ஹிஸ்டரி, ஜியாக்ரஃபி…

                                                   varthairasanaimoongilmoochu

 

‘எழுத்தும், எண்ணமும்,’ குழுமத்தில்தான் முதன்முதலில் விளையாட்டாக எழுதத் தொடங்கினேன். அந்தக் குழுமத்துக்குள் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று எழுத வைத்தவர் நண்பர். பி. கே. சிவகுமார். பின்னர் சிவகுமாரும், கோபால் ராஜாராம், துகாராம் சகோதரர்கள் உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து துவக்கிய ‘வார்த்தை’ சிற்றிதழில் ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமத்தில் நான் எழுதிய சில கட்டுரைகள் போக இன்னும் பல கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் முக்கியமானதாக நான் கருதுவது, ‘யுகசந்தி’. ‘வார்த்தை’ சிற்றிதழில் என் கட்டுரைகளைப் படித்து விட்டு தொடர்பு கொண்டவர்களில் முதன்மையானவர் காலம்சென்ற தி.க.சி. தாத்தா. “வே! எங்கலே இருந்தேரு இத்தன நாளா?”

‘வார்த்தை’ சிற்றிதழின் ஆசிரியர் ஐயா பி.ச. குப்புசாமி தொடர்ந்து ஊக்குவித்தார்.

‘நான் திருநவேலில பிறக்கலியேன்னு ஏங்க வைக்கறீங்களே, சுகா!’

“சுகா, ‘வார்த்தை’ல எளுதறீங்க. ஓகே. அதையெல்லாம் இணையத்துல ஒரு பிளாக் ஓப்பன் பண்ணி சேத்து வச்சா, அது ஒரு டைரி மாதிரி காலத்துக்கும் இருக்கும்,” என்று சொல்லி எனக்கான ஒரு வலைப்பூவைத் துவக்கி அதுவரைக்கும் நான் எழுதிய கட்டுரைகளை அந்த வலைப்பூவில் இட்டு சேமிக்கத் தொடங்கினார், நண்பர் மனோ. பெயர் மட்டும் ‘வேணுவனம்’ என்று நான் வைத்தேன்.

பிறகு தம்பி சேதுபதி அருணாசலம் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவங்க இருக்கிற விஷயத்தைச் சொல்லி அதில் தொடர்ந்து எழுதச் சொன்னார். ;வார்த்தை’யில் ஏற்கனவே பிரசுரமாகிய ‘திசை’ கட்டுரையுடன் சொல்வனம் முதல் இதழ் வெளியாகியது. இதற்கிடையே ஆனந்த விகடன் ஆசிரியர் நண்பர் இரா. கண்ணன் விகடனில் தொடர் எழுதச் சொன்னார். அதுதான் ‘மூங்கில் மூச்சு’. முப்பத்து மூன்று வாரங்கள் விகடனில் எழுதிய பிறகும், தொடர்ந்து ‘சொல்வனம்’ மின்னிதழில் எழுதி வந்தேன். வருகிறேன். “‘வார்த்தை’ இதழில் வெளிவந்திருந்தாலும் பரவாயில்லை, நாங்களும் எங்கள் பத்திரிக்கையில் பிரசுரிக்கிறோம்,” என்று நான் எழுதிய கட்டுரைகளை தமது ‘ரசனை’ பத்திரிக்கையில் தொடர்ந்து பிரசுரித்தார், சகோதரர் மரபின் முத்தையா. இப்போது ‘வேணுவனம்’ கட்டுரைகள், மற்றும் ஆனந்த விகடன் இதழில் நான் அபூர்வமாக எழுதுகிற சிறுகதைகளை இட்டு சேமித்து வைக்கிறார் நட்பாஸ் என்கிற பாஸ்கர் என்கிற ‘பதாகை’ பாஸ்கர்.

இதுவே நான் ரைட்டரான ஹிஸ்டரியும், ஜியாக்ரஃபியும்.

தெலுங்கானா தோசையும், சாய்லட்சுமியின் இசையும் . .

ஹைதராபாத் விமான நிலையத்தில் போய் இறங்கும் போதே தெலுங்கானாவின் உஷ்ணக்காற்று மூஞ்சியில் அறைந்து சினத்துடன் வரவேற்றது.

‘நம்ம ஊர் வெப்பம் எவ்வளவோ பரவாயில்லன்னுத் தோண வைக்குதே, ராஜேஷ்!’

‘ஆமா ஸார்! உங்களுக்காவது வெளியேதான் ஹீட்டு. எனக்கு உள்ளேயும். தொட்டுப் பாருங்க’.

கழுத்தைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார், ‘தூங்காவனம்’ இயக்குநர் ராஜேஷ். கொதித்தது. சென்னை விமான நிலையத்திலேயே இருமிக் கொண்டிருந்தார்.

‘நாளைக்கு இங்கெ பிரஸ் மீட். நாளான்னைக்கு ஷூட்டிங். உடம்ப கவனிக்க வேண்டாமா? டாக்டர்கிட்டப் போனீங்களா?’

‘அதெல்லாம் போயிப் பாத்து டேப்லட் போட்டுக்கிட்டுத்தான் ஸார் இருக்கேன். பிரஸ் மீட்ல பேசறத நெனச்சா, காய்ச்சல் ஜாஸ்தியாகுது. . . ஆங்! சொல்லமறந்துட்டேன். நீங்களும் பேச வேண்டியதிருக்கும், ஸார்’.

‘ஐயோ! எனக்கு தெலுங்கு தெரியாதே, ராஜேஷ்! மேடைல பேசச் சொன்னா தமிழும் மறந்து போயிருமே!’

‘அதெல்லாம் பாத்துக்கலாம். நீங்க பேசறீங்க’.

பெட்டியை உருட்டிக் கொண்டு முன்னே சென்றார், ராஜேஷ். மெல்ல அவர் பின்னாலேயெ என் பெட்டியை உருட்டியபடிச் சென்ற எனக்கு உள்ளுக்குள் உஷ்ணம் ஏற ஆரம்பித்தது.

விமான நிலையத்தில் தன்னந்தனியாக பேனர் மூலம் நரசிம்மராவ் புன்னகையுடன் எங்களை வரவேற்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஹைதராபாத்தின் சாலையோர பேனர்களில் தன் சகோதரர், மற்றும் சகோதரரின் மகருடன் குடும்ப சகிதம் வரவேற்றார். பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ‘Fortune hotel’இல் அறை ஒதுக்கியிருந்தார்கள். அறையில் பெட்டியை வைத்து விட்டு சாப்பிடுவதற்காகக் கீழே உள்ள ரெஸ்டாரண்டுக்குச் சென்றோம். வேண்டியவற்றை நாமே எடுத்துத் தட்டில் போட்டுக் கொண்டு உண்ணும் ‘புஃபே’ முறை. விதம் விதமான குண்டாஞ்சட்டிகளில் பல சைவ, அசைவ பதார்த்தங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. வலப்பக்க மேஜை முழுதும் காய்கறிகளும், பழங்களும் நறுக்கி வைக்கப்பட்டிருந்தன.

‘சுகா ஸார்! இங்கெ எல்லாமே நல்ல டேஸ்ட்டியா இருக்கும். ஆனா, வருஷம் முழுக்க ஒரே டேஸ்ட்தான். ரெண்டே நாள்ல உங்களுக்கு போரடிச்சுடும்’.

தயாரிப்பாளர் சித்தாரா சுரேஷ் ஒரு தகவலாகச் சொல்லி எச்சரித்தார். அஸ்ஸாம் மற்றும் சீன முக அமைப்பு கொண்ட வடநாட்டு இளைஞர்களும், யுவதிகளும் சீருடை அணிந்து உபசாரம் செய்ய, காய்கறி சூப்பில் தொடங்கி ரொட்டி, பனீர் பட்டர் மசாலா, நவதானியங்களாலான ஏதோ ஒரு கலவை, பச்சைக் காய்கறிகள், வெஜிடபிள் புலவ் மற்றும் சோறு, சாம்பார் தோற்றத்தில் காட்சி தந்து, அசைவமோ என்று சந்தேகிக்கும் வண்ணம் அமைந்த குழம்பு, வெந்த பீன்ஸ், எண்ணெய் மிதக்கும் கத்தரிக்காய், முட்டைக்கோஸ் பொரியல், கருணக்கிழங்கும், முருங்கைக்காயும் இணைந்து ருசித்த ஒரு தொடுகறி வகை, சின்னத் துண்டுகளாக நறுக்கிப் போடப்பட்ட கேரட்டும், மிளகாயும் கலந்த தயிர் சாதம், சுட்ட மற்றும் பொரித்த அப்பளம், வத்தல், ஊறுகாய், கோங்குரா சட்னி, வித விதமான இனிப்பு வகைகள் என அமர்க்களப்பட்டது, ‘Fortune’ உணவு விடுதி. சித்தாரா சொன்ன மாதிரியே இரண்டாவது நாளே Fortune உணவு முகத்தில் அடிக்க ஆரம்பித்து விட்டது. மதியம் மட்டும் படப்பிடிப்புத் தளத்தில் சாப்பாடு. சில சமயம் காலையும். இரவு உணவு ‘Fortune’இல்தான். தினமும் இரவு வயிற்றை நிரப்பி அனுப்பினார்கள், அஸ்ஸாம் சிப்பந்திகள்.

எல்லோரும் பயமுறுத்தியது போல் தெலுங்கு உணவுவகைகளில் அத்தனை காரம் இல்லை.

படப்பிடிப்புத் தளத்தில் கமல் அண்ணாச்சியிடம் சொன்னேன்.

‘இங்கெ சாப்பாடுல்லாம் அப்படி ஒண்ணும் காரமா இல்லியே! காரச்சட்னில கூட வெல்லம் போட்டிருக்காங்களே!’

‘எல்லாத்துலயும் வெல்லத்த எதிர்பார்த்து மாட்டிக்கிடாதிய. இங்கெ கொதிக்கிற வெயில்ல மொளகா பஜ்ஜி தின்னு சூடா டீ குடிப்பாங்க. பாக்கறதுக்கு நல்லா இருக்கும். ஆசப்பட்டு வாங்கித் தின்னா அவ்ளோதான்’.

‘ஏன்? ரொம்ப காரமா இருக்குமா?’

‘காரம்னு சொல்ல முடியாது. ஆனா, காலைல ஐஸ் வாட்டர்லதான் அலம்பணும். வாங்கிட்டு வரச் சொல்லட்டுமா? . . . நில்லுங்க. எங்கெ போறிய?’.

உடனடியாக குட்நைட் சொல்லிவிட்டு அவரிடமிருந்து விலகி நடக்கும்போது நண்பகல் மணி பன்னிரெண்டு.

IMG-20150625-WA0009

படப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாள் சென்னையிலிருந்து யூகி சேது வந்து சேர்ந்தார். அப்பாடா! நமக்கொரு சைவத்துணையாச்சு என்று மகிழ்ந்தேன். யூகி சேதுவுக்கு எண்ணெய் ஆகாது. தோசையையே ரொட்டி போல எண்ணெய் இல்லாமல் அடுப்பில் வாட்டித் தருமாறுக் கேட்பவர். ஒவ்வொரு நாளும் எனக்கான உணவுத் தட்டையும் அவரே நிரப்பிக் கொண்டு வந்து கொடுத்தார்.

‘இதென்ன சேது? ஏதோ பூச்சி மாதிரி இருக்கே! தொட்டாப் பேசுமோ?’

அச்சத்துடன் கேட்டேன்.

‘ஐயோ! இது ப்ரொக்கோலி சுகா. இத சாப்பிட்டதில்லயா? ஒடம்புக்கு ரொம்ப நல்லது.’

கூடவே ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் ஊற வைத்த வெந்தயம், பாதாம், முளைகட்டிய பயிறு வகைகள் எடுத்து வந்து, தாயுள்ளத்துடன் பரிமாறினார்.

‘நான் சாப்பிடலாமா, சேது?’

‘அதென்ன நீங்க மாத்திரம்? நானும் சாப்பிடுவேன்’.

‘இல்ல சேது. நாம ரெண்டு பேருமே நாண் சாப்பிடலாமா?’

‘ஓ! அந்த நாணா? அதெல்லாம் மைதா. சாப்பிடக்கூடாது. கோதுமை சாப்பிடலாம். ரொட்டி சொல்றேன். இருங்க’.

‘சாம்பார்வட நல்லா இருக்கற மாதிரி தெரியுதே, சேது!’

‘நோ நோ! எண்ணெய்! தொடப்படாது’.

யூகி சேது ஹைதராபாத்தில் இருக்கும் வரைக்கும் அவர் விருப்பப்படிதான் உண்டு வாழ்ந்தேன்.

சிலதினங்களில் நடிகர் கிஷோர் வந்து சேர்ந்தார். இயற்கை உணவு பற்றியும், இயற்கை விவசாயம் குறித்தும் கிஷோர் சொல்லியிருப்பதை அப்போதுதான் படித்திருந்தேன். கிஷோருடன் சேர்ந்து கொண்டு சத்துள்ள ஆகாரம் உண்ண விரும்பினேன். ஆனால் கிஷோர் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக, என்னை கொழு கொழு தயிர் சாதத்தை முழுங்க வைப்பதிலேயே குறியாக இருந்தார். அதுவும் இரவு உணவின் போது என்னருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, ‘அநாவசியமா டயட் கியட்னு தயிர் சாதத்த மிஸ் பண்ணாதீங்க, ஸார். அமிர்தமா இருக்கு’.

‘நீங்க என்ன சொன்னாலும் நைட் ரைஸ் சாப்பிடறதா இல்ல, கிஷோர். ஸாரி’ என்றேன்.

இரண்டாம் நாளே கிஷோர் அமோக வெற்றி பெற்றார். தயிர் சாதத்துக்கு முன் ரசம் மற்றும் சாம்பார் சாதங்கள் அணிவகுத்து என் விரதத்தைச் சிதறடித்தன.

அதற்கடுத்த நாள் ஹைதராபாத் வந்து சேர்ந்த நடிகர் சோமசுந்தரம், (ஆ. காண்டம், ஜி.தண்டா) வந்த ஒரே நாளில் கிஷோரை நல்லவராக்கினார்.

‘சுகா ஸார்! எவ்வளவு சாப்பிட்டாலும் கடைசில ஐஸ்கிரீம் சாப்பிடாம இருக்கக் கூடாது. ஜீரணம் ஆக வேண்டாமா?’

வழிய வழிய இரண்டு கோப்பை ஐஸ்கிரீமைக் கொணர்ந்து என் டேபிளில் வைத்து உபசரித்தார்.

‘ஏம்பா! ஒங்களுக்கெல்லாம் என் ஹிப் சைஸக் கூட்டறதுல அப்படி என்ன சந்தோஷம்?’

கடும் கோபத்துடன் கேட்டு விட்டு ஐஸ்கிரீமை சாப்பிட ஆரம்பித்தேன்.

இயக்குநர் ராஜேஷின் ஹிப் சைஸ் என்னுடையதை விட இமாலய அளவு அதிகம் என்பதால் அவருடன் அமர்ந்து சாப்பிடுவது மனதுக்கு மகிழ்ச்சி தருகிற ஒன்று. உடம்பைப் போலவே ராஜேஷின் மனதும் பரந்த ஒன்று.

‘உடம்ப எப்படியும் குறைச்சிரலாம்தானே, ராஜேஷ்?’

‘நிச்சயம் கொர்ர்ர்ர்றச்ச்ச்ச்ச்சிரலாம், ஸார்’.

வாய் நிறைய பாகற்காய் பக்கோடா இருந்தாலும் இந்த ஒரே பதிலைச் சொல்லத் தவறுவதே இல்லை, ராஜேஷ்.

IMG-20150625-WA0008

சீக்கிரம் படப்பிடிப்பு முடிந்த நாட்களில் யூகி சேதுவுடன் பஞ்சாரா ஹில்ஸின் நீண்ட வீதியில் ஒரு வாக்கிங் செல்ல முடிந்தது. யூகி சேதுவுடன் கண்ணை மூடிக்கொண்டுக் கூட நடந்து விடலாம். கையைப் பிடித்து பத்திரமாக அழைத்துச் சென்று விடுவார். ஆனால் காதை மூடிக் கொள்ள முடியாது. அப்படியே காதை மூடினாலும், மூளைக்குள் புகுந்து பேசி விடுவார். அந்த விஷயத்தில் யூகி சேது, நண்பர் ஜெயமோகனின் சித்தப்பா. சேதுவும், நானும் ஏற்கனவே தயாரிப்பாளர் ஜார்ஜ் பயஸ் சொல்லியிருந்த ஒரு தோசைக் கடையைத் தேடி அலைந்தோம். பல நிமிடங்கள் அலைச்சலுக்குப் பிறகு தோசைக் கடை கண்ணுக்குச் சிக்காமல், நாங்கள் தங்கிருந்த ஹோட்டலுக்குச் சோர்வுடன் திரும்பியபோது மிக அருகில் ‘டிஃபன்ஸ்’ என்கிற அந்த செல்ஃப் சர்வீஸ் தோசைக் கடையைக் கண்டுபிடித்து உள்ளே புகுந்தோம்.

நின்று சாப்பிட இரண்டு டேபிள்களும், அமர்ந்து சாப்பிட நான்கு டேபிள்களும் போடப்பட்டிருந்தன. கல்லாவுக்கு எதிரே சற்று உயரத்தில் தொலைக்காட்சி ஒலி சற்று உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. வண்ணமயமான தெலுங்கு சினிமா பாடல்கள்.

‘ரெண்டு தோச. ஆயிலே இல்லாம குடுங்க’.

உடைந்த தெலுங்கில் சேது ஆர்டர் சொன்னார். எண்ணெய் இல்லாத தோசையும், கிண்ணத்தில் சாம்பாரும், சட்னியும் வாங்கிக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கீழே உள்ள டேபிளில் உட்கார்ந்தபடி பாடலைப் பார்த்துக் கொண்டே சாப்பிடத் துவங்கினோம். கனத்த தெலுங்கு நடிகர் ஒருவர், அவரை விட புஷ்டியான சிவலிங்கத்தைப் பார்த்து கோபமாகப் பாடிக் கொண்டிருந்தார். கூடவே ஒலித்த பெண்குரல் வந்த திசை நோக்கி நானும், யூகி சேதுவும் திரும்பினோம். கல்லாவில் அமர்ந்திருந்த இளம்பெண் தொலைக்காட்சியைப் பார்க்காமலேயே பாடிக் கொண்டிருந்தாள். இருபதுகளின் துவக்கத்தில் இருந்தாள். மூக்கில் சிறு வளையம். ஸ்டிக்கர் பொட்டு. காதுகளில் மெல்லியத் தகட்டுத் தோடுகள். கழுத்தில் கருப்பு கலந்து மினுங்கும் சங்கிலி. தலைக்குப் பின்னால் புகைப்படத்தில் ஊதுவத்தி வாசனையுடன் ஷீரடி சாய்பாபா. சேது இன்னொரு எண்ணெயில்லா தோசை சொன்னார். இப்போது வேறு ஒரு காதல் பாடல். ஜூனியர் என். டி. ஆர் உடற்பயிற்சி போல ஆடி, யாரோ ஒரு மும்பை அழகியை சுந்தரத் தெலுங்கில் பாடிக் காதலித்தார். பதிலுக்கு அந்தப் பெண்ணும் அவளால் முடிந்த அளவுக்கு உடற்பயிற்சியினாலேயே பதிலுக்கு வாயசைத்துக் குதித்தாள். கல்லாப்பெட்டி பெண், நாயகன், நாயகியுடன் இணைந்து இரு குரலிலும் பாடினாள். அத்தனை சுதி சுத்தமான குரல். உச்ச ஸ்தாயி போகும் போது கொஞ்சமும் பிசிறடிக்கவில்லை. கள்ளத் தொண்டையில் அல்லாமல் அவளால் இயல்பாகப் பாட முடிந்தது.

அதற்குப் பிறகு அந்தப் பெண்ணின் பாடலைக் கேட்பதற்காகவே நானும், யூகி சேதுவும் ‘டிஃபன்ஸ்’ கடைக்குச் சென்றோம். தோசைத் தட்டுடன் கல்லாப்பெட்டிக்கு எதிரே உள்ள நாற்காலிகளில் அந்தப் பெண் பாடுவதைப் பார்ப்பதற்கு வாகாக அமர்ந்து கொண்டோம். இந்த முறை ‘குணா’ திரைப்படத்திலிருந்து ‘கண்மணி ஈ ப்ரேம லேகனே ராசின்டி ஹ்ருதயமே ’ என்று நாம் கேட்டுப் பழகிய மெட்டு, தெலுங்கில் ஒலித்தது. கல்லாப்பெட்டி பெண் ஜானகியுடன் இணைந்து பாடினாள். சேதுவும், நானும் அந்தப் பெண்ணின் குரல் கேட்டு மகிழ்ந்து போனோம்.

‘இந்தப் பொண்ணு இப்ப இவ்வளவு சந்தோஷமா இருக்குது. எல்லாம் கல்யாணம் வரைக்கும்தான். அப்புறம் லைஃப் அவள என்னா பாடு படுத்தப் போகுதோ!’ என்றார், யூகி சேது.

‘அப்படில்லாம் இல்ல சேது. இந்தப் பொண்ணப் புரிஞ்சுக்கற மாதிரி ஒருத்தன் நிச்சயம் கெடைப்பான். இவ சந்தோஷமாப் பாடிக்கிட்டே இருக்கத்தான் போறா. மனசார வாழ்த்துவோம்’ என்றேன்.

கைகழுவி விட்டு பில் கொடுக்க கல்லாப் பெட்டிக்கு வந்தோம்.

பணம் கொடுக்கும் போது, சேது அவளுடன் மெதுவாகப் பேச்சு கொடுத்தார்.

‘பேரென்னம்மா?’

‘சாய்லட்சுமி’.

முகம் பார்க்காமல் பதில் வந்தது.
‘நல்லா பாடறியே! சினிமாவுல நடிக்கிறியா? நாங்கல்லாம் கமலஹாசன் படம் ஷூட்டிங்குக்காக வந்திருக்கோம். நான் நடிக்கிறேன். ஸார் எழுதறாரு’.

நிமிர்ந்து எங்களிருவரையும் பார்த்த சாய்லட்சுமியின் முகத்தில் சற்றும் எதிர்பாரா முறைப்பு. ‘சினிமாவா? ம்ஹூம்’ என்று வேகமாகத் தலையை ஆட்டி முகத்தைப் பொத்திக் கொண்டாள். இளம்பெண்களை ஓரக்கண்ணால் பார்த்து லேசாகப் புன்னகைத்தாலே லாரியைக் கழுத்தில் ஏற்றிக் கொல்கிற தெலுங்குத் திரைப்பட வில்லன்கள் ஒரு நொடியில் நினைவுக்கு வந்து போனார்கள். மூளை வேகமாக யோசித்தது. இதற்குள் சாய்லட்சுமி, பாரதிராஜாவின் நாயகி போல இரு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு, மெல்ல ஒரு கையை இறக்கி என்னைப் பார்த்தாள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தெலுங்குக் களத்தில் குதித்தேன்.

‘நீலு குரலு பியூட்டிஃபுல்லு. மியூசிக்லு படிச்சியாலு?’

சட்டென்று வெட்கம் விலகி, அடக்க முடியாமல் சிரித்தபடி, ‘தமிழ்லயே பேசுங்க, ஸார். எனக்கு தமிழ் தெரியும்’ என்றாள், சாய்லட்சுமி.

உபசாரம்

‘தென்காசி ஆசாரம் திருநவேலி உபசாரம்’ என்று பேச்சு வழக்கில் திருநவேலி பகுதிகளில் பேசிக் கேட்டிருக்கிறேன். தென்காசிக்காரர்கள் வீட்டில் பழையது சாப்பிட்டு விட்டு வந்து, விசேஷ வீடுகளில் சம்பிரதாயமாகப் பேருக்குக் கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டு கை கழுவி விடுவார்களாம். அதே போல் திருநவேலிக்காரர்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை ‘யய்யா வாருங்க! சாப்பிடுதேளா? சாப்பிட்டுட்டுதான் வந்திருப்பிய!’ என்பார்கள் என்று கேலியாகச் சொல்வதுண்டு. தென்காசிக்காரர்களுக்கும், திருநவேலிக்காரர்களுக்கும் இடையேயான இந்தக் கிண்டல் சம்பாஷணையில் உண்மையில்லை என்று ஶ்ரீரங்கத்துக்காரரான எழுத்தாளர் சுஜாதா தன் அனுபவத்திலிருந்து சொல்லியிருக்கிறார். ஆரெம்கேவி, கலாப்ரியா போன்றவர்களின் வீடுகளில் தான் சாப்பிட்ட பூ போன்ற இட்லியும், கல் தோசையும், அல்வாவும் வெஜிட்டேரியன்களுக்கு சொர்க்கம் என்றார் சுஜாதா. கூடவே தமிழறிஞர் அ. ச. ஞானசம்பந்தம் அவர்கள் திருநவேலிக்குச்ஒரு வீட்டுக்குச் சென்றபோது ஒரு தம்ளரில் தண்ணீரும் மற்றதில் வெந்நீரும் வைத்தார்களாம். அதேபோல் ஒரு தம்ளரில் மோரும் மற்றதில் தயிரும்.

‘உங்களுக்கு ஜலதோஷமென்றால், வெந்நீர் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தயிர் ஆகாது என்றால், மோர் சாப்பிடுங்கள்,’ என்றார்களாம். இது திருநெல்வேலி உபசாரம். இந்தச் சம்பவத்தையும் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார்.

திருநவேலியின் கல்யாணம், சடங்கு போன்ற சுப நிகழ்ச்சிகளிலும், அசுப காரியங்களிலும் பந்தி பரிமாறுவதற்கென்றே சில விசேஷமான மனிதர்களை அழைப்பார்கள்.

‘மறக்காம ரங்கனுக்கும், சம்முகத்துக்கும் சொல்லிருடே! எப்படியும் அஞ்சாறு பந்தி ஓடும். அவனுவொ இல்லென்னா சமாளிக்க முடியாது பாத்துக்கொ!’ Read More

பாபநாசத்தில் திருநவேலி . . .

papanasam

திரைப்படங்களில், தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் திருநெல்வேலி வட்டார வழக்கைக் கேட்கும்போதெல்லாம் வருந்தியிருக்கிறேன். திருநவேலி பாஷை என்று அவர்களாக நினைத்துக் கொண்டு கோவை, மதுரை வட்டார வழக்கு பேசுவார்கள். அம்பாசமுத்திரத்தைக் காண்பிப்பார்கள். ஆனால் அதில் வரும் கதாபாத்திரம், ‘என்ன ரவுசு பண்றே?’ என்று பேசும். இவர்களுக்கு எந்த ஊருமே வெறும் லொக்கேஷன்தானா என்று மனம் வெதும்பும்.

கணேசண்ணன் படிக்கிற காலத்தில், தமிழ்த் தேர்வின்போது, ‘செல்வம்’ என்று முடியும் குறள் எழுதுக என்பதற்கு

‘அவனன்றி போனதை இவனோடு சென்றதனால்
ஒருபோதும் போதா செல்வம்’

என்று எழுதி மதிப்பெண் வாங்கியதாகச் சொல்வான். அதுபோல நம் திரைப்படங்களில் ஏதாவது ஒரு வட்டார வழக்கைப் பேசி (சமயங்களில் தெலுங்கும்) கடைசியிலோ, முதலிலோ ஒரு ‘ஏலேய்’ போட்டு அதை திருநவேலி வட்டார வழக்காக அவர்களாகவே நினைத்துக் கொண்டு திருப்தியடைந்து விடுவார்கள்.

‘ஏல, எல, எலேய், யோல்’ இப்படி திருநவேலி விளி நிறைய உண்டு. நிக்கான் (நிற்கிறான்), பாக்கான் (பார்க்கிறான்), கேக்கான் (கேட்கிறான்), சொல்லுதான் (சொல்கிறான்)- இவை எல்லாம் உச்சரிப்பு சார்ந்தவை. ஆனால் இவை எல்லாவற்றையும்விட முக்கியம், திருநவேலி பாஷையில் உள்ள ராகம். அதை எழுத்தில் கொண்டு வர முடியாது. ஒலியில்தான் கொண்டு வர வேண்டும். பரமக்குடியில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, பல மொழிகளில் தேர்ந்து, பழந்தமிழிலும் நன்கு பயிற்சி உள்ள கலைஞர் கமல்ஹாசன், ‘திருநவேலி பாஷை’ பேச என்னாலான உதவிகளைச் செய்திருக்கிறேன்.

‘எனக்கு ஒண்ணும் தெரியாது. கிளிப்பிள்ளை மாதிரி நீங்க சொல்றத அப்படியே திருப்பி சொல்லிடறேன்,’ என்றார். ‘சொல்லிடறேன் இல்ல. சொல்லிருதென்’ என்றேன். அந்த நொடியிலிருந்தே பயிற்சி துவங்கியது. இப்போது தொலைபேசியில் பேசினாலும் அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘எங்கெ இருக்கிய?’

என்னிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்த அண்ணாச்சி கமல்ஹாசனுக்கு நன்றி.

நண்பர் ஜெயமோகனின் வசனத்தில், ஜீத்து ஜோஸ்ஃபின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் டிரெய்லர்:

 

post

திருவண்ணாமலைக்குப் போன கதை . . .

’சுகா! நான் ஃபேமிலியோட கெளம்பி திருவண்ணாமலைக்குப் போயிக்கிட்டிருக்கேன். நீங்க எப்ப வரீங்க?’

‘கிழக்குச்சீமையிலே’ எழுதிய பேராசிரியர் ரத்னகுமார் ஃபோனில் கேட்டார்.

‘ஸார்! நானும் டாக்டரும் நைட்டு கெளம்பி வந்துடறோம்’ என்றேன்.

‘டாக்டர் வீடியோகேம் கார் ஓட்டுவாரேய்யா! பாத்து பத்திரமா வந்து சேருங்க.

டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ், சென்னையின் குறிப்பிடத்தக்க குழந்தைநல மருத்துவர். வெளிவர இருக்கும் ‘மேகா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர். அறிமுகமான மிகக்குறுகிய காலத்தில் அத்தனை நெருக்கமானவர். அதற்கான எக்ஸ்டிரா காரணம், டாக்டருக்கு சொந்த ஊர் திருநவேலி. டாக்டரின் டிரைவிங் பற்றி பேராசிரியர் சொன்னது உண்மைதான். கடந்த மாதத்தின் ஓர் இரவில் சென்னையிலிருந்து டாக்டரின் இன்னோவா காரில் பேராசிரியர், நான், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த தோழர் பாலாஜி, சீத்தாராமன் போன்றோர் பண்ணைப்புரத்துக்குப் பயணமானோம். டாக்டர் ஆல்பர்ட்தான் கார் ஓட்டினார். அவரது இருக்கைக்கு அருகில் நான். கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வரும் லாரியை நோக்கி உதடு குவித்து, நொடிப்பொழுதில் ஏமாற்றி, ஸ்டியரிங்கை வளைத்து ’ழ’ என்று ரோட்டில் கார் டயர்களினால் எழுதிக் காண்பித்து, காரில் இருந்த அனைவரின் மலச்சிக்கலையும் மருந்து கொடுக்காமல் குணமாக்கினார், டாக்டர். இடையிடையே வரும் ஃபோன் கால்களையும் அட்டெண்ட் செய்து பேசினார்.

‘சொல்லுங்கம்மா. . .

கொளந்தைக்கு என்ன வயசாகுது? . . .

சரிசரி . . . ஒண்ணும் பயப்பட வேண்டாம் . . . ப்ரிஸ்க்ரிப்ஷன்ல ரெண்டாவதா எளுதியிருக்கிற மருந்துல அஞ்சு எம்.எல் குடுங்க . .

முன் அனுபவம் காரணமாகவே பேராசிரியர் தனியாகக் கிளம்பி திருவண்ணாமலைக்குச் சென்றார்.

திருவண்ணாமலையில் இளையராஜா அவர்களின் நூல்கள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே நாங்கள் சென்று கொண்டிருந்தோம். இந்தமுறையும் டாக்டருடன் நான் முன் இருக்கையில் அமர்ந்துகொள்ள, பின் சீட்டில் பெல்ட்டை உடம்பு முழுக்க இறுக்கிப் போட்டு, அண்ணாமலையாரை வேண்டியபடி, அமர்ந்திருந்த பத்திரிக்கையாளர் தம்பி தேனி கண்ணனின் உதடுகள் அரைகுறையாக கந்தரலங்காரத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தன. காதில் விழுந்த வார்த்தைகளை கவனித்துக்கேட்டபோது, அது தேனி கண்ணனே எழுதியவை என்பது புரிய வந்தது. டாக்டருடன் பயணிக்கும் போது இளையராஜாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை பென்டிரைவில் நான் கொண்டு செல்வதால், ரோட்டை கவனிக்காமல் இசைக்குள் சென்று விடுவேன்.

நள்ளிரவில் நாங்கள் திருவண்ணாமலைக்குள் நுழைந்த போது மழை கொட்டிக் கொண்டிருந்தது. காலையில் ரமணாசிரமத்துக்குச் சென்று இளையராஜா ஸாரைப் பார்த்துவிட்டு, நிகழ்ச்சிக்கு செல்வதாகத் திட்டம். ஏதேதோ பேசிவிட்டுத் தூங்கும்போது விடிந்திருந்தது.

‘இன்னும் ரெடியாகலயாய்யா?’

இளையராஜா ஸார் ஃபோனில் சத்தம் போடவும், அவசர அவசரமாக எழுந்து, பல் தேய்த்து, குளித்து ரமணாசிரமத்துக்குக் கிளம்பிச் சென்றோம்.

‘ம்ம்ம். ஆசிரமத்தை சுத்திட்டு, கோயிலுக்குப் போங்க. 11 மணிக்கு நிகழ்ச்சி. நான் வந்துடறேன்’.

கோயிலுக்குள் நுழைந்து நிகழ்ச்சி நடைபெறும் ஆயிரங்கால் மண்டபம் அருகே சென்றபோது, நெளிந்த குரலில் யாரோ ’சொல்லடி அபிராமி’ என்று பாடிக் கொண்டிருந்தார். அவர் பாடி முடிக்கவும், அவர்தான் டி.எம்.சௌந்தர்ராஜனின் பேரன் என்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். பேராசிரியர் ரத்னகுமார் குடும்பத்தினருடன், நானும், டாக்டர் ஆல்பர்ட்டும் பார்வையாளர்களுடன் சென்று அமர்ந்து கொள்ள, சில நிமிடங்களில் இளையராஜா அவர்கள் மேடைக்கு அழைத்து வரப்பட்டார். உடன் கவிஞர்கள் முத்துலிங்கம், மு.மேத்தா, சொற்கோ, இளையகம்பன், கோ.சாரங்கபாணி மற்றும் தோழர் ஸ்டாலின் குணசேகரன் போன்றோரும் மேடையேறினர். அதற்கு முன்னால் ஸ்டாலின் குணசேகரனிடம் தேனி கண்ணன் என்னை, ‘இவர்தான் சுகா’ என்று அறிமுகப்படுத்தவும், ‘பேர் மட்டும் சொன்னா போதும். மத்தபடி இவரப் பத்தி எல்லாம் தெரியும்’ என்றபடி மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினார், தோழர் ஸ்டாலின் குணசேகரன்.

இளையராஜா அவர்கள் எழுதிய நூல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒவ்வொருவர் பேசுவதாக நிகழ்ச்சியின் அழைப்பிதழ் சொல்லியது. விழா துவங்கும் முன் முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி மற்றும் அவரது சகோதரரும், கல்வியாளரும், ரசனையான எழுத்தாளருமான எஸ்.கே.பி.கருணாவும் இளையராஜா அவர்களுக்கு மாலையணிவித்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுக் கிளம்பிச் சென்றனர். நண்பர் எஸ்.கே.பி.கருணா உணர்ச்சிமயமாக, அதேசமயம் உண்மையாகப் பேசினார். சுருக்கமாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. பேசி முடித்ததும் இளையராஜா அவர்களுடன் தற்போதைய ஃபேஷனான ‘செல்ஃபி ஃபோட்டோ’ ஒன்றை எடுத்துக் கொண்டார்.

எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல், முழுக்க முழுக்க ராஜா ஸார் அழைத்தாரே என்கிற ஒரே காரணத்துக்காக அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த எனக்கு கவிஞர் முத்துலிங்கத்தின் துவக்கவுரை அத்தனை சுவாரஸ்யமாக அமைந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அத்தனை எளிமையான தமிழில் சுவையாக அமைந்தது கவிஞரின் பேச்சு. அடுத்து வந்த இளையகம்பன், இளையராஜா அவர்களை வர்ணித்து கவியரங்கத்தில் வாசிக்கப்படும் கவிதைகளைப் பாடி அமர்ந்தார். அடுத்து வடநாட்டு உடையில் பளபளப்பாக வந்த சொற்கோ உரத்த குரலில் இளையராஜா அவர்களின் வெண்பா குறித்து பேசிக் கொண்டிருந்தபோது மேடையேறினார் தமிழக அமைச்சர் மாண்புமிகு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். உடன் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி வனரோஜா மற்றும் கழகத்தைச் சார்ந்த அணுக்கத் தொண்டர்கள். நனைந்த ஜிப்பாவுடன் கவிஞர் சொற்கோ உட்கார வைக்கப்பட்டார். அமைச்சர் பெருமகனார் கையில் டைப் செய்யப்பட்ட சில காகிதங்களுடன் பேச வந்தார். தமிழ் இலக்கியம் என்றால் என்ன? திருவள்ளுவர் என்பவர் யார்? தமிழ் மொழியின் மகத்துவம் என்ன? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் அளிக்கும் வண்ணம் சுவைபட, டைப் செய்யப்பட்ட அந்தப் பக்கங்களை வாசித்தார். ஐந்தாறு பக்கங்களை அவர் வாசித்து முடிக்கும்போது, மேலும் சில டைப் பக்கங்களை அவரது உதவியாளர் கொண்டு வந்து அமைச்சர் கைகளில் கொடுத்தார். ஏற்கனவே பசியிலும், தூக்கத்திலும் இருந்த நான், அருகில் அமர்ந்திருந்த பேராசிரியரின் தோள்களில் சாய்ந்தேன். தாயுள்ளத்துடன் என் தலையைத் தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார் பேராசிரியர். அமைச்சருக்கு அடுத்து பேச வந்த பாராளுமன்ற உறுப்பினர் திருமதி வனரோஜா, ’அன்பான வாக்காளப் பெருமக்களே’ என்று தொடங்கி சுவைபடப் பேசினார். பின் இளையராஜா அவர்களை வணங்கிவிட்டு, எல்லோரும் மேடையைவிட்டு இறங்கிச் சென்றனர்.


மீண்டும் நனைந்த ஜிப்பாவுடன் கவிஞர் சொற்கோ வெண்பாவைப் பற்றிப் பேச வந்தபோது, மணி மதியம் இரண்டை நெருங்கியிருந்தது. இப்போது மேடையிலும், கீழேயும் அமர்ந்திருந்த அனைவரின் உடைகளும் நனைந்திருந்தன. அத்தனை பசியிலும், களைப்பிலும் கவிஞர் சொற்கோ உறுமினார். அறைக்குச் சென்று நிச்சயம் இருமியிருப்பார். சொற்கோவின் உடல்நலனில் அக்கறை கொண்ட கவிஞர் முத்துலிங்கம் அவரை அமரச் செய்து, அடுத்து மு.மேத்தாவைப் பேச அழைத்தார். இளையராஜா அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களைப் பற்றிப் பேசிவிட்டு கவிஞர் மு.மேத்தா அமர்ந்தபோது, களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது. அடுத்து புலவர் கோ.சாரங்கபாணி வந்து பாடினார். தன்னை தினமும் காலையில் இளையராஜா அவர்களின் பாடலொன்றுதான் தூக்கத்திலிருந்து எழுப்பி விடுகிறது என்று சொல்லி, முழுப்பாடலையும் பாடினார். அவர் பாடிய அந்தப் பாடல், புதுவை அரவிந்தர் அன்னையைப் பற்றி கங்கை அமரன் அவர்கள் இயற்றி, இசைத்து, பாடிய பாடல். இப்படியாக அவர் ஒரே பாடலின் மூலம் இளையராஜா அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

மதிய உணவு நேரம் எப்போதோ கடந்து விட்டிருந்தது. ஆனாலும் கூடியிருந்த மக்கள் அனைவரும் இளையராஜா அவர்களின் ஏற்புரைக்காக பொறுமையாக அமர்ந்திருந்தார்கள். இந்த நேரத்தில்தான் தோழர் ஸ்டாலின் குணசேகரன் பேச வந்தார். வருடந்தோறும் ஈரோட்டில் சிறப்பான முறையில் புத்தகக் கண்காட்சி நடத்துகிற செயல்வீரர், அவர். மக்களோடு மக்களாக தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கிற தோழர் ஸ்டாலின் குணசேகரன் பேசத் துவங்கிய ஐந்து நிமிடங்களிலேயே கூட்டத்தை தன்வசப்படுத்தினார். இன்னும் சிறிதுநேரம் பேசமாட்டாரா என்று எதிர்பார்க்க வைத்த பேச்சு. ஏற்புரையை இளையராஜா அவர்கள் மிகச் சுருக்கமாக முடித்துக் கொள்ள, கொளுத்தும் வெயிலில் அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், கொதிக்கும் கல்தரையில் ஓட்டமும், நடையுமாக அவரைப் பின் தொடர்ந்து ரமணாசிரமம் சென்றோம். மதிய உணவு, சாயங்கால பூஜை, எனது அடுத்த படம் பற்றிய அலோசனைகள் போன்றவற்றை முடித்துவிட்டு ரமணாசிரமத்தை விட்டுக் கிளம்பும் போது, வானம் இருட்டத் தொடங்கியிருந்தது.

‘என்னைச் சந்திக்காமல் போகக் கூடாது’ என்று அன்புக்கட்டளை இட்டிருந்த நண்பர் எஸ்.கே.பி.கருணாவை அவரது கல்லூரி வளாகத்தில் அமைந்திருந்த விருந்தினர் மாளிகையில் சந்திக்கச் சென்றோம். வெளியே மழை கொட்டிக் கொண்டிருக்க, அடுத்தடுத்து இரண்டு முறை தேநீர் வழங்கி, சுவையாகப் பேசிக்கொண்டிருந்தார், கருணா. கருணாவின் கலாரசனையை ஏற்கனவே அவரது எழுத்து மூலம் நானறிவேன். உடன் வந்த டாக்டர் ஆல்பர்ட்டும், தேனி கண்ணனும் அந்த முதல் சந்திப்பிலேயே கருணாவின் ரசிகர்களானார்கள். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தனது விருந்தினர் மாளிகையைச் சுற்றிக் காண்பித்த நண்பர் கருணா, ‘இனிமேல் திருவண்ணாமலைக்கு நீங்க வர்றதா இருந்தா, எனக்கொரு ஃபோன் பண்ணிட்டு நேரே இங்கே வந்திரணும். வேற எங்கேயும் தங்கக் கூடாது’ என்றார். மழை நின்றபாடில்லை. ‘ஒண்ணும் பிரச்சனையில்ல. டின்னர் ரெடி பண்ணச் சொல்றேன். சாப்பிட்டுட்டு, நைட் தங்கிட்டு காலைல கூட நீங்க போகலாம்’ என்றார், கருணா. டாக்டரைப் பார்த்தேன். ‘பரவாயில்லண்ணே. கெளம்பிடலாம். போற வழில சாப்டுக்குவோம்’ என்றார் டாக்டர் ஆல்பர்ட். கருணாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினோம்.

மீண்டும் வீடியோ கேம் கார். ’இனிமேல் ராஜாஸார இந்த மாதிரி நிகழ்ச்சிலல்லாம் கலந்துக்கக்கூடாது, ஆல்பர்ட்’ என்றேன். ‘கரெக்டுண்ணே. நீங்கதான் அவர்கிட்ட சொல்லணும்’ என்றபடி ஸ்டியரிங்கை ஒரு சுற்று சுற்றி, இந்தமுறை கார் டயர்களினால் ரோட்டில் ‘ஞ’ எழுதிக் காண்பித்தார். பின்னணியில் கேட்டுக் கொண்டிருந்த ’அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம்’ என்கிற ‘ஜப்பானில் கல்யாணராமன்’ பாடலையும் மீறி ஒலித்தது, இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த சீட்பெல்டுக்குள் இருந்த தேனி கண்ணனின் கந்தரலங்காரம்.

புகைப்படங்கள்: நன்றி ’முரளிதர் வி.எஸ்’.

post

தி.க.சி இல்லாத திருநவேலி . . .

இருபத்திரண்டாண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்த புதிதில் மாதத்துக்கு ஒரு முறையாவது திருநவேலி சென்றுவிடுவது வழக்கம். பின் படிப்படியாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எனக் குறைந்து, இப்போது வருடத்துக்கு ஒருமுறை செல்வதே அபூர்வமாகி விட்டது. நண்பன் குஞ்சுவின் மகனது பூணூல் கல்யாணத்துக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

‘எல! கண்டிப்பா நான் வரணுமா?’

தவிர்த்துப் பார்த்தேன்.

‘என் வீட்ல நடக்கிற மொத விசேஷம். இத விட்டா இந்தப்பய கல்யாணந்தான். இதுல நீ இல்லேன்னா நல்லா இருக்குமா? நீயே யோசிச்சுப் பாரு’.

வயதும், அனுபவமும் குஞ்சுவின் நிதானமானப் பேச்சில் தெரிந்தது. தட்ட முடியவில்லை.

கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகளுக்குப் பிறகு பேரூந்தில் திருநவேலி பயணம். வழக்கமாக எனது பயணங்களுக்கான டிக்கெட் போடும் ப்ரொடக்‌ஷன் மேனேஜர் ஜே.கே இந்த முறை ரயில் டிக்கட்டில் கோட்டை விட்டுவிட்டார்.

‘மல்டி அக்ஸில் பஸ், ஸார். சௌரியமா இருக்கும். கோயம்பேடுல நைட் பத்து மணிக்கு எடுத்து, காலைல ஆறு மணிக்குல்லாம் நம்மூர்ல கொண்டு எறக்கீருவான்’.

மல்டி அக்ஸில் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிலிருந்து வெளியே வரவே பதினொன்றரை மணி ஆயிற்று. ஜே.கே சொன்ன மாதிரி பயணம் சௌரியமாக இருக்கும் என்பதற்கு முதல் அறிகுறியாக பஸ்ஸில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் போட்டார்கள். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த புஷ்டியான இளைஞர், வாய் நிறைந்த பாக்குடன் திரைப்படத்தை ரசித்துப் பார்த்தபடி, அவ்வப்போது என் தொடையைத் தட்டிச் சிரித்து மகிழ்ந்தவண்ணம் இருந்தார். அலுப்பும், சலிப்பும் தூக்கத்தை வரவழைக்க, என்னையறியாமல் உறங்கிப் போனேன். சொப்பனத்தில் சிவகார்த்திகேயனும், உங்கள் சத்யராஜும் சுந்தரத் தெலுங்கில் ஏதோ ஹாஸ்யமாகச் சொல்லிவிட்டு, அவர்களே சிரித்தார்கள். மேளம் முழங்க சாமி சப்பரம் ஒன்றை ஆளோடு ஆளாகச் சுமந்து செல்கிறேன். அழுகிய குல்கந்து வாசனை மூக்கில் அடிக்க, கடுமையாக தோள்வலித்தது. அரைத்தூக்கத்தில் முழித்துப் பார்த்தால், பக்கத்து இருக்கை இளைஞர், என் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.

காலை எட்டே முக்காலுக்கு திருநவேலியில் சென்று இறங்கும் போது ஜே.கே ஃபோன் பண்ணினார்.

‘ஸார்! எத்தன மணிக்கு வீட்டுக்குப் போனீங்க?’

oOo

குளித்து முடித்து அப்பாவுடன் காலை உணவைச் சாப்பிட்டு முடிக்கும்போது மீனாட்சி வந்தான்.

‘போவோமால?’

அம்மன் சன்னதியிலிருந்து பைக்கை ஸ்டார்ட் பண்ணும் போது மீனாட்சி கேட்டான்.

‘எங்கே சித்தப்பா போக?’

வழக்கமாக முதல் சோலியாக தி.க.சி தாத்தாவைப் பார்க்கச் செல்வேன்.

‘எங்கெயாவது போ’.

கொஞ்சம் கடுமையாகச் சொன்னேன். கீழப்புதுத் தெரு வழியாகப் போய், தெற்குப் புதுத் தெருவுக்குள் நுழைந்து, வாகையடி முக்கைத் தாண்டும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சந்திப்பிள்ளையார் கோயிலை நெருங்கும் போதே தொண்டை அடைத்தது. வண்டி தானாக சுடலைமாடன் கோயில் தெருவுக்குள் சென்றது. தாத்தாவின் வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி, இறங்கும் போது மீனாட்சியின் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்தேன். தாத்தாவின் வீடு இருக்கும் வளவுக்குள் நுழையும் போதே, மனம் படபடத்தது. வழக்கமாக நான் செல்லும் போது, வாசலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டோ, படித்துக் கொண்டோ இருக்கும் தாத்தா, நிமிர்ந்து பார்த்து ‘வாருமய்யா’ என்று உரக்கச் சொல்லி சிரிப்பார். தாத்தா உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு அருகே உள்ள மரத்தூணில் கட்டப்பட்டிருந்த கொடியில் சாயத்துண்டுகள் கொடியில் காய்ந்து கொண்டிருந்தன. பூட்டப்பட்டிருந்த அந்தக் காலத்து கனத்த மரக்கதவுக்கு முன்னே உள்ள படியில் சிறிது நேரம் நானும், மீனாட்சியும் உட்கார்ந்திருந்தோம். பழைய புத்தகங்களின் வாசனை, பூட்டியிருந்த அந்த வீட்டுக்குள் இருந்து வந்தது.

‘தாத்தா வாடை அடிக்கி. கவனிச்சேளா, சித்தப்பா?’

மீனாட்சி கேட்டான்.

தி.க.சி தாத்தாவின் வாசனையும், புத்தகங்களின் வாசனையும் ஒன்றுதான் என்பதை புத்தகங்களே படிக்காத மீனாட்சி சொன்னதில் ஆச்சரியமில்லை. அவன் தாத்தாவைப் படித்தவன். தாத்தாவின் இறுதி நாட்களில் அவர் மனதுக்கு நெருக்கமாக இருந்த வெகுசிலரில் அவனும் ஒருவன்.

சுடலைமாடன் கோயில் தெருவிலிருந்து வெளியே வரும்போது மனசு வெறுமையாகித் துப்புரவாகத் துடைத்த மாதிரி இருந்தது. எதுவுமே பேசாமல் பைக்கை குறுக்குத்துறைக்கு விட்டான், மீனாட்சி. சாலையோர மருதமரங்களும், வயல்வெளியும் சூழ்ந்த குறுக்குத்துறை ரோட்டில் ஆங்காங்கே புதிய கட்டிடங்கள், வேறு ஏதோ அசலூருக்கு வந்துவிட்டோமோ என்று குழம்ப வைத்தன. சிட்டி நர்சரி பள்ளி, பூமாதேவி கோயிலைத் தாண்டி, ரயில்வே க்ராஸ்ஸிங்கைக் கடந்தவுடன், பழமையும், பாரம்பர்யமும் நிறைந்த குறுக்குத்துறை தென்படத் துவங்கியது. தாமிரவருணியை ஒட்டிய குறுக்குத்துறை முருகன் கோயிலில் வண்டியை நிறுத்தி, உள்ளே கூட்டிச் சென்றான், மீனாட்சி. உள்ளே நுழையும் போதே யாரோ ஒரு தம்பதியினர் சஷ்டியப்த பூர்த்தி சடங்குகளில் அமர்ந்திருந்தனர்.

’அண்டமாய் அவனி யாகி
அறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
என்னருள் ஈச னான
திண்டிறல் சரவ ணத்தான்
தினமும்என் சிரசைக் காக்க’.

மீனாட்சியின் உரத்த குரலில் குறுக்குத்துறை முருகனே ஒருகணம் திடுக்கிட்டு விழித்தார்.

‘சந்தனத்த பூசிக்கிடுங்க, சித்தப்பா. வெயிலுக்குக் குளிச்சையா இருக்கும்’.

சந்தனத்தை அள்ளி என் கைகளில் பூசினான். மோதிர விரலால் தடவி, சிறு தீற்றலாக நெற்றியில் இட்டுக் கொண்டேன். யாரோ ஒருவர் தாமிரவருணியில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன், மண்டபத்தின் வழியாக நெற்றி நிறைய திருநீறுடன் கோயிலுக்குள் நுழைந்தார். வேகவேகமான நடை. பிள்ளையாருக்கு முன் மூச்சிரைக்க ரொம்ப நேரமாகத் தோப்புக்கரணம் போட்டார். ‘ஆயிரத்தெட்டு போடுவாரோ! எண்ணுவோமா’ என்று மனதில் தோன்றி மறைந்தது.

‘பாத்தேளா! அண்ணாச்சில்லாம் ஒருநாளும் சுகர்மாத்திர சாப்பிட மாட்டா. ஆரோக்கிய வாள்கைல்லா வாளுதா’ என்றான் மீனாட்சி.

படித்துறை மண்டபம் வழியாக வரும்போது, ஆங்காங்கே ஜனங்கள் குளித்துக் கொண்டிருந்தனர். ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு, தூக்குச் சட்டி மூடியில் எலுமிச்சம்பழச்சோறு வைத்து சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஈர டிரவுசருடன், தலைகூட சரியாகத் துவட்டாமல், கல்மண்டபத்தில் அமர்ந்தபடி அந்தச் சிறுவர்கள் சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்கள் சாப்பிடுவதை எட்டிப் பார்த்தபடி வந்த மீனாட்சியை ஏசினேன்.

‘எல! சின்னப்பிள்ளேள் சாப்பிடுததை ஏன் எட்டிப் பாக்கே?’

‘இல்ல சித்தப்பா. பக்கத்துல இருக்கிற கிண்ணத்துல அந்த அக்கா பிள்ளையளுக்கு என்ன வச்சிருக்கான்னுப் பாத்தேன். பொரிகடலத் தொவையல்தான். அதானே நல்லா இருக்கும். கூட ரெண்டு வத்தல் வறுத்து கொண்டாந்திருக்கலாம்’.

திருநவேலியை விட்டு ஏன் மீனாட்சி நகர மாட்டேன்கிறான் என்பது புரிந்தது.

மறுநாள் காலையில் சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்குக் கிளம்பும் போது கால்வலியைப் பொருட்படுத்தாமல் அப்பாவும் வந்தார்கள்.

‘போன தடவ உன் கூட வந்ததுதான். அப்புறம் போகவே இல்ல.’

போகிற வழியிலேயே வண்ணாரப்பேட்டையில் காரை நிறுத்தச் சொன்னார்கள்.

‘அங்கே பூச பண்ணுத சொரிமுத்து ஐயர் பிள்ளையளுக்கு பண்டம் வாங்கீட்டுப் போவோம்’.

மீனாட்சியும் வண்ணாரப்பேட்டையில் வந்து காரில் ஏறிக் கொள்ள எங்களின் குலதெய்வக் கோயிலான சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்கு கார் விரைந்தது.

‘பேரப்பிள்ள! தென்கர மகராசா கோயிலோட விசேஷம் என்னன்னு தெரியுமாவே?’

முன்சீட்டிலிருந்த மீனாட்சியிடம் அப்பா கேட்க, ‘தேர் இருக்கிற சாஸ்தா கோயில்லா, தாத்தா’ என்றான், மீனாட்சி.

தென்கரை மகராஜா கோயில் வளாகத்துக்குள்ளேயே இருக்கும் சொரிமுத்து ஐயர் வீட்டு மாமியிடம் பிள்ளைகளுக்கு வாங்கிய பலகாரங்களைக் கொடுத்து விட்டு, கோயிலுக்குள் நுழைந்தோம். வாழ்க்கையில் இரண்டாம் முறையாகவே அந்த கோயிலுக்குள் நுழைகிறேன். ஆனால் அதற்கு முன்பு பல ஆயிரம் முறை வந்ததாக மனது உணர்ந்தது. கோயிலைச் சுற்றிலும் நான் பார்த்திராத என் பாட்டனார், முப்பாட்டனார் போன்ற மூதாதையர் ஆங்காங்கே நின்று, அமர்ந்து, தூண்களில் சாய்ந்தபடி இருந்தனர். அவர்களில் யாரோ ஒருவர், ‘அடிக்கடி வந்துட்டு போலெ’ என்று சொன்னார்கள். தென்கரை மகாராஜா சந்நிதிக்குள் நாங்கள் நுழையவும், மேளச்சத்தம் கேட்டது. சந்நிதியின் ஒரு வாசல் வழியாக பட்டு வேட்டி, சட்டை, கழுத்தில் மாலை சகிதம் மாப்பிள்ளையும், மறுவாசல் வழியாக கண்ணைப் பறிக்கும் கத்திரிப்பூ நிறத்தில் பட்டுப்புடவையுடன் மணப்பெண்ணும் நுழைந்தனர். சுற்றிலும் மினுமினுக்கும் கருப்புத் தோல் கிராமத்து மனிதர்கள். எல்லோர் முகத்திலும் சிரிப்பு நிரந்தரமாகத் தங்கியிருந்தது. சித்தூர் தென்கரை மகாராஜாவுக்கு முன்னால் தாலி கட்டும் போது, மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். சில நொடிகளில் திருமணம் முடிந்தது. மணமக்களுக்காக பூஜை செய்து கொண்டிருந்தார், சொரிமுத்து ஐயர். வெளியே காத்து நிற்கும்போது, ‘இந்தப் பிள்ளைகள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும்’ என்று மனதார வேண்டிக் கொண்டேன்.

‘பெரிய கல்யாண மண்டபத்துல கல்யாணத்த வச்சு, லச்சக்கணக்குல செலவு பண்ணி என்னத்துக்குங்க்கென்! என்ன தாத்தா?’

‘இங்கன வச்சு கல்யாணம் பண்றதுக்கு ஒரு கொடுப்பின வேணும்லா, பேரப்பிள்ளை’ என்றார்கள், அப்பா.

சொரிமுத்து ஐயர் அப்பாவை அடையாளம் கண்டு கொண்டார். பச்சைப்பிள்ளை மாதிரி சிரித்த முகத்துடன் உள்ளே நின்று கொண்டிருந்த தென்கரை மகாராஜாவைப் பார்த்து, ‘எய்யா’ என்று கண்கள் கசிய வணங்கினேன். வேறு எந்தப் பிரார்த்தனையும் சொல்லிக் கொள்ளவில்லை. சில நொடிகளுக்கு முன்னெப்போதும் உணர்ந்திராத நிசப்தம் மனம் முழுதும் பரவி, நிறைந்தது. வெளியே வந்து தளவாய் மாடசாமிக்குக் கொண்டு வந்த பூமாலைகளைக் கொடுத்து வணங்கிவிட்டு, பேச்சியம்மாளிடம் வந்தோம். பேச்சியம்மாள் விக்கிரகம் அப்படியொண்ணும் அலங்காரமானதல்ல. ஆனாலும் துடியான அமைப்பு. அவளிடமும் அடிக்கடி வாரோம் என்று சொல்லி வந்தோம்.

மாலையில் வண்ணதாசன் அண்ணாச்சியைப் போய்ப் பார்க்கலாம் என்று முடிவு செய்து போனால் வீடு பூட்டியிருந்தது. அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, மீனாட்சியுடன் ஜங்ஷன் வந்து சேரும்போது, ஓவியர் வள்ளிநாயகத்திடமிருந்து ஃபோன்.

‘எண்ணே! ஏசாதிய. கூட வேல பாக்கறவர் வீட்டுக் கல்யாணம். நம்ம கைல பொறுப்பக் குடுத்துட்டாரு. எங்கெ இருக்கியன்னு சொல்லுங்க. இந்தா வாரேன்’.

ஈரடுக்கு மேம்பாலத்துக்கு அருகே வேளுக்குடி கிருஷ்ணனின் நிகழ்ச்சி குறித்த பேனர் இருந்தது.

‘ஆகா! பிரமாதமாப் பேசுவாரே! முடிஞ்சுட்டா? கேக்கலாமே!’ என்றேன்.

’ஆங்! அதெல்லாம் நாம கேக்கக் கூடாது, சித்தப்பா. சவசவன்னு இருக்கும்’.

சட்டென்று சொன்னான், மீனாட்சி.

‘மெட்ராஸுக்குப் போயி சேரக்கூடாதவங்க கூடல்லாம் சேந்து ரொம்பல்லா கெட்டுப் போயிட்டிய.

‘ஏம்ல? ஆள்வார் பாசுரம்ல்லாம் எவ்வளவு நல்லா இருக்கும்! அதையெல்லாம் ஒதுக்கிட்டா அப்புறம் என்னல தமிளு?’

‘மாணிக்கவாசகர்ட்ட இல்லாத தமிளா? வைணவத் தமிளுல்லாம் அதுக்கிட்ட நிக்க முடியுமா? அதுல்லாம் நஞ்சு தோய்த்த தமிளு, சித்தப்பா. அத நாம கேக்கப்படாது. அப்படியே கேட்டாலும் அது நம்மள ஒண்ணும் செய்யாது. ஏன்னா நாம ஆலாலகண்டனுகள்லா!’

மேற்கொண்டு பேசினால் அந்த வீரசைவன், என் காதைக் கடித்துத் துப்பிவிடுவான் என்பதால், ‘சாப்பிடுவோமால? பசிக்கி. வள்ளி வந்துக்கிட்டிருக்கானான்னு கேளு’ என்று பேச்சை மாற்றினேன்.

கண்ணம்மன் கோயில் தெருவிலுள்ள ஒரு சாலையோரக்கடையில் ருசியும், பதமுமாக சுடச்சுட இட்லி, தோசை., சாம்பார், சட்னி. சென்னையில் உயர்ரக ஹோட்டல்கள் எதிலும் நான் காணாத சுவை.

‘அண்ணாச்சி! மொளாப்பொடி வைங்க’.

மீனாட்சி என் இலையைக் காட்டி சொன்னான்.

‘சித்தப்பா! எண்ணெ விட வேண்டாம். பாமாயிலு. நெஞ்சக் கரிக்கும்’.

சாப்பிட்டு முடித்து மீனாட்சி விடைபெற்றுக் கொள்ள, வள்ளிநாயகத்துடன் டவுணுக்குத் திரும்பினேன்.

‘கீள்ப்பாலம் வளியா நடந்து போவோமாண்ணே?’

தனது டி.வி.எஸ் 50யை வள்ளி உருட்டியபடியே, என்னுடன் நடக்க ஆரம்பித்தான். பாலத்தின் இறக்கம் வரும்போது, ‘இப்பம் என்னண்ணே படிச்சுக்கிட்டிருக்கிய?’ என்று வள்ளி கேட்க, ‘ரொம்ப நாள் களிச்சு புதுமைப்பித்தன மறுபடியும் படிக்கேண்டே! அதுவும் சங்குதேவனின் தர்மம் படிச்சுட்டு, மேற்கொண்டு படிக்க முடியாம மூடி வச்சுட்டேன் பாத்துக்கோ’. நான் இப்படி சொல்லவும், உருட்டிக் கொண்டிருந்த டி.வி.எஸ் 50யை நிறுத்தி, ‘எண்ணே!’ என்று கிட்டத்தட்ட வள்ளி அலறினான். ‘என்னாச்சு வள்ளி?’

‘எண்ணே! சங்குதேவனின் தர்மம் கதைல வார கைலாசபுரம் ரோட்டுலதானே இப்பம் நாம நிக்கோம்’ என்றான்.

பிறகு டவுண் வரைக்கும் புதுமைப்பித்தனும் எங்களுடன் நடந்து வந்தார். ஆர்ச்சுக்கு அருகில் ‘இங்கன ரெண்டு நிமிஷம் நிப்போம்’ என்றான், வள்ளி. காரணம் கேட்டதற்கு, நயினார் கொளத்துக் காத்தும், சாமிசன்னதி காத்தும் சேந்து அடிக்கிற எடம் இது ஒண்ணுதான். கொஞ்சம் அனுபவியுங்க’ என்றான். ‘இந்தப் பயலுக நம்மள மெட்ராஸுக்கு ரயிலேற விட மாட்டானுவ போலுக்கே’ என்று பயமாக இருந்தது. அம்மன் சன்னதியில் வீட்டுக்கு முன்னால் வந்து நிற்கும் போது, கா.சு. பிள்ளை நூலகத்துக்கு அடுத்துள்ள இடிந்த வீட்டின், தூசு படிந்த நடைப்படியில் அமர்ந்து ஒரு கோட்டிக்காரத் தோற்றத்து மனிதர் , இலையை விரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ‘அங்கெ பாரு வள்ளி’ என்றேன்.

‘கல்கி ஞாவகம் வருதுண்ணே’ என்றான், வள்ளி. சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்தக் கோட்டிக்காரரைப் பார்த்தபடியே மேலும் சொன்னான்.
‘குறுக்குத்துறயப் பத்தி கல்கி சொன்னாருல்லா! சுழித்து ஓடும் ஆறு. இவ்வளவு அழகான படித்துறை. இந்த நீர் வீணாக ஓடிப்போய்விடக்கூடாதே என்பதற்காக இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எப்போதும், யாராவது ஒருவர் குளித்துக் கொண்டேயிருக்கும் குறுக்குத்துறைன்னு. அந்த மாரி திருநவேலில எந்த நேரமும், யாராவது ஒருத்தன் சாப்பிட்டுக்கிட்டிருப்பான்’. . . .

சில நொடிகள் மௌனத்துக்குப் பிறகு ‘கெடைக்கவும் செய்யும்’ என்றான். நான் வள்ளியின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

மறுநாள்தான் நான் திருநவேலிக்குச் சென்றதற்கான நாள். ‘காலைல ஆறர மணிக்குல்லாம் வந்துருல. நம்ம சிருங்கேரி மடம்தான்’ குஞ்சு சொல்லியிருந்தான். நண்பன் ராமசுப்பிரமணியனுடன் மண்டபத்துக்குள் நுழையும் போது, ஹோமப்புகை நடுவே பிராமண வேஷத்திலிருந்து குஞ்சுவும், அவன் மகனும் சிரிப்பை அடக்க முடியாமல் என்னைப் பார்த்து சிரித்தார்கள். இருவருமே பூஜை மந்திரங்களுக்கு வாயசைத்துக் கொண்டிருந்தனர். குஞ்சுவின் உறவினர்கள் ஒவ்வொருவராக என்னிடம் வந்துப் பேசினார்கள். பெண்கள் பேசும் போது மட்டும், கண்ணைக் கசக்கிக் கொண்டு, வாயசைப்பதை நிறுத்தி தூரத்திலிருக்கும் என்னை உன்னிப்பாக கவனித்தான், குஞ்சு. அவ்வப்போது பூஜையிலிருந்து எழுந்து வந்து என் தோளில் கைபோட்டபடி ‘எங்க மாமா’ என்று எல்லோருக்கும் காட்டும் வண்ணம் நின்று கொண்டான், குஞ்சுவின் மகன். மண்டபத்தில் பெரும்பாலும் பிராமின்ஸ் என்பதால் முக்கால்வாசி பேர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார்கள். ஒரு மாமி என்னிடம் வந்து, ‘நீங்க அவர்தானே?’ என்றார். ‘ஆமாங்க’ என்று பொத்தாம் பொதுவாகத் தலையசைத்து வைத்தேன். உடனே யாருக்கோ ஃபோன் பண்ணி, ‘ஏடீ, ஒனக்கு ரொம்பப் புடிக்குமே, சுரா! அவர் வந்திருக்கர். அதான்டி ஆனந்த விகடன்ல மூங்கில் காத்து எளுதுனாரே! அவரேதான்’ என்றார்.

சிறு வயதிலிருந்தே நான் பார்த்து பழகிய சிறுவர்கள், என்னைப் பார்த்துப் பழக்கப்பட்ட பெரியவர்கள் சூழ பந்தியில் அமர்ந்து சாப்பிட்டேன். குஞ்சுவும் வழக்கம் போல என்னருகிலேயே உட்கார்ந்து கொண்டான்.

கண்ணை மூடி முழிக்கும் முன் சென்னைக்குக் கிளம்பும் நேரம் வந்தது. ஏற்கனவே ஜே.கேயிடம் ‘டிரெயின்லயோ, ஃபிளைட்லயோ ரிட்டர்ன் டிக்கட் போடுங்க. பஸ்ல போடறதா இருந்தா, நான் திருநவேலிலயே இருந்துக்கிடுதேன்’ என்று சொல்லியிருந்தேன். ஏதோ ஒரு படப்பிடிப்புக்காக திருநவேலிக்கே வந்திருந்த ஜே.கே, ‘சாயங்காலம் ஸ்டேஷனுக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்திருங்க, ஸார். டிக்கட்டக் கையோட கொண்டுட்டு வாரேன்’ என்றார்.

கால்வலியைப் பொருட்படுத்தாமல் அப்பாவும் ஸ்டேஷனுக்கு கிளம்ப முயல, ‘வேண்டாம், நீங்க அங்கெ வந்து நின்னுக்கிட்டிருக்க வேண்டாம்’ என்று சொல்லித் தடுத்து, விழுந்து வணங்கி, திருநீறு பூசச் செய்து கிளம்பினேன். வழக்கமாக மீனாட்சி, எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கிருஷி, ஓவியர் வள்ளிநாயகம் போன்றோருடன் ரயில்வே ஸ்டேஷனில் அரட்டையடித்து விட்டு ரயிலேறுவது வழக்கம். இந்த முறை ஒருமணி நேரத்துக்கு முன்பே வண்ணதாசன் அண்ணாச்சி வந்து விட்டார்கள். தி.க.சி தாத்தா இறந்த பிறகு அண்ணாச்சியை அப்போதுதான் பார்த்தேன். தோள் தொட்டு அணைத்துக் கொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘இந்த மட்டம் திருநவேலி ட்ரிப்பு ரொம்ப விசேஷம், தாத்தா இல்லாத ஒரு கொறயத் தவிர. ஆனா அதயும் நீங்க வந்து இல்லாம பண்ணிட்டிய’ என்றேன்.

‘பச்ச சிக்னல் போட்டுட்டான். ஏறு’ என்று அண்ணாச்சி பிடித்து ரயிலில் ஏற்றி விட்டார்கள்.

ரயில் நகர நகர, மனதுக்குள் ‘வாருமய்யா பேரப்புள்ள, தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி, எப்போது, இந்த நீர் வீணாக ஓடிப்போய்விடக்கூடாதே என்பதற்காக இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எப்போதும், யாராவது ஒருவர் குளித்துக் கொண்டேயிருக்கும் குறுக்குத்துறை, பாமாயில் நெஞ்சக் கரிக்கும், நயினார் குளத்துக் காத்தும், சாமி சன்னதிக் காத்தும் சேத்து அடிக்கிற இடம், சங்குதேவன் நடந்த கைலாசபுரம் ரோடுல்லா, கால்வலின்னாலும் பரவாயில்ல. நானும் வாரேன்’ . . . . . இப்படி பல ஒலிகளும், பிம்பங்களுமாக ஓடிக் கொண்டிருந்தது. சட்டென்று ஒரு சிறுவனின் அழுகுரல் கவனம் கலைத்தது. தன் தாயுடன் நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் திருநவேலியிலிருந்து சென்னைக்குத் திரும்புகிற, சேரன்மகாதேவியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.ஆதித்தனின் பேரன் உரத்த குரலெடுத்து அழுது கொண்டிருந்தான்.

‘திருநவேலி நல்ல ஊரும்மா. நாம இங்கெயே இருக்கலாம்மா. ப்ளீஸ். எறங்கிப் போயிரலாம்மா’.

கம்பார்ட்மெண்டில் இருந்த எல்லோரும் அவனைப் பார்க்கத் தொடங்கினர். தர்மசங்கடத்துடன் அவனது தாயார், ‘சத்தம் போடாதே. எல்லாரும் பாக்காங்க பாரு’ என்று கண்டிப்பான குரலில் அதட்டினார்.

‘விடுங்கம்மா. அவனாவது வாய்விட்டு அளட்டும்’ என்றேன்.

தீதும், நஞ்சும் . . .

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

மேற்கண்ட குறளை இன்றைய இளைஞர்கள் யாரிடமாவது சொன்னால், ‘தெலுங்குப் பட லிரிக்ஸா ஸார்? மியூஸிக் யாரு? டி.எஸ்.பி.யா? என்று கேட்கக் கூடும்.

இருபதாண்டுகளுக்கு முன்பு நான் சென்னைக்கு வந்த புதிதில் சில அறிவுபூர்வமான நண்பர்களின் நட்பு கிடைத்தது. அவர்கள் அனைவருமே ‘அறிவுஜீவி’ என்னும் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்களிடம் பழக ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே அறிந்து கொண்டேன். நாளை மறுநாள் வெளியாக இருக்கிற ஹாலிவுட் திரைப்படத்தை இணையம் வழியாக விருகம்பாக்கத்தில் அமர்ந்து பார்த்து விட முடிகிற வசதியெல்லாம் அப்போதில்லை. தீவிர திரைப்பட ஆர்வலர்கள் நடத்துகிற ஒருசில திரைப்பட விழாக்களில் மட்டுமே உலகின் முக்கியமான திரைப்படங்களைப் பார்க்க முடியும். ‘அறிவுஜீவி’ நண்பர்களுடன் திரைப்பட விழாக்களுக்குச் செல்லத் துவங்கினேன். லூயி புனுவல், குரசோவா, அண்டோனியோனி, ப்ரெஸ்ஸோன், பெர்க்மன் போன்றோரின் படங்கள் உவப்பை அளித்தன. படம் முடிந்ததும் அவை குறித்த விவாதம் திரையரங்கின் வாயிலிலேயே துவங்கும். அண்டோனியோனிக்கும் லா.ச.ராமாமிர்தத்துக்கும் முடிச்சு போட்டு சில கருத்துக்களை முன் வைப்பார், ஒருவர். கீஸ்லோவ்ஸ்கியை நகுலனுடன் ஒப்பிடுவார் மற்றொருவர். இப்படி பல திசைகளிலிருந்தும் பல்வேறுபட்ட கலைஞர்களின் பெயர்களும், அவர்களது ஆக்கங்களும் அலசி ஆராயப்பட, நான் திக்குமுக்காடிப் போவேன். இது போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமலேயே வாழ்வின் எத்தனை பொன்னான தருணங்களை வீணடித்திருக்கிறோம் என்று மனதுக்குள் குமைவேன்.

’நாளைக்கு மிக முக்கியமான விவாதம் இருக்கு. மிஸ் பண்ணிடாதீங்க பிரதர். புதுமைப்பித்தனும், ரித்விக் கட்டக்கும்தான் டாப்பிக்’. தாம்பரம் அருகே ஏதோ ஒரு பகுதியின் ஒரு மொட்டைமாடி. தரையில் ஜமுக்காளத்தை விரித்து அமர்ந்தோம். பச்சையும், பழுப்புமாகக் காட்சியளித்த ஒரு பெரிய பாட்டிலை நடுநாயகமாகக் கொண்டு வைத்து, அதற்குத் துணையாக சில கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் தம்ளர்கள். ‘டேய் தம்பி. இது உனக்குடா’. ஒரு பொட்டலம் நிறைய காராபூந்தி எனக்கு வழங்கப்பட்டது. ஒருவரை ஒருவர் அத்தனை பிரியமும், வாஞ்சையுமாக மதித்து, வியந்து அவரவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்து விவாதம் தொடங்கியது. புதுமைப்பித்தன் ஒரு எழுத்தாளரே அல்ல என்றார் ஒரு அண்ணன். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. புதுமைப்பித்தனை அவர் சிறுமைப்படுத்துகிறாரே என்கிற அதிர்ச்சியை விட, தீவிர புதுமைப்பித்தனின் வாசகரான இன்னொரு அண்ணன் இப்போது என்ன சொல்லப் போகிறாரோ என்று அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் பொறுமையாக மற்றவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம், ‘அவரோட கருத்த அவர் சொல்றாரு. அவரோட பார்வைல புதுமைப்பித்தன் அவருக்கு ஒண்ணுமில்லாம இருக்கலாம் இல்லியா! அது மூலமா நமக்குத் தெரியாத கோணங்கள் கெடைக்க வாய்ப்பிருக்கு. கவனி’ என்றார். மாற்று அபிப்ராயம் சொல்கிறவர்களை மதித்து செவிசாய்க்கும் அடிப்படை நாகரிகமெல்லாம் எனது சிற்றறிவுக்கு அப்போதுதான் தெரிய வந்தது. எத்தனை உயர்ந்த மனிதர்களின் தொடர்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சியில் மனதும், தொடர்ந்து தின்ற காராபூந்தியால் வயிறும் நிறைந்தது. ஆனால் எனது மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்திலேயே புதுமைப்பித்தனின் ஆதரவாளர், புதுமைப்பித்தனை ஒத்துக் கொள்ளாத நண்பரின் தாயார் குறித்து சொன்ன ஒரு தகாத வார்த்தையில் துவங்கியது ஆரோக்கியமான விவாதத்தின் அடுத்த கட்டம். பதிலுக்கு அவர், இவரது சகோதரியின் கற்பு குறித்த தனது நியாயமான சந்தேகத்தை அந்த சபையில் முன்வைத்தார். விவாதத்தின் அடுத்த நிலையில் ஒரு வேட்டியும், சில சட்டைகளும் கிழிந்தன. ஒரு நண்பரின் பல் உடைந்து லேசாக ரத்தம் வந்தது. அவர்தான் விவாதத்துக்கு ஏற்பாடு செய்தவர். அடுத்து சாப்பிடலாம் என்று நான் ஆசையுடன் பார்த்து வைத்திருந்த மசாலாக் கடலைகள் தரையில் சிதறி உருண்டன. உச்சக்கட்டமாக பாட்டிலை உடைத்து ஒருவரின் இருதயத்தைக் குறி வைத்து ஒரு சஹிருதயர் குத்த முயன்ற போது நான் அந்த இடத்தை விட்டுக் காணாமல் போயிருந்தேன். அதற்குப் பிறகு அந்த கும்பலில் இருந்த ஒரு மனிதரை பல வருடங்களுக்குப் பிறகு, நரைத்த தாடியும், அழுக்கு உடையுமாக வடபழனியில் இருபத்து நான்கு மணிநேர மருத்துவமனையில் பார்க்க நேர்ந்தது.

நான் வாழ்க்கையில் முதன் முதலில் பார்த்த, குடிக்கிற மனிதர் யார் என்பதை யோசித்துப் பார்த்தால் நாகு அண்ணன் தான் நினைவுக்கு வருகிறார். ஒரு விற்பனை நிறுவனத்தின் வேன் ஓட்டுனரான நாகு அண்ணன் சட்டை பித்தான்களைத் திறந்து விட்டபடி தனது மைனர் செயின் வெளியே தெரிய வேன் ஒட்டுவார். யாரிடமும் அதிர்ந்தோ, இரைந்தோ பேசிப் பார்த்ததில்லை. எப்போதும் புன்னகைக்கிற முகம். வேன் ஒட்டிச் செல்லும் போது, கண்ணில் படுகிற நடக்க சிரமப்படுகிற வயோதிகர்கள், பள்ளிக்கூடப் பை சுமந்து செல்லும் சிறுவர் சிறுமிகள் போன்றவர்களை வேனை நிறுத்தி ஏற்றிச் செல்வார். என்னையும் அப்படி ஏற்றிச் சென்று பள்ளியில் விட்டதுண்டு. அதே நாகு அண்ணன் ஒரு மங்கிய மாலைப் பொழுதில் தந்திக் கம்பத்துக்குக் கீழே வேட்டி இல்லாமல் எச்சில் ஒழுக விழுந்து கிடந்தார். தெரு விளக்கில் அவரது மைனர் செயின் டாலடித்தது. மறுநாள் போதை தெளிந்து அவர் வீடு திரும்பிய பிறகுதான் தனது தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்த விவரம் அவருக்குத் தெரிய வந்ததாகச் சொல்லிக் கொண்டார்கள்.

கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் மது அருந்துவதில் உள்ள நியாயங்களை பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் சமீபத்தில் ஒரு படப்பிடிப்பின் போது, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் ஒரு தொழிலாளி சொன்னது வேறு மாதிரியாக இருந்தது. ‘எனக்கு எழுதப் படிக்கத் தெரியும் ஸார். அதான் குடிக்கறதில்ல’. முதலில் எனக்கு அவர் சொன்னது புரியவில்லை. அவரே தொடர்ந்தார். ‘அதான் பாட்டில்லயும், கடையுலயுமே எழுதியிருக்குதே ஸார், குடி குடியைக் கெடுக்கும்’னு. நம்மள நம்பி வீட்ல மூணு பேரு இருக்காங்க. நாம நல்லா ஸ்ட்ரெங்த்தா இருந்தாத்தானே ஸார் அவங்களும் நல்லா இருப்பாங்க’ என்றார்.இவர் இதை சொல்லிக்கொண்டிருக்கும் போது சக தொழிலாளிகள் கடுமையாக கேலி செய்தனர். ‘இவன் வேஸ்டு ஸார். இவன்கிட்ட போயி இதல்லாம் கேக்கிறியே! எங்கக்கிட்டெ கேளு. நாங்க சொல்றோம். எந்தெந்த சரக்கு அடிச்சா என்னென்ன எஃபெக்ட்டுன்னு’. வேடிக்கைப் பேச்சுகள் தொடர்ந்தன. அவரவர் நியாயம் அவரவர்க்கு. சாகித்ய அகாதமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொல்கிறார். ’திரும்பத் திரும்பச் சொல்ல வருவது மதுப்பழக்கம் என்பது ஒழுக்கம் சார்ந்தது, தனிநபர் விருப்பம் சார்ந்தது என்பதும் அஃதோர் அறச்சார்பு பற்றியதல்ல என்பதுவும், மேலும் எனது கட்டுப்பாடில் இருக்கும் சகல மூல பலத்தோடும் சொல்ல விழைவது, குற்ற உணர்வுடன் செய்ய வேண்டிய காரியம் அல்ல அதுவென்பது’.

ஆனால் குடிப்பது குறித்த கூச்சத்தை, அதை ஒரு குற்றமாகக் கருதி, வெளியே தெரியாமல் மறைத்து வைத்திருந்த முந்தைய தலைமுறையினரைப் பார்த்திருக்கிறேன். நெருங்கிய உறவினரான மாமா ஒருவருக்குக் குடிப்பழக்கம் உண்டு என்பது அவர் மறைந்த பிறகு எனக்குத் தெரிய வந்த நம்பவே முடியாத செவிவழிச் செய்தி. ஒரு நாளும் அவர் தள்ளாடியோ, வேட்டி விலகியோ, வார்த்தை தவறியோ பார்த்ததில்லை. ஆனால் இப்போது அதை எதிர்பார்க்கவே முடியாது. கலைஞர்கள், குறிப்பாக திரைப்படத்துறையில் இருப்பவர்கள் அனைவருமே குடிப்பழக்கம் உடையவர்கள் என்பதாக ஆணித்தரமாக நம்புகிறவர்களை அன்றாடம் சந்திக்க முடிகிறது. அது குறித்து வருத்தமடைந்ததில்லை.

சில வாரங்களுக்கு முன்பு சாலிகிராமத்துத் தெரு ஒன்றில் பள்ளிச் சீருடையிலிருந்த ஒரு சிறுவன், தூரத்தில் நின்று கொண்டிருந்த அவனது நண்பரொருவனைப் பார்த்து உரத்த குரலில், ‘மச்சி, ஒரு குவாட்டர் சொல்லேன்’ என்று புகழ் பெற்ற ஒரு தமிழ்த்திரைப்படத்தின் வசனத்தைச் சொல்லிக் கத்தினான். எனது மகனை விட ஓரிரு வயதே அதிகமாக உள்ள அந்தச் சிறுவன்தான், கடந்த இருபதாண்டுகளில் முதன் முறையாக நான் திரைப்படத்துறையில் இருப்பவன் என்பதை நினைத்து என்னை வெட்கித் தலைகுனியச் செய்தவன்.