கரையும் உள்ளம்

விஜயா அக்காவுக்கும், உமா அக்காவுக்கும் கல்யாணம் ஆகும் வரை அவர்கள்தான் அம்மாவுடன் சினிமாவுக்குச் செல்வார்கள். அதற்குப் பிறகு அப்போது கல்யாணம் ஆகாமலிருந்த ஜெயா அக்காவுக்கு அந்த பதவி கிடைத்தது. இவர்களனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் வீட்டுக்கு நேரெதிர் வீட்டில் வசித்து வந்தார்கள். அம்மாவை ‘மதினி’ என்றே அழைப்பார்கள். இவர்களில் விஜயா அக்கா எப்போதும் பார்ப்பதற்கு ஒரு நோயாளி மாதிரியே இருப்பாள். உமா அக்கா அதற்கு நேர்மாறாக குண்டாக இருப்பாள். ஜெயா அக்கா ரெண்டும் கெட்டான். உருவங்கள்தான் வேறு வேறு. ஆனால் உள்ளம் மட்டும் ஒன்றேதான்.

‘எந்தப் படம் பாத்தாலும் ஒங்களுக்கெல்லாம் அளுகையே வராதாட்டி?’

அம்மா சலித்தபடி சொல்வாள்.

‘அது சினிமாதானெ மதினி! என்னத்துக்கு அளணும்?’

ஒரே மாதிரியான பதில்தான் வரும்.

தனியார் மற்றும் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் தலையெடுக்காத காலத்தில் திருநெல்வேலி மக்களுக்கு திரையரங்குகளை விட்டால் வேறு நாதியில்லை. இருக்கிற பத்து தியேட்டர்களில் வளைத்துப் பிடித்து படங்கள் பார்ப்பது என்பது கிட்ட்த்தட்ட நெல்லையப்பர் கோயிலுக்குப் போவதைப் போல அனிச்சையான ஒன்று. புத்தம்புதிய தமிழ், ஹிந்திப் படங்களுடன் பழைய கறுப்பு வெள்ளை படங்களும் திரையிடப்படுவதுண்டு. ரத்னா தியேட்டரில் ‘பார் மகளே பார்’ திரைப்படம் பார்க்க அம்மா செல்லும் போது உடன் நானும் சென்றிருந்தேன். ‘அவள் பறந்து போனாளே’ பாடலில் ‘அவள் எனக்கா மகளானாள், நான் அவளுக்கு மகனானேன்’ என்று சிவாஜி குலுங்கும்போது அம்மாவுடன் நானும் சேர்ந்து கதறினேன். பக்கத்தில் உட்கார்ந்து எந்தவித பாதிப்புமில்லாமல் அச்சு முறுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ஜெயா அக்கா. அம்மாவுடன் சேர்ந்து கொண்டு ‘நீயெல்லாம் என்ன ஜென்மமோ’ என்று நறநறவென்று பல்லைக் கடித்தேன். ’போடே, ஒனக்கும் ஒங்கம்மைக்கும் வேற சோலி இல்ல’ என்று சாதாரணமாகச் சொல்லியபடி அடுத்த அச்சு முறுக்கைக் கடிக்கத் தொடங்கினாள்.

சினிமா பார்த்து அழுபவர்களின் கதைகள் சுவாரஸ்யமானவை. பெரிய அண்ணனின் தோழனான அம்பி மாமா பார்ப்பதற்கு ரொம்பப் பெரிதாக இருப்பார். எட்டு முழ வேஷ்டியும் அவர் இடுப்பில் அங்கவஸ்திரம் போல அபாயமாகக் காட்சியளிக்கும். அண்ணனும், அவரும் ‘பாசமலர்’ பார்க்கப் போயிருக்கிறார்கள். இறுதிக்காட்சியில் சிவாஜி ‘கைவீசம்மா கைவீசு’ என்று அழுதபடியே வசனம் பேசும் போது அம்பி மாமா பேச்சுமூச்சில்லாமல் மயங்கி விழுந்துவிட்டாராம். பதறிப் போன பெரியண்ணன் ரொம்ப சிரமப்பட்டு அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி, தேரடியில் உள்ள நாயுடு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டு வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டிருக்கிறான். பெரிய கூட்டுக் குடும்பமான அம்பி மாமாவின் வீட்டுக்குள் கைத்தாங்கலாக அவரை அழைத்துச் செல்ல, வீட்டிலுள்ள அனைவருமே கூச்சல் போட்டு அதிலும் ஒன்றிரண்டு வயதான பெரியவர்கள் ‘அய்யோ, அம்பிக்கு என்னாச்சு’ என்று அழுதபடி மயங்கிச் சரிந்திருக்கிறார்கள்.

மேற்படி சம்பவத்துக்குப் பின் அம்பி மாமாவின் உறவை பெரியண்ணன் ரொம்ப நாட்களுக்கு துண்டித்திருக்கிறான். சனி ‘பதினாறு வயதினிலே’ ரூபத்தில் அவனைத் தேடி வந்திருக்கிறது. அம்பி மாமாதான் அவனை அழைத்திருக்கிறார். மிகுந்த யோசனைக்குப் பிறகே அண்ணன் அவருடன் கிளம்பிச் சென்றிருக்கிறான். குருவம்மாள் சாகும் வரை ஒன்றும் பிரச்சனையில்லாமல் அம்பி மாமா ஜாலியாகவே படம் பார்த்திருக்கிறார். சப்பாணியின் துணையுடன் மயிலு சங்கடப்பட ஆரம்பிக்கும் போது அம்பி மாமாவிடமிருந்து ஒரு வகையான கேவல் ஒலி வந்திருக்கிறது. அதை கவனிக்கத் தவறிய அண்ணன், படத்தில் ஒன்றியிருக்கிறான். ‘ஆத்தா ஆடு வளத்தா, கோளி வளத்தா, நாய் வளக்கல’ என்று சப்பாணி வசனம் பேசும் போது அம்பி மாமா மீண்டும் மயங்கி விழுந்திருக்கிறார். இந்த முறை காரில் அழைத்துச் சென்றிருக்கிறான் அண்ணன். அவர் வீடு வரைக்கும் செல்ல தைரியமில்லாமல் பாதியிலேயே இறங்கிக் கொண்டானாம்.

அம்பி மாமா வீட்டுக்கு நேரெதிர் வீட்டுக்காரனான குஞ்சுவும், நானும் ‘அன்னை ஓர் ஆலயம்’ பார்க்க பார்வதி தியேட்டருக்குப் போனோம். உடன் ‘கோ-ஆப்டெக்ஸ் சங்கரும் வந்திருந்தான். பொதுவாக வாழ்க்கையில் எதற்குமே கலங்காத குஞ்சு கேவலப்பட்டது அன்றுதான். ரஜினிகாந்த் விரித்த வலையில் குட்டி யானை சிக்கியதுதான் தாமதம். இருக்கையில் இருந்து எழுந்து நின்று ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான் குஞ்சு. படம் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்கள் ‘ஏ தம்பி, அளாதடே. குட்டி யானைக்கு ஒண்ணும் ஆகாது’ என்று சமாதானம் செய்தார்கள். ஆனால் அவன் அடங்குவதாக இல்லை. நானும், கோ-ஆப்டெக்ஸ் சங்கரும் முறுக்கு, தட்டை, டொரினோ என எல்லாம் வாங்கிக் கொடுத்து ஆறுதல் கூறினோம். அனைத்தையும் தின்று விட்டு, டொரினோவையும் குடித்து முடித்து வாயைத் துடைத்துக் கொண்டு மீண்டும் அழத் தொடங்கினான்.

ரொம்ப நாட்கள் இதைச் சொல்லி குஞ்சுவை கேலி செய்து வந்தோம். ‘இவனாது பரவாயில்ல. எங்க அம்ம ’துலாபாரம்’ பாத்துட்டு ஒரு வாரம் படுத்த படுக்கையாயிட்டா, தெரியும்லா? வீட்ல சோறே பொங்கல’. பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்து சொன்னார் செல்லப்பா மாமா.

சென்னையிலும் நான் சில கரையும் உள்ளங்களை சந்தித்ததுண்டு. நண்பர் சீமானின் வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்த போது நண்பர்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். உள்ளே நான் நுழையும் போதே ‘நேத்து எங்கெ போயிட்டியெ ஐயா மகனே?’ என்றபடியே வரவேற்றார். ‘ஏன், என்ன விஷயம்?’ என்றபடி அருகே போய் உட்கார்ந்தேன். சேனல்கள் ஒவ்வொன்றாக மாறிக் கொண்டிருந்தது. வழக்கம் போல ஆங்காங்கே நண்பர்கள் சிதறிக் கிடந்தனர். சீமானே தொடர்ந்தார்.

‘நேத்து நம்ம தம்பி கருப்பையாவ சமாதானப் படுத்த முடியலங்க.’

‘என்னாச்சு கருப்பையா?’

சற்றுத் தள்ளி சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கருப்பையாவைக் கேட்டேன். அதற்குள் சீமானே பதில் சொன்னார்.

‘அத ஏன் கேக்குறியே? நம்ம ஐயாவோட படம் நேத்திக்கு வந்தது, ‘பாசமலர்’. பய தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சிட்டான்.’

‘ஏங்க, பாசமலர் பாத்தா அளமாட்டாங்களா? இது ஒரு செய்தின்னு சொல்றியளே!’ என்றேன்.

‘அட நீங்க ஒரு ஆளு ஐயாமகனே, நடிகர் திலகம் வழங்கும்னு பேரு போட்டவுடனயே அள ஆரம்பிசுட்டாங்கறேன்!’ என்றார்.

கருப்பையாவைப் பார்த்து ‘ஏன் கருப்பையா, நெஜமாவா?’ என்றேன்.

‘பெறகு? அளாம இருக்க முடியுமா, நீங்களே சொல்லுங்க. அதுல்லாம் எப்படி படம்?’ என்று கலங்கிய குரலில் கேட்டார் கருப்பையா. இந்த கருப்பையாதான் ராசு மதுரவன் என பெயரை மாற்றிக் கொண்டு ‘மாயாண்டி குடும்பத்தார்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

பல்வேறு தேசிய விருதுகளை வாங்கிய மலையாள திரைப்பட இயக்குனர் டி.வி.சந்திரனின் டேனி திரைப்படத்தின் முக்கியமான காட்சிகளின் போது இயக்குனர் பாலாஜி சக்திவேல் கண்ணாடிக்குள் கையை விட்டு பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே இருந்தார். மூக்கை உறிஞ்சியபடி ‘என்னால தாங்கவே முடியல சுகா’ என்றார். இத்தனைக்கும் அவர் படம் பார்க்கவில்லை. நான்தான் அந்தப் படத்தின் கதையை அவருக்கு விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்கு பிறகு கே.ஜி.ஜார்ஜின் மற்றோர் ஆள் படத்தின் கதையை சொன்ன போது மிகுந்த சிரமத்துடன் அழுகையை அடக்கிக் கொண்டார்.

சமீபத்தில் ‘மை நேம் இஸ் கான்’ பார்த்தேன். ஷாருக்-கஜோல் தம்பதியினரின் மகன் இறந்து போகும் காட்சி வரும் போது என்னை அறியாமல் கலங்கத் தொடங்கிய மனம் அதற்கு பிறகு தொடர்ந்து கண்ணீர் விட வைத்தது. யாரும் பார்த்து விடக் கூடாதே என்கிற ஜாக்கிரதையுணர்வுடன் சுற்றும் முற்றும் அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருந்தேன். என் அருகில் அமர்ந்திருந்த பத்து வயதுச் சிறுவனொருவன் எனக்கு ஜோடியாக அழுதபடி படம் பார்த்துக் கொண்டிருந்தான். கையை அவிழ்த்து விட்ட மாதிரி இருந்தது. சற்று சுதந்திரமாக அழ ஆரம்பித்தேன். பையனும் என்னோடு சேர்ந்து கொண்டான். தனது மகன் சாவுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ள கஜோலின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் என்னோடு இணைந்து பக்கத்து இருக்கைச் சிறுவனும் அழுதான். பத்து வயதே நிரம்பிய சிறுவனையும் கலங்க வைத்து விட்ட கரன் ஜோஹரை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டேன். ஒரு படைப்பாளியின் வெற்றி இதுதானே. கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.

ஒரு கட்டத்தில் திரையரங்கே அமைதியாக இருக்க பக்கத்து இருக்கைச் சிறுவனின் குரல் அந்த அமைதியைக் கிழித்தது.

‘மம்மி, இந்த சமோசாவையும் அண்ணா புடுங்கிட்டான்’.

கலர்

காபி குடிக்கும் பழக்கம் ஏனோ என்னிடத்தில் சிறுவயதிலிருந்தே இல்லை. சென்னைக்கு, அதுவும் சினிமாவுக்கு, வந்த பிறகுதான் டீ குடிக்கும் பழக்கம் வந்தது. படப்பிடிப்பின் போது குடிக்கும் டீயின் எண்ணிக்கை தெரிவதேயில்லை. யார் வீட்டுக்குப் போனாலும் குடிப்பதற்கு காபி கொடுத்தார்களானால் வேண்டாம் என்று மறுத்து விடுவேன். ‘ஒருவாய் காப்பி குடிக்கறதுனால ஒன் கிரீடம் ஒண்ணும் எறங்கிறாது’. குஞ்சு எத்தனையோ முறை சலித்திருக்கிறான். நான் கேட்டதேயில்லை. ‘இங்கெ பாரு. ஒனக்கு காபி குடிக்கிற பழக்கம் இல்லேங்கறதுக்காக வேண்டாங்குறே. ஆனா அவங்க அதுக்காக ஒனக்குன்னு வேற ஏதோ தயார் பண்ணனும். எதுக்கு தேவையில்லாம மத்தவங்களுக்குக் கஷ்டத்த குடுக்கறே?’ வாத்தியார் பாலு மகேந்திரா ஒருமுறை சொன்னார். அன்றிலிருந்து எங்கு சென்றாலும், என்னிடம் கேட்காமல் காபி கொடுத்தால் எதுவும் சொல்லாமல் வாங்கி குடித்து விடுவேன்.

காபியை விலக்கியே வைத்திருந்தாலும் மற்ற பானங்களான நன்னாரி சர்பத், எலுமிச்சை சாறுடன் சோடா கலந்து உப்பிட்டு குடிக்கிற போஞ்சி, பதனீர், இளநீர் என இவையெல்லாம் அவ்வப்போது என் வாழ்க்கையில் இடம்பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. ராவண்ணா என்று எங்கள் குடும்பத்தினரால் அழைக்கப்பட்டு எங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்த ராமையா பிள்ளை இப்போது உயிருடனில்லை. கட்டிட மேஸ்திரியாக இருந்த ராவண்ணா எங்கு சென்றாலும் உடன் செல்பவரிடம், ‘யோவ் வாங்க. அந்தா அந்தக் கடைல போயி ஆளுக்கு ரெண்டு கலர் அணைச்சுக்கிடுவோம்’ என்பார். டொரினோ, பவண்டோ, கோல்ட் ஸ்பாட் எதுவாக இருந்தாலும் மொட்டையாக அது கலர்தான்.

ராவண்ணாவின் வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அவரது மனைவி மட்டுமே இருந்தார். என்னைப் பார்த்ததுமே பரபரப்படைந்தார். ‘உள்ள வாய்யா’. இரும்பு மடக்கு நாற்காலியை எடுத்துப் போட்டார். ‘வராதவன் வந்திருக்கே. இந்தப் பய வேற இல்லையெ. பள்ளிக்கூடம் போயிருக்கானெ. ஒரு அஞ்சு நிமிசம் இருக்கியா? முக்குக் கடையில போயி கலர் வாங்கிட்டு வந்திருதென்’ என்றார்கள். ராவண்ணா மட்டுமல்ல அவரது குடும்பத்துக்குள்ளும் கலருக்கு இருக்கும் செல்வாக்கைப் புரிந்து கொண்டேன். ‘வீட்டுக்கு வந்த ஆளுக்கு ஒரு கலர் கிலர் வாங்கிக் குடுத்து அனுப்ப வேண்டாமாட்டி?’ என்று ராவண்ணா சத்தம் போடுவார் போல. அதற்குப் பின் நான் அங்கு எத்தனை முறை போனாலும் கலர் குடிக்காமல் திரும்பியதில்லை. ‘அவாள் வீடு வரைக்கும் வந்துட்டோம். போயி ஆளுக்கொரு கலர் குடிச்சுட்டுத்தான் வருவோமே’. கிண்டல் செய்வான் குஞ்சு.

சுந்தரம் பிள்ளை பெரியப்பாவும் கலர்ப்பிரியர்தான். குறிப்பாக டொரினோ. ‘நேத்து ராயல் டாக்கீஸ்க்கு செகண்ட் ஷோ போயிருந்தேன். இண்டர்வல்ல டொரினோ குடிக்கும் போது கணேசன்பய வந்து பெரிப்பான்னு தோளத் தொடுதான். அத ஏன் கேக்கெ? அந்தாக்ல, வா மூதின்னு அவனுக்கும் ஒரு டொரினோவ வாங்கிக் குடுத்தேன்.’ ஸ்ட்ரா போட்டுக் குடிப்பது பெரியப்பாவுக்குப் பிடிக்காத ஒன்று. ரொம்ப நாட்களாக ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக்கொண்டுதான் இருந்தார். ஒரு முறை அப்படி உறிஞ்சிக் கொண்டிருந்த போது பாட்டில் காலியானது தெரியாமல் சத்தம் வரும் வரை உறிஞ்சியிருக்கிறார். ‘பாத்தா பெரிய மனுசன் மாதிரி தெரியுது. இப்படியா பாட்டில் காலியானது தெரியாம அசிங்கம் புடிச்சாக்ல சத்தம் போட்டு உறியறது மாடு களனி குடிக்க மாதிரி?’ போகிற போக்கில் யாரோ சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அவமானத்தில் அன்றோடு பெரியப்பா தூக்கி எறிந்தது, ஸ்ட்ராவை. டொரினோவை அல்ல. இறக்கும் வரை டொரினோவை அவர் மறக்கவேயில்லை.

ஸெவென் அப் வாங்கிக் குடித்து ‘ஏவ் ஏவ்’ என ஊரையே காலி செய்யுமளவுக்கு சத்தமாக ஏப்பம் விடும் நபர்களைப் பார்த்திருக்கிறேன். ஸ்டைலாக ஒரு சமோசா அல்லது ஒரு பஃப் வாங்கிக் கடித்துக் கொண்டு, கொக்க கோலாவைக் குடித்து விட்டு ‘இதுதான் என்னாட லஞ்ச்’ என்று சொல்லும் இளைஞர்களும், யுவதிகளும் இப்போது இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நாகரிகச் சிறுசுகள் பிஸ்ஸா தின்று பெப்ஸி குடிக்கிறார்கள். ஃப்ரூட்டி உறியாத சின்னப் பிள்ளைகள் இப்போது எங்குமே இல்லை.

மேற்படி பாட்டில் பானங்களில் சிலரது பிரத்தியேக ரஸனை ஆச்சரியத்தை வரவழைப்பவை. என் வாத்தியார் பாலு மகேந்திரா கோக்கில், பெப்ஸியில் கொஞ்சம் உப்பு போட்டு குடிப்பார். ‘கேஸ கம்ப்ளீட்டா எடுத்துரும். குடிச்சு பாரேன்’. குடித்துப் பார்த்திருக்கிறேன். உண்மைதான். பாரதி மணி பாட்டையாவுக்கு அது சிம்லாவாகவே இருந்தாலும் ஃபிரிட்ஜில், அதுவும் ஃப்ரீஸரில் வைத்து ச்சில்லென்று கை நடுங்க எடுத்து கொடுக்கும் தண்ணீரோ, பாட்டில் பானங்களோ வேண்டும். இதமான சூட்டில் பருத்திப் பால் குடிப்பது போல் மடக்கென்று முழுங்கி விடுவார். ‘இன்னும் சில்னஸ் பத்தல’ என்பார். ‘இவருக்கு ஐஸ ஒடச்சுத்தான் வாயில தட்டணும்’. மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.

சென்னையில் ஆடம்பரமான குளிர்பானங்களை வேறு வழியில்லாமல் குடித்துப் பழகி வெறுத்துப் போயிருந்தார் கவிஞரும், ஒளிப்பதிவாளருமான நண்பர் செழியன். திருநெல்வேலியிலிருந்து நாங்கள் பாவநாசம் செல்லும் வழியில் திடீரென செழியனுக்கு ஓர் ஆசை தோன்றியது. ‘ ஏங்க, காளி மார்க் பவண்டோ குடிச்சு ரொம்ப வருஷமாச்சு. இங்கெ கெடைக்கும்ல?’ என்றார். அப்போது நாங்கள் காரை நிறுத்திவிட்டு விக்கிரமசிங்கபுரத்தில் நின்று கொண்டிருந்தோம். உடனிருந்த மீனாட்சி பயலிடம் சொன்னேன். ‘சித்தப்பா, நீங்க இங்கனையே இரிங்க. நான் போயி வாங்கிட்டு வாரேன்’ என்று நகர்ந்தான். ‘எல, கெடைக்கலென்னா விட்டுரு. திருநவேலி போயி பாத்துக்கிடலாம்’ என்றேன். ‘அவாள் ஆசப்பட்டுட்டா. ஒடனெ வாங்கிக் குடுக்கெண்டாமா? பெறகு நம்மள பத்தி என்ன நெனப்பா?’ கொஞ்ச நேரத்தில் இரண்டு பவண்டோக்களோடு வந்து விட்டான். காரில் போகும் போது எங்களுக்கு பெருமாள் கோயில் தீர்த்தம் மாதிரி பேருக்குக் கொஞ்சம் போல கொடுத்து விட்டு, பவண்டோவுடனே வாழ்ந்து கொண்டு பாவநாசம் வரை வந்தார் செழியன்.

‘ரொம்ப நாள் ஏங்கிக்கிட்டு இருந்துருப்பா போலுக்கு’. திரும்பிப் பார்த்து காதுக்குள் ரகசியமாகச் சொன்னான் மீனாட்சி. வயிறு நிறைய பவண்டோவை நிரப்பி விட்டு இரண்டொரு ஏப்பங்களோடு தூங்கியும் போனார் செழியன். பாவநாசம் தாண்டி உள்ளே சொரிமுத்தையனார் கோயில் பாலத்துக்குச் சென்றவுடன் காரை நிறுத்தினோம். ஸ்படிகம் போல் ஓடும் தாமிரபரணியைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் குளிக்கும் ஆசை வந்து விட்டது. குளிப்பதற்கு வாகான இடத்தை மீனாட்சி தேர்வு செய்துச் சொல்ல, ஒவ்வொருவராக ஆற்றுக்குள் இறங்கினோம். ‘சித்தப்பா, மொதல்ல ஒரு முங்கு போட்டிருங்க’ என்றான் மீனாட்சி. அவன் கையைப் பிடித்துக் கொண்டே முங்கி எழுந்தேன். மனம் குதூகலமடைந்தது. ‘எல, இருட்டுற வரைக்கும் குளிப்போம். என்னா?’ என்றேன். எல்லோரும் அவரவர்க்கு வசதியான இடத்தில் குளித்துக் கொண்டிருந்தார்கள். செழியனை மட்டும் காணவில்லை.

‘செளியன எங்கலெ?’

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மீனாட்சி தூரத்தில் ஒரு திசையைக் காண்பித்து சொன்னான்.

‘சித்தப்பா, அங்கெ பாருங்க’.

தோளில் கிழற்றி போட்டிருக்கும் பேண்டுடன் ஒரு புதருக்குள் ஓட்டமும், நடையுமாகச் சென்று கொண்டிருந்தார் செழியன். கையில் காலியான ஒரு பவண்டோ பாட்டில்.

[email protected]

கருப்பையா பிள்ளையின் இளைய மகன்

‘விஞ்சை விலாஸின் சுவை’ கட்டுரையில் சாலிகிராமத்திலுள்ள ‘திருநெல்வேலி சைவாள் ஹோட்டல்’ பற்றி எழுதியிருந்தேன். அதில் அந்த ஹோட்டல் உரிமையாளரின் இளைய மகன் வேறொரு ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்த விஷயத்தையும் சொல்லியிருந்தேன். இதை படித்த அன்பரொருவர் திருநெல்வேலி ஹோட்டலுக்குப் போயிருக்கிறார். வழக்கமாக அவர் அங்கு போய் சாப்பிடுவதுண்டாம். கருப்பையா பிள்ளையின் மறைவுக்குப் பின் அந்த ஹோட்டலை இப்போது நடத்தி வருபவர் அவரது இளைய மகன். வேறொரு ஹோட்டலில் வேலை செய்வதாகச் சொல்லப்பட்டவர் இந்த ஹோட்டலை நடத்துகிறாரே என்று அன்பருக்குத் தோன்றியிருக்கிறது. மெல்ல அவரிடம் ‘நீங்க ‘அக்ஷயா ஹோட்டல்ல வேல செஞ்சீங்களோ!’ என்று வினவியிருக்கிறார். கருப்பையா பிள்ளையின் இளைய மகன் அந்தத் தகவலை மறுத்திருக்கிறார். உடனே இவர் கட்டுரையின் அந்தக் குறிப்பிட்ட பகுதி எழுதியவரின் கற்பனை என்று முடிவு செய்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து கருப்பையா பிள்ளையின் இளைய மகன் தானாகவே வந்து ‘ஆமா, கொஞ்ச நாள் அங்கெ வேல செஞ்சேன். ஒங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று கேட்டிருக்கிறார்.

‘வார்த்தை’ இதழில் வெளிவந்த ‘விஞ்சை விலாஸின் சுவை’ கட்டுரையில் இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைச் சொன்னவுடன் கருப்பையா பிள்ளையின் இளைய மகன் அந்தக் கட்டுரையைப் படிக்க ஆசைப்பட்டிருக்கிறார். மறுமுறை இவர் அங்கு செல்லும் போது ‘வார்த்தை’ இதழை கொண்டு கொடுக்கவும், அதை வாங்கிப் படித்து ஆனந்தப்பட்ட கருப்பையா பிள்ளையின் மகன், ‘ஒங்களுக்கு என்ன வேணுமோ நல்லா சாப்பிடுங்க’ என்று இவரை உணர்ச்சி பொங்க உபசரித்தாராம். இதை எழுதியவரை நான் பார்க்கணுமே என்று கேட்க, இவரும் தான் அழைத்து வருவதாகச் சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல்களையெல்லாம் பிரபுராம் என்கிற அந்த அன்பரே எனக்கு மெயில் மூலம் சொல்லியிருந்தார்.

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக அந்த ஹோட்டலுக்குச் சென்று வருகிறேன். ‘விஞ்சை விலாஸின் சுவை’ எழுதிய பிறகும் கூட பலமுறை சென்றிருக்கிறேன். திரு.நாஞ்சில் நாடன் அவர்களையும் சமீபத்தில் அங்கு அழைத்துச் சென்றேன். எண்ணெய் தோசையும், ஆம வடையும் சாப்பிடும் போது, ‘ஏ அய்யா, நம்ம ஊர்ல சாப்பிடுற மாதிரில்லா இருக்கு’ என்றார் நாஞ்சிலார். கூடவே ‘இதெல்லாம் வயித்துக்கு ஒண்ணும் பண்ணாது’ என்று சான்றிதழும் வழங்கினார். அன்றைக்கும் கருப்பையா பிள்ளையின் மகனிடம் என்னை நான் காட்டிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் ‘என்னண்ணே, ஆளையே காணோம்’ என்றார் என்னைப் பார்த்து.

சில நாட்களாக ‘திருநெல்வேலி’ ஹோட்டல் பூட்டப்பட்டிருந்தது. நேற்று மாலை நான் சாலிகிராமத்தில் நடந்து கொண்டிருந்தவன் ‘திருநெல்வேலி’ ஹோட்டல் திறந்திருப்பதைப் பார்த்து நுழைந்தேன். கடை கொஞ்சம் நகர்ந்திருந்தது. உள்ளுக்குள் சில பூச்சு வேலைகள் செய்யப்பட்டிருந்தாலும், கடைக்கே அழகு சேர்க்கும் அந்தப் பழைய இருட்டும், வாசனையும் அப்படியே இருந்தன. ‘தோச கொண்டு வரவாண்ணே’ என்று கேட்ட கருப்பையா பிள்ளையின் மகனிடம் தலையாட்டினேன். உள்ளே சென்றவர் போகும் போதே வானொலி ஸ்விட்சை ஆன் செய்து விட்டுப் போனார். உலகமே பண்பலை வரிசையில் சிக்குண்டு ‘சொல்லுங்க, ஒங்க லவ்வருக்கு நீங்க என்ன சொல்ல விரும்புரீங்க’ என்று கேட்டுக் கொண்டு இளிக்க, ‘திருநெவேலி ஹோட்டலின் வானொலி’ ஆல் இண்டியா ரேடியோவின் வழக்கமான சோகக்குரல் அறிவிப்பாளரின் எச்சில் முழுங்கலோடு பழைய பாடல் ஒன்றை ஒலிபரப்பியது. இளையராஜா என்னும் புதிய இசையமைப்பாளர் அறிமுகமாயிருந்த காலத்துக்கு ஒரே நிமிடத்தில் நகர்ந்து நான் மூழ்கியிருந்த போது, கருப்பையா பிள்ளையின் மகன் தோசையுடன் வந்து என் கவனம் கலைத்தார்.

சாப்பிடும் போது எனக்கு முன்னே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த வழுக்கைத்தலை பெரியவர் எழுந்து கைகழுவினார். சில்லறையை எண்ணி கொடுத்துவிட்டு அவர் சென்றுவிட, இப்போது நானும், கருப்பையா பிள்ளையின் மகனும் மட்டும். ‘சாம்பார் ஊத்தட்டுமாண்ணே?’. சாம்பார் ஊற்றிக் கொண்டிருந்தவரிடம் மெல்ல கேட்டேன். ‘ஒங்களப் பத்தி ஒரு பத்திரிக்கைல வந்திருந்துதே’. மூக்குக் கண்ணாடிக்குள் கண்கள் அகல விரிந்தன. ‘ஆமாண்ணே. யாரோ ரொம்ப உன்னிப்பா கவனிச்சு எளுதியிருக்காங்க. அப்பா காலத்துல இருந்தே இங்கெ வந்து போறவங்கன்னு மட்டும் தெரிஞ்சுது. அத படிச்சுட்டு அன்னிக்கு பூரா சந்தோசமா இருந்தேண்ணே’ என்றார்.
நான்தான் அதை எழுதியவன் என்பதைச் சொல்ல எனக்கு தயக்கமாக இருந்ததற்குக் காரணம், அவர் அதை எப்படி எடுத்துக் கொண்டார் என்பது சரியாகத் தெரியாததால். திடீரென ‘எல, எங்க குடும்பம் கஷ்டப்பட்டதையெல்லாம் நீ ஊரு பூரா சொல்லி அசிங்கப்படுத்துதியோ’ என்று சொல்லி சாம்பார் வாளியை என் தலையில் கவிழ்த்து விட்டால் என்ன செய்வது என்ற யோசனை. ஆனால் அவர் தொடர்ந்து அந்தக் கட்டுரையைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேசிக் கொண்டேயிருந்தார். இப்போது சொல்லலாம் என்றால் மற்றுமோர் யோசனை. ஒருவேளை இவர் உணர்ச்சிவசப்பட்டு சாப்பிட்டதற்கு பணம் வாங்க மறுத்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்தேன். சாப்பிட்டு முடித்த பின் கைகழுவி விட்டு, காசும் கொடுத்துவிட்டு வெளியே வரும் போது சொன்னேன். ‘அத நாந்தான் எளுதினென்’. சட்டென்று என் கையைப் பிடித்தார் கருப்பையா பிள்ளையின் மகன்.

கண்கள் கலங்க, ‘அண்ணே, நீங்கதானா அது? ரொம்ப சந்தோஷண்ணே. எங்க அப்பாவப் பத்தி, அம்மாவப் பத்தில்லாம் படிக்கதுக்கு அவ்வளவு இதா இருந்துதுண்ணே.’ வார்த்தைகள் சிக்காமல் திணறினார். ‘பொறந்ததுலேருந்தே மொதலாளியா இருந்துட்டு, அப்பா எறந்ததுக்கப்புறம் வேற வளியில்லாம கொஞ்ச நாள் அந்த கடைல வேல பாத்தேன். அப்பொ கரக்டா நீங்க அங்கெ வந்துருக்கியெ.’ அழுதுவிடுவார் என்று தோன்றியது. அவர் தோளைத் தொட்டு ‘இப்போதான் நல்லா இருக்கீங்களே. அப்பா கடைய நல்லா நடத்திக்கிட்டிருக்கும் போது வேற என்ன வேணும்?’ என்றேன். கண்ணாடிக்குள் கைலியின் நுனியை விட்டு துடைத்தபடி, ‘ ரொம்ப நன்றிண்ணே’ என்றபடி என் கையைப் பிடித்தபடி வாசல் வரை வந்தார் கருப்பையா பிள்ளையின் இளைய மகன்.
[email protected]