ராஜம்மாளின் பேத்தி . . .

திருமதி சுகாசினி மணிரத்னம் முதன் முதலாக ‘இந்திரா’ திரைப்படத்தை இயக்கியபோது மணிரத்னத்திடம் பலரும் கேட்டபடி இருந்திருக்கிறார்கள். அதுகுறித்து தன் இல்லாளிடம் ‘என்ன இது? நான் அத்தனை திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன்! நீ இப்போதுதான் முதல் திரைப்படத்தை இயக்குகிறாய். என்னிடம் வந்து உன் படத்தைப் பற்றியே கேட்கிறார்களே!’ என்று மணிரத்னம் சொன்னதாக ஒரு செவிவழிச்செய்தி உண்டு. அருண்மொழி நங்கையின் ‘பனி உருகுவதில்லை’ புத்தகத்தைப் பற்றி ஜெயமோகனிடம் இதுபோன்று பலரும் கேட்டிருக்கக் கூடும். ‘இந்திரா’வுக்கு முன்பே சொல்லிக்கொள்ளும்படியான ‘பெண்’ குறுங்கதைத்தொடரை இயக்கிய சுகாசினியைப் போல அருண்மொழிநங்கையும் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஆக, நான் படித்த ‘பனி உருகுவதில்லை’ புத்தகத்தை எழுதியது, எழுத்தாளர் அருண்மொழி நங்கை. திருமதி ஜெயமோகன் அல்ல. ஜெயமோகனின் மனைவி அருண்மொழி நங்கையை தனியாக அறிவேன். 

‘பனி உருகுவதில்லை’ புத்தகம் முழுக்க முழுக்க அருண்மொழி நங்கையின் இளமைப் பருவ நினைவுகளைச் சொல்லிச் செல்கிறது. விரிந்த நிலத்தில் தங்கள் இளமைப் பருவத்தை கழிக்கும்படி வாழ்ந்தவர்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று நூலாசிரியரே இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் சொல்கிறார். அப்படி ஆசிர்வதிக்கப்பட்ட சிறுமி அருண்மொழி. இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் பற்றி எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் சொல்வது போல துல்லியமான விவரங்களுடன்,சரளமான, மிகையும் அலங்காரமும் அற்ற நேரடி நடையும் இந்தக் கட்டுரை வரிசையின் தனித்துவம்.

வாசிக்கிற சூழலில் வளர நேர்கிற எல்லா குழந்தைகளுக்கும் துவக்கத்தில் பரிச்சயப்படுகிற ரஷ்ய இலக்கியம் அருண்மொழிக்கும் அறிமுகமாகிறது. சிறுவயதில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்துகிற லெனின் அருண்மொழிக்கும் பிடித்தவராகிறார். எந்த அளவுக்கென்றால் விளாதிமீர் இல்யீச் லெனின் உல்யானவ் என்று ஒவ்வொரு முறையும் லெனினின் முழு பெயரைச் சொல்லுமளவுக்கு. அருண்மொழியின் தம்பிக்கு லெனின் கண்ணன் என்று பெயர் சூட்டியிருக்கிறார், அருண்மொழியின் தகப்பனார். 

ஏழெட்டு வயது என்பது குழந்தைகளின் புலன்களில் கூர்மை குடிகொள்ளும் பருவம் என்று சொல்லும் அருண்மொழியின் எட்டு வயதிலேயே வாஸந்தி எழுதிய சிறுகதை புரட்டிப்போட்டிருக்கிறது. பிறகு வழக்கம்போல அந்த வயதுக்கேயுரிய ரத்னபாலா, கோகுலத்தில் வரும் சிறார் கதைகள், துப்பறியும் சாம்பு என்று வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்.  வளர வளர சுஜாதா உவப்பானவராக இருந்திருக்கிறார். சுஜாதா எழுதிய கொலையுதிர் கால நாயகி லீனா போன்று தனக்கு ஒரு அழகான பெயர் இல்லையே என்று அந்த வயதில் அருண்மொழி வருந்தியிருக்கிறார். ‘உன் பெயரை நான் மந்திரம்போல் உச்சரிக்கிறேன்’ என்று காதலிக்கும்போது ஜெயமோகன் எழுதிய கடிதத்துக்குப் பிறகே தனது பெயர் தனக்குப் பிடித்துப் போனதாகச் சொல்வது அவரது பெயரை விடவும் அழகாக உள்ளது. பிறகு தான் படித்த எழுத்தாளர்களில் பலர் தங்காமல் போனதாகக் குறிப்பிடுகிறார், அருண்மொழி. அப்படி தங்காமல் போன எழுத்தாளர்கள் கல்கியும், சாண்டில்யனும். வானம்பாடி கவிஞர்களான அப்துல் ரஹ்மான், மு. மேத்தா, நா. காமராசன், மீரா, வைரமுத்து, அபி போன்றவர்களின் கவிதைகளைப் படிக்கும் போது அருண்மொழி பன்னிரெண்டாம் வகுப்பைக் கடந்திருக்கிறார். நல்ல வேளை அதற்குப்பிறகு அருண்மொழி கல்லூரிக்குப் போய்விட்டார். சுஜாதா குறிப்பிட்ட ‘Writers Writer’ அசோகமித்திரனைத் தேடிப் பிடித்துப் படித்த கல்லூரி மாணவி அருண்மொழிக்கு அப்துல் ரஹ்மானுக்குப் பிடித்த எழுத்தாளரான சுந்தர ராமசாமியும் படிக்கக் கிடைக்கிறார். அதற்குப்பிறகு புதுமைப்பித்தன், மௌனி, க.நா.சு, தி.ஜானகிராமன், லா.ச.ரா, ஆ. மாதவன்’ என்று அருண்மொழி வாசித்த எழுத்தாளர்களின் பட்டியல் நீள்கிறது. அத்தனை எழுத்தாளர்களின் குறிப்பிட்ட கதைகளைத் தனியாகச் சொல்லிச் செல்கிற அருண்மொழி ஜெயகாந்தனைப் பற்றிச் சொல்லும் போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர் என்று ஒற்றை வரியில் கடந்து சென்று விட்டது ஜெயகாந்தனின் தீவிர வாசகனான எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. (பின் நாட்களில் அவர் பார்க்கும் சாமியார் ஒருவர் ‘விழுதுகள்’ ஓங்கூர் சாமியாரை ஞாபகப்படுத்துவதாக மட்டும் ஒரு இடத்தில் சொல்கிறார்.) ஜெயகாந்தனின் வாசகர்களால் அவரது கதைகளைக் கோடிட்டுக் காட்டாமல் இருக்கவே முடியாது. வெறுமனே ஜெயகாந்தனின் கதைகளைப் பற்றி மட்டுமே விடிய விடிய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். ஜெயகாந்தனைப் பற்றி அருண்மொழி ஒரு வரியில் சொல்லிச் சென்றது குறித்து எனக்கு ஏற்பட்ட அதே ஏமாற்றம், என்னைப் போலவே ஜெயகாந்தனின் தீவிர வாசகரான ஜெயமோகனுக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். உயிர்பயம் காரணமாக அவர் மௌனமாக இருந்திருக்கலாம்.

இந்தக் கட்டுரைகளில் பல இடங்களில் காட்சிகள் வாசிப்பவனின் கண் முன்னே விரிகின்றன. பல இடங்களில் வாசனையையும் நுகர முடிகிறது. எழுத்தின் வெற்றி அதுதான். தனது பாட்டி வீட்டுக்கு கூண்டுவண்டியில் வைக்கோல் பரத்தி அதன் மேல் ஜமுக்காளம் விரித்து அமர்ந்து செல்லும் சிறுமி அருண்மொழிக்கு புள்ளமங்கலத்தின் முதல் வாசனையாக வைக்கோல் மணத்தைத்தான் உணர முடிகிறது. அந்த சமயத்தில் வாசிக்கும் நமக்கும் அந்த வைக்கோல் வாசனையைக் கடத்துகிறார். பதேர் பாஞ்சாலியில் அப்புவும், துர்காவும் ஓடும் மூங்கில் அடர்ந்த பாதையைப் பார்க்கும்போதெல்லாம் புள்ளமங்கலத்தை ஏக்கத்துடன் நினைத்துக் கொள்ளும் அந்த ஏக்கம்தான் அருண்மொழியை எழுத வைத்திருக்கிறது. 

பால்ய நினைவுகளை எழுதும் போது அந்த வயதின் மனநிலையிலேயே எழுதியிருப்பது பல இடங்களில் நன்றாக வந்திருக்கிறது. அத்தைக்குக் கல்யாணம் ஆன மறுநாள் புதுமணமக்களை புகைப்படம் எடுக்க வரும் புகைப்படக் கலைஞர் ‘செஸ்ட் வரைக்கும்தான் வரும். பாப்பா ஃபிரேமுக்குள் வராது. தள்ளிப் போகச்  சொல்லுங்க’ என்று பாப்பா அருண்மொழியைத் தள்ளி நிற்கச் சொல்கிறார். வெளியே வரும் பாப்பா ‘எல்லோரும் சாகட்டும்’ என்று நினைக்கிறது. அப்படித்தான் நினைத்திருக்கும். அதை அப்படியேதான் இப்போது எழுத வேண்டும். 

இந்தப் புத்தகத்தில் மிக அழகாக வந்திருக்கிற ஒரு கட்டுரை ‘மனோகரன் சாரும், ஜோதி டீச்சரும்’. மிக சிறப்பான ஒரு சிறுகதையாக, நேர்த்தியான ஒரு குறும்படமாக மலர தகுதியான ஒன்று. மனோகரன் சார் ஆலந்தூருக்கு கையில் சூட்கேஸுடன் வந்து இறங்குகிற காட்சி எனக்கு உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் காட்சியை ஞாபகப்படுத்தியது. டீச்சர் மீது ஈர்ப்பு ஏற்படாத மாணவ மாணவிகள் இல்லாத ஊர் எது? எழுத்தாளர்கள் அருண்மொழியின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்துக்கு இணையாக மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். குறிப்பாக மனோகரன் சார். அம்மா செய்து கொடுத்தனுப்பிய அடையை மனோகரன் சாரிடம் கொடுக்கும் சிறுமி அருண்மொழியிடம் ‘என்ன இது?’ என்று மெல்லிய குரலில் கேட்கிறார், மனோகரன் சார். ‘அடை . . .  அம்மா செஞ்சாங்க’ என்று அருண்மொழியும் மெல்லிய குரலில் பதில் சொல்கிறார். அப்போதுதான் தெரிகிறது. இப்படி மெல்லிய குரலில் பேசுவதுதான் நாகரிகம் போலிருக்கிறது. இனிமேல் இவரிடம் பேசும்போது தான் எப்போதும் பேசுவதுபோல் காட்டுக்கத்தல் கத்தக் கூடாது. ஸ்டைலாகப் பேசவேண்டும் என்று முடிவு செய்கிறார். 

பொதுவாகவே கான்வெண்ட்டில் படிக்கும் குழந்தைகள் மேல்  மற்ற பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு கண் இருக்கும். பெரிய கண்களையுடைய அருண்மொழியும் அதற்கு விதிவிலக்கல்ல. ‘சவுக்கு விறகு எனக்கு எப்பவுமே ஆச்சரியத்தைத் தரும். அது எப்படி இவை கான்வெண்ட் குழந்தைகள் மாதிரி ஒரே பருமனில் வளைவு நெளிவு இல்லாமல் நேராக சீராக இருக்கின்றன என்று தோன்றும்’ என்று எழுதுகிறார். அருண்மொழியின் சிறுவயது ஞாபகங்களில் சில சந்தோஷமளித்தன. அவரது சிறுவயது ஞானம் ஆச்சரியமளித்தது. பத்தாம் வகுப்பு மாணவியான அருண்மொழிக்கும், நடிகை பத்மினியின் தங்கை ராகினி போன்று நீளவாக்கு முகம் கொண்ட ஜேனட் அக்காவுக்குமான இசைரசனை உரையாடல்கள் ஒரு கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் ‘நீ வருவாய் என நான் இருந்தேன்’ பாடலை ஜேனட் அக்காள் பாடுகிறாள். அந்தப் பாடல் தனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதை ஜேனட் அக்காள் சொல்கிறாள். தனக்குப் பிடித்த பாடகரான மலேஷியா வசுதேவன் பற்றியும் ஜேனட் அக்காள் மூலம் அருண்மொழி அறிந்து கொள்கிறார். 

‘எவ்ளோ மேன்லியான கொரல் தெரியுமா அவருக்கு? மலர்களிலே ஆராதனை பாட்டுல நம்மாளு எப்டி என் ட் ரி கொடுப்பார் தெரியுமா? பொங்கும் தாபம், பூம்புனல் வேகம், போதையில் வாடுது’ன்னு அவர் வரும்போது ஜானகியம்மாவ கொஞ்ச நேரம் ஓரமா ஒக்காரும்மாங்கிற மாரி இருக்கும்’ என்கிறார். தேர்ந்த ரசனையின் வார்த்தைகள். காலங்கள் மழைக்காலங்கள் பாடல் கேட்கும் போது தனக்கு ஏற்படும் உணர்வைப் பற்றி ஜேனட் அக்காவிடம் சொல்லும் சிறுமி அருண்மொழியின் வார்த்தைகள் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

‘மழ முடிஞ்சு லேசா சொட்டிட்டு இருக்கு. அப்ப நம்ம திண்ணையில ஒரு காப்பியோட அத பாத்துட்டு இருக்கோம். ஓட்டுலேர்ந்து சொட்டுசொட்டா விழுற மழைத்துளி ஏற்கனவே தேங்குன தண்ணியில விழும்போது ஒரு பூவரசம் பூ குழல் மாரி ஒரு டிசைன் காட்டுமே . . . அத பாத்துக்கிட்டே இருக்க மாரி இருக்குக்கா’.

அந்த வயதில் இத்தனை கூறோடு நானெல்லாம் பேசியதேயில்லை. இப்போது நான் எழுதும் இசைக் கட்டுரைகளெல்லாம் அப்போது கேட்ட அனுபவத்திலும், இப்போது வளர்ந்திருக்கிற ரசனையிலும் எழுதுவது. அந்தவகையில் அந்த வயதிலேயே இப்படி அனுபவித்து பேசியிருக்கிற அருண்மொழியைப் பார்த்து பொறாமை கொள்கிறேன்.

திருமணத்துக்குப் பிறகு ஜெயமோகனோடு எழுத்தாளர் சுந்தரராமசாமியைப் பார்த்த ஒரு நிகழ்வை அருண்மொழி எழுதியிருக்கிறார். அப்போது சுந்தரராமசாமி ‘நாயர்களுக்குக் காது கிடையாது’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அடுத்த வரியாக அருண்மொழி இப்படி எழுதியிருக்கிறார். ‘அதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தேன்’. இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த வரி இது.

அருண்மொழியை வேறெப்படியும் பார்ப்பதைக் காட்டிலும் ராஜம்மாள் பாட்டியின் பேத்தியாகவே பார்க்க விழைகிறேன். இந்தப் புத்தகத்தை அவருக்குத்தான் அருண்மொழி சமர்ப்பித்திருக்கிறார். ராஜம்மாள் பாட்டியின் சித்திரத்தை இந்தப் புத்தகத்தில் மிக அழகாகத் தீட்டியிருக்கிறார். வாழ்க்கையை ரசித்து, ருசித்து, சுதந்திரமாக வாழ்ந்து மறைந்த அந்த மனுஷியை அரசி என்கிறார் அருண்மொழி. அவரது இறுதிக்காலத்தை அருண்மொழி சொல்லியிருந்த விதம் அந்த அரசியை இன்னும் உயர்த்திக் காட்டுகிறது. கடைசியில் எங்கு தேடினாலும் கிடைக்காமல் போய்விட்ட ராஜம்மாள் பாட்டி பறவைகள் இறப்பது போல மறைந்துவிட்டாராம். கூடவே பாட்டியைப் பற்றி மேலும் இப்படி சொல்கிறார். 

‘நான் பாட்டியிடம் பால் குடித்ததில்லை. ஆனால் அவருடன் தான் எனக்கு பால்தொடர்பு இருக்கிறது.’

பனி உருகுவதில்லை என்ற இந்தப் புத்தகத்தை அருண்மொழியின் வாயிலாக எழுதியிருப்பது ராஜம்மாள் பாட்டிதான். 

ஜித்துமா . . .

 

 

எழுதப்பட்டிருந்ததா
இது முன்னரே
இக்கணம் கனவில்
உணரப்பட்டிருந்ததா
எந்த புள்ளியில்
துவங்கும் ஒரு
தினம்
எந்த தினத்தில்
நீ உன்னை
அறிந்தாய்
களிப்பில் மிதந்த போது
புதிரின் முதல் சொட்டாய்
காதலை சப்பு கொட்டிய போது
கண்ணீரில் பிசுபிசுத்த
யாரோ ஒருவனின்
கரங்களை பற்றும் போது
கடவுளில் வியக்கும் போது
திடுக்கிடுகிறோம்
யார் நமக்கு முன்
எல்லாம் தெரிந்து வந்து
நமக்குள்
இருந்து கொள்வது
ஏழு கடல்
ஏற முடியாத
எழுபது மலைகள் தாண்டி
எங்கள் உயிர்க்கிளி
கிறக்கத்தில்
இருப்பது எங்கே
உண்மை
வெறும் வார்த்தை இல்லை
இந்த கணத்தை இந்த கனவை
சிருஷ்டித்து
இதை நீ தான் எழுதி கொண்டு இருக்கிறாய்
எத்தனை அநீதி,
எம் வாழ்வை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

 

இளையராஜாவைப் பற்றி இப்படியெல்லாம் ஒரு மனிதன் எழுதியதைப் படித்த பிறகு எப்படி அவருடன் நட்பு கொள்ளாமல் இருக்க முடியும்? மணி எம் கே மணியுடனான நட்புக்கும், அவரது எழுத்துகளுக்கும் மேற்கண்ட வரிகள்தான் வாசலாக அமைந்தது.

மணியின் எழுத்துலகுக்குள் நுழைந்தால் ஏராளமான திரைப்படங்கள் குறித்து எழுதித் தள்ளியிருந்தார். பொதுவாக திரைப்படங்கள் குறித்து எழுதப்படுகிற எழுத்துகளில் ஆர்வமில்லாத நான் மணியின் திரைப்பார்வையை ஆச்சரியமும், சந்தோஷமுமாக ரசிக்க ஆரம்பித்தேன். பதின் வயதுகளில் பார்த்து, பின் மனதுக்குள் எப்போதும் அசை போடும் அற்புதமான மலையாளப் படங்கள் குறித்து மணி அட்டகாசமாக எழுதியிருந்தார். அதுவும் என்ன மாதிரியான படங்கள்? அடூர் கோபாலகிருஷ்ணனின் கொடியேட்டம், ஸ்வம்வரம், பி. பாஸ்கரனின் நீலக்குயில் போன்ற படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்துக்கு அதிகம் வராத பத்மராஜனின் அரப்பட்டு கட்டிய கிராமத்தில் படத்தைப் பற்றியெல்லாம் சொல்லியிருந்தார். பத்மராஜனையும், பரதனையும் சிநேகிக்கும் மணி என் சிநேகிதரானார். வெறுமனே திரைப்படங்களைப் பார்த்து கதைச்சுருக்கம் எழுதுகிற வேலையை மணி செய்யவே இல்லை. கலைஞர்கள் குறித்து அவர் எழுதிய ஒன்றிரண்டு வரிகள் அவரோடு நெருக்கமாக்கின. பத்மராஜனைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.

“ஆனால் பத்மராஜன் நூறு வயது வாழ்ந்திருந்தாலும் வெட்ட வெளியில் இருந்து பூப்பறித்து காட்டி நம்மை திடுக்கிட வைத்துக் கொண்டு தான் இருந்திருப்பார். பொதுவாய் தன்னை விடவும் வித்தைக்காரனை கடவுள் நீடிக்க விட்டு வைக்க மாட்டான்.”

திரைக்கலைஞர்கள் மட்டும்தான் என்றில்லை. இலக்கியவாதிகளை மணி போற்றும் விதம் அலங்காரமில்லாதது.

“வாழ்வின் கூரிய உண்மைகளை அணைத்துக் கொண்டு அதை வாதையுடன் உள்வாங்கி சொட்டு சொட்டாய் விளக்கி செல்லும் திராணி இல்லாதவர்கள் பேசுகிற நாண்சென்ஸ் எல்லாம் சித்தாந்தங்களாகிக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் அசோகமித்திரன் எத்தனை வலியவர் என்பதை சொல்லி முடியாது.”

யோவ்! யாருய்யா நீ? இத்தனை நாளா எங்கேய்யா இருந்தே? என்று மனதுக்குள் கத்தினேன். ‘இங்கேதான் இருக்கேன். உங்களை எனக்கு நல்லாத் தெரியும். உங்களுக்குத்தான் என்னை இப்ப தெரிஞ்சிருக்கு’ என்று எங்களின் முதல் தொலைபேசி உரையாடலில் சொல்லாமல் சொன்னார், மணி.

 

அதுவரை அறிந்திருந்த மணியின் சொற்பமே என்னை சொக்க வைத்துக் கொண்டிருந்தபோது, அறிய நேர்ந்த மிச்சம் மேலும் நெருக்கமாக்கிவிட்டது. அதற்குப் பிறகு மணியின் எதுவும் எனக்கு அந்நியமில்லாமல் போய்விட்டது. தொடர்ந்து பல நாட்கள் பல விஷயங்கள் குறித்து பேசினோம் பேசினோம் பேசிக் கொண்டேயிருந்தோம். சுந்தரராமசாமியின் வாசகர் மணி என்பது ஏற்கனவே தெரியும். அவருடன் பேசும் போதுதான் அது பொய் என்பது தெரிய வந்தது. அவர் சு. ராவின் வாசகர் அல்ல. காதலர். மணி ஒரு விநோதக் கலவை. ஒரு பக்கம் மஸோக்கிஸம் பற்றி பேசுவார். பேச்சு அதிலிருந்து எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய ‘அம்ருதம் கமயா’ திரைக்கதை நோக்கிச் செல்லும். பின் அங்கிருந்து நேராக வண்டி ரோமன் பொலான்ஸ்கியின் ‘Venus in fur’க்குச் செல்லும். பின் எங்கெங்கோ சென்று சம்பந்தமே இல்லாமல் எங்க வீட்டுப் பிள்ளையில் வந்து நிற்கும். எம்.ஜி.ஆரின் சினிமாவை மணி வியந்து பேசும் போது அவர் குரலில் தயக்கமோ, கூச்சமோ இருக்காது. பாசாங்கில்லாதவர் மணி என்பதற்கு எம்.ஜி.ஆர் குறித்த அவரது சிலாகிப்பு, மற்றுமோர் உதாரணம். இப்படி மணியுடன் பேசத் துவங்கி, பேசிக்கொண்டே  வெளியூர்களுக்குச் சென்றோம். இரவெல்லாம் கண்முழித்து பேசித் தீரவில்லை. தூக்கம் கலையாமல் சென்னைக்குத் திரும்பி வந்து பேச்சைத் தொடர்ந்தோம். இன்னும் தொடர்கிறது. பேச்சினூடே ஒருநாள் லேசான கூச்சத்துடன் சொன்னார்.

‘சிறுகதைத் தொகுப்பு வரும் போல தெரியுது!’

‘யாரோடது, மணி?’

வேறெங்கோ பார்த்தபடி, ‘என்னோடதுதான்’.

எனக்கு அப்போதுதான் உறைத்தது. எத்தனை நாட்களாக எழுதிக் கொண்டிருக்கிறார்! இன்னும் இவருடைய புத்தகம் ஏதும் அச்சில் வரவில்லை. எல்லாவிதத்திலும் சின்னவனான நான் எழுதி நான்கு புத்தகங்கள் வந்துவிட்டன. இப்போது கூச்சம் மணியிடமிருந்து இறங்கி வந்து என் தோளில் ஏறிக் கொண்டது.

‘என்னாலான எல்லா உதவியும் செய்றேன்’ என்றேன்.

‘கதைகள் தரேன். படிச்சுட்டு உங்களுக்குத் தோணறத எழுதிக் குடுங்க. அதுக்கப்புறம் புஸ்தகம் வந்தாப் போதும்’.

பிரியத்தின் குரலல்ல அது. மதிப்பின் குரல். அத்தனை மதிப்பிற்குறியவன்தானா நான் என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டு ஒரு சின்ன நடுக்கத்துடன் படிக்கத் துவங்கினேன். எதிர்பார்த்த மாதிரிதான் இருந்தன, கதைகள். உண்மையைச் சொல்வதானால் எதிர்பார்த்ததற்கும் மேலாக. சில கதைகளைத் தொடர்ந்து வாசிக்க அச்சமாக இருந்தது. இதெல்லாம் எழுதலாமா என்று சில வரிகளும், இப்படியெல்லாம் எழுதலாமா என்று பல வரிகளும் இருந்தன. படித்து முடித்தவுடன் சில வார்த்தைகள் எழுதிக் கொடுத்தேன். கவனமாக ‘வாசகவுரை’ என்று எழுதினேன். ஆம். அது வாசகவுரைதான். மணியின் வாசிப்புக்கு முன், அவரது பரந்த வாழ்வனுபவத்துக்கு முன், அவரது பாசாங்கில்லாத ரசனைக்கு முன் சின்னஞ் சிறியனான நான் அவருக்கு அணிந்துரை எழுதுவதாவது?!

கடைசியில் அந்த நாள் வந்தது. எக்மோர் இக்ஸா மையத்தில் மணியின் புத்தக வெளியீடு. மணி முதலில் தன் புத்தகத்துக்கு வைக்க நினைத்திருந்த பெயர் ‘பால்வீதி’. ஆனால் ‘பாதரசம்’ பதிப்பாளர் சரோலாமா, தூரத்திலிருந்தே வாசித்து விட முடிகிற மாதிரியான, சட்டென்று மனதில் பதிகிற  ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’ என்கிற எளிய குறுந்தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஒளிப்பதிவாளரும், நடிகரும், நல்ல வாசகருமான இளவரசு அண்ணாச்சியும், நானும் சென்றிருந்தோம். மணியை தனக்குப் பிடிக்கும் என்று ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்த கவிஞர் இசையை மணியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர முடியுமா தம்பி என்று கேட்டேன். தனக்கு லத்தீன் அமெரிக்க வாசகர்கள் இருக்கிறார்கள் என்கிற மமதை கிஞ்சித்தும் இல்லாத கவிஞர் இசை பெருந்தன்மையுடன் நிகழ்ச்சிக்கு வரச் சம்மதித்து, தோளில் மாட்டிய பையுடன் வந்தும் விட்டார்.

வாத்தியார் பாலு மகேந்திரா அவர்களின் திரைப்பள்ளியில் பயின்ற நிறைய இளைஞர்கள் மணியின் சிஷ்யர்கள் என்று அறிவேன். அவர்கள்தான் அரங்கை நிறைத்தனர். கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான நண்பர் ரவி சுப்பிரமணியம், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எங்க ஊர் மக்கா  தாமிரா, ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொகுப்பு ஆசிரியரும், விரைவில் திரைப்படம் இயக்க இருப்பவருமான கவிஞர் சாம்ராஜ் உட்பட தெரிந்த சில முகங்களும், தெரியாத பல முகங்களுமாக நிகழ்ச்சி துவங்கியது. ரவி சுப்பிரமணியம் வழக்கமாக என்னிடம் சொல்வதைச் சொல்லிவிட்டு பாடித் துவக்கினார். ‘உங்க முன்னாடி பாடறேன். பிழையிருந்தா பொறுத்துக்கணும்’. அதற்கு இரு தினங்களுக்கு முன் வேறோர் நிகழ்ச்சியில் ஒரு பாடகர் சுபபந்துவராளி பாடினார். துவக்கத்தில் மட்டும்தான் சுபம் இருந்தது. அதை ரவியும், நானுமே கேட்டு மகிழ்ந்திருந்தோம்.  ‘சுதியில்லாம அந்தாள் பாடினதையே கேட்டாச்சு. உங்க பாட்டுல நிச்சயமா சுதி விலகாது. பாடுங்க ரவி’ என்று உற்சாகப்படுத்தினேன். பக்க வாத்தியம் ஏதும் இல்லாமல் சுதிசுத்தமாகப் பாடினார் ரவி.

முதலிலேயே கவிஞர் இசை பேசினார். எழுதிக் கொண்டு வந்திருந்த தாள்களைப் புரட்டி பாயிண்ட் பாயிண்டாக ஒரு கறாரான விமர்சகராகவே பேசினார் இசை. குரல் நடுங்கினாலும், உடல் மொழியில் ஜெனரல் சக்கரவர்த்தி போல் ஒரு மிடுக்கு.  ‘இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?’ என்கிற மாதிரியான கேள்வியை முன் வைத்தார். பாராட்ட வேண்டிய இடங்களையும் பாராட்ட மறக்கவில்லை. அடுத்து இளவரசு அண்ணாச்சி பேசினார். அவரது அறியா முகத்தை அன்று பலரும் அறிந்து கொண்டனர். ஆழ்ந்த படிப்பாளி அவர். தினமும் பேசிக் கொள்கிற  மிக நெருக்கமான நண்பர்கள் நாங்கள்  என்பதால் அவரது பேச்சில் எனக்கு ஆச்சரியமில்லை. மணியைப் பற்றியே அமைந்திருந்தது அவரது பேச்சு.

இறுதியாக நான் அழைக்கப்பட்டேன். இக்ஸா மையத்தின் கட்டுமானத்தின் போது என்னமோ மலையாள மாந்திரீகம் நடந்திருக்க வேண்டும். மைக்கில் நாம் பேசும் வார்த்தைகள் சுடச்சுட உடனுக்குடன் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நம் காதிலேயே கேட்கிறது. ‘ஆங் எந்தா? எந்து பறயு?’ என்று மனதுக்குள் கேட்டபடியே பேச்சைத் தொடர்வது சிரமமாக இருந்தது. நான் பேசிய அதே இடத்தில் அதற்கு முந்தைய நாள் நண்பர் ஜெயமோகன் தங்குதடையில்லாமல் நீண்ட நேரம் பேசினார். ஒருவேளை நாயர்களை மாந்திரீகம் தீண்டாது போல!

இசை தன் பேச்சில்  மணி எழுதியிருக்கும் ‘இதனால் அறியவரும் நீதி’ கதை வாசிப்பதில் தனக்கு ஏற்பட்ட தயக்கத்தைச் சொல்லியிருந்தார்.

தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்
அவன் கையில்
குடும்ப புகைப்படமொன்று
கிடைக்கிறது.
அதிலிருந்து தனியே தன்னுருவை
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்
எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல் நுனி
கூடவே வருவேனென்கிறது

‘இதனால் அறியவரும் நீதி’ குறித்து இசை பேசியபோது இந்தக் கவிதை நினைவுக்கு வந்து, ‘தற்கொலைக்கு தயாராகுபவன்கற கவிதய எளுதி படிக்கிறவனைக் கொலை பண்ணின பாவிப்பய இப்படி சொல்லுதானெய்யா! இவனையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்ன?’ என்று மனதுக்குள் நினைத்து, தம்பியின் ஹிப் சைஸைப் பார்த்து நினைத்ததை உடனே மனதுக்குள் அழித்தேன்.

அடுத்து பேசிய பதிப்பாளர் சரோலாமா, தொகுப்பிலுள்ள ‘ஈஸாவஸ்யம் இதம் சர்வம்’ என்கிற கதை குறித்து ஒரு விஷயம் சொன்னார். அந்தக் கதையில் புதுமைப்பித்தனின் ‘கடவுளும், கந்தசாமிப்பிள்ளையும்’ போல கடவுள் ஒரு கதாபாத்திரமாக வருவார். தான் ஒரு சிவபக்தன் என்பதால் அந்தக் கதை தனக்கு நெருடலாக இருந்ததாகவும், அதனால் அதன் தலைப்பை மணியின் ஒப்புதலோடு மாற்றிவிட்டதாகவும் சரோலாமா சொன்னார். ‘நாளைபின்னே ஒரு நல்லது கெட்டதுக்கு அவாள் மூஞ்சில என்னால முளிக்க முடியுமாய்யா?’ என்பதாக இருந்தது அவர் பேச்சு.

ஒரு சிவபக்தனுக்கும், கடவுளுக்கும் இடையே ஆன உறவு என்னை ஆச்சரியப்படுத்தியது. அதைவிட ஆச்சரியம் சரோலாமா ஒரு சிவபக்தனுக்குரிய எந்த அலங்காரமுமில்லாமல் சாதாரணமாகக் காட்சியளித்தது. நான் பார்த்த சிவபக்தர்கள் எல்லாரும் தெருமுக்கில் வரும் போதே திருநீறும், சிமிண்டும் கலந்த மணம் ஒன்று நம்மை வந்து சேரும். எழுந்தால், அமர்ந்தால், சாய்ந்தால் சிவநாமத்தை உச்சரிப்பார்கள். மணிக்கொரு தடவை சீலிங் ஃபேனைப் பார்த்தும் சிவநாமம் சொல்வார்கள். ஆனால் சரோலாமாவோ, மணி வீட்டு மீன் குழம்புக்கு அடிமையான சிவபக்தராக இருக்கிறார்.

இறுதியாக மணி ஏற்புரை நிகழ்த்தினார். மணி வழக்கமாக யாரையாவது கேலியாகவோ, கோபமாகவோ திட்டும் போது ‘ஜித்துமா’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்.
உதாரணத்துக்கு ஒன்று.

“உண்மையில் வெறுப்பின் அடியில் விருப்பம் இருக்கிறது என்பதெல்லாம் கப்ஸா தான். எனக்கு தெரிந்து ஹேட் அண்ட் லவ் என்பது பொறாமையின் நிஜ முகம். காதலில், பிடித்தவர் கரத்தை விட்டு விட ஈகோ சம்மதிப்பதில்லை என்பதே அறிவதற்கான முள். கைவசத்தில் இருந்தால் அப்புறமாய் கொன்று கொள்ளலாம் என்கிற நப்பாசை கூட இருக்கும். குறைந்த பட்ஷம் குற்றவாளி என்று நிரூபித்து கீழடக்குவது. ஆக்ரமிப்பின்றி வேறொன்றில்லை என்று அறிந்த போதிலும் எவ்வளவு சப்பைக்கட்டுகள் வேண்டியிருக்கிறது ஜித்துமா.”

நண்பர்கள் மத்தியில் அவருடைய ‘ஜித்துமா’ பிரபலமான ஒன்று. எங்கே அவர் பேசும் போது அந்த வார்த்தையை பயன்படுத்துவாரோ என்று நினைத்தேன். ஆனால் மிகச் சுருக்கமாக, வழக்கமாக நண்பர்களுடன் பேசுவது போல இயல்பாகப் பேசி ‘எல்லாருக்கும் தேங்க்ஸ்’ என்றார்.

முன் வரிசையில் மணியின் மனைவியும், அவரது மகனும் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி முழுக்க மணியைப் பற்றி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மணியின் மனைவி, ‘அப்ப நெஜமாவே இந்தாளு கெட்டிக்காரன்தானா? நாம நினைக்கிற மாதிரி இல்லியா?’ என்கிற குழப்பமும், ஆச்சரியமும் முகத்தில் தெரிந்து விடாதவண்ணம் கவனமாக அமர்ந்திருந்தார். கழுத்தில் ஒரு பைனாகுலருடன் அமர்ந்திருந்த மணியின் சின்னஞ்சிறு மகன் யாழன் எல்லோரையும் ஒரு வெறித்த பார்வை பார்த்தபடி இருந்தான். அதைப் பார்க்கும் போது, ‘ஜித்துமா’ என்று அவன் சொல்வது போலத்தான் இருந்தது.

 

 

நான்காவது புத்தகம் . . .

image‘அந்திமழை’ ஜூன் இதழில் கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன், கலாப்ரியா, ஜெயமோகன், சுகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, கோணங்கி போன்ற எழுத்தாளர்கள் தங்களின் முதல் புத்தகம் வெளிவர அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், அனுபவித்த இன்னல்களையும் சொல்லியிருக்கிறார்கள். படிக்கப் படிக்க ஆச்சரியமாகவும், சங்கடமாகவும் இருந்தது. இவை எதுவுமே எனக்கு ஏற்படவில்லை. ‘வார்த்தை’ சிற்றிதழில் எனது ஆரம்பகால கட்டுரைகள் வெளிவந்தன. பின் அந்தக் கட்டுரைகளை கோவையிலிருந்து வெளிவந்த ‘ரசனை’ இதழில் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா பிரசுரித்து வந்தார். பின்னர் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவக்கப்பட்ட போது, அதன் முதல் இதழிலிருந்துத் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். திடீரென்று ஒருநாள் ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிலிருந்த தம்பி சேதுபதி அருணாசலம் அழைத்தார். ‘ஒங்க கட்டுரைகளையெல்லாம் புத்தகமா போடலாம்னு இருக்கோம். அதுக்காகவே ஒரு பதிப்பகம் துவக்கறதாவும் உத்தேசம்’ என்றார். ‘சரி’ என்றதோடு என் வேலை முடிந்தது. ஒரு மாதத்துக்குள்ளாக ‘தாயார் சன்னதி’ புத்தகத்தைக் கொணர்ந்து என் கையில் கொடுத்தார், நண்பர் ‘நட்பாஸ்’ என்னும் பாஸ்கர். தமது முதல் புத்தகம் வெளிவருவதற்காக தாங்கள் பட்ட பாட்டை மூத்த எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருப்பதைப் படித்த இந்த வேளையில் எனது முதல் புத்தகம் வெளிவந்த விதத்தை இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அத்தனை பிரியமாக என்னிடம் புத்தகம் போடுவதற்கான அனுமதியைக் கேட்ட சேதுபதி அருணாசலம், அதற்கு சம்மதம் தெரிவித்த ரவிசங்கர், வ. ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழு, புத்தக உருவாக்கத்தில் உழைத்த ஹரன் பிரசன்னா, தான் எழுதிய எழுத்துக்களிலேயே சிறந்ததாகக் கருதுவதாக ‘தாயார் சன்னதி’க்கான அணிந்துரையைக் குறிப்பிட்ட மரியாதைக்குரிய ‘அண்ணாச்சி’ வண்ணதாசன், இவர்கள் இல்லையேல் ‘தாயார் சன்னதி’ இல்லை. எனது இரண்டாவது புத்தகமான ‘மூங்கில் மூச்சு’, ஆலமரமான ‘ஆனந்த விகடன்’ வெளியிட்டு பரவலான வாசகர் வட்டத்துக்கு இட்டுச் சென்றது. மூன்றாம் புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளிவந்ததில் என்னுடைய பங்கு எதுவுமே இல்லை.  ‘வம்சி’ பதிப்பகத்தின் சார்பாக தோழி ஷைலஜா அழைத்து பேசினார். அதற்கு முன் அவர் எனக்கு அறிமுகமே இல்லை. நான் சம்மதம் தெரிவித்து கட்டுரைகளை அனுப்பினேன். அவ்வளவே. அழகான ஓர் அணிந்துரையை நண்பர் செழியன் எழுதிக் கொடுத்தார். இப்போது எனது நான்காவது புத்தகமும் எனக்கு எந்த சிரமமும் கொடுக்காமல் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் வெளிவர இருக்கிறது. முந்தைய புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளியாகி மூன்றாண்டுகள் ஆகின்றன. அடுத்த புத்தகம் குறித்த எந்த யோசனையும் இல்லாமல் இருந்த என்னிடம் வழக்கம் போல ஒரு தொலைபேசி அழைப்புதான் இந்தப் புத்தகத்தைப் பற்றிய விருப்பத்தைச் சொன்னது. அழைத்தவர் அத்தனை பிரியமானவர். உடனே ‘சரி’ என்றேன்.

அழைத்தவர், ‘ஹரன் பிரசன்னா’.
பதிப்பகம், ‘தடம்’.(விகடன் அல்ல)

புத்தகத்தின் தலைப்பு, ‘உபசாரம்’.
அணிந்துரை எழுதியிருப்பவர், ‘ஜெயமோகன்’.

மூங்கில் மூச்சு

’ஆனந்த விகடன்’ பத்திரிக்கையில் தொடராக வந்து கொண்டிருந்த ’மூங்கில் மூச்சு’ புத்தகவடிவில் வெளிவந்து விட்டது.

’மூங்கில் மூச்சு’ ஆன்லைனில் வாங்க,

http://udumalai.com/?prd=Mungil+Muchu&page=products&id=10435