கிரிவலம் . . .

பகவதி, என் பள்ளித் தோழன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விகடனில் நான் எழுதிக் கொண்டிருந்த ‘மூங்கில் மூச்சு’ வெளியான காலத்தில் சுகாவின் வாசகனாகத் தேடி வந்து என்னைக் கட்டிக்கொண்டான். புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் அதிகாரி. ‘ஏ யப்பா! பகவதிக்கு எவ்ளோ முடி’ என்று பார்ப்போர் ஆச்சரியப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் தலையில் உள்ள முடி அனைத்தையும் முகத்துக்குக் கொணர்ந்து அதற்கு ‘தாடி’ என்று பெயர் சூட்டியிருக்கிறான். அத்தனை வருடங்களுக்குப் பின் பகவதியை சந்தித்த நான், அவனது தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து, அவனை அவராகப் பார்க்கத் துவங்கினேன். திருநவேலி பாஷையில் ‘அவாள்’. பகவதியைப் பார்த்த மாத்திரத்தில் நான் அவனுக்கு போட்ட ஒரே கண்டிஷன். ‘சபைல நாலு பேருக்கு முன்னாடி என்னை நீ ஒருமைலதான் கூப்பிடணும், பேசணும். தேவைப்பட்டா கெட்ட வார்த்த கூட யூஸ் பண்ணிக்கோ. ஆனா நான் உன்னை மத்தவங்க முன்னாடி அநாகரிகமா பன்மைலதான் கூப்பிடுவேன். உன்னை போடா வாடான்னு கூப்பிட்டு கிளாஸ்மேட்டுங்கற மரியாதய நான் தருவேன்னு மட்டும் எதிர்பாத்துராதே!’

எனக்குத் தெரிந்த பள்ளித்தோழன் பகவதிக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. இப்போதும் பிடிவாதமாக அந்தப் பழக்கத்தைப் பாதுகாக்கிறான். ஆனால் சென்னையில் பகவதி அநாயசமாகக் கார் ஓட்டுவது இன்னும் எனக்கு ஏற்புடையதாக இல்லை. ‘அதெப்படிடே! சைக்கிள் ஓட்டத் தெரியாது. கார் ஓட்டுதே!’ என்று கேட்டதற்கு ஒரு நக்கல் சிரிப்புடன், ‘ஒனக்கு கார் ஓட்டத் தெரியாது. சைக்கிள் ஓட்டத் தெரியும்லா. அப்படித்தான்’ என்று பதில் சொல்கிறான். பகவதி வைத்திருக்கும் செலெரியோ காருக்கு அப்படியே பகவதியின் முகச்சாடை. சில சமயங்களில் பார்க்கிங்கில் நிற்கும் அவன் காரின் பானட்டை பகவதியாக பாவித்துப் பேசியிருக்கிறேன். அதுவும் மென் சிரிப்புடன் நான் பேசுவதைக் கேட்டபடி அமைதியாக இருந்ததுண்டு.

கடந்த மூன்று வருடங்களாக நான் உட்பட பள்ளித் தோழர்கள் சிலரை தமிழ்நாட்டில் உள்ள அநேக கோயில்களுக்கு பகவதி அழைத்துச் சென்று வருகிறான். குறிப்பாக மாத சிவராத்திரிக்கு எங்களை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று, (இழுத்துச் சென்று) கிரிவலம் வர வைக்கிறான். கிரிவலம் செல்வதற்கான நேரத்தை பகவதியேதான் குறிப்பான். சென்னையிலிருந்து மதிய உணவுக்கு முன்போ, பின்போ கிளம்பி இருட்டத் துவங்கிய பின் திருவண்ணாமலை அடைந்து, பின் நள்ளிரவில் கிரிவலத்தைத் துவக்குவோம். கிரிவலம் செல்வதை விட சென்னையிலிருந்து ஒவ்வொரு முறையும் திருவண்ணாமலை செல்வது அத்தனை ஆயாசமாக இருக்கும். கிரிவலத்துக்கு முந்தைய நாளே நண்பன் குஞ்சு திருநவேலியிலிருந்துக் கிளம்பி சென்னை வந்து சேர்ந்து விடுவான். முதல் நாளிலிருந்தே எங்களை மனதளவில் கிரிவலத்துக்கு பகவதி தயார் செய்வான். ‘நாளைக்கு பச்சை வேட்டி உடுத்தணும்பா. குபேர லிங்கத்துல ஆளுக்கு ஆறு நெய் வெளக்கு போடணும். அடி அண்ணாமலைல இருவத்தேளு வெளக்கு. அப்புறம் ஆரஞ்சு பள தானம்’. குஞ்சு பரிதாபமாக என் முகத்தைப் பார்ப்பான். பகவதிக்குக் கேட்காதவண்ணம் என் காதருகே, ‘எல கவனிச்சியா! இந்தத் தாயளி நாளைக்கு நம்ம தலைல ஆரஞ்சு பள மூட்டையை ஏத்திருவான் போலுக்கே!’ என்று புலம்பத் துவங்குவான். ‘சரி சரி விடு. ஆளுக்குக் கொஞ்ச நேரம் சொமந்துட்டு நைஸா ராமசுப்பிரமணியன் தலைக்கு மாத்தி விட்டிருவோம். புண்ணியம்னு சொன்னா திருவண்ணாமலை என்ன, திருநவேலிக்கே மூட்டையச் சொமந்துட்டு வருவான்’ என்று சமாதானப்படுத்துவேன்.

கிரிவலம் கிளம்பும் அன்று கோயம்பேட்டில் உள்ள ‘தளவாய்’ ராமலிங்கத்தின் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் ஒன்று கூடுவோம். நண்பன் ‘தளவாய்’ ராமலிங்கம், திருநவேலியின் புகழ் பெற்ற ‘தளவாய்’ முதலியார் குடும்பத்தைச் சேர்ந்தவன். நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் பேராசிரியர் அன்பழகனுக்கு பேரன் முறை. நாங்கள் திருநவேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது, அவனும் எங்களுடன் பள்ளிக்கு வந்து போய்க் கொண்டிருந்தான்.

ராமலிங்கத்தின் ஸ்கார்ப்பியோ கார் எங்களுக்கு முன்பாகவேக் கிளம்பி, திருவண்ணாமலை நோக்கிப் பாயத் தயாராக நின்று கொண்டிருக்கும். நானும், குஞ்சுவும் சாலிகிராமத்திலிருந்துக் கிளம்பி கோயம்பேடு சென்று ராமலிங்கத்துடன் பகவதியின் வருகைக்காகக் காத்துக் கிடப்போம். ராகுகாலம் முடிந்த பின் உள்ளாடை அணிந்து, வேளச்சேரியிலிருந்து பகவதி கிளம்பி கோயம்பேடு வந்து சேர்வதற்குள் பசிமயக்கத்தில் குஞ்சு மெல்ல பகவதியை சைவக் கெட்ட வார்த்தைகளால் ஏசத் துவங்கியிருப்பான். ‘ஒளுங்கு மயிரா சாப்பிட்டுட்டு வருவோம்னு சொன்னா நீ கேக்கியா? இந்தக் . . . ல்லாம் நம்புனா வெளங்குமா? இப்பமே எனக்கு தல சுத்துது’. ராமலிங்கம் பதறிப் போய் கண்ணைக் காட்டுவான். ‘கோயிலுக்குக் கூட்டிட்டு போறவனப் போயி அந்த வார்த்தல்லாம் சொல்லலாமாப்பா?’. ராமலிங்கம் நாங்கள் வருவதற்கு முன்பே சேஃப்டி சப்பாத்திகள் சாப்பிட்டிருப்பான் என்பது எங்களுக்குத் தெரியுமென்பதால் அவனை பசியோடு முறைத்துப் பார்ப்போம். ‘இல்லப்பா. மனசுல பட்டதச் சொன்னேன். சம்போ மகாதேவா’ என்று ஏப்பம் விட்டபடி, ‘முக்குல நின்னு பகவதி வண்டி வருதான்னு பாக்கென்’ என்று நைஸாக எழுந்து சென்று விடுவான். அநேகமாக பகவதி வந்து சேரும் போது, சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டின் வரவேற்பறையின் சோஃபாவில் நானும், குஞ்சுவும் மயங்கிக் கிடப்போம். பகவதியும், ராமலிங்கமும் ஒரே நட்சத்திரக்காரர்கள். சில சமயங்களில் சொல்லி வைத்தாற் போல அவர்கள் இருவருக்கும் சந்திராஷ்டமம் இருக்கும் போது நாங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதை குஞ்சுதான் சொல்லிக் கொண்டே இருப்பான். ‘இவனுவொ ரெண்டு பேருக்கும் சந்திராஷ்டமம். என்ன பாடு படுத்தப் போகுதோ!’. காரில் சாமான்களை ஏற்றும் போது ‘ணங்’கென்று குஞ்சுவின் முழங்காலில் பெட்டியை இடித்தபடி ராமலிங்கம் காரில் ஏற்ற, கதறிய குஞ்சுவை சமாதானப்படுத்தும் விதமாக ராமலிங்கம், ‘நீ சொன்ன மாரியே சந்திராஷ்டமம் வேல செய்யுதேடே!’ என்று சொல்ல, வலி தாங்க முடியாத குஞ்சு, ‘ஒனக்கு சந்திராஷ்டமம்னா என் கால்ல வந்து ஏம்ல இடிக்கே, தாயோளி?’ என்று கதற, ‘சம்போ மகாதேவா’ என்றபடி கார் கிளம்பும்.

நண்பகலில் சென்னை மாநகரைத் தாண்டுவதற்குள் கிட்டத்தட்ட மாலை ஆகி விடும். பசியில் அதுவரை நண்பர்களை ஏசி வந்த குஞ்சு, சிவபெருமானை ஏச நினைப்பதற்குள் காரை ‘ஒன்லி காபி’ ஹோட்டலுக்கு முன் நிறுத்தச் சொல்வான் பகவதி. கிடைத்த வடைகள், முறுக்குகள், சுண்டல்கள் அனைத்தையும் தின்று சுடச் சுட ஃபில்டர் காபியும் குடித்து முடித்த பின் குஞ்சுவுக்கு மீண்டும் பக்தி வந்து சேரும். ‘உளுந்த வட ஃபர்ஸ்ட் க்ளாஸா இருந்துது பாத்தியா? நம்ம ஊரு விசாக பவன் வட மாரியே. எல்லாம் சிவன் அருள்’. இதைக் கண்டும் காணாதது போல கடந்து செல்லும் ராமலிங்கம் ‘சம்போ மகாதேவா’ என்று காரில் ஏறுவான்.

குரோம்பேட்டையில் காரில் ஏறிக் கொள்ளும் நண்பன் ராமசுப்பிரமணியன் உணவிலும், வார்த்தைகளிலும் சுத்த அசைவத்தைக் கடைப்பிடிப்பவன். அசைவ அடைமொழி இல்லாமல் எங்களில் யாரையும் அவன் விளித்ததே இல்லை. அத்தனை பேசுகிறவனுக்கு கடவுள் பக்தியை விட கடவுள் குறித்த பயம் உண்டு. தெய்வக் குத்தம் ஆயிரும் என்ற வார்த்தைகள் அவனை எப்போதும் அச்சுறுத்துபவை. காரில் ஏறியதிலிருந்தே எல்லோரையும் சகட்டு மேனிக்கு அர்ச்சிப்பவன், பகவதியையும் விட்டு வைப்பதில்லை. ‘நீயெல்லாம் ஒரு ஆளு! என்னடா பகவதி?’ என்று துவங்கி ‘மூளைன்னு ஏதாவது இருக்கா உனக்கு’ என்று தொடர்ந்து, ‘ரொம்பப் பேசினேன்னா அப்பிடியே பொடதில அடிச்சு கீள எறக்கி விட்டிருவேன்’ என்பதாக நிறையும். இவை எல்லாம் திருவண்ணாமலை வரும் வரைக்குமான கதை. திருவண்ணாமலை லெவல் கிராஸிங் வந்த பின் ராமசுப்பிரமணினின் வாய் தானாக பகவதியை பன்மையில் வணங்க ஆரம்பித்து விடும். குஞ்சு சொல்லுவான். ‘பகவதிபுரம் ரயில்வே கேட் வந்துட்டுல. ராமசுப்பிரமணியன் இனிமேல் பகவதியோட அடிமை’.

பொதுவாக திருவண்ணாமலை கிரிவலம் என்றால் அநேக பேருக்கு பௌர்ணமி கிரிவலம்தான். ஆனால் நாங்கள் பௌர்ணமிக்குச் செல்வதில்லை. மாத சிவராத்திரிக்குத்தான் செல்வது வழக்கம். கூட்டமும் குறைவாக இருக்கும். தொந்தரவில்லாமல் கிரிவலம் வரலாம். கோயிலை ஒட்டி காரை பார்க் செய்து விட்டு, எதிரே இருக்கும் விடுதியில் குளிக்கச் செல்வான், பகவதி. அவன் குளித்து விட்டு, பச்சை வேட்டி அணிந்து, கையில், கழுத்தில் ருத்திராட்சை அணிந்து, நெற்றி முழுக்க திருநீறு, சந்தன, குங்குமம் சகிதம், மேல் சட்டையில்லாமல் பகவதியடிகளாகக் காட்சி தருவான்(ர்). பகவதியடிகளின் சீடனாக அவரது உடமைகளைச் சுமந்தபடி பயபக்தியுடன் நின்று கொண்டிருப்பான், ராமசுப்பிரமணியன்.

அதற்குப் பிறகும் கிரிவலம் துவங்கியபாடிருக்காது. நிறைய துணிப்பைகளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து ராமசுப்பிரமணியனிடம் கொடுத்தபடி இருப்பான், பகவதி. ஐவகை எண்ணெய், சின்ன மண் சட்டிகள், திரிகள், வித விதமான ஊதுபத்திகள், சின்னதும், பெரிதுமாக புத்தகங்கள், இவை போக அந்த மாதத்துக்கான கிரிவல தானப் பொருள் என ஒன்றன் பின் ஒன்றாக வந்த வண்ணம் இருக்கும். ராமசுப்பிரமணியனின் தோளில் பாரம் ஏறி ஏறி சிறிது நேரத்திலேயே பிட்டுக்கு மண் சுமந்த சிவன் போல ஆகிவிடுவான். ‘எல! இந்த மட்டம் மெட்டீரியல எறக்கிக்கிட்டே இருக்கானே! அநேகமா ராமசுப்பிரமணியனை கிரிவலம் முடியவும் ஆஸ்பத்திரில சேக்க வேண்டியிருக்கும்’ என்பன் குஞ்சு.

எல்லோரும் காத்து நிற்க, ‘போலாம்பா’ என்று ஜாடை காட்டி முன்னே நடப்பான், பகவதி. அமைதியாகப் பின்  தொடர்வோம். ரெட்டைப் பிள்ளையார் முன் விளக்கு போட அனைவரையும் பணிப்பான். கையில் பிரம்மாண்ட ஊதுபத்தி கொடுத்து விடுவான். ஒவ்வொரு ஊதுபத்திக்கும் ஒவ்வொரு பெயர். ‘இது பைரவர் ஊதுபத்திப்பா. இது கிரிவலத்துக்கானது. இது ராகு கேதுக்கானது.’  ரெட்டைப் பிள்ளையார் வாசலில் பூ விற்கும் பெண்கள், எங்களைப் பார்த்ததுமே, ‘க்கா! தோ பாரு. ஊதுவத்திக்காரங்க வந்துட்டாங்க’ என்பார்கள். ‘ண்ணா! எங்களுக்கும் ஒண்ணு குடுத்துட்டுப் போங்கண்ணா’. ஆளுக்கு மூன்று விளக்கு ஏற்றிய பின், பிள்ளையாரை வணங்கி விட்டு கிரிவலத்தைத் துவக்குவோம். ‘இப்பம் மூணு தோப்புக்கரணம் போட்டா போதும்பா. முடிச்சுட்டு வரும் போதுதான் இருவத்தொண்ணு’. ஒரு முறை இந்திர லிங்கத்தைத் தாண்டும் போது கையில் பெரிய ஊதுபத்தியுடன் எங்களைக் கண்ட சிறுவர்கள் அவர்களுக்குள் பேசியபடி பின் தொடர்ந்தனர். எங்கோ தூரத்தில் தெரிந்த தங்கள் நண்பனை அழைத்தார்கள். ‘டேய் விநோத்து. பட்டாஸ் வெடிக்கப் போறாங்கடா. பத்திய பாத்தியா, ஜெயிண்ட் சைஸு. தவுஸண்ட் வாலாவாத்தான் இருக்கணும். பைக்குள்ள இருக்கும் பாரேன்.’ கோபத்தை அடக்கிக் கொண்டு, ‘டேய் தம்பி. பைக்குள்ள ஆரஞ்சு பளமும், பைரவருக்குப் போட பிஸ்கட்டும், பொறையும் தான்டா இருக்கு. நீங்க போயி வெளையாடுங்க, போங்க போங்க’ என்று கெஞ்ச வேண்டியிருந்தது. 

ஊதுபத்திதான் என்றில்லை. ஒவ்வொரு முறை கிரிவலத்தின் போதும் ஒவ்வொரு தினுசான ஐட்டங்களை இறக்குவான், பகவதி. அதற்குச் சொல்லும் காரணமும் பகீரென்றிருப்பதால் சத்தமில்லாமல் அவன் சொன்னதைச் செய்வோம். ‘இந்த கிரிவலம் கொட்டாங்குச்சி சித்தர் தலைமைலதான் போகணும்பா. அதுக்கு கைல தென்னங்கன்னு ஒண்ணை வச்சுக்கிட்டு சுத்தணும்.’ எல்லோரும் அமைதியாகிவிட பகவதி மட்டும் கையில் தென்னங்கன்றுடன் கிரிவலம் வந்தான். தென்னங்கன்றின் குருத்து கண்ணைக் குத்தியதால், நான் சற்றுத் தள்ளி நடக்க ஆரம்பித்தேன். ‘பகவதி! எதுக்கும் அப்பப்பத் திரும்பிப் பாத்துக்கோ. சின்னப்பயலுக தென்னங்கன்னுல ஏறிரப் போறானுக’.

‘தளவாய்’ ராமலிங்கத்துக்கு சில பூர்வீகச் சொத்துகள் வர வேண்டியிருக்கிறது. அது விரைவாகக் கிடைக்கவேண்டுமென்றால் அதற்கும் கிரிவலத்தில் ஒரு சமாச்சாரம் இருப்பதாகச் சொன்னான், பகவதி. அதாவது சந்திர லிங்கத்திலிருந்து குபேர லிங்கம் வரைக்கும் குதிகாலிலேயே கிரிவலம் வர வேண்டும் என்றான். ‘தளவாய்’ ராமலிங்கம் கொஞ்சம் கூட யோசிக்காமல் குதிகாலில் நடக்க ஆரம்பித்தான். துணைக்கு நானும் அவனுடன் மெதுவாக ஊர்ந்து நடக்க வேண்டியிருந்தது. முகத்தில் வலியை மறைத்தபடி, சர்க்கஸில் பார் விளையாடும் பாலன்ஸுடன் முக்கி முனகி ‘தளவாய்’ ராமலிங்கம் நடந்தபடி, ‘குபேர லிங்கம் வந்துட்டா வந்துட்டா?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தான். ‘அதைக் கேக்கக் கூடாதுப்பா. அப்புறம் சொத்து கைக்கு வராது’ என்று மிரட்டினான், பகவதி. அதற்குப் பிறகு ராமலிங்கம் வாயைத் திறக்கவில்லை. ஆனால் அவன் பற்களைக் கடித்தபடி வலியைத் தாங்கிக் கொண்டு மனதுக்குள் பகவதியை ‘அந்த’ வார்த்தை சொல்லி ஏசியது, முகத்தில் தெரிந்தது.

கிரிவலத்தின் போது கொடுக்க வேண்டிய தானங்கள் ஒவ்வொரு முறையும் மாறுபடும். ஒரு கிரிவலத்துக்குக் கிளம்பிச் செல்லும் வழியில் வேளச்சேரி தாண்டி ஏதோ ஒரு பிரதேசத்துக்குள் வண்டியைத் திருப்பச் சொன்னான், பகவதி. அங்கு ஒரு வீட்டின் முன் பச்சை வேட்டி கட்டிய மனிதர் ஒருவர் காத்திருந்தார். காரிலிருந்து இறங்கிய பகவதியும், பச்சை வேட்டிக்காரரும் ஒருவரை ஒருவர் ‘ஓம்ஜி’ என்று அழைத்துக் கொண்டனர். வீட்டுக்குள்ளிருந்து சிறிதும், பெரிதுமாக சில பைகள் வந்தன. அத்தனையையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு ஓம்ஜியை வணங்கிவிட்டுக் கிளம்பினோம். கிரிவலத்தின் போது ஆளுக்கொரு பையை, தோளில் ஏற்றினான் பகவதி. ‘ஏன் பகவதி! பைக்குள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?’ தயங்கியபடியே ராமசுப்பிரமணியன் கேட்டான்.

‘எப்படியும் தெரிஞ்சுக்கிடத்தானேப்பா செய்யணும்? நீங்கதானே தானம் குடுக்கப் போறீங்க? பன் பட்டர் ஜாமுப்பா’.

கிரிவலப் பாதையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி பன் பட்டர் ஜாம் கொடுத்தபடியே சென்றோம். அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாய் பன் பட்டர் ஜாம் தீர்ந்தபாடில்லை. காருக்குள் நிறைய பைகள் மிச்சமிருந்தன. டிரைவர் மெதுவாக ஓட்டியபடியே வந்து கொண்டிருந்தார். கிரிவலம் நிறைவடையும் பகுதி வந்த பிறகும் பொட்டலங்கள் உப்பலாகக் காருக்குள் காத்திருந்தன.

‘பகவதீ! எத்தன பொட்டலம்ப்பா?’

‘அதிகமா ஒண்ணும் இல்லப்பா. ஆயிரந்தான்’.

‘அடுத்த கிரிவலம் வரைக்கும் குடுக்கணுமெப்பா?’

‘அதெல்லாம் இல்லப்பா. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு பஸ் ஸ்டாண்ட் வாங்க. பட்டுவாடா பண்ணிடலாம்’. பகவதி முன்னே நடக்க, ‘தளவாய்’ ராமலிங்கமும் பைகளைச் சுமந்தபடி பின்னே நடந்தான். ஒரு வட இந்திய நிறுவனத்தின் தமிழக விற்பனை அதிகாரியான ராமசுப்பிரமணியன், மக்களோடு மக்களாகப் பழகுவதில் தான் ஒரு நிபுணன் என்று சொல்லிக் கொள்பவன். ஆனால் மக்கள் புழக்கம் அதிகமுள்ள பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல மறுத்தான். பைகளைச் சேகரித்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல முயன்ற என்னைத் தடுத்துச் சொன்னான்.

‘அவனுகளுக்குத்தான் கூறு இல்லன்னா உனக்கெங்கெல புத்தி போச்சு?’

‘ஏம்ல?’

எல! ஞாவகம் இருக்கா? திருவண்ணாமலை பக்கத்துலதான் ஒரு குடும்பம் கார்லேருந்து பிஸ்கட், சாக்லெட் எடுத்து சின்னப் பிள்ளைகளுக்குக் குடுத்தாங்கன்னு ஊரே கூடி அடிச்சுது. மறந்துட்டியா?’

பகவதியும், ‘தளவாய்’ ராமலிங்கமும் திரும்பி வந்து தேடியபோது எங்களைக் காணவில்லை.

பொதுவாக மாத சிவராத்திரியின் போது கிரிவலப்பாதையில் அவ்வளவாகக் கூட்டம் இருக்காது. அப்படியே கூட்டம் வந்தாலும் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள்  வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வரும். கிரிவலம் துவங்கும் போதே குஞ்சுவின் காந்தக் கண்கள் சுழல ஆரம்பிக்கும். தானாக யாராவது ஒரு பெண்ணின் பின்னால் அவனது கால்கள் நடக்க ஆரம்பிக்கும். அப்படி ஒருமுறை வெண்பட்டுச் சேலையணிந்து, குளித்த ஈரம் காயாத தலைமுடியுடன், நெற்றியில் சந்தனத் தீற்றுடன் கிரிவலம் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணுடன் நடந்தபடியே பேச்சு கொடுத்தான்.

‘சேச்சிக்கு ஸ்தலம் எவிடையானு?’

‘கோட்டயம்’.

‘ஓ! எண்ட அம்மைக்கு கொல்லமானு. ஞான் ஹாஃப் மலையாளி கேட்டோ’ என்றபடி தனக்குத் தெரிந்த மலையாளச் சொற்களை அந்தப் பெண்ணின் மீது தெளித்தவாறே கிரிவலத்தை நிறைவு செய்தான்.

அடுத்த முறை கிரிவலத்தைத் துவக்கும் போது அதிகளவில் ஆந்திர மக்கள் தென்பட்டார்கள். ராமசுப்பிரமணியன் சொன்னான். ‘இந்தத் தாயளி இன்னைக்கு எங்கம்மைக்கு விஜயவாடான்னு சொல்லுவானாலெ!’

ஒவ்வொரு முறை கிரிவலம் சென்று வந்த பிறகு தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யாவிடமிருந்து ஃபோன் வரும்.

‘ஏன் ஸார் என்னை கிரிவலத்துக்குக் கூட்டிட்டுப் போகல?’

‘ஸாரி ரம்யா. அடுத்த வாட்டி போகலாம்’.

‘இப்படித்தான் ஒவ்வொரு வாட்டியும் சொல்றீங்க?’

‘பதினாலு கிலோமீட்டர். கால்ல செருப்பில்லாம உன்னால நடக்க முடியாது. சொன்னா புரிஞ்சுக்கோ’.

‘யாரு சொன்னா? திருப்பதிக்கெல்லாம் நான் நடந்தே போயிருக்கேன். என்னைக் கூட்டிட்டுப் போகாம இருக்கறதுக்கு சும்மா சாக்கு சொல்றீங்க’.

‘அப்படில்லாம் இல்லம்மா. நெஜம்மா அடுத்த வாட்டி போகலாம்’.

ஆனால் ஒரு முறையும் ரம்யாவை அழைத்துச் சென்றதில்லை. ஆனால் இந்த விஷயத்தை நண்பர்களிடம் அவ்வப்போது சொல்லுவேன். ‘இத என்ன மயித்துக்கு எங்கக்கிட்ட சொல்லுதேன்னு கேக்கென்?’ என்று தானம் கொடுப்பதற்காக பகவதியினால் தோளில் ஏற்றப்பட்ட கேரட் மூட்டையைத்  சுமந்தபடி கிரிவலம் வந்து கொண்டிருந்த  ராமசுப்பிரமணியன் கத்தினான். ‘எப்பா! அந்தப் பிள்ள கேட்டதைத்தானெ சொன்னேன்! இப்பம் என்ன அதைக் கூட்டிக்கிட்டா திருவண்ணாமலைக்கு வந்துட்டேன்?’ என்றேன். ‘நீ மட்டும் அந்தப் பிள்ளையைக் கூட்டிக்கிட்டு திருவண்ணாமலைக்குள்ள நொளஞ்சு பாரு. இங்கெ ஆட்கள ஏற்பாடு பண்ணி ஒன் கால வெட்டச் சொல்லுதென்’. பூர்வீக சொத்து குறித்த வேண்டுதலையும் மீறி உணர்ச்சிவசப்பட்ட ‘தளவாய்’ ராமலிங்கம் இப்படி சொல்லவும், அமைதியாக அவனையும், வானத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு, ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்றேன். சட்டென்று தன் நிலை உணர்ந்து ‘எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்றபடி குதிகாலில் நடந்து அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்று, ‘அண்ணாச்சி! ஒரு லைட் டீ’ என்றான்.

இவற்றையெல்லாம் வழக்கமாக குஞ்சு கண்டுகொள்வதில்லை. அவனைப் பொருத்தவரைக்கும் இது மாதிரியான விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் அது பொய்யாகி விடும் என்ற அபார நம்பிக்கை உண்டு. கிரிவலத்துக்குக் கிளம்பி வருவதில் உள்ள தாமதம். அதனால் வருகிற அலுப்பு. திருவண்ணாமலை வந்த பிறகும் பகவதி போடுகிற பக்தி சட்டத்திட்டங்களைக் கடைப்பிடித்தாக வேண்டிய கட்டாயம் போன்றவற்றினால் குஞ்சு ஒவ்வொரு முறையும் புலம்புவான்.

‘இந்தப் பயலுவொ படுத்துத பாட்டுல மனசுல பக்தியே இல்லாம போயிருதுல. ச்சை.’

‘ஆமால. நானும் வாள்க்கைல ஒரு மட்டமாது கைய நல்லா வீசிக்கிட்டு கிரிவலம் வரணும்னு நெனைக்கென். நடக்க மாட்டெங்கெ. இத்தா நீளத்துக்குல்லா ஊதுபத்திய குடுத்துருதான்’ என்றேன்.

‘அத ஏம்ல கேக்கெ? ஒவ்வொரு மட்டமும் ஊதுபத்தி வேட்டில பட்டு ஓட்ட விளுந்து விளுந்து, இந்தா பாரு, என் வேட்டி கொசுவல மாரி ஆயிட்டு’.

வெட்கமே இல்லாமல் வேட்டியை அவிழ்த்து உதறிக் காட்டினான்.

‘சரி சரி. மொதல்ல உடுத்து. பொம்பளையாள் வருது’. பதறிப் போய் சொன்னேன்.

முகத்தில் மாறாத கடுப்புடன் வேட்டியை நிதானமாகக் கட்டியபடி குஞ்சு சொன்னான்.

‘நெசம்மா சொல்லுதென். இனிமேல் இந்தத் தாயளிங்க கூட நாம கிரிவலம் வர வேண்டாம் . . . நாம மட்டும் ரம்யா கூட வருவோம்’.

துரத்தும் பாடல் . . .

திரையிசை குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். ‘கர்ணன்’ திரைப்படத்தின் இசை குறித்து ‘கர்ணனுக்கு வழங்கியவர்கள்‘, ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா திரைப்படத்தின் இசையை விதந்தோதும் ‘ஹிஸ் ஹைனஸ் ரவீந்திரன்‘, ஜென்ஸியின் குரலை வர்ணிக்கும் ‘செண்பகத்தக்காவின் குரல்‘, ஸ்வர்ணலதாவின் மறைவு தந்த துக்கத்தில் எழுதப்பட்ட ‘சின்னஞ்சிறு கிளியே‘, மறக்கவே முடியாத மலேஷியா வாசுதேவன் பற்றிய ‘அண்ணன்களின் பாடகன்‘ , இப்படி இன்னும் பல. இவை எல்லாமே பலரது அபிமானத்தைப் பெற்ற கட்டுரைகள். ஆனால் நான் எழுதிய இசைக் கட்டுரைகளிலேயே ஒரே ஒரு பாடல் குறித்து எழுதிய ‘தேவனின் கோயில்’ கட்டுரை குறித்த எதிர்வினைகள் இன்னும் எனக்கு வந்து கொண்டேயிருக்கின்றன. ஓரிரு மாத இடைவெளியில் யாரோ ஒருவர் எங்கிருந்தோ மின்னஞ்சலிலோ, அலைபேசியிலோ, குறுஞ்செய்தியிலோ கண்ணீர் உகுத்து, என்னையும் கலங்க வைப்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்மணி ‘தேவனின் கோயில்’ கட்டுரையைப் படித்து விட்டு தொலைபேசியில் பேசத் துவங்கியவர், அடக்க இயலா அழுகையுடன் இணைப்பைத் துண்டித்து விட்டார். சில நிமிடங்களில் இப்படி ஒரு குறுஞ்செய்தி வந்தது: ‘இந்தக் கட்டுரையை நான் படித்திருக்கக் கூடாது. படித்த பின் இந்தப் பாடலை நான் கேட்டிருக்கக் கூடாது. உங்களை, உங்கள் பெயரை நான் அறிந்திருக்கக் கூடாது.’ ஒரு திரையிசைப் பாடலுக்கு இத்தனை சக்தி உள்ளதா? அது குறித்து எழுதப்பட்ட வார்த்தைகள் ஏன் படித்தவரின் மனதை பாதித்தன? இந்தக் கேள்விக்கு இன்னும் விடை கிடைத்தபாடில்லை. வழக்கமாக என் மனதை பாதிக்கும் எந்த ஒரு பாடலையும் கேட்காமல் கடந்து விடுவதே வழக்கம். ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தின் ‘அழகிய கண்ணே’ அதற்கு தலையாய உதாரணம். அது போக ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தின் ‘கற்பூர பொம்மை ஒன்று’, ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் ‘குயில் பாட்டு’, ‘அச்சாணி’ திரைப்படத்தின் ‘மாதா உன் கோயிலில்’ போன்ற பாடல்களுடன் ‘மூன்றாம் பிறை’யின் ‘கண்ணே கலைமானே’ பாடலையும் எல்லா சமயத்திலும் கேட்கும் திராணி இருந்ததே இல்லை. இது போன்ற பட்டியல் எல்லோருக்கும் இருக்கக் கூடும். நண்பன் குஞ்சு ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடல் துவங்கும் போதே, ‘பாட்டை மாத்தித் தொல’ என்பான். அது அவனுக்குப் பிடிக்காத பாடலல்ல. அது தரும் தொந்தரவிலிருந்துத் தப்பிக்கவே தவிர்ப்பான்.

‘தேவனின் கோயில்’ பாடலின் இசை, பாடல் வரிகள், சித்ராவின் பாடும் முறை, மற்றும் வாத்தியக் கருவிகளின் சேர்க்கை குறித்து விலாவாரியாக எழுதியாயிற்று. இனி அந்தப் பாடல் குறித்து வியக்கவோ, சிலாகிக்கவோ என்னிடம் ஒரு சொல் கூட மிச்சமில்லை. கிட்டத்தட்ட அந்தப் பாடலை மறந்து போகும் காலம் வரும் போது சொல்லி வைத்தாற்போல் யாராவது அந்தப் பாடலைப் பற்றி என்னிடம் பேசுவார்கள். திரைக்கதை குறித்த அறிவும், ஆர்வமும் கொண்ட திரைக்கதையாசிரியரும், திரைக்கதை மற்றும் திரையிசை குறித்து புத்தகங்கள் எழுதியிருக்கிறவருமான சகோதரர் ‘கருந்தேள்’ ராஜேஷும், நானும் பரஸ்பரம் எழுத்து மூலமாக அறிமுகம் ஆனவர்கள். அவர் எழுதும் விதத்தைப் பார்த்த போது நிச்சயமாக இவர் ஓர் அறிவுஜீவிதான் என்ற அச்சம் எனக்கிருந்தது. நேரில் பார்த்த மாத்திரத்தில் அச்சம் ஊர்ஜிதமானது. அவரது உயரமும், திரண்ட புஜங்களும், வெறித்த பார்வையும் ‘’இந்தாளு வஸ்தாதேதான்யா’ என்று முதலில் மிரள வைத்தது. பேசத்துவங்கிய பிறகு வளர்ந்த அந்தக் ‘குழந்தைப்பையன்’ தேளல்ல, தேன் என்பது புரிந்தது. சந்தித்த சில தினங்களில் ராஜேஷிடமிருந்து ஒரு நீண்ட குறுஞ்செய்தி வந்தது. ‘தேவனின் கோயில்’ பாடல் மற்றும் கட்டுரை குறித்து கிட்டத்தட்ட புலம்பியிருந்தார். இறுதியில் இப்படி சொல்லியிருந்தார். ‘இந்தப் பாட்டு கேக்கும் போதெல்லாம் உங்க தோளில் சாய்ந்து அழணும்னு தோணுது’. என் தோளை நினைத்துக் கவலை கொண்டாலும் அவரது உணர்வைப் புரிந்து கொள்ள முடிந்தது. தன் வாழ்வோடு கலந்த பாடல் என்று தேவனின் கோயிலைச் சொல்லியிருந்தார், ராஜேஷ்.

ஜான் சுந்தர் எழுதிய ‘நகலிசைக் கலைஞன்’ புத்தக அறிமுக விழாவில் பார்வையாளனாக கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். பாடகர் ஏ.வி.ரமணன், இசை விமர்சகர் ஷாஜி, கவிஞர் மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் கலந்து கொண்ட அந்நிகழ்வில் பத்திரிக்கையாளர் கவின்மலர் ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ பாடலை அற்புதமாகப் பாடினார். இறுதியில் ஏற்புரை ஆற்ற அழைக்கப்பட்ட ஜான்சுந்தர் எடுத்த எடுப்பிலேயே தேவனின் கோயில் பாடலின் இடையிசையில் வரும் இளையராஜாவின் குரலில் ‘ஏய்ய்ய் … ஏஹேய் . . .

தந்தனா தந்தனா தந்தனா

ஆஆ . . .

தந்தானாத் தனனானத்தானன்னா

அஅஅஅ ஆ
தந்தானா தந்தானா . . . ஹேய் . . .

’ என்று பாடிவிட்டு சொன்னார். ‘எங்கோ கோயில் திருவிழா ஒலிபெருக்கியில் கேட்ட இந்தக் குரல் வழியே ஒரு கரம் நீண்டு என்னை அழைத்தது. நகலிசைக் கலைஞனாக நான் மாறியது அந்தக் கரம் நீட்டிய திசை நோக்கித்தான். ஆனால் நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது சுகா அண்ணனின் கரத்தை’. அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல் ‘இந்தப் பயலுக சகவாசமே இதுக்குத்தான்பா வச்சுக்கவே கூடாது’ என்று எழுந்து ஓடி வந்துவிட்டேன். 

‘தேவனின் கோயில்’ கட்டுரையின் துவக்கத்தில் அந்தப் பாடலை மதுரையின் ஏதோ ஒரு பகுதியிலுள்ள ஆசிரியை ஒருவர் பாடிய காணொளியைப் பார்க்க நேர்ந்ததைப் பற்றி எழுதியிருப்பேன். சொல்லப் போனால் அது குறித்த கட்டுரை எழுதத் தூண்டியதே அக் காணொளிதான். கட்டுரை எழுதிய சமயத்தில் அதை எங்கோ தொலைத்து _விட்டேன். தேவனின் கோயில் கட்டுரை காணொளி இல்லாமல்தான் இணையத்தில் வெளியானது. நான்கு தினங்களுக்கு முன் தற்செயலாகக் கிடைத்த அக்காணொளி மீண்டும் மீண்டும் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வைத்தது. தன்னை மறந்து சிறு தயக்கத்துடன் பாடத்துவங்குகிற அந்த ஆசிரியை சில நொடிகளில் பாடலுக்குள் மூழ்கி வெகுதூரம் செல்கிறார்.  மனதிலிருந்துப் பாடுகிற பாசாங்கில்லாத குரல். மீண்டும் தேவனின் கோயிலுக்குள் சென்றது மனது. ஒரு வழியாக அதிலிருந்து மீண்டிருந்த நேற்றைய காலைப் பொழுதில் ஊட்டியிலிருந்து அழைத்தார் நண்பர் மணி எம்.கே. மணி. 

‘என்ன மணி? கிளைமேட் எப்படி இருக்கு?’

‘அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. கோயம்புத்தூர்லேருந்து சாம்ஸன் தான் எங்களை ஊட்டிக்குக் கார்ல கூட்டிக்கிட்டு வந்தாரு.’

‘அட! நான் கோயம்புத்தூருக்குப் போனா சாம்ஸன் தான் பிக் அப் பண்ண வருவார். நல்லா இருக்காரா?

‘ம்ம்ம். ராத்திரி பூரா விடிய விடிய இளையராஜாதான். கூடவே உங்களைப் பத்தியும்தான் பேச்சு. அந்த ஹேங்க் ஓவர் தீந்தபிறகுதான் உங்களுக்குப் பேசணும்னு வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன். இல்லேன்னா நேத்தே கூப்பீட்டிருப்பேன்.’

‘ராத்திரி பூரா அவர் பாட்டு கேக்கறதும், அதைப் பத்திப் பேசறதும் எப்பவும் நாம பண்றதுதானே, மணி?’

‘அட அது இல்லீங்க. நாங்க பேசிக்கிட்டிருந்தது, உங்களோட ‘தேவனின் கோயில்’ பத்தி’.

மேற்கொண்டு மணியிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. ‘சரி மணி. சென்னை வந்ததும் கூப்பிடுங்க’ என்று ஃபோனை வைத்து விட்டேன்.

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் ஜான் சுந்தர் ஒரு கவிதையை அனுப்பி வைத்தார். 

தேவனின் கோவில்

மூடிய நேரம்

நானென்ன கேட்பேன்

தெய்வமே

எங்கேயும் செருகலாம்

பிடுங்கலாம்

ஒண்டிக்கட்டையை

தற்கொலை

இரங்கல் கூட்டம்

விவாகரத்து

எல்லாமே

விளையாட்டு

பேரானந்தம்

அதற்கு

என்ன இப்படிப் பண்றீங்க

டாக்டர் குரலுக்கும்

அவ்வளவு குதூகலம்

உனக்கென்ன

குடும்பமா

குழந்தையா

எனும்போது மட்டும்

ஏய்ய்ய் … ஏஹேய் . . .

தந்தனா தந்தனா தந்தனா

ஆஆ . . .

தந்தானாத் தனனானத்தானன்னா

அஅஅஅ ஆ
தந்தானா தந்தானா . . . ஹேய் . . .

கடந்த சில தினங்களுக்கு முன் காலமான கவிஞர் ‘தக்கை’ பாபுவின் கடைசிக் கவிதையாம், இது. அட போங்கப்பா!


நான்காவது புத்தகம் . . .

image‘அந்திமழை’ ஜூன் இதழில் கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன், கலாப்ரியா, ஜெயமோகன், சுகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, கோணங்கி போன்ற எழுத்தாளர்கள் தங்களின் முதல் புத்தகம் வெளிவர அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், அனுபவித்த இன்னல்களையும் சொல்லியிருக்கிறார்கள். படிக்கப் படிக்க ஆச்சரியமாகவும், சங்கடமாகவும் இருந்தது. இவை எதுவுமே எனக்கு ஏற்படவில்லை. ‘வார்த்தை’ சிற்றிதழில் எனது ஆரம்பகால கட்டுரைகள் வெளிவந்தன. பின் அந்தக் கட்டுரைகளை கோவையிலிருந்து வெளிவந்த ‘ரசனை’ இதழில் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா பிரசுரித்து வந்தார். பின்னர் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவக்கப்பட்ட போது, அதன் முதல் இதழிலிருந்துத் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். திடீரென்று ஒருநாள் ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிலிருந்த தம்பி சேதுபதி அருணாசலம் அழைத்தார். ‘ஒங்க கட்டுரைகளையெல்லாம் புத்தகமா போடலாம்னு இருக்கோம். அதுக்காகவே ஒரு பதிப்பகம் துவக்கறதாவும் உத்தேசம்’ என்றார். ‘சரி’ என்றதோடு என் வேலை முடிந்தது. ஒரு மாதத்துக்குள்ளாக ‘தாயார் சன்னதி’ புத்தகத்தைக் கொணர்ந்து என் கையில் கொடுத்தார், நண்பர் ‘நட்பாஸ்’ என்னும் பாஸ்கர். தமது முதல் புத்தகம் வெளிவருவதற்காக தாங்கள் பட்ட பாட்டை மூத்த எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருப்பதைப் படித்த இந்த வேளையில் எனது முதல் புத்தகம் வெளிவந்த விதத்தை இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அத்தனை பிரியமாக என்னிடம் புத்தகம் போடுவதற்கான அனுமதியைக் கேட்ட சேதுபதி அருணாசலம், அதற்கு சம்மதம் தெரிவித்த ரவிசங்கர், வ. ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழு, புத்தக உருவாக்கத்தில் உழைத்த ஹரன் பிரசன்னா, தான் எழுதிய எழுத்துக்களிலேயே சிறந்ததாகக் கருதுவதாக ‘தாயார் சன்னதி’க்கான அணிந்துரையைக் குறிப்பிட்ட மரியாதைக்குரிய ‘அண்ணாச்சி’ வண்ணதாசன், இவர்கள் இல்லையேல் ‘தாயார் சன்னதி’ இல்லை. எனது இரண்டாவது புத்தகமான ‘மூங்கில் மூச்சு’, ஆலமரமான ‘ஆனந்த விகடன்’ வெளியிட்டு பரவலான வாசகர் வட்டத்துக்கு இட்டுச் சென்றது. மூன்றாம் புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளிவந்ததில் என்னுடைய பங்கு எதுவுமே இல்லை.  ‘வம்சி’ பதிப்பகத்தின் சார்பாக தோழி ஷைலஜா அழைத்து பேசினார். அதற்கு முன் அவர் எனக்கு அறிமுகமே இல்லை. நான் சம்மதம் தெரிவித்து கட்டுரைகளை அனுப்பினேன். அவ்வளவே. அழகான ஓர் அணிந்துரையை நண்பர் செழியன் எழுதிக் கொடுத்தார். இப்போது எனது நான்காவது புத்தகமும் எனக்கு எந்த சிரமமும் கொடுக்காமல் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் வெளிவர இருக்கிறது. முந்தைய புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளியாகி மூன்றாண்டுகள் ஆகின்றன. அடுத்த புத்தகம் குறித்த எந்த யோசனையும் இல்லாமல் இருந்த என்னிடம் வழக்கம் போல ஒரு தொலைபேசி அழைப்புதான் இந்தப் புத்தகத்தைப் பற்றிய விருப்பத்தைச் சொன்னது. அழைத்தவர் அத்தனை பிரியமானவர். உடனே ‘சரி’ என்றேன்.

அழைத்தவர், ‘ஹரன் பிரசன்னா’.
பதிப்பகம், ‘தடம்’.(விகடன் அல்ல)

புத்தகத்தின் தலைப்பு, ‘உபசாரம்’.
அணிந்துரை எழுதியிருப்பவர், ‘ஜெயமோகன்’.

சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘தாயார் சன்னதி’

சென்ற புத்தகக் கண்காட்சியில் ‘சொல்வனம்’ பதிப்பகம் வெளியிட்ட ‘தாயார் சன்னதி’யின் இரண்டாம் பதிப்பு, நாளை (5.1.2012) துவங்க இருக்கிற சென்னை புத்தகக் கண்காட்சியில், கிழக்கு ஸ்டாலில் (F-7)கிடைக்கும்.

இணையத்தில் வாங்க https://www.nhm.in/shop/100-00-0000-192-5.html

க்ளோ

நண்பர் சீமானின் வீடு ஒரு சேவற்கூடாரம். பத்திலிருந்து இருபது சேவல்கள் வரை உண்டு. ஒரு கம்யூன் வாழ்க்கை வாழ்ந்து வருகிற கூட்டம். உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், சின்ன நடிகர்கள் . . இப்படி நிறைய நண்பர்கள் அங்கு ஒரு குடும்பமாக உள்ளனர். யார்யாருக்கு வேலை கிடைக்கிறதோ, அவர்கள் செலவைப் பார்த்துக் கொள்ள, மற்றவர்கள் சாமான்கள் வாங்க, ஒரு சிலர் சமைக்க, எல்லோரும் சாப்பிடுவார்கள். யாருக்கும், யாரோடும் வருத்தமோ, கோபமோ வருவது இல்லை. எங்கோ பிறந்து, எங்கெங்கோ வளர்ந்து அங்கு வாழும் சகோதரர்கள் ஒருவருக்கொருவரை முறை சொல்லி அழைத்துக் கொள்வதைப் பார்ப்பதே அழகு. மாமா, மருமகன், அத்தான், மைத்துனன், சித்தப்பா, மகன், அண்ணன், தம்பி இப்படி பல. எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். சமையல் வேலைகள் சதா நடந்து கொண்டே இருக்கும். யாராவது ஒருவர் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருப்பதை நான் அங்கு போகும் போதெல்லாம் தவறாமல் பார்த்திருக்கிறேன். எப்படியும் ஒருவர் சவரம் செய்து கொண்டிருப்பார். ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பார். ஒருவர் ராஜ் டிஜிட்டல் பிளஸ்ஸில் பழைய பாடாவதிப் படமொன்றை உணர்ச்சி பொங்கப் பார்த்துக் கொண்டிருப்பார். மற்றொருவர் சத்தமாக தினத்தந்தி படித்துக் கொண்டிருப்பார். படிக்கும் ஒவ்வொரு செய்திக்கும் தனது கமெண்ட்டுடன். உ.தா. என்னைப் பார்த்து மற்ற கட்சிகள் பயப்படுகின்றன – விஜயகாந்த். பயப்படுவாஞ்ஞல்ல . . . முதுகில் குத்திய தேவகெளடா – எடியூரப்பா. குத்தத்தான் செய்வென் . . . இப்படி மதுரைத் தமிழில். வயதில் மூத்த ஒரு சிலர் அந்த வீட்டில் இருந்தாலும் குடும்பத் தலைவர் என்னவோ சீமான்தான்.

ஒரு நாள் காலையில் நண்பர் சீமானை செல்பேசியில் அழைத்தேன். பதிலில்லை. உடனே அவரது இல்லத் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டேன். எதிர்முனையில் ஒரு குரல், ‘க்ளோ’ என்றது. அராஜகம் இல்லையா? நான் ஒருவன்தான் சீமானை அராஜகம் என்றழைப்பேன் என்பது அங்குள்ள எல்லோருக்கும் தெரியுமென்பதால், எதிர்முனைக் குரல் என்னை அடையாளம் கண்டுகொண்டு, ‘அண்ணே, வணக்கமுண்ணே . . நான் ஜிந்தா பேசுறேன்னே. அண்ணன் குளிக்கிறாருண்ணே என்றது. சரி, நான் வற்ரேன்னு சொல்லு. போனை வைத்த பின் எனக்கு யோசனை. இவன் போனை எடுத்து என்னவோ வினோதமாகச் சொன்னானே. சரி, அப்புறமாகக் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

மற்றோர் நாள் சீமான், மற்றும் சில நண்பர்களுடன் நானும் அமர்ந்து அவர் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி மணி ஒலித்தது. ஜிந்தா போய் போனை எடுத்து ‘க்ளோ’ என்றான். அடடே, இப்படித்தான் அன்றைக்கு நம்மிடமும் சொன்னானா? ஏன் இப்படி உச்சரிக்கிறான்? என்று நண்பர்களிடம் கேட்க நினைத்து, அதை அங்குள்ள யாருமே கவனிக்காமல் இருக்க, சரி அவங்க ஊரில் ஹலோவுக்கு பதில் க்ளோதான் போல என்று சும்மா இருந்து விட்டேன். இனி அந்தத் தொலைபேசி உரையாடல்.

க்ளோ . . .யாருங்க . . கிருஷ்ணமூர்த்தியா . . . ? ஒரு நிமிசம் . . . .சுற்றி எங்கள் எல்லோரையும் பார்த்தான். எங்கள் யார் முகத்திலாவது கிருஷ்ணமூர்த்தி தெரிகிறாரா என்று . அங்கு கிருஷ்ணமூர்த்தி என்கிற பெயரில் யாருமே இல்லை என்பது எனக்கே தெரியும்.அப்படி யாரும் இல்லீங்களே.ஓ . . .அப்பிடீங்களா . . .என்னங்க . . . இன்னொரு தடவ சொல்லுங்க .. .
சீமான் பொறுமை இழக்க ஆரம்பித்தார்.

ஜிந்தா விடுவதாக இல்லை. சத்தமாக,நீங்க என்ன நம்பர் போட்டிங்க ?ரெண்டு மூணு ஏளு ஆறு ஆறு எட்டு மூணு சைபரா? அடடா , இது ரெண்டு மூணு ஏளு ஆறு ஆறு எட்டு ரெண்டு சைபராச்சே?

ராங்நம்பர்ன்னு சொல்லேன்டா, சீமான் கத்தினார். பவ்யமாகத் திரும்பி, அதாண்ணே சொல்லிக்கிட்டு இருக்கேன், என்றான் ஜிந்தா.தலையைக் குறி வைத்துப் பறந்து வந்த வஸ்துவுக்கு லாவகமாகக் குனிந்து சமாளித்து போனை வைத்து விட்டு வந்த ஜிந்தாவுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டது. இனி நீ போனை எடுத்தால், தென்னை மரத்தில் கட்டி வைத்து உதைப்போம். உதைப்பார்கள். நான் கண்கூடாகப் பார்த்து மிரண்டிருக்கிறேன்.

ஜிந்தாவின் உண்மையான பெயர் கணேசனோ, ரவியோ, குமாரோ. சினிமாவில் நடிப்பதற்காக அவனாக வைத்துக் கொண்ட பெயர்தான் ஜிந்தா. மதுரைக்காரன். கருத்த முரட்டு உடல். முறுக்கிய மீசை. கையில், காதில் வகை வகையாய் ஏதேதோ வளையங்கள். கொஞ்சம் காது மந்தம். அதற்கு ஒரு பின்னணிக் கதையுண்டு. ஊரில் த.மு.எ.ச., மற்றும் பல கலை குழுக்களுடன் சேர்ந்து நாடகங்களில் நடித்து வந்த அனுபவம் உண்டு ஜிந்தாவுக்கு. அப்படி ஒரு நாடகத்தில் போராட்டம் நடத்தும் விவசாயக் கூட்டத்தில் ஜிந்தாவும் ஒருவன். போராட்டக்களம், போர்க்களமாகிறது. போலீஸ் வந்து கண்ணீர்ப் புகை குண்டுகளை எறிகிறார்கள். பதிலுக்கு போராட்டக்காரர்களும் வெடிகுண்டுகளை எறிய, இருபுறமும் உயிர்ச்சேதம். செத்து விழும் போராட்டக்காரர்களில் ஜிந்தாவும் ஒருவன். இறந்து கிடக்கும் ஜிந்தாவின் காதருகில் வெடிக்காமல் புகைந்து கொண்டிருந்திருக்கிறது ஒரு வெடிகுண்டு. அசையாமல் பிணமாகக் கிடந்த ஜிந்தா, ஒரு கண்ணைத் திறந்து புகைந்து கொண்டிருந்த குண்டைப் பார்த்திருக்கிறான். ஆனாலும் தீராக்கலைவெறியில் பாத்திரமாகவே, அதாவது பிணமாகவே அசையாமல் கிடந்து, அது வெடிக்கும் வரை பொறுமைகாத்து பாதி கேட்கும் திறனை இழந்தான்.

ஒருமுறை ஊருக்குப் போய்விட்டு வீட்டுக்குள் நுழையும் ஜிந்தாவின் கையில் பையுடன் இருந்த இன்னொரு பொருளைப் பார்த்து ஒரு கணம் எல்லோருமே துணுக்குற்றிருக்கின்றனர். அவன் கையிலிருந்தது உறையிடப்பட்ட உண்மையான ஒரு நாதஸ்வரம். என்னடா இது ஜிந்தா? பஸ்ல வரும் போது ஒரு மேளக்காரங்கூட தகராறுண்ணே. க்காளி, என்ன சொல்லியும் அடங்க மாட்டேண்ணுட்டென். அதான் அடிச்சு இதை புடுங்கிட்டு வந்துட்டேன். அதோடு விட்டிருந்தால் அவன் ஜிந்தாவே இல்லை. ஒரு அதிகாலையில் அசந்துத் தூங்கிக் கொண்டிருக்கும் சீமான் குடும்பத்தினரின் காதுகளில் நிறைமாத கர்ப்பிணிப்பூனை ஒன்றின் பிரசவக்கதறலொலி கேட்க, தூக்கம் கலைந்த எரிச்சலோடு எழுந்து பார்த்திருக்கின்றனர். சத்தம் வந்த திசை, மொட்டை மாடியிலிருந்து. தூக்கக் கலக்கத்துடன் பூனைக்கு உதவும் நோக்கோடு மாடிக்குப் போன அவர்கள் கண்டது, ஜிந்தாவின் நாதஸ்வரச் சாதகக் காட்சி. பிறகென்ன. அந்த நாதஸ்வரத்தைப் பிடுங்கி, அதாலேயே . . . . . . .

ரொம்ப நாள் ஃபோனைத் தொடாமலேயே இருந்தான் ஜிந்தா. ஒரு நாள் நாங்கள் அனைவரும் சீமானின் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். தொலைபேசி மணியடித்தது. எடுறா ஜிந்தா என்றார் சீமான். வேண்டாண்ணே, தயங்கினான். எடுறான்னா. இன்னும் தயங்கினான். நான் உடனே சீமானிடம், ஏன் அராஜகம்? போனை எடுத்தா தென்னைமரத்துல கட்டி வச்சு அடிப்பேன்னா, அவன் எப்படி எடுப்பான் என்றேன். ஐயாமகனே . . அது சும்மா ஒரு கோபத்துல சொன்னது. ஜிந்தா நம்ம தம்பியில்லியா? அவன அடிப்போமா, சொல்லுங்க என்றார். மணியடிப்பது நின்றுவிட்டது. சீமான் தொடர்ந்தார். இப்பெல்லாம் தம்பி ஜிந்தா புத்திசாலியா ஆயிட்டானே! இல்லியாடா தம்பி! பெருமிதம் பொங்கும் முகத்துடன் அதை ஆமோதிக்கும் விதமாக மெல்ல சிரித்தபடி தலைகுனிந்தான் ஜிந்தா. மீண்டும் மணியடித்தது. உற்சாகத்துடன் சென்று போனை எடுத்த ஜிந்தா,

க்ளோ . . .

சீமான் அண்ணனா . . . .

இருக்கறாருங்க . . . .

நீங்க?

ஒரு நிமிசம் . .

கவனமாக மவுத்பீஸைப் பொத்திக் கொண்டு, பணிவுடன் சீமானிடம் •போனை நீட்டியபடியே ஜிந்தா சொன்னது,

அண்ணே, புருசோத்தமன்னு யாரோ ஒரு முஸ்லிம் பேசுறாருண்ணே.