சுப்பையாவின் தம்பி

அப்பா கூடப் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். பெரியப்பாக்களுக்கு தலா நான்கு பிள்ளைகள். அத்தைகளுக்கு மும்மூன்று. நாங்கள் அண்ணன் தம்பிகள் இரண்டு பேர். ஏதாவது விசேஷம், காரியம் என்றால் அப்போதைக்கு சண்டையில்லாமல் குடும்பம் ஒன்று சேர்ந்திருந்தால் வீடு நிரம்பி வழியும். பெரியக்கா கல்யாணத்திலும், பின் ஆச்சி இறந்த போதும், கடைசியாக அம்மா இறந்த போதும்தான் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் ஒன்றாகப் பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்குமே கிட்டியது. பெரியவர்கள் அவர்களின் பரம்பரைச் சொத்தான ‘நான்’ என்கிற நினைப்பையும், வறட்டுப் பிடிவாதத்தையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஏதேதோ காரணங்களுக்காக ஆளாளுக்கு முகம் பார்க்காமல் வீஞ்சிக்கொண்டு உர்ரென்று நடமாட, பிள்ளைகள் நாங்கள் சந்தோஷமாகக் கூடி மகிழ்ந்திருந்ததை இப்போதெல்லாம் நினைத்துப்பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ளவேண்டியுள்ளது. ஆச்சியின் பிணத்தின் முன் தேவாரம், திருவாசகம் படிக்கப் பட்டது. எடுக்க நேரம் ஆகும் என்று தெரிந்தவுடன் சின்னப்பிள்ளைகள் நாங்கள் விளையாடப் போய்விட்டோம். நான் மட்டும் அவ்வப்போது விளையாட்டிலிருந்து விலகி ஆச்சி பக்கத்தில் போய் அவள் முகத்தைப் பார்த்து சிறிது நேரம் அழுதுவிட்டு பின்பு மறுபடியும் விளையாட்டில் சேர்ந்து கொள்வேன். ஆச்சியிடமே வளர்ந்தவன் இது கூட செய்யவில்லையென்றால் எப்படி?

இப்போதெல்லாம் ஒரு வீட்டில் நான்கைந்து குழந்தைகளைப் பார்ப்பதற்கான வாய்ப்பே இல்லை. எனக்கு மிகவும் நெருக்கமான நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் போன்றோருக்கு இரண்டு குழந்தைகள். எனக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு. இந்தப் பயலுக்கு போகோ சேனலை விட்டால் வேறு போக்கிடமே இல்லை. இவன் விளையாட, உடன் வளர இன்னொரு தம்பியோ, தங்கையோ வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு ஆரம்பத்திலேயே இல்லை. சமயத்தில் இவன் ஒருவனை சமாளிக்கவே 100க்கு ஃபோன் பண்ண வேண்டியுள்ளது. இதில் இன்னொரு பிள்ளையைப் பற்றி எங்கிருந்து யோசிக்க. தகப்பனாரின் தலைமுறையில் நிறைய சகோதர சகோதரிகளுடன் பிறந்து வளர்ந்தவர்கள், அற்பகாரணங்களுக்காக இப்போது பேச்சுவார்த்தையின்றி யாரோ மாதிரி வாழ்வதைப் பார்த்து மனசு வெறுத்துப் போனதினால் ஒரு வேளை போதுமய்யா ஒரு குழந்தை என்று தோன்றிவிட்டதோ என்னவோ. சமீபத்தில் ஒரு திருமணத்தில் எனது பெரியண்ணனை என் மகனுக்கு, ‘இவன்தான் உன் பெரியப்பா’ என்று அறிமுகப்படுத்தி வைக்கும் அவலநிலைக்கு ஆளானேன். கண்கலங்கியபடியே ‘எல அய்யா’ என்று தன் தம்பி மகனைக் கட்டித் தழுவிக் கொண்டான் அண்ணன். பெரியவர்களின் தேவையில்லாத வீம்பு குணத்தினால் ஒன்று விட்ட சகோதரர்களாகிய நாங்கள் ஒருவரையொருவர் மறந்தே போனோம். ஃபாஸிலின் ‘வருஷம் 16’ திரைப்படம் பார்க்கும் போது விடுமுறைக்கு ஒன்று கூடிய குடும்ப கலாட்டாகாட்சிகளில் திரையரங்கம் முழுவதும் கைதட்டி சிரித்து மகிழ்ந்த போது என்னையறியாமல் நான் அழுதேன். என் அண்ணன்களும், அக்காக்களும் அவரவர் ஊர்களில் நிச்சயம் அழுதிருப்பார்கள்.

ஒன்றாம் வகுப்பிலிருந்தே என்னுடன் ஒன்றாக படித்த என் ஆருயிர்நண்பன் குஞ்சு என்கிற குஞ்சரமணியின் தாத்தா குருசாமி தீக்ஷிதர் 94 வயது வரை வாழ்ந்தார். எட்டயபுரம் அரண்மனையின் ஆஸ்தான ஜோஸியர் அவர். அவரது பெரியம்மா மகனான சுப்பையாவை அவன் வாழ்ந்த காலத்தில் அவர் கண்டுகொள்ளவே இல்லை. சிறிய வயதிலேயே வறுமையில் இறந்து போன தன் அண்ணன் சுப்பையாவைப் பற்றி அவருக்கு அவ்வளவு நல்ல அபிப்பிராயமும் இல்லை. ‘யார் பேச்சையும் கேக்காம சும்மா ஒதவாக்கரையா சுத்திண்டிருந்தான்’ என்கிற அளவில் மட்டுமே அவர் சுப்பையாவைப் பற்றிப் புரிந்து வைத்திருந்தார். மேதைகள் மறைந்த பின்னர் அவர்தம் அருமைகளைத் தெரிந்து கொள்ளும் பழக்கத்திற்கு ஆளான தமிழ்ச் சமூகம் சுப்பையா காலமான பிறகு அவர் பெருமைகளை அறிந்து கொண்டது. அவர் எழுதிய கவிதைகள் அனைத்துமே மேன்மையானவை என்றது. ஊரெங்கும் சுப்பையாவின் சிலைகளை நிறுவி அதன் கீழ் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று பெயர் பொறித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது. பாரதியாரின் நூற்றாண்டு விழாவில் அரசாங்கம் அவரது குடும்பத்தை கெளரவித்த போது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் பொன்னாடை போர்த்திக் கொண்டு குருசாமி தீக்ஷிதர் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து பவ்யமாக நின்றார். தன் வீட்டு வாசலில் மாட்டப்பட்டிருக்கும் அந்தப் புகைப்படத்தை நண்பன் குஞ்சு, என்னதான் தன் தாத்தாவாக இருந்தாலும், ‘பாத்தியா, அவாள் போஸ’ என்று இன்றைக்கும் கேலியாகச் சொல்லிக் காட்டுவான்.

வாழ்க்கையின் பெரும்பகுதியை எட்டயபுரத்திலேயே கழித்த குருசாமி தாத்தா அவ்வப்போது திருநெல்வேலி அம்மன் சன்னதியில் உள்ள குஞ்சுவின் வீட்டுக்கு வருவார். குஞ்சுவின் வீடு குறுகலாக நீளமாக இருக்கும். வீட்டுவாசலிலிருந்து பார்க்கும் போது தூரத்தில் சப்பரத்திலுள்ள சாமி மாதிரி தாத்தா மங்கலாகத் தெரிவார். ஆனால் அவர் போடும் சத்தம் மட்டும் இரைச்சலாக வீடு முழுதும் கேட்கும். குருசாமி தாத்தா சிரித்து நான் பார்த்ததில்லை. அவருக்கு சிரிக்கத் தெரியுமா என்ற சந்தேகத்தை குஞ்சுவிடமே கேட்டிருக்கிறேன். ஒரே ஒரு தடவை அவர் சிரித்து தான் பார்த்திருப்பதாக குஞ்சு சொன்னான். தனது 94ஆவது வயதில் குருசாமி தாத்தா கீழே விழுந்து கால் எலும்பை முறித்துக் கொண்டார். பொதுவாக அவருக்கு கோபமே வராது. சோற்றில் உப்பில்லையென்றால் சாப்பிடும் இடத்திலேயே காறித் துப்புவார். மற்றபடி சாந்த சொரூபி. இப்படிப்பட்டவர் கீழே விழுந்துவிட்டால் வீடு என்ன ஆகும். தாத்தாவை படுக்கையில் போட்டார்கள்.அவருக்குத் தெரியாது அதுதான் தனது மரணப் படுக்கையென்று. திருநெல்வேலியின் புகழ்பெற்ற எலும்புமுறிவு சிகிச்சை நிபுணர் பண்டாரவிளை நாடார் வரவழைக்கப்பட்டார். முட்டைப்பத்து போடப்பட்டது. தாத்தாவுக்கு படுக்கையிலேயே எல்லாம் ஆரம்பமானது. மருமகள்கள் தாம்பாளத்தில் வைத்துத் தாங்காத குறையாக மாமனாரைப் பார்த்துக் கொண்டார்கள். ஆனாலும் நித்தமும் அர்ச்சனைதான்.

ஹார்ளிக்ஸ் எங்கெடி.?

அதத்தானேப்பா குடிச்சிட்டிருக்கேள்!

தூ . . . ஒங்களெல்லாம் அருவாமனயால வெட்டணும்.

கையால் வெட்டுவது போல் சைகை செய்வார். குஞ்சுவின் அம்மாவும், பெரியம்மாவும் என்னிடம் ‘எல பாத்தியா, இதுக்கு என்ன பண்றது நீயே சொல்லு’ என்பார்கள். மெல்ல, மெல்ல எல்லா இயக்கங்களும் செயலிழக்கத் தொடங்கி தாத்தா அடங்கினார். கடைசி வரை அவருக்கு கால் எலும்பு முறிவுக்கான கட்டு போடப்பட்டு வந்தது. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் கட்டு பிரித்து புது கட்டு போடும் போது நான்தான் உதவிக்கு நின்றேன். நான் அவர் காலை தூக்கிப் பிடித்துக் கொள்ள பண்டாரவிளை நாடார் பரபரவென்று கட்டு போட்டார். போடும் போதே என்னிடம் பெரியவரை பற்றி விசாரிப்பு.

சாமிக்கு ஒரு தொன்னூறு வயசு இருக்குமா?

தொன்னூத்தி நாலு.

ஏ . .யப்பா . . அந்த காலத்து உடம்பு . சாமிக்கு மொத்தம் எத்தனை பிள்ளைய?

பதிமூணு

பதி . .மூணா . . . சாமி என்ன தொளில் பண்ணிக்கிட்டிருந்தா ?

அதான் சொல்லிட்டேனே.