ஜித்துமா . . .

 

 

எழுதப்பட்டிருந்ததா
இது முன்னரே
இக்கணம் கனவில்
உணரப்பட்டிருந்ததா
எந்த புள்ளியில்
துவங்கும் ஒரு
தினம்
எந்த தினத்தில்
நீ உன்னை
அறிந்தாய்
களிப்பில் மிதந்த போது
புதிரின் முதல் சொட்டாய்
காதலை சப்பு கொட்டிய போது
கண்ணீரில் பிசுபிசுத்த
யாரோ ஒருவனின்
கரங்களை பற்றும் போது
கடவுளில் வியக்கும் போது
திடுக்கிடுகிறோம்
யார் நமக்கு முன்
எல்லாம் தெரிந்து வந்து
நமக்குள்
இருந்து கொள்வது
ஏழு கடல்
ஏற முடியாத
எழுபது மலைகள் தாண்டி
எங்கள் உயிர்க்கிளி
கிறக்கத்தில்
இருப்பது எங்கே
உண்மை
வெறும் வார்த்தை இல்லை
இந்த கணத்தை இந்த கனவை
சிருஷ்டித்து
இதை நீ தான் எழுதி கொண்டு இருக்கிறாய்
எத்தனை அநீதி,
எம் வாழ்வை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

 

இளையராஜாவைப் பற்றி இப்படியெல்லாம் ஒரு மனிதன் எழுதியதைப் படித்த பிறகு எப்படி அவருடன் நட்பு கொள்ளாமல் இருக்க முடியும்? மணி எம் கே மணியுடனான நட்புக்கும், அவரது எழுத்துகளுக்கும் மேற்கண்ட வரிகள்தான் வாசலாக அமைந்தது.

மணியின் எழுத்துலகுக்குள் நுழைந்தால் ஏராளமான திரைப்படங்கள் குறித்து எழுதித் தள்ளியிருந்தார். பொதுவாக திரைப்படங்கள் குறித்து எழுதப்படுகிற எழுத்துகளில் ஆர்வமில்லாத நான் மணியின் திரைப்பார்வையை ஆச்சரியமும், சந்தோஷமுமாக ரசிக்க ஆரம்பித்தேன். பதின் வயதுகளில் பார்த்து, பின் மனதுக்குள் எப்போதும் அசை போடும் அற்புதமான மலையாளப் படங்கள் குறித்து மணி அட்டகாசமாக எழுதியிருந்தார். அதுவும் என்ன மாதிரியான படங்கள்? அடூர் கோபாலகிருஷ்ணனின் கொடியேட்டம், ஸ்வம்வரம், பி. பாஸ்கரனின் நீலக்குயில் போன்ற படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்துக்கு அதிகம் வராத பத்மராஜனின் அரப்பட்டு கட்டிய கிராமத்தில் படத்தைப் பற்றியெல்லாம் சொல்லியிருந்தார். பத்மராஜனையும், பரதனையும் சிநேகிக்கும் மணி என் சிநேகிதரானார். வெறுமனே திரைப்படங்களைப் பார்த்து கதைச்சுருக்கம் எழுதுகிற வேலையை மணி செய்யவே இல்லை. கலைஞர்கள் குறித்து அவர் எழுதிய ஒன்றிரண்டு வரிகள் அவரோடு நெருக்கமாக்கின. பத்மராஜனைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.

“ஆனால் பத்மராஜன் நூறு வயது வாழ்ந்திருந்தாலும் வெட்ட வெளியில் இருந்து பூப்பறித்து காட்டி நம்மை திடுக்கிட வைத்துக் கொண்டு தான் இருந்திருப்பார். பொதுவாய் தன்னை விடவும் வித்தைக்காரனை கடவுள் நீடிக்க விட்டு வைக்க மாட்டான்.”

திரைக்கலைஞர்கள் மட்டும்தான் என்றில்லை. இலக்கியவாதிகளை மணி போற்றும் விதம் அலங்காரமில்லாதது.

“வாழ்வின் கூரிய உண்மைகளை அணைத்துக் கொண்டு அதை வாதையுடன் உள்வாங்கி சொட்டு சொட்டாய் விளக்கி செல்லும் திராணி இல்லாதவர்கள் பேசுகிற நாண்சென்ஸ் எல்லாம் சித்தாந்தங்களாகிக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் அசோகமித்திரன் எத்தனை வலியவர் என்பதை சொல்லி முடியாது.”

யோவ்! யாருய்யா நீ? இத்தனை நாளா எங்கேய்யா இருந்தே? என்று மனதுக்குள் கத்தினேன். ‘இங்கேதான் இருக்கேன். உங்களை எனக்கு நல்லாத் தெரியும். உங்களுக்குத்தான் என்னை இப்ப தெரிஞ்சிருக்கு’ என்று எங்களின் முதல் தொலைபேசி உரையாடலில் சொல்லாமல் சொன்னார், மணி.

 

அதுவரை அறிந்திருந்த மணியின் சொற்பமே என்னை சொக்க வைத்துக் கொண்டிருந்தபோது, அறிய நேர்ந்த மிச்சம் மேலும் நெருக்கமாக்கிவிட்டது. அதற்குப் பிறகு மணியின் எதுவும் எனக்கு அந்நியமில்லாமல் போய்விட்டது. தொடர்ந்து பல நாட்கள் பல விஷயங்கள் குறித்து பேசினோம் பேசினோம் பேசிக் கொண்டேயிருந்தோம். சுந்தரராமசாமியின் வாசகர் மணி என்பது ஏற்கனவே தெரியும். அவருடன் பேசும் போதுதான் அது பொய் என்பது தெரிய வந்தது. அவர் சு. ராவின் வாசகர் அல்ல. காதலர். மணி ஒரு விநோதக் கலவை. ஒரு பக்கம் மஸோக்கிஸம் பற்றி பேசுவார். பேச்சு அதிலிருந்து எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய ‘அம்ருதம் கமயா’ திரைக்கதை நோக்கிச் செல்லும். பின் அங்கிருந்து நேராக வண்டி ரோமன் பொலான்ஸ்கியின் ‘Venus in fur’க்குச் செல்லும். பின் எங்கெங்கோ சென்று சம்பந்தமே இல்லாமல் எங்க வீட்டுப் பிள்ளையில் வந்து நிற்கும். எம்.ஜி.ஆரின் சினிமாவை மணி வியந்து பேசும் போது அவர் குரலில் தயக்கமோ, கூச்சமோ இருக்காது. பாசாங்கில்லாதவர் மணி என்பதற்கு எம்.ஜி.ஆர் குறித்த அவரது சிலாகிப்பு, மற்றுமோர் உதாரணம். இப்படி மணியுடன் பேசத் துவங்கி, பேசிக்கொண்டே  வெளியூர்களுக்குச் சென்றோம். இரவெல்லாம் கண்முழித்து பேசித் தீரவில்லை. தூக்கம் கலையாமல் சென்னைக்குத் திரும்பி வந்து பேச்சைத் தொடர்ந்தோம். இன்னும் தொடர்கிறது. பேச்சினூடே ஒருநாள் லேசான கூச்சத்துடன் சொன்னார்.

‘சிறுகதைத் தொகுப்பு வரும் போல தெரியுது!’

‘யாரோடது, மணி?’

வேறெங்கோ பார்த்தபடி, ‘என்னோடதுதான்’.

எனக்கு அப்போதுதான் உறைத்தது. எத்தனை நாட்களாக எழுதிக் கொண்டிருக்கிறார்! இன்னும் இவருடைய புத்தகம் ஏதும் அச்சில் வரவில்லை. எல்லாவிதத்திலும் சின்னவனான நான் எழுதி நான்கு புத்தகங்கள் வந்துவிட்டன. இப்போது கூச்சம் மணியிடமிருந்து இறங்கி வந்து என் தோளில் ஏறிக் கொண்டது.

‘என்னாலான எல்லா உதவியும் செய்றேன்’ என்றேன்.

‘கதைகள் தரேன். படிச்சுட்டு உங்களுக்குத் தோணறத எழுதிக் குடுங்க. அதுக்கப்புறம் புஸ்தகம் வந்தாப் போதும்’.

பிரியத்தின் குரலல்ல அது. மதிப்பின் குரல். அத்தனை மதிப்பிற்குறியவன்தானா நான் என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டு ஒரு சின்ன நடுக்கத்துடன் படிக்கத் துவங்கினேன். எதிர்பார்த்த மாதிரிதான் இருந்தன, கதைகள். உண்மையைச் சொல்வதானால் எதிர்பார்த்ததற்கும் மேலாக. சில கதைகளைத் தொடர்ந்து வாசிக்க அச்சமாக இருந்தது. இதெல்லாம் எழுதலாமா என்று சில வரிகளும், இப்படியெல்லாம் எழுதலாமா என்று பல வரிகளும் இருந்தன. படித்து முடித்தவுடன் சில வார்த்தைகள் எழுதிக் கொடுத்தேன். கவனமாக ‘வாசகவுரை’ என்று எழுதினேன். ஆம். அது வாசகவுரைதான். மணியின் வாசிப்புக்கு முன், அவரது பரந்த வாழ்வனுபவத்துக்கு முன், அவரது பாசாங்கில்லாத ரசனைக்கு முன் சின்னஞ் சிறியனான நான் அவருக்கு அணிந்துரை எழுதுவதாவது?!

கடைசியில் அந்த நாள் வந்தது. எக்மோர் இக்ஸா மையத்தில் மணியின் புத்தக வெளியீடு. மணி முதலில் தன் புத்தகத்துக்கு வைக்க நினைத்திருந்த பெயர் ‘பால்வீதி’. ஆனால் ‘பாதரசம்’ பதிப்பாளர் சரோலாமா, தூரத்திலிருந்தே வாசித்து விட முடிகிற மாதிரியான, சட்டென்று மனதில் பதிகிற  ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’ என்கிற எளிய குறுந்தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஒளிப்பதிவாளரும், நடிகரும், நல்ல வாசகருமான இளவரசு அண்ணாச்சியும், நானும் சென்றிருந்தோம். மணியை தனக்குப் பிடிக்கும் என்று ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்த கவிஞர் இசையை மணியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர முடியுமா தம்பி என்று கேட்டேன். தனக்கு லத்தீன் அமெரிக்க வாசகர்கள் இருக்கிறார்கள் என்கிற மமதை கிஞ்சித்தும் இல்லாத கவிஞர் இசை பெருந்தன்மையுடன் நிகழ்ச்சிக்கு வரச் சம்மதித்து, தோளில் மாட்டிய பையுடன் வந்தும் விட்டார்.

வாத்தியார் பாலு மகேந்திரா அவர்களின் திரைப்பள்ளியில் பயின்ற நிறைய இளைஞர்கள் மணியின் சிஷ்யர்கள் என்று அறிவேன். அவர்கள்தான் அரங்கை நிறைத்தனர். கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான நண்பர் ரவி சுப்பிரமணியம், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எங்க ஊர் மக்கா  தாமிரா, ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொகுப்பு ஆசிரியரும், விரைவில் திரைப்படம் இயக்க இருப்பவருமான கவிஞர் சாம்ராஜ் உட்பட தெரிந்த சில முகங்களும், தெரியாத பல முகங்களுமாக நிகழ்ச்சி துவங்கியது. ரவி சுப்பிரமணியம் வழக்கமாக என்னிடம் சொல்வதைச் சொல்லிவிட்டு பாடித் துவக்கினார். ‘உங்க முன்னாடி பாடறேன். பிழையிருந்தா பொறுத்துக்கணும்’. அதற்கு இரு தினங்களுக்கு முன் வேறோர் நிகழ்ச்சியில் ஒரு பாடகர் சுபபந்துவராளி பாடினார். துவக்கத்தில் மட்டும்தான் சுபம் இருந்தது. அதை ரவியும், நானுமே கேட்டு மகிழ்ந்திருந்தோம்.  ‘சுதியில்லாம அந்தாள் பாடினதையே கேட்டாச்சு. உங்க பாட்டுல நிச்சயமா சுதி விலகாது. பாடுங்க ரவி’ என்று உற்சாகப்படுத்தினேன். பக்க வாத்தியம் ஏதும் இல்லாமல் சுதிசுத்தமாகப் பாடினார் ரவி.

முதலிலேயே கவிஞர் இசை பேசினார். எழுதிக் கொண்டு வந்திருந்த தாள்களைப் புரட்டி பாயிண்ட் பாயிண்டாக ஒரு கறாரான விமர்சகராகவே பேசினார் இசை. குரல் நடுங்கினாலும், உடல் மொழியில் ஜெனரல் சக்கரவர்த்தி போல் ஒரு மிடுக்கு.  ‘இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?’ என்கிற மாதிரியான கேள்வியை முன் வைத்தார். பாராட்ட வேண்டிய இடங்களையும் பாராட்ட மறக்கவில்லை. அடுத்து இளவரசு அண்ணாச்சி பேசினார். அவரது அறியா முகத்தை அன்று பலரும் அறிந்து கொண்டனர். ஆழ்ந்த படிப்பாளி அவர். தினமும் பேசிக் கொள்கிற  மிக நெருக்கமான நண்பர்கள் நாங்கள்  என்பதால் அவரது பேச்சில் எனக்கு ஆச்சரியமில்லை. மணியைப் பற்றியே அமைந்திருந்தது அவரது பேச்சு.

இறுதியாக நான் அழைக்கப்பட்டேன். இக்ஸா மையத்தின் கட்டுமானத்தின் போது என்னமோ மலையாள மாந்திரீகம் நடந்திருக்க வேண்டும். மைக்கில் நாம் பேசும் வார்த்தைகள் சுடச்சுட உடனுக்குடன் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நம் காதிலேயே கேட்கிறது. ‘ஆங் எந்தா? எந்து பறயு?’ என்று மனதுக்குள் கேட்டபடியே பேச்சைத் தொடர்வது சிரமமாக இருந்தது. நான் பேசிய அதே இடத்தில் அதற்கு முந்தைய நாள் நண்பர் ஜெயமோகன் தங்குதடையில்லாமல் நீண்ட நேரம் பேசினார். ஒருவேளை நாயர்களை மாந்திரீகம் தீண்டாது போல!

இசை தன் பேச்சில்  மணி எழுதியிருக்கும் ‘இதனால் அறியவரும் நீதி’ கதை வாசிப்பதில் தனக்கு ஏற்பட்ட தயக்கத்தைச் சொல்லியிருந்தார்.

தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்
அவன் கையில்
குடும்ப புகைப்படமொன்று
கிடைக்கிறது.
அதிலிருந்து தனியே தன்னுருவை
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்
எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல் நுனி
கூடவே வருவேனென்கிறது

‘இதனால் அறியவரும் நீதி’ குறித்து இசை பேசியபோது இந்தக் கவிதை நினைவுக்கு வந்து, ‘தற்கொலைக்கு தயாராகுபவன்கற கவிதய எளுதி படிக்கிறவனைக் கொலை பண்ணின பாவிப்பய இப்படி சொல்லுதானெய்யா! இவனையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்ன?’ என்று மனதுக்குள் நினைத்து, தம்பியின் ஹிப் சைஸைப் பார்த்து நினைத்ததை உடனே மனதுக்குள் அழித்தேன்.

அடுத்து பேசிய பதிப்பாளர் சரோலாமா, தொகுப்பிலுள்ள ‘ஈஸாவஸ்யம் இதம் சர்வம்’ என்கிற கதை குறித்து ஒரு விஷயம் சொன்னார். அந்தக் கதையில் புதுமைப்பித்தனின் ‘கடவுளும், கந்தசாமிப்பிள்ளையும்’ போல கடவுள் ஒரு கதாபாத்திரமாக வருவார். தான் ஒரு சிவபக்தன் என்பதால் அந்தக் கதை தனக்கு நெருடலாக இருந்ததாகவும், அதனால் அதன் தலைப்பை மணியின் ஒப்புதலோடு மாற்றிவிட்டதாகவும் சரோலாமா சொன்னார். ‘நாளைபின்னே ஒரு நல்லது கெட்டதுக்கு அவாள் மூஞ்சில என்னால முளிக்க முடியுமாய்யா?’ என்பதாக இருந்தது அவர் பேச்சு.

ஒரு சிவபக்தனுக்கும், கடவுளுக்கும் இடையே ஆன உறவு என்னை ஆச்சரியப்படுத்தியது. அதைவிட ஆச்சரியம் சரோலாமா ஒரு சிவபக்தனுக்குரிய எந்த அலங்காரமுமில்லாமல் சாதாரணமாகக் காட்சியளித்தது. நான் பார்த்த சிவபக்தர்கள் எல்லாரும் தெருமுக்கில் வரும் போதே திருநீறும், சிமிண்டும் கலந்த மணம் ஒன்று நம்மை வந்து சேரும். எழுந்தால், அமர்ந்தால், சாய்ந்தால் சிவநாமத்தை உச்சரிப்பார்கள். மணிக்கொரு தடவை சீலிங் ஃபேனைப் பார்த்தும் சிவநாமம் சொல்வார்கள். ஆனால் சரோலாமாவோ, மணி வீட்டு மீன் குழம்புக்கு அடிமையான சிவபக்தராக இருக்கிறார்.

இறுதியாக மணி ஏற்புரை நிகழ்த்தினார். மணி வழக்கமாக யாரையாவது கேலியாகவோ, கோபமாகவோ திட்டும் போது ‘ஜித்துமா’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்.
உதாரணத்துக்கு ஒன்று.

“உண்மையில் வெறுப்பின் அடியில் விருப்பம் இருக்கிறது என்பதெல்லாம் கப்ஸா தான். எனக்கு தெரிந்து ஹேட் அண்ட் லவ் என்பது பொறாமையின் நிஜ முகம். காதலில், பிடித்தவர் கரத்தை விட்டு விட ஈகோ சம்மதிப்பதில்லை என்பதே அறிவதற்கான முள். கைவசத்தில் இருந்தால் அப்புறமாய் கொன்று கொள்ளலாம் என்கிற நப்பாசை கூட இருக்கும். குறைந்த பட்ஷம் குற்றவாளி என்று நிரூபித்து கீழடக்குவது. ஆக்ரமிப்பின்றி வேறொன்றில்லை என்று அறிந்த போதிலும் எவ்வளவு சப்பைக்கட்டுகள் வேண்டியிருக்கிறது ஜித்துமா.”

நண்பர்கள் மத்தியில் அவருடைய ‘ஜித்துமா’ பிரபலமான ஒன்று. எங்கே அவர் பேசும் போது அந்த வார்த்தையை பயன்படுத்துவாரோ என்று நினைத்தேன். ஆனால் மிகச் சுருக்கமாக, வழக்கமாக நண்பர்களுடன் பேசுவது போல இயல்பாகப் பேசி ‘எல்லாருக்கும் தேங்க்ஸ்’ என்றார்.

முன் வரிசையில் மணியின் மனைவியும், அவரது மகனும் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி முழுக்க மணியைப் பற்றி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மணியின் மனைவி, ‘அப்ப நெஜமாவே இந்தாளு கெட்டிக்காரன்தானா? நாம நினைக்கிற மாதிரி இல்லியா?’ என்கிற குழப்பமும், ஆச்சரியமும் முகத்தில் தெரிந்து விடாதவண்ணம் கவனமாக அமர்ந்திருந்தார். கழுத்தில் ஒரு பைனாகுலருடன் அமர்ந்திருந்த மணியின் சின்னஞ்சிறு மகன் யாழன் எல்லோரையும் ஒரு வெறித்த பார்வை பார்த்தபடி இருந்தான். அதைப் பார்க்கும் போது, ‘ஜித்துமா’ என்று அவன் சொல்வது போலத்தான் இருந்தது.

 

 

அசலிசைக் கலைஞன்

 

74497_162201910485452_4781405_n

அம்மாஆஆஆஆஆடி ஈஈஈஈஈஈஈ . . . பொண்ணுக்குத் தங்க மனசு’ என்கிற ‘ராமன் எத்தனை ராமனடி’ படப்பாடல் எனக்கு சௌந்தர்ராஜனையோ, கணேசனையோ, விஸ்வநாதனையோ நினைவுபடுத்துவதில்லை. இப்போதும் எங்காவது தூரத்திலிருந்து, காற்றில் கலந்து என் காதுகளை அந்தப் பாடல் எட்டும் போது திருநவேலியின் பூதத்தான் முக்கில் சிவப்புச் சட்டை அணிந்து அந்தப் பாடலைப் பாடிய நாகர்கோயில் தமிழ்மகன் உசேனின் புதல்வர் ஷாஜி தான் நினைவுக்கு வருகிறார். ‘காதலிக்க நேரமில்லை’ பாடல், லாலா சத்திரமுக்கு மேடையில் பாடிய டிரெம்பெட் மாரியப்பனை ஞாபகப்படுத்துகிறது. அதற்குப் பிறகுதான் கோவிந்தராஜனும், முத்துராமனும் வந்து சேர்வார்கள். ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் ‘பால் போலவே’ பாடலைக் கேட்கும் போது கவிஞர் இசைக்கு உறவினரான வாணிஶ்ரீயைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு கண்ணம்மாக்காவே முன்னே வருகிறார். எண்பதுகளில் பதின்வயதுகளைக் கடந்த திருநவேலி இளைஞர்களுக்கு, ‘அவள் ஒரு நவரச நாடகம்’ பாடலைப் பாடியது பாலசுப்ரமணியமல்ல. ‘ஆடலரசன்’ பிரபாகரன்தான்.

இப்படி அசலை மறக்கடித்த நகல்களுக்கு மத்தியில் ஒரு நகலை இன்னொரு நகல் பின்னுக்குத் தள்ளி அதுவே எனக்கு அசலானது. ‘அடி கோமாதா’ என்கிற பாலசுப்ரமணியனின் பாடலை, நான் திருநவேலி சம்சுதீனை நினைத்தபடியேதான் கேட்பது வழக்கம். கோவையைச் சேர்ந்த மெல்லிசைப் பாடகரும், கவிஞருமான ஜான் சுந்தரின் குரலில் அந்தப் பாடலைக் கேட்ட பிறகு, இளைய திலகம் மறைந்து, ‘இளைய நிலா’ ஜான் என் கண்களுக்குள் வந்தார்.

திருநவேலிப் பகுதிகளில், ‘நன்றாகப் பாடுபவர்களை’ நல்லா பாட்டு படிப்பான் என்பார்கள். ஜானுக்கு பாட்டு பாடவும் தெரியும். படிக்கவும் தெரியும். எழுதவும் தெரியும்.

சுய நலத்தின் உச்சத்தில்
நிற்குமிவனை நெருங்காதிருங்கள்
பெருங்கருணையுடன் அணுகும் உங்களிடம்
கொஞ்சம் சுதந்திரம்
கொஞ்சம் செல்வம்
கொஞ்சம் போகம்
கொஞ்சம் தாய்மையென
சகலத்தையும் இரவல் கேட்குமிவன்
நீங்கள் வற்றத்துவங்குகையில்
வேறொரு வாசலில் குவளையோடு நிற்பான்
நீங்கள் புலம்பத் துவங்கியிருப்பீர்கள்
சுய நலத்தின் உச்சத்தில்
நிற்குமிவனை நெருங்காதிருங்கள்.

மேற்கண்ட கவிதை, ஜான் சுந்தர் எழுதியதுதான். ஜான் கட்டுரைகள் எழுதுவார் என்கிற விவரத்தை ஒளித்து வைத்திருந்தார். ‘நகலிசைக் கலைஞன்’ என்னும் கட்டுரைத் தொடர், புத்தகமாக வெளிவந்த பிறகு அந்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

14079485_798163146991369_7278479656802010952_n

தனது மேடைக் கச்சேரி அனுபவங்களையும், தான் சந்தித்த கலைஞர்களையும், அவர்களுக்குள் இருந்த மேன்மையான மனிதர்களையும், அவர்களது வறுமையின் செம்மையையும் சுவாரஸ்யமாகச் சொல்லி, நம்மைச் சிரிக்க, அழ வைக்கிறார். பெரியக்கா ரோஸ்மேரியின் இன்னும் நரைக்காத தலைமுடியும், தங்கை காளியம்மாவின் ‘எண்ணே’ என்கிற விளிப்பும், அத்தையின் ‘எய்யா ச்சாப்பிடுதியா’வும்தான், பின்னாளில் ஜான் எழுதுவதற்கான உரமாகியிருக்க வேண்டும். தமிழகத்து மூவிருந்தாளி அப்பாவுக்கும், மலையாளத்து அம்மைக்கும் மகனாகப் பிறந்த ஜான் தன்னை ‘இரு வேறான கலாச்சாரங்களுக்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தேன். ’செம்மீனும் கட்டபொம்மனுமான’ சேர்மானம் அது’ என்கிறார்.

ஒரு மெல்லிசைப் பாடகனை அவனது அபார ரசனை கையைப் பிடித்து எழுதக் கொண்டு சென்று விட்டதை நகலிசைக் கலைஞனின் பல இடங்களில் நம்மால் உணர முடிகிறது. ’ஜானி’ திரைப்படத்தின் ’ஒரு இனிய மனது’ பாடல் காட்சியில் ரஜினி, திருட வந்ததை மறந்து பாட்டுக்குள் சிக்கிக்கொள்வார் (அவர் மட்டுமா?). ஒருவர் பாடுவதை இத்தனை வகையாக ரசிக்க முடியுமா? இயக்குனர் மகேந்திரன் நமக்குக் காட்டிய அழகு ரஜினியை அதற்குப்பிறகு பார்க்கவே முடியவில்லை என்று வியக்கிற இடம் ஜானின் ரசனைக்கு ஒரு சான்று. ‘தவில்காரர் பாலையாவும் அவரது சகா சாரங்கபாணியும் பொறுப்பில்லாமல் செத்துப்போனால் பாவம் தமிழ்த்திரைதான் என்ன செய்யும்’ என்று புலம்பவும் ஜான் தயங்கவில்லை.

சினிமா பாடல்களும், சினிமாவும் மட்டுமேதான் ரசனையில் சேர்த்தியா என்ற கேள்வி எழலாம். சக நகலிசைக் கலைஞர்களின் வாழ்வை ஜான் சொல்லியிருக்கும் விதத்தைப் படிக்கும் போது எண்ணற்ற சினிமா பாடல்களே அவரது வாழ்க்கையின் சகலத்தையும் நிரப்பியிருக்கிறது என்பதைக் காண முடிகிறது. சக கலைஞர் வசந்தன் குடிக்கு அடிமையாகிறார். (அப்போதுதானே அவர் கலைஞர்!?) ஓடுகிற பேருந்தில் இருந்து இறக்கி விடப்படுகிறார். சொல்லப் போனால் தள்ளப்படுகிறார். அதற்குப் பிறகு நடந்ததை ஜான் சொல்கிறார். “கீழே விழுந்து புரண்டு  கொண்டிருக்கும் போது, இன்னொரு பேருந்து அவரைக் கடந்து செல்கிறது. அடுத்து வந்த பேருந்து அவரைத் தாண்டிப் போக அதன் உள்ளிருந்து ’என்ன என்ன கனவு கண்டாயோ சாமீ’ எனக் கசிந்த பாடல் காதில் விழுந்த கணத்தில் வெடித்துக் கதறினார் வசந்தன். இளையராஜாவின் குரல் கொண்ட அந்த பஸ்ஸுக்குப் பின்னால் ’அப்ப…… அப்ப……’ என்று கத்திக் கொண்டே ஓடினார்”. இந்த சம்பவத்தை அப்படியே சொல்வது எல்லோராலும் முடியும்தான். ஆனால் ‘இளையராஜாவின் குரல் கொண்ட அந்த பஸ்’ என்கிற வரி எல்லோருக்கும் சிக்காது.

தொண்ணூறுகளில் போத்தனூர் ரயில் நிலையமும் ரயில்வே குடியிருப்புகளின் சில வீதிகளும் மிதமான குளிரும் ’நாம் பாலுமகேந்திரா படத்துக்குள் உலவிக் கொண்டிருக்கிறோமோ?’ என்று நினைக்க வைக்கும்’ என்கிற ஜானின் வரிகளை நான் ‘வாத்தியார்’ பாலு மகேந்திராவிடமே சொல்லியிருக்கிறேன். நான் சொன்ன இடங்களும், காலமும்தான் வேறு. ஆனால் வார்த்தைகளும், உணர்வும் ஜானைப் போலவே!

நான் பார்த்தவரையில் மெல்லிசை மேடைக் கலைஞர்கள் ஏதோ ஒருவகையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். திரைத்துறையில் தம் வாழ்வின் கடைசித் துளி வரை தம்மை எந்த வகையிலும் நிரூபிக்க இயலாமல் மக்கிப் போனவர்களின் துயர வாழ்க்கை மெல்லிசை மேடைக் கலைஞர்களுக்கில்லை. ஒன்றுமே இல்லையென்றாலும், ஒரு மேசை மீது ஏறி நின்று பாடி நூறு ஜோடிக் காதுகளையாவது சென்றடைவார்கள். ஆனால் வறுமையும், அவமதிப்பும் எல்லா கலைக்கோட்டிகளின் உடன்பிறந்தவைதான். ஜானின் சக நகலிசைக் கலைஞர் வசந்தனை ஊரே கொண்டாடுகிறது. ஆனால் அவர்களுக்கே உரிய நியாயத்துடன் வீட்டில் அவரை நடத்தும் விதத்தை வசந்தன் இப்படி சொல்கிறார்.’அந்த முண்டை ’ம்க்கும்’ம்பா’ அவங்காத்தா ’ஏம்ப்பா மில்லுக்கே போலாமில்ல’ம்பா… எல்லாம் நேரம்…

இந்த வசந்தன் தான் ‘இளையராஜாவின் குரல் கொண்ட பஸ்ஸைத் துரத்திக் கொண்டு அழுதபடியே ஓடுகிறார்.

மெல்லிசைப் பாடகர்கள் தங்கள் வாழ்க்கையிலும் அவ்வப்போது சூழலுக்கேற்ப திரையிசைப் பாடல்களை பயன்படுத்துவார்கள் என்பது நகலிசைக் கலைஞன் மூலம் எனக்கு ஊர்ஜிதமானது. வண்ணதாசன் அண்ணாச்சியின் ‘வேர்’ சிறுகதையில் ஒரு கதாபாத்திரமாக வரும் ‘தாடி’ ரத்தின பாகவதரின் மகன்கள் குடும்பச் சண்டையை பாடல்கள் மூலமே நிகழ்த்துவதைப் பார்த்திருக்கிறேன். மாடியில் அமர்ந்தபடி தன்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கும் தன் இளைய சகோதரனுக்கு பதில் சொல்லும் விதமாக, கைக்குழந்தையாக இருந்த தனது மகனை கையில் தூக்கிப் பிடித்தபடி ரத்தின பாகவதரின் மூத்த மகன் பாடுவார்.

‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு.
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு.

பயல் கூப்பாடு போட்டு அழுவான். ‘பச்சப்புள்ளய ஏன் இப்படி பயங்காட்டி அள வக்கிய?’ என்று அவர் வீட்டம்மா பிள்ளையைப் பிடுங்கிச் செல்வார்.

நகலிசைக் கலைஞர் டேனியலும் இப்படி சூழலுக்கேற்ப வீட்டிலும் ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’ பாடுபவர்தான். அவரே தன் மகள் தான் தேர்ந்தெடுத்த துணையுடன் வீட்டை விட்டு விலகிச் சென்ற பிறகு ‘நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்’ என்று தன் சின்னஞ்சிறிய வீட்டிலிருந்தபடி கதறுகிறார். டேனியலைப் பற்றிய கட்டுரை முடிந்த பிறகு அதைக் கடந்து வர எனக்கு சில மணி நேரம் பிடித்தது.

நகலிசைக் கலைஞனில் குரலை விற்று தொழிலை வாங்கியிருக்கிற சூரியை நான் சந்தித்திருக்கிறேன். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் இளையராஜாவின் வீட்டு வாசலில் காத்துக் கிடந்து, அவரிடம் பாடிக் காட்டி ஒலிப்பதிவுக்கு அவர் அழைக்கும் வரைக்கும் சென்னையில் காத்திருக்க இயலாமல் கோவைக்குத் திரும்பியவர். இன்றைய சூரியைப் பற்றி ஜான் இப்படி சொல்கிறார்.

“இளமையின் துடிப்பு மிகுந்த குரலால் கேட்பவரைக் கட்டிப் போட்ட அந்த அப்பாவிக் கலைஞன், தனது இருபது வருடக் கனவை அவிழ்த்து எறிந்துவிட்டு வெற்றுடம்புடன் இடுப்பில் கட்டியிருந்த வேட்டியின் மேல், துண்டைக் கட்டிக் கொண்டு புரோகிதம் செய்யத் தயாரானான். வேதம் ஓதுவதில் எந்த விதமான கவுரவக் குறைச்சலும் இல்லை. நான் செய்யப் போவது கடவுள் தொண்டு. தனக்கு சேவை செய்ய பணிக்கிறான் சிவன். சரணடைந்து விடும் மனோபாவத்திற்கு வந்து விட்டான் இவன்.

“பாடிக் கொண்டே இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் நபர்களை நீங்கள் கடந்திருக்கக் கூடும். அழுது கொண்டே வண்டி ஓட்டும் எவரையாவது கவனித்திருக்கிறீர்களா? பிறக்கும் போதே உடன்பிறந்த இசையை, ஆன்மாவோடு ஒட்டியிருக்கிற கவச குண்டலத்தை பிய்த்து எடுப்பது எத்தனை வேதனை? வலிக்க வலிக்க வாளால் அறுத்து அதை உடம்பிலிருந்து உரித்து எடுக்கப் பார்க்கிறான் கர்ண மகாராஜன்! “

சூரியின் குரலில்

‘ஸ்ரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரீ நந்தந ஸ்ரீநிகேதந
குருகுப்த பதோ வாசா ஸித்தோ வாகீஸ்வரேஸ்வர’

கேட்பதில் எனக்கு விருப்பமில்லை. அதை ராஜாமணி மாமாவின் குரலில் பல நூறு முறை கேட்டாகிவிட்டது. சூரி பாடி ‘வா வா வசந்தமே, சுகம் தரும் சுகந்தமே’ கேட்க வேண்டும்.

நகலிசைக் கலைஞனில் ‘தண்ணீர் பிடித்து வைக்கிற சாக்கில் எதிர் வீட்டுப் பெண்ணை ’நோக்கலாம்’ என்று ஒளிவுமறைவில்லாமல் தன்னைத் திறந்துக் காட்டுகிற ஜானை, உருவம் கண்டு எள்ளாமையை அவருக்குச் சொல்லாமல் சொல்லிக் கொடுத்த மைக்கேலை, ‘இருதயத்துல வால்வு போச்சுன்னா வாழ்வே போச்சு சார்’ என்று சொல்கிற இளங்கோ மாஸ்டரை, நோட்ஸ் ஸ்டாண்டில் குமுதத்தின் நடுப்பக்கத்திலிருந்து நாகராஜை பார்த்து வெட்கப்படுகிற சிலுக்கு ஸ்மிதாவை . . . இப்படி பலரைப் பார்க்க முடிகிறது. ‘ஆத்து என்றால் டிமிக்கி. டிமிக்கி என்றால் எஸ்கேப். எஸ்கேப் என்றால் எஸ்கேப்புதான்’ என்பது மாதிரியான புது வார்த்தைகளும், விளக்கங்களும் கிடைக்கின்றன.

“நீங்கள் விடுப்பு எடுத்துக் கொண்ட ஒரு சில நாட்களில் வேறு வேறு பாவாக்கள் ’பாமாலை’யில் வந்தாலும் உண்மையில் எங்கள் பள்ளிப்பருவத்து விடியல்களை சாம்பிராணிப் புகைமுழக்கி ரட்சித்தவர் நீங்களல்லவா ஷாஹென்ஷா?”

“மாதாக்கட்சிக்காரன் ஒருத்தன் பால்யத்தின் பேதமையில் ரொம்ப நாளாக ’ஓடிவருகிறான் உதயசூரிய’னை அல்லாக்கட்சி பாட்டு என்றே நினைத்திருந்தான். லத்தீப்பின் வாப்பாதான் அவனை அப்படி நம்பச்செய்தார். அப்படி நம்பச்செய்தது அவரா அல்லது பாட்டுக்கு இஸ்லாமிய நிறஞ்சேர்க்கும் மேண்டலின், ஹார்மோனியம், புல்புல் தாரா, டெனர் பேஞ்ஜோ, ஷெனாய், டேப், டோலி, தப்லா முதலான வாத்தியங்களுள் உங்கள் குரல்வளையும் ஒன்று என அவன் நம்பக் காரணமாயிருந்த தாங்களா ஜனாப் ?”

“நாபியிலிருந்து எழும் நாதம் கேட்கும் உயிர்களைத் தொட்டே விடுகிறது என்கிறார்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலாக எங்களைக் கட்டி வைத்திருக்கும் ரகஸியமும் அதுவேதானா? அப்படியானால் நமக்குள் இருப்பதும் தொப்புள் கொடி உறவா? உங்கள் நாபிக்கமலம் மலர்த்தி நபிக்கமலம் சேர்ந்தீர்களா?”

அலை முழங்கிய கடல்’ என்ற நாகூர் ஹனீஃபாவுக்கான அஞ்சலிக் கட்டுரையில் இப்படியெல்லாம் எழுதியிருக்கிற ஜான், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் பங்குத்தந்தை அந்தோணிமுத்து சொல்லிக் கொடுத்து ”என் ஆயர் ஆண்டவர் எனக்கென்ன குறைவு” என்று பாடி தன் பாட்டுப் பயணத்தைத் துவக்கியவர். இவர் ஏன் சங்கீதமே படித்திராமல் சங்கராபரணம் பாடுகிற கலைச்செல்வனைப் பார்த்து ‘சரஸ்வதி கடாக்‌ஷம்’ என நூர்தீன் பாய் சிலாகிப்பதைக் கேட்டு பரவசமடைகிறார் என்றுதான் புரியவேயில்லை.

இந்தக் கட்டுரை முடியாமல் நீண்டுகொண்டே போகுமோ என்று அஞ்சினேன். அப்போதுதான் நகலிசைக் கலைஞனில் உள்ள ஒரு வரி நினைவுக்கு வந்தது.

“தனித்த கருவியொன்றை தேர்ந்தெடுக்கும் வளர்கலைஞன், கொஞ்சம் இலக்கணப் பிழைகளோடு வாசிக்கிறான் என்றாலும் மேடையையும், ரசிகனின் விழிகளையும் நிரப்பிவிடுகிறான்.”

இந்தக் கட்டுரையின் கடைசிவரி, இதுதான்.

நல்லதோர் வீணை செய்தே . . .

 

kumaraguruparan

 

‘உக்கிரம் என்பது
நிலவின் வெளிச்சத்தில் அருகும் தனிமை’.

கவிஞர் குமரகுருபரன் எழுதிய இந்தக் கவிதை வரிகளை ஜெயமோகன் சிலாகித்துச் சொன்ன போதுதான் குமரகுருபரன் என்கிற கவிஞரை நான் அறிந்தேன். அன்றைய தினம் குமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது‘ கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதாக இருந்தார், ஜெயமோகன். அந்த நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன். நானறியாத குமரகுருபரன் என்னை அறிந்திருந்தார். அருகில் வந்து பிரியமும், கனிவுமாக என் கைகளைப் பிடித்துக் குலுக்கி, நிகழ்ச்சிக்கு வந்ததுக்கு நன்றி, சுகா’ என்றார்.

ஜெயமோகனுடன் 21 மணிநேரம்’ என்கிற கட்டுரையில் இதைப் பற்றி எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, நம்ம ஊர்க்காரரா இருந்துக்கிட்டு, நம்மள ஒரு வார்த்த சாப்பிடச் சொல்லலியே’ என்று நான் வேடிக்கையாக எழுதியிருந்ததற்காக, ‘அன்பும், மாப்பும்’ என்று குமரகுருபரன் எழுதியிருந்ததாகக் கேள்விப்பட்டேன். அந்த ஒரு முறைதான் குமரகுருபரனைச் சந்தித்திருக்கிறேன்.

‘அறுபடும் வேர் ஒன்று
மரத்தின் நினைவுகளை
எழுதிக்கொண்டிருக்கிறது’

என்று எழுதிய குமரகுருபரனைப் பற்றிய என்னுடைய நினைவுகள் இவ்வளவுதான். ஆனால் அவரது மறைவுச் செய்தி வந்ததிலிருந்து மனம் அவரைச் சுற்றியே வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் கவிஞர் ப.தியாகுவும் இப்படித்தான் குமரகுருபரனைப் போலவே இள வயதில் மறைந்தார். தியாகுவை எனக்கு அறிமுகமில்லையென்றாலும் அவரது மறைவு குறித்து தொலைபேசியில் என்னிடம் பகிர்ந்த தியாகுவின் நண்பரும், சக கவிஞருமான ஜான் சுந்தரின் சிதறிய குரலொலி இன்னமும் நினைவில் உள்ளது.

இளம் கவிஞரான வைகறையும் மிகச் சமீபத்தில் மறைந்தார். எழுகிறவர்கள், கலைஞர்கள், குறிப்பாக கவிஞர்கள் ஏன் இப்படி சீக்கிரமே நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் சொல்வது போல் குடி மட்டுமே காரணமாக இருக்குமா? அல்லது ஓர் ஒழுங்கில் அமையாத வாழ்க்கைமுறை காரணமா? இல்லை, கவியுள்ளம் கொண்ட மற்ற கவிஞர்களும், எழுத்துக்காரர்களூம் சொல்வது போல புறக்கணிப்பால், தனிமையின் உக்கிரத்தால் இறந்து போகிறார்களா?

எழுதுகிறவர்கள் தங்களை அசாதாரணர்கள் என்றும், தங்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கொம்புகள் உண்டு என்றும் நம்புகிறார்கள். எல்லோரையும் போல தமக்கும் மனித உடம்புதான் என்பதை அவர்கள் உணர்வதாக இல்லை. சகோதரர் குமரகுருபரன் குடிப்பழக்கம் உடையவரா, அல்லாதவரா என்பது பற்றி எனக்குத் தெரியாது. போதுமான அளவு தூங்காதவராக இருந்திருக்கலாம். ஆனால், அவரது அநேக புகைப்படங்களில் புகையும் சிகரெட்டுடனேயேதான் பார்த்திருக்கிறேன். அவரது உயிரைக் குடித்ததில் சிகரெட்டுக்கு பெரும் பங்கு இருந்திருக்கும் என்பதை மறுக்கவே முடியாது. எழுதுகிறவன் விசேஷமானவன் என்று அவனே நம்பும் பட்சத்தில், மற்றவர்களை விட கூடுதல் சிரத்தை எடுத்து தன் உடலைப் பேணுவதுதானே, அவனது படைப்பாற்றலுக்கு அவன் தரும் மரியாதை? சிவசக்தியிடம் விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடலை பாரதி கேட்டது அதற்காகத்தானே?

இந்த இடத்தில் மூத்த படைப்பாளிகளையும் குறை சொல்ல வேண்டிதான் வருகிறது. தங்களுக்கிருக்கும் குடிப்பழக்கத்தை தாங்களே அறியாமல் இளம் படைப்பாளிகளுக்குக் கடத்துகிறார்கள். மறைந்த மூத்த கலை ஆளுமை ஒருவரிடம் இது குறித்து கடுமையாக நான் பேசியபோது, ‘நான் ரெண்டு ரவுண்டுதான்யா போடுவேன்’ என்றார். அப்போது அவரிடம் சொன்னேன். ‘ஸார்! நான் உங்களைக் குடிக்க வேண்டாம்னே சொல்லல. நீங்க குடிக்கிறவர். ஆனா குடிகாரர் இல்ல. சின்னப் பசங்க கூடக் குடிக்காதீங்க. பிற்காலத்துல அவங்க உங்கள முன் உதாரணமா வச்சுக்கிட்டு கன்ட்ரோல் இல்லாம குடிகாரங்களா ஆகறதுக்கு சான்ஸ் இருக்கு’.

இதுவேதான் இன்னொரு மூத்த எழுத்தாளர் மீதும் எனக்கிருக்கும் வருத்தம். அவர் எனக்கு தகப்பனார் ஸ்தானத்தில் இருப்பவர் என்பதால் கூடுதல் உரிமையும், கோபமும் உண்டு. ஒரு புகைப்படத்தில் இளைஞர்களோடு அவர் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நடனமாடுவதைப் பார்த்தேன். நிச்சயம், அது குடிக்குப் பின் எழுந்த குதூகலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அதை ஒரு கொண்டாட்டமாக என்னால் எடுத்துக் கொள்ளவே முடியவில்லை. குடியை, பாலுறவு போல அந்தரங்கமாக வைத்துக் கொள்ளுங்கள் மூத்தவர்களே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் பற்றி ஒரு செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள காமராஜ் அவர்கள் ஒரு முறை புகைப்பிடித்துக் கொண்டிருந்ததை அவரறியாமல் புகைப்படம் எடுத்திருக்கிறார், ஒரு புகைப்படக் கலைஞர். கடும் கோபம் கொண்ட காமராஜ், அந்தப் புகைப்படச் சுருளை எடுத்து அழிக்கச் சொல்லியிருக்கிறார். ‘நான் சிகரெட் குடிக்கிறதே தப்பு. நீ இதை படம் புடிச்சு காமிச்சேன்னா, காமராஜே சிகரெட் குடிக்காருன்னு சின்னப்பயலுவளும் சிகரெட் குடிச்சுக் கெட்டுப் போயிருவானுகள்லாண்ணே’ என்றாராம்.

இவன் கனவில்
அடிக்கடி
ஒயில் பெண்கள்

நிறைய தரம்
புதையல்

அபூர்வமாய்
மழை

ஒவ்வொரு நேரம்
பௌர்ணமி நிலா

சிலசமயம்
மலையருவி

எப்போதாவது
இராட்ஷஸன்

நேற்று
நீலவானம்

முந்தா நாள்
நீ

ஒரே
ஒரு தடவை கடவுள்

இன்றுவரை நான் சந்தித்தேயிராத மூத்த கவிஞரான ‘அண்ணாச்சி’ விக்ரமாதித்யனின் இந்தக் கவிதை குறித்து யாரும் பேசி  நான் கேட்டதில்லை. அவரைப் பற்றி என்னிடம் பேசிய அத்தனை இளம் கவிஞர்களும் அவரது குடி புராணத்தைப் பற்றித்தான் அதிகம் சொல்லியிருக்கிறார்கள்.

குடி ஒழுக்கம் சார்ந்து அல்ல என்பது அறிவுஜீவிகளின் கூற்று. இன்னும் சிலர் கொலையும், கொள்ளையையும் கூட ஒழுக்கம் சார்ந்ததல்ல என்று கூறக் கூடும்.

தனிமை அணைத்த சிறான் ஒருவனின் வரலாறு
வாட் சுழற்றலுக்கு இடையே வந்துபோகிற
வினைக்காற்று மாதிரி,எழுதப் படுவதில்லை.
அவன் இப்போதும் தனிமையிலேயே
இருக்க நேர்வது தான் கொஞ்சம் உறுத்துகிறது
பறவையின் குரலை
குரலில் அமைகிற சங்கீதத்தை
ஓவியமொன்றின் நடனத்தை
பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டையை
முக்கியமாக, பெற்றோரின் ஊடல், கூடலைக் குறித்த
அவனது வினைகள்,எதிர்வினைகள்
முக்கியமில்லாமல் போயிருந்ததற்கு
தனிமையும் காரணம் என்று நம்புகிறான்.
அவனுக்குச் செய்ய ஒன்றுமில்லை
தனிமை நேசிக்கிற மானுடன் ஒருவனைப் பற்றிய
கதையை இதிகாசங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
வெறுமனே அமர்ந்திருக்கிற ஒவ்வொரு பொழுதிலும்
அவனுடன் தத்துவம் மட்டுமே நீட்டாங்கால் போட்டு
இளைப்பாறிக் கொண்டிருக்கிறது.
அவன் இறந்தபிறகே
அவனுடன் உலகம் இருக்கும் என்று தெரிந்தபோதும்
அந்த தத்துவக் குரங்கும் மென்று விழுங்கிக் கொண்டு
இருக்கிறது எதையும் காட்டிக் கொள்ளாமல்.
அப்படியே இருக்கட்டும்
கல்லில் சில கல்.
கல்லில் சில சிற்பம்.
கல்லில் சில கடவுள்.

இப்படி இன்னும் பல ஆயிரம் கவிதைகளை எழுதியிருக்கக் கூடிய கவிஞர் குமரகுருபரன், என்னை விட வயதில் இளையவர். என்னை விட வயதில் மூத்த படைப்பாளிகளிடம் எனது வேண்டுகோள் இதுதான். ‘அண்ணாச்சிகளா! நீங்க குடிச்சு கட்டமண்ணாப் போனது போகட்டும். சின்னப் பயலுகக்கிட்ட உங்க வீரக்குடிப்பிரதாபங்களைச் சொல்லிக் கெடுக்காதிய.’

என்னைவிட வயதில் இளைய படைப்பாளிகளுக்கு: ‘பெருசுகள எல்லா விஷயங்கள்லயும் பின்பற்றாதீங்க. அவங்க எல்லாருமே சாதிச்சும் முடிச்சுட்டாங்க. வாள்ந்தும் முடிச்சுட்டாங்க. நீங்கல்லாம் இன்னும் நெறய எளுதணும். அவங்க கூட உக்காந்து குடிக்கறதனாலயோ, அவங்கள மாதிரியே குடிக்கறதனாலயோ அவங்களா ஆக முடியாது. குடிக்காமலயும், சிகரெட் புடிக்காமலும் அவங்க எல்லாரயும் விடவும் நல்லா எளுத வரும். எல்லாத்துக்கும் மேல ஒண்ணு. அஞ்சலிக் கட்டுரை எளுதறதுக்கு தெம்பு இல்லப்பா’.

 

 

புகைப்பட உதவி – thetimestamil.com

கல்பனா அக்காவும், கலாபவன் மணியும் . . .

kalpana-sathileelavathi435-crop

 

வழக்கமாக நடிகர், நடிகைகளுக்கு நான் வசனம் சொல்லிக் கொடுக்கும் போது ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா காமெராவை விட்டு இறங்கி அருகில் வருவதில்லை. கொஞ்சம் சுணங்கினால் ‘ரெடியா? நேரம் ஆகுது’ என்பார். அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவும் சொல்வதில்லை.

‘சதிலீலாவதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகை கல்பனாவுக்கு வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர் நான் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என் முகத்தை உற்று நோக்குகிறார். பின் வேறெங்கோ பார்க்கிறார். சொல்லிக் கொடுத்த வசனத்தைத் திருப்பிச் சொல்லவே இல்லை. பொறுமை இழந்த வாத்தியார் காமெராவிலிருந்து இறங்கி அருகில் வந்து என் தோளில் கை போட்டபடி, ‘ம்ம்ம். இப்ப சொல்லு’ என்றார். சில நிமிடங்களில் முதல் ஷாட் எடுக்கப்பட்டது. காமெரா கோணம் மாறும் போது கல்பனா சற்றுத் தள்ளி அமர்ந்தபடி என்னைப் பார்த்து தன் உதவியாளரான ஒரு வயதான அம்மாளிடம் ஏதோ சொல்வதை கவனிக்க முடிந்தது.

லஞ்ச் பிரேக்கின் போது கல்பனாவின் உதவியாளர் என்னருகில் வந்து என் கைகளைப் பிடித்தபடி, ‘எய்யா! இப்பதான் விசாரிச்சேன். ஒனக்கும் திருநவேலியாம்லா? எனக்கு கொக்கிரகுளம்’ என்றார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததிலேயே என் உறவினர்கள் பலரையும் அந்த அம்மாளுக்குத் தெரிந்திருப்பதை அறிய முடிந்தது. அடுத்த நாளும் கல்பனா என்னிடம் நடந்து கொண்ட விதத்தில் மாற்றமில்லாததால் அவரது உதவியாளரிடம், ‘ஆச்சி! உங்க மேடம் ஏன் என்னை முறச்சு முறச்சுப் பாக்காங்க? நான் ரொம்ப மரியாதயாத்தானெ வசனம் சொல்லிக் குடுக்கென்! வேற ஒண்ணும் பேசலயே!’ என்றேன். அன்றைய லஞ்ச் பிரேக்கின் போது அந்த அம்மாள் என்னை எங்கள் யூனிட்டோடு சாப்பிட விடவில்லை. ‘எய்யா! அக்கா உன்னக் கூப்பிடுதா. வா’ என்று அழைத்துச் சென்றார்கள்.

அப்போதெல்லாம் கேரவன் வசதி வரவில்லை. ஷூட்டிங் ஹவுஸின் ஒரு தனியறையில் கல்பனா அமர்ந்திருந்தார். தயக்கத்துடன் உள்ளே சென்றேன். சேரிலிருந்து எழுந்து என் கைகளைப் பிடித்து, சிரித்தபடி ‘பயந்துட்டீங்களா தம்பி?’ என்றபடி தன்னருகில் இருந்த சேரில் அமர வைத்தார். ஒன்றும் புரியாமல் கூச்சத்துடன் அமர்ந்த என்னிடம் சரளமாகப் பேச ஆரம்பித்தார்.

‘எமோஷனலானவதான் நான். ஆனா இப்ப அழப்போறதில்ல. நேத்திக்கு உன்னை, நீன்னு சொல்லலாமில்ல? எப்படியும் நீ என்னை விட சின்னவன்தானே!’

‘ஐயோ தாராளமா சொல்லுங்க’.

‘நேத்திக்கு உன்னை ஃபர்ஸ்ட் டைம் பாத்த உடனே சட்டுன்னு டிஸ்டர்ப் ஆயிட்டேன். அதான் ஒருமாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தேன். ஒரே ஜாடைன்னு சொல்ல முடியாது. ஆனா, ஏனோ ஒன்னக் காணும்போது நந்து ஞாபகம்’.

நந்து கல்பனாவின் இளைய சகோதரன் என்பதும், தற்கொலை செய்து கொண்டார் என்பதையும் பின்னர் அறிந்தேன்.

‘இன்னைக்கு என் கூட சாப்பிடேன்’ என்றார்.

நான் தயங்கியபடி, ‘இல்லக்கா. நான் வெஜிட்டேரியன். எனக்காக அங்கெ தனியா சாப்பாடு எடுத்து வச்சிருப்பாங்க’ என்றேன். இயல்பாக நான் அக்கா என்றழைத்தது அவரை சந்தோஷப்படுத்தி விட்டது. எழுந்து ‘மோனே’ என்று கட்டியணைத்துக் கொண்டார். அந்த நிமிஷத்திலிருந்து நடிகை கல்பனா எனக்கு அக்கா ஆனார். மறுநாள் படப்பிடிப்பில் எந்த சிக்கலுமில்லை. வசனங்களை நான் சொல்லச் சொல்ல, உடனே ரெடி என்றார் கல்பனா அக்கா. வாத்தியார் என்னிடம் மெதுவான குரலில், ‘என்னடா மேஜிக் பண்ணினே?’என்றார். நான் அவரிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. மறுநாளிலிருந்து மதிய உணவு கல்பனா அக்காவுடன் தான். எனக்கான சைவ உணவையும் அவரது அறைக்கு வர வைத்திருந்தார். அவர் நடித்த மலையாளப் படங்களை நான் பார்த்திருப்பதில் அவருக்கு அத்தனை ஆச்சரியம்.

‘என்ன தம்பி சொல்றே? பஞ்சவடி பாலம் நீ பாத்திருக்கியா?’

‘பொக்குவெயிலும் பாத்திருக்கேன்கா’.

ஒரு தமிழ்நாட்டு இளைஞன் மலையாளத்தின் முக்கியமான திரைப்படங்கள் பற்றிப் பேசுவது கல்பனாக்காவுக்கு நம்பவே முடியாத மகிழ்ச்சியை அளித்தது. ‘பெருவண்ணப்புரத்தே விசேஷங்கள், ஒருக்கம்’ மற்றும் கல்பனாக்கா நடிக்காத ‘தாழ்வாரம், தாளவட்டம், கள்ளன் பவித்ரன், ஓரிடத்தொரு பயில்வான், மற்றொரு ஆள், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ போன்ற படங்களைப் பற்றியெல்லாம் அவரிடம் சிலாகித்துப் பேசியிருக்கிறேன்.

‘கேரளத்துல உன் வயசுல உள்ள ஒருத்தனும் இந்தப் படங்களையெல்லாம் பத்திப் பேசறத நான் கேட்டதில்ல, தம்பி’ என்பார்.

கல்பனாக்காவுக்கு சங்கீத ஞானம் இருந்தது. ஶ்ரீதேவி ஹவுஸில் படப்பிடிப்பு இடைவேளைகளில் சொக்கலிங்க பாகவதரை ஏதாவது ராகம் பாடச் சொல்லிக் கேட்பேன். அப்போதெல்லாம் கல்பனாக்காவும் அவரது அறையின் வாசலில் அமர்ந்தபடி கேட்டுக் கொண்டிருப்பார். அப்புறமாக என்னிடம் தனியே விசாரிப்பார்.

‘தம்பி! ஐயா பாடுனது நாட்டைதானே?’

‘அட! ராகம்லாம் தெரியுமாக்கா?’

‘டேய்! மிருதங்கமே வாசிப்பேன்டா, நான்!’

தான் குண்டாக இருப்பதனால்தான் தனக்கான பிரத்தியேக வேடங்கள் தேடி வருகின்றன என்பதை இயல்பாகப் புரிந்து வைத்திருந்த கல்பனாக்காவுக்கு தன் உடல்வாகு குறித்த சிறு கூச்சம் உண்டு. காரில் சென்று கொண்டிருக்கும் போது சாலையில் சென்று கொண்டிருக்கும் யாரையாவது காண்பித்துக் கேட்பார். ‘தம்பி தம்பி! அந்த யெல்லோ ஸாரி லேடி என்னை விட குண்டுதானே?’

சரளமாக தமிழில் பேசக் கூடியவர்தான் என்றாலும் அவரது சில தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பில் சுத்தமான மலையாளம் கேட்கும். ‘சதிலீலாவதி’யில் ஓர் இடத்தில் ‘ஐயோ முருகா’ என்று அவர் சொல்ல வேண்டும். எத்தனை முறை முயன்றும் அவரால் ‘ஐயோ முர்யுகா’ என்றுதான் சொல்ல முடிந்தது. ஒவ்வொரு முறையும் கமல் அண்ணாச்சி திருத்தி சொல்லிக் கொடுத்தும் அவரால் ‘முர்யுகா’தான் சொல்ல முடிந்தது. பல முறை எடுக்கப் பட்ட அந்த ஷாட் முடிந்தவுடன் வேக வேகமாக என்னருகில் வந்து என் வயிற்றில் குத்தினார்.

‘என்னை ஏன்க்கா குத்தறீங்க? நான் சிரிக்கக் கூட இல்லியே!’

‘நின்ன ஞான் அறியுன்டா, கள்ளா! நீ மனசுக்குள்ள சிரிச்சே!’.

பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த சம்பவத்தை நண்பர் ஜெயமோகனிடம் நினைவுகூர்ந்து சொல்லிச் சிரித்திருக்கிறார், கல்பனாக்கா.

ஒரு திரைப்படத்தில் இணைந்து பணிபுரியும் போது நெருக்கமாகப் பழகுபவர்கள், அந்தப் படம் முடிந்தவுடன் சுத்தமாக மறந்து விடுவார்கள். ஆனால் கல்பனா அக்காவுடனான பந்தம் அப்படி இல்லை என்பதை சதிலீலாவதி முடிந்த பிறகு அவரது திருமண அழைப்பிதழை எனக்கு அனுப்பி வைத்ததன் மூலம் உணர்த்தினார். வாத்தியார் பாலுமகேந்திரா, ‘டேய்! எனக்கு இன்விட்டேஷன் அனுப்பலடா, அந்தப் பொண்ணு!’ என்றார். ‘ஏ என்னப்பா! கூட நடிச்ச என்னைக் கூப்பிடல. ப்ரொடியூஸர் கமல் ஸாரக் கூப்பிடல. பாலு ஸார கூப்பிடல. உன்னை மட்டும் கூப்பிட்டிருக்காங்க! கண்டிப்பா போயிடு’ என்றார், ரமேஷ் அரவிந்த்.

ஆனால் கல்பனா அக்காவின் திருமண சமயத்தில் மகேஷ் பட் தயாரிப்பில் வாத்தியாரின் ‘அவுர் ஏக் பிரேம் கஹானி’ படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது. படத்தின் தயாரிப்பு நிர்வாகம் உட்பட கூடுதல் பொறுப்புகள். என்னால் கல்பனா அக்காவின் திருமணத்துக்குச் செல்ல முடியவில்லை. அக்காவிடம் ஃபோனில் பேசுவதற்கும் தயங்கினேன். சில நாட்கள் கழித்து ஃபோன் பண்ணினேன். என்னிடம் பேச மறுத்தார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் ஆகி பேசத் துவங்கினார். ஆனாலும் கோபம் குறையவில்லை. ‘அத்தான் எப்படி இருக்காருக்கா? உங்களை நல்லா பாத்துக்கறாரா?’ என்றேன். கோபம் முற்றிலும் வடிந்தது. பிறகு அவ்வப்போது தொலைபேசியில் பேசிக் கொள்வதுண்டு. ஒவ்வொரு முறையும் அவரது திருமணத்துக்கு நான் செல்லாததைக் குத்திக் காண்பிப்பார். ‘என்னடா அக்கா? பெரிய அக்கா! அக்கா கல்யாணதுக்கு வராத துரோகிதானடா, நீ?’

அடுத்த ஓரிரு வருடங்களில் அம்மா காலமான செய்தி அறிந்து ஃபோன் பண்ணினார். பிரியப்பட்டவர்களைப் பார்க்கும் போது, அவர்களின் குரலைக் கேட்கும் போது மனதில் உள்ள சோகம் வெடித்துக் கிளம்புவது நிகழ்ந்தது. அக்காவின் குரலைக் கேட்டதும் உடைந்து அழ ஆரம்பித்து விட்டேன். ‘கரயண்டா மோனே! நினக்கு அம்மயா ஞான் உண்டுடா’ என்றார்.

என்னுடைய திருமண அழைப்பிதழை அனுப்பி வைத்திருந்தேன். அது அவருக்குக் கிடைத்ததா என்பதை அறிய முடியவில்லை. அந்த சமயம் தொலைபேசியில் அக்காவை அணுக இயலவில்லை. எனது திருமண வரவேற்பு பாலக்காட்டில் நடந்தது. அதற்காகவாவது அக்கா வரவேண்டும் என்று விரும்பினேன். தொடர்ந்து தொலைபேசியில் முயன்று கொண்டே இருந்தேன். திருமண வரவேற்பன்றுதான் பேச முடிந்தது. அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்பதைச் சொன்னார். ‘இன்னைக்கு ரிஸப்ஷனை வச்சுக்கிட்டு கூப்பிட்டா நான் எப்படிடா வர்றது?’ என்றார். நியாயமாகப் பட்டது.

அதன்பிறகு ஒன்றிரண்டு முறைதான் பேசியிருப்பேன். குரலில் அத்தனை உற்சாகமில்லை. ஒவ்வொரு முறையும் அவர் கணவரை விசாரிப்பேன். பேச்சை மாற்றுவார். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு படப்பிடிப்பு தளத்தில் பார்க்க நேர்ந்தது. அவர் என்னை கவனிக்கவில்லை. அப்போதுதான் அவருக்கு விவாகரத்து ஆகியிருந்தது. எனக்கு ஏனோ அருகில் போய் பேசத் தோன்றவில்லை. சென்ற வருடம்தான் அவரது கைபேசி எண்ணை ஒரு தயாரிப்பு நிர்வாகியிடம் வாங்கினேன். ஆனால் அழைக்கவில்லை. நான் யாரிடம் அவரது கைபேசி எண்ணை வாங்கினேனோ, அதே மனிதரிடம் அக்காவும் என் எண்ணைக் கேட்டு வாங்கியிருப்பதாக அறிந்தேன். ஆனால் அவரும் அழைக்கவில்லை.

சென்ற மாதம் ஹைதராபாத்திலிருந்து தெலுங்கு திரைப்பட வசனகர்த்தா அபூரி ரவி அழைத்தார்.

‘சுகா ஸார்! நான் எழுதியிருக்கிற ‘ஊப்பிரி’ படத்துல கல்பனா மேடம் நடிக்கிறாங்க. ஒங்களுக்கு அவங்க க்ளோஸ் இல்ல! சதிலீலாவதி பத்தி சொல்லியிருக்கீங்களே! ஞாபகம் இருக்கு. நாளைக்கு ஷூட்டிங் ஸ்பாட் போவேன். எதுவும் சொல்லாம ஃபோன் போட்டு அவங்கக்கிட்ட குடுக்கறேன். பேசுங்க. சர்பிரைஸா இருக்கட்டும்’ என்றார். மறுநாள் அக்கா அளித்த சர்பிரைஸ் நியூஸை அபூரி ரவிதான் என்னை அழைத்து கலங்கிய குரலில் சொன்னார். ‘மேடம் ரூம்லயே இறந்து கெடக்குறாங்க, ஸார்’.

 

உறவுகளைப் பேணி வளர்த்துக் கொள்ளத் தெரியாத என்னைப் போன்ற மடையனுக்கு கல்பனா அக்காவைப் போன்ற ஆத்மார்த்தமான ஒரு மனுஷியின் கடைசி நாட்கள் வரை பழகக் கொடுத்து வைக்கவில்லை. கல்பனா அக்காவின் மரணச் செய்தியைத் தொடர்ந்து ஒரு மாதத்திலேயே கலாபவன் மணி மறைந்த செய்தி. ஆஷா ஷரத் ஃபோன் பண்ணி அழுதுகொண்டே, ‘ஸார்! மணியேட்டன் மரிச்சு போயி’ என்று சொன்னபோது, மேற்கொண்டு எதுவும் பேசாமல் ‘அப்புறம் பேசறேன்மா’ என்று ஃபோனை வைத்துவிட்டேன். மணியின் மரணச் செய்தி பெரும் சோகத்தைக் கொடுத்ததென்றாலும், அத்தனை அதிர்ச்சி அளிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘பாபநாசம்’ சமயத்திலேயே மணி நோய்வாய்ப்பட்டிருந்தார். அவர் காலாமாகிவிட்ட பிறகு இப்போது அதை சொல்லலாம்தான். அவர் தன் இறுதிக்காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தார் என்பதை ‘பாபநாசம்’ குழுவினர் அனைவருமே உணர்ந்திருந்தோம்.

முதல் சந்திப்பிலேயே என்னை தனியே அழைத்து கைகளைப் பிடித்துக் கொண்டு, ‘ஸார்! எனக்கு இந்த படம் ரொம்ப முக்கியமான படம். ரொம்ப கஷ்டப்பட்டுதான் தமிழ் பேசறேன். இதுல ஸ்லாங்க் பேசறதுல கான்ஸண்ட்டிரேட் பண்ணினா என்னால பெர்ஃபார்ம் பண்ண முடியாது. அதனால என்னை ஷூட்டிங் ஸ்பாட்ல விட்டிருங்க. டப்பிங்ல என்னை புழிஞ்சிருங்க. நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்’ என்றார்.

‘பாபநாசம்’ படப்பிடிப்பில் மணியை நான் தொந்தரவு செய்யவே இல்லை. ஆனால் அவர் வசனம் பேசுகிற விதத்தில் எனக்கு பயம் ஏற்பட்டது. ஏனென்றால் மணிக்கு வசனங்களை ப்ராம்ப்ட் பண்ண வேண்டும். அவரால் வசனங்களை மனப்பாடமாகப் பேசி நடிக்க இயலவில்லை. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் இணை இயக்குநர் பஹ்ருதீன் சத்தமாக ஸ்கிரிப்டில் உள்ள வசனங்களைச் சொல்லச் சொல்ல, கேமராவுக்கு முன் ஃபிரேமுக்குள் இருக்கும் மணி, தன் காதில் வாங்கி வாங்கிச் சொல்லி நடித்துக் கொண்டிருந்தார். என்னால் இந்த முறையை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. தவிர கமலஹாசனுக்கு பிராம்ப்ட் செய்தால் ஆகவே ஆகாது. அவருக்கு மட்டுமல்ல. அவருடன் நடிக்கும் மற்றவருக்கு பிராம்ப்ட் செய்தாலும் அவர் கவனம் கலைவார். ஆனால் மணி விஷயத்தால் கலவரமான என்னை சமாதானப்படுத்தியவர், அவரே. ‘எனக்கும் இது பிடிக்காதுதான். ஆனா, பெரும்பாலும் இது மலையாள சினிமால உள்ள வழக்கம்தான். விடுங்க’ என்றார்.

ஆனாலும் என்னால் அதை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால் தாய்மொழியல்லாத வேற்று மொழியை வெறுமனே காதில் வாங்கி, தப்பும் தவறுமாக உதட்டசைத்து சமாளித்தால், குரல் சேர்க்கையில் படாத பாடு பட வேண்டியது வரும். அந்த விஷயத்தில் பல முன் அனுபவங்கள் உண்டு என்பதால் இயக்குநர் ஜீத்துவிடம், ‘இந்தாள் டப்பிங்ல படுத்தப் போறான், ஜீத்து’ என்றேன். ‘அதப் பத்தி எனக்கென்ன? அது உன் பிராப்ளம்’ என்று என் தோளில் தட்டி சிரித்தார் ஜீத்து. ‘யோவ்! பல்லக் காமிக்காதய்யா’ என்றேன். ஜெயமோகன்தான் என் பயம் போக்கினார். ‘கவலையே படாதீங்க. மணிய எனக்கு நல்லாத் தெரியும். அவர வேல வாங்கத் தெரிஞ்சா போதும். எப்படின்னாலும் வளைஞ்சு குடுப்பார். ஒங்களால முடியும்’.

படப்பிடிப்பு இடைவேளைகளில் ஜெயமோகன், நான், இளவரசு, அருள்தாஸ் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கலாபவன் மணி வித விதமான குரல்களில் பேசி, நடித்து காண்பித்து எங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். தேர்ந்த மிமிக்ரி கலைஞரான மணி, பல குரல்களில் பேசியதில் ஆச்சரியமில்லை. ஆனால் மிருகங்கள், பறவைகளின் உடல் மொழியையும் பயின்றிருந்தார். நாயின், மாட்டின், காக்கையின், குருவியின் உடல்மொழியை கண் முன் கொணர்ந்து அசரடித்தார். இடையிடையே மலையாளத்து பாலியல் கதைகளை ஒவ்வொரு கதாபாத்திரமாக நடித்து காண்பித்தார். கமலஹாசன் முன் அத்தனை பவ்யம் காட்டினார். அதற்குக் காரணமும் சொன்னார். ‘ஒங்களுக்கெல்லாம் முன்னாடியே அவர் எங்களுக்கு ஹீரோ. சின்ன வயசுலேருந்து நான் பாத்து பாத்து ரசிச்சு, பிரமிச்ச ஒருத்தர் இப்ப என் கூட நின்னு பேசறார். எனக்கு பேச்சே வரல, ஸார். வராது’.

பாபநாசம் திரைப்படத்தின் கிளைமாக்ஸுக்கு முந்தைய இன்வெஸ்ட்டிகேஷன் காட்சிகளில் கமலஹாசனைப் போட்டு அடித்து, உதைக்கும் காட்சிகளில் துவக்கத்தில் மணியால் அத்தனை சகஜமாக நடிக்க இயலவில்லை. ஒவ்வொரு ஷாட்டுக்கான ரிஹர்ஸலின் போதும் கமலஹாசன் காட்டிய முனைப்பைப் பார்த்து அவராக மெல்ல அந்தக் காட்சிக்குள் இயல்பாக வந்து சேர்ந்தார். அதற்குப் பிறகு உக்கிரமானார். காமிராவுக்கு முன்னால் மணியைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. கடைசி நாள் படப்பிடிப்பில் எல்லோருடனும் விடை பெறும் போது என்னருகில் வந்து அணைத்து, கை குலுக்கி, ‘டப்பிங்ல பாக்கலாம், ஸார்’ என்று கண்ணடித்து விடைபெற்றார். அப்போதே எனக்கு லேசாக சந்தேகம் வந்தது.

நான் சந்தேகித்த மாதிரியே ‘பாபநாசம்’ திரைப்படத்தின் டப்பிங் துவங்கி முடியும் கட்டம் வரும் வரைக்கும் மணி வரவில்லை. தமிழில் அவர் நடித்த சில படங்களுக்கு குரல் கொடுத்த கலைஞரை சிபாரிசு செய்தார். அவர் சொன்ன அந்தக் குரல் உட்பட இன்னும் பல குரல்களை சோதித்துப் பார்த்தோம். எதுவுமே மணியின் உடல்மொழிக்கு ஒத்து வரவில்லை. தவிர, வசனங்களை பிராம்ப்ட் செய்து நடித்திருந்ததால், பல இடங்களில் தெளிவில்லை. குறிப்பாக க்ளோஸ் அப் ஷாட்களில் மணியின் உதட்டசைவும், ஸ்கிரிப்டில் உள்ள வசனமும் பொருந்தவே இல்லை. அதற்காக நிறைய மெனக்கிட வேண்டியிருந்தது. அதற்குள் திருநெல்வேலி பாஷையை வேறு கொண்டு வர வேண்டும். உடலையும், உள்ளத்தையும் வருத்தி அதற்காக பல மணிநேரம் உழைத்து ஒருமாதிரியாக மணி பேச வேண்டிய பகுதிகளை தயார் செய்து வைத்திருந்தோம். ஆனாலும், மணி வருவதாக இல்லை. தயாரிப்பு தரப்பிலிருந்து எனக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். ‘எத்தனை நாள்தான் டப்பிங் பண்ணுவீங்க? இப்பவே ஒரு மாசம் தாண்டப் போகுது. டப்பிங்குக்கு போட்ட பட்ஜெட் எப்பவோ எகிறிடுச்சு. ப்ளீஸ் சீக்கிரம் ஒரு டெஸிஷனுக்கு வாங்க’ என்றார்கள். பல குரல்களை முயற்சி செய்து பார்த்து அலுத்து விட்டு, தீர்மானமாகச் சொன்னேன். ‘மணியை வரவழையுங்கள். அவர் வந்தால்தான் டப்பிங்’.

இன்று, நாளை என்று தள்ளிக் கொண்டே போய் ஒரு நாள் மணி வந்தார். சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். ‘வணக்கம் ஸார். நல்லா இருக்கீங்களா?’ சம்பிரதாயமாக வணக்கம் சொல்லி சிரித்து விட்டு டப்பிங் தியேட்டருக்குள் சென்றார். அவரது சிரிப்பில் கொஞ்சமும் சிநேகமில்லை என்பதைக் காண முடிந்தது. முதல் ரீலைப் போட்டவுடனேயே, தியேட்டருக்குள்ளிருந்து, ‘ஓகே டேக் போகலாம்’ என்றார். இஞ்சினியர் அறையிலிருந்த நான் பொத்தானை அழுத்தி, ‘ரீல் ஃபுல்லா ஒருவாட்டி பாத்திரலாமே, மணி?’ என்றேன். ‘இல்ல ஸார். டேக் போகலாம். ப்ளே பண்ணுங்க இஞ்சினியர் ஸார்’ என்றார். தியேட்டருக்குள் நின்ற பஹ்ருதீன் கண்ணாடித் திரை வழியாக என்னைப் பார்த்து சைகை மூலம், ‘அவர் பேசட்டும்’ என்றார். அமைதியாக இருந்தேன். நான் எதிர்பார்த்த மாதிரியே சரியாக வரவில்லை. திருத்தம் சொன்னேன். பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டார், மணி. அடுத்த டேக். பிழை. திருத்தம். அதற்கு அடுத்த டேக். இன்னும் பல டேக்குகள். மணி பொறுமையிழந்தார்.

‘ஸார். நான் இதுக்குத்தான் வர மாட்டேன்னு சொன்னேன். இப்படி நீங்க கரெக்ஷனுக்கு மேல கரெக்ஷன் சொல்லிக்கிட்டே இருந்தீங்கன்னா நான் ஹெட்ஃபோனைக் கழட்டி வச்சுட்டுப் போயிக்கிட்டே இருப்பேன்’.

நான் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தது, உதவி இயக்குநர்களுக்கும், ஒலிப்பதிவு இஞ்சினியருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஐந்து நிமிடங்கள் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மணியே மௌனம் கலைத்தார்.

‘இப்ப என்ன ஸார் செய்யலாம்?’

‘ஒரே ஒரு வாட்டி ரீல் ஃபுல்லா பாருங்க, மணி’. துவக்கத்தில் சொன்னதையே மீண்டும் அழுத்தமான குரலில் சொன்னேன். ‘ஓகே ஸார். போடுங்க. பாக்கலாம்’ என்றார். ரீல் முழுதும் ஓடத் துவங்கியது. மணி ஏற்று நடித்த பெருமாள் கதாபாத்திரம் பேசும் எல்லா ஷாட்களிலும் உதட்டசைவுக்கு ஏற்ப என் குரலில் பேசி பதிவு செய்து வைத்திருந்ததைக் கேட்டார், மணி. வாய்ஸ் ரூமிலிருந்து திரும்பி கண்ணாடித் திரை வழியாக இஞ்சினியர் அறையிலிருந்த என்னைப் பார்த்தார். வாய்ஸ் ரூமுக்குள் நுழைந்ததிலிருந்து மணி திரும்பவே இல்லை. ‘என்ன ஸார்! அநியாயத்துக்கு சிங்க்ல பேசியிருக்கீங்க. என் உருவத்துக்கு மட்டும் பொருந்தியிருந்தா நீங்க பேசியிருக்கிறதே பெர்ஃபெக்ட் ஸார்’ என்றார். இப்போதும் நான் ஒன்றும் சொல்லவில்லை. ‘இப்ப டேக் போகலாமா, மணி?’ என்றேன். ‘ரெடி, ஸார்’ என்றார்.

அன்று மதியமே மணியின் பகுதி முழுதும் டப் செய்து முடிக்கப்பட்டது. இன்னும் இரண்டு நாட்கள் இருக்க வேண்டியது வரும் என்ற எண்ணத்தில் சென்னை வந்திருந்த மணி உற்சாகமாகக் கிளம்பினார். கிளம்பும் போது எல்லோரும் அவருடன் புகைப்படம் எடுத்தனர். ‘வாங்க சுகா ஸார். நாம ஃபோட்டோ எடுக்க வேண்டாமா?’. என்னை இழுத்து அணைத்துக் கழுத்தைக் கட்டிக்கொண்டார். ‘இவ்வளவு நேரம் படுத்தினதுக்கு கழுத்தை நெரிக்கறீங்களோ, மணி!’ என்றேன். ‘ஐயோ! அன்பு ஸார். அன்பு’ என்றார். பிறகு ‘பாபநாசம்’ திரைப்படத்தின் வெற்றிக்காக பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி சொல்லும் விழாவுக்காக வந்திருந்த மணி, பின் பக்கமாக வந்து என்னைப் பிடித்துத் தூக்கினார். ‘ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஸார்’ என்றார்.

DSC_3440

மணி இறந்த மறுநாள் நானும், ஜெயமோகனும் மணியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நான் அனுப்பிய குறுஞ்செய்தி மூலமாகவே தனக்கு மணியின் மறைவு பற்றித் தெரிய வந்ததாகச் சொன்னார். ‘சுகா! ஒங்கக்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லல. மணி ஒரு நாள் எனக்கு ஃபோன் பண்ணி ‘சுகா படம் எப்ப ஆரம்பிக்கிறார்? அதுல எனக்கு ஒரு வேஷம் வேணும்னார். சின்னப் படமாச்சேன்னேன். அதனால என்ன? கார்ச்செலவுக்கு மட்டும் குடுத்தா போதும். அடுத்த படத்துல பேரம் பேசி வாங்கிக்கிடறேன். சுகா படத்துல நான் உண்டுன்னாரு. ஒங்க எஸ் எம் எஸ் வந்தப்ப எனக்கு சட்டுன்னு நினைவுக்கு வந்தது இதுதான்’ என்றார், ஜெயமோகன்.

ஜெயமோகன் இதை என்னிடம் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்.

ஜெயமோகனுடன் 21 மணி நேரம் . . .

‘கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல வந்துக்கிட்டிருக்கேன். இப்பம் உங்க ஊர்லதான் வண்டி நிக்குது. காலைல சந்திப்போம். வரும்போது உங்க லேப்டாப் கொண்டுட்டு வாங்க. என்னோடத அஜி எடுத்துக்கிட்டான்’.

ஜெயமோகன் ஃபோனில் இதைச் சொல்லும் போது, திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் ‘இட்லி, வட இட்லி வட’ என்று பின்னால் சத்தம் கேட்டது. என்னிடம் பேசிக் கொண்டே இட்லி பொட்டலம் வாங்கினார்.

‘மோகன்! அங்கெ இட்லி நல்லாருக்காதே! ஒரு வார்த்த முன்னாடியே சொல்லியிருந்தா மீனாட்சி பயல அளகா வீட்லேருந்து மொளாடி நல்லெண்ணெ தடவி இட்லி கொண்டாரச் சொல்லியிருப்பெம்லா!’

‘நானே கடைசி நிமிஷத்துல ஓடி வந்து ரயிலப் புடிச்சென். இதுல எங்கேருந்து ஒங்களுக்குச் சொல்ல?’

காலையில் பிரதாப் பிளாஸா ஹோட்டலில் ஜெயமோகன் தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டிய போது, ஸ்டைலான ஓர் இளைஞர் கதவைத் திறந்து ‘யாரு?’ என்று கண்களாலேயே கேட்டார். பின்னர் அவர் பெயர் நரன் என்று ஜெயமோகன் அறிமுகப்படுத்தினார். நரனின் கவிதைகளைப் படித்திருந்த ஞாபகம் வந்தது. இசை மற்றும் ஜான் சுந்தர் போன்ற கவித்தம்பிகளின் தோழர் நரன் என்றும் அறிந்திருந்தேன். ஜெயமோகனும், நானும் பேசுகிற விதத்தில் குறிப்புணர்ந்து கொண்ட நரன், ‘பக்கத்து ரூம்லதான் ஸார் இருக்கேன். எதுவும் தேவைன்னா கூப்பிடுங்க, வரேன்’ என்று சொல்லி விட்டுக் கிளம்பிப் போனார்.

ஏற்கனவே நாங்கள் பேசிக் கொண்டிருக்கிற திரைக்கதையை இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பேசிக் கொண்டே லேப்டாப்பைத் திறந்தார், ஜெயமோகன். இணைய இணைப்பு கிடைக்கவில்லை. ‘குடுங்க, பாக்கென்’. வாங்கிப் பார்த்தால் ‘வை ஃபை’ கனெக்ட் ஆகியிருந்தது. ஆனால் இணையத்துக்குள் போக முடியவில்லை. எங்களுக்கிருக்கிற குறைந்த தொழில்நுட்ப அறிவைக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சில நொடிகள் யோசித்து, லேப்டாப்பை மூடி வைத்தோம். காலிங் பெல் ஒலித்தது. நான் அதற்குமுன் பார்த்தறியா ஜெயமோகனின் புதிய வாசகர்கள் இருவருடன், ஜெயமோகனின் ‘புராதன’ வாசகர் விஜயராகவன் உள்ளே நுழைந்தார். என்னைப் பார்த்த மாத்திரத்தில் கை குலுக்கி ‘எப்படி ஸார் இருக்கீங்க?’ என்றார். கட்டிலில் குப்புறக் கிடந்த லேப்டாப்பை எடுத்து சோஃபாவில் வைத்துக் கொண்டு அவர்களை உட்காரச் செய்தேன்.

‘இப்பம் என்ன பண்ணலாம், மோகன்? நான் இத எடுத்து வந்தே பிரயோஜனம் இல்லாம போயிரும் போலுக்கே? வேணா ஹோட்டல் ரிஸப்ஷன்லேருந்து ஆள வரச் சொல்வோமா?’

‘லேப்டாப்பக் குடுங்க, ஸார். நண்பர் கணினி நிபுணர்தான்’ என்றார், விஜயராகவன்.

வந்திருந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் லேப்டாப்பை வாங்கிக் கொண்டார். சில நிமிடங்கள் ஆராய்ந்தார். எல்லோரும் அவரையே பார்த்திருந்தோம். பேரதிசயமாய் ஜெயமோகனின் அறையில் சில நொடிகள் நிசப்தம் நிலவியது. கணினி நிபுணர் தன் செல் பேசியை எடுத்தார். கீ பேடைத் தடவி ஏதோ முயன்று புருவம் சுருக்கினார். நெற்றியைத் தேய்த்தபடி சீலிங் ஃபேனைப் பார்த்து சில நொடிகள் சிந்தித்தார். உடனே ஏதும் கவிதை சொல்வாரோ என்று அச்சமாக இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தவராய் எழுந்து, ‘ஃபோன் பண்ணி ரிஸப்ஷன்லெருந்து யாரயாவது கூப்பிடலாம், ஸார்’ என்றார்.

ஜெயமோகன் லேப்டாப்பில் மின்னஞ்சல்கள் பார்த்து கொண்டிருந்த போது விஜயராகவனும், நண்பர்களும் கிளம்பிச் சென்றார்கள்.

மாலையில் நடக்க இருக்கும் குமரகுருபரனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா பற்றியும், குமரகுருபரனின் சில கவிதைகள் பற்றியும் ஜெயமோகன் சொல்லிக் கொண்டிருந்தார். தயாரிப்பாளர் டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸிடமிருந்து ஃபோன்.

‘அண்ணே! ரவுண்ட்ஸ் முடிச்சுட்டு 3 மணிக்கு வந்துருதேன்.’ டாக்டர் தம்பிக்கும் திருநவேலி.

‘சரி. அப்பம் சாப்பிட்டிருவோம்’. பிரதாப் பிளாஸாவின் கீழ்த்தளத்திலிருக்கும் ரெஸ்டாரண்ட்டுக்கு சாப்பிடச் சென்றோம்.

‘சை. வெஜிட்டேரியன்லா, நீங்க?’. சலிப்புடன் சொன்னார், ஜெயமோகன்.

‘ஏன்! நீங்க நண்டு, நட்டுவாக்காலில்லாம் திங்க வேண்டியதுதானே! நானா கையப் புடிச்சுக் கூடாதுங்கென்!’

‘சாப்பிடத்தான் போறேன் . . . இவருக்கு ஒரு சௌத் இண்டியன் வெஜ் மீல்ஸும், எனக்கு ஃபிஷ் கறி மீல்ஸும் கொண்டாங்க’.

‘ஸாரி ஸார்! சிக்கன்கறி சாப்பாடுதான் இருக்கு’.

ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, என்னுடன் அமர்ந்து அசைவம் சாப்பிட்டே தீர வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் சிக்கன் கறி சாப்பாடு சாப்பிட்டார், ஜெயமோகன். லிஃப்ட்டைத் திறக்கும் போது சாய வேட்டியும், xxl சட்டையும் அணிந்த ஒரு மனிதர் ஜெயமோகனைப் பார்த்து வணங்கி, ‘ஆசானே! இப்பதான் ரூமுக்குப் போனேன். பூட்டியிருந்தது’ என்றார். ‘சாப்பிடப் போயிருந்தோம், வாங்க’ என்று அறையைத் திறந்து சாயவேட்டிக்காரருடன் உள்ளே நுழைந்தோம். விருந்தினருக்கு வசதியாய் சோஃபாவை விட்டு விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டேன். ‘இவர்தான் கவிஞர் ஆத்மார்த்தி’ அறிமுகப் படுத்தினார், ஜெயமோகன். ‘ஓ! மதுரைல இளையராஜா கூட போயிருந்த தியாகராஜர் காலேஜ் விழால பாத்திருக்கேன்’ என்றேன். ‘அண்ணனை ரொம்ப நாளா சந்திக்கணும்னு நெனைச்சேன். நேர்ல பாக்கறதுக்கு பொடியா இருக்கீங்க’ என்றார், சோஃபா முழுதும் நிறைந்திருந்த ஆத்மார்த்தி. அதற்குள் அவருக்கு இரண்டு முறை ஃபோன் வந்தது. இரண்டு முறையும் எங்களுக்குப் புரியக் கூடாதென்று ஆங்கிலத்தில் பேசிவிட்டு, ‘இதோ வந்துடறேன், ஆசானே’ என்று ஜெயமோகனிடம் பணிவுடன் சொல்லி விட்டுக் கிளம்பிச் சென்றார்.

‘ஆல்பர்ட் வர்ற வரைக்கும் கொஞ்சம் தூங்கலாமே’ என்றார், ஜெயமோகன்.

கண்ணுக்கு சொட்டு மருந்து விட்டுக் கொண்டு நானும் படுத்தேன். உண்ட மயக்கத்தில் ஆழ்ந்திருந்த போது, காலிங் பெல் சத்தம். போய்க் கதவைத் திறந்தால் கே.பி. விநோத். கவிஞர் ஞானக்கூத்தனைப் பற்றிய டாக்குமெண்டரி எடுத்தவர். இப்போது திரைப்பட இயக்குநர் மிஷ்கிரிடம் உதவி இயக்குநராக இருக்கிறார்.

‘என்னாச்சு? கண்ணீர்!?’ பதறிப் போய்க் கேட்டார், விநோத்.

‘ஜெயமோகன் ஒரு கதை சொன்னார், விநோத். தாங்க முடியாம அளுதுட்டேன்’.

‘அதுசரி. அதென்ன ஒரு கண்ணுல மட்டும் கண்ணீர்?’

‘இண்டெர்வல் வரைக்கும்தான் சொன்னார்’.

சிரித்தபடி உள்ளே நுழைந்த விநோத்தைப் பார்த்து, ‘ஏன்யா? ஒரு மலையாளத்தான் கூட இருக்கிறதே பெரிய விஷயம். இதுல இன்னொரு ஆளும்னா என்னால சமாளிக்க முடியுமா?’ என்றேன். புரண்டுப் படுத்த ஜெயமோகன் சிரிப்பது தெரிந்தது.

‘அவராவது தூங்கட்டும். நாம கீளெ போகலாம்’.

இருவரும் கீழே செல்லவும் டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ் வரவும் சரியாக இருந்தது. மூவருமாக காபி ஆர்டர் பண்ணிக் குடித்து விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். மேலே அறைக்கு வரும் போது ஜெயமோகன் எழுந்து, குளித்துத் தயாராகியிருந்தார். ஆல்பர்ட் ஜேம்ஸுடன் முறையான அறிமுகத்துடன், அதிகாரபூர்வமாக எங்கள் திரைப்படத் தயாரிப்பு குறித்த பேச்சுக்குப் பின் ஆல்பர்ட் கிளம்பிப் போனார்.

remember to credit photographer k p vinodh

டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ், ஜெயமோகன், சுகா

‘புத்தக வெளியீட்டு விழாவுக்கு நீங்களும் வாங்க. கவிஞர் குமரகுருபரனுக்கு திருநவேலிதான்’ என்றார், ஜெயமோகன்.

‘அப்பம் நல்ல கவிஞராத்தான் இருப்பாரு. வாரேன்’.

‘உயிரெழுத்து’ ஆசிரியர் சுதீர் செந்திலுடன், ஜெயமோகனும், நானும் ஒரே காரில் கிளம்பினோம். கே.பி. விநோத் அவரது காரில் எங்களைப் பின் தொடர்ந்தார். விழா நடைபெறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் போய்ச் சேர்ந்த போது எங்களையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் இருந்தனர். சுதீர் செந்தில், ஜெயமோகன், நான், மற்றும் விஜயராகவனும், ‘அந்த’ இரண்டு நண்பர்களும் வாசலில் நின்று பேச ஆரம்பிக்க, ஜெயமோகனின் வாசகர்கள் ஒவ்வொருவராக வரத் துவங்கினர்.  வந்து சேர்ந்த கே.பி. வினோத்துடனும், விஜயராகவனுடனும் தனியே விலகிச் சென்றேன்.

‘எப்ப ஆரம்பிப்பாங்க?’

‘எப்ப ஆரம்பிச்சாலும் எட்டரைக்கு ஹாலைத் திருப்பிக் குடுக்கணுமாம், ஸார்’ என்றார், விஜயராகவன். சற்று நேரத்தில் உள்ளே சென்றோம். பெரிய பாத்திரங்களில் எடுத்துப் போட்டுச் சாப்பிடுவதற்காக பஃபே சாப்பாட்டுப் பதார்த்தங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. ‘சாப்பிட்டுட்டு ஃபங்க்‌ஷன அட்டெண்ட் பண்ணுனா நல்லா கவனிச்சு எல்லார் ஸ்பீச்சையும் கேக்கலாமே!’ என்று விநோத்திடம் சொல்லிப் பார்த்தேன். இந்த மாதிரி அத்தியாவசிய நேரங்களில் மலையாளிகளுக்குக் காது கேட்காது.  புதிய மனிதர்கள் வரத் துவங்கினர். பெயர் தெரியா ஃபேஸ்புக் முகங்கள். அடையாளம் கண்டு கொண்டு, ‘இவன் பேசுவானோ, என்னவோ’ என்று தயக்கத்துடன் விலகிச் சென்றவர்கள், ஃபேஸ்புக்கில் போடுவதற்காக தற்படம் எடுத்துக் கொண்டவர்கள், வலிய வந்து பேசிய மனிதர்கள், இப்படி கலவையாக அங்கும் இங்குமாக நிறைய பேர். விழா நாயகர் குமரகுருபரன் வந்து சேர்ந்தார். ஜெயமோகனை சம்பிரதாயமாக வரவேற்றுவிட்டு, என்னருகில் வந்து பிரியமாக கை குலுக்கி, ‘விழாவுக்கு வந்ததுக்கு நன்றி, சுகா’ என்றார். என்னை விட வயதில் இளையவரான கவிஞர் குமரகுருபரன் நரைத்த தாடியுடன், பார்ப்பதற்கு சற்று பெரிதாக இருந்தார். அச்சு அசல் திருநவேலி ‘குமார விலாஸ்’ சிங்காரம் சித்தப்பா சாயல். அதனாலேயே அவர் கையைப் பிடித்துக் குலுக்கிய போது, ‘நல்லது சித்தப்பா’ என்று சொல்ல வந்து கவனமாகத் தவிர்த்து வெறுமனே சிரித்து வைத்தேன்.

விழா தொடங்கும் போது ஆறுமகநேரிக்காரரான ஜெயமோகனின் ‘புதிய’ வாசகர் ஒருவர் என்னருகில் அமர்ந்து கொண்டார். மூங்கில் மூச்சும், தாயார் சன்னதியும் அவருக்குப் பிடித்தமான புத்தகங்களாம். தொடர்ந்து அவற்றிலுள்ள கட்டுரைகள் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசத் துவங்கினார்.

“இன்று காலையிலிருந்துத் தொடங்கி அலைச்சல். எங்கெங்கோ சென்று, ஏதேதோ விஷயங்களைக் கடந்து, இங்கு வந்து சேர்கிற போது நிகழ்ச்சிக்கே மிகவும் தாமதமாகி விட்டது.இப்போது குமரனுடைய கவிதைகள் என் மனதில் ஒரு மங்கலான சித்திரமாக இருக்கிறது. உண்மையில் நான் எதைப் பேச நினைத்தேனோ, அதை என் நினைவுகளுடைய அடுக்குகளிலிருந்து எடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன்’ என்றார். ஜெயா டிவி, சங்கரா டிவி தவிர எல்லா சேனல்களிலும் தொடர்ந்து விவாதங்களில் கலந்து கொண்டிருக்கும் சோர்வு, மனுஷ்யபுத்திரனின் முகத்திலும், குரலிலும் தெரிந்தது.

“தமிழில் கவிதைஇயல் பற்றி எழுதிய மிக முதன்மையான ஒரு எழுத்தாளர், விமர்சகர் ஜெயமோகன்தான். இன்னும் சொல்லப் போனால் நவீனத் தமிழ்க் கவிதையுனடைய சிக்கல்களைப் பற்றி, பிரச்சனைகளைப் பற்றி, சவால்களைப் பற்றி அவர் எழுதியிருக்கக் கூடிய பல நூறு பக்கங்கள் என்பது, இன்று எழுத வருகிற அல்லது கவிதையை வாசிக்க விரும்புகிற யாருக்கும் ஒரு அடிப்படையான களன் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதோடு மட்டுமல்ல. என்னுடைய முதல் தொகுப்பு வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தமிழில் இரண்டாயிரம் கவிதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். என்னுடைய கவிதைகளைப் பற்றி மிக அதிகமாக அல்லது எழுதிய வெகுசிலரில் பொருட்படுத்தத்தக்க அளவில் மிகப் பெரிய அளவிற்கான ஒரு வாசிப்பை, விமர்சனங்களை, பார்வையை முன் வைத்தவர், ஜெயமோகன். அதன் மூலமாக நான் மிகப் பெரிய பலன்களை என்னுடைய எழுத்து வாழ்க்கையில் நான் பெற்றிருக்கிறேன். எப்பொழுதெல்லாம் கவிதையினுடைய ஏதாவதொரு முட்டுச் சந்தில் நின்று கொண்டிருக்கிற போது, தனிப்பட்ட முறையிலும், அரங்குகளிலும், அல்லது எழுத்திலும் அவர் முன் வைத்த விமர்சனங்கள் என்பது அந்த முட்டுச் சந்துகளைக் கடந்து இன்னொரு தளத்திற்கு செல்வதற்கு எனக்கு பெரிதும் வழி காட்டியிருக்கிறது. அந்த வகையில் ஒரு எழுத்தாளனுக்கு, ஒரு கவிஞனுக்கு அப்படிப்பட்ட ஒருவர் தொடர்ந்து அவரோடு இருந்து, அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது அதிர்ஷடமுள்ள சிலருக்கு மட்டும்தான் கிடைக்கும். எனக்கு அந்த அதிர்ஷ்டம்  இருந்திருக்கிறது, அவரைப் பொருத்தவரைக்கும். அந்த வகையில் கவிதையியல் சார்ந்து அவரிடமிருந்து ஒரு மிகப்பெரிய பயனைப் பெற்றுக் கொண்டவன் என்கிற வகையில், இந்த அவையில் அவர் இருப்பதை, குமரனுடைய கவிதைகள் பற்றி அவர் பேச இருப்பதை, நான் மிகுந்த நெகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன்”.

எந்தக் குறிப்பும் கையில் இல்லாமல் மனதிலிருந்து மனுஷ்யபுத்திரன் பேசிய வரிகள், இவை. அதனாலேயே இதைச் சொல்லும் போது,  வார்த்தைகளில் உள்ள நெகிழ்ச்சி அவரது குரலில் தெரிந்தது.

அடுத்து பேச வந்த கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது உரையை தயார் செய்து தாள்களில் கொண்டு வந்து வாசித்தார். குமரகுருபரனின் கவிதைகளை விரிவாக ஆராய்ந்து, வரி வரியாக எடுத்துச் சொல்லி, வழக்கம் போல என்னைப் போன்ற பாமரர்களெல்லாம் சொப்பனத்திலும் கேள்விப்பட்டிராத மேலைநாட்டு கவிஞர்களின் கவிதைகளோடு குமரகுருபரனின் கவிதைகளை ஒப்பிட்டுப் பேசினார். அவர் பேசப் பேச, அவர் கொண்டு வந்திருந்த தாள்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. அழுத்த்த்தம் திருத்த்த்தமான உச்ச்சரிப்பில், கிட்டத்தட்ட அரசியல் கூட்டங்களில் பேசும் தொனியில் ஒலித்தது, அவரது குரல். கடைசித் தாளில் தமிழக முதல்வருக்கான சவால் ஏதும் இருக்குமோ என்று சந்தேகித்துக் காத்திருந்தேன். ஆனால், அப்படி ஏதும் இல்லாமல் கடைசித் தாளும் கவிதை குறித்துதான் இருந்தது, ஏமாற்றமாகவும், ஆறுதலாகவும் இருந்தது. சுதீர் செந்தில், ‘அந்திமழை’ இளங்கோவன், மனுஷி ஆகியோர் பேசி முடிக்கும் போதே மணி எட்டரையைத் தாண்டியிருந்தது. ஜெயமோகன் பேச முடியாமல் ஹாலைத் திருப்பிக் கொடுக்க வேண்டியது வருமோ என்று நினைத்தேன். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. மனுஷ்யபுத்திரனைப் போலவே குறிப்பேதும் வைத்துக் கொள்ளாமல் பேசத் துவங்கினார். ஜெயமோகனின் மேடைப் பேச்சை பல ஆண்டுகளாகக் கேட்டு வருகிறேன். சமீப காலமாக அவரது மேடைப் பேச்சுக்கும், அவரது எழுத்துக்கும் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை. அபார நினைவாற்றல். தங்குதடையில்லாமல் வந்து விழும் வார்த்தைகள். அதுவும் எழுத்தில் அவர் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தைகள்.

“மேடையிலும், அரங்கிலும் மிகவும் சிறுபான்மையினராகத்தான் என்னைப் போன்ற கவிதை எழுதாதவர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆகவே கவிதை பற்றிப் பேசுவதற்கான தகுதி இதன் மூலமாக வந்துவிடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது”. ஜெயமோகனின் இந்தத் துவக்கமே நிமிர்ந்து உட்கார வைத்தது.

“பொதுவாக தமிழ்க் கவிதையை கடந்த 30 வருடங்களாகக் கூர்ந்து கவனித்து வருகிறேன். கவிதை எழுதுவதற்கு ஒரு வளர்ச்சி, பரிணாம முறை இருக்கிறது. முதல் தொகுதி பெரும்பாலும் ஓரிரு சாத்தியக் கூறுகளுடன் சொத்தையா, இல்லையா என்று சொல்லத் தெரியாத ஓர் இடத்திலே இருக்கும். நல்ல கவிஞர்கள் இரண்டாவது தொகுதியிலே ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்துவார்கள். அந்த இரண்டாவது தொகுதி பெரும்பாலும் மிக முக்கியமாக இருக்கும். மூன்றாவது தொகுதியிலிருந்து அந்த இரண்டாவது தொகுதிதான் திருப்பி வரும். ஐந்தாவது என்ன கவிதை வருமென்று ஒரு வெள்ளைத் தாள் கிடைத்தால் நாமே எழுதி விட முடியும். குமரகுருபரனுடைய முந்தையத் தொகுதியில் ஆச்சரியகரமாக, அதில் கணிசமான கவிதைகள் நன்றாக இருந்தன. உள்ளதைச் சொல்லப் போனால் என் வீட்டுக்கு வரக்கூடிய கவிதைகளை மிக ஆர்வமின்றி வாசிக்கத் தொடங்கக் கூடிய அளவுக்கு என்னைக் கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது, தமிழ்க் கவிதை”.

“நான் முந்தைய காலக்கட்டத்தைச் சேர்ந்தவன். அங்கே உட்கார்ந்து கொண்டு இப்போது என்ன எழுதுகிறார்கள் என்றுதான் பார்க்கிறேன்” என்று சொன்ன ஜெயமோகன், கவிஞர் கல்பற்றா நாராயணனின் ‘டச் ஸ்கிரீன்’ கவிதையை உதாரணமாக எடுத்துச் சொல்லி, எண்பதுகளின் கவிதைகளைப் பற்றிச் சொல்லும் போது,  “ஓங்கி உடைத்து, மிதித்துத் திறந்து, நெஞ்சைக் கிழித்து எழுத வேண்டிய காலம் அன்றைக்கு இருந்தது. கவனிக்கப் படாத குரலினுடைய வன்முறை என்று அதைச் சொல்லலாம். கேட்கப்படாத அழுகையினுடைய உக்கிரம், அது” என்றார். இப்போது எழுதப்படும் கவிதைகள் அனைத்துமே காமம், தனிமை, விளையாட்டுதான் என்றார். ஒரு பூனை எலியைப் போட்டு விளையாட்டு அல்ல. நாய் தன் வாலை வைத்து விளையாடுவது போல. வரலாற்றிலோ, எதிர்காலத்திலோ செய்வதற்கு எதுவுமில்லை என்பது மாதிரியான ஒருவிதமான பொறுப்பின்மை. அல்லது முன்னால் இருப்பவனுக்கு சொல்வதற்குக் கூட எதுவுமில்லை என்பது மாதிரியான தனிமை. அதிலிருந்து வெளிவரக் கூடிய கவிதைகளாகத்தான் இப்போதைய ஒட்டுமொத்தக் கவிதைகளும் இருக்கிறதோ என்பது என்னுடைய ஒரு அவதானிப்பு. இதைப் பற்றி இங்கிருந்துக் கிளம்பிப் போகும் போது நீங்கள் யோசிக்கலாம் என்று நான் நினைக்கிறேன்”.

‘ஒரு பந்தென இருக்கிறோம்.
கடவுளின் கைகளில்
அவரதைத் தவற விடுகிறார்
தொப்பென வீழ்ந்து
விடாதபடிக்குத்
தன் பாதத்தால் தடுத்து
முழங்காலால் ஏற்றி
புஜங்களில் உந்தி
உச்சந்தலை கொண்டு முட்டி
இரு கைகளுக்கிடையே
மாறி மாறித் தட்டி
விளையாடுகிறார்
மறுபடியும் பாதத்திற்கு விட்டு
கைகளுக்கு வரவழைக்கிறார்

“நான் உன்னை விட்டு
விலகுவதுமில்லை: உன்னைக்
கைவிவிடுவதுமில்லை”
பிதாவே! தயவு பண்ணி எம்மைக்
கைவிடும்”.

ஜெயமோகன் பேசி முடித்தபின் எனக்கேனோ சட்டென்று ‘இசை’யின் இந்த கவிதை நினைவுக்கு வந்தது.

நிகழ்ச்சியின்போது கவிஞர் ஆத்மார்த்தியின் செல்பேசி அவ்வப்போது ஒலித்தது. தனது செல்பேசியின் அழைப்பொலியாக அவர் ‘வெற்றிவிழா’ திரைப்படத்தின் ‘சீவிச் சிணுக்கெடுத்துப் பூவை முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே’ பாடலின் துவக்க இசையை வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் அந்தப் பாடலை முழுமையாக ஒலிக்க விட மாட்டாரா என்று மனம் ஏங்கியது. ஊர்ப்பாசத்தில் கூட குமரகுருபரன் என் கையைப் பிடித்து இழுத்து, ‘நம்ம விசேஷத்துக்கு வந்துட்டு கை நனைக்காம போகக்கூடாது, பாத்துக்கிடுங்க’ என்று கண்டிஷனாகச் சொல்லாததால், பஃபே சாப்பாடை மனமேயில்லாமல் துறந்து கே.பி. விநோத்தின் காரில் ஜெயமோகனுடன் ஹோட்டலுக்குக் கிளம்பினேன்.

‘இன்னைக்கு உங்க பேச்சு பிரமாதம், மோகன்’ என்றேன். வழக்கம் போல ஜெயமோகன் என்னை நம்பவில்லை என்பது , அவரது ‘அப்படியா’வில் தெரிந்தது.

ஹோட்டல் வாசலில் இறங்கும் போது, ‘காலைல 7 மணிக்கு வந்துடறேன். அப்பதான் ஏர்போர்ட்டுக்கு கரெக்ட் டயத்துக்குப் போக முடியும். நீங்க ரெண்டு பேரும் எப்படியும் நைட் ஃபுல்லா பேசிக்கிட்டு இருப்பீங்கன்னு தெரியும். காலைல லேட் பண்ணிடாதீங்க’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார், விநோத்.

இரவு வெகுநேரம் திரைக்கதையைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தோம். நள்ளிரவு தாண்டி எப்போதோ ஜெயமோகன் உறங்கிப் போனார். பத்து நாட்களுக்கான வெண்முரசு எழுதி முடித்துவிட்ட நிறைவில் அவரால் உறங்க முடிந்தது. ஓராண்டு காலமாக மனதுக்குள் சுற்றி வரும் திரைக்கதை என்னை உறங்க விடவில்லை. ஜெயமோகனும், நானும் பேசிக் கொண்ட கதைமாந்தர்கள் ஒவ்வொருவராக கண் முன்னே வந்து நின்றனர். விநோத் மங்கராவின் ‘ப்ரியமானஸம்’ திரைப்படத்தில் நளசரித்திரத்தை எழுதி முடித்து உண்ணயி வாரியர் ஊருக்குக் கிளம்புகையில் அவரது கதாபாத்திரங்கள் அவரைப் பின் தொடர்வது போல, எனது கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக பிரதாப் பிளாஸாவின் 311 எண் அறையில் என் கண் முன்னே வந்து நின்று, ‘எப்பம்தான் எங்கள ஊருக்குக் கூட்டிட்டுப் போகப் போறிய? நாங்கல்லாம் என்ன செய்யணும்? என்ன பேசணும்?’ என்று கேட்கத் துவங்கினர். ‘என்ன செய்யணும்கறத நான் சொல்லுதென். என்ன பேசணும்கறத இந்தா ஒறங்கிக்கிட்டுருக்காருல்லா! அவரு சொல்லுவாரு’ என்றேன், ஜெயமோகனைக் காட்டி.

(புகைப்படம் – கே. பி. விநோத்)

 

 

 

தூங்காவனமும், தீபாவளியும் . . .

papanasamபோன வருடம் தீபாவளியன்று கேரளத்தின் தொடுபுழாவில் இருந்தேன். ‘பாபநாசம்’ படப்பிடிப்பின் பரபரப்பில் தீபாவளி மறந்து போனது. இந்த வருடம் தீபாவளிக்கு நான் வசனம் எழுதியிருக்கும் ‘தூங்காவனம்’ திரைப்படம் வெளியாகிறது. பதின்வயது தீபாவளி சந்தோஷங்களுக்குப் பிறகு தீபாவளி உட்பட எந்தப் பண்டிகையிலும் நாட்டமில்லை. அவை குறித்த விசேஷமான நினைவுகளுமில்லை. ஆனால் போன வருடத்து தீபாவளியையும், இந்த வருடத் தீபாவளியையும் மறக்க முடியாதுதான்.

தெளிவாக எழுதப்பட்ட திரைக்கதையை, படப்பிடிப்புக்கு முன்பாகவே எல்லா நடிக, நடிகையரையும் அமர வைத்து, அவர்கள் ஏற்று நடிக்க இருக்கிற கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் பேச வேண்டும், நடக்க வேண்டும், நடிக்க வேண்டும் என்பதை விளக்கும் விதமாக திரைக்கதையை வாசித்துக் காண்பித்து, பின் படப்பிடிப்புக்குக் கிளம்பிய படம், ‘தூங்காவனம்’. அதனாலேயே எந்தவிதமான குழப்பமுமில்லாமல் படப்பிடிப்பு அத்தனை சந்தோஷமாக நடந்தது. கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கும் மேலாக கமல்ஹாசன் அவர்களிடம் திரைக்கலை பயின்ற இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா, இந்தியாவின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சானு வர்கீஸ், முறையான இசைப் பயிற்சியும், அசாத்திய கற்பனை வளமும் கொண்ட இசையமைப்பாளர் ஜிப்ரான், மிகச் சிறந்த படத்தொகுப்பாளர் ஷான் முகம்மது என திறமைசாலிகளின் கூட்டணியில் உருவான திரைப்படம், ‘தூங்காவனம்’. ஒரு ஆக்‌ஷன் திரில்லருக்கு மிகக் குறைவான வசனங்களே தேவைப்படும். அந்தக் குறைவான வசனங்களை எழுத என்னைத் தேர்ந்தெடுத்தார் ‘அண்ணாச்சி’ கமல்ஹாசன்.

‘இது நான் எழுதக் கூடியதா எனக்குத் தோணலியே!’

‘உங்களுக்கு எதுவும் எழுத வரும். அது உங்களை விட எனக்குத் தெரியும்’ என்று என் வாயை அடைத்தார்.

தனது மூத்த மாணவருடன், இளைய மாணவன் இணைந்து பணியாற்றிய திரைப்படத்தைப் பார்க்க ‘வாத்தியார்’ பாலு மகேந்திரா இல்லையே என்கிற வருத்தம் எனக்கு இல்லாமலில்லை.

thoongavanam

வண்ணதாசன் என்னும் ரசிகர் . . .

vannadasan
ஒரு சிறுகதை என்றால் அதில் கதை சொல்லியே ஆக வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் ஒன்றுமில்லை என்பதை எனக்கு உணர்த்தியவர் வண்ணதாசன். வண்ணதாசனைப் படிப்பதற்கு முன்புவரை என் மனதில் இருந்த சிறுகதை குறித்த வடிவம் முற்றிலுமாகக் கலைந்து போனது.

வண்ணதாசனிடம் எனக்குள்ள முதல் ஈர்ப்பாக திருநெல்வேலியே இருந்தது. சிறுவயதில் நான் பார்த்த மனிதர்கள், நான் புழங்கிய பகுதிகள் என வண்ணதாசனின் கதைகளில் வரும் அத்தனையையும் நேரடியாக பார்த்து அனுபவித்திருந்தேன். கீழப்புதுதெருவில் குடியிருந்த ‘தாடி’ ரத்தின பாகவதர் மார்கழிமாதக் காலையில் தன் சிறு குழுவுடன் பஜனை சங்கீதம் இசைத்துச் செல்வதை வண்ணதாசனின் ‘வேர்’ சிறுகதையில் படித்தபோது மனதுக்குள் அப்படி ஒரு சந்தோஷம்! ‘தாடி’ பாகவதர் வாயாலேயே ‘மோர்சிங்’ ஒலியெழுப்புவதை வண்ணதாசன் குறிப்பிட்டிருந்ததையும்விட, பாகவதரின் கூடவே புல்லாங்குழல் இசைத்து வரும் கண்பார்வையற்றவரைப் பற்றி இப்படி எழுதியிருந்தார். ’கண்ணில்லாதவர்களுக்குத்தான் புல்லாங்குழல் வாசிக்க வரும் என்று நான் சிறுவயதில் நம்பியிருக்கிறேன். எதிர்த்தவீட்டுப் பிள்ளைகளுக்கு எப்படியென்று தெரியவில்லை. கேட்க வேண்டும்’. Read More

ஆகாயப் பந்தலிலே…

msv

எம்.எஸ். விஸ்வநாதன் என்கிற பெயரை முதன்முறையாக எனக்கு அறிமுகம் செய்தது, இலங்கை வானொலியாகத்தான் இருக்க வேண்டும். ‘பொன்னூஞ்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ என்கிற பாடல், சிறுவயதில் என் மனதில் பதிந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களில் ஒன்று. எழுபதுகளின் மத்தியில் வெளிவந்த படங்களான ‘ராஜபார்ட் ரங்கதுரை, அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோயில்’ போன்ற சிவாஜி கணேசனின் படங்கள் மூலம் எம்.எஸ்.விஸ்வநாதன் என்பவரை, சிவாஜி படங்களுக்கு இசையமைப்பவர் என்றே முதிரா என் இள வயதில் அறிந்து வைத்திருந்தேன். எம்.எஸ்.வியின் எண்ணிலடங்கா இசைச் சாதனைகளை, அவரது பிற பாடல்கள் மூலம் எனக்குப் புரிய வைத்தவர்கள், மேடை மெல்லிசைக் கலைஞர்களே! ‘அரசுப் பொருக்காச்சில விஸ்வநாதன் கச்சேரி ஆரம்பிக்கும்போது ‘காதலிக்க நேரமில்லைல வரும்லா ‘நாளாம் நாளாம் திருநாளாம்’! அந்தப் பாட்ட வாசிச்சுல்லா திரையத் தூக்குவாங்க

Read More

தெலுங்கானா தோசையும், சாய்லட்சுமியின் இசையும் . .

ஹைதராபாத் விமான நிலையத்தில் போய் இறங்கும் போதே தெலுங்கானாவின் உஷ்ணக்காற்று மூஞ்சியில் அறைந்து சினத்துடன் வரவேற்றது.

‘நம்ம ஊர் வெப்பம் எவ்வளவோ பரவாயில்லன்னுத் தோண வைக்குதே, ராஜேஷ்!’

‘ஆமா ஸார்! உங்களுக்காவது வெளியேதான் ஹீட்டு. எனக்கு உள்ளேயும். தொட்டுப் பாருங்க’.

கழுத்தைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார், ‘தூங்காவனம்’ இயக்குநர் ராஜேஷ். கொதித்தது. சென்னை விமான நிலையத்திலேயே இருமிக் கொண்டிருந்தார்.

‘நாளைக்கு இங்கெ பிரஸ் மீட். நாளான்னைக்கு ஷூட்டிங். உடம்ப கவனிக்க வேண்டாமா? டாக்டர்கிட்டப் போனீங்களா?’

‘அதெல்லாம் போயிப் பாத்து டேப்லட் போட்டுக்கிட்டுத்தான் ஸார் இருக்கேன். பிரஸ் மீட்ல பேசறத நெனச்சா, காய்ச்சல் ஜாஸ்தியாகுது. . . ஆங்! சொல்லமறந்துட்டேன். நீங்களும் பேச வேண்டியதிருக்கும், ஸார்’.

‘ஐயோ! எனக்கு தெலுங்கு தெரியாதே, ராஜேஷ்! மேடைல பேசச் சொன்னா தமிழும் மறந்து போயிருமே!’

‘அதெல்லாம் பாத்துக்கலாம். நீங்க பேசறீங்க’.

பெட்டியை உருட்டிக் கொண்டு முன்னே சென்றார், ராஜேஷ். மெல்ல அவர் பின்னாலேயெ என் பெட்டியை உருட்டியபடிச் சென்ற எனக்கு உள்ளுக்குள் உஷ்ணம் ஏற ஆரம்பித்தது.

விமான நிலையத்தில் தன்னந்தனியாக பேனர் மூலம் நரசிம்மராவ் புன்னகையுடன் எங்களை வரவேற்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஹைதராபாத்தின் சாலையோர பேனர்களில் தன் சகோதரர், மற்றும் சகோதரரின் மகருடன் குடும்ப சகிதம் வரவேற்றார். பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ‘Fortune hotel’இல் அறை ஒதுக்கியிருந்தார்கள். அறையில் பெட்டியை வைத்து விட்டு சாப்பிடுவதற்காகக் கீழே உள்ள ரெஸ்டாரண்டுக்குச் சென்றோம். வேண்டியவற்றை நாமே எடுத்துத் தட்டில் போட்டுக் கொண்டு உண்ணும் ‘புஃபே’ முறை. விதம் விதமான குண்டாஞ்சட்டிகளில் பல சைவ, அசைவ பதார்த்தங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. வலப்பக்க மேஜை முழுதும் காய்கறிகளும், பழங்களும் நறுக்கி வைக்கப்பட்டிருந்தன.

‘சுகா ஸார்! இங்கெ எல்லாமே நல்ல டேஸ்ட்டியா இருக்கும். ஆனா, வருஷம் முழுக்க ஒரே டேஸ்ட்தான். ரெண்டே நாள்ல உங்களுக்கு போரடிச்சுடும்’.

தயாரிப்பாளர் சித்தாரா சுரேஷ் ஒரு தகவலாகச் சொல்லி எச்சரித்தார். அஸ்ஸாம் மற்றும் சீன முக அமைப்பு கொண்ட வடநாட்டு இளைஞர்களும், யுவதிகளும் சீருடை அணிந்து உபசாரம் செய்ய, காய்கறி சூப்பில் தொடங்கி ரொட்டி, பனீர் பட்டர் மசாலா, நவதானியங்களாலான ஏதோ ஒரு கலவை, பச்சைக் காய்கறிகள், வெஜிடபிள் புலவ் மற்றும் சோறு, சாம்பார் தோற்றத்தில் காட்சி தந்து, அசைவமோ என்று சந்தேகிக்கும் வண்ணம் அமைந்த குழம்பு, வெந்த பீன்ஸ், எண்ணெய் மிதக்கும் கத்தரிக்காய், முட்டைக்கோஸ் பொரியல், கருணக்கிழங்கும், முருங்கைக்காயும் இணைந்து ருசித்த ஒரு தொடுகறி வகை, சின்னத் துண்டுகளாக நறுக்கிப் போடப்பட்ட கேரட்டும், மிளகாயும் கலந்த தயிர் சாதம், சுட்ட மற்றும் பொரித்த அப்பளம், வத்தல், ஊறுகாய், கோங்குரா சட்னி, வித விதமான இனிப்பு வகைகள் என அமர்க்களப்பட்டது, ‘Fortune’ உணவு விடுதி. சித்தாரா சொன்ன மாதிரியே இரண்டாவது நாளே Fortune உணவு முகத்தில் அடிக்க ஆரம்பித்து விட்டது. மதியம் மட்டும் படப்பிடிப்புத் தளத்தில் சாப்பாடு. சில சமயம் காலையும். இரவு உணவு ‘Fortune’இல்தான். தினமும் இரவு வயிற்றை நிரப்பி அனுப்பினார்கள், அஸ்ஸாம் சிப்பந்திகள்.

எல்லோரும் பயமுறுத்தியது போல் தெலுங்கு உணவுவகைகளில் அத்தனை காரம் இல்லை.

படப்பிடிப்புத் தளத்தில் கமல் அண்ணாச்சியிடம் சொன்னேன்.

‘இங்கெ சாப்பாடுல்லாம் அப்படி ஒண்ணும் காரமா இல்லியே! காரச்சட்னில கூட வெல்லம் போட்டிருக்காங்களே!’

‘எல்லாத்துலயும் வெல்லத்த எதிர்பார்த்து மாட்டிக்கிடாதிய. இங்கெ கொதிக்கிற வெயில்ல மொளகா பஜ்ஜி தின்னு சூடா டீ குடிப்பாங்க. பாக்கறதுக்கு நல்லா இருக்கும். ஆசப்பட்டு வாங்கித் தின்னா அவ்ளோதான்’.

‘ஏன்? ரொம்ப காரமா இருக்குமா?’

‘காரம்னு சொல்ல முடியாது. ஆனா, காலைல ஐஸ் வாட்டர்லதான் அலம்பணும். வாங்கிட்டு வரச் சொல்லட்டுமா? . . . நில்லுங்க. எங்கெ போறிய?’.

உடனடியாக குட்நைட் சொல்லிவிட்டு அவரிடமிருந்து விலகி நடக்கும்போது நண்பகல் மணி பன்னிரெண்டு.

IMG-20150625-WA0009

படப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாள் சென்னையிலிருந்து யூகி சேது வந்து சேர்ந்தார். அப்பாடா! நமக்கொரு சைவத்துணையாச்சு என்று மகிழ்ந்தேன். யூகி சேதுவுக்கு எண்ணெய் ஆகாது. தோசையையே ரொட்டி போல எண்ணெய் இல்லாமல் அடுப்பில் வாட்டித் தருமாறுக் கேட்பவர். ஒவ்வொரு நாளும் எனக்கான உணவுத் தட்டையும் அவரே நிரப்பிக் கொண்டு வந்து கொடுத்தார்.

‘இதென்ன சேது? ஏதோ பூச்சி மாதிரி இருக்கே! தொட்டாப் பேசுமோ?’

அச்சத்துடன் கேட்டேன்.

‘ஐயோ! இது ப்ரொக்கோலி சுகா. இத சாப்பிட்டதில்லயா? ஒடம்புக்கு ரொம்ப நல்லது.’

கூடவே ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் ஊற வைத்த வெந்தயம், பாதாம், முளைகட்டிய பயிறு வகைகள் எடுத்து வந்து, தாயுள்ளத்துடன் பரிமாறினார்.

‘நான் சாப்பிடலாமா, சேது?’

‘அதென்ன நீங்க மாத்திரம்? நானும் சாப்பிடுவேன்’.

‘இல்ல சேது. நாம ரெண்டு பேருமே நாண் சாப்பிடலாமா?’

‘ஓ! அந்த நாணா? அதெல்லாம் மைதா. சாப்பிடக்கூடாது. கோதுமை சாப்பிடலாம். ரொட்டி சொல்றேன். இருங்க’.

‘சாம்பார்வட நல்லா இருக்கற மாதிரி தெரியுதே, சேது!’

‘நோ நோ! எண்ணெய்! தொடப்படாது’.

யூகி சேது ஹைதராபாத்தில் இருக்கும் வரைக்கும் அவர் விருப்பப்படிதான் உண்டு வாழ்ந்தேன்.

சிலதினங்களில் நடிகர் கிஷோர் வந்து சேர்ந்தார். இயற்கை உணவு பற்றியும், இயற்கை விவசாயம் குறித்தும் கிஷோர் சொல்லியிருப்பதை அப்போதுதான் படித்திருந்தேன். கிஷோருடன் சேர்ந்து கொண்டு சத்துள்ள ஆகாரம் உண்ண விரும்பினேன். ஆனால் கிஷோர் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக, என்னை கொழு கொழு தயிர் சாதத்தை முழுங்க வைப்பதிலேயே குறியாக இருந்தார். அதுவும் இரவு உணவின் போது என்னருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, ‘அநாவசியமா டயட் கியட்னு தயிர் சாதத்த மிஸ் பண்ணாதீங்க, ஸார். அமிர்தமா இருக்கு’.

‘நீங்க என்ன சொன்னாலும் நைட் ரைஸ் சாப்பிடறதா இல்ல, கிஷோர். ஸாரி’ என்றேன்.

இரண்டாம் நாளே கிஷோர் அமோக வெற்றி பெற்றார். தயிர் சாதத்துக்கு முன் ரசம் மற்றும் சாம்பார் சாதங்கள் அணிவகுத்து என் விரதத்தைச் சிதறடித்தன.

அதற்கடுத்த நாள் ஹைதராபாத் வந்து சேர்ந்த நடிகர் சோமசுந்தரம், (ஆ. காண்டம், ஜி.தண்டா) வந்த ஒரே நாளில் கிஷோரை நல்லவராக்கினார்.

‘சுகா ஸார்! எவ்வளவு சாப்பிட்டாலும் கடைசில ஐஸ்கிரீம் சாப்பிடாம இருக்கக் கூடாது. ஜீரணம் ஆக வேண்டாமா?’

வழிய வழிய இரண்டு கோப்பை ஐஸ்கிரீமைக் கொணர்ந்து என் டேபிளில் வைத்து உபசரித்தார்.

‘ஏம்பா! ஒங்களுக்கெல்லாம் என் ஹிப் சைஸக் கூட்டறதுல அப்படி என்ன சந்தோஷம்?’

கடும் கோபத்துடன் கேட்டு விட்டு ஐஸ்கிரீமை சாப்பிட ஆரம்பித்தேன்.

இயக்குநர் ராஜேஷின் ஹிப் சைஸ் என்னுடையதை விட இமாலய அளவு அதிகம் என்பதால் அவருடன் அமர்ந்து சாப்பிடுவது மனதுக்கு மகிழ்ச்சி தருகிற ஒன்று. உடம்பைப் போலவே ராஜேஷின் மனதும் பரந்த ஒன்று.

‘உடம்ப எப்படியும் குறைச்சிரலாம்தானே, ராஜேஷ்?’

‘நிச்சயம் கொர்ர்ர்ர்றச்ச்ச்ச்ச்சிரலாம், ஸார்’.

வாய் நிறைய பாகற்காய் பக்கோடா இருந்தாலும் இந்த ஒரே பதிலைச் சொல்லத் தவறுவதே இல்லை, ராஜேஷ்.

IMG-20150625-WA0008

சீக்கிரம் படப்பிடிப்பு முடிந்த நாட்களில் யூகி சேதுவுடன் பஞ்சாரா ஹில்ஸின் நீண்ட வீதியில் ஒரு வாக்கிங் செல்ல முடிந்தது. யூகி சேதுவுடன் கண்ணை மூடிக்கொண்டுக் கூட நடந்து விடலாம். கையைப் பிடித்து பத்திரமாக அழைத்துச் சென்று விடுவார். ஆனால் காதை மூடிக் கொள்ள முடியாது. அப்படியே காதை மூடினாலும், மூளைக்குள் புகுந்து பேசி விடுவார். அந்த விஷயத்தில் யூகி சேது, நண்பர் ஜெயமோகனின் சித்தப்பா. சேதுவும், நானும் ஏற்கனவே தயாரிப்பாளர் ஜார்ஜ் பயஸ் சொல்லியிருந்த ஒரு தோசைக் கடையைத் தேடி அலைந்தோம். பல நிமிடங்கள் அலைச்சலுக்குப் பிறகு தோசைக் கடை கண்ணுக்குச் சிக்காமல், நாங்கள் தங்கிருந்த ஹோட்டலுக்குச் சோர்வுடன் திரும்பியபோது மிக அருகில் ‘டிஃபன்ஸ்’ என்கிற அந்த செல்ஃப் சர்வீஸ் தோசைக் கடையைக் கண்டுபிடித்து உள்ளே புகுந்தோம்.

நின்று சாப்பிட இரண்டு டேபிள்களும், அமர்ந்து சாப்பிட நான்கு டேபிள்களும் போடப்பட்டிருந்தன. கல்லாவுக்கு எதிரே சற்று உயரத்தில் தொலைக்காட்சி ஒலி சற்று உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. வண்ணமயமான தெலுங்கு சினிமா பாடல்கள்.

‘ரெண்டு தோச. ஆயிலே இல்லாம குடுங்க’.

உடைந்த தெலுங்கில் சேது ஆர்டர் சொன்னார். எண்ணெய் இல்லாத தோசையும், கிண்ணத்தில் சாம்பாரும், சட்னியும் வாங்கிக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கீழே உள்ள டேபிளில் உட்கார்ந்தபடி பாடலைப் பார்த்துக் கொண்டே சாப்பிடத் துவங்கினோம். கனத்த தெலுங்கு நடிகர் ஒருவர், அவரை விட புஷ்டியான சிவலிங்கத்தைப் பார்த்து கோபமாகப் பாடிக் கொண்டிருந்தார். கூடவே ஒலித்த பெண்குரல் வந்த திசை நோக்கி நானும், யூகி சேதுவும் திரும்பினோம். கல்லாவில் அமர்ந்திருந்த இளம்பெண் தொலைக்காட்சியைப் பார்க்காமலேயே பாடிக் கொண்டிருந்தாள். இருபதுகளின் துவக்கத்தில் இருந்தாள். மூக்கில் சிறு வளையம். ஸ்டிக்கர் பொட்டு. காதுகளில் மெல்லியத் தகட்டுத் தோடுகள். கழுத்தில் கருப்பு கலந்து மினுங்கும் சங்கிலி. தலைக்குப் பின்னால் புகைப்படத்தில் ஊதுவத்தி வாசனையுடன் ஷீரடி சாய்பாபா. சேது இன்னொரு எண்ணெயில்லா தோசை சொன்னார். இப்போது வேறு ஒரு காதல் பாடல். ஜூனியர் என். டி. ஆர் உடற்பயிற்சி போல ஆடி, யாரோ ஒரு மும்பை அழகியை சுந்தரத் தெலுங்கில் பாடிக் காதலித்தார். பதிலுக்கு அந்தப் பெண்ணும் அவளால் முடிந்த அளவுக்கு உடற்பயிற்சியினாலேயே பதிலுக்கு வாயசைத்துக் குதித்தாள். கல்லாப்பெட்டி பெண், நாயகன், நாயகியுடன் இணைந்து இரு குரலிலும் பாடினாள். அத்தனை சுதி சுத்தமான குரல். உச்ச ஸ்தாயி போகும் போது கொஞ்சமும் பிசிறடிக்கவில்லை. கள்ளத் தொண்டையில் அல்லாமல் அவளால் இயல்பாகப் பாட முடிந்தது.

அதற்குப் பிறகு அந்தப் பெண்ணின் பாடலைக் கேட்பதற்காகவே நானும், யூகி சேதுவும் ‘டிஃபன்ஸ்’ கடைக்குச் சென்றோம். தோசைத் தட்டுடன் கல்லாப்பெட்டிக்கு எதிரே உள்ள நாற்காலிகளில் அந்தப் பெண் பாடுவதைப் பார்ப்பதற்கு வாகாக அமர்ந்து கொண்டோம். இந்த முறை ‘குணா’ திரைப்படத்திலிருந்து ‘கண்மணி ஈ ப்ரேம லேகனே ராசின்டி ஹ்ருதயமே ’ என்று நாம் கேட்டுப் பழகிய மெட்டு, தெலுங்கில் ஒலித்தது. கல்லாப்பெட்டி பெண் ஜானகியுடன் இணைந்து பாடினாள். சேதுவும், நானும் அந்தப் பெண்ணின் குரல் கேட்டு மகிழ்ந்து போனோம்.

‘இந்தப் பொண்ணு இப்ப இவ்வளவு சந்தோஷமா இருக்குது. எல்லாம் கல்யாணம் வரைக்கும்தான். அப்புறம் லைஃப் அவள என்னா பாடு படுத்தப் போகுதோ!’ என்றார், யூகி சேது.

‘அப்படில்லாம் இல்ல சேது. இந்தப் பொண்ணப் புரிஞ்சுக்கற மாதிரி ஒருத்தன் நிச்சயம் கெடைப்பான். இவ சந்தோஷமாப் பாடிக்கிட்டே இருக்கத்தான் போறா. மனசார வாழ்த்துவோம்’ என்றேன்.

கைகழுவி விட்டு பில் கொடுக்க கல்லாப் பெட்டிக்கு வந்தோம்.

பணம் கொடுக்கும் போது, சேது அவளுடன் மெதுவாகப் பேச்சு கொடுத்தார்.

‘பேரென்னம்மா?’

‘சாய்லட்சுமி’.

முகம் பார்க்காமல் பதில் வந்தது.
‘நல்லா பாடறியே! சினிமாவுல நடிக்கிறியா? நாங்கல்லாம் கமலஹாசன் படம் ஷூட்டிங்குக்காக வந்திருக்கோம். நான் நடிக்கிறேன். ஸார் எழுதறாரு’.

நிமிர்ந்து எங்களிருவரையும் பார்த்த சாய்லட்சுமியின் முகத்தில் சற்றும் எதிர்பாரா முறைப்பு. ‘சினிமாவா? ம்ஹூம்’ என்று வேகமாகத் தலையை ஆட்டி முகத்தைப் பொத்திக் கொண்டாள். இளம்பெண்களை ஓரக்கண்ணால் பார்த்து லேசாகப் புன்னகைத்தாலே லாரியைக் கழுத்தில் ஏற்றிக் கொல்கிற தெலுங்குத் திரைப்பட வில்லன்கள் ஒரு நொடியில் நினைவுக்கு வந்து போனார்கள். மூளை வேகமாக யோசித்தது. இதற்குள் சாய்லட்சுமி, பாரதிராஜாவின் நாயகி போல இரு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு, மெல்ல ஒரு கையை இறக்கி என்னைப் பார்த்தாள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தெலுங்குக் களத்தில் குதித்தேன்.

‘நீலு குரலு பியூட்டிஃபுல்லு. மியூசிக்லு படிச்சியாலு?’

சட்டென்று வெட்கம் விலகி, அடக்க முடியாமல் சிரித்தபடி, ‘தமிழ்லயே பேசுங்க, ஸார். எனக்கு தமிழ் தெரியும்’ என்றாள், சாய்லட்சுமி.