கயத்தாறு

கயத்தாற்றில் கீரைப் பாத்திகள் நிறைய உண்டு. அங்கு விளையும் கீரை, விற்பனைக்காக திருநெல்வேலிக்கு வந்து மூடை, மூடையாக குவியும். கயத்தாற்றிலிருந்து லாரியில் ஏற்றப்பட்ட கீரை மூடைகள் திருநெல்வேலி ஜங்ஷனில் கொண்டு வந்து இறக்கிப் போடப்படும். பின் அவற்றை தலைச்சுமையாகத் தூக்கிக் கொண்டு கீரைக்காரர்கள் என்று சொல்லப்படும் கீரை வியாபாரிகள் திருநெல்வேலி டவுணுக்கு வருவார்கள். முதல் நாள் இரவு வரும் மூடைகளிலுள்ள கீரை, மறுநாள் அதிகாலை தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு திருநெல்வேலித் தெருக்களில் விற்பனை செய்யப்படும்.

கயத்தாற்றுக் கீரைக்காரர்கள் சேசுமணி, ராஜேந்திரன், சேசுராஜ் போன்றவர்கள் டவுணில் ஆளாளுக்கு தெருக்களைப் பிரித்துக் கொண்டு கீரை விற்று வந்தார்கள். இவர்களில் ஒருவர் விற்கும் பகுதிக்கு மற்றவர் செல்வதில்லை. அப்படி ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் அவர்களுக்கிடையே இருந்தது. இம்மூவரும் இரவு கீரை மூடையுடன் தங்குமிடம், அம்மன் சன்னதியிலுள்ள எங்கள் வீடு. முப்பது பேர் படுக்கக்கூடிய விஸ்தாரத்துடன் உள்ள வாசல்வெளியில் இவர்கள் படுப்பதற்கு வசதியாகக் குளிர்ச்சிக்காக தரை முழுதும் தண்ணீர் ஊற்றி வைத்திருப்போம். அவர்கள் வந்து படுக்கும் நேரம் தரை நன்கு காய்ந்திருக்கும்.

இம்மூவரில் சேசுமணி வயதில் பெரியவர். உடம்பெல்லாம் முடியாக, குட்டையாக இருப்பார். கருத்த முகத்தில் மெலிதான பென்ஸில் மீசை உற்றுப் பார்த்தால்தான் தெரியும். ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராஜேந்திரன் சேசுமணிக்கு இளையவர். ஆரம்பகால ரஜினிகாந்தின் ஹேர்ஸ்டைலுடைய ராஜேந்திரன், அவ்வப்போது தலையை சிலுப்பி தன் தலைமுடியை சரி செய்து கொள்வார். அவருக்கும் இளையவனான சேசுராஜ் எங்கள் தோழன். கழுத்தில் சிலுவை டாலரும், கையில் மேரிமாதா உருவம் பொறித்த பிளாஸ்டிக் மோதிரமும் அணிந்திருப்பான். ‘தும்’ என்று கீரை மூடைகளைக் கீழே போடும் சத்தம், இந்தக் கீரைக்காரர்களின் வருகையை எங்களுக்கு தெரிவிக்கும்.

ராஜேந்திரனும், சேசுராஜும் முன்னதாகவே வந்து விடுவார்கள். அகல கேரியர் வைத்த லோடு சைக்கிளில் கீரை மூடையை கட்டி ஓட்டி வருவர். சேசுமணி தாமதமாகவே வருவார். தலைச்சுமையாக மூடையைச் சுமந்து கொண்டு ஜங்க்ஷனிலிருந்து டவுண் வரை வியர்வையில் குளித்தபடி வந்து சேர்வார்.

‘என்னடே, இன்னைக்கு நேரமாயிட்டு?’ என்று கேட்கும் ஆச்சிக்கு, ‘ராலிக்காரன் கொஞ்சம் சொணக்கிட்டான்’ என்று பதில் சொல்லிக் கொண்டே துண்டால் உடம்பு, முகமெல்லாம் துடைத்தபடி தரையில் உட்காருவார் சேசுமணி. (அவர் ராலி என்று சொல்வது லாரியை). லாரிக்காரன் மீது சேசுமணி வீண்பழி போடுகிறார் என்பது ஆச்சிக்குத் தெரியும். கூடவே சேசுமணிக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்ற விஷயமும் தெரியும். ஆனால் கேட்க மாட்டாள். தன் பக்கத்திலேயே வைத்திருக்கும் செம்புத் தண்ணீரை எடுத்து கொடுப்பாள்.
கொஞ்ச நேரம் ஆச்சியிடம் ஊர் மற்றும் குடும்பக்கதைகள் பேசிக்கொண்டிருப்பார் சேசுமணி. ராஜேந்திரனும், சேசுராஜும் என்னையும், என் தம்பியையும் அவர்களுடன் சேர்த்துக் கொண்டு கபடியும், கண்ணைக்கட்டியும் விளையாடுவார்கள். ஆடிக் களைத்த பின் சாப்பிட உட்காருவார்கள். அவர்கள் கொண்டு வந்த சோற்றுக்கு எங்கள் வீட்டு அடுக்களையிலிருந்து அவர்கள் கேட்காமலேயே தொடுகறியும், குழம்பும் வரும். துணியில் சுற்றி வைத்திருக்கும் சோற்றுப் பொட்டலத்தை அவர்கள் பிரிக்கும் போது துணி கிழிவது போன்ற சத்தம் கேட்கும். ஆனால் கிழியாது. அருகில் கிடக்கும் கீரை மூடைகளிலிருந்து மண்ணும், இலையும் கலந்த ஒரு வாசனை பரவ, பல இரவுகளில் எங்கள் இரவுச் சாப்பாடு அவர்களுடனே கழிந்திருக்கிறது.
ஞாயிற்றுக் கிழமை போக கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசையன்று கீரைக்காரர்கள் வருவதில்லை. நாள், கிழமைகளை அவற்றை கடைப்பிடிக்கும் திருநெல்வேலிக்காரர்களை விட கீரைக்காரர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள்.

‘எம்மா, வார பொதன்கெளமதானெ அம்மாசி? கொஞ்சம் கேலண்டர் பாத்து சொல்லுங்களேன்.’

காலண்டரில் மிகச்சரியாக புதன் கிழமையன்று அமாவாசை என்று வட்டக்கறுப்புக்குறி போடப்பட்டிருக்கும். ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்குப் போகவேண்டுமென்பதால் அன்றைக்கு அவர்கள் விற்பனைக்கு வருவதில்லை.

ஆச்சி காலத்துக்குப் பிறகும் கீரைக்காரர்கள் எங்கள் வீட்டில் கொண்டு வந்து மூட்டைகளைப் போட்டுத் தங்கிக் கொண்டுதானிருந்தார்கள். தனது வருமானத்தில் சொற்பத் தொகையை சேசுமணி அவ்வப்போது அம்மாவிடம் கொடுத்து வருவார். வருடத்துக்கு ஒருமுறை வரும் மாதா கோயில் திருவிழாவையொட்டி ஜவுளி எடுப்பதற்காகவே இந்த சேமிப்பு. கயத்தாற்றிலிருந்து அவரது மனைவியும், மகனும் வருவார்கள். ஆரெம்கேவியில் போய் துணி எடுத்துவிட்டு அம்மாவிடம் கொண்டு வந்து காட்டிவிட்டே பஸ் ஏறுவார்கள். கரும்பச்சை, ரத்தச்சிவப்பு போன்ற வண்ணங்களிலேயே உடைகளைத் தேர்வு செய்வார்கள்.

‘நீங்களே சொல்லுங்கம்மா. போன திருளாக்குத்தானெ மாம்பளக்கலர் சட்ட எடுத்து குடுத்தோம். இந்த வருசமும் அதையே கேக்கான். இந்த திக் ரோஸ்கலர் அவனுக்கு வேண்டாமாம். இப்பல்லாம் பிள்ளைய இந்த மாதிரிதான் போடுது. மூதிக்கு புரிய மாட்டெங்கு’.
மூக்கின் பாதியை மறைத்து மூக்குத்தியணிந்திருக்கும் சேசுமணியின் மனைவி சொல்வார். சேசுமணிக்கு டிரவுசர், சட்டையணிந்தால் எப்படி இருப்பாரோ, அதே சாயலில் உள்ள பெரிய காதுகளையுடைய அவரது மகன் கலங்கிய கண்களுடன் அம்மா முன் உட்கார்ந்திருப்பான்.

‘பிஸ்கட் திங்கியாலெ?

குனிந்த தலை நிமிராமல் ‘வேண்டாம்’ என்ற தலையசைப்பு.

‘பாக்கெட் முளுசும் ஒனக்குத்தான்’.

அம்மாவிடமிருந்து பிஸ்கட் பாக்கெட்டை வாங்கும் போதே அவன் கண்ணீர் மறைந்திருக்கும். பிஸ்கட் தின்னும் போது சிரிப்பை அடக்க முயல்வான். மாதா கோயில் திருவிழாவின் போது யார் நடித்த படம் போடுவது என்பது குறித்த சண்டை ராஜேந்திரனுக்கும், சேசுராஜுக்கும் ஆரம்பமாகிவிடும். ரஜினி ரசிகரான ராஜேந்திரனுடன், சிவாஜி ரசிகனான சேசுராஜ் மல்லுக்கு நிற்பான்.

‘வருசா வருசம் எங்கள் தங்க ராஜாவே பாத்திக்கிட்டிருக்க முடியுமா? இந்த வருசம் யார் என்ன சொன்னாலும் சரி. நான் போட்ட சவால்தான்.’

ராஜேந்திரன் அடித்துச் சொல்வார். வயதில் சிறியவனான சேசுராஜால் ஒன்றும் செய்ய முடியாது.

‘எனக்கென்ன. ஜிவாஜி படம் பாக்குறதுக்கு எங்களுக்கு கொட்டாயியா இல்ல. ராயல் டாக்கீஸ்ல இப்பொ கூட சங்கிலி போட்டிருக்கான். போய் பாத்துக்கிடுவென். எக்கேடும் கெட்டு போங்க.’

சிவாஜியை ஜிவாஜி என்றே உச்சரிக்கும் சேசுராஜ் சும்மா உட்கார்ந்திருக்கும் போது அவரது படப்பாடல்களைப் பாடி மகிழ்வான். மகிழ்ச்சி அவனுக்கு மட்டுமே. காரணம், அவன் பாடும் வரிகள்.
உதாரணம்
‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன்
வாளவைப்பான் என்று பறந்து சென்றாள்.’

சேசுமணிக்கு பெரிதாக சினிமாவில் ஆர்வமில்லை. அவரது ஆர்வமெல்லாம் கோயில் கொடைகளில்தான். அதுவும் இரவு விடியவிடிய நடைபெறும் கும்பக்குட (கரகாட்டம்) ஆட்டத்தில் அவருக்கு தீராத மோகம். திருநெல்வேலி டவுணில் எந்தப்பகுதியில் கோயில் கொடையென்றாலும் அன்று இரவு அங்கு சேசுமணியைப் பார்க்கலாம். அது ராஜேந்திரனோ, சேசுராஜோ கீரை விற்கும் பகுதியாக இருந்தாலும் கும்பக்குடத்துக்காக சேசுமணி ஒப்பந்தத்தை மீறுவார். ஒருநாள் தேரடிப்பக்கம் ஒரு கும்பக்குட ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. பலமாக விசிலடித்தபடி கும்பக்குடக்காரியுடன் மேல்துண்டை இறுக்கமாகத் தலையில் தலைப்பாகையாகக் கட்டியிருந்த ஒரு மனிதர் ஆடிக் கொண்டிருந்ததை தூரத்திலிருந்தே நானும், கணேசண்ணனும் பார்த்துவிட்டோம். கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் சென்று நின்று கொண்டோம்.. ஆட்டத்தின் நடுவே தற்செயலாக நாங்கள் நிற்பதை கவனித்துவிட்ட சேசுமணி, சிக்கென்று தன் இரண்டு கண்களையும் மூடிக் கொண்டார். ஆட்டம் மட்டும் நிற்கவேயில்லை.

அம்மா இருக்கும் வரை கீரைக்காரர்களுக்கும், எங்களுக்குமான உறவு தொடர்ந்து வந்தது. பிறகு மெல்ல குறைந்து பின் சுத்தமாக தொடர்பே இல்லாமல் போய்விட்டது. மதுரையிலிருந்து காரில் திருநெல்வேலி செல்லும் போது வலது பக்கத்தில் கம்பீரமாக நிற்கும் நடிகர் திலகம் சாயலிலுள்ள கட்டபொம்மன் சிலையைப் பார்க்கும் போது கயத்தாறு வந்து விட்டது தெரியவரும். புதிதாக திருநெல்வேலிக்கு வருபவர்கள் காரை நிறுத்தி கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் அவரது சிலையை அண்ணாந்து பார்த்தபடி சிறிது நேரம் அங்கு செலவிடுவார்கள். ஒருசிலர் புகைப்படம் எடுத்துக் கொள்வதுமுண்டு. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் மூலம் தாங்கள் அறிந்து வைத்திருக்கிற கட்டபொம்மனைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிப் போவார்கள். அவர்களுக்கெல்லாம் கயத்தாறென்றால் நிச்சயமாகக் கட்டபொம்மன்தான் நினைவுக்கு வருவார். எங்களுக்கு கீரைக்காரர்கள்.

விஞ்சை விலாஸின் சுவை

நண்பர் செழியன் ஒருமுறை கேட்டார். ‘திருநெல்வேலியில ஒரு சின்னக் கடையில இட்லி சாப்பிட்டேன். அப்படி ஒரு ருசி. முறுக்கெல்லாம் கொடுத்தாங்க.அது என்ன கடை?’என்று. அந்தக் கடையின் பெயர் விஞ்சை விலாஸ். திருநெல்வேலி டவுணுக்குள் நுழையும் போது ஒரு பழைய ஆர்ச் பச்சைக் கலரில் வளைந்து நிற்கும். அதற்கு கொஞ்சம் அருகில் இடதுகைப்பக்கம் இருக்கிறது விஞ்சை விலாஸ். அதிகபட்சம் நான்கைந்து பெஞ்சுக்களே உண்டு. அதன் உரிமையாளரான கைலாசம் பிள்ளை தாத்தா உடம்பு, நெற்றி எல்லாம் நீறுமணக்க கல்லாவில் அமர்ந்திருப்பார். கழுத்தில் ஸ்படிக, ருத்திராட்ச மாலைகள். சின்ன பத்மினி ஊதுபத்தியைப் பொறுத்தி வைத்திருப்பார். அந்தப் பத்திப் பாக்கெட்டிலேயே ஒரு சின்ன துளை உண்டு. அதில் பத்தியை பொறுத்தி நிறுத்தியிருப்பார். அந்த வாசனை எப்போதுமே விஞ்சை விலாஸில் நிறைந்து நிற்கும். இன்றைக்கும் கைலாசம்பிள்ளைத் தாத்தாவை நினைக்கும் போதெல்லாம் அந்தப் பத்தியின் வாசனையையும் நுகர முடிகிறது. தாத்தாவுக்கு வயிறு வரை நீண்டு படர்ந்திருக்கும் வெண்ணிற தாடி. சட்டை அணிந்திருக்க மாட்டார். செக்கச் செவேலென இருப்பார். சின்ன வயதில் மதுரை பஸ்ஸ்டாண்டில் தமிழகம் எண்ணெய்ப் பலகாரக் கடை போர்டைப் பார்க்கும் போதெல்லாம் கைலாசம்பிள்ளைத் தாத்தாவுக்கு மதுரையிலும் ஒரு கடை இருப்பதாகவே நினைத்துக் கொள்வேன். அந்த போர்டில் உள்ளவர் ஈ.வெ.ரா. பெரியார் என்னும் விவரம் ரொம்ப நாட்கள் கழித்தே எனக்கு தெரிய வந்தது.

விஞ்சை விலாஸில் மிருதுவான இட்லியும், வீட்டு தோசை போன்ற குட்டி தோசையும், எள் மற்றும் சாதா மிளகாய்ப் பொடியும் கிடைக்கும். இது போக தேங்காய்ச் சட்னியும், சாம்பாரும் உண்டு. கைமுறுக்கு, அதிரசம், நெய்விளங்காய் போன்றவை அங்கே ரொம்ப விசேஷம். வேறு எங்குமே சாப்பிட முடியாத ருசியுடன் சின்ன ஆம வடையும் அங்கு கிடைக்கும். சில குறிப்பிட்ட நாட்களில் அடை போடுவார்கள். ஒரு நாள் நானும் குஞ்சுவும் சினிமாவுக்குக் கிளம்பிப் போய் கொண்டிருந்தோம். வீட்டைவிட்டு கொஞ்ச தூரம் வந்தவுடன் எனக்கு பசியெடுப்பதாகச் சொன்னேன். தான் இப்போதுதான் வீட்டில் சாப்பிட்டு வந்திருப்பதாகவும், கொஞ்ச நேரம் பொறுத்துக் கொண்டால் சினிமா முடிந்து இருவருமே ஹோட்டலுக்கு போய் நன்றாக சாப்பிடலாம் என்றான் குஞ்சு. எனக்கோ பசி பொறுக்க முடியவில்லை. நடந்து வந்த வழியில் விஞ்சை விலாஸ¤ம் வந்துவிட்டது. கால்கள் அதற்கு மேல் நகர மறுத்தன. ‘சொன்னா கேக்க மாட்டியே, கொஞ்ச நேரம் கழிச்சுன்னா நானும் நல்லா சாப்பிடுவேம்லா’ என்று சலித்தபடியே ,’சரி வந்துத் தொலை’ என்று விஞ்சைக்குள் நுழைந்தான் குஞ்சு. அப்போதுதான் இட்லி ஊற்றித் தட்டியிருந்தார்கள். எல்லாமே சுடச்சுட பரிமாறப்பட ஐந்து இட்லிகளில் எனக்கு வயிறு நிறைந்து விட்டது. அப்போதுதான் சாப்பிட்டு வந்திருக்கும் காரணத்தால் நான்கு இட்லிகளும், இரண்டே இரண்டு தோசைகளும், ஒரு கல்கண்டு பாலும் குடித்து முடித்து, வாயைத் துடைத்துக் கொண்டே, ‘சீக்கிரம் வா படம் போட்டிருவான்’ என்றபடியே எழுந்தான் குஞ்சு. கைலாசம் பிள்ளைத் தாத்தாவிடம் பில் பணம் கொடுக்கும் போது, ‘இன்னைக்கு அடை போடமாட்டேளோ தாத்தா?’ என்று கேட்டுக் கொண்டான்.

சென்னைக்கு வந்த பிறகு என்னைப் போன்ற சைவர்களுக்கு சரவண பவனை விட்டால் வேறு கதியில்லை. இப்போது வசந்த பவன். திருநெல்வேலியின் ஓர் ஓரத்தில் சின்னஞ்சிறிய கடையான விஞ்சை விலாஸின் சுவை நாக்கிலேயே தங்கிவிட்டது.அதை மறக்காமல் இருக்கும் வண்ணமே சரவணபவனும், வசந்தபவனும் பேருதவி புரிகின்றன. பெரும்புகழ் பெற்ற முருகன் இட்லிக் கடையுமே விதிவிலக்கில்லை. எல்லாவற்றிலும் ஆடம்பரமே. விலையிலும், சுவையிலும். ஆனால் சென்னையில் வசிக்கும் மக்கள் சரவணபவனை கொண்டாடுகிறார்கள். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூதானே சர்க்கரை.

‘சதிலீலாவதி’ படப்பிடிப்பின் போது தயாரிப்பு ஊழியர்கள் ஒரு மாலையில் ‘ஸாருக்கு திருநெல்வேலில டி·பன் வாங்க மறந்துடாதிங்க’ என்று பேசிக் கொண்டனர். ஸார் என்று அவர்கள் சொன்னது கமலஹாஸனை. திருநெல்வேலி என்று அவர்கள் எதை சொல்கிறார்கள் என்று குழம்பிப் போனேன். ஒருமணிநேரத்தில் திருநெல்வேலிக்கு போய் டி·பன் வாங்கிவிட முடியுமா என்ன? அப்போதுதான் என் கேள்விக்கு விடை கிடைத்தது. விடை அளித்தவர், தயாரிப்பு நிர்வாகி சுந்தர்ராஜன் மாமா. ‘ உனக்கு தெரியாதாடா . . நாளைக்கு காலையிலே உன்னை கூட்டிக்கிட்டு போறேன்’. சொன்னபடியே கூட்டிக் கொண்டு போனார். சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரே ஒரு தாழ்வான கட்டிடத்தில் ‘திருநெல்வேலி சைவாள் ஹோட்டல். உரிமையாளர் – இசக்கியம்மாள்’ என்று ஒரு அழுக்கு போர்டு தொங்கிக் கொண்டிருந்தது. அதில் எப்போதோ வைத்த சந்தனக் குங்குமப் பொட்டு காய்ந்திருந்தது. உள்ளே நுழைந்தவுடன் ஒரு திருநெல்வேலி வாசனை அடித்தது. இருட்டு லாலாக் கடை போன்றே ஒரு மங்கலான வெளிச்சம் கடைக்குள் இருந்தது. புகை படிந்த நான்கைந்து பெஞ்சுக்கள். கல்லாவில் உரிமையாளர் உட்கார்ந்திருந்தார். கருத்த, தடித்த உடல். பெரிய மூக்குக் கண்ணாடி. நெற்றியில் திருநீறு. ‘எல, என்ன வேணும் கேளு’ என்றார். இரண்டு சப்ளையர்களும் அவர் மகன்கள் என்பது புரிந்தது. மூத்தவன் அப்படியே அவர் அப்பாவைப் போல. இளைய மகன் கொஞ்சம் பலவீனமாக அப்பாவின் சாயலில்லாமல், ஆனால் கண்ணாடி மட்டும் அணிந்திருந்தார். சுந்தர்ராஜன் மாமா சொல்லியிருந்த எண்ணெய் தோசை வந்தது. தொட்டுக் கொள்ள இரண்டு விதமான மிளகாய்ப் பொடிகள் மற்றும் சாம்பார், தேங்காய்ச் சட்னி. வெங்காயச் சட்னி காரச் சட்னி என்னும் பெயரில் வந்தது. அப்படியே விஞ்சை விலாஸில் சாப்பிட்ட மாதிரியே இருந்தது.

திருநெல்வேலி சைவாள் ஹோட்டலின் வாடிக்கையாளனாக ஆகிவிட்ட பிறகு எனது முகம் அவர்களுக்கு பழக்கப் பட்டுவிட்டது. உரிமையாளர் கருப்பையா பிள்ளையும் என்னைப் பார்த்தால் ‘வாங்க . . எங்கே ஆளையே காணோம். ஊருக்கு போயிட்டேளோ’ என்று சிரித்தபடியே வரவேற்க ஆரம்பித்திருந்தார். திருநெல்வேலியை விட்டு வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட அவர், அவரது உறவினர்கள் ஒரு சிலரைப் பற்றி என்னிடம் சொல்லியிருந்தார். அவர்களை எனக்கும் தெரிந்திருந்தது. அவரைத் தவிர அவரது இரண்டு மகன்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆச்சியின் குரலை மட்டும் கேட்டிருக்கிறேன். அடுப்படியில் நிற்பது அவர்கள்தான். அங்கிருந்து பதில் சொல்வர்கள். ‘கல்லு காயுது. செத்த நேரம் ஆகும்’. மகன்கள் இருவரது வாயிலும் திருநெல்வேலி பாஷையின் சுவடே இல்லை. மிளகாய்ப் பொடியை சென்னைக் காரர்கள் மாதிரி இட்லிப் பொடி என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் சென்னைக்கு பழகியிருந்தார்கள்.

ஒரு நாள் இரவு நேரத்தில் சாப்பிடப் போனேன். கல்லாவில் கருப்பையா பிள்ளையின் பெரிய மகன் உட்கார்ந்திருந்தார். இளைய மகனிடம் கேட்டதற்கு அப்பா படுத்துட்டாரு என்றார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு சின்னக் குழந்தை வீட்டுக்குள்ளிருந்து வந்து என்னருகில் நின்று ஏதோ கேட்டது. என்ன கேட்கிறது என்று புரியவில்லை. சாப்பிடுறியா? என்றேன். அதற்குள் உள்ளிருந்து அதன் தாயார் வந்து , ‘மாமாவை தொந்தரவு பண்ணக் கூடாது. சாப்பிடுதாங்கல்லா’ என்றபடியே தூக்கிக் கொண்டு போனார்கள். கருப்பையா பிள்ளை தன் மகனுக்கு திருநெல்வேலியிலிருந்து பெண் எடுத்திருக்கிறார் என்பது அந்தப் பெண் பேசிய பாஷையிலேயே தெரிந்தது. அதன் பிறகு அதிகம் அங்கு போக முடியவில்லை. ஒரு நாள் அதிகாலை படப்பிடிப்புக்கு காரில் போய்க் கொண்டிருக்கும் போது திருநெல்வேலி சைவாள் ஹோட்டலின் வாசலில் பெஞ்சு ஒன்றை கழுவி அதில் கருப்பையா பிள்ளையின் புகைப்படம் ஒன்று மாலையணிவித்து வைக்கப் பட்டிருந்தது. போய் கேட்டிருக்கலாம்தான். அப்பாவுக்கு என்ன செய்தது என்று. அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்கான அவசரம். அதற்குப் பிறகு அந்தக் கடை அவ்வப்போது மூடியிருக்கும். திறந்திருக்கும். நான் போகவேயில்லை.

இளையராஜா அவர்களை பிரசாத் ஸ்டூடியோவில் போய் பார்த்துவிட்டு வாத்தியார் பாலு மகேந்திராவும், நானும் வெளியே வந்தோம். ‘பசிக்குதுடா. வா போய் ஏதாவது சாப்பிடலாம்’ என்றார் வாத்தியார். பிரசாத் ஸ்டூடியோவுக்கு நேரெதிரே உள்ள ‘அக்ஷயா’ ஹோட்டலுக்குள் நுழைந்தோம். அது கொஞ்சம் ஆடம்பரமான ஹோட்டல். வாத்தியாருக்காக வேறு வழியேயில்லாமல் மனசுக்கு பிடிக்காமலேயே போனேன். இளையராஜாவின் குழுவில் வாத்தியம் வாசிப்பவர்கள், மற்றும் ஸ்டூடியோவுக்கு வரும் மற்ற திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் என அந்த ஹோட்டல் எப்போழுதுமே பிஸியாக இருக்கும். வாத்தியாரும், நானும் போய் இடம் பிடித்து உட்கார்ந்தோம். ‘என்ன ஸார் சாப்பிடுறீங்க?’ கேட்ட சப்ளையரை பார்த்தேன். கருப்பையா பிள்ளையின் இளைய மகன்.