திருநெல்விருந்து

திருநவேலியில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்ற சைவ உணவு ஜீவன்களுக்கு அதன் சமையல் சம்பிரதாயங்கள் குறித்து எதுவும் தெரியாது என்பதே உண்மை. இன்றளவும் எனக்குத் தெரிந்த சமையல், தோசை சுடுவது மட்டும்தான். அதுபோக குத்துமதிப்பாக காபி போடத் தெரியும். அந்தக் காப்பியை நான் மட்டுமே குடிப்பதால் அதன் சுவை, மணம், குணம் பற்றியும் நான் மட்டுமேதான் மெச்சிக் கொள்ள வேண்டும். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சைவ சமையல் பயிற்சி வீடியோக்களைப் பார்த்து ஒரே ஒரு முறை ‘பிஸிபேளாபாத் என்ற சாம்பார் சாதம்’ செய்து பார்த்தேன். கடையத்தில் உள்ள ஒரு மெஸ்ஸில் முன்பு எப்போதோ ஒரு முறை சாப்பிட்ட மிளகு ரசத்தின் சுவையுடன் இன்னும் கொஞ்சம் வத்தக்குழம்பு சுவையும் சேர்ந்து வேறேதோ ருசிபேளாபாத்தாக அது உருவானது. மேற்படி சமையல் பரிசோதனைக்குப் பிறகு இணையத்தில் சமையல் முறைகள் பார்ப்பதை நிறுத்திவிட்டு, சென்னையில் உள்ள சொற்ப சைவ உணவுக் கடைகளைத் தேடத் துவங்கி விட்டேன். இன்றுவரை தேடல் தொடர்கிறது. அபூர்வமாக என் நாக்குக்கேற்ற சைவக் கடைகள் சிக்குவதுண்டு. அவையுமே இரண்டாம், மூன்றாம் விஜயத்தில் மாமியார் வீட்டு விருந்தாக இளைத்து, களைத்து விடுவதுண்டு.

திருநவேலி சமையல் முறைகள் பற்றி யோசித்தாலே ஆழ்வார்குறிச்சியிலிருந்துதான் துவங்க வேண்டும். ‘ஆளாருச்சி தவுசுப்பிள்ள சமயல் விசேஷம்லா. நல்லது கெட்டதுன்னு எல்லாத்துலயும் ஆளாருச்சி சமயல அடிச்சுக்கிட முடியுமா?’ என்பார்கள். பிரம்மாவுக்கு போன ஜென்மத்தில் விண்ணப்பம் அனுப்பி, அவரும் கருணையுடன் எனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு ஆழ்வார்குறிச்சியில் என்னை ஜனிக்கச் செய்ததன் விளைவாக, தாய்ப்பாலுக்கு அடுத்ததாக நான் ருசித்தது ‘ஆளாருச்சி’ சமையலைத்தான். அம்மையைப் பெற்ற வீடு முழுக்க விவசாயி வாசனை அடிக்கும். தாத்தாவின் வயலிலிருந்து வந்து மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருக்கும் நெல் வாசனையும், பின் அது அவிக்கும் வாசனையுமாகத்தான் ஆழ்வார்குறிச்சி ஆச்சி வீட்டைப் பற்றிய என் மனபிம்பம் விரிகிறது. மதிய சாப்பாட்டுக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு பொட்டல்புதூருக்குப் போய் புத்தம் புதிதாக கத்திரிக்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், கொத்தவரங்காய், சீனிக்கிழங்கு, பலாக்காய்ப்பொடி, தடியங்காய்(மாண்புமிகு சென்னையில் அதன் பெயர் வெள்ளைப் பூசணி), இங்கிலீஷ் காய்கறிகளான பீன்ஸ், முட்டைக்கோஸ், (இதிலுள்ள முட்டையைக் கூட ஆச்சி சொல்ல மாட்டாள். கோஸ் என்பாள்), கேரட், பீட் ரூட் போன்றவற்றை ஒரு சாக்குப்பையில் போட்டு வாங்கி வருவார். வீட்டிலேயே முருங்கை மரம் இருந்ததால் பிஞ்சு காயாகப் பார்த்து, பறித்து சாம்பாரில் போடுவாள், ஆச்சி.

ஆழ்வார்குறிச்சி ஆச்சி வீட்டின் பின் பக்கம் அமைந்துள்ள அடுக்களையில் இரண்டு மண் அடுப்புகளிலும், புறவாசலையொட்டி அமைந்துள்ள மேலும் இரண்டு மண் அடுப்புகளிலும் சமையல் நடக்கும். சோறு, குழம்பு, கூட்டு, பொரியல் தனித்தனி அடுப்புகளில் தயாராகும். எல்லா அரவைகளும் கல்லுரலிலும், அம்மியிலும்தான். கடைசியாக அப்பளம், வடகம், மோர் மிளகாய், சீனியவரைக்காய் வத்தல், சுண்டைவத்தல் போன்றவை வறுக்கும் வாசனை வாசலுக்கு வந்து நம்மைச் சாப்பிட அழைக்கும்.

திருநவேலியில் அப்பா ஆச்சி வீட்டில் அநேகமாக மூன்று வேளைகளிலுமே அமாவாசை விரதச் சாப்பாடு போல வாழையிலையில்தான் சாப்பாடு. இட்லி, தோசையாக இருந்தாலும் இலைதான். நாளடைவில் இவை எல்லாமே மாறிப்போய் இப்போது கின்ணத்தில் ஸ்பூன் போட்டு இளைய தலைமுறையினர் சாப்பிடத் துவங்கி விட்டனர். சரி, ஆழ்வார்குறிச்சிக்கு செல்வோம். ஆழ்வார்குறிச்சியில் மதியச் சாப்பாடு மட்டும் வாழை இலையில். சைவ சம்பிரதாய பரிமாற்று முறையில் இலையின் இடது ஓரத்தலையில் வைக்கப்படும் உப்பு, இப்போது புழக்கத்தில் உள்ள மேஜை உப்பு அல்ல. கற்கண்டு சைஸில் இருக்கும் கல் உப்பு. இலையின் வலது கை கீழ்ப்பக்கத்தில் பருப்பு வைத்து அதில் உருக்கிய பசுநெய்யை ஊற்றுவாள் ஆச்சி. சோறு வைத்த பின் அதன் மேலும் நெய் ஊற்றுவாள். அது சாம்பாருக்கு. சின்ன வயதிலேயே நான் ருசியடிமையாகிப் போனதற்கு, ரசத்திலும் ஆச்சி ஊற்றும் நெய்யும் ஒரு காரணம். ‘நீரு பரவாயில்ல பேரப்பிள்ள. நம்ம அம்மையப்ப முதலியார் வீட்ல மோர்ச்சோத்துக்கே நெய்யக் கோரி ஊத்துவாங்க தெரியும்லா’ என்பார் சைலு தாத்தா.

திருநவேலியில் சைவ சாப்பாட்டுக்கென்று அரசாங்கத்தை மிஞ்சும் அளவுக்கு பல துறைகள் இயங்கின. அத்துறைகளில் ஆக்குபவர், உண்பவர் என எல்லோருமே அதிகாரிகள்தான். திருமண மறுவீடுகளில் கட்டாயமயமாக்கப்பட்ட சொதி உணவைப் பற்றிய சிந்தனை, மகளுக்கு, அல்லது மகனுக்கு வரன் பார்க்கத் துவங்கும் போதே இணைந்து கொள்ளும். ‘பத்தொம்பதாம் தேதியா? சரியா போச்சு. அன்னைக்குத்தான் வன்னிக்கோனேந்தல்ல என் மச்சினர் மகளுக்குக் கல்யாணம். நான் மறுவீட்டுக்கு வந்திருதென்’ என்று சாக்கு சொல்வது, சொதியைக் குறி வைத்துத்தான். சொதிக்கு நல்ல தேங்காயாக வாங்குவது குறித்து ஆளாளுக்கு ஓர் அபிப்ராயம் இருக்கும்.

‘நாராயணன் கடைலயே வாங்குங்கடே. எம் ஜி ஆர் ரசிகம்லா. ஏமாத்த மாட்டான். போன மட்டம் நான் சொல்லச் சொல்லக் கேக்காம முத்தையா மாமா கடைல வாங்குனிய. பாதி தேங்கா அவாள மாரியே முத்தலு’.

‘ஒங்க சித்தப்பா ஏன் முத்தையா தாத்தா கட தேங்கா வேண்டாங்கான் தெரியுதா? அவாள் சின்ன மகள இவனுக்கு பொண்ணு கேட்டு குடுக்கல. அந்தப் பிள்ளையோட நல்ல நேரம் தப்பிச்சுட்டு. வருசம் இருவதாச்சு. இன்னும் அந்த கோவத்துல கொற சொல்லுதான்.’

திருநவேலி சைவ சப்பாட்டு வகைகளில் பிரதானமான சொதி சாப்பாடு அப்படி ஒன்றும் நிறைய வகைகள் உள்ள விசேஷமானது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சொதிக்காக எடுக்கிற தேங்காய்ப்பால் மட்டும்தான் சுணக்கமான வேலை. மற்றபடி தொட்டுக் கொள்ள, இஞ்சிப் பச்சடி, உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ், தேவைப்பட்டால் கொஞ்சம் ரசம், வத்தக்குழம்பு, பிறகு கடைசியாக மோர் என அத்தோடு முடிந்தது கச்சேரி. இதில் தேவைப்பட்டால் ரசம், வத்தக்குழம்பு என்பது அநேகருக்குத் தேவையே படாது. ஏனென்றால் வளைத்து வளைத்து ‘முக்கா முக்கா மூணு ஆட்டை’ சொதியையே வாங்கி வாங்கிச் சாப்பிடுவார்கள். விசேஷ வீடுகளில் அல்லாமல் வீட்டில் செய்து சாப்பிட என்று சில பிரத்தியேகமான சைவ உணவு வகைகளும் திருநவேலியில் உள்ளன. கதம்ப சோறு என்று பல ஊர்களில் சொல்லப்படுகிற கூட்டாஞ்சோறு அவற்றில் ஒன்று. கூட்டாஞ்சோறு போக இன்னும் முக்கியமானது உளுந்தம் பருப்பு சோறு. உளுந்து என்றால் வெள்ளை உளுந்து அல்ல. கருப்பு உளுந்து. ‘கலர் கலர் ஸேம் கலர்’ என நிற ஒற்றுமை காரணமாகவும் எனக்கு மிகவும் பிடித்த உணவு, அது. பொதுவாக உளுந்து சம்பந்தப்பட்ட உணவு வகைகளை வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு செய்து கொடுப்பார்கள். அவர்கள் புண்ணியத்தில் வயதுக்கு வந்த ஆண்பிள்ளைகளுக்கும் அது கிடைக்கும். குறிப்பாக உளுந்தங்களி. உளுந்தும், கருப்பட்டியும் கலந்து, சுடச் சுடக் கிண்டி, கருப்பாக உருட்டி, அதில் குழி ஆக்கி நல்லெண்ணெயை ஊற்றி சாப்பிடக் கொடுப்பார்கள். சப்பு கொட்டி, கண்ணை மூடி அதை சுவைக்கும் போது தேவலோகத்தின் முதல் இரண்டு வாசற்படிகள் தெரியும். இன்னும் இரண்டு உருண்டைகளை முழுங்கினால் மூன்றாம் படியில் மயங்கிக் கிடப்போம். பொதுவாக புதன், சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, மதிய உணவுக்கு உளுந்தப்பருப்பு சோறு சாப்பிடுவது, திருநவேலி வழக்கம். சோற்றில் பிசைந்து சாப்பிட எள்ளுத் தொவையல். அதன் மேல் கட்டாயமாக நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். தொட்டுக் கொள்ள சில வீடுகளில் அவியல், சில வீடுகளில் வெண்டைக்காய் பச்சடி. இன்னும் சில வீடுகளில் கத்திரிக்காய் கொத்சு. பொரித்த அப்பளம், வடகம் கண்டிப்பாக உண்டு.

சென்னையில் சில ஹோட்டல்களில் சொதி கிடைக்கிறது. என் மனநாக்கில் உள்ள சொதியின் சுவை இல்லை. உளுந்தம்பருப்பு சோற்றுக்கு வழி இருக்கிறது. என் பள்ளித்தோழன் பகவதியின் மனைவி, மற்றுமொரு பள்ளித்தோழன் ‘தளவாய்’ ராமலிங்கத்தின் மனைவி இருவரும் ‘ஒரு நாள் வீட்டுக்கு வாங்கண்ணே. உளுந்தம்பருப்பு சோறும், எள்ளுத்தொவையலும் அரைச்சு வைக்கென்’ என்றழைக்கிறார்கள். அந்த சகோதரிகளில் ஒருத்திக்கு என் ஆழ்வார்குறிச்சி ஆச்சியின் குரல். இன்னொருத்திக்கு என் அம்மையின் குரல்.

நன்றி: விஜயபாரதம்

புகைப்பட உதவி: தினமலர், நெல்லை

மாஸ்டர் மோகன் . . .

‘எத்தைநாம் செய்தாலும்
பித்தம் தெளியாது
இத்தரை வாழ்வின் இயல்பது’.

இந்த வரிகளும் மோகன் அவர்கள் எழுதியவைதான். அவர் எழுதிய நகைச்சுவை வசனங்களை மட்டும் நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம். எனக்கு மோகன் என்னும் மனிதரை இழந்ததுதான் பேரிழப்பாக உள்ளது. எந்தவிதத்திலும் பிறத்தியார் மனதைப் புண்படுத்திவிடாத, எல்லோரையும் மதித்த, எப்போதும் சந்தோஷமாக இருக்க முடிந்த, உடலுக்கு வந்த மூப்பை மனதுக்குள் புகுந்து விடாமல் பார்த்துக் கொண்ட மோகனைப் போன்ற சிறுவனை இனி என் வாழ்வில் எங்காவது காண முடியுமா என்பது சந்தேகம்தான். இந்த இடத்தில் இளைஞன் என்று சொல்லாமல் நான் சிறுவன் என்று சொல்வதுதான் பொருத்தமான ஒன்று. ஏனென்றால் ஓர் இளைஞனுக்கு அந்த பருவத்தில் இயல்பாக இருக்கிற லாவகம், தன்முனைப்பு, தோரணை இவை எதையுமே மோகன் அவர்களிடம் நான் கண்டதில்லை. பள்ளி பேட்ஜ் அணிந்த வெள்ளை சட்டையும், நீல நிற டிரவுசரும், நீள சாக்ஸும், ஷூவும் அணிந்து, முதுகுப் பையுடன் அவர் காட்சியளிக்கவில்லையே தவிர, என் கண்களுக்கு அவர் எப்போதும் பள்ளிச் சிறுவனாகத்தான் தெரிந்தார். பார்த்த சினிமா, படித்த புத்தகம், ருசித்த உணவு, பழகிய மனிதர்கள் என எதைப் பற்றியும் ஒரு சிறுவனுக்குரிய பிரமிப்பு விலகாத அதீதச்சுவையுடன் தான் அவரால் விவரிக்க முடியும். வேடிக்கையாக அவரிடம் சொல்வதுண்டு. ‘நீங்க மிஸ்டர் மோகன் இல்ல ஸார். மாஸ்டர் மோகன். காமெடிக்கு மாஸ்டர்னும் சொல்லலாம். சின்னப்பையன்கற அர்த்தத்துலயும் சொல்லலாம்.’

திருநெல்வேலிக்குச் சென்று வந்த பின் ஒரு நாள் அழைத்தார்.

‘திருநவேலில நம்ம சுந்தரம் கொண்டாந்து குடுத்த தயிர்சாதத்துக்கு இன்னொரு பேர் தேவாமிர்தம். ஆகா! இன்னும் நாக்குலயும், நெஞ்சிலேயும் இனிக்கறது.’

‘திருநவேலி பாத்தேளா. அதான் சுந்தரம் அண்ணன் கொஞ்சம் அல்வாவ தயிர்சாதத்துலக் கலந்து குடுத்திருப்பாரு!’

‘ஐயோ சுகா! அபாரம். திருநவேலின்ன ஒடனே வெல்லக்கட்டியா இனிக்கறதே உங்க கமெண்ட்டு?’

இதுபோன்ற எண்ணற்ற சம்பாஷனைகளைச் சுமந்தபடிதான் மோகன் அவர்கள் மறைந்த தினத்தன்று அவரது உடலைப் பார்க்க இயலாமல் தவி(ர்)த்துக் கொண்டிருந்தேன்.

இனிப்புக்கும், அவருக்குமான உறவு அபாரமானது. இனிப்பின் மேல் அத்தனை பிரியம். ஒருமுறை கமல் அண்ணாச்சியின் இல்லத்தில் விருந்து. சைவப்பட்சிகளான நாங்கள் தனித்து விடப்பட்டோம். அவ்வப்போது கமல் அண்ணாச்சி வந்து எங்களுடன் கேலியாகப் பேசி உற்சாகப்படுத்தி விட்டு செல்வார். மௌலி அவர்களும் அன்றைய விருந்தில் உண்டு. உணவு நிறைந்த பின், ‘ஸ்வீட் ஏதும் இருக்கா சுகா?’ என்றார், மோகன். ‘தெரியலியே ஸார்’ என்றேன். ‘சரி. ஏழைக்கேத்த வெத்தல சீவலைப் போட்டுக்க வேண்டியதுதான்’ என்று தன் வெற்றிலைப் பையைத் திறந்தார். கமல் அண்ணாச்சியை அழைத்தேன். ‘இனிப்பு கேக்கறாரு. ஏதும் இருக்கா?’ என்றேன். மோகன் அவர்களும் அதை ஆமோதித்து, ‘பிரமாதமா சாப்பாடு போட்டேள். டெஸெர்ட் கிஸர்ட் ஏதாவது . . .’ என்றார். ‘ஒரு நிமிஷம்’ என்று சொல்லி விட்டுச் சென்ற கமல் அண்ணாச்சி ஒரு கோப்பை நிறைய கரும் சாந்து போன்ற வஸ்துவைக் குழைத்து எடுத்து வந்து மோகனிடம் நீட்டினார். ‘பிளாக் சாக்லேட். நம்ம தயாரிப்பு’. என்னை விட கருப்பாக இருந்த அந்த சாக்லெட்டை விட்டு சில அடிகள் நகர்ந்து பாதுகாப்பான பகுதியில் நான் நின்று கொண்டேன். சுவைப்பதற்கு முன்பே ‘அடடே அற்புதம் ஸார்’ என்றபடி மோகன் ஸ்பூனால் அந்தக் கோப்பையிலிருப்பதை வழித்து வாயில் போடவும் அவரது முகம் அஷ்டகோணலாக மாறியது. மெல்லவும் முடியாமல், முழுங்கவும் இயலாமல் தவித்தபடி, ஒரு பெரும் போராட்டத்துக்குப் பின் அதை தொண்டைக்குள் இறக்கி விட்டு, ‘என்ன ஸார் இப்படி பண்ணிட்டேள்? வீட்டுக்குக் கூப்பிட்டு நன்னா விதம் விதமா வாய்க்கு ருசியா சாப்பாடு போட்டு, கடைசில அதையெல்லாம் மறக்கடிக்கிறா மாதிரி இப்படி ஒரு உலகக்கசப்பைக் குடுத்துட்டேளே!’ மோகனின் முகபாவத்தையும், கசப்பு தந்த விரக்தி சொற்களையும் கேட்டு அனைவரும் சிரித்து உருள, பொங்கி வந்த சிரிப்பை சமாளிக்க முடியாமல் கௌதமி வயிற்றைப் பிடித்தபடி தரையில் உட்கார்ந்து விட்டார். இந்த சம்பவம் நீண்ட நாட்களுக்குப் பேசிப் பேசி சிரிக்கப்பட்டது. மோகன் அவர்கள் என்னிடம் ஃபோனில் கேட்பார்.

‘சுகா! இன்னிக்குத்தானே கமல் ஸார் வீட்டு விருந்து? நீங்க வரேள்தானே? நாம எத்தனை மணிக்கு வந்தா சரியா இருக்கும்?’

‘ஆமா ஸார். கொஞ்சம் சீக்கிரமாவே வந்திருங்க. டார்க் சாக்லேட்டோட வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காராம்’.

‘எனக்கு இன்னிக்கு டிராமா இருக்கே.’

‘ஸார்! சும்மா சொல்லாதீங்க. உங்களுக்கு இன்னிக்கு டிராமா இல்லேன்னு தெரியும்’.

‘எங்க டிராமா இல்ல ஸார். ‘ரவா கேசரி’ன்னு வேற ஒரு ட்ரூப்போட டிராமா பாக்கப் போறேன். நீங்க டார்க் சாக்லேட்ட எஞ்சாய் பண்ணுங்கோ.’

புகழ் பெற்ற அவருடைய நகைச்சுவை வசனங்களை அவர் யோசித்து எழுதுவதில்லை என்பது அவருடன் பழகியவர்கள் அறிவார்கள். அந்த சமயத்தில் அவருக்குத் தோன்றுவதுதான். மண்டையை உடைத்துக் கொண்டு அவர் மெனக்கிடுவதே இல்லை. அதற்கான தேவையும் அவரது கற்பனாசக்திக்கு இருந்ததில்லை. கடகடவென சொல்லுவார். மளமளவென எழுதித் தள்ளிவிடுவார். அவரது மனதின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவரது வலது கை திணறும். அதனால் அவரது எழுத்து அவருக்கே சமயங்களில் புரியாமல் போய் விடும். எழுதியதை வாசித்துக் கொண்டே வருபவர், ஒரு இடத்தில் நிறுத்தி கண்களைச் சுருக்கி, ‘என்ன எழவுடா இது?’ என்பார். ‘சதிலீலாவதி’ சமயத்தில் அவரது எழுத்தைப் படிக்க பலமுறை நான் உதவியிருக்கிறேன். எனக்கு அப்போது அவரது மன எழுத்து நன்றாகப் பிடிபட்டிருந்ததனால் அவரது கிறுக்கலான கையெழுத்தைப் படித்துத் தெரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கவில்லை.

என்னைப் போலவே மோகனும் தீவிரமான ஜெயகாந்தனின் வாசகர். அநேகமாக எங்களின் எல்லா உரையாடல்களிலும் ஜேகே இடம் பெற்று விடுவார். ஏதாவது ஒரு கதையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை, வரியைச் சொல்வேன்.

‘பாரீஸுக்குப் போ’ முன்னுரைல ஜே கே இப்படி சொல்றார் ஸார். “இலக்கியத்தில் வெற்றி என்பது உங்களது புகழ்ச்சி அல்ல; எனது அகம்பாவமும் அல்ல. உங்களை வெல்வது ஒரு வெற்றியே அல்ல . . . சில சமயங்களில் அதுவே ஒரு வீழ்ச்சி”.

‘ஃபோனை வைங்கோ ஸார்’ என்பார். அதீத உணர்ச்சியின் வெளிப்பாடுதான் அது. மறுநாள் ஃபோன் பண்ணி அந்த வரிகளைத் திரும்பவும் சொல்லச் சொல்லிக் கேட்பார். ‘ஜேகே கூடல்லாம் நான் பேசியிருக்கேனே ஸார்! வேறென்ன ஸார் வேணும் எனக்கு?’ என்பார்.

மௌலி அவர்களின் தகப்பனார் பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் நினைவுநாள் நிகழ்ச்சி ஒன்றை அவரது குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பேசுவதற்காக பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் சென்ற போது என்னையும் உடன் அழைத்துச் சென்றார். பேராசிரியர் மேடைக்குச் சென்று விட, மௌலி அவர்கள் என்னை கை பிடித்து அழைத்துச் சென்று முன் வரிசையில் அமர வைத்தார். அருகில் பெரியவர் நீலு அமர்ந்திருந்தார். வழக்கமான சபைக் கூச்சத்துடன் அங்கிங்குப் பார்க்காமல் அமர்ந்திருக்கும் போது சற்று நேரத்தில் ‘ஐயையோ சுகாவா? இப்பதான் பாக்கறேன்.’ என்றொரு குரல். நீலுவுக்கு அடுத்த இருக்கையில் மோகன் அமர்ந்திருப்பதை அப்போதுதான் கவனித்தேன். நீலு அவர்களிடம், ‘ஸார். நான் சொன்னேனே சுகா. இவர்தான்’ என்று அறிமுகம் செய்தார். பரஸ்பர வணக்கம் சொல்லிக் கொண்டபின் மேற்கொண்டு சகஜமாக அங்கு அமர்ந்திருக்க முடியாத சூழலை உருவாக்கும் விதமாக தொடர்ந்து எனது எழுத்துகளைப் பற்றி நீலுவிடம் சொல்லிக் கொண்டே இருந்தார் மோகன். அத்தனையும் அதீதமான புகழ்ச்சி. எனக்கு இருப்பு கொள்ளவில்லை.

‘ஸார். இனிமேல் நீங்க இருக்கிற இடத்துக்கு நான் வர்றதா இல்ல’ என்றேன்.

‘என் இடத்துக்கு நீங்க வந்துடலாம். உங்க இடத்துக்குத்தான் என்னாலல்லாம் வரவே முடியாது. அதுவும் உங்க லேட்டஸ்ட் புஸ்தகம் உபசாரம் இருக்கே. நீங்க வெறும் சுகா இல்ல. பரமசுகா’. மேலும் அடித்தார்.

‘அட போங்க ஸார்’ என்று விட்டு விட்டேன். இது ஏதோ தன்னடக்கத்தினால் சொல்வதல்ல. இளையோரை வஞ்சனையில்லாமல் பாராட்டும் மோகன் அவர்களின் நன்னடத்தையைக் குறிப்பதற்காக இங்கே இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஓவியர் கேஷவ் தினமும் வரையும் கிருஷ்ணரின் ஓவியங்களுக்கு வெண்பா எழுதுவது மோகனின் அன்றாடப் பணிகளில் ஒன்றாக இருந்தது. எழுதி அதை சில குறிப்பிட்ட நண்பர்களுக்கு அனுப்பி வைப்பார்.

“தாய்க்குப் பணிந்தன்று
தாம்பில் நடந்தரக்கன்
சாய்க்கக் கடைந்தவன்
சாகஸன் – ஆய்க்குல
மாதாவைக் கட்டினன் மாயக்
கயிற்றினால்
கோதை அறி(ரி)வாள்(ல்)
குறும்பு”.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோகன் என்னை ஃபோனில் அழைத்தார்.

‘சுகா. வெண்பா எழுதறது துன்பத்தைத் தரும். கூடாதுன்னு கண்ணதாசன் சொல்லிருக்காராமே! அப்படியா?

‘தெரியலியே ஸார்.’

‘பஞ்சு அருணாசலம் ஸார் சொல்றாரே. மேடைல இளையராஜா ஸார், நீங்கல்லாம் இருக்கறேளே. இப்பத்தான் யூ டியூப்ல பாத்தேன்’.

‘ஓ! அதுவா ஸார்? ஆமா ஆமா. ஆனா அதைப் பத்தி எனக்கு ஒரு ஐடியாவும் இல்ல ஸார்’.

மேற்படி விஷயத்தைப் பற்றி பலரிடம் மோகன் பேசி விசாரித்ததாக பின்னர் அறிந்தேன். அவரது திடீர் மறைவுச் செய்தி வந்தபோது மேற்சொன்ன இந்த உரையாடலும், அந்த சமயத்தில் ஒலித்த அவரது குரலும் மீண்டும் மீண்டும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. என் கைபேசியை எடுத்து அவர் எனக்கனுப்பிய குறுஞ்செய்திகள் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் கடைசியாக அவர் எனக்கனுப்பிய பாடல் இது.

‘முன்னோர்கள் மட்டும்
மரணமுறாதிருந்தால்
என்னாகும் உன்னிருப்பு
எண்ணிப்பார் – உன்னிப்பாய்
ஆராய்ந்தால் சாவ(து)
அகந்தையே ஆன்மாவல்ல
கூறாமல் சாவாய்
குளிர்ந்து’.

திருநவேலி இன்று . . .

கடந்த மாதத்தில் பாதி நாட்கள் திருநவேலியில் இருக்க வாய்த்தது. நீண்ட காலம் கழித்து இப்படி ஒரு வாய்ப்பு. அநேகமாக எல்லா நாட்களின் இரவுணவு, திருநவேலியின் பல்வேறு ரோட்டுக் கடைகளில்தான். அதற்காக விஞ்சை விலாஸுக்கும், விசாக பவனுக்கும் போகாமல் இல்லை.

வழக்கம் போல இந்த முறையும் பழைய, புதிய மனிதர்களின் சந்திப்புதான் விசேஷம். ஊருக்குப் போன அன்றைக்கே தேரடிக்கு எதிரே உள்ள மணீஸ் அல்வா கடையில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது குஞ்சு தோளைத் தொட்டுச் சொன்னான், “யார் வாரா பாரு”. தூரத்தில் காந்தி அத்தான் வந்து கொண்டிருந்தான். முழு பெயர் காந்திமதிநாதன். கட்டையான சிவத்த உடம்பு. உருண்டையான அவனது தோற்றத்தில் மாற்றம் தெரிந்தது. அவன் அருகில் வருகிற வரைக்கும் பால் குடித்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் வரவும், “என்னத்தான்! எப்படி இருக்கே?” என்றேன். “என்னை மறந்துட்டியோன்னு நெனச்சேன்டா, மாப்ளே!” என்றான், வழக்கமான கரகரத்த குரலில். சிகரெட் குடித்து குடித்து அவன் குரல் அப்படி ஆகியிருந்தது. “உன்னை நான் எப்படி மறப்பேன்த்தான்! அநியாயத்துக்கு மெலிஞ்சுட்டே. நெஜமாவே அடையாளம் தெரியல,” என்றேன். அருகில் நின்ற குஞ்சுவைப் பார்த்து, “நீ சொல்லலியா, மாப்ளே! அத்தான் பைபாஸ் பண்ணிட்டெம்லா!” என்றான். சட்டையின் மேல் பித்தான்களை நீக்கிக் காட்டினான். குழப்பமும், வருத்தமுமாகப் பார்த்தேன். ஆனால் அத்தான் முகத்தில் அப்படி ஒரு பெருமை. சமூகத்தில் சொல்லிக் கொள்ளுமளவுக்கான ஓர் அந்தஸ்தை அடைந்து விட்ட  கர்வத்துடன் ‘காதலிக்க நேரமில்லை’ ரவிச்சந்திரன் ஸ்டைலில் கொஞ்சம் சாய்வாக நின்றபடி என்னை ஏளனமாகப் பார்த்தான். பார்வையில் “என்னை என்ன சொல்லிடா பாராட்டப் போறே, மாப்ளே?” என்ற கேள்வி காத்திருந்தது. சில நொடிகள் யோசித்து ஒன்றும் சிக்காமல் “காந்தி அத்தான் காந்தி அத்தான்தான்!” என்றேன். “இதச் சொல்றதுக்கு இவ்வளவு நேரமாடா?” என்றவன் தொடர்ந்து “வேற ஏதாவது புதுசா சொல்லுவேன்னு எதிர்பாத்தேன், மாப்ளே” என்றான். குரலில் ஏமாற்றம் தெரிந்தது. “ஒன்னப் பாத்த அதிர்ச்சிலேருந்து இன்னும் அவன் மீளலத்தான். அதான்,” என்று சொல்லி சமாளித்தான் குஞ்சு. “புரியுதுடா மாப்ளே!”. இருவரையும் புன்முறுவலுடன் பாராட்டி விட்டு காந்தி அத்தான் கிளம்பும் போது கையிலுள்ள மிச்சப் பால் ஆறியிருந்தது. “இன்னொரு பால் சொல்லுல,” என்றேன், குஞ்சுவிடம்.

நண்பர் கோலப்பன் சொல்லுவார். “எங்க ஊர்ல மதுசூதனன் மாமாவுக்கு பைபாஸ் ஆகி வீட்டுல கெடந்தாரு பாத்துக்கிடுங்க. முருகண்ணன் வந்து சொல்லுகான். எல கோலப்பா! நம்ம மசூதம் மாமாக்கு நெஞ்சுல ஜிப்பு வச்சு தச்சிருக்குல்லா! வா, போயி பாத்துட்டு வருவோம்”.

திருநவேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் முழுவதுமாக இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி வருவதாகச் சொன்னார்கள். ஏற்கனவே அறிந்த செய்தி அது. ஆனால் டவுண் நேதாஜி போஸ் மார்க்கெட்டும் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி ஆகிறதாம். “நீ எளுதியிருப்பெல்லா நம்ம மார்க்கெட்ல நான் எலை வாங்கப் போன கதய. அதப் படிச்சுத்தான் நம்ம மார்க்கெட் எப்பிடி இருந்ததுன்னு இனிமேல் தெரிஞ்சுக்கணும்.” குஞ்சு சொன்னான். “அப்பம் அங்கெ உள்ள லைப்ரரி எங்கெ போகும்?” எப்படியும் குஞ்சுவிடம் அதற்கான பதில் இருக்காது என்பதால் மனதுக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். மார்க்கெட்டுக்குள்ள போவோமா என்று குஞ்சு கேட்டதற்கு வேண்டாம் என்று மறுத்து விட்டேன். ஆனால் மனதுக்குள் காய்கறி, தேங்காய், விபூதி, குங்குமம், ஊதுபத்தி, எலுமிச்சை, மாங்காய், சப்போட்டா, பெருங்காயம், சூடன், சாம்பிராணி, மூக்குப்பொடி, மாட்டுச் சாணம், சுருட்டு, காப்பித்தூள், சந்தனம், குல்கந்து என கலவையான வாசனையை நுகர்ந்தபடி நேதாஜி போஸ் மார்க்கெட் வழியாக நடந்து போலீஸ் ஸ்டேஷன் தாண்டி, அதன் பக்கத்தில் உள்ள ‘அளவெடுத்து செருப்பு தைக்கும் கடை’ யைப் பார்த்தபடி மேலரதவீதியில் இருக்கும் டிப்டாப் ரெடிமேட் கடையில் போய் முட்டி நின்றேன்.

என்னுடைய திருநவேலி என்பது நான்கு ரதவீதிகளும், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி மற்றும் ஒரு சில தெருக்கள் மட்டும்தான். இன்னும் நான் சொல்லாத மனிதர்கள் எத்தனையோ பேர் அங்கு உள்ளனர். அம்மன் சன்னதி நந்தி டாக்கர் வீட்டின் புகழ் பெற்ற மர பெஞ்ச் காலப்போக்கில் காணாமல் போனது, அம்மன் சன்னதிக்காரனான எனக்கு சொல்ல முடியாத இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் பெரியவர்கள் ‘நந்தி டாக்கர், அவரது பிள்ளைகள் சுப்பன், ராமுடு, ராதாகிருஷ்ணன் ஸார்வாள் (குஞ்சுவின் தகப்பனார்), குளத்து ஐயர்’ உட்பட பல பெரியவர்கள் சாய்ந்து கிடந்தபடி போகிற வருகிற பெண்களை வேடிக்கை பார்த்த அந்த மர பெஞ்சில் நான் உட்கார்ந்தது கூட இல்லை. நந்தி டாக்கரின் பேரன் தூஜா, “என்னடே எப்பிடி இருக்கே?” என்ற போதுதான் அப்படி ஒருவனை எனக்குத் தெரியும் என்பதே என் மண்டைக்கு உறைத்தது.

“தூஜா ஆள் அப்படியே இருக்கானாலே?” குஞ்சுவிடம் கேட்டேன்.

“ஆமாமா. பேரன் பேத்தி எடுத்துட்டான்னு சொன்னா ஒரு பய நம்ப மாட்டான். இன்னும் வக்கனையா சாப்பிடுதான். அவ்வளவு சொத்து இருக்கு. ஆனா வருசத்துக்கு ரெண்டு வேட்டி, ரெண்டு சட்டதான் எடுப்பான். டெய்லி காலைலயும், சாயங்காலமும் நெல்லேப்பர் கோயில்ல ஒரு சுத்து. வாக்கிங் ஆச்சு. இன்னும் அவனைப் பொருத்தவரைக்கும் எம்.ஜி.ஆர்.தான் முதலமைச்சர். இருட்டுக்கட ஹரிசிங் மாமா இவனப் பாத்த ஒடனேயே அம்பது அல்வாவை எலைல மடக்கிக் குடுத்துருவா. அன்னைய நாள் அதோட ஓவர். தந்தி பேப்பர் கூட படிக்க மாட்டான். டி.வி. பாக்க மாட்டான். நாட்டு நடப்பு எதைப் பத்தியும் அவனுக்குக் கவலையில்ல. அப்புறம் ஏன் ஆளு அப்பிடியே இருக்க மாட்டான்?” குஞ்சு சொல்லி முடிக்கவும் ஏக்கப் பெருமூச்சுடன் தூஜாவைப் பார்த்தேன். அழுக்கு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வேக வேகமாக அம்மன் சன்னதி மண்டபத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

திருநவேலிக்குப் போய்விட்டு மீனாட்சியைப் பார்க்காமல் எப்படி? வழக்கம் போல சென்னையில் இருந்து கிளம்பும் போதே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். அவனது சௌகரியம் போல வந்து சேர்ந்தான்.

“நைட் எங்கெ சாப்பிடப் போணும், சித்தப்பா?”

“நீதானல கூட்டிட்டுப் போகணும்?”

“இல்ல. குஞ்சண்ணன் ஏதாவது பிளான் வச்சிருக்கானா? அதுக்குத்தான் கேட்டேன்.”

“மீனாட்சி வந்ததுக்கப்புறம் எனக்கென்னடே ப்ளான் இருக்கப் போது? நீ சொல்லுத கடைக்குப் போவோம்” என்றான், குஞ்சு.

புட்டாரத்தி அம்மன் கோயிலுக்குப் பக்கத்திலுள்ள ரோட்டுக் கடைக்கு அழைத்துச் சென்றான், மீனாட்சி. அரையிருட்டில் இரண்டு பெஞ்சுகள், ஏழெட்டு பிளாஸ்டிக் ஸ்டூல்கள் போடப்பட்டிருந்தன. இட்லிக் கொப்பரையில் ஆவி வந்து கொண்டிருந்தது. தோசைக் கல்லில் சின்ன வட்டங்களாக குழிழ் தோசைகள். ஒரு சட்டியில் பூரிக் குவியல். கிழங்கு, சாம்பார், சட்னி சட்டிகள்.

“அண்ணாச்சி! டேபிள விட எல பெருசா இருக்கு பாருங்க. இத எடுத்துட்டு சின்ன எல போடுங்க”. மீனாட்சி ஆரம்பித்தான். குஞ்சுவிடம் கண்ணைக் காட்டினேன். “நாம சாப்பிடதுக்கு மட்டும் வாயத் தொறந்தா போதும். மத்தத அவன் பாத்துக்கிடுவான்” என்றான், குஞ்சு. அடுத்தடுத்து மீனாட்சியின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டது சூழல்.

“ஏற்கனவே அவிச்சு தட்டி வச்சுருக்க இட்லி வேண்டாம். வெந்ததா எடுங்க. வெய்ட் பண்ணுதோம்”.

“காரச் சட்னி வைக்காதிய. வெங்காயம் சோலி முடிஞ்சு போச்சு. தேங்கா எளசோ! சவம் இனிக்கல்லா செய்யுது.”

“மொளாப்டி வச்சிருக்கேளா? . . . என்ன அண்ணாச்சி டால்டா மாரி இருக்கு?! சருவச்சட்டி பக்கத்துல நல்லெண்ண பாட்டில் வச்சிருப்பெளே! அத எடுங்கய்யா. . . ரெண்டே ரெண்டு கரண்டி போதும். . . பூரிக்கு கெளங்கு வேண்டாம். சாம்பாரே போதும் . . .”

சாப்பிட்டு கை கழுவியதும், “சித்தப்பா! புட்டாரத்தி அம்மைக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு என் பின்னால வாங்க” என்று நடையைக் கட்டினான். “தாயளி எங்கென கூட்டிட்டுப் போறான்னு தெரியலியே! சரி சரி வா, போயிப் பாப்போம்” என்றான், குஞ்சு. லாலா சத்திர முக்கும், தொண்டர் சன்னதியும் இணையும் வளைவில் சின்னதாக ஒரு பால் கடை இருந்தது. பால் கடை என்றால் அல்வாவும் இருக்கும் வழக்கமான திருநவேலி கடை. தாழ்வான கடைக்குள் வேட்டியை மடித்துக் கட்டியபடி ஒரு அண்ணாச்சி நின்று கொண்டிருந்தார். மீனாட்சியைப் பார்த்ததும், “என்னா? ஆளயே காங்கல?” என்றார். “நேத்து ஒரு நாள்தானேய்யா வரல? அம்பது அம்பது மூணா வெட்டுங்க” என்றான், மீனாட்சி. என்னிடம், “சித்தப்பா! அவாள் அல்வா வெட்டும் போது பாடி லேங்குவேஜ கவனிங்க. ஒரு ஸ்டெப் கீள போயி வெட்டுவா” என்றான். அவன் சொன்னபடியே அண்ணாச்சி அல்வா வெட்டும் போது, முட்டியை ஒரு நொடி மடக்கி நிமிர்ந்தார். குஞ்சு சிரிப்பை அடக்கிக் கொண்டு, “இந்தக் கடைல இன்னைக்குத்தான்டே அல்வா சாப்பிடுதென்” என்றான். “வாய்ல போடவும், தொண்ட, வயித்தத் தாண்டி வளுக்கிக்கிட்டுப் போயி பிருஷ்ட நுனில உக்காந்திரும், குஞ்சண்ணே”. மீனாட்சி சொன்னதை ஆமோதிக்கும் விதமாக அல்வாவை விழுங்கிய குஞ்சுவின் முகம் ஏதோ சொன்னது. “பால் வேண்டாம் , அண்ணாச்சி” என்று சொல்லி விட்டு, திரும்பிப் பார்க்காமல் லாலா சத்திர முக்கை நோக்கி நடந்தான், மீனாட்சி. “எல சொல்லிட்டுக் கூட்டிட்டுப் போ”. பின்னால் சென்ற எங்கள் குரலை அவன் கவனிக்கவில்லை. பழக்கடை ஒன்றின் முன் நின்றபடி, கோழிக்கூடு பழங்களைக் காட்டினான். “கோளிக்கூடு சப்பிடணும்னா இங்கதான் வரணும். கனிஞ்சும் கனியாம மெத்துன்னு இருக்கும். அன்னா பாத்தேளா, சேந்து முடிஞ்சதுக்கப்புறம் வீட்டம்மா கெடக்கற மாரி கோளிக்கூடு கெடக்கு பாருங்க” என்றான். அவனது உவமையில் ஒருகணம் ஆடித்தான் போனேன். இதை கவனித்த குஞ்சு சொன்னான். “இப்பிடி பேச்செல்லாம் கேக்கறதுக்காகவாது மாசம் ஒரு மட்டம் ஊருக்கு வால”.

ஒவ்வொரு முறையும் திருநவேலி பயணத்தை இனிதாக்குபவை, கோயில்களும், சந்திக்கும் மனிதர்களும், விதம் விதமான சாப்பாட்டுக் கடைகளும்தான். ‘தாயார் சன்னதி’ தந்த நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் போக பிரதோஷ வழிபாட்டுக்கு சென்ற கருப்பந்துறை அழியாபதீஸ்வரர் கோயில், பரமேஸ்வரபுரம் முத்தாரம்மன் கோயில், குலதெய்வக் கோயிலான சித்தூர் தென்கரை மகாராஜா கோயில், பண்பொழி திருமலை முத்துக்குமாரஸ்வாமி கோயில், தென்காசி காசிவிசுவநாதர் கோயில், கோபாலசமுத்திரம் பெருமாள் கோயில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் மற்றும் வெட்டுவான் கோயில், சமணப்படுகைகள் என மனதை நிறைத்த பயணம் அமைந்தது.

நந்தி டாக்கர் வீட்டு தூஜா, மீனாட்சி, அல்வாக்கடைக்காரர், காந்தி அத்தான் போக கலாப்ரியா மாமாவை சந்தித்தது, நீண்ட நாள் சிநேகிதி, வாசகி, எழுத்தாளர், புகைப்படக் கலைஞர் திருமதி ராமலக்‌ஷ்மி ராஜன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு முதன்முறையாக அவர்களை சந்தித்துப் பேசியது, ஹலோ பண்பலை அலைவரிசையில் காதலர் தினத்துக்கான ஒலிபரப்பில் கலந்து கொண்டது, “அண்ணே! ஒரே ஒரு மட்டம் உங்க கன்னத்தைக் கடிச்சுக்கிடட்டுமா?” என்று கேட்பானோ என்று பயப்படும் அளவுக்கு என்னைக் காதலுடன் கவனித்துக் கொண்ட அன்புத் தம்பி கணபதிக்கு என்னுடைய புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தது, மூத்த உறவுகளுக்கான முழுமையான குடியிருப்புகளை உருவாக்கி சிறப்புற நடத்தி வருகிற ‘நங்கூரம்’ அமைப்பினரை சந்தித்தது, நாறும்பூநாதன் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்புரை மற்றும் அந்த நிகழ்வில் சந்திக்க வாய்த்த முத்தமிழ் தம்பதியர், சகோதரர்கள் ரமணி முருகேஷ், தாணப்பன் கதிர், கவிஞர் சுப்ரா, டாக்டர் ராமானுஜம், பால்ய தோழர் ஸ்டேட் பாங்க் கணபதி, ஆறுமுகம் அண்ணன், வாசகர் பிரமநாயகம், அதைத் தொடர்ந்து தென்காசியில் விநாயகர் சிலை பரிசளித்து “இப்பதான் நாறும்பூ ஸார் நிகழ்ச்சில உங்க ஸ்பீச் யூ டியூப்ல கேட்டேன். என்னால நம்பவே முடியல. சங்கரன் மாமாவுக்கும், உங்களுக்கும் சம்பந்தமே இல்ல” என்று வியந்து, சிரித்து, தயங்கி உபசரித்து மகிழ்ந்த சகோதரி ராணி கணபதிசுப்பிரமணியன் என நிறைய அனுபவங்களைத் தந்த மனிதர்கள்.

திருநவேலி கீழ்ப்பாலத்தை ஒட்டி அமைந்திருக்கிற ‘முத்து மெஸ்’ என்கிற சாப்பாட்டுக் கடையின் அமோகமான மதிய சைவ உணவும், மாலை நேரத்தை விசேஷமாக்கிய விசாக பவனின் அசத்தலான உளுந்த வடை, ஃபில்டர் காப்பியும், இரவுணவை இதமாக்கிய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள சாலையோர இட்லிக் கடைகளும், அனிதா பால் கடையின் கல்கண்டு பாலும் இந்த முறை திருநவேலி விஜயத்தின் சுவையைக் கூட்டியவை. இரண்டு முறை விஞ்சை விலாஸுக்கும் செல்ல வாய்த்தது. பழைய விஞ்சை விலாஸ் அல்ல. புத்தம் புதிதாக எடுத்துக் கட்டப்பட்டிருக்கும் பளபள விஞ்சை விலாஸ். தோற்றத்தில் கவராமல் அந்நியமாக உணர வைத்தாலும், பழைய சுவை குன்றாமல் பார்த்துக் கொண்டது. முதலாளியும், அவரது மகனும் என் தலையைப் பார்த்ததும் ஓடோடி வந்து உபசரித்தார்கள். அவர்களது அதீத அன்பும், கவனிப்பும் கூச்சத்தைத் தரவே அடுத்தடுத்து அங்கு செல்ல நாக்கு இழுத்தாலும், மனசு தடை போட்டு விட்டது.

பெரும்பாலும் இரவுணவு வெளியேதான். பின் ஒரு சின்ன சுற்று. அப்படி ஓர் இரவுணவுக்குப் பின் காலாற நயினார் குளக்கரையை ஒட்டி நடந்து வந்து, ஆர்ச் பக்கம் திரும்பி சுவாமி சன்னதியில் நானும், குஞ்சுவும் செல்லும் போது, தற்செயலாக தெப்பக்குளம் பக்கம் உள்ள ‘நெல்லை கஃபே’ போர்டு கண்ணில் பட்டது. ஆச்சரியம் தாங்காமல் குஞ்சுவிடம் கேட்டேன். “எல! நெல்லை கபே இன்னும் இருக்கா? பரவாயில்லையே!” கடை திறந்து வியாபாரம் ஆகிக் கொண்டிருந்தது. அழுக்கு உடையும், சிக்கு பிடித்த தலைமுடி, தாடியுடனும் யாரோ ஒரு மனிதர் கடை வாசலில் நின்று கையேந்திக் கொண்டிருந்தார். கடைக்காரர் ஒரு பொட்டலத்தை எடுத்து அவர் கைகளில் போடவும், உடம்பு முழுவதையும் வளைத்து, குனிந்து அந்த மனிதர் பொட்டலத்துடன் நகர்ந்து எங்களுக்கு எதிர்திசையில் நடந்தார். “திருநவேலில கோட்டிக்காரங்களுக்கும் கொறச்சல்லில்ல. அவங்களுக்கு சாப்பாடு போடறவங்களும் கொறயல. நெல்லை கபேல்லாம் இந்த ஒலகம் இருக்கற வரைக்கும் இருக்கும்ல” என்றேன். “அது வாஸ்தவம்தான். அந்தக் கோட்டிக்காரன் யாருன்னு தெரியுதா?” என்றான், குஞ்சு. எதிரே உள்ள ஏதோ ஒரு நடைப்படியில் அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கோட்டிக்காரனை உற்றுப் பார்த்தேன். ஏதோ பிடிபட ஆரம்பித்து மனம் குழம்பி, பின் தெளிய ஆரம்பிப்பதற்கு முன் குஞ்சுவே சொன்னான். “சொல்ல சங்கடமாத்தான் இருக்கு. நம்ம சிவாதான். அதாம்ல சாப்ட்டர் ஸ்கூல்ல நம்ம க்ளாஸ்மேட்டு. நீ இன்னைக்குத்தான் பாக்கெ. நான் டெய்லி பாக்கென்”.

துரத்தும் பாடல் . . .

திரையிசை குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். ‘கர்ணன்’ திரைப்படத்தின் இசை குறித்து ‘கர்ணனுக்கு வழங்கியவர்கள்‘, ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா திரைப்படத்தின் இசையை விதந்தோதும் ‘ஹிஸ் ஹைனஸ் ரவீந்திரன்‘, ஜென்ஸியின் குரலை வர்ணிக்கும் ‘செண்பகத்தக்காவின் குரல்‘, ஸ்வர்ணலதாவின் மறைவு தந்த துக்கத்தில் எழுதப்பட்ட ‘சின்னஞ்சிறு கிளியே‘, மறக்கவே முடியாத மலேஷியா வாசுதேவன் பற்றிய ‘அண்ணன்களின் பாடகன்‘ , இப்படி இன்னும் பல. இவை எல்லாமே பலரது அபிமானத்தைப் பெற்ற கட்டுரைகள். ஆனால் நான் எழுதிய இசைக் கட்டுரைகளிலேயே ஒரே ஒரு பாடல் குறித்து எழுதிய ‘தேவனின் கோயில்’ கட்டுரை குறித்த எதிர்வினைகள் இன்னும் எனக்கு வந்து கொண்டேயிருக்கின்றன. ஓரிரு மாத இடைவெளியில் யாரோ ஒருவர் எங்கிருந்தோ மின்னஞ்சலிலோ, அலைபேசியிலோ, குறுஞ்செய்தியிலோ கண்ணீர் உகுத்து, என்னையும் கலங்க வைப்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்மணி ‘தேவனின் கோயில்’ கட்டுரையைப் படித்து விட்டு தொலைபேசியில் பேசத் துவங்கியவர், அடக்க இயலா அழுகையுடன் இணைப்பைத் துண்டித்து விட்டார். சில நிமிடங்களில் இப்படி ஒரு குறுஞ்செய்தி வந்தது: ‘இந்தக் கட்டுரையை நான் படித்திருக்கக் கூடாது. படித்த பின் இந்தப் பாடலை நான் கேட்டிருக்கக் கூடாது. உங்களை, உங்கள் பெயரை நான் அறிந்திருக்கக் கூடாது.’ ஒரு திரையிசைப் பாடலுக்கு இத்தனை சக்தி உள்ளதா? அது குறித்து எழுதப்பட்ட வார்த்தைகள் ஏன் படித்தவரின் மனதை பாதித்தன? இந்தக் கேள்விக்கு இன்னும் விடை கிடைத்தபாடில்லை. வழக்கமாக என் மனதை பாதிக்கும் எந்த ஒரு பாடலையும் கேட்காமல் கடந்து விடுவதே வழக்கம். ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தின் ‘அழகிய கண்ணே’ அதற்கு தலையாய உதாரணம். அது போக ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தின் ‘கற்பூர பொம்மை ஒன்று’, ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் ‘குயில் பாட்டு’, ‘அச்சாணி’ திரைப்படத்தின் ‘மாதா உன் கோயிலில்’ போன்ற பாடல்களுடன் ‘மூன்றாம் பிறை’யின் ‘கண்ணே கலைமானே’ பாடலையும் எல்லா சமயத்திலும் கேட்கும் திராணி இருந்ததே இல்லை. இது போன்ற பட்டியல் எல்லோருக்கும் இருக்கக் கூடும். நண்பன் குஞ்சு ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடல் துவங்கும் போதே, ‘பாட்டை மாத்தித் தொல’ என்பான். அது அவனுக்குப் பிடிக்காத பாடலல்ல. அது தரும் தொந்தரவிலிருந்துத் தப்பிக்கவே தவிர்ப்பான்.

‘தேவனின் கோயில்’ பாடலின் இசை, பாடல் வரிகள், சித்ராவின் பாடும் முறை, மற்றும் வாத்தியக் கருவிகளின் சேர்க்கை குறித்து விலாவாரியாக எழுதியாயிற்று. இனி அந்தப் பாடல் குறித்து வியக்கவோ, சிலாகிக்கவோ என்னிடம் ஒரு சொல் கூட மிச்சமில்லை. கிட்டத்தட்ட அந்தப் பாடலை மறந்து போகும் காலம் வரும் போது சொல்லி வைத்தாற்போல் யாராவது அந்தப் பாடலைப் பற்றி என்னிடம் பேசுவார்கள். திரைக்கதை குறித்த அறிவும், ஆர்வமும் கொண்ட திரைக்கதையாசிரியரும், திரைக்கதை மற்றும் திரையிசை குறித்து புத்தகங்கள் எழுதியிருக்கிறவருமான சகோதரர் ‘கருந்தேள்’ ராஜேஷும், நானும் பரஸ்பரம் எழுத்து மூலமாக அறிமுகம் ஆனவர்கள். அவர் எழுதும் விதத்தைப் பார்த்த போது நிச்சயமாக இவர் ஓர் அறிவுஜீவிதான் என்ற அச்சம் எனக்கிருந்தது. நேரில் பார்த்த மாத்திரத்தில் அச்சம் ஊர்ஜிதமானது. அவரது உயரமும், திரண்ட புஜங்களும், வெறித்த பார்வையும் ‘’இந்தாளு வஸ்தாதேதான்யா’ என்று முதலில் மிரள வைத்தது. பேசத்துவங்கிய பிறகு வளர்ந்த அந்தக் ‘குழந்தைப்பையன்’ தேளல்ல, தேன் என்பது புரிந்தது. சந்தித்த சில தினங்களில் ராஜேஷிடமிருந்து ஒரு நீண்ட குறுஞ்செய்தி வந்தது. ‘தேவனின் கோயில்’ பாடல் மற்றும் கட்டுரை குறித்து கிட்டத்தட்ட புலம்பியிருந்தார். இறுதியில் இப்படி சொல்லியிருந்தார். ‘இந்தப் பாட்டு கேக்கும் போதெல்லாம் உங்க தோளில் சாய்ந்து அழணும்னு தோணுது’. என் தோளை நினைத்துக் கவலை கொண்டாலும் அவரது உணர்வைப் புரிந்து கொள்ள முடிந்தது. தன் வாழ்வோடு கலந்த பாடல் என்று தேவனின் கோயிலைச் சொல்லியிருந்தார், ராஜேஷ்.

ஜான் சுந்தர் எழுதிய ‘நகலிசைக் கலைஞன்’ புத்தக அறிமுக விழாவில் பார்வையாளனாக கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். பாடகர் ஏ.வி.ரமணன், இசை விமர்சகர் ஷாஜி, கவிஞர் மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் கலந்து கொண்ட அந்நிகழ்வில் பத்திரிக்கையாளர் கவின்மலர் ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ பாடலை அற்புதமாகப் பாடினார். இறுதியில் ஏற்புரை ஆற்ற அழைக்கப்பட்ட ஜான்சுந்தர் எடுத்த எடுப்பிலேயே தேவனின் கோயில் பாடலின் இடையிசையில் வரும் இளையராஜாவின் குரலில் ‘ஏய்ய்ய் … ஏஹேய் . . .

தந்தனா தந்தனா தந்தனா

ஆஆ . . .

தந்தானாத் தனனானத்தானன்னா

அஅஅஅ ஆ
தந்தானா தந்தானா . . . ஹேய் . . .

’ என்று பாடிவிட்டு சொன்னார். ‘எங்கோ கோயில் திருவிழா ஒலிபெருக்கியில் கேட்ட இந்தக் குரல் வழியே ஒரு கரம் நீண்டு என்னை அழைத்தது. நகலிசைக் கலைஞனாக நான் மாறியது அந்தக் கரம் நீட்டிய திசை நோக்கித்தான். ஆனால் நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது சுகா அண்ணனின் கரத்தை’. அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல் ‘இந்தப் பயலுக சகவாசமே இதுக்குத்தான்பா வச்சுக்கவே கூடாது’ என்று எழுந்து ஓடி வந்துவிட்டேன். 

‘தேவனின் கோயில்’ கட்டுரையின் துவக்கத்தில் அந்தப் பாடலை மதுரையின் ஏதோ ஒரு பகுதியிலுள்ள ஆசிரியை ஒருவர் பாடிய காணொளியைப் பார்க்க நேர்ந்ததைப் பற்றி எழுதியிருப்பேன். சொல்லப் போனால் அது குறித்த கட்டுரை எழுதத் தூண்டியதே அக் காணொளிதான். கட்டுரை எழுதிய சமயத்தில் அதை எங்கோ தொலைத்து _விட்டேன். தேவனின் கோயில் கட்டுரை காணொளி இல்லாமல்தான் இணையத்தில் வெளியானது. நான்கு தினங்களுக்கு முன் தற்செயலாகக் கிடைத்த அக்காணொளி மீண்டும் மீண்டும் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வைத்தது. தன்னை மறந்து சிறு தயக்கத்துடன் பாடத்துவங்குகிற அந்த ஆசிரியை சில நொடிகளில் பாடலுக்குள் மூழ்கி வெகுதூரம் செல்கிறார்.  மனதிலிருந்துப் பாடுகிற பாசாங்கில்லாத குரல். மீண்டும் தேவனின் கோயிலுக்குள் சென்றது மனது. ஒரு வழியாக அதிலிருந்து மீண்டிருந்த நேற்றைய காலைப் பொழுதில் ஊட்டியிலிருந்து அழைத்தார் நண்பர் மணி எம்.கே. மணி. 

‘என்ன மணி? கிளைமேட் எப்படி இருக்கு?’

‘அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. கோயம்புத்தூர்லேருந்து சாம்ஸன் தான் எங்களை ஊட்டிக்குக் கார்ல கூட்டிக்கிட்டு வந்தாரு.’

‘அட! நான் கோயம்புத்தூருக்குப் போனா சாம்ஸன் தான் பிக் அப் பண்ண வருவார். நல்லா இருக்காரா?

‘ம்ம்ம். ராத்திரி பூரா விடிய விடிய இளையராஜாதான். கூடவே உங்களைப் பத்தியும்தான் பேச்சு. அந்த ஹேங்க் ஓவர் தீந்தபிறகுதான் உங்களுக்குப் பேசணும்னு வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன். இல்லேன்னா நேத்தே கூப்பீட்டிருப்பேன்.’

‘ராத்திரி பூரா அவர் பாட்டு கேக்கறதும், அதைப் பத்திப் பேசறதும் எப்பவும் நாம பண்றதுதானே, மணி?’

‘அட அது இல்லீங்க. நாங்க பேசிக்கிட்டிருந்தது, உங்களோட ‘தேவனின் கோயில்’ பத்தி’.

மேற்கொண்டு மணியிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. ‘சரி மணி. சென்னை வந்ததும் கூப்பிடுங்க’ என்று ஃபோனை வைத்து விட்டேன்.

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் ஜான் சுந்தர் ஒரு கவிதையை அனுப்பி வைத்தார். 

தேவனின் கோவில்

மூடிய நேரம்

நானென்ன கேட்பேன்

தெய்வமே

எங்கேயும் செருகலாம்

பிடுங்கலாம்

ஒண்டிக்கட்டையை

தற்கொலை

இரங்கல் கூட்டம்

விவாகரத்து

எல்லாமே

விளையாட்டு

பேரானந்தம்

அதற்கு

என்ன இப்படிப் பண்றீங்க

டாக்டர் குரலுக்கும்

அவ்வளவு குதூகலம்

உனக்கென்ன

குடும்பமா

குழந்தையா

எனும்போது மட்டும்

ஏய்ய்ய் … ஏஹேய் . . .

தந்தனா தந்தனா தந்தனா

ஆஆ . . .

தந்தானாத் தனனானத்தானன்னா

அஅஅஅ ஆ
தந்தானா தந்தானா . . . ஹேய் . . .

கடந்த சில தினங்களுக்கு முன் காலமான கவிஞர் ‘தக்கை’ பாபுவின் கடைசிக் கவிதையாம், இது. அட போங்கப்பா!


ஜித்துமா . . .

 

 

எழுதப்பட்டிருந்ததா
இது முன்னரே
இக்கணம் கனவில்
உணரப்பட்டிருந்ததா
எந்த புள்ளியில்
துவங்கும் ஒரு
தினம்
எந்த தினத்தில்
நீ உன்னை
அறிந்தாய்
களிப்பில் மிதந்த போது
புதிரின் முதல் சொட்டாய்
காதலை சப்பு கொட்டிய போது
கண்ணீரில் பிசுபிசுத்த
யாரோ ஒருவனின்
கரங்களை பற்றும் போது
கடவுளில் வியக்கும் போது
திடுக்கிடுகிறோம்
யார் நமக்கு முன்
எல்லாம் தெரிந்து வந்து
நமக்குள்
இருந்து கொள்வது
ஏழு கடல்
ஏற முடியாத
எழுபது மலைகள் தாண்டி
எங்கள் உயிர்க்கிளி
கிறக்கத்தில்
இருப்பது எங்கே
உண்மை
வெறும் வார்த்தை இல்லை
இந்த கணத்தை இந்த கனவை
சிருஷ்டித்து
இதை நீ தான் எழுதி கொண்டு இருக்கிறாய்
எத்தனை அநீதி,
எம் வாழ்வை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

 

இளையராஜாவைப் பற்றி இப்படியெல்லாம் ஒரு மனிதன் எழுதியதைப் படித்த பிறகு எப்படி அவருடன் நட்பு கொள்ளாமல் இருக்க முடியும்? மணி எம் கே மணியுடனான நட்புக்கும், அவரது எழுத்துகளுக்கும் மேற்கண்ட வரிகள்தான் வாசலாக அமைந்தது.

மணியின் எழுத்துலகுக்குள் நுழைந்தால் ஏராளமான திரைப்படங்கள் குறித்து எழுதித் தள்ளியிருந்தார். பொதுவாக திரைப்படங்கள் குறித்து எழுதப்படுகிற எழுத்துகளில் ஆர்வமில்லாத நான் மணியின் திரைப்பார்வையை ஆச்சரியமும், சந்தோஷமுமாக ரசிக்க ஆரம்பித்தேன். பதின் வயதுகளில் பார்த்து, பின் மனதுக்குள் எப்போதும் அசை போடும் அற்புதமான மலையாளப் படங்கள் குறித்து மணி அட்டகாசமாக எழுதியிருந்தார். அதுவும் என்ன மாதிரியான படங்கள்? அடூர் கோபாலகிருஷ்ணனின் கொடியேட்டம், ஸ்வம்வரம், பி. பாஸ்கரனின் நீலக்குயில் போன்ற படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்துக்கு அதிகம் வராத பத்மராஜனின் அரப்பட்டு கட்டிய கிராமத்தில் படத்தைப் பற்றியெல்லாம் சொல்லியிருந்தார். பத்மராஜனையும், பரதனையும் சிநேகிக்கும் மணி என் சிநேகிதரானார். வெறுமனே திரைப்படங்களைப் பார்த்து கதைச்சுருக்கம் எழுதுகிற வேலையை மணி செய்யவே இல்லை. கலைஞர்கள் குறித்து அவர் எழுதிய ஒன்றிரண்டு வரிகள் அவரோடு நெருக்கமாக்கின. பத்மராஜனைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.

“ஆனால் பத்மராஜன் நூறு வயது வாழ்ந்திருந்தாலும் வெட்ட வெளியில் இருந்து பூப்பறித்து காட்டி நம்மை திடுக்கிட வைத்துக் கொண்டு தான் இருந்திருப்பார். பொதுவாய் தன்னை விடவும் வித்தைக்காரனை கடவுள் நீடிக்க விட்டு வைக்க மாட்டான்.”

திரைக்கலைஞர்கள் மட்டும்தான் என்றில்லை. இலக்கியவாதிகளை மணி போற்றும் விதம் அலங்காரமில்லாதது.

“வாழ்வின் கூரிய உண்மைகளை அணைத்துக் கொண்டு அதை வாதையுடன் உள்வாங்கி சொட்டு சொட்டாய் விளக்கி செல்லும் திராணி இல்லாதவர்கள் பேசுகிற நாண்சென்ஸ் எல்லாம் சித்தாந்தங்களாகிக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் அசோகமித்திரன் எத்தனை வலியவர் என்பதை சொல்லி முடியாது.”

யோவ்! யாருய்யா நீ? இத்தனை நாளா எங்கேய்யா இருந்தே? என்று மனதுக்குள் கத்தினேன். ‘இங்கேதான் இருக்கேன். உங்களை எனக்கு நல்லாத் தெரியும். உங்களுக்குத்தான் என்னை இப்ப தெரிஞ்சிருக்கு’ என்று எங்களின் முதல் தொலைபேசி உரையாடலில் சொல்லாமல் சொன்னார், மணி.

 

அதுவரை அறிந்திருந்த மணியின் சொற்பமே என்னை சொக்க வைத்துக் கொண்டிருந்தபோது, அறிய நேர்ந்த மிச்சம் மேலும் நெருக்கமாக்கிவிட்டது. அதற்குப் பிறகு மணியின் எதுவும் எனக்கு அந்நியமில்லாமல் போய்விட்டது. தொடர்ந்து பல நாட்கள் பல விஷயங்கள் குறித்து பேசினோம் பேசினோம் பேசிக் கொண்டேயிருந்தோம். சுந்தரராமசாமியின் வாசகர் மணி என்பது ஏற்கனவே தெரியும். அவருடன் பேசும் போதுதான் அது பொய் என்பது தெரிய வந்தது. அவர் சு. ராவின் வாசகர் அல்ல. காதலர். மணி ஒரு விநோதக் கலவை. ஒரு பக்கம் மஸோக்கிஸம் பற்றி பேசுவார். பேச்சு அதிலிருந்து எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய ‘அம்ருதம் கமயா’ திரைக்கதை நோக்கிச் செல்லும். பின் அங்கிருந்து நேராக வண்டி ரோமன் பொலான்ஸ்கியின் ‘Venus in fur’க்குச் செல்லும். பின் எங்கெங்கோ சென்று சம்பந்தமே இல்லாமல் எங்க வீட்டுப் பிள்ளையில் வந்து நிற்கும். எம்.ஜி.ஆரின் சினிமாவை மணி வியந்து பேசும் போது அவர் குரலில் தயக்கமோ, கூச்சமோ இருக்காது. பாசாங்கில்லாதவர் மணி என்பதற்கு எம்.ஜி.ஆர் குறித்த அவரது சிலாகிப்பு, மற்றுமோர் உதாரணம். இப்படி மணியுடன் பேசத் துவங்கி, பேசிக்கொண்டே  வெளியூர்களுக்குச் சென்றோம். இரவெல்லாம் கண்முழித்து பேசித் தீரவில்லை. தூக்கம் கலையாமல் சென்னைக்குத் திரும்பி வந்து பேச்சைத் தொடர்ந்தோம். இன்னும் தொடர்கிறது. பேச்சினூடே ஒருநாள் லேசான கூச்சத்துடன் சொன்னார்.

‘சிறுகதைத் தொகுப்பு வரும் போல தெரியுது!’

‘யாரோடது, மணி?’

வேறெங்கோ பார்த்தபடி, ‘என்னோடதுதான்’.

எனக்கு அப்போதுதான் உறைத்தது. எத்தனை நாட்களாக எழுதிக் கொண்டிருக்கிறார்! இன்னும் இவருடைய புத்தகம் ஏதும் அச்சில் வரவில்லை. எல்லாவிதத்திலும் சின்னவனான நான் எழுதி நான்கு புத்தகங்கள் வந்துவிட்டன. இப்போது கூச்சம் மணியிடமிருந்து இறங்கி வந்து என் தோளில் ஏறிக் கொண்டது.

‘என்னாலான எல்லா உதவியும் செய்றேன்’ என்றேன்.

‘கதைகள் தரேன். படிச்சுட்டு உங்களுக்குத் தோணறத எழுதிக் குடுங்க. அதுக்கப்புறம் புஸ்தகம் வந்தாப் போதும்’.

பிரியத்தின் குரலல்ல அது. மதிப்பின் குரல். அத்தனை மதிப்பிற்குறியவன்தானா நான் என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டு ஒரு சின்ன நடுக்கத்துடன் படிக்கத் துவங்கினேன். எதிர்பார்த்த மாதிரிதான் இருந்தன, கதைகள். உண்மையைச் சொல்வதானால் எதிர்பார்த்ததற்கும் மேலாக. சில கதைகளைத் தொடர்ந்து வாசிக்க அச்சமாக இருந்தது. இதெல்லாம் எழுதலாமா என்று சில வரிகளும், இப்படியெல்லாம் எழுதலாமா என்று பல வரிகளும் இருந்தன. படித்து முடித்தவுடன் சில வார்த்தைகள் எழுதிக் கொடுத்தேன். கவனமாக ‘வாசகவுரை’ என்று எழுதினேன். ஆம். அது வாசகவுரைதான். மணியின் வாசிப்புக்கு முன், அவரது பரந்த வாழ்வனுபவத்துக்கு முன், அவரது பாசாங்கில்லாத ரசனைக்கு முன் சின்னஞ் சிறியனான நான் அவருக்கு அணிந்துரை எழுதுவதாவது?!

கடைசியில் அந்த நாள் வந்தது. எக்மோர் இக்ஸா மையத்தில் மணியின் புத்தக வெளியீடு. மணி முதலில் தன் புத்தகத்துக்கு வைக்க நினைத்திருந்த பெயர் ‘பால்வீதி’. ஆனால் ‘பாதரசம்’ பதிப்பாளர் சரோலாமா, தூரத்திலிருந்தே வாசித்து விட முடிகிற மாதிரியான, சட்டென்று மனதில் பதிகிற  ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’ என்கிற எளிய குறுந்தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஒளிப்பதிவாளரும், நடிகரும், நல்ல வாசகருமான இளவரசு அண்ணாச்சியும், நானும் சென்றிருந்தோம். மணியை தனக்குப் பிடிக்கும் என்று ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்த கவிஞர் இசையை மணியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர முடியுமா தம்பி என்று கேட்டேன். தனக்கு லத்தீன் அமெரிக்க வாசகர்கள் இருக்கிறார்கள் என்கிற மமதை கிஞ்சித்தும் இல்லாத கவிஞர் இசை பெருந்தன்மையுடன் நிகழ்ச்சிக்கு வரச் சம்மதித்து, தோளில் மாட்டிய பையுடன் வந்தும் விட்டார்.

வாத்தியார் பாலு மகேந்திரா அவர்களின் திரைப்பள்ளியில் பயின்ற நிறைய இளைஞர்கள் மணியின் சிஷ்யர்கள் என்று அறிவேன். அவர்கள்தான் அரங்கை நிறைத்தனர். கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான நண்பர் ரவி சுப்பிரமணியம், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எங்க ஊர் மக்கா  தாமிரா, ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொகுப்பு ஆசிரியரும், விரைவில் திரைப்படம் இயக்க இருப்பவருமான கவிஞர் சாம்ராஜ் உட்பட தெரிந்த சில முகங்களும், தெரியாத பல முகங்களுமாக நிகழ்ச்சி துவங்கியது. ரவி சுப்பிரமணியம் வழக்கமாக என்னிடம் சொல்வதைச் சொல்லிவிட்டு பாடித் துவக்கினார். ‘உங்க முன்னாடி பாடறேன். பிழையிருந்தா பொறுத்துக்கணும்’. அதற்கு இரு தினங்களுக்கு முன் வேறோர் நிகழ்ச்சியில் ஒரு பாடகர் சுபபந்துவராளி பாடினார். துவக்கத்தில் மட்டும்தான் சுபம் இருந்தது. அதை ரவியும், நானுமே கேட்டு மகிழ்ந்திருந்தோம்.  ‘சுதியில்லாம அந்தாள் பாடினதையே கேட்டாச்சு. உங்க பாட்டுல நிச்சயமா சுதி விலகாது. பாடுங்க ரவி’ என்று உற்சாகப்படுத்தினேன். பக்க வாத்தியம் ஏதும் இல்லாமல் சுதிசுத்தமாகப் பாடினார் ரவி.

முதலிலேயே கவிஞர் இசை பேசினார். எழுதிக் கொண்டு வந்திருந்த தாள்களைப் புரட்டி பாயிண்ட் பாயிண்டாக ஒரு கறாரான விமர்சகராகவே பேசினார் இசை. குரல் நடுங்கினாலும், உடல் மொழியில் ஜெனரல் சக்கரவர்த்தி போல் ஒரு மிடுக்கு.  ‘இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?’ என்கிற மாதிரியான கேள்வியை முன் வைத்தார். பாராட்ட வேண்டிய இடங்களையும் பாராட்ட மறக்கவில்லை. அடுத்து இளவரசு அண்ணாச்சி பேசினார். அவரது அறியா முகத்தை அன்று பலரும் அறிந்து கொண்டனர். ஆழ்ந்த படிப்பாளி அவர். தினமும் பேசிக் கொள்கிற  மிக நெருக்கமான நண்பர்கள் நாங்கள்  என்பதால் அவரது பேச்சில் எனக்கு ஆச்சரியமில்லை. மணியைப் பற்றியே அமைந்திருந்தது அவரது பேச்சு.

இறுதியாக நான் அழைக்கப்பட்டேன். இக்ஸா மையத்தின் கட்டுமானத்தின் போது என்னமோ மலையாள மாந்திரீகம் நடந்திருக்க வேண்டும். மைக்கில் நாம் பேசும் வார்த்தைகள் சுடச்சுட உடனுக்குடன் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நம் காதிலேயே கேட்கிறது. ‘ஆங் எந்தா? எந்து பறயு?’ என்று மனதுக்குள் கேட்டபடியே பேச்சைத் தொடர்வது சிரமமாக இருந்தது. நான் பேசிய அதே இடத்தில் அதற்கு முந்தைய நாள் நண்பர் ஜெயமோகன் தங்குதடையில்லாமல் நீண்ட நேரம் பேசினார். ஒருவேளை நாயர்களை மாந்திரீகம் தீண்டாது போல!

இசை தன் பேச்சில்  மணி எழுதியிருக்கும் ‘இதனால் அறியவரும் நீதி’ கதை வாசிப்பதில் தனக்கு ஏற்பட்ட தயக்கத்தைச் சொல்லியிருந்தார்.

தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்
அவன் கையில்
குடும்ப புகைப்படமொன்று
கிடைக்கிறது.
அதிலிருந்து தனியே தன்னுருவை
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்
எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல் நுனி
கூடவே வருவேனென்கிறது

‘இதனால் அறியவரும் நீதி’ குறித்து இசை பேசியபோது இந்தக் கவிதை நினைவுக்கு வந்து, ‘தற்கொலைக்கு தயாராகுபவன்கற கவிதய எளுதி படிக்கிறவனைக் கொலை பண்ணின பாவிப்பய இப்படி சொல்லுதானெய்யா! இவனையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்ன?’ என்று மனதுக்குள் நினைத்து, தம்பியின் ஹிப் சைஸைப் பார்த்து நினைத்ததை உடனே மனதுக்குள் அழித்தேன்.

அடுத்து பேசிய பதிப்பாளர் சரோலாமா, தொகுப்பிலுள்ள ‘ஈஸாவஸ்யம் இதம் சர்வம்’ என்கிற கதை குறித்து ஒரு விஷயம் சொன்னார். அந்தக் கதையில் புதுமைப்பித்தனின் ‘கடவுளும், கந்தசாமிப்பிள்ளையும்’ போல கடவுள் ஒரு கதாபாத்திரமாக வருவார். தான் ஒரு சிவபக்தன் என்பதால் அந்தக் கதை தனக்கு நெருடலாக இருந்ததாகவும், அதனால் அதன் தலைப்பை மணியின் ஒப்புதலோடு மாற்றிவிட்டதாகவும் சரோலாமா சொன்னார். ‘நாளைபின்னே ஒரு நல்லது கெட்டதுக்கு அவாள் மூஞ்சில என்னால முளிக்க முடியுமாய்யா?’ என்பதாக இருந்தது அவர் பேச்சு.

ஒரு சிவபக்தனுக்கும், கடவுளுக்கும் இடையே ஆன உறவு என்னை ஆச்சரியப்படுத்தியது. அதைவிட ஆச்சரியம் சரோலாமா ஒரு சிவபக்தனுக்குரிய எந்த அலங்காரமுமில்லாமல் சாதாரணமாகக் காட்சியளித்தது. நான் பார்த்த சிவபக்தர்கள் எல்லாரும் தெருமுக்கில் வரும் போதே திருநீறும், சிமிண்டும் கலந்த மணம் ஒன்று நம்மை வந்து சேரும். எழுந்தால், அமர்ந்தால், சாய்ந்தால் சிவநாமத்தை உச்சரிப்பார்கள். மணிக்கொரு தடவை சீலிங் ஃபேனைப் பார்த்தும் சிவநாமம் சொல்வார்கள். ஆனால் சரோலாமாவோ, மணி வீட்டு மீன் குழம்புக்கு அடிமையான சிவபக்தராக இருக்கிறார்.

இறுதியாக மணி ஏற்புரை நிகழ்த்தினார். மணி வழக்கமாக யாரையாவது கேலியாகவோ, கோபமாகவோ திட்டும் போது ‘ஜித்துமா’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்.
உதாரணத்துக்கு ஒன்று.

“உண்மையில் வெறுப்பின் அடியில் விருப்பம் இருக்கிறது என்பதெல்லாம் கப்ஸா தான். எனக்கு தெரிந்து ஹேட் அண்ட் லவ் என்பது பொறாமையின் நிஜ முகம். காதலில், பிடித்தவர் கரத்தை விட்டு விட ஈகோ சம்மதிப்பதில்லை என்பதே அறிவதற்கான முள். கைவசத்தில் இருந்தால் அப்புறமாய் கொன்று கொள்ளலாம் என்கிற நப்பாசை கூட இருக்கும். குறைந்த பட்ஷம் குற்றவாளி என்று நிரூபித்து கீழடக்குவது. ஆக்ரமிப்பின்றி வேறொன்றில்லை என்று அறிந்த போதிலும் எவ்வளவு சப்பைக்கட்டுகள் வேண்டியிருக்கிறது ஜித்துமா.”

நண்பர்கள் மத்தியில் அவருடைய ‘ஜித்துமா’ பிரபலமான ஒன்று. எங்கே அவர் பேசும் போது அந்த வார்த்தையை பயன்படுத்துவாரோ என்று நினைத்தேன். ஆனால் மிகச் சுருக்கமாக, வழக்கமாக நண்பர்களுடன் பேசுவது போல இயல்பாகப் பேசி ‘எல்லாருக்கும் தேங்க்ஸ்’ என்றார்.

முன் வரிசையில் மணியின் மனைவியும், அவரது மகனும் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி முழுக்க மணியைப் பற்றி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மணியின் மனைவி, ‘அப்ப நெஜமாவே இந்தாளு கெட்டிக்காரன்தானா? நாம நினைக்கிற மாதிரி இல்லியா?’ என்கிற குழப்பமும், ஆச்சரியமும் முகத்தில் தெரிந்து விடாதவண்ணம் கவனமாக அமர்ந்திருந்தார். கழுத்தில் ஒரு பைனாகுலருடன் அமர்ந்திருந்த மணியின் சின்னஞ்சிறு மகன் யாழன் எல்லோரையும் ஒரு வெறித்த பார்வை பார்த்தபடி இருந்தான். அதைப் பார்க்கும் போது, ‘ஜித்துமா’ என்று அவன் சொல்வது போலத்தான் இருந்தது.

 

 

அசலிசைக் கலைஞன்

 

74497_162201910485452_4781405_n

அம்மாஆஆஆஆஆடி ஈஈஈஈஈஈஈ . . . பொண்ணுக்குத் தங்க மனசு’ என்கிற ‘ராமன் எத்தனை ராமனடி’ படப்பாடல் எனக்கு சௌந்தர்ராஜனையோ, கணேசனையோ, விஸ்வநாதனையோ நினைவுபடுத்துவதில்லை. இப்போதும் எங்காவது தூரத்திலிருந்து, காற்றில் கலந்து என் காதுகளை அந்தப் பாடல் எட்டும் போது திருநவேலியின் பூதத்தான் முக்கில் சிவப்புச் சட்டை அணிந்து அந்தப் பாடலைப் பாடிய நாகர்கோயில் தமிழ்மகன் உசேனின் புதல்வர் ஷாஜி தான் நினைவுக்கு வருகிறார். ‘காதலிக்க நேரமில்லை’ பாடல், லாலா சத்திரமுக்கு மேடையில் பாடிய டிரெம்பெட் மாரியப்பனை ஞாபகப்படுத்துகிறது. அதற்குப் பிறகுதான் கோவிந்தராஜனும், முத்துராமனும் வந்து சேர்வார்கள். ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் ‘பால் போலவே’ பாடலைக் கேட்கும் போது கவிஞர் இசைக்கு உறவினரான வாணிஶ்ரீயைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு கண்ணம்மாக்காவே முன்னே வருகிறார். எண்பதுகளில் பதின்வயதுகளைக் கடந்த திருநவேலி இளைஞர்களுக்கு, ‘அவள் ஒரு நவரச நாடகம்’ பாடலைப் பாடியது பாலசுப்ரமணியமல்ல. ‘ஆடலரசன்’ பிரபாகரன்தான்.

இப்படி அசலை மறக்கடித்த நகல்களுக்கு மத்தியில் ஒரு நகலை இன்னொரு நகல் பின்னுக்குத் தள்ளி அதுவே எனக்கு அசலானது. ‘அடி கோமாதா’ என்கிற பாலசுப்ரமணியனின் பாடலை, நான் திருநவேலி சம்சுதீனை நினைத்தபடியேதான் கேட்பது வழக்கம். கோவையைச் சேர்ந்த மெல்லிசைப் பாடகரும், கவிஞருமான ஜான் சுந்தரின் குரலில் அந்தப் பாடலைக் கேட்ட பிறகு, இளைய திலகம் மறைந்து, ‘இளைய நிலா’ ஜான் என் கண்களுக்குள் வந்தார்.

திருநவேலிப் பகுதிகளில், ‘நன்றாகப் பாடுபவர்களை’ நல்லா பாட்டு படிப்பான் என்பார்கள். ஜானுக்கு பாட்டு பாடவும் தெரியும். படிக்கவும் தெரியும். எழுதவும் தெரியும்.

சுய நலத்தின் உச்சத்தில்
நிற்குமிவனை நெருங்காதிருங்கள்
பெருங்கருணையுடன் அணுகும் உங்களிடம்
கொஞ்சம் சுதந்திரம்
கொஞ்சம் செல்வம்
கொஞ்சம் போகம்
கொஞ்சம் தாய்மையென
சகலத்தையும் இரவல் கேட்குமிவன்
நீங்கள் வற்றத்துவங்குகையில்
வேறொரு வாசலில் குவளையோடு நிற்பான்
நீங்கள் புலம்பத் துவங்கியிருப்பீர்கள்
சுய நலத்தின் உச்சத்தில்
நிற்குமிவனை நெருங்காதிருங்கள்.

மேற்கண்ட கவிதை, ஜான் சுந்தர் எழுதியதுதான். ஜான் கட்டுரைகள் எழுதுவார் என்கிற விவரத்தை ஒளித்து வைத்திருந்தார். ‘நகலிசைக் கலைஞன்’ என்னும் கட்டுரைத் தொடர், புத்தகமாக வெளிவந்த பிறகு அந்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

14079485_798163146991369_7278479656802010952_n

தனது மேடைக் கச்சேரி அனுபவங்களையும், தான் சந்தித்த கலைஞர்களையும், அவர்களுக்குள் இருந்த மேன்மையான மனிதர்களையும், அவர்களது வறுமையின் செம்மையையும் சுவாரஸ்யமாகச் சொல்லி, நம்மைச் சிரிக்க, அழ வைக்கிறார். பெரியக்கா ரோஸ்மேரியின் இன்னும் நரைக்காத தலைமுடியும், தங்கை காளியம்மாவின் ‘எண்ணே’ என்கிற விளிப்பும், அத்தையின் ‘எய்யா ச்சாப்பிடுதியா’வும்தான், பின்னாளில் ஜான் எழுதுவதற்கான உரமாகியிருக்க வேண்டும். தமிழகத்து மூவிருந்தாளி அப்பாவுக்கும், மலையாளத்து அம்மைக்கும் மகனாகப் பிறந்த ஜான் தன்னை ‘இரு வேறான கலாச்சாரங்களுக்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தேன். ’செம்மீனும் கட்டபொம்மனுமான’ சேர்மானம் அது’ என்கிறார்.

ஒரு மெல்லிசைப் பாடகனை அவனது அபார ரசனை கையைப் பிடித்து எழுதக் கொண்டு சென்று விட்டதை நகலிசைக் கலைஞனின் பல இடங்களில் நம்மால் உணர முடிகிறது. ’ஜானி’ திரைப்படத்தின் ’ஒரு இனிய மனது’ பாடல் காட்சியில் ரஜினி, திருட வந்ததை மறந்து பாட்டுக்குள் சிக்கிக்கொள்வார் (அவர் மட்டுமா?). ஒருவர் பாடுவதை இத்தனை வகையாக ரசிக்க முடியுமா? இயக்குனர் மகேந்திரன் நமக்குக் காட்டிய அழகு ரஜினியை அதற்குப்பிறகு பார்க்கவே முடியவில்லை என்று வியக்கிற இடம் ஜானின் ரசனைக்கு ஒரு சான்று. ‘தவில்காரர் பாலையாவும் அவரது சகா சாரங்கபாணியும் பொறுப்பில்லாமல் செத்துப்போனால் பாவம் தமிழ்த்திரைதான் என்ன செய்யும்’ என்று புலம்பவும் ஜான் தயங்கவில்லை.

சினிமா பாடல்களும், சினிமாவும் மட்டுமேதான் ரசனையில் சேர்த்தியா என்ற கேள்வி எழலாம். சக நகலிசைக் கலைஞர்களின் வாழ்வை ஜான் சொல்லியிருக்கும் விதத்தைப் படிக்கும் போது எண்ணற்ற சினிமா பாடல்களே அவரது வாழ்க்கையின் சகலத்தையும் நிரப்பியிருக்கிறது என்பதைக் காண முடிகிறது. சக கலைஞர் வசந்தன் குடிக்கு அடிமையாகிறார். (அப்போதுதானே அவர் கலைஞர்!?) ஓடுகிற பேருந்தில் இருந்து இறக்கி விடப்படுகிறார். சொல்லப் போனால் தள்ளப்படுகிறார். அதற்குப் பிறகு நடந்ததை ஜான் சொல்கிறார். “கீழே விழுந்து புரண்டு  கொண்டிருக்கும் போது, இன்னொரு பேருந்து அவரைக் கடந்து செல்கிறது. அடுத்து வந்த பேருந்து அவரைத் தாண்டிப் போக அதன் உள்ளிருந்து ’என்ன என்ன கனவு கண்டாயோ சாமீ’ எனக் கசிந்த பாடல் காதில் விழுந்த கணத்தில் வெடித்துக் கதறினார் வசந்தன். இளையராஜாவின் குரல் கொண்ட அந்த பஸ்ஸுக்குப் பின்னால் ’அப்ப…… அப்ப……’ என்று கத்திக் கொண்டே ஓடினார்”. இந்த சம்பவத்தை அப்படியே சொல்வது எல்லோராலும் முடியும்தான். ஆனால் ‘இளையராஜாவின் குரல் கொண்ட அந்த பஸ்’ என்கிற வரி எல்லோருக்கும் சிக்காது.

தொண்ணூறுகளில் போத்தனூர் ரயில் நிலையமும் ரயில்வே குடியிருப்புகளின் சில வீதிகளும் மிதமான குளிரும் ’நாம் பாலுமகேந்திரா படத்துக்குள் உலவிக் கொண்டிருக்கிறோமோ?’ என்று நினைக்க வைக்கும்’ என்கிற ஜானின் வரிகளை நான் ‘வாத்தியார்’ பாலு மகேந்திராவிடமே சொல்லியிருக்கிறேன். நான் சொன்ன இடங்களும், காலமும்தான் வேறு. ஆனால் வார்த்தைகளும், உணர்வும் ஜானைப் போலவே!

நான் பார்த்தவரையில் மெல்லிசை மேடைக் கலைஞர்கள் ஏதோ ஒருவகையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். திரைத்துறையில் தம் வாழ்வின் கடைசித் துளி வரை தம்மை எந்த வகையிலும் நிரூபிக்க இயலாமல் மக்கிப் போனவர்களின் துயர வாழ்க்கை மெல்லிசை மேடைக் கலைஞர்களுக்கில்லை. ஒன்றுமே இல்லையென்றாலும், ஒரு மேசை மீது ஏறி நின்று பாடி நூறு ஜோடிக் காதுகளையாவது சென்றடைவார்கள். ஆனால் வறுமையும், அவமதிப்பும் எல்லா கலைக்கோட்டிகளின் உடன்பிறந்தவைதான். ஜானின் சக நகலிசைக் கலைஞர் வசந்தனை ஊரே கொண்டாடுகிறது. ஆனால் அவர்களுக்கே உரிய நியாயத்துடன் வீட்டில் அவரை நடத்தும் விதத்தை வசந்தன் இப்படி சொல்கிறார்.’அந்த முண்டை ’ம்க்கும்’ம்பா’ அவங்காத்தா ’ஏம்ப்பா மில்லுக்கே போலாமில்ல’ம்பா… எல்லாம் நேரம்…

இந்த வசந்தன் தான் ‘இளையராஜாவின் குரல் கொண்ட பஸ்ஸைத் துரத்திக் கொண்டு அழுதபடியே ஓடுகிறார்.

மெல்லிசைப் பாடகர்கள் தங்கள் வாழ்க்கையிலும் அவ்வப்போது சூழலுக்கேற்ப திரையிசைப் பாடல்களை பயன்படுத்துவார்கள் என்பது நகலிசைக் கலைஞன் மூலம் எனக்கு ஊர்ஜிதமானது. வண்ணதாசன் அண்ணாச்சியின் ‘வேர்’ சிறுகதையில் ஒரு கதாபாத்திரமாக வரும் ‘தாடி’ ரத்தின பாகவதரின் மகன்கள் குடும்பச் சண்டையை பாடல்கள் மூலமே நிகழ்த்துவதைப் பார்த்திருக்கிறேன். மாடியில் அமர்ந்தபடி தன்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கும் தன் இளைய சகோதரனுக்கு பதில் சொல்லும் விதமாக, கைக்குழந்தையாக இருந்த தனது மகனை கையில் தூக்கிப் பிடித்தபடி ரத்தின பாகவதரின் மூத்த மகன் பாடுவார்.

‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு.
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு.

பயல் கூப்பாடு போட்டு அழுவான். ‘பச்சப்புள்ளய ஏன் இப்படி பயங்காட்டி அள வக்கிய?’ என்று அவர் வீட்டம்மா பிள்ளையைப் பிடுங்கிச் செல்வார்.

நகலிசைக் கலைஞர் டேனியலும் இப்படி சூழலுக்கேற்ப வீட்டிலும் ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’ பாடுபவர்தான். அவரே தன் மகள் தான் தேர்ந்தெடுத்த துணையுடன் வீட்டை விட்டு விலகிச் சென்ற பிறகு ‘நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்’ என்று தன் சின்னஞ்சிறிய வீட்டிலிருந்தபடி கதறுகிறார். டேனியலைப் பற்றிய கட்டுரை முடிந்த பிறகு அதைக் கடந்து வர எனக்கு சில மணி நேரம் பிடித்தது.

நகலிசைக் கலைஞனில் குரலை விற்று தொழிலை வாங்கியிருக்கிற சூரியை நான் சந்தித்திருக்கிறேன். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் இளையராஜாவின் வீட்டு வாசலில் காத்துக் கிடந்து, அவரிடம் பாடிக் காட்டி ஒலிப்பதிவுக்கு அவர் அழைக்கும் வரைக்கும் சென்னையில் காத்திருக்க இயலாமல் கோவைக்குத் திரும்பியவர். இன்றைய சூரியைப் பற்றி ஜான் இப்படி சொல்கிறார்.

“இளமையின் துடிப்பு மிகுந்த குரலால் கேட்பவரைக் கட்டிப் போட்ட அந்த அப்பாவிக் கலைஞன், தனது இருபது வருடக் கனவை அவிழ்த்து எறிந்துவிட்டு வெற்றுடம்புடன் இடுப்பில் கட்டியிருந்த வேட்டியின் மேல், துண்டைக் கட்டிக் கொண்டு புரோகிதம் செய்யத் தயாரானான். வேதம் ஓதுவதில் எந்த விதமான கவுரவக் குறைச்சலும் இல்லை. நான் செய்யப் போவது கடவுள் தொண்டு. தனக்கு சேவை செய்ய பணிக்கிறான் சிவன். சரணடைந்து விடும் மனோபாவத்திற்கு வந்து விட்டான் இவன்.

“பாடிக் கொண்டே இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் நபர்களை நீங்கள் கடந்திருக்கக் கூடும். அழுது கொண்டே வண்டி ஓட்டும் எவரையாவது கவனித்திருக்கிறீர்களா? பிறக்கும் போதே உடன்பிறந்த இசையை, ஆன்மாவோடு ஒட்டியிருக்கிற கவச குண்டலத்தை பிய்த்து எடுப்பது எத்தனை வேதனை? வலிக்க வலிக்க வாளால் அறுத்து அதை உடம்பிலிருந்து உரித்து எடுக்கப் பார்க்கிறான் கர்ண மகாராஜன்! “

சூரியின் குரலில்

‘ஸ்ரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரீ நந்தந ஸ்ரீநிகேதந
குருகுப்த பதோ வாசா ஸித்தோ வாகீஸ்வரேஸ்வர’

கேட்பதில் எனக்கு விருப்பமில்லை. அதை ராஜாமணி மாமாவின் குரலில் பல நூறு முறை கேட்டாகிவிட்டது. சூரி பாடி ‘வா வா வசந்தமே, சுகம் தரும் சுகந்தமே’ கேட்க வேண்டும்.

நகலிசைக் கலைஞனில் ‘தண்ணீர் பிடித்து வைக்கிற சாக்கில் எதிர் வீட்டுப் பெண்ணை ’நோக்கலாம்’ என்று ஒளிவுமறைவில்லாமல் தன்னைத் திறந்துக் காட்டுகிற ஜானை, உருவம் கண்டு எள்ளாமையை அவருக்குச் சொல்லாமல் சொல்லிக் கொடுத்த மைக்கேலை, ‘இருதயத்துல வால்வு போச்சுன்னா வாழ்வே போச்சு சார்’ என்று சொல்கிற இளங்கோ மாஸ்டரை, நோட்ஸ் ஸ்டாண்டில் குமுதத்தின் நடுப்பக்கத்திலிருந்து நாகராஜை பார்த்து வெட்கப்படுகிற சிலுக்கு ஸ்மிதாவை . . . இப்படி பலரைப் பார்க்க முடிகிறது. ‘ஆத்து என்றால் டிமிக்கி. டிமிக்கி என்றால் எஸ்கேப். எஸ்கேப் என்றால் எஸ்கேப்புதான்’ என்பது மாதிரியான புது வார்த்தைகளும், விளக்கங்களும் கிடைக்கின்றன.

“நீங்கள் விடுப்பு எடுத்துக் கொண்ட ஒரு சில நாட்களில் வேறு வேறு பாவாக்கள் ’பாமாலை’யில் வந்தாலும் உண்மையில் எங்கள் பள்ளிப்பருவத்து விடியல்களை சாம்பிராணிப் புகைமுழக்கி ரட்சித்தவர் நீங்களல்லவா ஷாஹென்ஷா?”

“மாதாக்கட்சிக்காரன் ஒருத்தன் பால்யத்தின் பேதமையில் ரொம்ப நாளாக ’ஓடிவருகிறான் உதயசூரிய’னை அல்லாக்கட்சி பாட்டு என்றே நினைத்திருந்தான். லத்தீப்பின் வாப்பாதான் அவனை அப்படி நம்பச்செய்தார். அப்படி நம்பச்செய்தது அவரா அல்லது பாட்டுக்கு இஸ்லாமிய நிறஞ்சேர்க்கும் மேண்டலின், ஹார்மோனியம், புல்புல் தாரா, டெனர் பேஞ்ஜோ, ஷெனாய், டேப், டோலி, தப்லா முதலான வாத்தியங்களுள் உங்கள் குரல்வளையும் ஒன்று என அவன் நம்பக் காரணமாயிருந்த தாங்களா ஜனாப் ?”

“நாபியிலிருந்து எழும் நாதம் கேட்கும் உயிர்களைத் தொட்டே விடுகிறது என்கிறார்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலாக எங்களைக் கட்டி வைத்திருக்கும் ரகஸியமும் அதுவேதானா? அப்படியானால் நமக்குள் இருப்பதும் தொப்புள் கொடி உறவா? உங்கள் நாபிக்கமலம் மலர்த்தி நபிக்கமலம் சேர்ந்தீர்களா?”

அலை முழங்கிய கடல்’ என்ற நாகூர் ஹனீஃபாவுக்கான அஞ்சலிக் கட்டுரையில் இப்படியெல்லாம் எழுதியிருக்கிற ஜான், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் பங்குத்தந்தை அந்தோணிமுத்து சொல்லிக் கொடுத்து ”என் ஆயர் ஆண்டவர் எனக்கென்ன குறைவு” என்று பாடி தன் பாட்டுப் பயணத்தைத் துவக்கியவர். இவர் ஏன் சங்கீதமே படித்திராமல் சங்கராபரணம் பாடுகிற கலைச்செல்வனைப் பார்த்து ‘சரஸ்வதி கடாக்‌ஷம்’ என நூர்தீன் பாய் சிலாகிப்பதைக் கேட்டு பரவசமடைகிறார் என்றுதான் புரியவேயில்லை.

இந்தக் கட்டுரை முடியாமல் நீண்டுகொண்டே போகுமோ என்று அஞ்சினேன். அப்போதுதான் நகலிசைக் கலைஞனில் உள்ள ஒரு வரி நினைவுக்கு வந்தது.

“தனித்த கருவியொன்றை தேர்ந்தெடுக்கும் வளர்கலைஞன், கொஞ்சம் இலக்கணப் பிழைகளோடு வாசிக்கிறான் என்றாலும் மேடையையும், ரசிகனின் விழிகளையும் நிரப்பிவிடுகிறான்.”

இந்தக் கட்டுரையின் கடைசிவரி, இதுதான்.

பழைய பாடல்

img_9588

தொண்டர் சன்னதி திருப்பத்திலேயே ‘மலரே மலரே தெரியாதோ மனதின் நிலைமை புரியாதோ’ என்று சுப்பம்மாக்காவின் குரல் சோமு மாமாவின் வீட்டிலிருந்து கசிந்து வரும். மதியச் சாப்பாட்டுக்குப் பிந்தைய உறக்கத்தில் இருக்கும் பர்வத சிங்க ராஜ தெருவை மேலும் ஆழ்ந்த உறக்கத்துக்குள் அனுப்பும் விதமாக சுப்பம்மாக்கா பாடிக் கொண்டிருப்பாள். வாசல் அழியை மட்டும் பொத்தினாற் போல சாத்திவிட்டு, பட்டாசல் நடையில் தலை வைத்து சோமு மாமா தூங்கிக் கொண்டிருப்பார். அவர் கால்களை மெல்ல அமுக்கியவாறே சுப்பம்மாக்கா பாடிக் கொண்டிருப்பாள். மாமாவின் தலைமாட்டில் வெற்றிலை தட்டும், பித்தளைச் செம்பில் தண்ணீரும் இருக்கும். தொந்தி தரையில் சரிய, ஒருச்சாய்த்து உறங்கிக் கொண்டிருக்கும் சோமு மாமாவின் மெல்லிய குறட்டையொலி, சுப்பம்மாக்காவின் பாட்டுக்கு ஏற்ப, தம்பூரா சுதி போல சன்னமாக ஒலித்துக் கொண்டிருக்கும். பொதுவாக கச்சேரி இல்லாத நாட்களில்தான் இப்படி நடக்கும். கச்சேரி இருந்தால் அன்றைக்கு மதியம் வயிறு நிறைய சாப்பிட மாட்டாள், சுப்பம்மாக்கா. சோமு மாமாவுக்கும் இட்லி, தோசை, உப்புமா என பலகாரம்தான் செய்து கொடுப்பாள். எப்போதுமே உப்பும், புளிப்பும் குறைவாகச் சேர்த்த சமையல்தான். சோமு மாமா கொஞ்சம் காரசாரமாக சாப்பிடுபவர்.

‘கூட ரெண்டு மெளகாவ நுள்ளிப் போட்டா என்னட்டி?’ என்று அலுத்துக் கொள்வார். சுப்பம்மாக்காவின் தம்பி ‘தபலா குமாரும்’ அந்த வீட்டில்தான் இருந்தான். அவனுக்கு காரம் ஆகாது. இத்தனைக்கும் குமாருக்கென்று தனியாகத்தான் சட்னியோ, குழம்போ எடுத்து வைப்பாள் சுப்பம்மாக்கா. அப்படியிருந்தும் சாப்பிடும் போது கண்களில் நீர் வழிய, ‘உஸ் உஸ்’ என்றபடி சாப்பிடுவான்.

‘ஏன் மூதி உஸ் உஸ்ஸுங்கெ? அப்படியா எரிக்கி? ஒனக்கு தனியாத்தானே செஞ்சு வச்சேன்?’

அக்காவின் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் தலையை இல்லை என்று ஆட்டியபடி அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு எழுந்திருப்பான், ‘தபலா குமார்’.

கச்சேரிகளில் தபலா வாசிக்கும் குமார், சோமு மாமாவை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவதே இல்லை. என்ன கேள்வி கேட்டாலும் தலை குனிந்தபடிதான் பதில் சொல்லுவான். ‘அவன் வாய் பேசாதத்தான் வெரல் பேசுதுல்லா! பாரதி கண்ணம்மா பாட்டுக்கு அவன் உருட்டுத உருட்டுல நம்ம சேவியரு அடுத்த வரிய எடுக்காம எத்தன மட்டம் இவன் வாசிக்கதயே பாத்துட்டு நின்னிருக்கான்!’ அதிகம் பேசாத தபலா குமாரின் சுபாவத்தை வயலினிஸ்ட் சந்திரன் இப்படித்தான் சிலாகிப்பார்.

சோமு மாமாவின் ‘சோமு டோன்ஸ்’ கச்சேரியின் முதல் பாடலாக ‘இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்’ என்கிற ‘சாந்தி நிலையம்’ பாடலைப் பாடி சுப்பம்மாக்காதான் துவங்குவாள். பாடலின் துவக்கமாக ‘இறைவன் இறைவன் இறைவன்’ என்று சுப்பம்மாக்கா பாடும் போது, ‘ஏட்டி! சோமு கச்சேரி ஆரம்பிச்சுட்டு. சீக்கிரம் சாப்பிட்டுட்டு வா’ என்று பெண்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு கச்சேரிக்குக் கிளம்புவார்கள்.

மெல்லிசை குழு வைத்து நடத்துபவர்களுக்கு அதன் மூலம் அப்படி என்னதான் வருமானம் கிடைத்து விடுமோ தெரியவில்லை. ஆனால் சோமு மாமா போட்ஸாகத்தான் இருந்தார். தினம் இரண்டு உடுப்பு, மைனர் சங்கிலியுடன் தங்க ருத்திராட்சம், ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள், கட் ஷூ என அலங்காரத்துக்கு ஒரு குறைச்சலுமில்லை. சோமு மாமாவுக்கு கொஞ்சம் பூர்வீக சொத்து இருந்தது. அவரது அம்மா ஒரு பழைய பாடகி என்றும், அவருக்கு புளியங்குடியைச் சேர்ந்த ஒரு பண்ணையார் சில சொத்துக்களை எழுதி வைத்ததாகவும் அரசல் புரசலாகச் சொல்லுவார்கள்.

‘நம்ம சோமு டோன்ஸ் சோமோட அப்பா நம்ம புளியங்குடி பண்ணையார்தாம், தெரியும்லா! ஒனக்கு சந்தேகமா இருந்தா ஒருநா என்கூட புளியங்குடிக்கு வா. பண்ணையார் வீட்டு வாசல்ல அவாள் போட்டோ ஒண்ணு மாட்டியிருக்கும். சாடை அப்படியே அச்சு அசல் நம்ம சோமுதான்’.

‘சோமு டோன்ஸ்’ சோமுவை வயதில் மூத்தோர் சோமு என்றும், இளையோர் ஏனோ சோமு மாமா என்றுமே அழைத்தனர். யாருமே அவரை அண்ணே என்றோ அண்ணாச்சி என்றோ அழைத்ததில்லை. சுப்பம்மாக்கா மட்டும் அவரை அத்தான் என்றுதான் அழைப்பாள். அதில் சோமு மாமாவுக்கு சங்கடம் உண்டு. எத்தனை பேர் கூடியிருக்கும் சபையிலும் சோமு மாமாவை ‘அத்தான்’ என்று சத்தம் போட்டே கூப்பிடுவாள் சுப்பம்மாக்கா. அவள் இப்படி கூப்பிடுவது தெரிந்ததும் வேக வேகமாக அவளருகில் வந்து, ‘எத்தன மட்டம் சொல்லியிருக்கென், இப்படி நாலு பேர் மத்தில அத்தான் நொத்தான்காதென்னு? என்ன விஷயம் சொல்லித் தொல’ என்று ரகசியமாகக் கடிந்து கொள்வார்.

‘நல்ல கதயா இருக்கெ! அத்தான அத்தான்னுக் கூப்பிடாம வேற எப்படி கூப்பிட?’ விகற்பமில்லாமல் சுப்பம்மாக்கா கேட்பாள். ‘என் தலைலெளுத்து’ என்று தலையில் அடித்துக் கொள்வார் சோமு மாமா.

சுப்பம்மாக்காவை சோமு மாமா ‘ச்சுப்ப்பு’ என்றழைப்பார். கச்சேரிகளில் அவள் பெயரை சுப்பம்மா என்றே அறிவிப்பார்கள். ஆனால் சோமு மாமாவைத் தவிர மற்ற எல்லோருக்கும் அவள் சுப்பம்மாக்காதான். அவளை விட வயதில் மூத்தவரான ஃப்ளூட்டு கோபாலும் அவளை சுப்பம்மாக்கா என்றழைப்பதை அவளால் ஜீரணிக்கவே முடியாது. ‘கோவாலண்ணாச்சி! ஒங்க கடைசி தங்கச்சி விஜயாவும், நானும் அப்பர் கிளாப்டன்ல ஒரே செட்டு. என்னைப் போயி அக்காங்கேளே! கேக்கதுக்கு நல்லாவா இருக்கு!’. ஃப்ளூட்டு கோபால் அதற்கும், ‘இருக்கட்டும்க்கா’ என்பார். தன் முதலாளி சோமுவின் மீது இருக்கும் மரியாதை காரணமாகவே கோபால் தன்னை அக்கா என்றழைக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு மேலும் பேச்சை வளர்க்க மாட்டாள் சுப்பம்மாக்கா.

img_9589

கச்சேரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடிய பாடல்களை மட்டும் பாடுவார் சோமு மாமா. ‘அல்லா அல்லா, சம்போ சிவசம்போ, இக்கரைக்கு அக்கரை பச்சை, எதற்கும் ஒரு காலம் உண்டு’ போன்ற பாடல்களுக்கு மத்தியில் சுப்பம்மாக்காவுடன் இணைந்து சோமு மாமா பாடும் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடல் அவரது கச்சேரியின் ஸ்பெஷல் பாட்டு. சோமு மாமாவுடன் ஒன்றாக மேடையில் நின்று பாடும் போது சுப்பம்மாக்கா அநியாயத்துக்கு வெட்கப்படுவாள்.

‘பால் போலவே பாட்டெல்லாம் அஸால்ட்டா பாடீருதே! ஆனா சொல்லத்தான் நினைக்கிறேன் பாடும் போது மட்டும் அந்த பதறு பதறுதே! ஏன்?’ என்று கேட்டால், ‘பொறவு! அவ்வொ கூட ஒண்ணா நின்னுப் பாடணும்னா வெக்கமா இருக்காதா?’ என்று பதில் சொல்வாள்.

விஸ்வநாதனின் குரலில் பாடுவதைத் தவிர மற்ற சமயங்களில் ஹார்மோனியத்தில் நின்று கொள்வார் சோமு மாமா. மற்ற படி சுசீலா, ஜானகி பாடிய பாடல்கள் அனைத்தும் சுப்பம்மாக்காதான் பாடுவாள். ஈஸ்வரி, வாணி ஜெயராம் பாடல்களை பாடுவதற்கென்றே சோமு டோன்ஸில் உள்ள பாடகிதான் நாஞ்சில் பிரேமா. சக பாடகியான பிரேமா பாடும் பாடல்களில், ‘தீர்க்க சுமங்கலி’யின் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடல், சுப்பம்மாக்காவுக்குப் பிடித்தமான ஒன்று. ‘சின்னப்பிள்ளைல அரசு பொருள்காச்சில வாணி ஜெயராமே பாடி கேட்டிருக்கென். ஆனா நீ பாடுததுதான் எனக்குப் புடிச்சிருக்கு, பாத்துக்கொ’ என்று பிரேமாவின் கைகளைப் பிடித்தபடி சொல்வாள், சுப்பம்மாக்கா.

சோமு மாமாவுக்கென்றே ‘நெல்லை லாட்ஜில்’ ஒரு அறை இருந்தது. மாலை நேரங்களில் சோமு மாமா நெல்லை லாட்ஜ் அறையில்தான் இருப்பார். சாயங்காலக் குளியல் முடித்து, சுப்பம்மாக்கா கையால் காபி வாங்கிக் குடித்து விட்டு, சாலைக்குமார சாமி கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு நெல்லை லாட்ஜுக்கு சென்றாரானால் செகண்ட் ஷோ விடும் நேரம்தான் வீடு திரும்புவார். என்றைக்காவது வீடு திரும்பவில்லையென்றால் அன்று சோமு மாமா மருந்து சாப்பிட்டிருக்கிறார் என்பதை சுப்பம்மாக்கா புரிந்து கொள்வாள். ஆனால் நாளடைவில் மருந்து சாப்பிடாமலேயே சோமு மாமா வீட்டுக்கு வருவது குறைய ஆரம்பித்தது. கச்சேரியும் குறைய ஆரம்பித்தது ஒரு காரணமாக இருக்கலாம். சுப்பம்மாக்கா இல்லாமல் கச்சேரிகள் நடக்க ஆரம்பித்தன. அதற்கு ஒரு வகையில் சுப்பம்மாக்காவும் காரணம்தான். ‘இந்த மாரி அஸ்கு புஸ்கு பாட்டெல்லாம் என்னய பாடச் சொல்லாதிய’ என்று சோமு மாமா நல்ல மூடில் இருக்கும் போது ஒருநாள் சொல்லி விட்டாள். அதற்குப் பிறகு சோமு மாமா கொஞ்சம் கொஞ்சமாக சுப்பம்மாக்காவை கச்சேரிக்கு அழைப்பதைக் குறைத்து பின் சுத்தமாக நிறுத்திக் கொண்டார்.
‘அவ்வொளும் என்ன செய்வா? கல்யாணக் கச்சேரி புக் பண்ணும் போதே பாட்டு லிஸ்ட் அவங்களே குடுக்காங்க. ஒரு பளைய பாட்டு இல்ல. எல்லாம் இப்பம் உள்ள இங்கிலீஸ் பாட்டுங்க. எனக்கு அதுல்லாம் வாய்லயெ நொளயாது. அதான் என்னய சங்கடப்படுத்த வேண்டாம்னு அவ்வொ கூப்பிட மாட்டங்கா. . . . ஆனா அதுக்காக இப்படி ஒரேயடியா வீட்டுக்கு வராம இருக்கதத்தான் தாங்க முடியல’.

ரகசியமாக தன் தம்பி ‘தபலா குமாரிடம்’ சொல்லி கண்ணீர் சிந்துவாளே தவிர வேற்றாள்களிடம் சோமு மாமாவை சுப்பம்மாக்கா விட்டுக் கொடுத்ததே இல்லை.

‘நைட்டு லேட்டாத்தான் வந்தாக. ஒதயேத்துலயே எந்திரிச்சு சங்கரன்கோயில் கச்சேரிக்குக் கிளம்பிட்டாக’ என்று சொல்லி சமாளிப்பாள். ஆனால் இந்த சமாளிப்பெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான் செல்லுபடியானது. சோமு மாமா வீட்டுக்கு வருவதே இல்லை என்பதை ஊரும், சுப்பம்மாக்காவும் கொஞ்சம் கொஞ்சமாக ஒத்துக் கொள்ள ஆரம்பித்தனர். அதன் பிறகு அந்த விஷயம் இயல்பான ஒன்றாக ஆகிப் போனது.

‘சோமு மாமாவைப் பாக்கணும்னா நெல்லை லாட்ஜ்லதான் பாக்கலாம். இல்லேன்னா பெருமாள்புரத்துக்குத்தான் போகணும். ஆனா அட்ரஸ் சரியாத் தெரியல. அவாள் யாருக்கும் பெருமாள்புரம் அட்ரஸ குடுக்கலெல்லா!’

ஹார்மோனியத்திலிருந்து கீ போர்டுக்கு மாறிய சோமு மாமா காலத்துக்கேற்றார் போல தானும் மாறி, தன் குழுவையும் மாற்றி அமைத்துக் கொண்டார்.

‘முந்தில்லாம் சோமு டோன்ஸ்லதான் அத்தன வயலினைக் கேக்கலாம். சங்கீத சபால ‘ராஜபார்வை’ டைட்டில் மியூஸிக்லாம் சோமு டோன்ஸ் வாசிச்சுக் கேட்டது இன்னும் ஞாவம் இருக்கு. இப்பம் அவாளும்லா வாத்தியத்தைக் கொறச்சுட்டா. எல்லாம் கீ போர்டுலயே வாசிக்கானுவொ. நல்லாவால இருக்கு?’

சோமு மாமாவின் குழுவில் இப்போது சுப்பம்மாக்காவும் இல்லை. நாஞ்சில் பிரேமாவும் இல்லை. ஃப்ளூட் கோபால் எப்போதாவது வருகிறார். அவரது பீஸ்களையும் கீ போர்டிலேயே கிஷோர் வாசித்து விடுகிறான். வயலின், ஷெனாய், கிளாரினெட்டும் கிஷோர் கைகளுக்குள் அடைபட்டுவிட்டன. குழுவும் சுருங்கிப் போனது. புதிய பாடகி சவீதா குழுவுக்கும் சோமு மாமாவுக்கும் இணக்கமாகி விட்டாள்.

‘பெருமாள்புரம் வீட்டுக்குப் போயிருந்தேன். கூட அந்த சவீதா இருக்கா’. குனிந்த தலை நிமிர்ந்து தன் அக்காவின் முகத்தைப் பார்க்க முடியாமல் சாப்பிட்டபடியே  ‘தபலா குமார்’ சொல்லும் போது சுப்பம்மாக்கா அதற்காக பெரிதாக ஒன்றும் வருத்தப்பட்டு விடவில்லை. ‘இதுல என்னலெ இருக்கு? அவ புது பாட்டுல்லாம் பாடுதாள்லா. சாம்பார் ஊத்தட்டுமா?’ என்றாள் சுப்பம்மாக்கா.

நன்றி : வலம்

நல்லதோர் வீணை செய்தே . . .

 

kumaraguruparan

 

‘உக்கிரம் என்பது
நிலவின் வெளிச்சத்தில் அருகும் தனிமை’.

கவிஞர் குமரகுருபரன் எழுதிய இந்தக் கவிதை வரிகளை ஜெயமோகன் சிலாகித்துச் சொன்ன போதுதான் குமரகுருபரன் என்கிற கவிஞரை நான் அறிந்தேன். அன்றைய தினம் குமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது‘ கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதாக இருந்தார், ஜெயமோகன். அந்த நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன். நானறியாத குமரகுருபரன் என்னை அறிந்திருந்தார். அருகில் வந்து பிரியமும், கனிவுமாக என் கைகளைப் பிடித்துக் குலுக்கி, நிகழ்ச்சிக்கு வந்ததுக்கு நன்றி, சுகா’ என்றார்.

ஜெயமோகனுடன் 21 மணிநேரம்’ என்கிற கட்டுரையில் இதைப் பற்றி எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, நம்ம ஊர்க்காரரா இருந்துக்கிட்டு, நம்மள ஒரு வார்த்த சாப்பிடச் சொல்லலியே’ என்று நான் வேடிக்கையாக எழுதியிருந்ததற்காக, ‘அன்பும், மாப்பும்’ என்று குமரகுருபரன் எழுதியிருந்ததாகக் கேள்விப்பட்டேன். அந்த ஒரு முறைதான் குமரகுருபரனைச் சந்தித்திருக்கிறேன்.

‘அறுபடும் வேர் ஒன்று
மரத்தின் நினைவுகளை
எழுதிக்கொண்டிருக்கிறது’

என்று எழுதிய குமரகுருபரனைப் பற்றிய என்னுடைய நினைவுகள் இவ்வளவுதான். ஆனால் அவரது மறைவுச் செய்தி வந்ததிலிருந்து மனம் அவரைச் சுற்றியே வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் கவிஞர் ப.தியாகுவும் இப்படித்தான் குமரகுருபரனைப் போலவே இள வயதில் மறைந்தார். தியாகுவை எனக்கு அறிமுகமில்லையென்றாலும் அவரது மறைவு குறித்து தொலைபேசியில் என்னிடம் பகிர்ந்த தியாகுவின் நண்பரும், சக கவிஞருமான ஜான் சுந்தரின் சிதறிய குரலொலி இன்னமும் நினைவில் உள்ளது.

இளம் கவிஞரான வைகறையும் மிகச் சமீபத்தில் மறைந்தார். எழுகிறவர்கள், கலைஞர்கள், குறிப்பாக கவிஞர்கள் ஏன் இப்படி சீக்கிரமே நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் சொல்வது போல் குடி மட்டுமே காரணமாக இருக்குமா? அல்லது ஓர் ஒழுங்கில் அமையாத வாழ்க்கைமுறை காரணமா? இல்லை, கவியுள்ளம் கொண்ட மற்ற கவிஞர்களும், எழுத்துக்காரர்களூம் சொல்வது போல புறக்கணிப்பால், தனிமையின் உக்கிரத்தால் இறந்து போகிறார்களா?

எழுதுகிறவர்கள் தங்களை அசாதாரணர்கள் என்றும், தங்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கொம்புகள் உண்டு என்றும் நம்புகிறார்கள். எல்லோரையும் போல தமக்கும் மனித உடம்புதான் என்பதை அவர்கள் உணர்வதாக இல்லை. சகோதரர் குமரகுருபரன் குடிப்பழக்கம் உடையவரா, அல்லாதவரா என்பது பற்றி எனக்குத் தெரியாது. போதுமான அளவு தூங்காதவராக இருந்திருக்கலாம். ஆனால், அவரது அநேக புகைப்படங்களில் புகையும் சிகரெட்டுடனேயேதான் பார்த்திருக்கிறேன். அவரது உயிரைக் குடித்ததில் சிகரெட்டுக்கு பெரும் பங்கு இருந்திருக்கும் என்பதை மறுக்கவே முடியாது. எழுதுகிறவன் விசேஷமானவன் என்று அவனே நம்பும் பட்சத்தில், மற்றவர்களை விட கூடுதல் சிரத்தை எடுத்து தன் உடலைப் பேணுவதுதானே, அவனது படைப்பாற்றலுக்கு அவன் தரும் மரியாதை? சிவசக்தியிடம் விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடலை பாரதி கேட்டது அதற்காகத்தானே?

இந்த இடத்தில் மூத்த படைப்பாளிகளையும் குறை சொல்ல வேண்டிதான் வருகிறது. தங்களுக்கிருக்கும் குடிப்பழக்கத்தை தாங்களே அறியாமல் இளம் படைப்பாளிகளுக்குக் கடத்துகிறார்கள். மறைந்த மூத்த கலை ஆளுமை ஒருவரிடம் இது குறித்து கடுமையாக நான் பேசியபோது, ‘நான் ரெண்டு ரவுண்டுதான்யா போடுவேன்’ என்றார். அப்போது அவரிடம் சொன்னேன். ‘ஸார்! நான் உங்களைக் குடிக்க வேண்டாம்னே சொல்லல. நீங்க குடிக்கிறவர். ஆனா குடிகாரர் இல்ல. சின்னப் பசங்க கூடக் குடிக்காதீங்க. பிற்காலத்துல அவங்க உங்கள முன் உதாரணமா வச்சுக்கிட்டு கன்ட்ரோல் இல்லாம குடிகாரங்களா ஆகறதுக்கு சான்ஸ் இருக்கு’.

இதுவேதான் இன்னொரு மூத்த எழுத்தாளர் மீதும் எனக்கிருக்கும் வருத்தம். அவர் எனக்கு தகப்பனார் ஸ்தானத்தில் இருப்பவர் என்பதால் கூடுதல் உரிமையும், கோபமும் உண்டு. ஒரு புகைப்படத்தில் இளைஞர்களோடு அவர் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நடனமாடுவதைப் பார்த்தேன். நிச்சயம், அது குடிக்குப் பின் எழுந்த குதூகலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அதை ஒரு கொண்டாட்டமாக என்னால் எடுத்துக் கொள்ளவே முடியவில்லை. குடியை, பாலுறவு போல அந்தரங்கமாக வைத்துக் கொள்ளுங்கள் மூத்தவர்களே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் பற்றி ஒரு செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள காமராஜ் அவர்கள் ஒரு முறை புகைப்பிடித்துக் கொண்டிருந்ததை அவரறியாமல் புகைப்படம் எடுத்திருக்கிறார், ஒரு புகைப்படக் கலைஞர். கடும் கோபம் கொண்ட காமராஜ், அந்தப் புகைப்படச் சுருளை எடுத்து அழிக்கச் சொல்லியிருக்கிறார். ‘நான் சிகரெட் குடிக்கிறதே தப்பு. நீ இதை படம் புடிச்சு காமிச்சேன்னா, காமராஜே சிகரெட் குடிக்காருன்னு சின்னப்பயலுவளும் சிகரெட் குடிச்சுக் கெட்டுப் போயிருவானுகள்லாண்ணே’ என்றாராம்.

இவன் கனவில்
அடிக்கடி
ஒயில் பெண்கள்

நிறைய தரம்
புதையல்

அபூர்வமாய்
மழை

ஒவ்வொரு நேரம்
பௌர்ணமி நிலா

சிலசமயம்
மலையருவி

எப்போதாவது
இராட்ஷஸன்

நேற்று
நீலவானம்

முந்தா நாள்
நீ

ஒரே
ஒரு தடவை கடவுள்

இன்றுவரை நான் சந்தித்தேயிராத மூத்த கவிஞரான ‘அண்ணாச்சி’ விக்ரமாதித்யனின் இந்தக் கவிதை குறித்து யாரும் பேசி  நான் கேட்டதில்லை. அவரைப் பற்றி என்னிடம் பேசிய அத்தனை இளம் கவிஞர்களும் அவரது குடி புராணத்தைப் பற்றித்தான் அதிகம் சொல்லியிருக்கிறார்கள்.

குடி ஒழுக்கம் சார்ந்து அல்ல என்பது அறிவுஜீவிகளின் கூற்று. இன்னும் சிலர் கொலையும், கொள்ளையையும் கூட ஒழுக்கம் சார்ந்ததல்ல என்று கூறக் கூடும்.

தனிமை அணைத்த சிறான் ஒருவனின் வரலாறு
வாட் சுழற்றலுக்கு இடையே வந்துபோகிற
வினைக்காற்று மாதிரி,எழுதப் படுவதில்லை.
அவன் இப்போதும் தனிமையிலேயே
இருக்க நேர்வது தான் கொஞ்சம் உறுத்துகிறது
பறவையின் குரலை
குரலில் அமைகிற சங்கீதத்தை
ஓவியமொன்றின் நடனத்தை
பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டையை
முக்கியமாக, பெற்றோரின் ஊடல், கூடலைக் குறித்த
அவனது வினைகள்,எதிர்வினைகள்
முக்கியமில்லாமல் போயிருந்ததற்கு
தனிமையும் காரணம் என்று நம்புகிறான்.
அவனுக்குச் செய்ய ஒன்றுமில்லை
தனிமை நேசிக்கிற மானுடன் ஒருவனைப் பற்றிய
கதையை இதிகாசங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
வெறுமனே அமர்ந்திருக்கிற ஒவ்வொரு பொழுதிலும்
அவனுடன் தத்துவம் மட்டுமே நீட்டாங்கால் போட்டு
இளைப்பாறிக் கொண்டிருக்கிறது.
அவன் இறந்தபிறகே
அவனுடன் உலகம் இருக்கும் என்று தெரிந்தபோதும்
அந்த தத்துவக் குரங்கும் மென்று விழுங்கிக் கொண்டு
இருக்கிறது எதையும் காட்டிக் கொள்ளாமல்.
அப்படியே இருக்கட்டும்
கல்லில் சில கல்.
கல்லில் சில சிற்பம்.
கல்லில் சில கடவுள்.

இப்படி இன்னும் பல ஆயிரம் கவிதைகளை எழுதியிருக்கக் கூடிய கவிஞர் குமரகுருபரன், என்னை விட வயதில் இளையவர். என்னை விட வயதில் மூத்த படைப்பாளிகளிடம் எனது வேண்டுகோள் இதுதான். ‘அண்ணாச்சிகளா! நீங்க குடிச்சு கட்டமண்ணாப் போனது போகட்டும். சின்னப் பயலுகக்கிட்ட உங்க வீரக்குடிப்பிரதாபங்களைச் சொல்லிக் கெடுக்காதிய.’

என்னைவிட வயதில் இளைய படைப்பாளிகளுக்கு: ‘பெருசுகள எல்லா விஷயங்கள்லயும் பின்பற்றாதீங்க. அவங்க எல்லாருமே சாதிச்சும் முடிச்சுட்டாங்க. வாள்ந்தும் முடிச்சுட்டாங்க. நீங்கல்லாம் இன்னும் நெறய எளுதணும். அவங்க கூட உக்காந்து குடிக்கறதனாலயோ, அவங்கள மாதிரியே குடிக்கறதனாலயோ அவங்களா ஆக முடியாது. குடிக்காமலயும், சிகரெட் புடிக்காமலும் அவங்க எல்லாரயும் விடவும் நல்லா எளுத வரும். எல்லாத்துக்கும் மேல ஒண்ணு. அஞ்சலிக் கட்டுரை எளுதறதுக்கு தெம்பு இல்லப்பா’.

 

 

புகைப்பட உதவி – thetimestamil.com

கல்பனா அக்காவும், கலாபவன் மணியும் . . .

kalpana-sathileelavathi435-crop

 

வழக்கமாக நடிகர், நடிகைகளுக்கு நான் வசனம் சொல்லிக் கொடுக்கும் போது ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா காமெராவை விட்டு இறங்கி அருகில் வருவதில்லை. கொஞ்சம் சுணங்கினால் ‘ரெடியா? நேரம் ஆகுது’ என்பார். அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவும் சொல்வதில்லை.

‘சதிலீலாவதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகை கல்பனாவுக்கு வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர் நான் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என் முகத்தை உற்று நோக்குகிறார். பின் வேறெங்கோ பார்க்கிறார். சொல்லிக் கொடுத்த வசனத்தைத் திருப்பிச் சொல்லவே இல்லை. பொறுமை இழந்த வாத்தியார் காமெராவிலிருந்து இறங்கி அருகில் வந்து என் தோளில் கை போட்டபடி, ‘ம்ம்ம். இப்ப சொல்லு’ என்றார். சில நிமிடங்களில் முதல் ஷாட் எடுக்கப்பட்டது. காமெரா கோணம் மாறும் போது கல்பனா சற்றுத் தள்ளி அமர்ந்தபடி என்னைப் பார்த்து தன் உதவியாளரான ஒரு வயதான அம்மாளிடம் ஏதோ சொல்வதை கவனிக்க முடிந்தது.

லஞ்ச் பிரேக்கின் போது கல்பனாவின் உதவியாளர் என்னருகில் வந்து என் கைகளைப் பிடித்தபடி, ‘எய்யா! இப்பதான் விசாரிச்சேன். ஒனக்கும் திருநவேலியாம்லா? எனக்கு கொக்கிரகுளம்’ என்றார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததிலேயே என் உறவினர்கள் பலரையும் அந்த அம்மாளுக்குத் தெரிந்திருப்பதை அறிய முடிந்தது. அடுத்த நாளும் கல்பனா என்னிடம் நடந்து கொண்ட விதத்தில் மாற்றமில்லாததால் அவரது உதவியாளரிடம், ‘ஆச்சி! உங்க மேடம் ஏன் என்னை முறச்சு முறச்சுப் பாக்காங்க? நான் ரொம்ப மரியாதயாத்தானெ வசனம் சொல்லிக் குடுக்கென்! வேற ஒண்ணும் பேசலயே!’ என்றேன். அன்றைய லஞ்ச் பிரேக்கின் போது அந்த அம்மாள் என்னை எங்கள் யூனிட்டோடு சாப்பிட விடவில்லை. ‘எய்யா! அக்கா உன்னக் கூப்பிடுதா. வா’ என்று அழைத்துச் சென்றார்கள்.

அப்போதெல்லாம் கேரவன் வசதி வரவில்லை. ஷூட்டிங் ஹவுஸின் ஒரு தனியறையில் கல்பனா அமர்ந்திருந்தார். தயக்கத்துடன் உள்ளே சென்றேன். சேரிலிருந்து எழுந்து என் கைகளைப் பிடித்து, சிரித்தபடி ‘பயந்துட்டீங்களா தம்பி?’ என்றபடி தன்னருகில் இருந்த சேரில் அமர வைத்தார். ஒன்றும் புரியாமல் கூச்சத்துடன் அமர்ந்த என்னிடம் சரளமாகப் பேச ஆரம்பித்தார்.

‘எமோஷனலானவதான் நான். ஆனா இப்ப அழப்போறதில்ல. நேத்திக்கு உன்னை, நீன்னு சொல்லலாமில்ல? எப்படியும் நீ என்னை விட சின்னவன்தானே!’

‘ஐயோ தாராளமா சொல்லுங்க’.

‘நேத்திக்கு உன்னை ஃபர்ஸ்ட் டைம் பாத்த உடனே சட்டுன்னு டிஸ்டர்ப் ஆயிட்டேன். அதான் ஒருமாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தேன். ஒரே ஜாடைன்னு சொல்ல முடியாது. ஆனா, ஏனோ ஒன்னக் காணும்போது நந்து ஞாபகம்’.

நந்து கல்பனாவின் இளைய சகோதரன் என்பதும், தற்கொலை செய்து கொண்டார் என்பதையும் பின்னர் அறிந்தேன்.

‘இன்னைக்கு என் கூட சாப்பிடேன்’ என்றார்.

நான் தயங்கியபடி, ‘இல்லக்கா. நான் வெஜிட்டேரியன். எனக்காக அங்கெ தனியா சாப்பாடு எடுத்து வச்சிருப்பாங்க’ என்றேன். இயல்பாக நான் அக்கா என்றழைத்தது அவரை சந்தோஷப்படுத்தி விட்டது. எழுந்து ‘மோனே’ என்று கட்டியணைத்துக் கொண்டார். அந்த நிமிஷத்திலிருந்து நடிகை கல்பனா எனக்கு அக்கா ஆனார். மறுநாள் படப்பிடிப்பில் எந்த சிக்கலுமில்லை. வசனங்களை நான் சொல்லச் சொல்ல, உடனே ரெடி என்றார் கல்பனா அக்கா. வாத்தியார் என்னிடம் மெதுவான குரலில், ‘என்னடா மேஜிக் பண்ணினே?’என்றார். நான் அவரிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. மறுநாளிலிருந்து மதிய உணவு கல்பனா அக்காவுடன் தான். எனக்கான சைவ உணவையும் அவரது அறைக்கு வர வைத்திருந்தார். அவர் நடித்த மலையாளப் படங்களை நான் பார்த்திருப்பதில் அவருக்கு அத்தனை ஆச்சரியம்.

‘என்ன தம்பி சொல்றே? பஞ்சவடி பாலம் நீ பாத்திருக்கியா?’

‘பொக்குவெயிலும் பாத்திருக்கேன்கா’.

ஒரு தமிழ்நாட்டு இளைஞன் மலையாளத்தின் முக்கியமான திரைப்படங்கள் பற்றிப் பேசுவது கல்பனாக்காவுக்கு நம்பவே முடியாத மகிழ்ச்சியை அளித்தது. ‘பெருவண்ணப்புரத்தே விசேஷங்கள், ஒருக்கம்’ மற்றும் கல்பனாக்கா நடிக்காத ‘தாழ்வாரம், தாளவட்டம், கள்ளன் பவித்ரன், ஓரிடத்தொரு பயில்வான், மற்றொரு ஆள், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ போன்ற படங்களைப் பற்றியெல்லாம் அவரிடம் சிலாகித்துப் பேசியிருக்கிறேன்.

‘கேரளத்துல உன் வயசுல உள்ள ஒருத்தனும் இந்தப் படங்களையெல்லாம் பத்திப் பேசறத நான் கேட்டதில்ல, தம்பி’ என்பார்.

கல்பனாக்காவுக்கு சங்கீத ஞானம் இருந்தது. ஶ்ரீதேவி ஹவுஸில் படப்பிடிப்பு இடைவேளைகளில் சொக்கலிங்க பாகவதரை ஏதாவது ராகம் பாடச் சொல்லிக் கேட்பேன். அப்போதெல்லாம் கல்பனாக்காவும் அவரது அறையின் வாசலில் அமர்ந்தபடி கேட்டுக் கொண்டிருப்பார். அப்புறமாக என்னிடம் தனியே விசாரிப்பார்.

‘தம்பி! ஐயா பாடுனது நாட்டைதானே?’

‘அட! ராகம்லாம் தெரியுமாக்கா?’

‘டேய்! மிருதங்கமே வாசிப்பேன்டா, நான்!’

தான் குண்டாக இருப்பதனால்தான் தனக்கான பிரத்தியேக வேடங்கள் தேடி வருகின்றன என்பதை இயல்பாகப் புரிந்து வைத்திருந்த கல்பனாக்காவுக்கு தன் உடல்வாகு குறித்த சிறு கூச்சம் உண்டு. காரில் சென்று கொண்டிருக்கும் போது சாலையில் சென்று கொண்டிருக்கும் யாரையாவது காண்பித்துக் கேட்பார். ‘தம்பி தம்பி! அந்த யெல்லோ ஸாரி லேடி என்னை விட குண்டுதானே?’

சரளமாக தமிழில் பேசக் கூடியவர்தான் என்றாலும் அவரது சில தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பில் சுத்தமான மலையாளம் கேட்கும். ‘சதிலீலாவதி’யில் ஓர் இடத்தில் ‘ஐயோ முருகா’ என்று அவர் சொல்ல வேண்டும். எத்தனை முறை முயன்றும் அவரால் ‘ஐயோ முர்யுகா’ என்றுதான் சொல்ல முடிந்தது. ஒவ்வொரு முறையும் கமல் அண்ணாச்சி திருத்தி சொல்லிக் கொடுத்தும் அவரால் ‘முர்யுகா’தான் சொல்ல முடிந்தது. பல முறை எடுக்கப் பட்ட அந்த ஷாட் முடிந்தவுடன் வேக வேகமாக என்னருகில் வந்து என் வயிற்றில் குத்தினார்.

‘என்னை ஏன்க்கா குத்தறீங்க? நான் சிரிக்கக் கூட இல்லியே!’

‘நின்ன ஞான் அறியுன்டா, கள்ளா! நீ மனசுக்குள்ள சிரிச்சே!’.

பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த சம்பவத்தை நண்பர் ஜெயமோகனிடம் நினைவுகூர்ந்து சொல்லிச் சிரித்திருக்கிறார், கல்பனாக்கா.

ஒரு திரைப்படத்தில் இணைந்து பணிபுரியும் போது நெருக்கமாகப் பழகுபவர்கள், அந்தப் படம் முடிந்தவுடன் சுத்தமாக மறந்து விடுவார்கள். ஆனால் கல்பனா அக்காவுடனான பந்தம் அப்படி இல்லை என்பதை சதிலீலாவதி முடிந்த பிறகு அவரது திருமண அழைப்பிதழை எனக்கு அனுப்பி வைத்ததன் மூலம் உணர்த்தினார். வாத்தியார் பாலுமகேந்திரா, ‘டேய்! எனக்கு இன்விட்டேஷன் அனுப்பலடா, அந்தப் பொண்ணு!’ என்றார். ‘ஏ என்னப்பா! கூட நடிச்ச என்னைக் கூப்பிடல. ப்ரொடியூஸர் கமல் ஸாரக் கூப்பிடல. பாலு ஸார கூப்பிடல. உன்னை மட்டும் கூப்பிட்டிருக்காங்க! கண்டிப்பா போயிடு’ என்றார், ரமேஷ் அரவிந்த்.

ஆனால் கல்பனா அக்காவின் திருமண சமயத்தில் மகேஷ் பட் தயாரிப்பில் வாத்தியாரின் ‘அவுர் ஏக் பிரேம் கஹானி’ படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது. படத்தின் தயாரிப்பு நிர்வாகம் உட்பட கூடுதல் பொறுப்புகள். என்னால் கல்பனா அக்காவின் திருமணத்துக்குச் செல்ல முடியவில்லை. அக்காவிடம் ஃபோனில் பேசுவதற்கும் தயங்கினேன். சில நாட்கள் கழித்து ஃபோன் பண்ணினேன். என்னிடம் பேச மறுத்தார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் ஆகி பேசத் துவங்கினார். ஆனாலும் கோபம் குறையவில்லை. ‘அத்தான் எப்படி இருக்காருக்கா? உங்களை நல்லா பாத்துக்கறாரா?’ என்றேன். கோபம் முற்றிலும் வடிந்தது. பிறகு அவ்வப்போது தொலைபேசியில் பேசிக் கொள்வதுண்டு. ஒவ்வொரு முறையும் அவரது திருமணத்துக்கு நான் செல்லாததைக் குத்திக் காண்பிப்பார். ‘என்னடா அக்கா? பெரிய அக்கா! அக்கா கல்யாணதுக்கு வராத துரோகிதானடா, நீ?’

அடுத்த ஓரிரு வருடங்களில் அம்மா காலமான செய்தி அறிந்து ஃபோன் பண்ணினார். பிரியப்பட்டவர்களைப் பார்க்கும் போது, அவர்களின் குரலைக் கேட்கும் போது மனதில் உள்ள சோகம் வெடித்துக் கிளம்புவது நிகழ்ந்தது. அக்காவின் குரலைக் கேட்டதும் உடைந்து அழ ஆரம்பித்து விட்டேன். ‘கரயண்டா மோனே! நினக்கு அம்மயா ஞான் உண்டுடா’ என்றார்.

என்னுடைய திருமண அழைப்பிதழை அனுப்பி வைத்திருந்தேன். அது அவருக்குக் கிடைத்ததா என்பதை அறிய முடியவில்லை. அந்த சமயம் தொலைபேசியில் அக்காவை அணுக இயலவில்லை. எனது திருமண வரவேற்பு பாலக்காட்டில் நடந்தது. அதற்காகவாவது அக்கா வரவேண்டும் என்று விரும்பினேன். தொடர்ந்து தொலைபேசியில் முயன்று கொண்டே இருந்தேன். திருமண வரவேற்பன்றுதான் பேச முடிந்தது. அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்பதைச் சொன்னார். ‘இன்னைக்கு ரிஸப்ஷனை வச்சுக்கிட்டு கூப்பிட்டா நான் எப்படிடா வர்றது?’ என்றார். நியாயமாகப் பட்டது.

அதன்பிறகு ஒன்றிரண்டு முறைதான் பேசியிருப்பேன். குரலில் அத்தனை உற்சாகமில்லை. ஒவ்வொரு முறையும் அவர் கணவரை விசாரிப்பேன். பேச்சை மாற்றுவார். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு படப்பிடிப்பு தளத்தில் பார்க்க நேர்ந்தது. அவர் என்னை கவனிக்கவில்லை. அப்போதுதான் அவருக்கு விவாகரத்து ஆகியிருந்தது. எனக்கு ஏனோ அருகில் போய் பேசத் தோன்றவில்லை. சென்ற வருடம்தான் அவரது கைபேசி எண்ணை ஒரு தயாரிப்பு நிர்வாகியிடம் வாங்கினேன். ஆனால் அழைக்கவில்லை. நான் யாரிடம் அவரது கைபேசி எண்ணை வாங்கினேனோ, அதே மனிதரிடம் அக்காவும் என் எண்ணைக் கேட்டு வாங்கியிருப்பதாக அறிந்தேன். ஆனால் அவரும் அழைக்கவில்லை.

சென்ற மாதம் ஹைதராபாத்திலிருந்து தெலுங்கு திரைப்பட வசனகர்த்தா அபூரி ரவி அழைத்தார்.

‘சுகா ஸார்! நான் எழுதியிருக்கிற ‘ஊப்பிரி’ படத்துல கல்பனா மேடம் நடிக்கிறாங்க. ஒங்களுக்கு அவங்க க்ளோஸ் இல்ல! சதிலீலாவதி பத்தி சொல்லியிருக்கீங்களே! ஞாபகம் இருக்கு. நாளைக்கு ஷூட்டிங் ஸ்பாட் போவேன். எதுவும் சொல்லாம ஃபோன் போட்டு அவங்கக்கிட்ட குடுக்கறேன். பேசுங்க. சர்பிரைஸா இருக்கட்டும்’ என்றார். மறுநாள் அக்கா அளித்த சர்பிரைஸ் நியூஸை அபூரி ரவிதான் என்னை அழைத்து கலங்கிய குரலில் சொன்னார். ‘மேடம் ரூம்லயே இறந்து கெடக்குறாங்க, ஸார்’.

 

உறவுகளைப் பேணி வளர்த்துக் கொள்ளத் தெரியாத என்னைப் போன்ற மடையனுக்கு கல்பனா அக்காவைப் போன்ற ஆத்மார்த்தமான ஒரு மனுஷியின் கடைசி நாட்கள் வரை பழகக் கொடுத்து வைக்கவில்லை. கல்பனா அக்காவின் மரணச் செய்தியைத் தொடர்ந்து ஒரு மாதத்திலேயே கலாபவன் மணி மறைந்த செய்தி. ஆஷா ஷரத் ஃபோன் பண்ணி அழுதுகொண்டே, ‘ஸார்! மணியேட்டன் மரிச்சு போயி’ என்று சொன்னபோது, மேற்கொண்டு எதுவும் பேசாமல் ‘அப்புறம் பேசறேன்மா’ என்று ஃபோனை வைத்துவிட்டேன். மணியின் மரணச் செய்தி பெரும் சோகத்தைக் கொடுத்ததென்றாலும், அத்தனை அதிர்ச்சி அளிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘பாபநாசம்’ சமயத்திலேயே மணி நோய்வாய்ப்பட்டிருந்தார். அவர் காலாமாகிவிட்ட பிறகு இப்போது அதை சொல்லலாம்தான். அவர் தன் இறுதிக்காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தார் என்பதை ‘பாபநாசம்’ குழுவினர் அனைவருமே உணர்ந்திருந்தோம்.

முதல் சந்திப்பிலேயே என்னை தனியே அழைத்து கைகளைப் பிடித்துக் கொண்டு, ‘ஸார்! எனக்கு இந்த படம் ரொம்ப முக்கியமான படம். ரொம்ப கஷ்டப்பட்டுதான் தமிழ் பேசறேன். இதுல ஸ்லாங்க் பேசறதுல கான்ஸண்ட்டிரேட் பண்ணினா என்னால பெர்ஃபார்ம் பண்ண முடியாது. அதனால என்னை ஷூட்டிங் ஸ்பாட்ல விட்டிருங்க. டப்பிங்ல என்னை புழிஞ்சிருங்க. நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்’ என்றார்.

‘பாபநாசம்’ படப்பிடிப்பில் மணியை நான் தொந்தரவு செய்யவே இல்லை. ஆனால் அவர் வசனம் பேசுகிற விதத்தில் எனக்கு பயம் ஏற்பட்டது. ஏனென்றால் மணிக்கு வசனங்களை ப்ராம்ப்ட் பண்ண வேண்டும். அவரால் வசனங்களை மனப்பாடமாகப் பேசி நடிக்க இயலவில்லை. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் இணை இயக்குநர் பஹ்ருதீன் சத்தமாக ஸ்கிரிப்டில் உள்ள வசனங்களைச் சொல்லச் சொல்ல, கேமராவுக்கு முன் ஃபிரேமுக்குள் இருக்கும் மணி, தன் காதில் வாங்கி வாங்கிச் சொல்லி நடித்துக் கொண்டிருந்தார். என்னால் இந்த முறையை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. தவிர கமலஹாசனுக்கு பிராம்ப்ட் செய்தால் ஆகவே ஆகாது. அவருக்கு மட்டுமல்ல. அவருடன் நடிக்கும் மற்றவருக்கு பிராம்ப்ட் செய்தாலும் அவர் கவனம் கலைவார். ஆனால் மணி விஷயத்தால் கலவரமான என்னை சமாதானப்படுத்தியவர், அவரே. ‘எனக்கும் இது பிடிக்காதுதான். ஆனா, பெரும்பாலும் இது மலையாள சினிமால உள்ள வழக்கம்தான். விடுங்க’ என்றார்.

ஆனாலும் என்னால் அதை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால் தாய்மொழியல்லாத வேற்று மொழியை வெறுமனே காதில் வாங்கி, தப்பும் தவறுமாக உதட்டசைத்து சமாளித்தால், குரல் சேர்க்கையில் படாத பாடு பட வேண்டியது வரும். அந்த விஷயத்தில் பல முன் அனுபவங்கள் உண்டு என்பதால் இயக்குநர் ஜீத்துவிடம், ‘இந்தாள் டப்பிங்ல படுத்தப் போறான், ஜீத்து’ என்றேன். ‘அதப் பத்தி எனக்கென்ன? அது உன் பிராப்ளம்’ என்று என் தோளில் தட்டி சிரித்தார் ஜீத்து. ‘யோவ்! பல்லக் காமிக்காதய்யா’ என்றேன். ஜெயமோகன்தான் என் பயம் போக்கினார். ‘கவலையே படாதீங்க. மணிய எனக்கு நல்லாத் தெரியும். அவர வேல வாங்கத் தெரிஞ்சா போதும். எப்படின்னாலும் வளைஞ்சு குடுப்பார். ஒங்களால முடியும்’.

படப்பிடிப்பு இடைவேளைகளில் ஜெயமோகன், நான், இளவரசு, அருள்தாஸ் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கலாபவன் மணி வித விதமான குரல்களில் பேசி, நடித்து காண்பித்து எங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். தேர்ந்த மிமிக்ரி கலைஞரான மணி, பல குரல்களில் பேசியதில் ஆச்சரியமில்லை. ஆனால் மிருகங்கள், பறவைகளின் உடல் மொழியையும் பயின்றிருந்தார். நாயின், மாட்டின், காக்கையின், குருவியின் உடல்மொழியை கண் முன் கொணர்ந்து அசரடித்தார். இடையிடையே மலையாளத்து பாலியல் கதைகளை ஒவ்வொரு கதாபாத்திரமாக நடித்து காண்பித்தார். கமலஹாசன் முன் அத்தனை பவ்யம் காட்டினார். அதற்குக் காரணமும் சொன்னார். ‘ஒங்களுக்கெல்லாம் முன்னாடியே அவர் எங்களுக்கு ஹீரோ. சின்ன வயசுலேருந்து நான் பாத்து பாத்து ரசிச்சு, பிரமிச்ச ஒருத்தர் இப்ப என் கூட நின்னு பேசறார். எனக்கு பேச்சே வரல, ஸார். வராது’.

பாபநாசம் திரைப்படத்தின் கிளைமாக்ஸுக்கு முந்தைய இன்வெஸ்ட்டிகேஷன் காட்சிகளில் கமலஹாசனைப் போட்டு அடித்து, உதைக்கும் காட்சிகளில் துவக்கத்தில் மணியால் அத்தனை சகஜமாக நடிக்க இயலவில்லை. ஒவ்வொரு ஷாட்டுக்கான ரிஹர்ஸலின் போதும் கமலஹாசன் காட்டிய முனைப்பைப் பார்த்து அவராக மெல்ல அந்தக் காட்சிக்குள் இயல்பாக வந்து சேர்ந்தார். அதற்குப் பிறகு உக்கிரமானார். காமிராவுக்கு முன்னால் மணியைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. கடைசி நாள் படப்பிடிப்பில் எல்லோருடனும் விடை பெறும் போது என்னருகில் வந்து அணைத்து, கை குலுக்கி, ‘டப்பிங்ல பாக்கலாம், ஸார்’ என்று கண்ணடித்து விடைபெற்றார். அப்போதே எனக்கு லேசாக சந்தேகம் வந்தது.

நான் சந்தேகித்த மாதிரியே ‘பாபநாசம்’ திரைப்படத்தின் டப்பிங் துவங்கி முடியும் கட்டம் வரும் வரைக்கும் மணி வரவில்லை. தமிழில் அவர் நடித்த சில படங்களுக்கு குரல் கொடுத்த கலைஞரை சிபாரிசு செய்தார். அவர் சொன்ன அந்தக் குரல் உட்பட இன்னும் பல குரல்களை சோதித்துப் பார்த்தோம். எதுவுமே மணியின் உடல்மொழிக்கு ஒத்து வரவில்லை. தவிர, வசனங்களை பிராம்ப்ட் செய்து நடித்திருந்ததால், பல இடங்களில் தெளிவில்லை. குறிப்பாக க்ளோஸ் அப் ஷாட்களில் மணியின் உதட்டசைவும், ஸ்கிரிப்டில் உள்ள வசனமும் பொருந்தவே இல்லை. அதற்காக நிறைய மெனக்கிட வேண்டியிருந்தது. அதற்குள் திருநெல்வேலி பாஷையை வேறு கொண்டு வர வேண்டும். உடலையும், உள்ளத்தையும் வருத்தி அதற்காக பல மணிநேரம் உழைத்து ஒருமாதிரியாக மணி பேச வேண்டிய பகுதிகளை தயார் செய்து வைத்திருந்தோம். ஆனாலும், மணி வருவதாக இல்லை. தயாரிப்பு தரப்பிலிருந்து எனக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். ‘எத்தனை நாள்தான் டப்பிங் பண்ணுவீங்க? இப்பவே ஒரு மாசம் தாண்டப் போகுது. டப்பிங்குக்கு போட்ட பட்ஜெட் எப்பவோ எகிறிடுச்சு. ப்ளீஸ் சீக்கிரம் ஒரு டெஸிஷனுக்கு வாங்க’ என்றார்கள். பல குரல்களை முயற்சி செய்து பார்த்து அலுத்து விட்டு, தீர்மானமாகச் சொன்னேன். ‘மணியை வரவழையுங்கள். அவர் வந்தால்தான் டப்பிங்’.

இன்று, நாளை என்று தள்ளிக் கொண்டே போய் ஒரு நாள் மணி வந்தார். சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். ‘வணக்கம் ஸார். நல்லா இருக்கீங்களா?’ சம்பிரதாயமாக வணக்கம் சொல்லி சிரித்து விட்டு டப்பிங் தியேட்டருக்குள் சென்றார். அவரது சிரிப்பில் கொஞ்சமும் சிநேகமில்லை என்பதைக் காண முடிந்தது. முதல் ரீலைப் போட்டவுடனேயே, தியேட்டருக்குள்ளிருந்து, ‘ஓகே டேக் போகலாம்’ என்றார். இஞ்சினியர் அறையிலிருந்த நான் பொத்தானை அழுத்தி, ‘ரீல் ஃபுல்லா ஒருவாட்டி பாத்திரலாமே, மணி?’ என்றேன். ‘இல்ல ஸார். டேக் போகலாம். ப்ளே பண்ணுங்க இஞ்சினியர் ஸார்’ என்றார். தியேட்டருக்குள் நின்ற பஹ்ருதீன் கண்ணாடித் திரை வழியாக என்னைப் பார்த்து சைகை மூலம், ‘அவர் பேசட்டும்’ என்றார். அமைதியாக இருந்தேன். நான் எதிர்பார்த்த மாதிரியே சரியாக வரவில்லை. திருத்தம் சொன்னேன். பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டார், மணி. அடுத்த டேக். பிழை. திருத்தம். அதற்கு அடுத்த டேக். இன்னும் பல டேக்குகள். மணி பொறுமையிழந்தார்.

‘ஸார். நான் இதுக்குத்தான் வர மாட்டேன்னு சொன்னேன். இப்படி நீங்க கரெக்ஷனுக்கு மேல கரெக்ஷன் சொல்லிக்கிட்டே இருந்தீங்கன்னா நான் ஹெட்ஃபோனைக் கழட்டி வச்சுட்டுப் போயிக்கிட்டே இருப்பேன்’.

நான் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தது, உதவி இயக்குநர்களுக்கும், ஒலிப்பதிவு இஞ்சினியருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஐந்து நிமிடங்கள் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மணியே மௌனம் கலைத்தார்.

‘இப்ப என்ன ஸார் செய்யலாம்?’

‘ஒரே ஒரு வாட்டி ரீல் ஃபுல்லா பாருங்க, மணி’. துவக்கத்தில் சொன்னதையே மீண்டும் அழுத்தமான குரலில் சொன்னேன். ‘ஓகே ஸார். போடுங்க. பாக்கலாம்’ என்றார். ரீல் முழுதும் ஓடத் துவங்கியது. மணி ஏற்று நடித்த பெருமாள் கதாபாத்திரம் பேசும் எல்லா ஷாட்களிலும் உதட்டசைவுக்கு ஏற்ப என் குரலில் பேசி பதிவு செய்து வைத்திருந்ததைக் கேட்டார், மணி. வாய்ஸ் ரூமிலிருந்து திரும்பி கண்ணாடித் திரை வழியாக இஞ்சினியர் அறையிலிருந்த என்னைப் பார்த்தார். வாய்ஸ் ரூமுக்குள் நுழைந்ததிலிருந்து மணி திரும்பவே இல்லை. ‘என்ன ஸார்! அநியாயத்துக்கு சிங்க்ல பேசியிருக்கீங்க. என் உருவத்துக்கு மட்டும் பொருந்தியிருந்தா நீங்க பேசியிருக்கிறதே பெர்ஃபெக்ட் ஸார்’ என்றார். இப்போதும் நான் ஒன்றும் சொல்லவில்லை. ‘இப்ப டேக் போகலாமா, மணி?’ என்றேன். ‘ரெடி, ஸார்’ என்றார்.

அன்று மதியமே மணியின் பகுதி முழுதும் டப் செய்து முடிக்கப்பட்டது. இன்னும் இரண்டு நாட்கள் இருக்க வேண்டியது வரும் என்ற எண்ணத்தில் சென்னை வந்திருந்த மணி உற்சாகமாகக் கிளம்பினார். கிளம்பும் போது எல்லோரும் அவருடன் புகைப்படம் எடுத்தனர். ‘வாங்க சுகா ஸார். நாம ஃபோட்டோ எடுக்க வேண்டாமா?’. என்னை இழுத்து அணைத்துக் கழுத்தைக் கட்டிக்கொண்டார். ‘இவ்வளவு நேரம் படுத்தினதுக்கு கழுத்தை நெரிக்கறீங்களோ, மணி!’ என்றேன். ‘ஐயோ! அன்பு ஸார். அன்பு’ என்றார். பிறகு ‘பாபநாசம்’ திரைப்படத்தின் வெற்றிக்காக பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி சொல்லும் விழாவுக்காக வந்திருந்த மணி, பின் பக்கமாக வந்து என்னைப் பிடித்துத் தூக்கினார். ‘ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஸார்’ என்றார்.

DSC_3440

மணி இறந்த மறுநாள் நானும், ஜெயமோகனும் மணியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நான் அனுப்பிய குறுஞ்செய்தி மூலமாகவே தனக்கு மணியின் மறைவு பற்றித் தெரிய வந்ததாகச் சொன்னார். ‘சுகா! ஒங்கக்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லல. மணி ஒரு நாள் எனக்கு ஃபோன் பண்ணி ‘சுகா படம் எப்ப ஆரம்பிக்கிறார்? அதுல எனக்கு ஒரு வேஷம் வேணும்னார். சின்னப் படமாச்சேன்னேன். அதனால என்ன? கார்ச்செலவுக்கு மட்டும் குடுத்தா போதும். அடுத்த படத்துல பேரம் பேசி வாங்கிக்கிடறேன். சுகா படத்துல நான் உண்டுன்னாரு. ஒங்க எஸ் எம் எஸ் வந்தப்ப எனக்கு சட்டுன்னு நினைவுக்கு வந்தது இதுதான்’ என்றார், ஜெயமோகன்.

ஜெயமோகன் இதை என்னிடம் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்.

காப்பிக் கடை . . .

 

unnamed (1)

 

கோடை விடுமுறை காலங்களில் அம்மாவின் சொந்த ஊரான ஆழ்வார்குறிச்சிக்குப் போகும்போதெல்லாம், சாயங்காலக் காப்பி நேரத்தில் வாழையிலையில் சுற்றி சுடச் சுட பஜ்ஜி வாங்கி வருவார், தாத்தா. நான்கைந்து தினத்தந்தி தாள்களை எண்ணெய்க்காக ஒற்றியெடுக்கத் தேவையில்லாத பஜ்ஜி. பஜாரில் உள்ள சண்முகம் தாத்தாவின் கடை பஜ்ஜியை அவர் எண்ணெய்ச் சட்டியில்தான் போட்டு எடுக்கிறாரா, இல்லை இட்லி கொப்பரையில் போட்டு அவித்துத் தருகிறாரா என்று சந்தேகமாக இருக்கும். சொட்டு எண்ணெயைப் பார்க்க முடியாத, சுவையான பஜ்ஜியும், தொட்டுக் கொள்ள ரெண்டு மிளகாய் கிள்ளிப் போட்டு அரைத்து, கடுகு உளுத்தம்பருப்பும், கறிவேப்பிலையும் போட்டுத் தாளித்த தேங்காய்ச் சட்னியும் கிடைக்கும். எப்போதாவது சண்முகம் தாத்தாவின் காப்பிக் கடைக்கும் செல்வதுண்டு.

‘பேரப்பிள்ள திருநோலில பெரிய கிளப்லல்லாம் சாப்பிட்டிருப்பேரு! இங்கெ தாத்தா கடைல காத்தாடி கூட கெடயாதவே!’

சண்முக தாத்தா சொல்லுவார். அவரது காப்பிக் கடையில் வெறும் காப்பி மட்டுமில்லாமல் பலகாரங்களும் கிடைக்கும். ஆனாலும் அது காப்பிக்கடைதான். அவர் சொன்னது போல திருநவேலியில் உள்ள ஹோட்டல்கள் அவரைப் பொருத்தவரைக்கும் கிளப்புக் கடைகள். பல சின்ன ஹோட்டல்களை ஹோட்டல்களாக அதை நடத்துபவர்களே நினைப்பதில்லைதான். திருநவேலி கீழப்புதுத் தெருவிலுள்ள ராமன் கடை முகப்பில் ‘ராமன் டீ ஸ்டால்’ என்றே போர்டு மாட்டப்பட்டிருக்கும். அங்கு காப்பி, டீ மட்டுமல்ல. இட்லி, தோசை, பூரி கிழங்கு உட்பட எல்லா டிஃபன் ஐட்டங்களும் கிடைக்கும். ஆனாலும் அது ராமன் டீ ஸ்டால்தான். கீழப்புதுத் தெரு, அம்மன் சன்னதி, கல்லத்தி முடுக்கு தெரு, சுவாமி சன்னதி மக்களுக்கு அது ராமன் கடை. கீழப்புதுத் தெருவிலேயே கண்ணன் மாமா நடத்துகிற காப்பிக் கடைக்கு பெயர் ‘ஐயர் கடை’.

திருநெல்வேலி பகுதிகளில் சின்னச் சின்ன கிராமங்களில் நிறைய காப்பிக் கடைகள். பெரும்பாலும் சிறுநகரப் பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்களில் சாப்பிடாமல், பெயர்ப் பலகை இல்லாத கிராமத்துக் காப்பிக் கடைகளில் சாப்பிடுவது வழக்கம். ஒருமுறை ஸ்ரீவைகுண்டத்துக்கருகில் உள்ள சிவகளையில் ஓலைக்கூரை போட்ட காப்பிக் கடையில் மாலை வேளையில் நண்பர்களுடன் சென்றிருந்தேன். புகை படிந்த மர பெஞ்ச், மேசைகள். ஒரே ஒரு டேபிள் ஃபேன். கல்லாவில் அமர்ந்திருப்பவர், ‘வாருங்க! என்ன சாப்பிடுதிய? காப்பியா, டீயா?’ என்று கேட்டுவிட்டு, அவரே எழுந்து சென்று சின்னத் துண்டுகளாக நறுக்கிய வாழை இலைகளை மேசையில் விரித்து, ‘தண்ணி தொளிச்சுக்கிடுங்க’ என்றார். ‘காப்பிதானே கேட்டோம்! எதுக்கு இலை?’ என்று யோசிப்பதற்குள், ஒரு பெரிய தூக்குச் சட்டியிலிருந்து, எவர்சில்வர் கரண்டியில் பூந்தியை அள்ளி இலையில் வைத்தார். கூடவே ஒரு கரண்டி மிக்சர்.

‘சாப்பிட்டுக்கிட்டிரிங்க. காப்பி போட்டு எடுத்துட்டு வாரேன்’.

‘எல வெளங்குதா! சுவீட் காரம் காப்பி. மாமியா வீட்டுக்குப் போனாலும் நமக்கு இதெல்லாம் கெடைக்காது. போன ரெண்டாவது நாளே வெறும் கடுங்காப்பில்லா அரைமடக்கு தருவாளுவொ!’ என்றான் சரவணன்.

எவர்சில்வர் வட்டகை தம்ளர்களில் நுரை பொங்க, சூடாக காப்பி வந்தது.

‘சீனி காணுமா பாருங்கொ! இல்லென்னா இன்னும் ரெண்டு கரண்டி போடுதென்’.

மேல் சட்டையில்லாமல் வேட்டியை மடித்துக் கட்டியிருந்த ஓனரும், சப்ளையருமான அண்ணாச்சி சொன்னார். அன்றைய நாள் முழுதும் சிவகளை காப்பியின் சுவை நாக்கில் இருந்தது.

‘நாரோயில்ல காபி சாபிட்டேளான்னு கேட்டா சாப்பிட்டாச்சுன்னு சொல்லிரப்படாதுடே! அப்புறம் மத்யானம் சோறு போடற வரைக்கும் காத்துக் கெடக்கணும் பாத்துக்கொ. அங்கெ காப்பி சாப்பிட்டேளான்னா, டிபன் சாப்பிட்டேளான்னு அர்த்தம்’. நரசுஸ் ஆறுமுகம் சித்தப்பா சொன்னார். சிறு வயதிலிருந்தே திருநவேலி தெப்பக்குளத்துக்கு எதிரே உள்ள நரசுஸ் காப்பிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த சித்தப்பாவை மேலாளராக பதவி உயர்வு கொடுத்து நாகர்கோயில் நரசுஸ் கிளைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்குதான் சித்தப்பாவுக்கு இந்த ‘காப்பி சாப்பிட்டேளா’ அனுபவம்.  சமீபத்தில் பழைய ‘பிரக்ஞை’, புதிய ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவில் இருக்கும் ரவிசங்கரிடம் இந்தத் தகவலைச் சொன்ன போது, ‘அப்படியா?’ என்று ஆச்சரியம் பொங்கக் கேட்டுவிட்டு, ‘இனிமேல் நாகர்கோயில் பக்கம் போனா ஜாக்கிரதையா இருக்கேன்’ என்றார். இப்போதைய நாகர்கோவில்வாசிகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை சென்னைவாசிகளாகி விட்டாலும் அவ்வப்போது ஊருக்குப் போய் வருகிற நாகர்கோயில்காரர்களான நண்பர்கள் கோலப்பன், அழகம்பெருமாள் போன்றோரோ, நாகர்கோவிலிலேயே வசிக்கிற  ஜெயமோகனோதான் சொல்ல வேண்டும்.

போர்டு இல்லாமல் நடத்தப்படுகிற சின்ன காப்பிக்கடைகள் நாளடைவில் ஹோட்டல்களாவதுண்டு.

‘புட்டாரத்தியம்மன் கோயில் டர்னிங்ல மொத மொதல்ல ஒரு சின்னக் காப்பிக் கட போட்டு சுக்குவெந்நிதான் வித்துக்கிட்டிருந்தான், நம்ம தெய்வு! அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வளந்து பஜார்ல ஒரு கட புடிச்சு, அப்புறம் அப்படியே புது பஸ் ஸ்டாண்டு பக்கத்துல ஹோட்டல் நடத்தி, இப்பம் தியாகராஜ நகர்ல எத்தா பெரிய வீடு கெட்டியிருங்கான்ங்க! அவ அய்யா கடைசி வரைக்கும் ரைஸ் மில்ல மூட சொமந்தாரு! அவர் சாகற வரைக்கும் அவ்வொ வீட்ல கரெண்ட்டு கெடயாது தெரியும்லா!’

திருநவேலியைத் தாண்டி மற்ற ஊர்களில் கிடைத்த காப்பிக் கடை அனுபவத்தில் நிச்சயம் ஸ்ரீரங்கத்தைச் சேர்க்கத்தான் வேண்டும். வழக்கறிஞர் முரளியும், ‘சிவாஜி’ சண்முகமும் என்னையும், நண்பர் அழகம்பெருமாளையும் ஸ்ரீரங்கம் கோயிலில் விஸ்வரூப தரிசனத்துக்கு அழைத்துச் சென்று, தரிசனம் முடித்து வெளியே கூட்டி வந்ததும், ஸார்! ஸ்ரீரங்கத்துக்கு வந்துட்டு முரளி காப்பிக் கடைல காப்பி குடிக்காமப் போகக் கூடாது’ என்றார்கள். அதிகாலையிலேயே கடைக்கு முன் கூட்டம் திரண்டிருந்தது. ‘இங்கெ எப்பவுமே காப்பி ஸ்பெஷல். இருந்தாலும் உள்ளே போயி ஓனர்க்கிட்ட சொல்லிட்டு வர்றேன்’ என்று உள்ளே போனார், வழக்கறிஞர். சற்று நேரத்தில் சுடச் சுட காப்பி டம்ளர்களுடன் ஓனரே வாசலுக்கு வந்தார்.

‘வணக்கம், மூங்கில் மூச்சுக்காரரே! திருநவேலி சங்கர் கபே சங்கரய்யர் மகனுக்குத்தான் என் பொன்ணக் குடுத்திருக்கேன். நான் போற கல்யாண வீடுகளுக்கு பிரஸண்டேஷனா குடுக்கிறதே உங்க மூங்கில் மூச்சுதான். ரொம்ப சந்தோஷம். காப்பி குடிச்ச கையோட எங்க கட புஸ்தகத்துல ரெண்டு வார்த்த எழுதுங்க’ என்றார். குடிப்பதற்கு முன்பே ‘காப்பி பிரமாதம்’ என்றேன். குடித்த பிறகு சுவையாக உணர்ந்ததால் அதையே எழுதியும் வந்தேன்.

unnamed

 

காலையில் மட்டும் திறக்கப்படும் காப்பிக் கடைகள், மதியம் மட்டும் நடத்தப்படும் மெஸ்கள், மாலை நேரங்களில் மட்டுமே காணக்கிடைக்கிற சின்ன ஹோட்டல்களை இங்கே சென்னையிலும் காண முடிகிறது. பொதுவாக காப்பியை அதிகம் விரும்பாமல், தேநீர் அதிகம் குடிக்கிற பழக்கம் உள்ள என்னை சமீபகாலமாக காப்பி பிரியனாக மாற்றியவர் கவிஞர் ரகன். ரகன், வளர்ந்து வரும் ஒரு ஃபேஸ்புக் கவிஞர்.

‘அட நீயா!

அடடே நீதானா!!

அடடடே நீயேதானா!!!’

போன்ற கவிதைகள் மூலம் ஃபேஸ்புக்கில் அவரது முப்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் மத்தியில் உலகப் புகழ் பெற்ற ஒரு கவிஞர். இந்த வருட இறுதிக்குள் கவிஞர் ரகனின் ‘தோராயமாய் ஒரு ஆகாயம்’ ‘மஸ்கோத் அல்வாவும், மஸ்லின் துணியும்’ வகைத் தலைப்புகளில் அவரது கவிதைத் தொகுப்புகள் வெளியாகும் அபாயம் உள்ளது.

மாலை 4 மணிவாக்கில் ரகனிடமிருந்து காப்பி கோப்பை படம் போட்ட வாட்சப் செய்தி வரும். ‘போகலாம்’ என்று நான் பதில் அனுப்பிய உடனே தனது சின்னக் காரில் ரகன் கிளம்பி வருவார். அநேகமாக சாலிகிராமத்து சரவண பவன். அங்கே கீழ்த் தளத்தில்தான் காப்பி போடுவார்கள். முதல் தளத்தில் அமர்ந்து கொண்டு காப்பிக்கு முந்தைய வடை மற்றும் அடைகளைத் தின்று முடிக்கவும் கீழ்த்தளத்திலிருந்து ஆறிய காப்பி வரவும் சரியாக இருக்கும். சூடான காப்பிக்காக சில வேளைகளில் நானும், ரகனும் சுவாமிநாத் கபேயிலும் காப்பி குடிக்கச் செல்வதுண்டு.

‘ஒரே மாதிரி காப்பி குடிச்சு போர் அடிக்க ஆரம்பிச்சுட்டு. வேற ஏதாவது காப்பிக் கடையைத் தேடணும்’ என்று சொன்னேன்.

‘அண்ணா நகர்ல ‘கட்டிக்கரும்புன்னு’ ஒரு காப்பிக் கடை இருக்குண்ணே. ஒருநாள் அங்கே போயிக் குடிச்சுப் பாக்கலாம்’ என்றார், ரகன்.

கட்டிக்கரும்பு செல்லும் வரைக்கும் காத்திருக்காமல் இடையில் சில நாட்கள் மீண்டும் டீ’க்கு மாறினோம். வடபழனி கேம்பஸ் ஹோட்டலில் கேரளா டீ அருமையாக இருக்கும். அங்கு சென்று டீ குடித்தோம். பிறகு புகாரி ஹோட்டலில் கிடைக்கும் இரானியன் டீ ஞாபகத்துக்கு வந்து அங்கு சென்றோம். ‘இது நான் வெஜ் கடை. உங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லியே அண்ணே!’ என்றார், ரகன். ‘திருநவேலி வைர மாளிகைலயே குஞ்சு கூட போயி உக்காந்திருக்கென். இதுல என்ன இருக்கு? நான் டீதானே குடிக்கப் போறேன். பரவாயில்ல’ என்றேன். வினை அங்குதான் ஆரம்பமானது. ‘வெறும் டீயா? ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடலாமாண்ணே?’ என்று கேட்ட ரகனிடம், ‘சரவண பவன் கத இங்கெயும் தொடர வேண்டாமே’ என்றேன். சரவணபவனுக்கு மாலை வேளைகளில் நாங்கள் செல்வதென்னவோ காப்பி குடிக்கத்தான். ஆனால் காப்பிக்கு முன்னுரையாக சில பல சாம்பார் வடைகளும், சில சமயங்களில் சாதா தோசைகளும் இடம் பெற்று விடும். அதுவும் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸும், செல்வகுமாரும் வந்தால், போட்டி போட்டுக் கொண்டு ஆனியன் பஜ்ஜிகள் வாங்கிக் கொடுப்பார்கள். அதற்கு பயந்தே புகாரியில் தஞ்சம் புகுந்தோம். ஆனால் விதி புகாரியில் மட்டுமே கிடைக்கும் ‘கோதுமை பரோட்டா’ வடிவில் வந்து விளையாடியது. ‘ஆளுக்கு ஒரே ஒரு கோதுமை பரோட்டா சாப்பிட்டு டீ குடிக்கலாம்ணே’ என்றார், ரகன். பொன் முறுகலில் வந்த கோதுமை பரோட்டாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கத் தோன்றியது. ‘சூடு ஆறிடும்ணே, சாப்பிடுங்க’. கோதுமை பரோட்டாக்குப் பின் இரானியன் டீ, சொர்க்கத்துக்கு அருகே இட்டுச் சென்றது. அடுத்த இரண்டு  மாலை வேளையையும் புகாரியின் கோதுமை பரோட்டாவும், டீயும் நிறைத்தன.

‘இங்க வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டிருக்கீங்களாண்ணே?’

ரகனின் கேள்வியிலேயே அவர் அதை ஆர்டர செய்யப் போகிறார் என்பது தெரிந்தது. ‘களுதயச் சொல்லுங்க. அதயும்தான் சாப்பிட்டுப் பாத்திருவோம். ஆனா இந்த நேரத்துல சாப்பிட முடியுமான்னு தெரியலியே!’

‘ஒண்ணும் பிரச்சனயில்லண்ணே. ஒரு வெஜ் பிரியாணி வாங்கி ஆளுக்கு பாதி பாதி சாப்பிடுவோம்’.
ஃபேஸ்புக் கவிஞரின் யோசனை புத்திசாலித்தனமாகப் பட்டது.

‘அதுக்காக கோதுமை பரோட்டாவ அவாய்ட் பண்ண வேண்டாம்ணே. ஒரு பரோட்டா. பாதி பிரியாணி. அப்புறம் டீ’.

முந்தைய அவரது நல்ல யோசனை, சட்டென்று அவர் எழுதும் கவிதை போலவே சிக்கலாக மாறியது.

புகாரி ஹோட்டலின் படிக்கட்டுகளை, கைப்பிடியைப் பிடித்தபடிதான் இறங்க முடிந்தது. காரில் வந்து ஏறி உட்கார்ந்தவுடன் கொட்டாவியை அடக்கியபடி, ‘இனிமேல் டீ வேண்டாம், ரகன். காப்பிக்கே திரும்பிருவோம்’ என்றேன்.

அதற்குப் பிறகு இரண்டு நாட்களாக கவிஞரிடமிருந்து தகவல் இல்லை.  வழக்கமான எங்களின் காப்பி நேரத்தில்  வாட்ஸ் அப்பில் ஒரு காப்பிக் கடையின் ஃபோட்டோ அனுப்பினார், ரகன். கூடவே குறுஞ்செய்தியும். ‘சுத்தமான பசும்பாலில் காப்பி போடுகிறார்கள். அதற்காகவே தனியாக பசுமாடுகள் வளர்க்கிறார்கள். சுவையைச் சொல்லி முடியாது. குடித்தால்தான் தெரியும்’.

எச்சில் முழுங்கியவாறே குறுஞ்செய்தியில் கேட்டேன். ‘இதை குறுஞ்செய்தியில் அனுப்புவதற்கு பதில், என்னை அழைத்துச் செல்லலாமல்லவா? இல்லையென்றால் இடத்தைச் சொல்லுங்கள். நான் கிளம்பி வருகிறேன்’.

உடனே ரகனிடமிருந்து பதில் வந்தது. ‘அடுத்த மாசத்துல ஒருநாள் போலாம்ண்ணே. இந்தக் கட மதுரைல இருக்கு. நான் இப்ப அங்கெதான் இருக்கென்’.

.

புகைப்படங்கள் – ரகன்