சொந்த ரயில்காரியின் தகப்பன் . . .

’நீங்க எழுதின தாயார் சன்னதி புத்தகத்துக்கு கோவைல ஒரு வெறி பிடித்த வாசகர் இருக்காரு. அவர் பேரு ஜான் சுந்தர்’.

மூன்றாண்டுகளுக்கு முன்பே சகோதரர் ‘மரபின் மைந்தன்’ முத்தையா அவர்கள் சொல்லி ‘ஜான் சுந்தர்’ என்ற பெயரை அறிந்திருந்தேன். அதன்பிறகு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ‘ஜான்சுந்தர்’ என்னும் பெயர், எனக்கும், மரபின் மைந்தனுக்குமான உரையாடல்களில் அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்துச் சென்றிருக்கிறது. கூடுதல் தகவலாக ஜான் சுந்தர் ஒரு இசைக்கலைஞர் என்பதும், ‘இளையநிலா’ ஜான்சுந்தராக கோவையில் அறியப்படுகிற ஒரு மெல்லிசை மேடைப் பாடகர் என்பதையும் அறிய நேர்ந்தது. கடந்த மாதத்தில் ஒருநாள் மரபின் மைந்தனின் தொலைபேசி அழைப்பு.

‘அடுத்த மாதம் 2ஆம் தேதி நீங்க கோவைக்கு வரணுமே!’ என்றார்.

என் தகப்பனாருக்கு நெருக்கமான மரபின் மைந்தன் அவர்கள், எங்கள் குடும்ப நண்பர். உரிமையுடன் நான் பழகுகிற வெகுசிலரில் முதன்மையானவர். காரணமே கேட்காமல், ‘வருகிறேன்’ என்றேன். அதன் பிறகுதான், ‘நம்ம ஜான்சுந்தரோட கவிதைப் புத்தக வெளியீட்டு விழா. அவருக்கு ஆதர்ஸமான நீங்க வரணும்னு பிரியப்படறாரு. இருங்க, ஒரு நிமிஷம். ஜான் பேசறாரு’.

’வணக்கம்ண்ணா. நீங்க அவசியம் வரணும்ணா.’ மெல்லிய குரலில் பேசினார், ஜான். ஒரு மேடைப் பாடகனின் குரலாக அது ஒலிக்கவில்லை. பேசிய இரண்டு வரிகளிலேயே கூச்சமும், சிறு அச்சமும், பணிவும் கலந்த ஜான் சுந்தரின் குணாதிசயத்தை உணர முடிந்தது. இரண்டொரு தினங்களில் ஜானிடமிருந்து அவரது ‘சொந்த ரயில்காரி’ புத்தகம் வந்து சேர்ந்தது. கவிதைப்புத்தகங்கள் பெரும்படையாகத் திரண்டு, விடாமல் என்னைத் துரத்தி மூச்சிரைக்க ஓட வைத்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம், இது. வீடு தேடி வரும் மனிதர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் முகம் பார்த்து இயல்பாகப் பேச முடிவதில்லை. எந்த நொடியில் அவர்களது பையிலிருந்து கவிதைத் தொகுப்பை உருவி, நம்மைச் சுட்டுப் பொசுக்குவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வந்தவர், பையிலிருந்து கவிதைத் தொகுப்புக்கு பதிலாக திருமண அழைப்பிதழை எடுத்துக் கொடுத்த பிறகே என் வீட்டு நாற்காலியிலேயே என்னால் இயல்பாக உட்கார முடிகிறது. இந்த அச்சம் கவிதைகளின் பால் அல்ல. கவிதைகள் என்னும் பெயரில் வரி விளம்பரங்களை எழுதிக் கொண்டு வந்து நம்மிடம் நீட்டும் அசடுகளினால் ஏற்பட்ட கலக்கம். அந்தக் கலக்கம் ‘சொந்த ரயில்காரி’யிடம் எனக்கில்லாமல் போனதற்குக் காரணம், மரபின் மைந்தன்தான். அநாவசியப் பரிந்துரைகள் எதையும் அவர் செய்வதில்லை. சிலசமயம் அவசியப் பரிந்துரைகளையும் அவர் தவிர்ப்பார் என்பதை அறிவேன். தான் படித்த நல்ல புத்தகங்களை நான் கேட்காமலேயே எனக்கனுப்பி வைப்பவர், அவர். பதினேழு ஆண்டுகளில் அவர் எனக்கனுப்பிய புத்தகங்களின் எண்ணிக்கை இன்னும் ஐம்பதைத் தாண்டவில்லை. மரபின் மைந்தனின் ரசனையின் மேல் எனக்குள்ள நம்பிக்கையின் காரணமாகவே ‘சொந்த ரயில்காரி’ புத்தகத்தைப் படிக்கத் துவங்கினேன்.

’இளம்பிராயத்தில் ஞாயிறு மறைகல்வி வகுப்பில் பாடலொன்றை பாடியவனுக்கு எவர்சில்வர் டிபன் பாக்ஸையும், பிளம்கேக் ஒன்றையும் ரெஜினா சிஸ்டர் கொடுத்ததுதான் மாபெரும் தவறு. தான் ரொம்பப் பிரமாதமாகப் பாடுவதாக அன்றிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பித்துக்குளி. உண்மையில் இது சுமாராகத்தான் பாடும்.தொலைக்காட்சிகளில் குழந்தைகள் பாடுவதைக் கேட்டு பொறாமையில் கண்ணீர் விடும். அப்புறம் ‘நான் வேறு ஏதாவது வேலைக்குப் போனால் என்ன?’ என்று கேட்கவும் செய்யும்’.

முன்னுரையில் தன்னைப் பற்றி இப்படி எழுதியிருந்தார், ஜான் சுந்தர். இந்த வரிகளைப் படித்தப் பிறகு என்னால் தயக்கமில்லாமல் புத்தகத்துக்குள் செல்ல முடிந்தது.

’யேசுவை அப்பா என்றுதான் நீயும் அழைக்கிறாய்
அவ்வாறே சொல்ல என்னையும் பணிக்கிறாய்
தாத்தா என்பதுதானே சரி. வினவுகிறாள் மகள்
விழிக்கிறோம், நானும் யேசுவும்’.

‘உறங்கியபின்
போட்டாலென்ன ஊசியை எனக்கேட்டு
விசும்பலைப் போர்த்திக் கொண்டு
தூங்கிப் போனாள்.
விடிந்தும் தீராவலி எனக்கு’.

இதுபோன்ற எளிமையான கவிதைகள், புத்தகத்தை முழுமையாக வாசிக்க உதவின.

கோவைக்குச் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரெஸ் ரயிலில் ஏறும்போது எனக்கிருந்த உற்சாகத்தை ’சொந்த ரயில்காரி’யே எனக்கு வழங்கியிருந்தாள். அதிகாலை ஐந்து மணிக்கு கோவை ரயில் நிலையத்தில், என் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு, ‘அண்ணா! எங்க இருக்கீங்க?’ என்று கைபேசியில் அழைத்த ஜானை முதன்முதலில் சந்தித்த போது, அவர் குரல் மூலம் நான் யூகித்து வைத்திருந்த உடல்மொழி கலையாமல் இருந்தார். விடுதியறைக்குச் சென்று உடையைக் களையாமல், பல் துலக்காமல் தொடர்ந்து தேநீர் வரவழைத்துக் குடித்தபடி, அந்தக் கவிஞனுக்குள் இருந்த பாடகனை மெல்ல மெல்லத் தூண்டிக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று குச்சிகளின் விரயத்துக்குப் பின், பற்றிக் கொண்டு சுடர் விட்டது, விளக்கு. பிறகு மூன்றிலிருந்து நான்குமணிநேரம் வரைக்கும் நின்று ஒளிர்ந்தது. பத்து மணிவாக்கில் மரபின் மைந்தன், விடுதியறைக்குள் நுழைந்த போது ஜான் என்னோடு பழகத் துவங்கி பத்திருபது ஆண்டுகள் ஆகியிருந்தன.

மாலையில் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் செல்ல அந்தக் கால சிவாஜி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த தன் அத்தானுடன் ‘நெல்லை லாலா ஸ்வீட்ஸ்’ மாரியப்பன் அண்ணாச்சி வந்திருந்தார். 1978இலிருந்து கோவைவாசியாக இருக்கும் மாரியப்பன் அண்ணாச்சியின் பேச்சு திருநவேலியின் ரதவீதிகளில் நடமாட வைத்தது.

‘அப்பதயே வரலாம்னு பாத்தென். நீங்க தூங்குவேளோ, என்னமோன்னுதான் வரல, பாத்துக்கிடுங்க . . .’

’மூங்கில் மூச்சு’ல அப்படியே எங்க எல்லாத்தையும் ஊருக்குக் கொண்டு போயிட்டியள்லா’.

மாரியப்பன் அண்ணாச்சி வரும்போது, என்னுடன் கோவையில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் ஓர் இளைஞன் இருந்தான். ’இவாள் யாரு?’ பவ்யமாக விசாரித்த மாரியப்பன் அண்ணாச்சியிடம், ‘மூங்கில் மூச்சுல வர்ற குஞ்சுவின் மகன் இவன்’ என்று நான் சொல்லவும் மாரியப்பன் அண்ணாச்சியுடன் சேர்ந்து கொண்டு, சிவாஜி ரசிகரான அவரது அத்தான் ‘சிவாஜி’ மாதிரியே கண்களை உருட்டி ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் முழித்தார்.

நிகழ்ச்சிக்குக் கிளம்பி விடுதியின் வாசலுக்கு நான் வரவும், அண்ணாச்சி பரபரப்பாகி, ஃபோனில் பேசினார்.

‘அவாள் கெளம்பி கீளெ வந்துட்டா. சீக்கிரம் வண்டிய கொண்டுட்டு வா’.

‘ஏறுங்க’. காரில் என்னை ஏற்றி, தானும் ஏறிக் கொண்டார். கார் சக்கரங்கள் உருளத் துவங்கிய ஏழாவது நொடியிலேயே, ‘எறங்குங்க’ என்றார். ‘ஏன் அண்ணாச்சி? வேற கார்ல போறோமா?’ என்று கேட்கத் தோன்றும் முன்பே, நான் தங்கியிருந்த விடுதியின் அடுத்தக் கட்டிடத்தில்தான் நிகழ்ச்சி என்பது தெரிந்து போனது.

அரங்கத்தில் ‘கவியன்பன்’ கே.ஆர்.பாபு, ‘வெள்ளித் திரையில் கோவை’ என்கிற தலைப்பில் புள்ளிவிவரங்கள் மூலம் அசரடித்துக் கொண்டிருந்தார். பேச்சை நிறுத்தி எனக்கு வணக்கம் சொன்ன பாபுவுக்கு பதில் வணக்கம் சொல்லிவிட்டு, கவிஞர் கலாப்ரியா மாமாவை வணங்கினேன். ‘மருமகனே’ என்று என் கைகளைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார், மாமா.

தேவ. சீனிவாசன் விழாவைத் தொகுத்து வழங்க, ரத்தினச் சுருக்கமாக வரவேற்புரை நிகழ்த்தினார் இளஞ்சேரல். பிறகு ’எனக்கு பேசத் தெரியாது’ என்று சொல்லியபடி நிதானமாகப் பேசத் துவங்கினார் கலாப்ரியா மாமா. விசேஷ வீடுகளில் இளையதலைமுறை சொந்தங்கள் சூழ்ந்திருக்க, தமது அனுபவச்சாரங்களை அவர்களோடு சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்கிற பெரியவரின் வாஞ்சையான குரலாக கவிஞர் கலாப்ரியாவின் குரல் அத்தனை பிரியமாக அந்த அரங்கில் ஒலித்தது.

அதன்பிறகு சுருக்கமாகப் பேசி அமர்ந்த மாரியப்பன் அண்ணாச்சிக்குப் பிறகு கவிஞர் லிபி ஆரண்யா பேச வந்தார். லிபியின் குரலிலும், தோற்றத்திலும் அப்படி ஒரு மிடுக்கு. ஆனால் பேசிய விஷயங்களில் அத்தனை கவிநயம். கொஞ்சம் கோபம், கொஞ்சம் வியப்பு, கொஞ்சம் எரிச்சல், நிறைய கனிவு என கலவையாக அமைந்தது லிபியின் பேச்சு. விழாவில் பேசிய அத்தனை பேரில் லிபி ஆரண்யாவின் பேச்சை மட்டும் அருகில் வந்து தன் செல்ஃபோனில் வீடியோ மூலம் பதிவு செய்து கொண்டார் கவிஞர் சாம்ராஜ். ஒருவேளை லிபியைப் பற்றி ஏதும் டாக்குமெண்டரி எடுக்கிறாராக இருக்கும். நான் எப்போதும் வியந்து ரசிக்கும் மரபின் மைந்தனின் விஸ்தாரமான பேச்சு அன்றைக்கு அத்தனை கச்சிதமாக, சுருக்கமாக அமைந்து என்னை திகிலுக்குள்ளாக்கியது. மரபின் மைந்தன் அதிகநேரம் பேசுவார் என்று எதிர்பார்த்து, சற்று ஆசுவாசமாக உட்கார்ந்திருந்த என்னை அதிகநேரம் பேச வைக்க வேண்டுமென்பதற்காகவே மரபின் மைந்தன் தன் உரையைச் சுருக்கிக் கொண்டதாகச் சொன்னார். ஏற்கனவே ‘உன் பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கில்லாமல் போனதே’ என்று வண்ணதாசன் அண்ணாச்சி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பேச நினைத்ததையெல்லாம் லிபி ஆரண்யா பேசிவிட்டாரே! நாம் என்ன பேசப் போகிறோம் என்கிற கவலையில் இருந்த எனக்கு அப்போதைக்கு ஆறுதலாக இருந்தது, என் கைக்கடிகாரம் மட்டுமே. எட்டு மணி பத்து நிமிடங்கள் என்று காட்டியது. எட்டரைக்கு அந்த ஹாலை ஒப்படைக்க வேண்டும் என்று ஏற்கனவே மரபின் மைந்தன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்து, படபடப்பைக் குறைத்தது.

’சொந்த ரயில்காரி’ புத்தகத்தை நான் படித்திருக்கிறேன் என்பதை எல்லோரும் நம்பும் விதமாக புத்தகத்திலுள்ள ஒருசில கவிதைகளையும், குறிப்பாக ஜான் சுந்தரின் முன்னுரையையும் குறிப்பிட்டுச் சொல்லி அமர்ந்தேன். என் பேச்சின் முடிவில், ஜான்சுந்தரின் இளைய வயதிலேயே காலமாகிவிட்ட அவரது தகப்பனாரைப் பற்றி ஒருசில வார்த்தைகளைச் சொல்லியிருந்தேன். அடுத்து ஏற்புரை சொல்ல வந்த ஜான், ‘சிரிக்க சிரிக்கப் பேசிக்கிட்டே வந்து கடைசில இப்படி பலூனை உடச்சு விட்டுட்டீங்களேண்ணே’ என்றார்.

புத்தகத்தின் முன்னுரையில் கலங்க வைத்த ஜான், தனது ஏற்புரையிலும் அதையே செய்தார். தன் சகோதரியை, தகப்பனாரை, தன் பள்ளியை நினைவு கூர்ந்த போதெல்லாம் அவரிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. இயல்பான நெகிழ்ச்சி, அது. நன்றி சொல்லும் போதும், மற்றவரை வியக்கும் போதும், சூப்பர் சிங்கரில் ரஹ்மான் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் ’தி ஒன் அண்ட் ஒன்லி’ ஸ்ரீநிவாஸ் ஸார் பிரத்தியேகமாகக் காட்டும் அபிநயம் போல் அல்லாமல், அத்தனை இயல்பான உணர்ச்சியை ஜானின் முகத்திலும், உடல்மொழியிலும் பார்க்க முடிந்தது.

’சொந்த ரயில்காரி’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மனதுக்கு இணக்கமான பல மனிதர்களை சந்திக்க முடிந்தது. மிகுந்த நம்பிக்கையும், பிரமிப்பையும் அளிக்கிற கவிஞர் இசை, ’கடந்து செல்லும் எல்லாப் பெண்களையும் கடக்கவா முடிகிறது’ என்றெழுதிய, விகடன் விருது பெற்ற கவிஞர் லிபி ஆரண்யா, எல்லோரிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கும் இளஞ்சேரல், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மரபின் மைந்தன் சொல்லிச் சொல்லிக் கேட்டு பழக்கமான பெயரான கவியன்பன் கே.ஆர்.பாபு, மாரியப்பன் அண்ணாச்சி என பலர். நிச்சயம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த ஓவியர் ஜீவானந்தன் அண்ணாச்சி வராதது வருத்தம்தான்.

மறுநாள் ஈஷா யோகமையத்துக்கு அழைத்துச் சென்றதன் மூலம் மரபின் மைந்தன் வேறொரு விவரிக்க முடியாத அனுபவத்துக்கு என்னை இட்டுச் சென்றார். உடன் வந்த ஜான் சுந்தருக்கும், எனக்கும் அன்றைய நாள் முழுவதுமே புத்தம் புதிது. இது குறித்து போகிற போக்கில் சொல்லிவிட முடியாது. அப்படி சொல்லவும் கூடாது. மதியத்துக்கு மேல் நிகழ்ந்த சௌந்தர் அண்ணாவின் சந்திப்பும் அப்படித்தான். உணர்வுபூர்வமான, விவரிக்க முடியாத ஒன்று. சௌந்தர் அண்ணாவுடனான சந்திப்பும், ஈஷா யோக மைய அனுபவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய உயர்ந்த அனுபவங்கள். பின்பொரு சாவகாசமான சந்தர்ப்பத்தில் விரிவாகப் பகிர வேண்டியவை.

அன்றைய இரவு நான் தங்கியிருந்த விடுதியறையை கவியன்பன் கே.ஆர். பாபு, மாரியப்பன் அண்ணாச்சி, ஜான் சுந்தர், மரபின் மைந்தன் ஆகியோருடன் கண்ணதாசனும், விஸ்வநாதனும், சௌந்தர்ராஜனும், சுசீலாவும், இளையராஜாவும் நிறைத்துக் கொண்டனர். மறக்க முடியாத அந்தப் பொழுதை யாருக்கும் வீடியோ பதிவு செய்யத் தோன்றாமல் போனது, மாபெரும் இழப்புதான். பசியைப் பொருட்படுத்தாமல், கலைய மனமில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்த எங்களின் இசை சம்பாஷனையை ஜான் சுந்தர் பாடிய ’பகல்நிலவு’ திரைப்படத்தின் ‘வாராயோ வான்மதி’ என்கிற ரமேஷின் பாடலுடன் முடித்துக் கொண்டோம்.

அதிகாலை விமானப் பயணத்தில் இசையின் ‘அதனினும் இனிது அறிவினர் சேர்தல்’ புத்தகத்தைப் படித்துக் கொண்டு வந்தேன்.

‘என்ன படிக்கிறீங்க?

பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இயக்குனர் ராம் கேட்டதற்கு கையிலிருந்த புத்தகத்தைக் காட்டிவிட்டு, ‘ஒனக்கொரு புத்தகம் தர்றேன். படிச்சு பாரு. நிச்சயம் உனக்கு புடிக்கும்’ என்று சொல்லி, பையிலிருந்த ‘சொந்த ரயில்காரி’ புத்தகத்தைக் கொடுத்தேன்.

சென்னைக்கு வந்து இறங்கிய பின்னும் மனம் கோவையில் இருந்தது. மாலையில் ஜான் சுந்தரிடமிருந்து ஃபோன்.

‘அண்ணா! நல்லபடியா வீட்டுக்குப் போயிட்டீங்களா? தூங்கினீங்களா?’ போன்ற சம்பிரதாய விசாரிப்புகள்.

‘ரெண்டு நாளும் சந்தோஷமா இருந்தேன், ஜான். ரொம்ப நன்றி’ என்றேன்.

நான் சற்றும் எதிர்பாராதவிதமாக ’நினைவுச் சின்னம்’ திரைப்படத்திலிருந்து ‘சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன’ என்ற பாடலை ஏனோ பாடினார். பாடி முடிக்கும் போது, அவர் குரல் தளும்பியிருந்தது. என்னிடம் வார்த்தையே இல்லை. உடனே ஃபோனை வைத்து விட்டேன்.

திறமைக்கு சற்றும் பொருந்தா குறைந்த சன்மானத்துடன், கனவுகளோடு, நனவுகளை மோதவிட்டு, வேடிக்கை பார்த்தபடி வாழ்ந்து வரும் கவியுள்ளமும், கலாரசனையும் கொண்ட அந்த மேடைப் பாடகன், எனக்கு நன்றி சொல்லும் விதமாக ஏன் இந்தப் பாடலைப் பாடினான்? எனக்கு ஏன் இந்தப் பாடல் என் தாயாரை நினைவுபடுத்துகிறது? நான் ஏன் இன்னும் அழுது கொண்டிருக்கிறேன்? காரணமே தெரியவில்லை. ஒருவேளை சொல்லத் தெரியாத, சொல்லி என்ன ஆகப்போகிறது என்கிற சலிப்பில் நான் சொல்லாமல் விட்டுவிடுகிற என் வாழ்வின் துயரங்கள்தான் காரணமா?

ஒன்று மட்டும் தோன்றுகிறது.

‘சமதளப்படிகளில் இறங்கும்
வித்தையறிந்திருக்கிறான்
பியானோ கலைஞன்’
என்று எழுதிய இந்தத் தாயளி ஜான் சுந்தரின் தொலைபேசி அழைப்பை இனி எடுக்கக் கூடாது.