலையிலேயே சாப்பிட்டுவிட்டதால் தனக்கு அவ்வளவாக பசியில்லை என்று சொல்லி ஒரு தயிர் சாதமும், குண்டாக ஒரு சமோசாவும் வாங்கிக் கொண்டிருந்தார். எனக்கும் தனக்கும் கூல்டிரிங்க்ஸ் வாங்க வ.ஸ்ரீ அவர்கள் சென்று விட, நான் மட்டும் பாட்டையாவுடன் அமர்ந்திருந்தேன். சுற்றும் முற்றும் பாட்டையா பார்த்தார். நான் பயந்த மாதிரியே சட்டென்று பைப்பைப் பற்ற வைத்தார். அதற்குள் ஒருவன் ஓடி வந்து ‘ஸார், இங்கெல்லாம் சிகரெட் குடிக்கக் கூடாது’ என்றான். ‘இது சிகரெட் இல்லெப்பா’ என்று வம்பு பண்ணினார் பாட்டையா. ‘ஐயா, கொஞ்ச நேரந்தான் அந்த எளவெ குடிக்காம இருங்களென். ஒங்களுக்கு கால் வலின்னு காமிக்க வந்துருக்கோம். அத மறந்துராதீங்க’ என்றேன்.

மனோ இரண்டு பிளேட்டுடன் வந்து அமர்ந்தார். வ.ஸ்ரீ இரண்டு அமுல் ரோஸ் மில்க் பாட்டில்களுடன் வந்தார். ஒன்றை வாங்கிக் கொண்டேன். ‘ஸார், நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து மொதமுறையா குடிக்குறோம் இல்லையா?’ என்றேன் வ.ஸ்ரீயிடம். ‘ஆமா சுகா. சியர்ஸ்’ என்று பாட்டிலை பாட்டிலால் இடித்து கண் சிமிட்டினார் வ.ஸ்ரீ. மேஜையில் இருக்கும் தன் மெடிக்கல் ரிப்போர்ட் ஃபைலின் மேல் ஒரு கையை வைத்துக் கொண்டு தயிர் சாதம் சாப்பிட ஆரம்பித்த பாட்டையா எங்களைப் பார்த்து வாய் விட்டு சிரித்தார். அவருக்கு வலி சரியாகிவிடும் என்று தோன்றியது.

[email protected]